Friday, September 30, 2016

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 


வீடணன்  படித்தவன்.அறிஞன். ரொம்ப படித்தவர்களுக்கு சரணாகதி என்பது அவ்வளவு எளிது அல்ல. அறிவு  தடுக்கும்.  அறிவு ஆயிரம் கேள்வி கேட்கும். ஆயிரம் சந்தேகம் எழுப்பும்.     எல்லாவற்றையும் விட்டு விட்டு நீயே சரண் என்று போக முடியுமா ?

வீடணன் போனான். அவன் பெரிய  மேதை. மிக்க படித்தவன்.

போவதற்கு முன்னால் , இராவணனுக்கு அறிவுரை சொல்லுகிறான்.

பாடல்

'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச,

வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் மடியாது,

அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; இதன்மேல்

விசையம் இல்' எனச் சொல்லினன்-அறிஞரின் மிக்கான்.


பொருள்


'இசையும் = புகழும்

செல்வமும் = செல்வமும்

உயர் குலத்து = உயர்ந்த குலத்து

இயற்கையும் = தன்மையும்

எஞ்ச = இருக்க

வசையும்  = வசைச் சொற்களும்

கீழ்மையும் = கீழான செயல்களும்

மீக்கொள,= மேலோங்கி நிற்க

கிளையொடும் = உறவினர்களோடும்

மடியாது = இறந்து போகாமல்

அசைவு இல் கற்பின் = உறுதியான கற்பு உடைய

அவ் அணங்கை = அந்தப் பெண்ணை, சீதையை

விட்டருளுதி;= விட்டு அருளுதி

இதன்மேல் = இதைவிட

விசையம் இல்' = உயர்ந்தது ஒன்றும் இல்லை

எனச் சொல்லினன் = என்று சொல்லினான்

அறிஞரின் மிக்கான் = அறிவுள்ளவர்களில் சிறந்தவனான வீடணன்

உன்னுடைய புகழும், செல்வமும், உயர் குடி பிறப்பும் எல்லாம் போய் விடும். சீதையை விட்டு விடு என்கிறான்.

வீடணனுக்கு கம்பன் ஒரு அடை மொழி தருகிறான் - அறிஞரின் மிக்கான் என்று. அறிவுள்ளவர்களில் தலை சிறந்தவன் என்று.

அவன் மேலும் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்.





திருக்குறள் - உதவியின் அளவு

திருக்குறள் - உதவியின் அளவு 


பாடல்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

பொருள்

தினைத்துணை = தினை அளவு

நன்றி = நல்லது

செயினும் = செய்தாலும்

பனைத்துணையாக் = பனை அளவாகக்

கொள்வர் = கருதுவார்கள்

பயன்தெரி வார் = அந்த உதவியின் பயனை அடைந்தவர்கள்

ஒரு சிறு உதவி செய்தால் கூட, அதை பெரிதாக நினைப்பார்கள் அந்த உதவி அடைந்தவர்கள் என்பது பொருள்.


அவ்வளவுதானா ? அல்லது இதற்கு மேலும் இருக்கிறதா ?

சிந்திப்போம்.

பெரிய அளவு என்று சொல்வதற்கு ஏன் பனையை சொல்கிறார் வள்ளுவர் ? பனை மரத்தை விட தென்னை மரம் உயரமாக வளரக் கூடியது.   பனை மரத்தை விட உயரமானவை வேறு எவ்வளவோ இருக்கின்றன. கோபுரம் என்று சொல்லி இருக்கலாம், வான் அளவு என்று சொல்லி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் பனை மரத்தை  சொல்கிறார் ?

தென்னை மரம் போன்றவை உயரமாக வளரும். அதிக பலன் தரும். அதன்  தேங்காய், இளநீர், தென்னை மட்டை போன்றவை நமக்கு நிறைய  பயன் பாடு உள்ளவை தான். பனை மரத்தில் இருந்து நுங்கு கிடைக்கும். பனை மட்டை அவ்வளவு சிறப்பானது அல்ல. மேலும் பனை மரம்  தென்னை மரத்தைப் போல பழுத்த மட்டைகளை ஒவ்வொரு வருடம்  உதிர்ப்பது இல்லை.

பின் ஏன் பனை மரம் ?

காரணம் இருக்கிறது.

தென்னை மரத்துக்கு நிறைய நீர் விட வேண்டும். பலன் அதிகம் என்றாலும்  அதற்கு நிறைய நீர் தேவை. நீர் அதிகம் உள்ள கடற்கரை அல்லது  கழிவு நீர் போகும் இடம் என்ற இடங்களில் தான் தென்னை வளரும்.  அது மட்டும் அல்ல, அதற்கு தென்னங்கன்றுகளை நட்டு, அதை மண்ணோடு இன்னொரு இடத்துக்கு மாற்றி, அந்த இடத்தில் குழி தோண்டி, உப்பிட்டு, உரம் இட்டு  நிறைய வேலை செய்ய வேண்டும்.

பனை அப்படி இல்லை.  பனங் கொட்டையை சும்மா அப்படி தூக்கிப் போட்டு, கொஞ்சம் மண்ணை போட்டு மூடினால் போதும். எந்த  கரடு முரடான இடத்திலும் வளரும். வெகு சொற்பமான மழை போதும்.  மிகக் குறைந்த உதவியில் அதிகம் பலன் தருவது பனை.

கொஞ்சம் உதவி செய்தாலும் அதிக பலன் தருவது பனை. எனவேதான் பனை அளவு என்றார்.

மேலும்,

ஒரு குவளை நீர் என்ன மதிப்பு இருக்கும் ? ஒரு பாட்டில் மினரல் நீர்   இருப்பது முப்பது  ரூபாய் இருக்கும்.  அவ்வளவுதானே ?

ஒரு பாலைவனத்தில் நீங்கள் சிக்கி கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  வெயில் சுட்டு பொசுக்குகிறது. கால் சுடுகிறது. நாக்கு வறள்கிறது.  கொஞ்சம் தண்ணீர் வேண்டும். அந்த சமயத்தில் ஒரு குவளை  நீருக்கு நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் ? உங்கள் சொத்து முழுவதையும்  தரச் சொன்னாலும் தந்து விடுவீர்கள் அல்லவா ?

உதவி என்பது உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த பயனை பெற்றவர்களைப்  பொறுத்தது.

எனவே தான் வள்ளுவர்  "பயன் தெரிவார்" என்றார்.

அது மட்டும் அல்ல, சில உதவிகள் அந்த நேரத்துக்கான உதவியாக இருக்கும். சில உதவிகள் காலம் பூராவும் கூடவே வரும்.

ஒரு ஏழை மாணவனுக்கு பள்ளிக் கூட கட்டணம் காட்டினால் அவன் தொடர்ந்து படிக்க முடியும். அவன் படித்து , பெரிய ஆளாகி விடலாம். அவன் மூலம் இந்த உலகம் பல பலன்களை பெறலாம்.  அன்று அவனுக்கு  கட்டிய கட்டணம் தொடர்ந்து பல நல்ல பலன்களை தருகிறது. காட்டியது என்னவோ ஒரு வருட கட்டணம் தான்.  பலன் வாழ் நாள் பூராவும் வரும்.

ஒரு ஏழை பெண்ணுக்கு திருமணம் நடத்த உதவி செய்தல், சாகும் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்தம் தந்து அவர் உயிரை காப்பாற்றுதல்  போன்ற உதவிகள், ஒரு முறை செய்தாலும், அதன்  தொடர் பலன்கள் வந்து கொண்டே இருக்கும்.

"பயன் தெரிவார்" பயனை தெரிந்து கொண்டவர்கள் சின்ன உதவியைக் கூட பெரிதாக நினைப்பார்கள்.


நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு சிறியதாக இருக்கலாம். அந்த
உதவியின் பயனை பெற்றவர்கள் அதை பெரிதாக நினைப்பார்கள். எனவே, சின்ன உதவி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். யாருக்குத் தெரியும், சூப்பிப் போட்டா பனங் கொட்டை பெரிய மரமாக வளர்ந்து பலன் தருவது போல, உங்களுடைய சின்ன உதவி எங்கேனும் பெரிய அளவில் பயன் தரும்.

சின்ன சின்ன உதவி என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து செய்து கொண்டே  இருங்கள்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?









Thursday, September 29, 2016

பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா

பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா 


கவிஞர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது கவிதையாக வெளிப் படுகிறது. உண்மையான கவிஞர்களின் கவிதைகள் காலம் கடந்து நிற்கின்றன. இன்றும் எத்தனையோ கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். பெரிய பெரிய ஆட்களைக் கொண்டு அணிந்துரை எழுதச் செய்து, பெரிய விளம்பரங்கள் செய்து, அழகான விலை உயர்ந்த காகிதத்தில் அச்சடித்து விற்கிறார்கள். சில ஆண்டுகள் கூட நிற்பதில்லை. காணாமல் போய் விடுகின்றன.

பனை ஓலையில், இரும்பு கம்பி கொண்டு எழுதிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நிற்கின்றன.

திருக்குறளும், தேவாரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் எப்படியோ காரியங்களுக்கும், தீக்கும் , வெள்ளத்திற்கும் தப்பி காலத்தை வென்று நிற்கின்றன.

எப்படி ?

உண்மை, சத்தியத்தின் சக்தியாக இருக்குமோ ?

பாரதியின் பாப்பா பாட்டு.

அவன் என்ன நினைத்து எழுதினானோ தெரியாது. இன்றும் நமது வாழ்க்கையில்  அது மிக மிக அர்த்தம்  உள்ளதாக இருக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சொல்லுவதைப் போல சொல்லி இருக்கிறான் அந்த மகா கவி.

இன்று செல் போன் , லேப்டாப் கம்ப்யூட்டர், டிவி என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன. பிள்ளைகள் வெளியே சென்று விளையாடுவது என்பது மிக மிக குறைந்து  விட்டது. வெளியில் சென்று விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் ?

முதலாவது, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட படிக்கலாம். Social skills வளரும்.

 இரண்டாவது,  அப்படிச் இப்படிச் செய் என்று சொல்லுவதிலும், அப்படி மற்ற குழந்தைகள் சொல்வதை கேட்பதிலும் ஒரு தலைமை பண்பு வளர வழி இருக்கிறது.

 மூன்றாவது, வெளியில் விளையாடும் போது வெயில் பட்டு, வைட்டமின் டி கிடைக்க வழி  பிறக்கும்.

 நான்காவது, ஓடி விளையாடினால் தசைகள் வலுப் பெறும்.

ஐந்தாவது, ஓடி விளையாடும் போது மூச்சு  வாங்கும். அதிகமான பிராண வாயு உள்ளே செல்லும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படும். அது மட்டும் அல்ல உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு  அதிகமாக கிடைத்து அவை நல்ல நிலையில் செயல்  படும்.

வீட்டுக்குளே இருந்து கொண்டு செல் போன், டிவி, லேப்டாப்  என்று அடைந்து  கிடந்தால், இது ஒன்றிற்கும் வழி  இல்லை.

 எனவே தான் அவன் சொன்னான்

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு

ஓடி விளையாடு என்றால் தான் மட்டும் ஓடிக் கொண்டிருப்பது இல்லை. மற்ற பிள்ளைகளையும் சேர்த்து விளையாடு என்றான்.

அப்படி மற்ற குழந்தைகளோடு விளையாடும் போது , சண்டை சச்சரவு  வரலாம். அதற்காக ஒருவரையும் திட்டாதே என்றான்

குழந்தையை வையாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,


குருவி போல அங்கும் இங்கும் பறந்து  திரி.ஒரு இடத்தில் இருக்காதே என்றான்.


வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.


இயற்கையை இரசிக்கப்  பழகு. மனதில் பறவைகள் மேல் மகிழ்ச்சி வந்தால் அவற்றை கொல்ல வேண்டும் என்ற எண்ணம்  வராது. அவை குடி இருக்கும்  மரத்தை வெட்ட மனம் வராது.


கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,

பிள்ளைகளை மட்டும் அல்ல, மற்ற உயிர்கள் மேலும் அன்பு செலுத்து. கோழியையும் கூட்டி வைத்து விளையாடு.  இப்போதெல்லாம் கோழி எங்கே இருக்கிறது ? கடையில்தான் தொங்குகிறது.


எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

சமுதாயத்தில் பசித்தவர்கள்  இருப்பார்கள்.பசிக்காக திருடிவிட்டால் அவர்களை  வெறுக்காதே. அவர்கள் மேல் இரக்கம் கொள்.  திருடும் காக்கை மேல் இரக்கம் கொள் என்றான். அதை அடித்து விரட்டாதே என்று சொல்லிக்  கொடுத்தான்.


பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.


 பசுவையும்,நாயையும் நேசிக்கக் கற்று கொடுத்தான்.


வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

வீட்ட்டில் வேலைக்கு இருப்பவர்களை சில எஜமானி அம்மாக்கள் அடிமைகளை போல  நடத்துவார்கள்.ஒரு மரியாதை இல்லாமல்  பேசுவார்கள். தினம் ஒரு வசவு தான். அவர்களும் மனிதர்கள் தான். நமக்கு கீழே வேலை செய்பவர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான்.  குதிரையும்,மாட்டையும், ஆட்டையும் ஆதரித்துப் பழகி விட்டால் பின்னாளில் தனக்கு கீழே வேலை செய்பவரகளின் உழைப்பை மதிக்கும் மனம் வளரும்.


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு


படிப்பு முக்கியம். அதற்காக எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருந்தால்  மனம் மரத்துப் போய் விடும்.  மனம் பண் பட வேண்டும் என்றால்  பாட்டு, நாடகம், இசை என்று இரசிக்கப் பழக வேண்டும்.   மனம் மென்மையாகும்.


மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

படிப்பு, பாட்டு, உடல் உழைப்பு என்று இருக்க வேண்டும்.  அறிவும், மனமும் மட்டும் வேலை செய்தால் போதாது. உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேண்டாத நோய் எல்லாம் வந்து சேரும்.  உடலுக்கும் வேலை கொடுத்தான் பாரதி.


பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

பொய்யும், புறஞ் சொல்லுதலும் கூடாது என்றான்.



தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே. மற்றவர்கள் மேல் பழி சொல்லி நீ தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே.

உண்மை சொல். பொறுப்பை ஏற்றுக் கொள். துன்பம் வரலாம். தீங்கு வராது. உண்மை சொல்லி வாழ்ந்தால் தெய்வம் உனக்கு துணையாக இருக்கும். பயப்படாதே என்று தைரியம் சொல்லித் தருகிறான்.

பெண்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். எதற்கு எடுத்தாலும் ஒரு ஆணின் துணியை நாடுபவர்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் பயந்து ஒதுங்காதே. சண்டை போடு அவனிடம். அவனை அவமரியாதை செய். அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது. துணிந்து நில் என்று தைரியத்தை விதைக்கிறான்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

வாழ்வில் எப்போதும் இன்பமே இருக்காது. எப்போதாவது துன்பம் வரும். துன்பம் வரும் போது துவண்டு விடாதே. சோர்ந்து விடாதே. நமக்கு அன்பான தெய்வம் துணை  உண்டு.துவண்டு விடாதே என்று ஆறுதல் சொல்லுகிறான்.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

வாழ்வில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், அதை போக்க ஒரே வழி சோம்பல் இல்லாமல் உழைப்பதுதான். சோம்பலில்லாமல் உழைக்க வேண்டும் என்றான்.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - 

தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தாயார் சொன்னதை அப்படி கேள் என்றான். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காதே. அம்மா சொன்னால் அப்படியே கேள் என்றான்.



தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


உடல் ஊனம் கண்டு வருந்தாதே. போராடு. வெற்றி அடைவாய் என்று சொல்லித்தருகிறான்.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,

தாய் நமக்கு பால் தந்து, உணவு தந்து நம்மை பாதுகாக்கிறாள். அதே போல் நாம் பிறந்த மண்ணும் நமக்கு உணவும், இருக்க இடமும் தருகிறது. அதை தாய் என்று கும்பிடச் சொன்னான். தாய் நாட்டின் மேல் பற்று இருந்தால், அதை குப்பையாகச் சொல்லாது, அதன் பெயருக்கு களங்கம் வரும் படி எதுவும் செய்யத் தூண்டாது. அதன் வளங்களை சுரண்டச் சொல்லாது.


அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

நம் முன்னோர்கள் தேசம் அமிழ்தை விட இனியது.



சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;

மொழியின் மேல் மதிப்பு வேண்டும். நாட்டையும், மொழியையும் மதிக்காதவன் வேறு எதைத்தான் மதிப்பான்.

தமிழில் நமக்கு நூல்களை தந்தவர்கள் மகான்கள். வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும், ஆழவார்களும், நாயன்மார்களும் நாம் உய்ய வேண்டும் என்று தாங்கள் தேடிக் கண்ட உண்மைகளை பாட்டாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். நன்றி வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக , தமிழை தொழுது படித்திடச் சொன்னான்.


செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

இந்த நாடு செலவச் செழிப்பான நாடு. இங்கு என்ன இல்லை என்று மற்ற நாடுகளுக்கு போகிறார்கள். நீ எங்கும் போகாதே. இங்கேயே இரு என்கிறான்.


வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

இந்த பொருள் வளம் குறைந்து இருக்கலாம். வாழ்க்கை வசதிகள் குறைவாக இருக்கலாம். வேதம் உடையது இந்த நாடு. இதை விட வேறு என்ன வேண்டும்.  நீதிக்காக போராடும் உள்ளம் கொண்ட வீரர்கள்  உள்ள நாடு. இதை தெய்வம் என்று கும்பிடச் சொன்னான்.


சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

சாதிகள் இல்லையடி பாப்பா. உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் என்று சொல்லுவதே கூட பாவம் என்றான். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று நினைக்கச் சொன்னான்.



நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

படிப்பறிவு, கல்வி , என்று இருந்து விட்டால் மட்டும் போதாது. அன்பு நிறைய  இருக்க வேண்டும்.  அவர்கள்தான் மேலோர். அன்பு இல்லாதோர் எல்லாம்  கீழோரே.  படைத்தவனை மேலோர் என்று நினைக்காதே.  உள்ளத்தில் அன்பு இல்லாதவன் எவ்வளவு உயர்ந்தவனாக  இருந்தாலும் பெரியவன் இல்லை.



உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;

உயிர்களிடம் அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று அறிதல் வேண்டும்.

அன்பாக இருப்பவர்கள். தெய்வ பக்தி கொண்டவர்கள் ஏதோ கோழைகள் அல்ல.


வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.


வைரம் போன்ற உறுதியான மனம் வேண்டும்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்றான்.

சொல்லித் தருவோம் - அடுத்த தலைமுறைக்கு, அதற்கடுத்த தலைமுறைக்கும்.

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 



இராமாயணத்தில் இன்னொரு சிக்கலான பகுதி வீடணன் சரணாகதி.

வீடணன் செய்தது சரியா ,  தவறா என்ற கேள்வி இன்று வரை பேசப் பட்டுவருகிறது.

விடைதான் கிடைத்தபாடில்லை.

 சரி என்று சொல்லுபவர்கள் , வீடணன் அறத்தின்பால் நின்றான், இராமன் என்ற கடவுளின் பக்கம் நின்றான் என்று வாதிடுகிறார்கள்.

தவறு என்று சொல்லுபவர்கள், என்ன இருந்தாலும் அண்ணனை காட்டி கொடுத்திருக்கக்  கூடாது, தவறு என்று வீடணன் நினைத்தால் ஒதுங்கி போய் இருக்க  வேண்டும்.மாறாக இராமனிடம் போய் ,இராவணனின் இரகசியங்களை சொல்லி இருக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள்.

எது சரி, எது தவறு என்று அறிய சரியான அளவு கோல் இல்லை.

அது நம் வேலையும் இல்லை.

இதில் இருந்து நமக்கு என்ன பாடம் என்று நாம் பார்ப்போம்.


இராமன் மூன்று பேரை தன் தம்பியர் என்றான்.

குகன், சுக்ரீவன், வீடணன்.

ஏன் மூன்று பேர் ?  இன்னும் கொஞ்ச பேரை தம்பி என்று சொல்லி இருந்தால் என்ன  குறைந்து போய் விடும்.

அதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது.

குகன், அன்பே வடிவானவன். "தாயின் நல்லான்"  என்பான் கம்பன்.   இராமனை  காண வரும்போது தேனும் மீனும் கொண்டுவந்தான் (பிரசாதம்). இராமன் பசித்து இருக்கக் கூடாது என்ற அன்பில் கொண்டுவந்தான். படிப்பு அறிவு இல்லை. அன்பு மட்டுமே அவனிடம்  இருந்தது. அது ஒரு பக்தி  மார்க்கம்.

சுக்ரீவன் - அன்பால் கரைந்தவன் இல்லை. இராமனுக்காக வேலை செய்தான். சீதையை கண்டு பிடிக்க உதவி செய்தான். சண்டை போட்டான். அது கர்ம மார்க்கம்.


வீடணன் - அன்பு இல்லை, பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால் அறிவில்  சிறந்தவன். சாத்திரங்கள் அறிந்தவன். நல்லது கெட்டது அறிந்தவன். அறம் எது என்று அறிந்தவன். பெரிய அறிவாளி என்று கம்பன்  கூறுவான். இது ஞான மார்க்கம்.

பக்தி, கர்ம, ஞான மார்கத்தில் இறைவனை அடையலாம் என்று கம்பன்  சொல்லாமல் சொன்ன சூத்திரம் இது.

பக்தி கொண்ட குகன் , உன்னுடனையே இருந்து  விடுகிறான். அந்த  'இன்னலின் இருக்கை ' நோக்கி போக மாட்டேன் என்கிறான். உனக்கு  வேண்டிய காய் கனிகளை கொண்டு தருவேன். வழி அமைத்துத் தருவேன் என்று  பாகவத கைங்கரியம் பற்றி பேசுகிறான்.

சுக்ரீவன், நடுவில் கொஞ்சம் மறந்தாலும், பின் இராமனுக்கு உதவினான்.

வீடணன் - இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். இராவணன் கேட்க வில்லை.  தன் மந்திரகளிடம் கலந்து ஆலோசித்து , இராமனை  வந்து அடைகிறான். உணர்ச்சி வசப்பட்டு அல்ல. அறிவினால்  ஆராய்ந்து, விசாரித்து கொண்டு வந்து  சேர்கிறான்.

பக்தி, கர்மா மற்றும் ஞானத்தின் உச்சம் இறைவனை அடைவதுதான். தானே அங்கே இழுத்துக் கொண்டு போய் விடும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார்  வள்ளுவர்.

அறிவு , ஆண்டவனிடம் கொண்டு போய் சேர்க்கும் என்பது வள்ளுவரின் முடிவு.

வீடணனை கொண்டு சேர்த்தது எப்படி என்று பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_29.html

Wednesday, September 28, 2016

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி 


காதல் என்பது இனிமையான விஷயம் தான். காதல் புரியும் போது காதலர்கள் இருவரும் மிக மிக இனிமையாக பேசுவார்கள். நன்றாக உடுத்துவார்கள். ஒரு எதிர்பார்ப்பு  இருந்து கொண்டே இருக்கும்.

இவளோடு வாழ் நாள் எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற அவனுக்கு ஒரு கற்பனை. இவனோடு வாழ் நாள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்  அவளுக்கு ஒரு கற்பனை.

உணர்ச்சிகள் தூண்டப் பட்ட நிலையில் இருவரும் இருப்பார்கள்.

கதைகள் கற்பனைகள், சினிமாவில் பார்த்தது, என்று எல்லாம் கலந்து கலர் கலராக கனவுகள் வரும்.

கவிதை வரும். படம் வரையத் தோன்றும். உலகம் அழகாகத் தெரியும். காரணம் இல்லாமல் சிரிப்பு வரும். தூக்கம் போகும். மண்ணிலே விண் தெரியும். கால்களுக்கு சிறகு முளைக்கும்.

கடைசியில் திருமணம் ஆகும்.

திருமணம் ஆன சிறிது நாளிலேயே , பெரும்பாலான காதல் கசக்கத் தொடங்கும். பொருளாதார நெருக்கடி. எதிர்பார்ப்புகள் தீர்ந்த பின் ஒரு ஏமாற்றம் -  இவ்வளவுதானா என்று.  இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு வெறுப்பு.

பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி காதலுக்கு முன் இருந்த அந்த பாசம், நேசம், பிரியம், அன்யோன்யம் திருமணத்திற்கு பின்னும் அப்படியே தொடர்வதில்லை - பெரும்பாலான நேரங்களில்.

இது ஏதோ இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல.

சங்க காலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது.

குறுந்தொகை பாடல்.

தலைவனிடம் , தோழி சொல்லுகிறாள்...

"அந்தக் காலத்தில் (காதல் செய்யும் காலத்தில்) தலைவி வேப்பங் காயைத் தந்தாலும் வெல்லக் கட்டி என்று சொல்லி அதை சுவைத்தாய். இப்போது அவளே குளிர்ந்த இனிய நீரைத் தாந்தாலும் சுடுகிறது , கசக்கிறது என்கிறாய் ...எல்லாம் அன்பு குறைந்ததனால் வந்தது " என்று சொல்லுகிறாள்.

அந்த கசக்கும் உண்மையை படம் படித்து காட்டும் பாடல்

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே’


பொருள்


வேம்பின் =  வேப்ப மரத்தின்

பைங்காய் = பசுமையான காய். வேப்பம் பழம் இனிக்கும். காய் வாயில் வைக்க முடியாது.

என் தோழி தரினே = என் தோழி (தலைவி) தந்த போது

தேம்பூங்கட்டி = இனிமையான வெல்லக் கட்டி

என்றனிர் = என்று கூறினாய்

இனியே = இன்றோ

பாரி பறம்பிற் =பாரியின் இந்த மலையில்

பனிச்சுனைத் = பனி போல சில் என்று இருக்கும், ஊற்றின்

தெண்ணீர் = தெளிந்த நீரை

தைஇத் திங்கள் = தை மாதமான இந்த மாதத்தில்

தண்ணிய = குளிர்ந்த அவள்

தரினும் = தந்தாலும்

வெய்ய = சூடாக இருக்கிறது

உவர்க்கும் = உப்பு குறிக்கிறது

என்றனிர் = என்று கூறுகிறீர்கள்

ஐய = ஐயனே

அற்றால் = அற்று விட்டதால்

அன்பின் பாலே = அன்பு மனதில்

மார்கழி அடுத்து வரும் தை மாதம் குளிர்ந்த மாதம். மலையில் இருக்கும் நீர் மிக சுவையாக இருக்கும். அதில் உப்பு வர வழியில்லை.

இருந்தும், அவன் சொல்கிறான்.

சூடா இருக்கு, உப்பு கரிக்கிறது என்று.

அன்பு இருந்தால்  குளிரும்,இனிக்கும்.

அன்பு இல்லாவிட்டால் சுடும், கசக்கும்,  கரிக்கும்.

வாழ்க்கை எரிச்சலாக இருக்கிறதா. கசக்கிறதா, கரிக்கிறதா, அன்பைக் கொண்டு  வாருங்கள். கசப்பு கூட இனிக்கும்.

வாழ்வின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் மனதில் அன்பு இல்லாமையே.

அன்பை கொண்டு வாருங்கள். வசந்தம் வரும்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_28.html







Tuesday, September 27, 2016

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ 


பகழிக் கூத்தர் பாடியது. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். இசையோடு கேட்டால் இன்னும் இனிமையாக இருக்கும்.

பிள்ளைகளை , குழந்தைகளை கொண்டாடியது நம் தமிழ் சமுதாயம். பெரிய ஆள்களையும் பிள்ளைகளாக ஆக்கி , பாராட்டி, சீராட்டி, பாலூட்டி பார்த்து மகிழ்ந்தது நம் தமிழ் இலக்கியம்.

மீனாட்சி அம்மன் பிள்ளைத்  தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், என்று பலப் பல பிள்ளைத் தமிழ் பாடல்கள் உண்டு.

கண்ணனை பிள்ளையாகவும் தன்னை யசோதையாகவும் நினைத்து பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் பாடி இருக்கிறார். அத்தனையும் தேன் சொட்டும் பாசுரங்கள்.

பகழிக் கூத்தர் திருச்செந்தூர்  முருகன் மேல் பாடிய பிள்ளைத் தமிழில் இருந்து ஒரு பாடல்.

பாடல்

பாம்பால் உததி தனைக்கடைந்து
        படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
        பசுக்கள் வெருவிப் பதறாமற் 

காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும் 

பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக்கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந் 

தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம் புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ. 

 பொருள்

பாம்பால் = வாசுகி என்ற பாம்பால்

உததி = கடல் (பாற்கடல்)

தனைக்கடைந்து = தனை கடைந்து

படருங் = விரியும்

கொடுங்கார் = கொடுமையான கார் கால

 சொரிமழைக்குப் = பொழியும் மழைக்கு

பரிய வரையைக்  = பெரிய மலையை

குடைகவித்துப் = குடையாகப் பிடித்து

பசுக்கள் = பசுக் கூட்டங்கள்

வெருவிப் = பயந்து

பதறாமற் = பதறி ஓடாமல்

காம்பால் = மூங்கில் காம்பால்

இசையின் தொனியழைத்துக் = நல்ல தொனியோடு இசைத்து

கதறுந் தமரக் காளிந்திக் = கதறுகின்ற காளிங்கம் என்ற பாம்பின் மேல் ஆடிய

கரையில் = யமுனைக் கரையில்

நிரைப்பின் னே = பசுக்கள் பின்னே

நடந்த = நடந்த

கண்ணன் = கண்ணனின்

மருகா = மருமகனே

முகையுடைக்கும் = மொட்டு மலரும் (முகை = மொட்டு)  

 பூம் பாசடை = பூக்கள் நிறைந்த , பசுமையான இலைகள் கொண்ட குளத்தில்

பங்கயத்தடத்திற் =   தாமரை பூத்த குளத்தில்

புனிற்றுக்கவரி = இளைய எருமை

முலைநெரித்துப் = தன்னுடைய முலையில் இருந்து

பொழியும் = பொழியும்

அமுதந் தனைக் = பாலினை

கண்டு =கண்டு

புனலைப் பிரித்துப் = நீரைப் பிரித்து

பேட்டெகினந் = பெண் அன்னம்

தீம்பால் = சுவையான பாலை

பருகுந் = பருகும், குடிக்கும்

திருச்செந்தூர்ச் = திருச்செந்தூரில் உள்ள

செல்வா = செல்வா

தாலோ தாலேலோ = தாலோ தாலேலோ

தெய்வக் களிற்றை = தெய்வ யானையை

மணம் புணர்ந்த = மணந்து கொண்ட

சிறுவா = சிறுவனே

தாலோ தாலேலோ.  = தாலோ தாலேலோ


மழையில் இருந்து மாடுகளை காப்பாற்றினான், அவை வழி தப்பித் போகாமல் இருக்க  அவற்றின் பின்னே போனான். பசித்திருக்கும் அன்னப் பறவைகளுக்கு  , எருமையின் மூலம் பாலூட்டச் செய்தான்....விலங்குகளுக்கே அவ்வளவு உதவி செய்து அவற்றை காப்பான் என்றால்  உங்களை என்ன விட்டு விடவா போகிறான். 

நம்புங்கள். 

நம்புகிறீர்களா இல்லையோ, இன்னொரு தரம் பாட்டைப் படித்துப் பாருங்கள். கொஞ்சும் தமிழ்.


Monday, September 26, 2016

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே 


தவறான தீர்ப்பினால் கோவலன் மாண்டு போனான். கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள்.

வாழும் நாள் எல்லாம் கணவனை பிரிந்து இருந்தவள். கோவலன் மாதவி பின்னால் போய் விட்டான். மனம் திருந்தி வாழலாம் என்று வந்தவனுடன் மதுரை வந்தாள். வந்த இடத்தில் , விதியின் விளையாட்டால் கோவலன் கொல்லப் படுகிறான்.

கண்ணகிக்கு தாங்க முடியவில்லை. இது வரை அமைதியாக இருந்த பெண், ஏரி மலையாக வெடிக்கிறாள்.

வாழ்க்கையின் மேல் உள்ள மொத்த கோபமும் பொங்கி எழுகிறது.

பாண்டியன் அரண்மனைக்கு வருகிறாள்.

வாசலில் நிற்கும் காவலனைப் பார்த்து சொல்கிறாள்...

அறிவில்லாத அரசனின் மாளிகைக்கு காவல் நிற்கும் காவலனே, கையில் ஒரு சிலம்புடன், கணவனை இழந்தவள் வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய் சொல் என்கிறாள்.

பாடல்

வாயி லோயே வாயி லோயே 
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே 
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் 
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று 
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள்


வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

அறிவறை போகிய = ஞானம் இல்லாத

பொறியறு = புலன்கள் அறிவோடு தொடர்பு அற்ற

நெஞ்சத்து = மனதைக் கொண்ட

இறைமுறை = அரச முறை

பிழைத்தோன்= பிழைத்த அரசனின்

வாயி லோயே = வாயில் காப்பாளனே

இணையரிச் = இணை + அரி = இணையான அரிய

சிலம்பொன் றேந்திய கையள் = சிலம்பு ஒன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் = கணவனை இழந்தவள்

கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என = அறிவிப்பாயே, அறிவிப்பாயே என்றாள்


உணர்ச்சியின் உச்சத்தில் இளங்கோவடிகள் வடிக்கும் கவிதையின் ஆழத்தை  நாம் சிந்திக்க வேண்டும்.

வாயிலோயே, வாயிலோயே,
அறிவிப்பாயே, அறிவிப்பாயே

என்று ஏன் இரண்டு முறை கூறுகிறாள் ?

இந்த மன்னனுக்கு எதுவும் ஒரு முறை சொன்னால் புரியாது. அவசர புத்திக்காரன். ஒண்ணுக்கு இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று  நினைத்து இரண்டு முறை கூறுகிறாள்.

நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த நிறுவனத்தின்  மேலதிகாரி எப்படி இருப்பானோ அப்படி தான் , அந்த அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று உலகம்  எடை போடும்.

அரசன் மோசமானவன் , அப்படிபட்ட அரசன் கீழ் வேலை பார்க்கும் வாயில் காப்பாளனே என்று அவனையும் ஏசுகிறாள் கண்ணகி.


அரசன் மேல் மூன்று குற்றங்களை சுமத்துகிறாள் கண்ணகி.


அறிவறை போகிய = மனத்  தெளிவின்மை

பொறியறு நெஞ்சத்து = பொறி என்றால் புலன்கள். கண் காது மூக்கு
போன்ற புலன்கள் , புத்தியோடு சேர்ந்து வேலை
செய்யவில்லை.காதால் கேட்டதை அப்படியே உண்மை என்று நம்பிவிட்டான்  பாண்டியன். சிந்திக்கவில்லை . அறிவுக்கு வேலை தரவில்லை.

இறைமுறை பிழைத்தோன் = அரசனை இறைவனுக்கு இணையாக வைத்துப் பார்த்தவர்கள்  நம்  முன்னோர்கள். ஏன் என்றால், இறைவனுக்கு  மூன்று தொழில். படைத்தல், காத்தல், அழித்தல் என்று.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

இறைவா என்னை படைத்து விடு என்றா ? இல்லை. அது தான் ஏற்கனவே படைத்து  விட்டானே.

இறைவா என்னை அழித்துவிடு என்றா - யாரும் அப்படி கேட்க மாட்டார்கள்.

என்னை காப்பாற்று என்றுதான் வேண்டுவார்கள்.

காப்பதுதான் இறைவனின் தொழில்களில் நாம் விரும்பி வேண்டுவது.

அரசனுக்கும் தன் குடிகளை காக்கும் கடமை இருப்பதால், அரசனை  இறைவனுக்கு ஒப்பிட்டு கூறினார்கள்.

இறை மாட்சி என்று ஒரு அதிகாரமே  வைத்தார் வள்ளுவர்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.


இருப்பதோ மன்னர் ஆட்சி. மன்னனின் அதிகாரம் வானளாவியது. அவன் ஒன்று  செய்தால் அவனை யாரும் ஏன் என்று தட்டிக் கேட்க முடியாது.

கண்ணகியோ ஒரு அபலைப் பெண். உலகம் அறியாதவள். கணவனை இழந்தவள். புரியாத, தெரியாத ஊர்.

நேரே அரண்மனைக்கு சென்று மன்னனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனையும் தருகிறாள்.

ஆட்சி எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

முடியுமா இன்று ? தவறு செய்யும் ஒரு அரசியல்வாதியை குடிமக்கள் தட்டிக் கேட்க முடியுமா ?

அருகில் வர விடுவார்களா ?

அரசன், நீதிக்கு கட்டுப் பட்டான். குடிகளின் குறை கேட்டான். தான்  குடி மக்களுக்கு கட்டுப் பட்டவன் என்று நினைத்தான்.

ஒரு கடைக் கோடி பெண் கூட , மாளிகையைத் தட்டி நீதி கேட்க முடிந்தது.

அப்படி இருந்தது ஒரு  காலம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம், இது சொல்லும் வாழ்க்கை நெறி முறை.

தவறை யார் செய்தாலும் தட்டி கேட்க வேண்டும். அந்த போராடும் மனோ நிலை வேண்டும்.  அரசன் என்ன செய்வானோ, ஒரு வேளை என்னையும்  வெட்டி விடுவானோ என்று கண்ணகி பயப் படவில்லை. துணிந்து போராடினாள் . இன்று , ஞாயம் தன் பக்கம் இருந்தால் கூட  போராட தயாராக இல்லை யாரும். பயந்து பயந்து வாழப் பழகி விட்டோம்.

ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவன் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள மற்றவர்களை மாட்டி விட நினைப்பார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்  நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வினாடி நிதானம் தவறினான் பாண்டியன். ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும்.

பாடம் படிக்க வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_74.html



தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


எந்த பிறவிக்கும் ஒரு அர்த்தம் , நோக்கம் வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த நோக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

நாவுக்கரசருக்கு இறைவன் திருவடி அடைவதுதான் நோக்கம்.  அவனை நினைக்க வேண்டும், அவனைப் பற்றி பேச வேண்டும். அப்படி பேசாத நாள் எல்லாம் , பிறவாத நாள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
                   சூழ் வலஞ்சுழியும் கருதினானை, 
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
         ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; 
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
                  எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- 
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
                          எல்லாம் பிறவா நாளே.

பொருள்

கற்றானை = எல்லாம் அறிந்தவனை

கங்கை வார்சடையான் தன்னை = கங்கையை தலையில் கொண்டவனை

காவிரி சூழ் = காவிரி ஆறு சூழும்

வலஞ்சுழியும் = திருவலம் சுழி என்ற திருத்தலத்தில்

கருதினானை = இருப்பவனை

அற்றார்க்கும் = செல்வம் அற்ற ஏழைகளுக்கும்

அலந்தார்க்கும் = கலங்கியவர்களுக்கும்

அருள் செய்வானை = அருள் செய்வானை

ஆரூரும் புகுவானை = திருவாவூரிலும் இருப்பவனை

அறிந்தோம் அன்றே = அன்றே அறிந்து கொண்டோம்

மற்று ஆரும்  = வேறு யாரும்

தன் ஒப்பார் இல்லாதானை = தனக்கு ஒப்பு இல்லாதவனை

வானவர்கள் = தேவர்கள்

எப்பொழுதும் = எப்போதும்

வணங்கி ஏத்தப் = வணங்கு துதிக்க

பெற்றானை = பெற்றவனை

பெரும்பற்றப்புலியூரானை = புலியூரில் இருப்பவனை

பேசாத நாள் எல்லாம் = பேசாத நாள் எல்லாம்

பிறவா நாளே = பிறக்காத நாளே

வறுமை ஒரு துன்பம். 

கொடியது கேட்கின் நெடு வடிவேலோய் 
கொடிது கொடிது வறுமை கொடிது என்பாள் அவ்வை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார் வள்ளுவர். 

பொருள் இருந்தாலும், வாழ்வில் சில சமயம் கலக்கம் வரும். 

உறவுகள் பிரிவதால் , பொருள் பிரிவதால், நோய் வருவதால், முதுமை வருவதால், எதிர் காலம் பற்றிய பயத்தால்  ....இப்படி பலப் பல காரணங்களினால் கலக்கம் வரும். 

அப்படி கலங்கியவர்களுக்கும் அருள் தருபவன் அவன். 

அதெல்லாம் சரி, அருள் தருவான் என்பது என்ன நிச்சயம் ? அப்படி யாருக்காவது அருள் செய்திருக்கிறானா என்று கேட்டால் , அப்பரடிகள்  கூறுகிறார் 

ஆமாம், செய்திருக்கிறான் , அதை "அறிந்தோம் அன்றே " என்று கூறுகிறார். நான் அறிந்தேன் என்று சாட்சி சொல்கிறார். 

அறிந்தோம் என்ற பன்மையால், தான் ஒருவர் மட்டும் அல்ல, தன்னைப் போல பலர் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். 

அவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

உடல் பிறந்து விடும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. 

அறிவு பெற்று, தான் என்பது அறிந்து, உண்மையை அறியும் நாள் மீண்டும்  ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அதுவரை , அறிவில்லா இந்த உடல் சும்மா  அலைந்து கொண்டிருக்கும். ஒரு விலங்கினைப் போல. 

என்று இவற்றை அறிகிறோமோ, அன்று தான் உண்மையான பிறந்த நாள். 

அதுவரை பிறவா நாளே 



Sunday, September 25, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?



மூப்பு கொஞ்சம் சங்கடமான விஷயம்தான். புலன்கள் தடுமாறும். நினைவு தவறும். கண் ,  போன்ற புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்  இழக்கும். பேசுவது கேட்காது. கேட்டாலும் மனதில் நிற்காது. சுற்றி உள்ள இளையவர்கள் , கேலி செய்வார்கள். நாம் வளர்த்த பிள்ளைகள் நம்மை ஏளனம் செய்வது தாங்க முடியாத ஒன்று தான்.

என்ன செய்வது ? காய்ந்த மட்டையைப் பார்த்து இள மட்டை பரிகசிப்பது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.

அப்படி ஒரு மூப்பு வருமுன்னம், நல்லதைத் தேடு மனமே என்று மனதிடம் சொன்னால் அது எங்கே கேட்கிறது.

புலன் இன்பங்களின் பின்னால் ஓடுகிறது. உணவு, இசை, உறவுகள், நட்புகள், சினிமா,  நாடகம், ஊர் சுற்றல் என்று ஆசைகளின் பின்னால் அங்காடி நாய் போல் அலைகிறது இந்த மனம்.

சொன்னாலும் கேட்க மாட்டேன்  என்கிறது. ஒரு வேளை அந்த மனதுக்கும் நமக்கும் ஏதோ பழைய பகை இருக்குமோ ? அதனால் தான் நாம் நல்லது சொன்னால் கேட்காமல் நம்மை தீய வழிகளில் இட்டுச் செல்கிறதோ என்று சந்தேகப் படுகிறார் நாவுக்கரசர்.

பாடல்

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்

பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ

முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.


பொருள்


எழுது = கண்ணில் மை எழுதும்

கொடியிடையார்= கொடி போன்ற இடையைக் கொண்ட

ஏழை மென்றோள் = மெலிந்து இருக்கும் மெல்லிய தோள்கள் கொண்ட

இளையார்கள்= இளம் பெண்கள்

நம்மை யிகழா முன்னம் = நம்மை இகழ்வதன் முன்னம்

பழுது படநினையேல் = கெட்ட வழியில் செல்ல நினைக்காதே

 பாவி நெஞ்சே = பாவி நெஞ்சே

பண்டுதான் = முன்பு, பழைய காலத்தில்

என்னோடு =என்னோடு

பகைதா னுண்டோ = உனக்கு பகை ஏதேனும் உண்டோ ?

முழுதுலகில் = முழுமையான உலகில். அனைத்து உலகிலும்

வானவர்கள் = தேவர்கள்

முற்றுங் கூடி =  அனைவரும் கூடி

முடியால் =தலையால்

உறவணங்கி = முற்றும் தரையில் பட வணங்கி

முற்றம் பற்றி = முழுவதும் பற்றி

அழுது = அழுது

திருவடிக்கே பூசை செய்ய = திருவடிகளுக்கே பூசை செய்ய

இருக்கின்றான் = இருக்கின்றான்

ஊர்போலும் ஆரூர் தானே = ஊர்தான் திருவாரூர்

வயதாகும். மதி மயங்கும். அதற்கு முன் எது சரியோ அதை செய்து விட வேண்டும்.

உற்றார் அழுமுன்னே. ஊரார் சுடுமுன்னே , குற்றாலத்தானையே கூறு என்பார் பட்டினத்தார்.

நேற்று வரை எப்படியோ. இன்றில் இருந்து ஆரம்பிப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_25.html


Saturday, September 24, 2016

இராமாயணம் - விராதன் வதை படலம் - உறங்குதியால் உறங்காதாய்!

இராமாயணம் - விராதன் வதை படலம் -  உறங்குதியால் உறங்காதாய்!


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாய் பிறந்து, இராமனோடு சண்டையிட்டு, இராமன் திருவடி பட்டு, சாபவிமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன் , இராமனைப் பற்றி சிலச் சொல்லுகிறான்.


இன்பம் வேண்டும் என்றுதான் வாழ்வில் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இருந்தும் துன்பம் வருகிறது. நல்லது வேண்டும் என்று தான் நினைக்கிறோம், இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

இன்பம் மட்டுமே இருக்கக் கூடாதா ? நல்லது மட்டுமே நடக்கக் கூடாதா ?

ஏன் இந்த கஷ்டங்கள் வருகின்றன ?

இதற்கு காரணம் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பாகங்கள்  மாதிரி. ஒரு பாகம் மட்டும் வேண்டும் என்றால் எப்படி முடியும் ?

நாய்த குட்டியின் தலையை தூக்கினால் வாலும் கூடவே சேர்ந்தே வரும்.

இன்பம் உருவம் என்றால் , துன்பம் நிழல்.

நன்மை உருவம் என்றால் , தீமை நிழல்.

இரண்டையும் பிரிக்க முடியுமா ?

இதை அறிந்தவர்கள் இந்த நல்லது/கெட்டது , நன்மை/தீமை, உயர்வு/தாழ்வு என்ற இரட்டைகளை தாண்டி நடுவில் நிற்பார்கள்.

ஒரு சம நோக்கு இருக்கும் அவர்களுக்கு.

பாடல்

பொரு அரிய சமயங்கள்
    புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார்போல்
    அருந்தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணிமார்ப!
    நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல்
    உறங்குதியால் உறங்காதாய்!


பொருள்

பொரு அரிய = பொருவு என்றால் ஒப்பு. பொருவு அரிய என்றால் ஒப்பு, உவமை கூற முடியாத

சமயங்கள் = பல சமயங்கள்

புகல்கின்ற = சொல்கின்ற

புத்தேளிர் = தேவர்கள்

இரு வினையும் = இரண்டு வினைகள். நல்லது/கெட்டது  போன்ற வினைகள்

உடையார்போல் = உடையவர்களைப் போல

அருந்தவம் = பெரிய தவத்தை

நின்று இயற்றுவார்  செய்வார்கள்

திரு = திருமகள்

உறையும்  = வாழும்

மணிமார்ப! = கௌஸ்துபம் என்ற மணியை அணிந்த மார்பை உடையவனே

நினக்கு = உனக்கு

என்னை = என்ன

செயற்பால? = செய்ய வேண்டும் ?

ஒரு வினையும் = ஒரு வேலையும்

இல்லார்போல் = இல்லாதவர் போல

உறங்குதியால் = உறங்குகிறாயா ?

உறங்காதாய் = உறங்காதவனே

இராமன் ஏதோ வினை செய்வது போல இருக்கிறது. ஒன்றும் செய்யாதவன் போலவும்  இருக்கிறான். உறங்குகிறானா, விழித்து இருக்கிறானா  என்று தெரியவில்லை.

வினை செய்வதற்கு முன் அந்த வினையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அப்படி தேர்ந்தெடுக்க , அந்த வினை நல்லதா, கெட்டதா என்று தேர்வு செய்ய வேண்டும்.  நல்லது கெட்டது நின்ற பிரிவினை மறைந்து விட்டால்  எந்த வினையை செய்வது ?

அதற்காக ஒன்றும் செய்யாமலும் இருக்க முடியுமா ?

இந்த இருமைகளை தாண்டினால் அது புரியும்.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பார் வள்ளுவர்.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

இன்பத்தையும்,  துன்பத்தையும் சமமாக காணும் அந்த நிலை சுகமானதுதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_42.html

Thursday, September 22, 2016

திருக்குறள் - யாமும் உளேம் கொல்

திருக்குறள் - யாமும் உளேம் கொல் 


காதலை, பிரிவை, அன்பை, ஏக்கத்தை, ஆண் பெண் உறவின் சிக்கலை ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா ?

வியக்க வைக்கும் காமத்துப் பால். ஒற்றை வார்த்தையில் ஒரு மனதின் அத்தனை உணர்ச்சிகளையும் ஏற்ற முடியுமா ? சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.

பாடல்

யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்


பொருள்

யாமும் = நாங்களும்

உளேம்கொல் = இருக்கிறோமா ?

அவர்நெஞ்சத்து = அவருடைய நெஞ்சத்தில்

எம்நெஞ்சத்து = எங்கள் நெஞ்சில்

ஓஒ உளரே அவர் = அவர் இருப்பது போல

அவ்வளவுதான் பாடல்.

கொட்டிக் கிடைக்கும் உணர்ச்சிகளை எப்படி சொல்லுவது.

அவர் நெஞ்சத்து என்பதால் இது ஒரு பெண்ணின் மன நிலையை குறிக்கும் பாடல் என்று   தெரிகிறது.

இரண்டாவது, என் மனதில் அவர் இருப்பது போல அவர் மனதில் நான் இருப்பேனா என்று கேட்பது போல உள்ள பாடல். ஒவ்வொரு     வார்த்தையிலும் கொட்டிக் கிடக்கும் அர்த்தம்.

மூன்றாவது, "யாமும்" என்பதில் அவன் மனத்தில் யார் யாரோ இருக்கிறார்கள். நானு'ம்' இருக்கிறேனா என்று கேட்கிறாள். யாம் உளேம் கொல் என்று சொல்லி இருக்கலாம். யாமும் என்ற சொல்லில் அவன் மனதில் வேறு யாரோ இருக்கிறார்களோ என்ற பெண்ணின் இயல்பாலான  சந்தேகம் தொக்கி நிற்கிறது.


பாரதி சொல்லுவான் "யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் "என்று. கண்டது அவன் மட்டும் தான். ஆனால், தன்னை சொல்லும் போது "யாம்" என்று கூறுகிறான். ஆங்கிலத்தில் "royal we " என்று சொல்வார்கள். அவள் ஒரு பெரிய இடத்துப் பெண் அல்லது ஏதோ ஒரு சிறப்பு அவளிடம் இருக்க வேண்டும்.


யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்பார் நாவுக்கரசர்.

நான்காவது, "உளேம் கொல்" இருக்கிறோமா என்பது கேள்விக் குறி. இருக்க வேண்டும். ஆனால் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வேளை மறந்திருப்பானோ என்ற பயம் இருக்கிறது.

ஐந்தாவது, யானும் என்று ஒருமையில் சொல்லி இருக்கலாம். யாமும் என்று பன்மையில் சொல்லும் போது ஒரு அன்யோன்யம் விட்டுப் போகிறது.  "எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று மனைவி கேட்பதற்கும்  "எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று கேட்பதற்கும் வேறுபாடு உண்டு.


ஆறாவது, எம் நெஞ்சில் அவரே இருப்பது போல.  மீண்டும் பன்மை. எம் நெஞ்சில் என்கிறாள். என் நெஞ்சில் என்று சொல்லி இருந்தால் தளை ஒண்ணும் தட்டி இருக்காது.

ஏழாவது, எம் நெஞ்சில் அவர் இருப்பது போல என்று கூறும் போது , "என் நெஞ்சில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதே மாதிரி  அவன்  நெஞ்சிலும் நான் மட்டும் தான் இருக்க வேண்டும், வேறு யாரும்  இருக்கக் கூடாது" என்று அவள் எதிர்பார்ப்பது தெரிகிறது.


எட்டாவது, "உளரே அவர்" உளர் அவர் என்று சொல்லி இருக்கலாம். உளரே என்ற ஏகாரத்தில் ஒரு அழுத்தம்.ஒரு உறுதி. இராமன் வந்தான் என்று சொல்வதற்கும். இராமனே வந்தான் உள்ளதற்கும் உள்ள வேறுபாடு. இராமன் வந்தான் என்றால் ஏதோ ஒரு ஆள் வந்தான் என்று தெரியும். இராமனே வந்தான் என்றால் ஏதோ வராத , வருவான்னு எதிர்பார்க்காத ஆள் வந்த வியப்பு, சந்தோஷம்.  அவர் வந்து பத்திரிகை கொடுத்தார் என்பதற்கும், "அவரே" வந்து பத்திரிகை கொடுத்தார் என்று சொல்லுவது போல.

ஒன்பதாவது, ,ஓஒ உளரே அவர். அது என்ன ஓ ஓ ? அந்த ஓ விற்குப் பின்னால் ஆயிரம் அர்த்தம். வேலை முடியலை'யோ' அதனால் என்னை நினைக்க நேரம் இல்லை'யோ' ? ஒரு வேளை உடம்பு கிடம்பு சரியில்லை'யோ' ? நான் ஏதாவது தப்பாக சொல்லி அல்லது செய்திருப்பே'னோ'. அதனால் கோபித்துக் கொண்டிருப்பா"னோ ". ஒரு வேளை இனிமேல் என்னை நினைக்கவே மாட்டா"னோ" என்று  ஆயிரம்  "ஓ" அந்த இரண்டு ஓஓ வில். இன்னும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு  நீங்கள் நீட்டிக் கொள்ளுங்கள். அது ஓஓஓ.....குறளைப் படித்துப் பாருங்கள். அந்த நீண்ட ஓ ஓ புரியும்.


இப்போது இந்த அர்த்தத்தை எல்லாம் விட்டு விடுங்கள். அந்த குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

தனிமையில் , பிரிவில் வாடும் ஒரு பெண்ணின் சோகம் ஊதுவத்தி புகையாக  பரவுவதை உணர்வீர்கள்.

வார்த்தைகளை சுருக்க சுருக்க கவிதை பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கும்.

அப்படி என்றால் மௌனம் எவ்வளவு உயர்ந்தது ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_22.html




Wednesday, September 21, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன் 



ஒரு சாபத்தால் அரக்கனாக பிறந்த விராதன், இராமனிடம் போராடி, அவன் பாதம் பட்டதால் , சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன், சில சொல்லுகிறான்.

பிரமனுக்கும், மற்றும் உள்ள தேவர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் நீயே முதல் தந்தை.  நீ தந்தை என்றால் , தாய் யார் ? தருமத்தின் வடிவாக நின்றவனே.


பாடல்

ஓயாத மலர் அயனே முதல் ஆக
     உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
     ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால்
     ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின்
     தனி மூர்த்தி!


பொருள்


ஓயாத = இடைவெளி இல்லாமல், தொடர்ந்து

மலர் அயனே = தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன்

முதல் ஆக = தொடங்கி

உளர் ஆகி = உள்ளவர்கள் ஆகி

மாயாத வானவர்க்கும் = இறப்பு என்பது இல்லாத வானவர்களுக்கு

மற்று ஒழிந்த = அவர்களைத் தவிர

மன்னுயிர்க்கும் = நிலைத்த உயிர்களுக்கும்

நீ ஆதி முதல் தாதை, = நீயே முதலில் தோன்றிய தந்தை

நெறி முறையால் = சரியான வழியில்

ஈன்று எடுத்த = பெற்றெடுத்த

தாய் ஆவார் யாவரே?- = தாயாக இருப்பவர் யார் ?

தருமத்தின் = அறத்தின்


தனி மூர்த்தி! = தனிச் சிறப்பானவனே

எனக்கு ஒரு அப்பா இருக்கிறார். அவருக்கு ஒரு அப்பா இருக்கிறார், அதாவது என் தாத்தா. இப்படி போய் கொண்டே இருந்தால், முதன் முதலில் ஒருவர் வேண்டும் அல்லவா . அந்த முதல் தந்தை நீதான் என்று இராமனை வணங்குகிறான் விராதன்.

பிரமனுக்கும், தேவர்களுக்கும், மற்றும் உள்ள உயிர்களுக்கும் நீயே தந்தை என்று சொல்லிவிட்டு, "சரி, தந்தை நீயானால், தாய் யார் " என்று கேள்வியும் கேட்கிறான்.

கேள்வியிலேயே பதிலை ஓட்ட வைக்கிறார் கம்பர் ?

தாய் யாராக இருக்க முடியும் என்று கேட்கிறான். கேட்டு விட்டு, "தர்மத்தின் தனி மூர்த்தி" என்று முடிக்கிறான்.


அது மட்டும் அல்ல, உடலுக்கு தந்தை யார் என்று தெரியும். உயிருக்கு யார் தந்தை ?  "நீயே தர்மத்தின் தனி மூர்த்தி" என்று சொல்கிறான்  விராதன்.

சரி, தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்றால், தாய் வேண்டுமே ? தாய் இல்லாமல் தந்தை எப்படி என்ற கேள்வி எழும் அல்லவா ?

ஆதி மூலத்துக்கு தந்தை என்ன, தாய் என்ன ? எல்லாம் ஒன்று தான்.

அவன்  தந்தையானவன். தாயும் ஆனவன்.

நீயே தாயும் தந்தையும் என்று சொல்லி முடிக்கிறான் விராதன்.



அம்மையும் நீ, அப்பனும் நீ என்பார் மணிவாசகர். அம்மையே அப்பா.


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


அப்பன் நீ, அம்மை நீ என்பார் நாவுக்கரசர்.


அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.


மூன்று வயது  ஞான சம்பந்தர், குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய  தந்தை திருக்குளத்தில் நீராட , நீரில் மூழ்கினார். தந்தையை க் காணாத குழந்தை அழுதது. குளத்தை பார்த்தல்லவா அழ வேண்டும்.  அது கோபுரத்தைப் பார்த்து அழுதது. எப்படி ?

அம்மே, அப்பா என்று அழுதது.

மெய்ம்மேற்கண் டுளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
 தம்மேலைச் சார்புணர்ந்தோ? சாரும்பிள் ளைமைதானோ?
 செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்
"தம்மே! யப்பா! வென்றென்றழுதருளி யழைத்தருள.


சேக்கிழார் உருகுகிறார்.

அம்மே அப்பா என்று எண்ணி அழைத்து அருளி அழைத்து அருள என்று  சேக்கிழார் நெகிழ்கிறார். மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் ததும்பும் பாடல்.

காணாமல் போனது அப்பா. பிள்ளை அழுவதோ, அம்மே, அப்பா என்று. அம்மாவைத் தேடி பின் அப்பாவைத் தேடுகிறது.

இரண்டும் வேறா என்ன ?

காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன், 
கண்டேன் அவர் திருப்பாதம் 
கண்டரையாதன கண்டேன் என்றார் நாவுக்கரசர். 

ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக  அனுப்புடன் இருப்பதைப் பார்த்த  அவருக்கு , அது இறை வடிவமாகவே தெரிகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதுதான் மூலம். அது தான்  ஐக்கியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

காலம் கருதி சுருக்கி உரைத்தேன்.

சிந்தித்துணர்க.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_21.html


Monday, September 19, 2016

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு


பாடல்

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

பொதுவாக எல்லா பாடல்களுக்கும் முதலில் கொஞ்சம் முகவுரை எழுதிவிட்டு பின் பாடலும், பொருளும் எழுதுவது என் வழக்கம்.

அபிராமி அந்தாதி மட்டும் விதி விலக்கு . இவ்வளவு அழகான , உணர்ச்சிமயமான பாடலை முதலில் நீங்கள் படித்து விடுங்கள். பொருள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

அபிராமி அந்தாதிக்கு பொருள் எழுதுவது என்பது அதை அவமதிப்பதாகவே கருதுகிறேன். அது அதுதான். அதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் ?

இருந்தும், ஒரு சேதி சொல்ல ஆசை.

முதலில் பொருள் ,பின்னர் சேதி

சிறக்கும் = சிறந்து கொண்டே இருக்கும்

கமலத் = தாமரை மலரில் இருக்கும்

திருவே = திருமகளே

நின் சேவடி =   உன்னுடைய செம்மையான திருவடிகளை

சென்னி = தலையில்

வைக்கத் = வைக்க

துறக்கம் தரும்= துறக்கம் தரும்

நின் துணைவரும் = உன் கணவரும்

நீயும் = நீயும்

துரியம் அற்ற = துரியம் அற்ற

உறக்கம் தர வந்து = உறக்கத்தை தர வந்து

உடம்போடு = உடலோடு

உயிர் உறவு அற்று = உயிர் தன் தொடர்பை அறுத்துக் கொண்டு

அறிவு = அறிவானது

மறக்கும் பொழுது  = மறக்கும் போது

என் முன்னே வரல் வேண்டும் = என் முன்னே வரவேண்டும்

வருந்தியுமே = உனக்கு அது கடினமாக இருந்தால் கூட

அது என்ன துறக்கம், துரியம் ?

மனிதர்களை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்.

உடல் சார்ந்தார்கள். உணவு, புலன் இன்பம், உறக்கம், இதுதான் இவர்களுக்குத்  தெரியும். இதுதான் இவர்களுக்குப் பிரதானம். தன்    சுகம்.  அது உடல் சார்ந்த சுகம்.  உடலை வைத்துத்தான் எல்லாம் அவர்களுக்கு. விலங்குகளுக்கு சற்று மேலே. அவ்வளவுதான்.

அதை அடுத்த உயர்ந்த நிலை,  அறிவு சார்ந்த நிலை. சிந்தனை, யோசனை, என்பது இவர்களின்   பிரதானம். அவர்கள் தங்களை அறிவால் செலுத்தப் படுபவர்களாக  காண்பார்கள்.  They identify themselves with intelligence.  எதையும் அறிவு பூர்வமாக   அணுகுவார்கள்.  இசை, இலக்கியம், ஓவியம், கணிதம், அறிவியல், தர்க்கம்,  நடனம், என்று இவர்களின்  உலகம்    விரியும்.

அதை அடுத்த உயர்ந்த நிலை, மனம் சார்ந்தவர்கள். உணர்ச்சியை மையமாக  கொண்டவர்கள். அன்பு, காதல், பக்தி, பாசம், உறவு என்பது  இவர்கள் உலகம்.

யாரும் ஒரு நிலையில் மட்டும் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு நிலையில்  அதிகமான நேரம் இருப்பார்கள். ஒரு அறிவியல் அறிஞர் கூட  காதலிக்கலாம். ஆனால் அந்த உணர்வு சார்ந்த நேரங்கள் மிக   மிக கொஞ்சமாக இருக்கும்.

இந்த நான்கு நிலைகளையும் கடந்த நிலை துரிய நிலை. துரிய என்றால்  நான்காவது.

அது என்ன நான்காவது ? அது எதை சார்ந்து நிற்கும் ? தெரியாது. அதனால் தான்   அதை "நாலாவது நிலை " என்றார்கள்.

இந்த மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

உடல், அறிவு, மனம் என்ற மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

அந்த நிலையில்  கூட தெரியாது.  கடவுள் தெரிய வேண்டும் என்றால்  அறிவு   வேலை செய்ய வேண்டும்.

இது கடவுள் என்று  அறியும் அறிவு வேண்டும்.

துறக்க நிலை இந்த மூன்றையும் கடந்த நிலை.

நான் அந்த நிலை அடையும் போது , அபிராமி நீயே வந்துரு. உன்னை நினைக்க வேண்டும், கூப்பிட வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது.   எனவே,இப்பவே சொல்லி  வைக்கிறேன். அந்த சமயத்தில் நீயும் உன் கணவரும் வந்து விடுங்கள்.

நீங்கள் வந்தாலும் நான் அடையாளம் கண்டு கொள்ள மாட்டேன்.உனக்கு அது  ஒரு சிக்கல் தான்.  வருத்தம் தான். இருந்தாலும்   வந்துரு.

என்று பதறுகிறார் பட்டர்.


(தொடர்ந்தாலும் தொடரும் )

Sunday, September 18, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்


மனிதன் நாளும் அலைகிறான். அங்கும் , இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். ஏன் ? எதற்கு ? எதை அடைய இந்த ஓட்டம் ?

எதை எதையோ அடைய அலைகிறான். தேடியதை அடைந்த பிறகு, அமைதியாக இருக்கிறானா என்றால் இல்லை. ஒன்றை அடைந்த பிறகு அடுத்ததை தேடி ஓடுகிறான்.

இந்த ஓட்டத்தில், எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று அறியாமல் போய் விடுகிறான்.

உடல் நிலை, குடும்பம், உறவுகள், இரசனை, நட்பு, கல்வி, ஓய்வு என்று ஆயிரம் நல்ல விஷயங்களை இழந்து விடுகிறான். ஏதோ ஒன்றை அடைகிறான். அதை அடைய ஆயிரம் நல்லவைகளை இழக்கிறான்.

தேடியதை அடைந்தபின் , எதை எல்லாம் இழந்தோம் என்று கணக்குப் போடுகிறான். இழந்தது அதிகம். பெற்றது கொஞ்சம் என்று அறியும் போது தன் மேல் தானே வருத்தம் கொள்கிறான்.

இது தானே வாழ்க்கை. இப்படித்தானே போகிறது.

மணிவாசகர் சொல்கிறார்.

ஒரு பெரிய சட்டியில் கெட்டி தயிர் இருக்கிறது. உறுதியாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களுக்குத் தெரியும், தயிர் உறைய வேண்டும் என்றால் அதை அசைக்கக் கூடாது. ஆடாமல், அசையாமல் இருந்தால் நீராக இருக்கும் பால், உறை ஊற்றிய பின் கெட்டியான தயிராக மாறும். அது உறைந்து கொண்டு இருக்கும் போது , அதில் ஒரு சின்ன மத்தை போட்டு கடைந்தால் என்ன ஆகும் ? தயிர் உடையும். நீர்த்துப் போகும். கொஞ்சம் கடைவது. பின் நிறுத்தி விடுவது. பின் சிறிது நேரம் கழித்து , மீண்டும் கொஞ்சம் கடைவது என்று என்று இருந்தால் என்ன ஆகும் ? தயிரும் உறையாது. வெண்ணையும் வராது. தயிர் தளர்ந்து போகும் அல்லவா.

பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்


மாழை = மா என்றால் மா மரம். மாவடுவைப் போன்ற

மைப் = கண் மை

பாவிய = பூசிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் = வன்மையான

மத்து இட = மத்தை இட்டு

உடைந்து = உடைந்து


தாழியைப் = தயிர் வைத்த பாத்திரத்தை

பாவு = பரவும்

தயிர் போல் = தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்து விட்டேன்

தட = பெரிய (தடக் கை )

மலர்த் தாள் = மலர் போன்ற திருவடிகளை கொண்டவனே

வாழி! = வாழ்க

எப்போது வந்து = நான் எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினைகளைச் செய்தவன்

ஆழி அப்பா! = ஆழி என்றால் கடல். கடல் போல பரந்து விரிந்தவனே

 உடையாய்! = அனைத்தும் உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே = அடியேன் உன் அடைக்கலம்


பெண்ணாசை ஒன்று தானா இந்த உலகில் ? மணிவாசகர் போன்ற பெரியவர்கள்  நம் குற்றங்களை தங்கள் மேல் ஏற்றிச் சொல்வார்கள்.

பெண்ணாசை என்பது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கும். பெண்களுக்கு ஆசையே  கிடையாதா ?

இருக்கும்.

எல்லோரின் ஆசைகளையும் ஒரு பாட்டில் பட்டியல் இட முடியாது.

பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசை என்ற ஒன்று வரும்போது  அது உறைந்த, உறைகின்ற தயிரை அலைக்கழித்து தளர்ச்சி அடைய செய்யும்.

கொஞ்ச நேரம் எடுத்து யோசியுங்கள்.

எந்த ஆசை உங்களை இந்த நேரத்தில் அலைக்கழிக்கிறது என்று ....

ஆசை நல்லதா , கெட்டதா என்பதல்ல கேள்வி.

ஆசை வரும்போது அது உங்களை அலைக்கழிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது வேண்டுமா , வேண்டாமா என்பது உங்கள்  முடிவு.

ஒவ்வொரு ஆசைக்கும் ஒரு விலை இருக்கிறது.

நீங்கள் தரும் விலை சரியானது தானா என்று அறிந்து கொள்ளுங்கள்.

நல்லதே நடக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_18.html



Saturday, September 17, 2016

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே 




அது ஒரு கடற்கரையை அடுத்த சின்ன கிராமம். எப்போதும் அலை ஓசை கேட்டுக்கொண்டிருக்கும். புன்னை மரங்கள் நீர் பரப்பின் ஓரத்தில் இருக்கும். அங்கே கொஞ்சம் பறவைகள், அந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்குகின்றன.

அந்த ஊரில் ஒரு பெண். மிக மிக இளம் பெண். அந்த வயதுக்கு உரிய நாணம், குறுகுறுப்பு எல்லாம் உள்ள பெண். அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள். பேசி மகிழ்ந்த அவளுடைய காதலன் பிரிந்து சென்று விட்டான். அவளுக்கு தவிப்பு. தூக்கம் வரவில்லை.

இந்த அனுபவம் அவளுக்குப் புதியது. ஏன் இப்படி ஆனோம் என்று அவளுக்குப் புரியவில்லை. தவிக்கிறாள்.

யாரிடம் சொல்லுவாள் ?

தன் தோழியிடம் கேட்கிறாள்

"ஏண்டி, இது தான் காதல் என்பதா ? தூக்கம் வரலடி" என்று வெகுளியாக கேட்கிறாள்.

பாடல்

அது கொல் தோழி காமநோயே!
வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே” 

பொருள்

அது கொல் = அதுவா ?

தோழி = தோழியே

காமநோயே! = காம நோயே !

வதிகுறு உறங்கும் = (தன்னிடம்) வந்து உறங்கும் குறுகு (பறவை)

இன்நிழல் = இனிய நிழலைத் தரும்

புன்னை = புன்னை மரம்

உடை = உடைக்கின்ற

திரைத்  திவலை = திரண்டு வரும் நீர் துளிகள்

அரும்பும் = மொட்டும் போல் அரும்பும்

தீநீர் = இனிய நீர்

மெல்லம் புலம்பன் = புலம்பு என்றால் கடற்கரை. புலம்பன் என்றால் கடற்கரையை உடையவன். மெல்லம் புலம்பன் என்றால் மென்மையான கடாரகரையை உடையவன் (தலைவன்)

பிரிந்தெனப் = பிரிந்த பின்

பல்இதழ் = பல இதழ்களை கொண்ட தாமரை மலரைப்

உண்கண் = போன்ற என் கண்கள்

பாடு ஒல்லாவே = உறங்காமல் இருக்கின்றன


" பாரு இந்த சின்ன குருவி எப்படி நிம்மதியா தூங்குது...எனக்குத் தான்  தூக்கம் வரல"  என்று புலம்புகிறாள்.

தனக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை.

இது தான் காதல் நோயா என்று தோழியிடம் கேட்கிறாள்.

கடல் நீர் உப்பு தான். ஆனாலும், அது அவளுக்கு இனிய நீராக இருக்கிறது.

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா  என்று பாரதி சொன்னது போல, உப்புத் தண்ணியும் தித்திக்கிறது அவளுக்கு .

சங்க கால காதல்.

அந்த ஈரமான உப்பு காற்றும், கண் மூடி தூங்கும் அந்த குருவியும்,  தூங்காத அந்த பெண்ணும், அவள் தோழியும் இன்னமும் அந்த பாடலுக்குள்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_24.html



இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?




விராதன்  என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாக  பிறந்து,பின் இராமனால் சாப விமோசனம்  பெறுகிறான். அவன் விண்ணுலகம் போகுமுன் சில சொல்லிப் போகிறான்.

அவன் வாயிலாக கம்பன் இராமனே பரம்பொருள் என்று திகட்ட திகட்ட  சொல்லுகிறான்.

பாடல்

பனி நின்ற பெரும் பிறவிக் கடல்
     கடக்கும் புணை பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும்
     "நன்று" என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை
     மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு,
     என் செய்வாரோ?

பொருள்

பனி நின்ற = பனி போல குளிர்ந்த

பெரும் = பெரிய

பிறவிக் கடல் = பிறவி என்ற கடலை

கடக்கும் = கரை ஏற

புணை பற்றி = தெப்பத்தைப் பற்றி

நனி நின்ற சமயத்தோர் = பெரிய சமயங்களைச் சேர்ந்தோர்

எல்லாரும் = எல்லாரும்

"நன்று" என்னத் = நல்லது என்று

தனி நின்ற தத்துவத்தின் = தனிப்பட்டு நின்ற தத்துவத்தின்

தகை மூர்த்தி நீ ஆகின் = உயர்ந்த மூர்த்தி நீ என்றால்

இனி = இனிமேல்

நின்ற = நிற்கும், இருக்கும்

முதல் தேவர் = முதல் என்று சொல்லப் படும் மற்ற தேவர்கள்

என் கொண்டு, = எதைக் கொண்டு

என் செய்வாரோ? = எதைச் செய்வார்களோ ?

பிறவி என்ற பெருங்கடலை கடக்க தெப்பமாக, மற்ற  சமயத்தவரும், உன்னை பற்றிக் கொண்டார்கள். உயர்ந்த தனி  மூர்த்தி நீ. இது இப்படி என்றால், மற்ற தெய்வங்கள் என்ன செய்யும். ஒன்றும் ஒன்றும் செய்யாது.

பாடலின் சாரம் அது.

கொஞ்சம் ஆழமாக  சிந்திப்போம்.

பிறவி என்பது பெரிய கடல்தான். நீந்திக் கடந்து விடமுடியுமா ? கை கால்  சோர்ந்து விடும் அல்லவா ? அப்போது பற்றிக் கொள்ள ஒரு தெப்பம்  வேண்டும் அல்லவா ? அந்த தெப்பமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பற்றிக்  கொள்கிறார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் , நல்ல துணையாவது நமச்சிவாய என்ற  நாமமே என்றார் அப்பர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

என்பது அவர் வாக்கு.

அந்தப் பிறவிக் கடல் கொஞ்சம் வெது வெதுப்பாக இருந்தால் நீந்த சுகமாக இருக்கும்.  ஆனால் அது அப்படி இல்லை. பனி போல சிலீர் என்று  குளிக்கிறது. அந்தத் தண்ணீரில் எப்படி இறங்குவது. இறங்குவது என்ன  இறங்குவது. தூக்கிப் போட்டு விட்டார்கள். நடுங்குகிறது. குளிர்கிறது. குளிர் எலும்பு வரை எட்டிப் பாய்கிறது.

வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.

அந்தக் குளிர் கடலில் , நீந்திக் கரை ஏற , அனைத்து சமயத்தினரும் இராமனைப் பற்றிக் கொண்டார்கள் என்றால் மற்ற தேவர்கள் என்ன செய்வார்கள்  என்று கேட்கிறார் கம்பர்.

எங்கெங்கோ போய் துன்பப் படாதீர்கள். இராமனைப் பற்றிக் கொள்ளுங்கள். பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கரையேற சிறந்த தெப்பம்  அவன் தான்.


Friday, September 16, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 2

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 2


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

இந்தப் பாடலின் முன்னுரையை ஏற்கனவே பார்த்து விட்டதால் நேரடியாக பொருளுக்குப் போவோம்

முதல் பாகம் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

செழும் கமல  திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த 
பழுத்த மனத்து அடியார்களுடன் போயினர் யான்  பாவியேன்
புழுக் கண் உடை புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இல்லா 

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன்  அடைக்கலமே.


பொருள்


செழும் = செழுமையான, சிவப்பான 

கமல  திரள் அன = தாமரை மலர்களின் தொகுப்பு 

நின் = உன்னுடைய 

சேவடி = சிவந்த திருவடிகள்  

சேர்ந்து = சென்று சேர்ந்து 

அமைந்த = அமைதி அடைந்த 

பழுத்த மனத்து = பழுத்த மனத்து 

அடியார்களுடன் = அடியவர்களுடன் 

போயினர் = போனவர்கள் 

யான் = நான் 

பாவியேன் = பாவியேன் 


புழுக் கண் உடை = புழுக்கள் உடமையாகக் கொண்ட இந்த  

புன்குரம்பைப் = கீழான இந்த உடலை 

பொல்லாக் = தீயன  

கல்வி = கல்வி 

ஞானம் இல்லா = ஞானம் இல்லா  

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்குகள் கொண்ட மனத்தை உடையவன் 

உடையாய் = உடையவனே 

உன்  அடைக்கலமே = உன் அடைக்கலமே 

எனக்கு ஒன்றும் தெரியாது. உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன்.  இனி என்னை சரி ஆக்குவது உன் பாடு என்கிறார். 

வீடு பேறு , முக்தி இவற்றை அடைய மூன்று வழிகளை சொல்கிறார்கள். 

கர்ம யோகம் 

ஞான யோகம் 

பக்தி யோகம் 

மணிவாசகர் பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். ஒரு அரசனின் கீழ் அமைச்சராக இருப்பது எளிதான காரியம் இல்லை. அவ்வளவு கடினமான வேலையைச் செய்த மணி வாசகருக்கு கர்ம யோகம் கடினமாக இருக்கிறது. 

சிலர் உன் அடியார்களுடன் சேர்ந்து , மனதை பக்குவப் படுத்தி உன் திருவடிகளை அடைந்தார்கள். என்னால் முடியவில்லை என்கிறார். 

சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து

முதலில் சென்று சேர வேண்டும். பின் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் (அமைய). பின் மனம் பக்குவப் படவேண்டும்.இவ்வளவு வேலை இருக்கிறது. 

என்னால் முடியவில்லை என்கிறார் மணிவாசகர். நான் இந்த புழுக்களுக்கு இடமான உடலோடு இருக்கிறேன் என்கிறார். 

மணிவாசகர் பெரிய அறிவாளி. 

 திருவாசகம், திருக்கோவையார் எழுதியவர்.  

இருந்தும், ஞான யோகத்தில் அவரால் செல்ல முடியவில்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது எல்லாம் போதும் என்ற  நிலைக்கு வந்தார். 

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார். கல்வி என்பது பெரிய கடல். அதில் இருந்து தப்பித்தால் தான் இறைவனை அடைய முடியும்  என்கிறார். 

ல்வி ஞானம் இல்லா 

கல்வி  அறிவும்,அதில் இருந்து பிறக்கும் ஞானமும் தனக்கு இல்லை என்கிறார். 

மணிவாசகருக்கே அப்படி என்றால், நம் நிலை என்ன. நம் அறிவும் , ஞானமும் எவ்வளவு இருக்கும் ?


சரி, கர்ம யோகமும் சரிப் பட்டு வரவில்லை. ஞான யோகமும் சரிப் பட்டு வரவில்லை. 

பக்தி யோகம் தான் தனக்கு உகந்தது என்று அறிந்தார். 

பக்தி செய்யக் கூட தெரியாது. 

நான் உன் அடைக்கலம் என்று அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டார். 

ஒரு வேளை பக்தி மார்க்கம் எளிமையாக இருக்குமோ ?

உங்கள் மார்க்கம் எது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/2_16.html

Thursday, September 15, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 1

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 1


நம்பிக்கை.

நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம். நம்மால் எதையாவது முழுவதுமாக நம்ப முடிகிறதா ?

வைகுண்டம் வேண்டும், கைலாயம் வேண்டும் , இறைவன் திருவடி நிழல் வேண்டும் என்று நம்பிக்கையோடு தொழுபவர்கள் கூட, இறைவனே நேரில் வந்து "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம்...வா பரலோகம் போகலாம் " என்று கூறினால் , எத்தனை பேர் உடனே கிளம்புவார்கள் ?

இது ஒரு வேளை கடவுள் இல்லையோ ? பரலோகம் கூட்டிப் போகிறேன் என்று வேறு எங்காவது கூட்டிக் கொண்டு போய் விட்டால் ? போட்டது போட்ட படி இருக்கிறது. பிள்ளையின் படிப்பு, அவர்களின் திருமணம், அவர்களின் பிள்ளைகள், சொத்து விவகாரம் என்று ஆயிரம் விஷயங்கள் கிடக்கிறது. அத்தனையும் விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்குவார்கள்.

கடவுள் தானே கூப்பிடுகிறார். அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கும் ?

நான் எல்லா விட்டால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று நினைப்பவர்களே அதிகம் இருப்பார்கள்.

சரி , அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் தான் அனைத்தையும் செய்கிறான் என்றால், நமக்கு வரும் துன்பங்களும் அவன் செய்வது தானே. அதற்காக ஏன் வருந்த வேண்டும். நமக்கு என்ன வேண்டும் , எவ்வளவு வேண்டும், எப்போது  வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா ?

புலம்புவது ஏன் ?

நம்பிக்கை இன்மை.

நமது சமயமும், இலக்கியமும் சரணாகதி, அடைக்கலம் என்பதைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றன.

நம்மை, நம் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது பெரிய விஷயம்.

வைணவம் சரணாகதி பற்றி பேசுகிறது.

சைவம் அடைக்கலம் என்று கூறுகிறது.

எல்லாம் ஒன்று தான். ஒருவரிடம் நம்மை முழுவதுமாக கொடுத்து விடுவது.

இதில் மூன்று நிலை இருக்கிறது.

கையடைப் படுத்துவது. இடைக்கலம் . அடைக்கலம்.

கையடை என்றால் ஒருவரை இன்னொருவரிடம் "இனி இவன்/இவள் உன் பொறுப்பு " என்று ஒப்படைப்பது.

பெற்றோர் , ஆசிரியரிடம் பிள்ளையை விட்டு "இனி இவன் உங்கள் பொறுப்பு...அவனை / அவளை படித்து நல்ல குடிமகனாக ஆக்குவது உங்கள்  பொறுப்பு " என்று விடுவது கையடை.

இதில், கையடையாக போபவரின் சம்மதம் இருக்காது. குழந்தையின் சம்மதம் கேட்டு ஆசிரியரிடம் விடுவது கிடையாது.

இராமாயணத்தில் , தீ வளர்த்து, சீதையை இராமனிடம் "இவன் இனி உன் கையடை " என்று சனகன் கொடுத்தான்.

'நெய் அடை தீ எதிர் நிறுவி, ''நிற்கு இவள்
கையடை'' என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனோடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்றுஅரோ.


அடுத்தது, இடைக்கலம். இது ஒருவர் தன்னைத் தானே மற்றோரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்புக்  கொடுப்பது.

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்

இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக்
காட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித்
தூநீறணிந்துன்

அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம்
பலத்தரனே.

இடைக்கலம் அல்லேன் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் .


அடைக்கலம் என்பது, தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்புக் கொடுப்பது.

விபீஷணன் அடைக்கலமாக வந்தான். சரணாகதி என்பது.

‘இடைந்தவர்க்கு “அபயம் யாம் “ என்று
    இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம்
    உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
    உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
    அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?

அப்படி வந்த விபீடணனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த அறம் என்ன ஆண்மை என்ன என்று கேட்கிறான் இராமன்.

திருவாசகத்தில், மாணிக்க வாசகர் அடைக்கலப் பத்து என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

தன்னை எப்படி ஆண்டவனிடம் அடைக்கலமாகத் தருகிறார் என்பது பற்றி.

முதல் பாடல்


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

பொருள்

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html