Showing posts with label நந்திக் கலம்பகம். Show all posts
Showing posts with label நந்திக் கலம்பகம். Show all posts

Wednesday, September 16, 2015

நந்திக் கலம்பகம் - என்னதே

நந்திக் கலம்பகம் - என்னதே 


காதலையும், காமத்தையும் நேரடியாகச் சொல்வதை விட மறைமுகமாக சொல்வதில் சுவை அதிகம்.

நந்திக் கலம்பகத்தில் ஒரு பாடல்.

தலைவி சொல்கிறாள்....நான் அணிந்திருக்கும் இந்த உடையும் , வளையலும் என்னுடையதே...நந்திவர்மன் என்னோடு இல்லாத போது.

அவ்வளவுதான் பாடல் வரியின் அர்த்தம்.

நந்தி வர்மன் வந்து விட்டால், இந்த ஆடைகளையும், வளையலையும் அவன் எடுத்துக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்கிறாள்.


சொல்லாமல் விட்டதை புரிந்து கொள்ளும் போது, அந்த பெண்ணின் நாணம், தவிப்பு, வெட்கம், பிரிவின் வேதனை, அவன் மேல் அவள் கொண்டிருக்கும் ஆசை அனைத்தும் தெரியும்.

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது

பொருள்

எனதே கலை = கலை என்றால் உடை. என் உடை என்னுடையதுதான்

வளையும் என்னதே = வளையலும் என்னுடையதுதான்

மன்னர் = மன்னவனாகிய

சின = சினம் கொண்ட

ஏறு = எருதினைப் போன்ற

செந்தனிக்கோல்= செம்மையானா, செங்கோல் செலுத்தும்

நந்தி = நந்திவர்மன்

இனவேழம் = யானை போல

கோமறுகில் = வீதியில்

சீறிக் = கோபம் கொண்டு

குருக்கோட்டை வென்றாடும் பூமறுகில் = குருக் கோட்டை என்ற இடத்தில் வெற்றி பெற்று வீதி வழியே

போகாப் பொழுது = செல்லும்  போது

(போகா என்பதை செய்யா என்ற வாய்பாடகாகக் கொண்டால் செல்லும் போது என்று பொருள் தரும். கொய்யாப் பழம் என்று சொல்கிறோம். ஆனால் கொய்து தானே இருக்கிறது. அது போல. கொய்யாப் பழம் என்றால் கொய்த பழம். போகாப் பொழுது என்றால் போன பொழுது.)

இதை இன்னொரு விதமாக யோசித்துப் பார்ப்போம்.

அவன் இருக்கும் போது இந்த உடைகளையும், வளையல்களையும்  அவன் எடுத்துக் கொள்வான் , மற்ற நேரத்தில் அது என்னுடையது தான் என்பது ஒரு பொருள்.

இன்னொரு பொருள், அவன் என்னை விட்டு நீங்கினால், நான் மெலிந்து இந்த வளையலும், உடையும் நழுவி விழுந்து விடும். அவை என்னோடு இருக்காது. அவன் என்னோடு  இருந்தால், அந்த மகிழ்ச்சியில் நான் பூரித்து, இந்த வளையலும், உடையும் என்னோடு ஒட்டி இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

உங்களுக்கு எப்படி சௌகரியமோ , அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.



Saturday, January 17, 2015

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை 


இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை இப்படி தெருவில் நடமாட விட்டிருக்கிறார்களே இது எவ்வளவு பெரிய ஆபத்து. 

இவளுடைய பெற்றோருக்கு ஆண்கள் மேல் என்ன பகையோ. இவள் இப்படி தெருவில் திரிந்தால் ஆண் பிள்ளைகளின் மனம் என்ன பாடு படும். இவளை அடைய எல்லோரும் முயல்வார்கள். எல்லோருக்குமா அவள் கிடைத்து விடுவாள் ? கிடைக்காதவர்கள் என்ன ஆவார்கள்....

சரி, பெற்றோர் தான் போகட்டும்...இந்த நந்தி வர்மன் இருக்கிறானே....குடிகளை காக்க வேண்டியது அவன் கடமை அல்லவா ? இவள் இப்படி ஊரில் திரிந்தால் ஆண்கள் பாதிக்கப் படுவார்களே. அவர்களை காக்கவேண்டியது மன்னனாகிய நந்தியின் கடமை அல்லவா ? இப்படி கடமை தவறிய மன்னனாக இருக்கிறானே என்று அந்த பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மனதை பறிகொடுத்த கவிஞன் பாடுகிறான் 

பாடல் 


அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
 புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
 நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்

 உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ?

பொருள் 

அரிபயில் = அறிவு முற்றாத (இளைஞர்கள்) மத்தியில் 

நெடுநாட்டத் தஞ்சனம் = நீண்ட கண்களில் மையை 

முழுதூட்டிப் = முழுவதுமாக தீட்டி 

புரிகுழல் = முடியை சரி செய்து 

மடமானைப் = பேதை போன்ற இந்தப் பெண்ணை 

போதர விட்டாரால் = வெளியில் விட்டதால் 

நரபதி எனும் = மக்களின் தலைவன் என்ற 

நந்தி = நந்தி வர்மனின் 

நன்மயி லாபுரியில் = நல்ல நாட்டில் 


உருவுடை= அழகான 

இவள் தாயர்க் = இவளின் தாயார் 

குலகொடு பகை உண்டோ? = ஆண் குலத்தோடு பகை கொண்டவளோ ?



Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



Thursday, August 21, 2014

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே 


தலைவி சொல்கிறாள்.

இந்த உடையும், இந்த வளையல்களும் என்னுடையதாகத்தான் இருக்கும்..எப்போது என்றால் நந்தி வர்மன் எதிரிகளின் மேல் படை எடுத்துப் சென்றிருக்கும் பொழுது.

அப்படி அவன்  சண்டைக்குச் செல்ல வில்லை என்றால், என் அருகில் இருப்பான். அப்போது இந்த உடையும், இந்த வளையலும் என்னிடம் இருக்காது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

நந்தியின் வீரத்துக்கும் காதலுக்கும் கட்டியம் கூறும் பாடல்....

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது  

பொருள்

எனதே = என்னுடையதே

கலை = துகில், ஆடை

வளையும் = வளையலும்

என்னதே = என்னுடையதே

மன்னர் = மன்னனான

சினஏறு = சினம் கொண்ட காளை  அல்லது சிங்கம்

செந்தனிக்கோல் நந்தி = சிறப்பான செங்கோல் செலுத்தும் நந்தி

இனவேழம் = யானை போல

கோமறுகில்= கோபம் கொண்டு

சீறிக் = சீறி

குருக்கோட்டை = குருக்கோட்டை என்ற ஊரின் மேல்

வென்றாடும் = வெற்றிக் கொள்ள படை எடுத்துச் செல்ல

பூமறுகில் = பூமறுகில் (இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை )

போகாப் பொழுது = போன போது (செய்யா என்ற வாய்பாட்டு வினை. பெய்யா கொடுக்கும் மழை போல, கொய்யா பழம் போல )



Sunday, June 8, 2014

நந்திக் கலம்பகம் - குனிந்து பார்

நந்திக் கலம்பகம் - குனிந்து பார் 


அவள் மிக மிக அழகான இளம் பெண்.

பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் அழகு கொண்டவள்.

அவள் தகப்பனோ வயதானவன். வலிமை குன்றியவன். ஏழ்மையில் இருக்கிறான். 

அந்தப் பெண்ணை மணமுடிக்க வேண்டி பெண் கேட்டு அண்டை நாட்டு மன்னன் தூது அனுப்பி இருக்கிறான்.

கிழவன் தானே, என்ன செய்து விட முடியும் என்ற நினைப்பில்.

அந்த கிழவன் சொல்கிறான்....

"என்னிடம் இருப்பது ஒரு அம்புதான், வில்லும் ஒடிந்து போய் இருக்கிறது, அந்த ஒடிந்த வில்லிலும் நாண் அறுந்து போய் இருக்கிறது, நானோ வயதான கிழவன் என்று எண்ணியா உன் மன்னன் என் மகளை பெண் கேட்டு உன்னை தூதாக அனுப்பி இருக்கிறான் ? நந்தி மன்னன் இருக்கும் இந்த நாட்டில், என் வீட்டை கொஞ்சம் குனிந்து பார் ....என் குடிசையை சுற்றி வேலி போட்டு இருப்பது யானை தந்தங்கள் "

அப்பேற்பட்ட வீர  குடும்பம்என்பதை சொல்லாமல் சொல்கிறான்.


பாடல்

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

பொருள்


அம்பொன்று = ஒரே ஒரு அம்புதான் இருக்கிறது

வில்லொடிதல்= வில்லோ ஒடிந்து போய் இருக்கிறது

நாணறுதல் = நாண் அறுந்து போய் இருக்கிறது

நான்கிழவன் = நானோ கிழவன்

அசைந்தேன் = அசைய முடியாமல் இருக்கிறேன்

என்றோ = என்றா

வம்பொன்று குழலாளை  = பொன் போன்ற குழலை உடைய என் பெண்ணை

மணம்பேசி = திருமணம் பேசி

வரவிடுத்தார் = வரும்படி உன்னை அனுப்பி இருக்கிறார்

 மன்னர் தூதா! = மன்னனின் தூதனே

செம்பொன்செய் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

மணிமாடத் = மணி மாடங்களை கொண்ட

தெள்ளாற்றின் = தெள்ளிய ஆற்றின் கரையில் உள்ள

நந்திபதம் சேரார் = நந்தி அரசாளும் இடத்திற்கு வரமாட்டார்

ஆனைக் கொம்(பு) = யானையின் தந்தம்

ஒன்றோ = ஒன்றா, (இல்லை பல இருக்கிறது )

நம்குடிலின் = எங்கள் குடிசையின்

குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே. = குறுக்கும் நெடுக்கும் இருக்கிறது...நீ சற்று குனிந்து பார்



Thursday, March 7, 2013

நந்திக் கலம்பகம் - குடமும் இடையும்


நந்திக் கலம்பகம் - குடமும் இடையும் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

உங்கள் வயது பதினெட்டுக் கீழே இருந்தால், உடனடியாக இந்த ப்ளாகை படிப்பதை நிறுத்தவும்.

அவள் இடை முறிந்து விழுந்து விட்டாள்.

முரியாதா பின்னே ... கையில் இரண்டு குடம், தலையில் ஒரு குடம், பத்தாதற்கு இந்த குடம் வேறு...இத்தனையும் கொண்டு சென்றால் ஈரக் காற்றுக்குத் தாங்காத இடை எப்படி தாங்கும்...முறிஞ்சு போச்சு....

பாடல்


கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும்
இக்குடமும் கொண்டாள் முறியாதே? - மிக்க புகழ்
வெய்க் காற்றினால் விளங்கும் வீருநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?”


பொருள்