Thursday, February 28, 2013

இராமாயணம் - இராவணன் மறந்ததும் மறக்காததும்


இராமாயணம் - இராவணன் மறந்ததும் மறக்காததும் 


இராவணனின் காமம் தொடர்கிறது.

சொல்லின் செல்வி சூர்பனகை இட்ட காமத்தீ பற்றி எரிகிறது இராவணனின் நெஞ்சில்.

பார்க்காமலே காதல்.

சூர்பனகை சொல்லிவிட்டு போய்  விட்டாள். இராவணன் எல்லாவற்றையும் மறந்து விட்டான். சீதை மட்டுமே அவன் மனத்தில்.

பாடல்

கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்

பொருள்


Wednesday, February 27, 2013

இராமாயணம் - இராவணனின் காதல்


இராமாயணம் - இராவணனின் காதல் 


சீதையின் அழகைப் பற்றி சூர்பனகை எடுத்துச் சொல்லுகிறாள் இராவணனிடம். கேட்டவுடன் காதல் கொள்கிறான் இராவணன். 

காமம் படுத்தும் பாட்டை கம்பன் கற்பனையில் இழைக்கிறான். 

 அற்புதமான பாடல்கள். 

இராவணன் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய ஆள்....சீதையின் காதலுக்காக தவிக்கிறான். உருகுகிறான். 

அதிலிருந்து சில பாடல்கள் 

கோபமும், மறனும், மானக் கொதிப்பும், 
     என்று இனைய எல்லாம், 
பாபம் நின்ற இடத்து நில்லாப் 
     பெற்றிபோல், பற்று விட்ட; 
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் 
     ஆம் செயலின், புக்க 
தாபமும் காமநோயும் ஆர் உயிர் 
     கலந்த அன்றே.



பொருள் 

எண்ணெய்  விட்டு, திரி போட்டு ஒரு விளக்கு இருக்கிறது. அதில் இன்னும் தீபம் ஏற்ற வில்லை. எரிகின்ற இன்னொரு விளக்கை கொண்டு வந்து எரியாத விளக்கை ஏற்றுகிறோம். முதல் விளக்கில் தீபம் பற்றிக் கொள்கிறது. இரண்டு தீபங்களும் ஒன்றாக எரிகின்றன. அப்படி ஒன்றாக எரியும் தீச் சூடரில், எது எந்த விளக்கின் சூடர் என்று தெரியுமா ? இரண்டும் ஒன்றாக கலந்து விடுவதைப் போல இராவணனின் உயிரோடு காமமும் தாபமும் இரண்டற கலந்தது.

தீபம் சுடர் விட்டு எரியும் போது திரி கருகும், எண்ணெய்  வற்றும். காமம் பற்றிய போது  இராவணனின் உயிர் வற்றியது, உடல் உருக ஆரம்பித்தது.

சீதையின் அழகு என்ற தீபத்தை கொண்டு வந்து இராவணனின் உயிரில் காமத் தீயை கொளுத்தி விட்டாள் சூர்பனகை. அனலிடைப் பட்ட மெழுகாய் உருகுகிறான் இராவணன். 



கோபமும் = கோபமும். தன் தங்கையை அவமானப் படுத்தி விட்டார்களே என்ற கோபமும்

மறனும் = அறனும் (எது நல்லது, எது கெட்டது என்று அறியும் தர்மமும்). 

மானக் கொதிப்பும் = கொப்பளிக்கும் தன்  மான உணர்வும். இப்படி நம் குலத்திற்கு ஒரு அவமானம்  நேர்ந்து விட்டதே என்ற தன்  மான உணர்வும்
 
என்று இனைய எல்லாம் = என்ற இந்த உயர்ந்த குணங்கள் எல்லாம் 
 
பாபம் நின்ற இடத்து நில்லாப்  பெற்றிபோல் =  பாவம் உள்ள இடத்தில் இல்லாத புகழும் செல்வமும் போல் (பெற்றி = வழக்கம், நெறி, முறை, இயல்பு ). ஒருவன் எவ்வளவுதான் நல்லவற்றை (புகழ், செல்வம், ) சேர்த்து வைத்து இருந்தாலும், பாவம் செய்ய ஆரம்பித்தவுடன்  எப்படி அவன் பெற்றவை எல்லாம் அவனை விட்டு விலகிப் போகுமோ அது போல 


பற்று விட்ட = நல்லவைகள், அவன் சேர்த்தவைகள் அவனை விட்டன  
 
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் = தீபங்கள் ஒன்றில் இருந்து ஒன்று பற்றிக் கொண்டதைப்

என்னல்  ஆம் செயலின் = செயல்  போல 

புக்க = புகுந்துகொண்ட 
 
தாபமும் = தாபமும் 

காமநோயும் = காம நோயும் 

ஆர் உயிர் கலந்த அன்றே = அவனுடைய அருமையான உயிரில் கலந்தது 

அதனால் என்ன ஆயிற்று ?

இன்னும் வரும் ப்ளாகுகளில் அவற்றைப் பற்றி சிந்திப்போம் 

திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு


திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு 



இராமலிங்க அடிகள் இரவு உறங்கிக் கொண்டிருக்கிறார். திடீரென்று விழிப்பு வருகிறது. என்னோவோ நடக்கிறது. ஒரே மகிழ்ச்சி.  வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

காலை எழுந்து அவர் எங்க போனாலும் எல்லாரும் கேக்குறாங்க, என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்க என்று....சந்தோஷம் தெரிகிறது, அதன் காரணம் தெரிகிறது, ஆனால் அதை சொல்ல முடியவில்லை....திணறுகிறார்...

"என்னால் சொல்ல முடியவில்லை....அந்த இன்பத்தை நீங்களும் அடைந்தால் தான் அது உங்களுக்கு புரியும் " என்கிறார் ....

என்ன நடந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை.

அந்த சந்தோஷம் எல்லோருக்கும் வேண்டும் என்று வேண்டுகிறார்.

எவ்வளவு பெரிய மனம். அருள் உள்ளம்.


பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே 

பாதி இரவில் = நள்ளிரவில்.


நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே "ஓ" வென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

என்பார் மாணிக்க வாசகர் 


எழுந்தருளிப் = இறைவா, நீயே எழுந்தருளி

பாவியேனை எழுப்பி = என்னை எழுப்பி

அருட் சோதி அளித்து = அருள் சோதி அளித்து

என் உள்ளகத்தே = என் உள்ளத்தின் உள்ளே (அகத்தே)

சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் = சூழ்ந்து + கலந்து + துலங்குகின்றாய் 

நீதி = உலகுக்கே நீதியாணவனே

நடஞ்செய் = நடம் ஆடும்

பேரின்ப நிதி = பேரின்ப நிதி போன்றவனே

நான் பெற்ற நெடும்பேற்றை = நான் பெற்ற இந்த பெரும் பேற்றை

ஓதி முடியாது = சொல்லி மாளாது

என்போல் = என்னை போல

இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  = இந்த உலகில் உள்ளவர்கள் அனைவரும் பெற வேண்டுவனே 




இந்த பாடலை பொய் என்று எப்படி நினைப்பது ?


Tuesday, February 26, 2013

இராமாயணம் - இராமனா ? பரதனா ? யார் தியாகம் பெரியது ?


இராமாயணம் - இராமனா ? பரதனா ? யார் தியாகம் பெரியது ?

இராமனை காண பரதன் கங்கை கரை வருகிறான். முதலில் அவனை சரியாகப் புரிந்து கொள்ளாத குகன் அவன் மேல் போர் தொடுக்க முனைகிறான். பின், பரதனை   நன்கு அறிந்து கொண்ட பின்,

தாயின் உரை கேட்டு தந்தை கொடுத்த இந்த உலகத்தை தீயது என்று நினைத்து  நீ வந்து இருக்கிறாய், ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் உன் புகழுக்கு இணை ஆவார்களா

என்று சொல்கிறான் குகன்.

அது எப்படி ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் பரதனுக்கு இணை ஆக மாட்டார்கள் என்று சொல்ல முடியும் ? அது கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்டது போல இல்ல ?

இல்லை.

அதை புரிந்துகொள்ள ஒரு கதை சொல்லுகிறேன்...

ஒரு முறை ஒரு பாதிரியார் ஒரு பள்ளி கூடத்திற்கு சென்று இருந்தார்.

அங்கிருந்த மாணவர்களிடம் அவர் கேட்டார்...

பாதிரியார்: குழந்தைகளே உங்களிடம் இரண்டு சைக்கிள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா ?

பிள்ளைகள்: ஓ  எஸ் தருவோம் பாதர் ....

பா: நல்லது.உங்களிடம் இரண்டு நல்ல ஜோடி  ஷூ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ....அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத்  தருவீர்களா?

பிள்ளைகள்: ஓ  எஸ் ...தருவோம் பாதர்....

பா: நல்லது, உங்களிடம் இரண்டு பென்சில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ...அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா ?

பி: மாட்டோம், தர மாட்டோம்

பாதிரியார் திகைத்து போனார்.  ஏன் குழந்தைகளே சைக்கிள், ஷூ எல்லாம் தருவேன் என்றீர்கள், ஆனால் பென்சில் மட்டும் தர மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்க்கு பிள்ளைகள் சொன்னார்கள் ...எங்களிடம் பென்சில் இருக்கிறது...சைக்கிள், ஷூ எல்லாம் இல்லையே ...என்று...

இல்லாததை கொடுக்க முடியாது. இருப்பதை கொடுப்பது கடினம்.

தசரதன், இராமனுக்கு அரசை தருகிறேன் என்று சொன்னான்..தந்து விடவில்லை. இராமனுக்கு முடி சூட்டு விழா நடக்க வில்லை.

பரதனுக்கு அரசை தந்து விட்டான். அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.

இல்லாத அரசை தந்த இராமனை விட கையில் இருந்த அரசை துறந்த பரதன் ...ஆயிரம் இராமனை விட உயர்ந்தவன் என்பது குகனின் எண்ணமாக இருந்து இருக்கலாம்.

பாடல்


'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
"தீவினை" என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! 

பொருள்


அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்


அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்

காதலனின் பிரிவால் காதலி வாடி இருக்கிறாள். அப்போது அவளுடைய தோழி வந்து கேட்க்கிறாள்...

தோழி: என்னடி, ஒரு மாதிரி இருக்க, உடம்பு கிடம்பு சரி இல்லையா ?

அவள்: அதெல்லாம் ஒண்ணும்  இல்லை, இந்த காலத்துல யாரை நம்பறது யாரை நம்பாம இருக்கிறது அப்படின்னு தெரியல..ஒரே குழப்பமா இருக்கு ...

தோழி: என்னடி ரொம்ப பொடி  வச்சு பேசுற...இப்ப என்ன ஆச்சு ? யாரு என்ன சொன்னாங்க ...யார நம்ப முடியல ?

அவள்: வேற யாரும் இல்லடி, என் மனசைத்தான்...

தோழி: என்னது உன் மனசை நீ நம்ப முடியலையா ? சரிதான் பித்து முத்தி போச்சுன்னு நினைக்கிறேன் ...விளக்கமா சொல்லுடி...

அவள்: அவன் ஊருக்கு போனானா ?

தோழி: யாரு ? ஓ ... அவனா ...சரி சரி...

அவள்: அவன் பின்னாடியே என் மனமும் போயிருச்சு....

தோழி: போயி?

அவள்: அவன் எப்படி இருக்கான் சாப்பிட்டானா, தூங்கினானா, நல்லா இருக்கானான்னு அவனையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தது...

தோழி: சரி..அப்புறம் ?

அவள்: அப்புறம் என்ன அப்புறம்...திருப்பி என் கிட்ட வரவே இல்லை...

தோழி: ஐயோடா...பாவம்...

அவள்: போடி, நீ ஒருத்தி, காலம் நேரம் தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு...ஒரு வேளை இப்படி இருக்குமோ ?

தோழி: எப்படி ?

அவள்: என் நெஞ்சம் திருப்பி வந்திருக்கும்...அவன பார்க்காமால் எனக்குத் தான் சோறு தண்ணி இறங்கலியே ...தூக்கமும் போச்சுல...நான் மெலிஞ்சு, சோர்ந்து இருக்கிறத பார்த்து இது வேற யாரோன்னு நினைச்சு என்னை கண்டு பிடிக்க முடியாமல் என் நெஞ்சம் தேடிக் கொண்டிருக்குமோ ?

தோழி: சரிதான்...ரொம்ப தான் முத்தி போச்சு ... கால காலத்துல ஆக வேண்டியதை பண்ணிற வேண்டியதுதான்...இப்படி கூடவா காதலிப்பாங்க உலகத்துல...

காலங்களை கடந்து உங்கள் கதவை தட்டும் அகநானூற்றுப் பாடல்



குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ 
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை 
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் 
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ  
அருளா னாதலின் அழிந்திவண் வந்து 
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி 
ஏதி லாட்டி இவளெனப்  
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. 


பொருள் 

குறுநிலைக் = சின்ன ஊரில்

குரவின் = குரா என்ற மரத்தின்

சிறுநனை = சிறிய அரும்புகள்

நறுவீ வண்டுதரு நாற்றம் = வண்டுகள் மொய்க்கும் மலரில் இருந்து வீசும் நறுமணம்  

வளிகலந்து ஈய  = காற்றில் மிதந்து வர

கண்களி பெறூஉங் = கண்கள் களிப்படையும்

கவின்பெறு காலை = கவித்துவமான இந்த காலை நேரத்தில்

எல்வளை = என்னுடைய வளையல்கள்

ஞெகிழ்த்தோர்க் = நெகிழ செய்தவர்க்கு (எப்படி ? ஒரு வேளை அவன் அதை கழட்டி விளையாடி கொண்டிருக்கலாம், அல்லது காதல் உணர்ச்சி மேலீட்டால் அவள் உணவு மறந்து மெலிந்து வளையல் நெகிழ்ந்து இருக்கலாம், அல்லது அவளுடைய நினைவாக அவன் அவளிடம் அதை வாங்கிச் சென்று இருக்கலாம் ... அனுபவித்தவர்களுக்குத் தெரியும் )


கல்லல் உறீஇயர் = எனக்கு துன்பம் தந்தவர் தான் என்றாலும் (என்ன வெல்லாம் துன்பம்...கன்னத்தை கிள்ளாமல் , விரல் நெறிய கை பற்றாமல், கண்ணீர் வர கண்ணில் கண் மை போட்டு விடாமல்...எவ்வளவு துன்பம் தருகிறார் )


சென்ற நெஞ்சு - அவர் பின் சென்ற என் நெஞ்சு

செய்வினைக் குசாவாய் = அவர் வேலை செய்யும் போது அவருக்கு உதவியாய் இருந்து

ஒருங்குவரல் = அவன் கூடவே இருந்து, அவனோடு ஒண்ணா வருவதருக்கு 

நசையொடு = நசை என்றால் அன்பு செய்தல்.

வருந்துங் கொல்லோ = அன்பும் செய்கிறது, வருத்தமும் படுகிறது
 
அருளா னாதலின் = அவன் எனக்கு அருள் செய்ய மாட்டான். அருளான் + ஆதலின்

அழிந்திவண் வந்து = அழிந்த, துன்பப்பட்ட என் நெஞ்சம் என்னிடம் வந்து

தொன்னலன் = தொன்மையான நலம் (பழைய அழகு )

இழந்தவென் = இழந்த என்

பொன்னிற நோக்கி = பசலை படர்ந்த என் மேனியின் நிறத்தை நோக்கி

ஏதி லாட்டி இவளெனப் = யார் இவள் என்று எண்ணி
 
போயின்று கொல்லோ = திரும்பி போய் விட்டதோ

நோய்தலை மணந்தே. = துன்பப்பட்டு, வருத்தப்பட்டு (என்னை காணாமல்)

அவளுடைய மனதிற்கே அவளை அடையாளம் தெரியவில்லை. அப்படி மாறிப் போனாள்.

கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல், பத்திரமாய் நீந்தி கரை சேர்ந்து வந்த இந்த பாடல்...இன்றும் காற்றில் கரைந்த கற்பூரமாய் மணம் வீசும் காதலை பேசிக் கொண்டே இருக்கிறது...இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளும் இது மனம் - மணம்  பரப்பும் ... 

இன்னும் கொஞ்சம் கூட விரிவாக எழுதலாம் ... கவிதையை கட்டுரை ஆக்குவது  பாவம் என்று கருதி விடுகிறேன்...

கவிதையை நேரடியாக உணர்வதுதான் சிறந்தது....சில பல வார்த்தைகள் புரியாமல் போகலாம்...

எல்லாம் புரிய அது என்ன கட்டுரையா ? கவிதை கண்ணா மூச்சி ஆடும்....கண்ணில் தின் பண்டத்தை காட்டி விட்டு தர மாடேன் என்று பின்னால் மறைத்து ஓடும் காதலி போல...ஓடிப் பிடித்து, அவள் கையில் இருந்து பிடுங்கி விடலாம் தான்....அதுவா சுகம்....? ... அவளிடம் கெஞ்சி அவள் கொஞ்சம் பிகு பண்ணி, "கண்ணை மூடு ..அப்பத்தான் தருவேன் " என்று  அவள் அன்புக் கட்டளை போட்டு ...பின் ஒரு துண்டு உங்கள் வாயில் போடும் சுகம், சுகமா ?

கவிதை அப்படித்தான்...கண்ணில் தெரியும், கைக்கு எட்டாமல் போக்கு காட்டும்...விட்டுப் பிடியுங்கள்... 

வார்த்தை வார்த்தையாய் கவிதையை பிரிக்காதீர்கள் 

ரோஜாவில் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாய் பிச்சு பிச்சு தேடித் பார்க்க முடியாது....

கடைசியில் காம்பு தான் மிஞ்சும்...அதுவா அழகு ?

மீண்டும் ஒரு முறை கவிதையை படியுங்கள்....உங்கள் உதட்டோரம் ஒரு புன்னகை மலர்ந்தால் உங்கள் கவிதை புரிந்து விட்டது என்று அர்த்தம் ....






அபிராமி அந்தாதி - அறிதலும் புரிதலும்

இறைவனை அறிந்து கொள்ள முடியுமா ? அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? அறிந்த பின் அவர்கள் என்ன செய்தார்கள் ? அறியும் முன் என்ன செய்தார்கள் ? இறைவனை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

பட்டர் சொல்கிறார்

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள்

Sunday, February 24, 2013

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல்

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல் 


இப்போது எங்கு பார்த்தாலும் விளையும் நிலங்களை பிளாட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றி அதில் வீடு கட்டி விடுகிறார்கள். இதனால், விவசாயம் நசிகிறது. வீடு எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். பயிர் விளைய நல்ல மண் வேண்டும், நீர் வரும் பாதையில் இருக்க வேண்டும், இப்படி நிறைய தேவைகள் இருக்கின்றன . அப்படி இருக்கும் இடங்களில் வீடு கட்டக் கூடாது. 

இடம் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. பட்டு போதல் என்றால் கருகிப் போதல். பயிர் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. 

எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு   முன், மக்கள் தொகை இவ்வளவு இல்லாத காலத்தில் அவ்வை சொல்லி இருக்கிறாள் ...இடம் பட வீடு எடேல் என்று.

எங்க கேக்கிறோம் ? விவசாய உற்பத்தி குறைந்து, உணவு பொருட்களின் விலை ஏறி திண்டாடுகிறோம். 

பெரியவங்க சொன்னா கேட்கணும். 

சிறுக கட்டி பெருக வாழ் அப்படின்னு தெரியாமையா சொன்னாங்க.

எவ்வளவு தீர்க்க தரிசனம் ? 

காலம் காலமாக ஆத்தி சூடி பள்ளிகளில் சொல்லித் தரப் படுகிறது. ஒழுங்காக சொல்லித் தந்திருந்தால், சொல்லிய படி நடந்திருந்தால் ...


ஹ்ம்ம்ம்ம்ம் 


இராமாயணம் - பள்ளி எழுச்சி


இராமாயணம் - பள்ளி எழுச்சி 


இறைவனை துயில் எழுப்புவது நம் பக்தி இலக்கியங்களில் ஒரு பகுதியாக இருக்கிறது

திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, சுப்ரபாதம் என்று இறைவனை துயில் எழுப்பும் பாடல்கள் உள்ளன.

அது இறைவனை துயில் எழுப்புவதா அல்லது நமக்குள் உறங்கி கிடக்கும் ஏதோ ஒன்றை துயில் எழுப்புவதா ?

சீதையை கன்னி மாடத்தில் பார்த்தபின் இரவெல்லாம் அவள் நினைவாகவே இராமன் இருக்கிறான்...அந்த நினைவிலேயே தூங்கிப் போகிறான்.

மறு நாள் காலை...

இராமன் உறங்குகிறான்.

கதிரவன் எழுகிறான். தன்னுடைய கிரணங்கள் என்ற கையால் அவன் பாதம் வருடி அவனை எழுப்புகிறான். பெரியவர்களை எழுப்பும் போது அவர்கள் பாதம் தொட்டு எழுப்ப வேண்டும் என்பது மரபு.


பாடல்


கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே.



பொருள்



Saturday, February 23, 2013

அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை

அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை 


பிறந்தது முதல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்று நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது. 

அபிராமி பட்டர் பட்டியல் போடுகிறார்....

பாடல் 


மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி 
     ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, 
     மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் 
     துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், 
     பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, 
     வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை 
     நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! 
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! 
     அருள் வாமி! அபிராமியே! (11) 


பொருள்
 

இராமாயணம் - ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் ?



இராமாயணம் - ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் ?


காப்பியத்தை அதன் போக்கிலேயே சென்று இரசிப்பது ஒரு வகை.

காப்பியத்தின் போக்கு வேறு விதமாக போய்  இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இரசிப்பது இன்னொரு வகை.

உதாரணத்திற்கு ஒன்றிண்டை சிந்திப்போமா ?

தசரதன் இராமனை கானகம் போகச் சொன்னான். இராமன் அதை ஏற்றுக் கொண்டு கானகம் போனான்.

ஒரு வேளை இராமன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் ?

ஒரு வேளை  இராமன் "இந்த இராஜ்ஜியம் எனக்கு உரியது. நான் இதை ஏற்க்க மறுத்தால் அது முறை அன்று. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். வேண்டுமானால் பரதனை கூப்பிடுங்கள். கேட்டு விடுவோம்....அவனுக்கு இது சம்மதமா""  என்று இராமன் ஆரம்பித்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் ?

முதலில், தசரதன் வாய்மை தவறினான் என்ற பழிச் சொல் வந்திருக்கும் கைகேயிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதவன் என்ற பழி வந்து இருக்கும்.


இரண்டாவது, தசரதனை தந்தையாகப் பார்க்காமல் அரசனாகப் பார்த்தால், இராமன் அரச ஆணையை மீறினான் என்ற குற்றம் வந்து சேரும். நாளை இராமன் பதவி ஏற்றப் பின் ஒரு ஆணை பிறப்பித்தால் அதை யாரும் மதிக்க மாட்டார்கள். இராமன் அரசாணையை மீறலாம் என்றால் மற்றவர்கள் ஏன் மீறக் கூடாது ?

மூன்றாவது, இராஜியத்தில் உள்ள பிள்ளைகள் யாரும் தந்தை சொல் கேட்க்க மாட்டார்கள். இராமனே கேட்க்கவில்லை, நாங்கள் ஏன் கேட்க்க வேண்டும் என்று அந்த பிள்ளைகள் கேட்டால் என்ன பதில் சொல்லுவது ? அன்று மட்டும் அல்ல...இன்று வரை பிள்ளைகள் அதையே சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இராமன் என்பவன் இந்த கலாசாரத்தின் ஒரு அடையாளமாக இல்லாமல் போய்  இருப்பான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இராமாயணத்தை பற்றி சொல்லவே மாட்டார்கள்

நான்காவது, இராமனுக்கு தசரதன் மேல் அவ்வளவு ஒன்றும் அன்பு இல்லை என்று ஆகும். "போய்யா , உனக்கு ஒரு வேலை இல்லை " என்று இராமன் சொல்லி விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு இடையே நல்ல உறவு இல்லை என்றே ஆகி இருக்கும். தசரதன் நல்ல தந்தை இல்லை, இராமன் நல்ல மகன் இல்லை என்றே ஆகி இருக்கும்.

இராமன் தன் சுகம், தன்  சந்தோஷம் மட்டும் நினைக்க வில்லை. வரும் கால காலத்திற்கு தன்  செயல் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு செயல் பட்டிருக்கிறான் என்பது புரியும்.

இதை எல்லாம் ஏதோ நான் சொந்தமாக சிந்தித்து சொல்வதாக நினைக்காதீர்கள்....வால்மீகியும், கம்பனும் இதை எல்லாம் சிந்தித்து மட்டும் அல்ல சொல்லி விட்டே போய்  இருக்கிறார்கள்....நான் அதை எடுத்துச் சொல்கிறேன்..அவ்வளவு தான்.

இலக்குவனை இராமன் சமாதனப் படுத்தும் இடம்....

பாடல்


நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான். 


பொருள்



Friday, February 22, 2013

திருக்குறள் - அடக்கம்

திருக்குறள் - அடக்கம்



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனிநூஉங் கில்லை உயிர்க்கு



நம்மிடம் யாரவது வந்து உங்களிடம் என்னென்ன சொத்துக்கள் (உடமைகள்) இருக்கிறது  கேட்டால் நாம என்ன சொல்லுவோம்...

...கொஞ்சம் பணம், நகை, நட்டு, வீடு, பிளாட்டு, பங்கு பத்திரம், வங்கி கணக்கு அப்படின்னு ஒரு பெரிய பட்டியல் தருவோம்.

வள்ளுவர் இன்னொரு பட்டியல் வைத்து இருக்கிறார் ...எது எல்லாம் ஒருவனுக்கு உடமைகளாக இருக்க வேண்டும் என்று....

- அறிவுடைமை
- அருளுடைமை
- ஒழுக்கமுடைமை
- ஆள்வினை உடைமை (personality )
-  பண்புடைமை
- நாணம் உடைமை
- பொறை உடைமை

இது எல்லாம் இல்லாமல் மத்த உடமைகளால் என்ன பயன் ?

இதனுடன் சேர்த்து அடக்கமுடைமை என்று அடக்கத்தையும் ஒரு உடமையாக, ஒரு சொத்தாக வள்ளுவர் கூறுகிறார்.

அடக்கம் என்றால் எதுவோ எதிலோ அடங்குவது.

அது தானே அடக்கம்.

அடக்கம் ஒரு உடமை என்றால் அது ஒரு சொத்து போல. ஒரு பொருள் போல.

பொருள் என்றால் அது சிறந்த பொருளா இல்லை வேண்டாத ஒரு பொருளா என்ற கேள்வி எழும் அல்லவா.

வள்ளுவர் சொல்கிறார், அடக்கம் என்பது ஒரு நல்ல, விலை மதிக்க முடியாத பொருள்.

அது காக்க பட வேண்டிய ஒரு பொருள். அலட்சியமாக தூக்கி எரிந்து விடக் கூடிய பொருள் அல்ல.

காக்க பொருளா அடக்கத்தை என்கிறார் வள்ளுவர். ஒரு பொருளை போல அடக்கத்தை காக்க வேண்டும்.

சரி அப்படி அடக்கத்தை காத்தால் நமக்கு என்ன கிடைக்கும் ?

ஆக்கம் அதனிநூஉங் கில்லை உயிர்க்கு

அப்படி காப்பாற்றினால் உயிர்க்கு அதை விட சிறந்த ஆக்கம் இல்லை.

எதை அடக்க வேண்டும் ?

புலன்களை, மனதை அடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாக்கை.

யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.

எல்லா புலன்களையும் காக்க வேண்டும். ஒரு வேளை  எல்லாவற்றையும் காக்க முடியா விட்டால், நாக்கை மட்டுமாவது காக்க வேண்டும்.

கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும்
கண்டதை பேசி நம்மையும் பிறரையும் சங்கடத்தில் வைக்காமல் இருக்கவும் குறைந்த பட்சம்  நாக்கையாவது அடக்க வேண்டும்.

அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் ,ஒரு குறளுக்குள் இவ்வளவு விஷயம். மொத்தம் 1330 குறள் இருக்கு.

அவ்வளவு தான் நான் சொல்வேன். 

Thursday, February 21, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர்



இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர் 


வேதம்.

எப்போது அது எழுதப் பட்டது, யார் அதை எழுதினார்கள் என்று தெரியாது.

காகிதமும், அச்சுக் கலையும் , கணணிகளும் இல்லாத காலத்தில் இருந்து அந்த வேதங்களை இன்று வரை நமக்காக பத்திரப் படுத்தி கொண்டு வந்து தந்தது யார் ?

சிதைந்தும் காணமல் போகவும் எவ்வளவோ காரணங்கள் இருந்தும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து இருக்கிறது என்றால் அது யாரால் ?

எத்தனையோ நல்லவர்கள், பெரியவர்கள் இனி வரும் காலத்தின் சந்ததிகளுக்கும் பயன் பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அந்த வேதங்களை காத்து நம்மிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்.

அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நாம் நன்றி சொல்வோம்.

பாடல்

இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

 சீர் பிரித்த பின்

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் 
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் 
மறையினை காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே 

பொருள்


Wednesday, February 20, 2013

இராமாயணம் - வெந்துயர் கடலில் வீழ்ந்தேன்


இராமாயணம் - வெந்துயர் கடலில் வீழ்ந்தேன் 


வாலி வதைக்குப் பின்னால் சுக்ரீவன் பட்டாபிஷேகம் நிகழ்கிறது.

முடி சூட்டு விழாவிற்குப் பின், இராமன் சுக்ரீவனுக்கு பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

யாரையும் சிறியவர்கள் என்று எண்ணி ஏளனம் செய்யாதே. அப்படி கூனியையை ஏளனம் செய்ததால் நான் இன்று துயரப் படுகிறேன்.

பாடல்


சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

பொருள்


திருக்குறள் - உறக்கமும் விழிப்பும்


திருக்குறள் - உறக்கமும் விழிப்பும் 


உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள் 

தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது.

அது தான் இறப்பது. 

தூங்குவது போலும் சாக்காடு.

இறப்பது என்பது தூங்குவதைப் போல என்கிறார் வள்ளுவர் 

அது எப்படி ? தூங்குனா காலைல முழிச்சுகுவோம்ல...செத்து போய்டா எப்படி முழிப்போம் ? என்று நீங்க கேட்பது வள்ளுவருக்கு கேட்டிருக்கிறது.

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு 

அப்படினுட்டார்....

நீங்க பிறந்தது தூங்கி   முழிச்ச மாதிரி. 

தூங்கினது வேற ஆளு, முழிச்சது வேற ஆளுன்னு நீங்க சொல்றீங்க.

வள்ளுவர் அப்படி நினைக்கலியே. தூங்கியதும், விழித்ததும் ஒரே ஆள் தான், வேற வேற உடல். ஆள் ஒண்ணு தான் என்கிறார். 

தூங்குவதும் விழிப்பதும் உடலுக்கு எப்படி தினம் நடக்கும் சர்வ சாதாரணமான ஒரு நிகழ்ச்சியோ அது போல இறப்பதும் பிறப்பதும் உயிருக்கு சாதாரணமான நிகழ்ச்சி. 

இறப்பதும், பிறப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும் ஒரு சுழற்சியான நிகழ்ச்சி. 

இதுக்கு போய்  அலட்டிக்கலாமா ?

உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு 



 

Tuesday, February 19, 2013

பிரபந்தம் - கூனி மேல் அம்பு விட்டது கிருஷ்ணன்

பிரபந்தம் - கூனி மேல் அம்பு விட்டது கிருஷ்ணன் 


கூனியின் மேல் மண் உருண்டை அடித்தது இராமன். 

ஆனால் நம்மாழ்வார் வேறு மாதிரி சொல்கிறார். மண் உருண்டையை அடித்தது கிருஷ்ணன் என்று சொல்கிறார்.

கூனி வருவது இராம அவதாரத்தில். கிருஷ்ண அவதாரம் அடுத்த அவதாரம். கூனிக்குப் பின் வந்த கிருஷ்ணன் எப்படி கூனியின் மேல் அம்பு விட்டிருக்க முடியும் ?

இது என்ன புதிதாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ?

இராமன் மேல் பழி அவ்வளவு கிடையாது. தாடகை என்ற பெண்ணை கொன்றான், வாலியை மறைந்து நின்று கொன்றான், விராடன் (?) என்ற அரக்கனோடு சண்டை போடும் பொது முன் வைத்த காலை பின் வைத்தான் என்று சில குற்ற சாட்டுகள் உண்டு.

கண்ணன் மேல் ஆயிரம் பழி ஏற்கனவே இருக்கிறது. பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று இந்த பழியையும் தூக்கி கண்ணன் மேலேயே போடுகிறார் நம்மாழ்வார்.


பாடல்

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.(2839)

பொருள் 

Sunday, February 17, 2013

பிரபந்தம் - கூனியின் மேல் இராமன் ஏன் மண் உருண்டையை அடித்தான்


பிரபந்தம் - கூனியின் மேல் இராமன் ஏன் மண் உருண்டையை அடித்தான் 



சிறு வயதில் இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை வில்லில் வைத்து அடித்தான் என்று நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம்.

கருணையே வடிவான இராமன் ஒரு உடல் ஊனமுற்ற வயதான பெண்ணின் மேல் அப்படி அம்பை விடுவானா ?

கொடுமையே வடிவான தாடகை என்ற அரக்கியை கூட பெண் என்பதால் கொல்லத் தயங்கினான் இராமன்.

கூனியை அப்படி துன்பப் படுத்துவானா ? யாருமே இப்படி யோசிக்க வில்லை...

திருமங்கை ஆழ்வார் சிந்தித்து சொல்கிறார்....இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை அடித்தது அவள் கூன் நிமர வேண்டும் என்று. அவள் கூன் நிமிர்ந்து  எல்லோரையும் போல்அவள் மாற வேண்டும் என்று அப்படி செய்தான்.



பாடல்


குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்

நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,

நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி,

அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே,


கொஞ்சம் சீர் பிரிப்போம்


இராமாயணம் - நீங்க புடிச்சு தர மாட்டீங்களா ?


இராமாயணம் - நீங்க புடிச்சு தர மாட்டீங்களா ?


சீதை பொன் மான் வேண்டும் என்று கேட்டாள்.

இலக்குவன் தடுக்கிறான். உலகத்தில் பொன் நிறத்தில் உள்ள மான் என்று ஒன்று கிடையாது. இது ஏதோ அரக்கர் மாயை. அந்த மான் வேண்டாம் என்கிறான்.

சீதை அடம் பிடிக்கிறாள்.

இராமனும் பிடித்துத் தர இசைகிறான்.

இலக்குவன் தான் போய் பிடித்து வருவதாகக் கூறுகிறான்.

இந்த இடத்தில் கம்பன் பெண்களின் மன உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுகிறான்

பெண்களுக்கு அவர்களின் கணவன் கையால் கிடைத்தால் ஒரு முழ பூ கூட சிறப்பு தான்.

இலட்சம் ரூபாய் உள்ள வைர அட்டிகையாய் இருந்தாலும் , அதை அலுவலகத்தில் உள்ள ஒரு பணியாளரிடம் (peon ) மூலம் கொடுத்து அனுப்பினால், அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது அவர்களுக்கு

இங்கே சீதை இராமனைப் பார்த்து கேட்கிறாள் "நீங்க அந்த மானை எனக்கு பிடிச்சு தர மாடீங்களா " என்று.

பாடலில் கம்பன் அவர்களுக்கு இடையே உள்ள அன்யோநியத்தை படம் பிடிக்கிறான். சீதை கொஞ்சுகிறாள். இராமன் உருகுகிறான். 


பாடல்


ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன் சொல் கிளியினின் குழறி, மாழ்கி,
'நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்' என்னா,
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். 

பொருள்



Saturday, February 16, 2013

ஆத்தி சூடி - எண்ணெழுத்து இகழேல்


ஆத்தி சூடி - எண்ணெழுத்து இகழேல் 


Bless those things you want to have என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 

சிலருக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் ஆனால் பணக்காரர்களை   கண்டால் ஒரு வெறுப்பும் கோபமும் இருக்கும். "ஹா..அவனைப் பற்றி தெரியாதா ...அவன் எப்படி பணம் சம்பாதித்தான் என்று என் கிட்ட கேளு .." என்று பணம் சம்பாதித்தவனை பற்றி எப்போதும் ஒரு இளக்காரம், ஒரு கேலி.

உங்களுக்கு எது வேண்டுமோ அதைப் போற்றுங்கள். 

போற்றுதலின் முதல் படி அதை இகழாமல் இருப்பது 

நம் முன்னோர்கள் புத்தகம் தெரியாமல் காலில் பட்டு விட்டால் கூட அதை தொட்டு கண்ணில்   ஒத்திக் கொள்ளச் சொன்னார்கள். ஏன் ? அது வெறும் காகிதம் மற்றும்  இங்க்  அவ்வளவு தானே ...இதில் என்ன இருக்கிறது  என்று நினைக்காமல் அதை மதிக்கச் சொன்னார்கள். 

படிப்பு வர வேண்டுமென்றால் புத்தகத்தை மதிக்க வேண்டும், படிப்பு சொல்லித் தரும் ஆசிரியரை மதிக்க வேண்டும். 

சில மாணவர்கள் சொல்லுவார்கள்...இந்த integration , differentiation ...இது எல்லாம் எவன் கண்டு   பிடிச்சான் ... இந்த graammar  ஐ கண்டு பிடிச்சவனை சுட்டுக் கொல்லனும் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். படிப்பு எப்படி வரும் ?

எண்ணையும் (maths )   எழுத்தையும் (literature ) இரண்டையும் இகழாதீர்கள். அதை போற்றுங்கள். 

எண்ணென்ப   ஏனை  எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பார் வள்ளுவர் 

சின்ன வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் கொள்ள வேண்டும். அதன் மேல் வெறுப்பு  கொள்ளக் கூடாது.

நாம் எதை வெறுக்கிறோமோ அதை நாம் செய்ய மாட்டோம். நாம் எதை வெறுக்கிறோமோ அதை விட்டு விலகி நிற்போம். படிப்பை விட்டு விலகி நின்றால் வாழ்க்கை சிறக்காது. 

எனவே, எண்  எழுத்து இகழேல்.

இதுவரை எப்படியோ...இதை படித்தபின் எண்ணையும்  எழுத்தையும் இகழ்வதை நிறுத்துவது நலம் பயக்கும்.

 

 

Friday, February 15, 2013

கம்ப இராமாயணம் - கரந்துறையும் காமம்


கம்ப இராமாயணம் - கரந்துறையும் காமம் 


இராமனுக்கு முடி சூட்ட தசரதன் முடிவு செய்து விட்டான். அதற்கான காரணங்களை அடுக்குகிறான்.

அதில் ஒன்று , என்னால் காமத்தை வெல்ல முடியவில்லை என்பது.

பதினாயிரம் மனைவிகள்.

மூன்று பட்டத்து மகிஷிகள்

சக்ரவர்த்தி. கை சொடுக்கும் நேரத்திற்குள் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும். கிடைத்திருக்கும்.

இருந்தும் அவனால் காமத்தை வெல்ல முடியவில்லை.

என்ன அர்த்தம் ....?

புலன் இன்பங்கள் அனுபவிப்பதன் மூலம் தீர்வதில்லை.

நெய்யை விட்டு தீயை அணைக்க முடியாது.

அனுபவிக்க அனுபவிக்க அது மேலும் மேலும் என்று கொழுந்து விட்டு எரிகிறது.

பாடல்


வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில்,
தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்
கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம்
உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? 


பொருள் 

வெள்ளநீர் உலகினில் = வெள்ளம் சூழ்ந்த இந்த உலகம்

விண்ணில் = விண்ணுலகம்

நாகரில் = நாகர்கள் வாழும் பாதாள  உலகம்

தள்ளரும் பகையெலாம் = இந்த மூன்று உலகிலும் வெல்ல முடியாத பகை எல்லாம்

தவிர்த்து = வென்ற

நின்றயான் = நின்ற நான்

கள்ளரில் = கள்ளர்களைப் போல

கரந்துறை = மறைந்து வாழும்

காமம் = காமம்

ஆதியாம் = காமத்தை மூலமாகக் கொண்ட

உள்ளுறை = உள்ளத்தில் மறைந்து வாழும்

பகைஞருக்கு = பகைவர்களுக்கு

ஒதுங்கி வாழ்வெனோ? = ஒதுங்கி வாழ்வேனா ?

காமம், கள்ளனை  போல சொல்லாமல் வரும்.

வந்த பின் நம்மிடம் உள்ள மானம், புகழ் போன்றவற்றை கொள்ளை அடித்துச் செல்லும்

அது பகைவர்களை போல, நம்மை மிரட்டும். நம்மை வலிமை குன்றச் செய்யும்.

அது உட்பகை. அதை வெல்ல   படை பலம், ஆள் , அம்பு, சேனை ...இது எல்லாம் தேவை இல்லை.

காமத்தை தூண்டும் பெண்களை விட்டு அவர்கள் இல்லாத இடமான கானகம் நோக்கி போக முடிவு செய்தான் தசரதன்.

நீங்கள் ஒன்றின் மேல் உள்ள பற்றை விட வேண்டுமானால், அதை விட்டு நீங்க வேண்டும்.

பிடியை விட்டால் தானே பற்றை விட முடியும்.

TV யை போட்டு வைத்துக் கொண்டே படிப்பில் கவனம் இல்லை என்றால் எங்கிருந்து வரும்.

எது நம் கவனத்தை சிதறடிக்கிறதோ , அதை விட்டு விலக வேண்டும்.

தன்னால் காமத்தை வெல்ல முடியவில்லை என்று தைரியமாக சபையில் அறிவிக்கிறான்  தசரதன். எத்தனை பேருக்கு அந்த துணிச்சல் வரும் ?

படிக்க வேண்டிய பாடங்கள்


திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய்


திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய் 



ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

கேள்விப் பட்ட குறள்  தான். 

தன்னுடைய மகனை சான்றோன் என்று மற்றவர் கூறக் கேட்ட தாய், அவனை பெற்ற பொழுதை விட அதிகமாக சந்தோஷப் படுவாள்.

அவ்வளவுதானா ?  
 
கொஞ்சம் சிந்திப்போம். 

மகன் பெரிய ஆள் என்று கேட்டால் தந்தைக்கு உவகை வரதா ?

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தந்தை 

என்று ஏன் சொல்லவில்லை ?

மகன் எவ்வளவு தான் பெரிய ஆள் ஆனாலும் தாய்க்கு அவன் எப்போதும் சின்ன பிள்ளை தான்.  ஊர்ல நூறு பேரு நூறு விதமா சொல்லலாம், தாய்க்கு அவளுடைய பிள்ளைஎப்போதுமே  அவள் மடியில் தவழும் சின்ன பிள்ளை தான். தந்தைக்குத் தெரியும்...பையன் வளர்வது, படிப்பது, பட்டம் வாங்குவது, வாழ்வில் முன்னேறுவது எல்லாம்....தாய்க்கு அவள் பிள்ளை எப்போதுமே பால் மணம்  மாறாத பாலகன் தான். 

பாத்து போப்பா, ரோடு எல்லாம் பாத்து கிராஸ் பண்ணு, வேளா  வேளைக்கு  சாப்பிடு, ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதே என்று சொல்லிக் கொண்டு இருப்பாள் ...அவன் பெரிய நிறுவனத்தில் பெரிய  வேலையில்  இருப்பான் ...அவனுக்கு கீழே ஆயிரம் பேர் இருப்பார்கள்...என்ன இருந்து என்ன, அவன் அம்மாவுக்கு அவன் சின்னப் பையன் தான்....

அவனை சான்றோன் என்று சொன்னால்...அவளுக்கு இரண்டு விதமாமான மகிழ்ச்சி....ஒன்று நம்ம பிள்ளை பெரிய ஆள் ஆகிவிட்டானே என்று..இன்னொன்று...யாரு, இந்த வாண்டா பெரிய ஆளு என்று இன்னொரு மகழ்ச்சி...

எனவே ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்...

இன்னொரு காரணம்.....

ஒரு தாய்க்கு மிக பெரிய மகிழ்ச்சி எப்போது வரும்....பத்துமாதம் சுமக்கிறாள்...படாத பாடு படுகிறாள்...வலியின் உச்சத்தில் பிள்ளையை பெறுகிறாள்...அப்போது மருத்துவர் "பிள்ளை ஆரோகியமா  நல்லபடியா பிறந்திருக்கு " அப்படின்னு சொன்னவுடன்  ஒரு பெரிய நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும் அந்த தாய்க்கு. அது போல் அவன் வளர்ந்து பெரிய ஆள் ஆன பின், அதைவிட மகிழ்ச்சி பிறக்கும். 

முதலில் கை கால் ஆரோக்கியத்துடன் குழந்தையாய் பிறப்பிப்பது. 
இரண்டாவது சான்றோனாய் பிறப்பிப்பது. 

இரண்டு மகிழ்ச்சியான நேரங்கள். பின்னது முன்னதை விட சிறப்பாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 

மூன்றாவது, ஈன்ற பொழுது என்பது தாய்க்கு உண்டு. தந்தைக்கு கிடையாது. தாய் பத்து மாதத்தில்  இறக்கி வைத்து விடுவாள். தந்தை அந்த சுமையை கடைசி வரை தூக்கித் திரிவான். சான்றோனாக்குவது தந்தைக்கு கடன் என்பார் வள்ளுவர். அவன் மகனை இறக்கி வைப்பதே இல்லை. எனவே, ஈன்ற பொழுது என்பது தந்தைக்கு கிடையாது. மேலும் மேலும் மகனை முன்னேற்றுவதிலேயே குறியாய் இருப்பான் தந்தை. 

பரிட்ச்சைக்கு படிக்கிறான் என்றால், அம்மா சொல்லுவாள் "ரொம்ப நேரம் முழிச்சு இருந்து உடம்ப கெடுத்துகாத " என்று. தந்தைக்கு அந்த பாசம் இருக்கும். இருந்தாலும் அதை வெளியே காட்டாமல்  , "எல்லாம் படிச்சிட்டியா...அதுக்குள்ள என்ன தூக்கம் " என்று அவனை மேலும்  உயர்ந்தவனாக்க பாடு படுவார் 

தாய்க்கு, பிள்ளை சந்தோஷமா இருக்கணும்..

 தந்தைக்கு, பிள்ளை பெரிய ஆளா வரணும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

எவ்வளவு நுட்பம் 

எவ்வளவு அர்த்த செறிவு 

நவில் தொறும் நூல் நயம் போலும்.....

 


  



Thursday, February 14, 2013

அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை


அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை 




உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

அபிராமி அந்தாதியின் முதல்  பாடல். 

இறைவனை பாடும் போது  திருவடிகளில் தொடங்கி திருமுடியில் முடிப்பதும், இறைவியை  பாடும் போது  திருமுடியில் தொடங்கி பாதத்தில் முடிப்பதும் மரபு 

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பிப்பார் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் 

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள்  போற்றி என்று ஆரம்பிக்கிறார் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் 

இறைவியையை பாடும் போது தலையில் இருந்து ஆரம்பிப்பது மரபு. 

அந்த மரபின் படி, அபிராமி பட்டர் இங்கே அபிராமியின் தலையில் இருந்து ஆரம்பிக்கிறார். 

சிறிது நேரம் கண்ணை மூடி உங்கள் விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்துப் பாருங்கள். 

மூடிய கண்களில் என்ன நிறம் கோலம் போடுகிறது ? சிவப்பு நிறம் தானே ? அபிராமியின் அழகில் தன்னை மறந்து லயித்து இருக்கும் பட்டருக்கு எல்லாம் அவளாகத் தெரிகிறது. எல்லாம் சிவப்பாகத் தெரிகிறது. 

உதிக்கின்ற செங்கதிர் - அதிகாலை சூரியன். வெளிச்சம் தரும், சுடாது. எரிக்காது.  அவள் கருணை அப்படித்தான். 

வாழ்க்கைக்கு ஒளி  காட்டி வழி காட்டும். 

சுடாது. 

எரிக்காது. 

அஞ்ஞான இருள் விரட்டி, மெய்ஞான ஒளி  ஏற்றும். 

உதிக்கின்ற செங்கதிர். சூரியனை நம் கண்ணால் நேரடியாக காண முடியாது. காலை நேர சூரியனை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும். அபிராமி அறிவுக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும், அவளை தியானித்தால் காண முடியும் என்பது உட்பொருள் 
உச்சித் திலகம் - உச்சியில் இடுகின்ற குங்கும திலகம். அவள் நெற்றியில் இடுகின்ற திலகம் உதிக்கின்ற  செங்கதிரைப்  போல சிவப்பாக இருந்தது 

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = மாணிக்கக் கல் சிவப்பு. உயர்ந்தது. 

எவ்வளவு தான் உயர்ந்தாக இருந்தாலும் அதன் மதிப்பு எல்லோருக்கும் தெரியாது.

கழுதையின் கழுத்தில் கோஹினூர் வைரத்தை கட்டி விட்டால் அதற்கு அதன் மதிப்பு தெரியுமா ? எனவே, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்றார்.  அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லவில்லை. அவள் அறிவுக்கு அப்பாற்பட்டவள். உணர்வு உடையோர் அவளின் மதிப்பை அறிவார்கள் 

மாதுளம்போது = மாதுளம் மலர் 

மலர்க்கமலை = மாதுளம் மலர் போன்ற தாமரை. சிவந்த தாமரை. வெண் தாமரை அல்ல 

துதிக்கின்ற மின் கொடி = மின்னல் கொடி  போன்ற உருவம் உடையவள்  

மென் கடிக் குங்கும தோயம் = மென்மையான குங்குமத்தில் தோய்த்து எடுக்கப் பட்டதை போன்ற சிவந்த வடிவம் உள்ளவள் 

என்ன = என்ற 

விதிக்கின்ற மேனி அபிராமி = அப்படி எல்லாம் நூல்களில் மறைகளில் சொல்லப்பட்ட மேனி அழகை உடையவள் 

எந்தன் விழுத் துணையே = அவள்  எந்தன் விழுத் துணையே. 

ஒரு இரயில் நிலையத்திற்கோ, கோவில் திருவிழாவிர்க்கோ சின்ன பையனையோ அல்லது பெண்ணையோ அழைத்து செல்லும் அம்மா என்ன சொல்லுவாள். "என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ. கைய விட்டுறாத " அப்படின்னு சொல்லுவாள். அந்த குழந்தையும் அம்மாவின் கையையை பிடித்துக் கொண்டு கவலை இல்லாமல் திரியும். வேடிக்கை பார்க்கும், வருபவர்கள் போபவர்களை பார்க்கும்..அதுக்கு ஒரு கவலையும் இல்லை . அம்மாவின் கையை பிடித்து இருக்கும் வரை, உலகில் என்ன நடந்தாலும் குழந்தைக்கு ஒரு கவலை இல்லை 

சிறந்த துணை. வாழ்கைப் பாதை நீண்டது,  சிக்கலானது, ஆபத்து நிறைந்தது.  துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்பது அவ்வை வாக்கு. நமக்கு, நம் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் துணை இருப்பவள் அபிராமியே. அவள் கையை பிடித்து கொள்ளுங்கள். அவள் உங்களை வழி நடத்துவாள். அப்புறம் என்ன கவலை ? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவ கையை விட்டுறாதீங்க....




Tuesday, February 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு


இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு  


சமய பெரியவர்களுக்கு ஏதோ ஒரு உண்மை கிடைத்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் சும்மா இருந்திருக்கலாம். இல்லை அதை வைத்து நாலு காசு பண்ணி இருக்கலாம். காசு  பண்ணிய மாதிரி தெரியவில்லை. காலம் காலத்திருக்கு பின் வரும் சந்ததிகளுக்கு எல்லாம் பயன் பட வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு போய் இருக்கிறார்கள்.

அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு இன்றும் ஒளி  வீசி , இருள் அகற்றி நம் வாழ்க்கைக்கு வழி காட்டி கொண்டிருக்கிறது 

பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள் 

இராமாயணம் - நல் வழி செல்லும் மனம்


இராமாயணம் - நல்  வழி செல்லும் மனம் 


இராமன் மிதிலை நகர் வருகிறான். கன்னி மாடத்தில் சீதை நிற்பதை காண்கிறான். அவன் மனம் அவள் பால்  விடுகிறது. அண்ணலும் நோக்கினான் , அவளும் நோக்கினாள். 

காதல் அரும்பியது 

இதயம் இடம் மாறியது 

இரவில் தனிமையில் இருக்கும் போது இராமன் யோசிக்கிறான். 

நாம அந்த பெண்ணை விரும்பினோம். ஒரு வேளை  அவள் திருமணம் ஆன பெண்ணாய்  இருந்தால் ? பிறன் மனை நோக்குவது தவறு அல்லவா ? எனக்கு எப்படி அப்படி ஒரு ஆசை வரலாம் ? என்று யோசிக்கிறான். 

பின் அவனே சொல்கிறான்....என் மனம் தவறான வழியில் போகவே போகாது. என் மனம் விரும்பியதால் அவள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.

எவ்வளவு நம்பிக்கை இராமனுக்கு தன்  மேல் !


பாடல் 

ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!


பொருள் 

Monday, February 11, 2013

வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம்


வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம் 


பாரதப் போர் தொடங்குவதற்கு முன் கண்ணன் தூது போகிறான். பாண்டவர்கள் சார்பாக, துரியோதனனிடம். 

வில்லிபுத்துராழ்வார் அந்த சருகத்தை தொடங்குமுன் பாயிரம் போல் முதல் பாடல் பாடுகிறார். 

இறைவனின் புகழைச் சொல்லி, அவன் அடியார்களின் திருவடிகளை தொழுவோம் என்கிறார் 

படிக்க கொஞ்சம் கடினம் தான். பதம் பிரித்தால் எளிதாக இருக்கும்.

தேன்  போல் அர்த்தம் சொட்டும் தமிழ். படிக்க படிக்க தெவிட்டாத தமிழ். 

முதலில் பாடலைப் பார்ப்போம் 


அராவணைதுறந்துபோந்தன்றசோதைகண்களிப்பநீடு
தராதலம்விளங்கவெண்ணெய்த்தாழிசூழ்தரநின்றாடிக்
குராமணங்கமழுங்கூந்தற்கோவியர்குரவைகொண்ட
புராதனன்றனையேயேத்தும்புனிதர்தாள்போற்றிசெய்வாம்.

கொஞ்சம் கரடு முரடாய் தெரிகிறதா ? சீர் பிரிப்போம் 

அரா அணை  துறந்து போந்து அன்று யசோதை கண் களிப்ப நீடு 
தரா தலம் விளங்க வெண்ணெய் தாழி சூழ்தர நின்று ஆடி 
குரா  மணம் கமழும் கூந்தல் கோபியர் குரவை கொண்ட 
புராதனன் தன்னையே ஏத்தும் புனிதர் தாள் போற்றி செய்வாம் 

பொருள் 

Sunday, February 10, 2013

சிறுபாணாறு - வறுமை தோய்ந்த வீடு


சிறுபாணாறு  - வறுமை தோய்ந்த வீடு 


அந்தக் காலத்திலும் வறுமை நம் மக்களை வாட்டி இருக்கிறது. 

ஆண்களும் பெண்களும் வறுமையோடு போராடி இருக்கிறார்கள். 

எவ்வளவு வறுமை இருந்தாலும் தங்கள் பண்பாட்டையும், அற  நெறியையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். 

வறுமையையை சமாளிப்பதில் பெண்ணின் பங்கு மிகப் பெரிதாய் இருந்து இருக்கிறது. 

ஆற்றுப் படை என்பது தலைவனை அடைந்து பரிசுகள் பெற்ற புலவன் எதிரில் வருபவனை அந்த தலைவனிடம் செல்லும் வழியை கூறுவது. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல். 

சிறுபாணாற்று படை என்ற நூல் அந்தக் காலத்தில் உள்ள வறுமையையும் அதை ஒரு பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதையும் காட்டுகிறது. 

அவள் வீடு ஒரு சின்ன குடிசை. சமைத்து நாட்கள் பல ஆகி விட்டன. வீட்டில் உள்ள அடுப்பில் நாய் படுத்து தூங்குகிறது. அதன் குட்டி அந்த நாயிடம் பால் குடிக்க முயல்கிறது. பாவம் அந்த நாயும் சாப்பிட்டு பல நாள் ஆனதால், அதனிடம் பால் இல்லை. 

அந்த வீட்டின் பெண், அவர்கள் வீட்டில் உள்ள வேலியின்  மேல் படர்ந்துள்ள கீரையை கிள்ளி  எடுத்து (தண்டை பிடுங்கினால் மீண்டும் வளராதே, அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது ), அந்த கீரையையை உப்பில்லாமல் சமைத்து (உப்பு வாங்கக் கூட காசு இல்லை ), வீட்டில் உள்ளவர்களுக்கு பரி மாறுகிறாள் ... இது வெளியே தெரிந்தால் நன்றாக இருக்காது என்று கதவை சாத்திவிட்டு பரிமாறுகிறாள் 

பாடல் 


திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்

வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம்" 



பொருள் 

திறவாக் கண்ண = கண்ணை திறக்காமல் 

சாய்செவிக் குருளை = சாய்ந்த காதை உடைய குட்டி 

கறவாப் பான் முலை = இதுவரை யாரும் கறக்காத முலையில் இருந்து 

கவர்தல் நோனாது = பால் அருந்துவதை அறியாத தாய் நாய் 

புனிற்று நாய் குரைக்கும் = சப்த்தம் கூட போட வலு இல்லாத நாய் 

புல்லென் அட்டில் = படுத்து கிடக்கும் அடுப்படியில் 

காழ் சோர் = கட்டப்படாத விறகுகள் சிதறி கிடக்கும் 

முது சுவர்க் = பழைய சுவர் 

கணச் சிதல் அரித்த = செல் அரித்த அடுப்படி 

பூழி பூத்த புழல் காளாம்பி = புழுதி படிந்த, ஈரமான காளான் நிறைந்த அடுப்படியில் 

ஒல்கு பசி உழந்த = பசியால் மெலிந்த உடலை கொண்ட பெண் (உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை என்பது அபிராமி அந்தாதி )

ஒடுங்கு நுண் மருங்குல் = மெலிந்த இடையை கொண்ட 

வளைக்கை கிணை மகள் = வளையலை அணிந்த கைகளை கொண்ட அந்தப் பெண் 

வள் உகிர்க் குறைத்த = உகிர் என்றால் நகம். நகத்தால் கிள்ளி எடுத்து 

குப்பை வேளை = குப்பையில் விளைந்த கீரை 

உப்பு இலி வெந்ததை = உப்பு இல்லாமல் வேக வைத்து 

மடவோர் காட்சி = பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காண்பார்களே என்று 

நாணி கடை அடைத்து = நாணம் கொண்டு கதவை அடைத்து 

இரும்பேர் ஒக்கலொடு = ஒக்கல் என்றால் சுற்றத்தார். இரும்பேர் என்றால் பெரிய. பெரிய சுற்றாத்தாரோடு 

ஒருங்கு உடன் மிசையும் = ஒன்றாக இருந்து உண்டு 

அழி பசி வருத்தம் = பெரிய வருத்தத்தை தரும் பசியை போக்கினாள் 

பாடலில் எவ்வளவு நுண்ணிய அர்த்தங்கள்....

- வறுமை 
- அவ்வளவு வறுமையிலும் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் 
- வீட்டை சரியாக பராமரிக்க முடியாமல் செல் அரித்து கிடக்கும் அடுப்படி 
- சுள்ளியும், விறகும் கிடக்கிறது 
- கீரையை கிள்ளி  எடுத்து வருகிறாள் 
- உப்பு போடாத கீரை சமையல். அது மட்டும் தான் உணவு 
- மற்றவர்கள் பார்த்தால் வெட்கக்கேடு என்று கதவை சாத்திக் கொள்கிறாள்
- அந்த ஏழ்மையிலும் ஒன்றாக இருந்து உண்கிறார்கள். 
- உறவு விட்டுப் போகவில்லை.