இன்று இந்த வலைத்தளம் 27 இலட்சம் பார்வையாளர்களை (page views ) தாண்டியிருக்கிறது.
தொடர்ந்து வாசித்து வரும் அனைவர்க்கும் நன்றி.
இன்று இந்த வலைத்தளம் 27 இலட்சம் பார்வையாளர்களை (page views ) தாண்டியிருக்கிறது.
தொடர்ந்து வாசித்து வரும் அனைவர்க்கும் நன்றி.
நம் உடம்பிலே சக்தி ஒடுங்கி இருக்கிறது. அது எங்கே ஒடுங்கி இருக்கிறது என்றால் மலத் துவாரத்துகும், பிறப்பு உறுப்புக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒடுங்கி கிடக்கிறது என்கிறார்கள்.
அந்த சக்தியை எழுப்பி மேலே கொண்டு வர முடியும். அது ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரும். அந்த ஒவ்வொரு படியும் ஒரு சக்கரம் என்கிறார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆங்க்யா என்ற ஆறு சக்கரங்களின் வழியாக மேலே ஏறி, தலைக்கு மேல் சஹாஸ்ரார் என்ற இடத்தை சென்று அடையும் என்கிறார்கள்.
இந்த சக்தி ஒவ்வொரு இடத்திலும் ஏறி நிற்கும் போது, பல நிகழ்வுகள் ஏற்படும் என்கிறார்கள்.
உதாரணமாக கழுத்தில் வந்து நின்றால் அவர்கள் சொல்வதை உலகம் கேட்டு நடக்கும், என்கிறார்கள். ஏன், சிலர் சொல்வதை உலகம் கேட்கிறது என்றால் காரணம் அவர்களின் சக்தி அங்கே நிற்கிறது.
இந்த சக்கரங்கள் உண்மையா? அப்படியும் நடக்குமா? மற்ற மதங்களில் இது பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விகள் நிற்கின்றன. நிறைய ஆராய வேண்டி இருக்கிறது.
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
என்பார் மணிவாசகர்.
குண்டலினி என்ற அந்த சக்தி இதயத்துக்கு வருவதும், தலைக்கு மேல் வருவதையும் இது குறிப்பதாக சில உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இங்கே, அருணகிரியார் பாடுகிறார்
"இந்த குண்டலினி சக்தி ஆறு நிலைகளைத் தாண்டி சஹாஸ்ரார் என்ற அந்த நிலைக்கு செல்லும் பேறு எனக்குக் கிடைக்குமா? கோபம் கொண்டு வரும் சூரனை வென்று, தேவர்கள் மனம் குளிரும்படி தேவ லோகத்தை அவர்களுக்கு கொடுத்தவனே "
என்று.
பாடல்
ஆறாறையு நீத் ததன் மேனிலையைப்
பேறாவடி யேன் பெறு மாறுளதோ
சீறா வரு சூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர் வித்தவனே
சீர் பிரித்த பின்
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையை
பெறாத அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரும் சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர் வித்தவனே
பொருள்
ஆறு = வழி, பாதை
ஆறையும் = ஆறு நிலைகள் (மூலாதாரம் தொடங்கி ஆங்க்யா வரை)
நீத்து = விடுத்து
அதன் மேல் நிலையை = அதற்கு மேல் உள்ள நிலையான சஹாஸ்ரார்
பெறாத அடியேன் = இது வரை பெறாத அடியேன்
பெறுமாறு உளதோ = இனி அடையும் வழி உள்ளாதா?
சீறா வரும் = சீறி வரும்
சூர்= சூரனை
சிதைவித்து = வென்று
இமையோர் =தேவர்
கூறா உலகம் = அவர்களுக்கு அளிக்கப்பட்ட உலகத்தை அவர்களுக்கு அளித்து
குளிர் வித்தவனே = அவர்களை குளிர்வித்தவனே
"கூறா உலகம்" - செய்யா எனும் வாய்பாடு. கூறாக பிளந்து கொடுக்கப்பட்ட உலகம். தேவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட தேவலோகத்தை அசுரர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதை மீட்டு தேவர்கள் மனம் குளிரும்படி செய்தவனே.
"ஆறாறையும்" என்பதை 6 x 6 = 36 என்று கொண்டு, முப்பத்தி ஆறு தத்துவங்களையும் கடந்து மேலே செல்வது என்றும் பொருள் சொல்லுவார்கள்.
இன்று ஒரு சிக்கலான குறளைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். சில சமயம் சொற் சிக்கனம், புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குறள்களில் நாம் காண இருக்கும் குறளும் ஒன்று.
அன்பின் விரிவு அருள் என்று பார்த்தோம். அருள் இருந்தால் மற்ற உயிர்களை கொல்லத் தோன்றாது. சொல்ல வந்தது அவ்வளவுதான். ஆனால், குறள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்:
பாடல்
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.
பொருள்
அருளல்ல = அருள் அல்லாதது
தியாதெனிற் = யாது எனில்
கொல்லாமை = கொல்லாமை
கோறல் = கொல்லுதல்
பொருளல்ல = பொருள் அல்ல
தவ்வூன் றினல் = அந்த ஊனை தின்பது
பரிமேலழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அர்த்தம் புரியாமல் போவது மட்டும் அல்ல, தவறான அர்த்தமும் வந்து விடும்.
பரிமேலழகர் சொல்கிறார்
அருள் என்பது யாது எனின் = அருள் என்றால் என்ன என்று கேட்டால்
அல்லது யாது எனின் = அதாவது அருள் அல்லாதது எது என்றால்
கோறல் = கொல்லுதல்
பொருள் என்றால் சிறந்தது என்று அர்த்தமும் உண்டு.
"போற்றி என் வாழ் நாள் முதலாகிய பொருளே"
என்பார் மணிவாசகர்.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்"பொருளே" அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்"பொருளே".
"பொருளே", பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
என்பது அபிராமி பட்டர் வாக்கு.
இங்கே குறளில்
"பொருள் அல்லது யாது எனில் ஊன் தின்றல்" என்பதில் பொருள் என்பது அறம் நோக்கி நின்றது. அதை அறம் என்பது யாது எனின் ஊன் தின்றல் என்று கொள்ள வேண்டும்.
கொல்லாமை கோறல் என்றால் என்ன.
கொல்லாமை என்றால் கொல்லாமல் இருப்பது.
கோறல் என்றால் கொல்லுவது.
கொல்லாமை கோறல் என்றால் என்ன ?
கொல்லாமை என்ற விரத்தை கொல்லுவது. அதாவது அதை கை விட்டுவிடுவது என்று பொருள் சொல்கிறார்கள்.
அவ்வூன் என்றார். கொல்லப்பட்ட அந்த ஊனை என்று அர்த்தம்.
பக்திப் பாடல்களில் பொதுவாக பாடப்படும் கடவுளைப் பற்றிய வர்ணனைகள் நிறைந்து இருக்கும். பாடும் கடவுளின் வாகனம், உடல் வண்ணம், அவர் செய்த லீலைகள், அருள் பாலித்த விதங்கள், தீயவர்களை தண்டித்த விதம் என்று இருக்கும். இந்த குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் வரும்.
அவற்றை ஒரு முறை வாசித்து விட்டு, பாட்டில் உள்ள மற்றைய செய்திகள்/கருத்துகளுக்குள் நாம் போகலாம்.
அருணகிரியார் சொல்கிறார் ,
"என் தாய் நீ. எனக்கு அருள் செய்யும் தந்தை நீ. என் மனதில் உள்ள சலனங்களை எல்லாம் போக்கி, என்னை ஆட்கொள்"
என்று.
பாடல்
எந்தாயு மெனக் கருள் தந்தையு நீ
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே .
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே .
பொருள்
கந்தா = கந்தா
கதிர் வேலவனே = கதிர் வீசும் வேலை உடையவனே
உமையாள் மைந்தா = உமா தேவியின் மைந்தனே
குமரா = குமரனே
மறை நாயகனே = வேதங்களின் தலைவனே
இளம் பருவத்தில், புலால் உணவே சாப்பிடாமல் வளர்ந்த சிலர் பிற்காலத்தில் மாமிச உணவை விரும்பிச் சுவைப்பதை நாம் கண்டு இருக்கிறோம்.
எப்படி இப்படி மாறினீர்கள் என்று கேட்டால் , "பள்ளியில், கல்லூரியில் மாமிச உணவு என்று சொல்லாமல், நண்பர்கள் ஏமாற்றி உண்ண வைத்து விட்டார்கள். அந்த சுவை பிடித்துப் போய் விட்டது. அப்படியே பழகிப் போய் விட்டது. விட முடியவில்லை" என்பார்கள்.
ஒருமுறை புலால் உணவை சுவைத்து விட்டால் பின் அதை விட முடியாது. மனம் மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாடும்.
உயிர்களை கொன்று தின்பது என்று ஆரம்பித்து விட்டால், மனம் அருளின் பக்கம் போகாது.
அது எப்படி என்று ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர்.
வீட்டில் சின்ன பையன்கள் கையில் ஒரு சின்ன குச்சியைக் கொடுத்தால் அதை வைத்து எதையாவது தட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். எதைப் பார்த்தாலும், அதை தட்டி ஒலி உண்டாக்குவார்கள்.
அது போல, கையில் கத்தி, துப்பாக்கி போன்ற கொலைக் கருவிகளை வைத்து இருப்பவர்கள் மனம் யாரைப் போட்டுத் தள்ளலாம் என்றுதான் நினைக்கும். கருவியின் பின்னே மனம் போகும். கையில் செல் போன் இருந்தால், நொடிக்கு நூறுதரம் அதைப் பார்க்கச் சொல்லும்.
அது போல, மாமிச உணவின் சுவை கண்டு விட்டால், மனம் அதன் பின்னே மீண்டும் மீண்டும் போகும்.
பாடல்
படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி
னுடல்சுவை யுண்டார் மனம்.
சீர் பிரித்த பின்
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.
பொருள்
படைகொண்டார் = கத்தி போன்ற படைக் கருவிகளை கொண்டவர்கள்
நெஞ்சம் போல் = மனம் போல்
நன்று ஊக்காது = நல்லதை நினைக்காது
ஒன்றன் = ஒரு உயிரின்
உடல் சுவை = உடலின் சுவையைக்
உண்டார் மனம் = உண்டவர்களின் மனம்
"நன்று ஊக்காது" அதாவது நல்லதை நினைக்காது என்ற சொல் தொடரை இரண்டு பக்கமும் சேர்த்துக் கொள்ளலாம்.
படை கொண்டவர் நெஞ்சமும் நல்லதை நினைக்காது.
மாமிசம் உண்டவரின் மனமும் நல்லதை நினைக்காது.
இரண்டும் கொலையை நாடும்.
மாமிசம் உண்பது சரி தவறு அல்ல என்பதல்ல விவாதம்.
சாப்பிட்டால் மனதில் அருள் வருவது கடினம். அவ்வளவுதான்.
அருள் வராவிட்டால் போகட்டும் என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை.
அன்பு விரிய அருள் பிறக்கும்.
அருள் மனதில் சுரக்கவில்லை என்றால், அன்பின் வட்டம் சுருங்கும்.
அன்பின் வட்டம் சுருங்க சுருங்க சுயநலம் மேலோங்கும். மற்ற உயிர்களின் மேல் அருளும் அன்பும் குறையும்.
சிந்திக்க வேண்டிய விடயம்.
நிறைய பேர் படிப்பார்கள். தாங்கள் படித்து அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.. காரணம், எங்கே அவனுக்கும் தெரிந்து விட்டால், நம் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது, மற்றவன் முன்னேறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாக இருக்கலாம்.
அருணகிரியார் கூறுகிறார்
"மறைத்து வைக்கும் கல்வியை கொண்டவர்களின் வாசலில் சென்று அவர்களிடம் உதவி கேட்கும் படி வைக்காமல் உயர்ந்த மெய்ப் பொருளை நீ எனக்கு அருள வேண்டும். தலைவா, இளையவனே, வஜ்ராயுதம் என்ற படையைக் கொண்டவனே, சிவ யோகத்தை பக்தர்களுக்குத் தருபவனே "
என்று.
பாடல்
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருளீகுவையோ
குரவா குமரா குலிசாயுதகுஞ்
சரவா சிவ யோக தயாபரனே
பொருள்
கரவாகிய = கரத்தல் என்றால் மறைத்தல். மறைத்து வைக்கும்
கல்வியுளார் = கல்வியை உடையவர்கள்
கடை சென்று = வாசலில் சென்று
இரவா வகை = பிச்சை எடுக்காமல் இருக்கும் படி
மெய்ப் பொருளீகுவையோ = மெய்யான பொருளை எனக்குத் தந்து அருள் புரிவாயா
குரவா = குரவன் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்றாலும், தலைவன் என்ற அர்த்தம் இங்கு பொருந்தும்.
குமரா = இளையவனே
குலிசாயுத = குலி + ஆயுதம் = வஜ்ரப் படையை உடையவனே
குஞ்சரவா = குஞ்சரம் என்றால் யானை. தெய்வயானைக்கு தலைவனே
சிவ யோக தயாபரனே = சிவ யோகத்தை பக்தர்களுக்கு தருபவனே
சாதாரண மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு மற்றவர்களுக்கு தர வேண்டும் என்று மறைத்து வைத்துக் கொள்வார்கள். முருகன், சிவ யோக பலன்களையே பக்தர்களுக்குத் தருபவன். அவனிடமே நேரே சென்று கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
"இரவா வகை மெய் பொருள் ஈகுவையோ" என்று கொண்டு, கரத்தல் தொழிலை செய்பவர்கள் மெய் பொருளை கற்றுத் தராமல் மற்றவற்றை கற்றுத் தருவார்கள், அந்த மாதிரி ஆட்களிடம் போய் நிற்காமல், நீயே எனக்கு மெய்ப் பொருளைத் தா என்கிறார்.
"கரவா வகை கல்வி"..நாம் படிக்கும் அனைத்தும் நமக்கு மெய் பொருளை உணர்த்துவதில்லை. அதை மறைத்து, வேறு எதையெதையோ நமக்குத் தரும். அந்த மாதிரி மெய்ப் பொருளை மறைக்கும் கல்வியை விட்டு விட்டு மெய்ப் பொருளை அறியும் கல்வியை எனக்குத் தா என்று வேண்டுகிறார் என்றும் கொள்ளலாம்.
வள்ளுவர் கூறுவார்,
கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழார் எனின்
கல்வி, மெய் பொருளைத் தர வேண்டும்.
நிறைய பேருக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை சேமிக்கத் தெரியாது. சிலருக்கு சேமிக்கத் தெரியும், ஆனால் சம்பாதிக்கத் தெரியாது. சிலருக்கு சம்பாதிக்கவும் தெரியும், சேமிக்கவும் தெரியும் ஆனால் அனுபவிக்கத் தெரியாது. மூன்றும் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.
பொருளை ஆட்சி செய்ய வேண்டுமா? அதன் அனைத்துத் துறைகளிலும் (சம்பாதித்தல், சேமித்தல், செலவிடுதல்) சிறந்து விளங்க வேண்டுமானால், செல்வத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். செல்வத்தை அலட்சியம் செய்தால், அதனை நல்ல வழியில் பயன்படுத்த முடியாது.
பொருளை ஆட்சி செய்யும் தகுதி பொருளைப் போற்றாதவர்களுக்கு இல்லை.
அது போல
அருளை ஆட்சி செய்யும் தகுதி பிற உயிர்களை தின்பவர்களுக்கு இல்லை.
பாடல்
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.
பொருள்
பொருளாட்சி = பொருளை ஆட்சி செய்கின்ற திறமை
போற்றாதார்க் கில்லை = அந்தப் பொருளை போற்றாதவர்களுக்கு இல்லை
யருளாட்சி = அருளை ஆட்சி செய்யும் திறன்
யாங்கில்லை = ஆங்கு இல்லை
யூன்றின் பவர்க்கு. = ஊன் தின்பவர்க்கு
சில பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், நான் உணவு விடுதிக்கு (hotel) சென்று சில மாமிச உணவை வரவழைத்து உண்கிறேன். அந்த உயிர்களை நான் கொல்லவில்லை. நான் சாப்பிடாவிட்டால் வேறு யாராவது சாப்பிடத்தான் போகிறார்கள். நான் உண்பது ஒரு இறந்த உடலைத்தான். நான் கொல்லவில்லை. ஒரு வேளை யாருமே உயிர் கொலை செய்யமாட்டேன் என்று இருந்து விட்டால், நான் மாமிசம் தின்ன முடியாது. நாளடைவில் அதை மறந்து விடுவேன்.எனவே தவறு என் மேல் அல்ல.....
என்று வாதம் செய்வார்கள்.
அந்த உயிர்களை கொல்பவன் என்ன சொல்லுவான் "நான் கொல்வது அவன் தின்பதற்காக? அவன் தின்பதை நிறுத்தி விட்டால் நான் ஏன் கொல்லப் போகிறேன். தவறு என் மேல் அல்ல. தின்பவன் மேல் என்று கூறுவான்.
இப்படி மாறி மாறி பழி போட்டுக் கொண்டு யாரும் பொறுப்பை எடுக்க மாட்டார்கள்.
வள்ளுவர் சொல்கிறார், "அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீ மாமிசம் சாப்பிட்டாயா? ஆம் என்றால், உனக்கு அருளை ஆளுகின்ற குணம் இல்லை. யார் கொன்றார், யார் தின்றார் என்பதல்ல பிரச்சனை.
"நீ மாமிசம் உண்கிறாயா, உனக்கும் அருளுக்கும் சம்பந்தம் இல்லை"
மாமிசம் உண்பது சரியா தவறா என்று வள்ளுவர் இங்கே வாதம் செய்யவில்லை. மாமிசம் சாப்பிட்டால் உயிர்கள் மேல் அருள் வராது. அவ்வளவுதான் அவர் சொல்லுவது.
அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார். வள்ளுவரைப் போல் உதாரணம் சொல்ல இன்னொருவர் பிறக்க வேண்டும்.
கண்டமேனிக்கு ஊதாரித்தனமாக செலவு செய்பவன் இடத்தில் எப்படி பொருள் தாங்காதோ அது போல உயிர்களை தின்பவனிடம் அருள் தங்காது என்கிறார்.
பொருளை போற்ற வேண்டும். எச்சரிக்கையுடன் செலவழிக்க வேண்டும். கணக்கு எழுத வேண்டும். சரியான படி முதலீடு செய்ய வேண்டும். செய்த முதலீட்டை பார்த்துக் கோனே இருக்க வேண்டும். வீட்டை வாடைகைக்கு கொடுத்தால், வாடகை ஒழுங்காக வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
இல்லை என்றால் வீடு போய் விடும்.
அது போல, உயிர்களை கொன்று தின்றால், அருள் போய் விடும்.
அருள் போனால், துறவு போகும்.
துறவு போனால், வீடு பேறு போகும். மீண்டும் பிறவி வந்து சேரும்.
அவ்வளவு பெரிய பலனை பெறுவதற்கு இந்தச் சின்ன தியாகத்தை செய்யக் கூடாதா என்று வள்ளுவர் கேட்காமல் கேட்கிறார்.