Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

Sunday, November 7, 2021

ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம்

 ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம் 


கவிதை என்பது ஒரு அனுபவம். அதை அனுபவித்துத் தான் அறிய முடியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உரை சொல்லி விடலாம். எல்லா சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து விட்டால், கவிதை புரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. 


ரோஜா மலரின் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாக பியித்து பியித்து பார்த்தால் இறுதியில் காம்புதான் மிஞ்சும். 


ஒரு குழந்தையின் அழகு எங்கே இருக்கிறது? அதன் கண்ணிலா? மூக்கிலா? என்று தேடக் கூடாது. 


சொல்லின் அர்த்தம் தெரியாமல் அழகு புரியுமா என்றால் புரியாதுதான். ஆனால், சொல்லின் அர்த்தம் மட்டும் அல்ல கவிதையின் அழகு. 


பலபேர் சொல்லின் அர்த்தத்தோடு நின்று விடுகிறார்கள். 


எந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்? இதுவா அர்த்தம்? அது கூட சரியாக வரும் போல் இருக்கிறதே? அப்படிச் சொன்னால் என்ன? என்று சொல்லுக்குள் நின்று விடுகிறார்கள். 


பாடல் 


இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்

மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்

நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ

தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_7.html


(Please click the above link to continue reading)



இலக்கணக் கவிஞர் = நெறிமுறை அறிந்த கவிஞர்கள் 


 சொல்லின்பம் தேடுவர் = சொல்லின் இன்பத்தைத் தேடுவார்கள் 


மலக்கும் சொல் = மயக்கும் சொற்களை 


தேடுவர் வன்க ணாளர்கள் = தேடுவார்கள் கீழானவர்கள் 


நிலத்துறும்  கமலத்தை நீளும் வண்டத் = நிலத்தில் உள்ள வண்டு நீரில் உள்ள கமலத்தை (தாமரையை) நாடி அதில் உள்ள தேனை அனுபவிக்கும் 


ஈ = வண்டு 


தலைக்குறை = முதல் குறைந்த 


கமலத்தைச் = கமலத்தை 


சாரும் தன்மைபோல் = தேடுவதைப் போல 


ஔவையார் குசும்பு.


தலைக்குறை என்றால் தலை இல்லாத. அல்லது தொடக்கம் இல்லாத. 


கமலம் - இதில் முதல் எழுத்து இல்லை என்றால்? 


மலத்தை தேடும் ஈ போல என்று அர்த்தம். 


வார்த்தைகளை விட்டுவிட வேண்டும். அர்த்தத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


என்னைக் கேட்டால், கவிதையின் அர்த்தத்தையும் விட்டுவிடலாம். கவிஞனின் மனதை, அவன் உணர்சிகளை பிடிக்க வேண்டும். 


அபிராமி பட்டர் சொல்லுவார் 


"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" என்று அபிராமியை. 


மூப்பு இல்லாத முகுந்தனுக்கு இளையவள் என்றால் என்ன அர்த்தம் என்று மண்டையை போட்டு கசக்கக் கூடாது. 


அவருக்கு, அவள் எப்போதும் இளமையானவள். அவளுக்கு வயதே ஆகாது. அதை எப்படியோ சொல்கிறார். வார்த்தைகளை தாண்டி உணர்சிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


அது தான் சொல்லின் இன்பம். 


மனைவி செய்த சமையலின் சுவை அவள் தரும் உணவில் இல்லை. அதை நமக்காக நேரம் செலவழித்து, பொறுமையாக, ஒவ்வொரு பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்யும் கனிவில் இருக்கிறது. அந்த அன்பு மனம் புரிந்தால் சமையல் சுவைக்கும். இதில் உப்பு இல்லை, அதில் காரம் கூட இருக்கிறது என்று சொல்லுவது அந்த ஈயை போன்ற செயல். 


அப்பா அல்லது அம்மா, பிள்ளையைத் திட்டுகிறார்கள். சொல்லின் அர்த்தத்தைக் கொண்டா அதைக் கணிப்பது. நாம் நன்றாக வேண்டும் என்ற காதலில் அல்லவா திட்டுகிறார்கள் என்ற அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். 


கவிதையை புரிந்து கொள்ள முயல்வதெல்லாம் ஒரு வாழ்க்கைப் பயிற்சி. 




Sunday, August 9, 2020

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு


பாண்டிய மன்னன் ஒரு பொற்கிழியை ஒரு பெரிய கொடிக் கம்பத்தில் கட்டி தொங்க விட்டு, அவையில் உள்ள புலவர்களளைப் பார்த்துக் "உங்களில் யாராவது பாடல் பாடுங்கள். உங்கள் பாடலுக்கு அந்த கயிறு அறுந்து பொற் கிழி கீழே விழுந்தால் அதை நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அறிவித்து விட்டான். 

புலவர்கள் யாரும் பாடவில்லை. அவர்கள் பாடி, கயிறு அறுந்து விழாவிட்டால் அவர்களுக்கு அது பெரிய அவமானமாகப் போய் விடும். பரிசு கிடைக்காதது ஒரு புறம். அவர்கள் பாடிய பாடல் சரி இல்லை என்று எல்லோர் முன்பும் அவமானம் வேறு வந்து சேரும்.

ஒளவையார் இதை கேள்விப் பட்டு, அவர் இரண்டு பாடல்களைப் பாடினார். அவர் பாடிய முதல் பாடல் கீழே உள்ள link இல் உள்ளது. 



அவர் பாடிய அடுத்த பாடல். 

இரண்டாவது பாடலில் அவர் சொல்கிறார் 

"யுத்தம் வந்து விட்டது, சண்டைக்கு வாருங்கள் என்றால் நூற்றில் ஒருவன் வருவான்.  நல்ல பாடல் எழுது என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் அது முடியும். படித்ததை எல்லோருக்கும் விளங்கும்படி தெளிவாக எடுத்துச் சொல் என்றால் அது பத்தாயிரத்தில் ஒருவரனுக்குத்தான் முடியும். சம்பாதித்த பொருளை பிறருக்கு தானமாகக் கொடு என்றால் அது கோடியில் ஒருவனுக்குத்தான் முடியும். அது உண்மை என்றால், ஏ பொற்கிழியே நீ அறுந்து விழுவாயாக" என்று பாடினார். 

பொற்கிழி  அறுந்து விழுந்தது. 

பாடல் 

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் 
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் 
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் 
உண்டாயின் உண்டென் றறு. 


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_9.html

ஆர்த்தசபை = சண்டைக்கு வா என்றால் சபையில் இருந்து 

நூற்றொருவர்  = நூற்றில் ஒருவன் வருவான் 

ஆயிரத்தொன் றாம்புலவர் = பாடல் பாடு என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் முடியும் 

வார்த்தை பதினா யிரத்தொருவர் = கற்றதை தெளிவாக மற்றவர்களுக்குச் சொல் என்றால், அது பத்தாயிரத்தில் ஒருவனுக்குத்தான் முடியும் 


பூத்தமலர்த்  = பூத்த மலர் 

தண்டா மரைத் = குளிர்ந்த தாமரை மலரில் இருக்கும் 

திருவே  = இலக்குமியே 

தாதா = கொடையாளி 

கோ டிக்கொருவர்  = கோடியில் ஒருவன் 


உண்டாயின் உண்டென் றறு.  = அது உண்மையானால், உண்மை என்று சொல்ல நீ அறுந்து விழுவாயாக 

பாடல் எழுதுவதை விட, படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் முன் வர மாட்டார்கள்  என்கிறார் ஒளவையார். 

காரணம் 

ஒன்று, சொல்வது  எளிது அல்ல. படித்து புரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வருவது கிடையாது. 

இரண்டாவது, பொருளைக் கொடுப்பது போல கல்வியைக் கொடுக்கவும் மனம் வராது.   எனக்குத் தெரிந்ததை  மற்றவர்களுக்குச் சொல்லி தந்து விட்டால், என் மதிப்பு என்ன ஆவது.  அவனும் எனக்கு சமமாக ஆகி விடுவானே என்ற எண்ணம். 



கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

கரவாகிய கல்வி உளார் என்பார் அருணகிரிநாதர்.  கரவு என்றால் மறைத்தல். 

இயல்வது கரவேல் என்பது ஆத்திச் சூடி. 

கல்வி கற்றவர்கள் பிறருக்குச்  சொல்ல மாட்டார்கள். மறைத்து வைத்துக் கொள்வார்கள். 






Friday, August 7, 2020

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு


ஒரு நூலோ, பாடலோ, கதையோ நல்லது என்று எப்படி அறிந்து கொள்வது?

நல்லது அல்லாதனனவற்றைப் படித்து நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது ஒரு புறம். தீயனவற்றைப் படிப்பதால் நம் மனம் குழம்பும். தீய வழியில் செல்ல முற்பட்டு விடுவோம்.

ஒரு நூல் நல்ல நூல் என்பதற்கு ஒரே சான்று அது காலத்தை வென்று நிற்க வேண்டும்.

நல்லன அல்லாதவற்றை காலம் கழித்து விடும்.

ஒரு நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை புதைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஓலைச் சுவடியில் எழுதி வைத்த பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறது என்றால் அதன் மகத்துவம் புரிய வேண்டும்.

அந்தக் காலத்தில் ஒரு நூலைச் செய்தால் அதை எளிதில் அங்கீகரிக்க மாட்டார்கள்.

அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் உண்டு.

நூல் எழுதப் பட்ட ஓலைச் சுவடிகளை தீயில் போடுவார்கள். அது தீயில் கருகாமல் இருந்தால், அது நல்ல நூல் என்று ஏற்றுக் கொள்ளவார்கள்.

அது போல, ஓடுகிற நதியில் அந்த நூலைப் போடுவார்கள். அது ஆற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லாமல்  எதிர் நீந்தி வந்தால், அந்த நூல் ஏற்றுக் கொள்ளப் படும்.

ஒரு முறை ஒரு (பாண்டிய) மன்னன் ஒரு பெரிய கொம்பில் ஒரு கயிரைக் கட்டி, அதில் ஒரு பொன்னாலான ஒரு பையை கட்டித் தொங்க விட்டான்.

அவன், தன்னை நாடி பரிசு பெற வரும் புலவர்களிடம் சொல்லுவானாம் "நீங்கள்  கவிதை பாடுங்கள். அந்த பொற்கிழி கயிறு அறுந்து விழுந்தால் நீங்கள் அதை  எடுத்துக் கொண்டு செல்லலாம்" என்று.

புலவர்களுக்கு பயம். அவர்கள் பாடி, பொற் கிழி கீழே அறுந்து விழாவிட்டால், அவர்கள் பாட்டு  சிறந்தது அல்ல என்று நகைப்புக்கு இடமாகி விடும் அல்லவா?  எனவே யாரும் பாடல் பாடவில்லை.

மன்னனுக்கு சந்தோஷம்.

ஒளவையார் வந்தார். என்ன அங்கே பொற்கிழி கட்டி தொங்குகிறது என்று கேட்டு அறிந்து கொண்டாள். ஓ  இதுவா சங்கதி என்று இரண்டு பாடல்கள் பாடினாள் . இரண்டு பொற்கிழிகள் கயிறு அறுந்து விழுந்தது என்று கதை.

அதில் முதல் பாடல்.

"ஒருவன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்வது தான் தாளாண்மை எனப் படுவது. கேட்ட பின் கொடுப்பது வலிமையை காட்டுவது. மீண்டும் மீண்டும் ஒருவனை அலைய விட்டு பின் கொடுப்பது அவன் நடந்ததற்கு தந்த கூலி. அப்படி பல முறை வந்து கேட்ட பின்னும் கொடுக்காமல் இருப்பவன் குலம் வாரிசு அற்றுப் போய் விடும் என்பது உண்மையானால்,ஏ பொற் கிழியே நீ அறுந்து விழுவாய் "

இது முதல் பாடல். அவர் பாடி முடித்தவுடன், அவர் சொன்னது உண்மைதான் எனபதால், பொற் கிழி அறுந்து விழுந்ததாம்.

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி 
அடுத்தக்கால் ஈவது  வண்மை - அடுத்தடுத்துப் 
பின்சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும் 
பொய்த்தான் இவனென்று போமேல், 
அவன்குடி எச்சம் இறுமேல் இறு.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_7.html

தண்டாமல்  = பிச்சை கேட்காமல் (இன்றும் கூட மலையாளத்தில் தெண்டுதல் , தெண்டி என்ற சொற்கள் உண்டு. தெண்டி என்றால் பிச்சைக்காரன்).

ஈவது = கொடுப்பது

தாளாண்மை  = தயவு உள்ள குணம். கருணை.

தண்டி  = பிச்சை

அடுத்தக்கால் =  கேட்ட பின்

ஈவது = கொடுப்பது

வண்மை = வள்ளல் தன்மை

அடுத்தடுத்துப்  = மீண்டும் மீண்டும்

பின்சென்றால் = பின்னும் வந்து கேட்ட பின்

ஈவது =  கொடுப்பது

காற்கூலி = அவன் நடந்து வந்ததற்கு கொடுத்த கூலி

பின்சென்றும்  = அதன் பின்னும்

பொய்த்தான் = கொடுக்காமல் ஏமாற்றினால்

இவனென்று போமேல்,  = அவனை கொடுக்காமல் விட்டால்

அவன்குடி = அப்படிப்பட்டவன் குடும்பத்தில்

எச்சம் = வாரிசு

இறுமேல் = இற்றுப் போய்விடும் என்பது உண்மை ஆனால்

இறு = நீயும் அறுந்து போ (வாரிசு அறுந்து போவது போல)

கதை உண்மையோ பொய்யோ. ஆனால், அது சொல்லும் கருத்து உயர்வானது.

கேட்காமல் கொடுப்பது என்பது எவ்வளவு உயர்ந்த பண்பு.

இன்று பொது உடைமை பற்றி பேசுகிறோம். அன்றே, இதை எல்லாம் தாண்டி வாழ்க்கை முறையை வகுத்து  வைத்து இருக்கிறார்கள்.

விட்டு விட்டோம்.

பெறவும் இல்லை. கொடுக்கவும் இல்லை.

நடுவில் பல தலைமுறைகள் திசை தெரியாமல் தடுமாறி போய் இருக்கின்றன.

பல படையெடுப்புகள், ஆங்கிலேய ஆதிக்க, நம் பாடத்திட்ட முறைமைகளின் மாற்றம்  என்று வந்ததால் நம் அடிப்படை நமக்குத் தெரியாமல் போய் விட்டது.

அவற்றை நாம் புரிந்து கொள்வதுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் வேண்டும்.





Tuesday, July 21, 2020

ஔவையார் பாடல் - நன்றே

ஔவையார் பாடல் - நன்றே 


தீயாரைக் காண்பதும், அவர்கள் சொல்வதை கேட்பதும் தீதே, அவரோடு இணங்கி இருப்பதும் தீதே என்றார்.

ஆனால் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே தீமை பயப்பதாகத்தானே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படம், வலை தளங்கள், செய்தித் தாள்கள், என்று எங்கு பார்த்ததாலும் பொய்யும், புரட்டும், வஞ்சனையும், கொலை, கொள்ளை, ஏமாற்று வேலை என்று தானே இருக்கிறது.

இதை விட்டால் ஒன்றும் இல்லையே. பின் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு ஔவை தரும் விடை

மனம் சும்மா இருக்காது. எதையவாது பிடித்துக் கொள்ளும் இயல்பு உடையது. அதை அறிந்த ஒளவை சொல்கிறாள்....

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_21.html

பாடல் 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று


பொருள்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே  = நல்லவர்களை காண்பதும் நன்றே. நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தொலைக் காட்சியில், வலை தளங்களில் பார்த்தால் கூட போதும்.

நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே = அவர்கள் சொல்வதை கேட்பதும் நன்றே

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;  = அவர்களுடைய குணங்களை சொல்வதும் நல்லதே

அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று = அவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லது

அதாவது,


கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பதை விடுத்து நல்லவற்றை பார்க்க வேண்டும்.

எவன் எவனோ பேசுவதை கேட்பதை விட்டு விட்டு, நல்லவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்.

அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பதை விட்டு விட்டு, நல்லவர்களைத் தேடிப் போய்   கண்டு அவர்களோடு பேச வேண்டும்.

பார்க்க முடியவில்லையா, பேச முடியவில்லையா, அவர்களின் நல்ல குணத்தையாவது  மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இராமன் இப்படி வாழ்ந்தான்.

தர்மன் இப்படிச் செய்தான்.

அரிச்சந்திரன் இப்படி பொய் பேசாமல் இருந்தான் என்று நல்லவர்களின்  குணங்களை  பேச வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம், நாளடைவில் அந்த குணங்கள் நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.



Friday, May 13, 2016

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?


எது அழகு என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம் ?

காதலியின் முகம் அழகு, அவளின் வெட்கம் அழகு, குழந்தையின் முகம் அழகு, அப்போது பூத்த பூ அழகு, மழை அழகு, கடல் அழகு என்று அடுக்குவோம்.

ஔவை வேறு ஒரு பட்டியல் தருகிறாள்.

வறுமை அழகு, சாப்பிடாமல் இளைத்த தேகம் அழகு, ஏன் மரணம் கூட அழகு என்கிறாள் கிழவி.

நம்ப முடிகிறதா ?


உலகிலேயே மிக அழகானது, முதல் இரவு முடிந்து வெளியில் வரும் பெண்ணின் முகம் மிக அழகானது என்கிறாள்.

அடுத்து, விரதம் இருந்து இளைத்த ஞானியாரின் மேனி அழகு. காய்ச்சல் வந்து, உடல் நிலை சரியில்லாமல் இளைத்த மேனி அல்ல, ஞானம் வேண்டி ,ஊண் உறக்கம் இன்றி தவத்தால் விரதத்தால் இளைத்த மேனி அழகு. யோசித்துப் பார்ப்போம். அளவுக்கு அதிகம் தின்று தொந்தியும் தொப்பையும் உள்ள உடல் அழகா, விரதத்தால் இளைத்த மேனி அழகா ?


அடுத்து, கொடுத்து இளைத்த ஒருவனின் வறுமையும் கூட அழகு என்கிறாள் அவ்வை. ஒரு காலத்தில் பெரிய தனவந்தனாக இருந்து , எல்லோருக்கும் உதவி செய்து அதனால் வறுமையின் வாய்ப்பட்டாலும் , அந்த வறுமை கூட அழகுதான் என்கிறாள்.


இது எல்லாவற்றையும் விட அழகு, நாட்டுக்காக சண்டையிட்டு, அதில் மார்பில் புண் ஏற்று இறந்த வீரனின் சமாதியின் மேல் இருக்கும் அந்த கல் அழகு என்கிறாள்.


பாடல்


சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த
விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபிர மம்


பொருள்

சுரதம் = கூடல் , புணர்ச்சி

தனி = தனிமையில்

விளைந்த = சுகித்த, தோய்ந்த

தோகை = இளம் பெண்

சுகிர்த = ஞானம் (வேண்டி, தேடி)

விரதம் = விரதம் இருந்து

தனி விளைந்த மேனி = இளைத்த மேனி

நிரதம் = நித்தம்

கொடுத்திளைத்த தாதா =கொடுத்து இளைத்த செல்வந்தன்

கொடுஞ்சமரிற் = கொடும் + சமரில் = கொடிய சண்டையில்

பட்ட = இறந்து பட்ட

வடுத்துளைத்த = வடு துளைத்த = விழுப் புண் ஏற்ற

கல்லபிர மம் = கல் + அபிரமம் = அந்த நடு கல் அழகானது.

அபிரமம் என்றால் அழகானது என்று அர்த்தம். அபிராமி என்றால் அழகானவள் என்று பொருள்.


அழகு என்பது வேறு உடல் வனப்பில் மட்டும் அல்ல.


என்ன ஒரு அருமையான பாடல்.

கிழவி பெரிய ஆள் தான்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post_13.html )



Thursday, May 12, 2016

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின்

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின் 


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

நாம் பலமுறை கேட்ட பாடல் தான். திருவிளையாடல் படத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

 இதில் என்ன புதுமை இருக்கிறது தெரிந்து கொள்ள ?

நம்மிடம் இனிது எது என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

-நல்ல சுவையான உணவு
- காதுக்கு இனிய இசை
- நல்ல சினிமா, நாடகம், தொலைகாட் சி தொடர்
- கணவன்/மனைவியோடு இருப்பது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது

இப்படி அடுக்கிக் கொண்டே போவோம்.

இனிமையை விட்டு விட்டு, ரொம்ப துன்பமானது, கடினமானது எது என்று கேட்டால்  தனிமை கொடுமை என்று சொல்லுவோம்.

அது கொடுமை என்பதால் தானே சிறையில் போடுகிறார்கள். ரொம்ப பெரிய  தவறு செய்தால் தனிமைச் சிறை என்றே இருக்கிறது. அதில் போட்டு விடுவார்கள்.

அவ்வை சொல்கிறாள்

"இனிது இனிது ஏகாந்தம் இனிது" 

ஏகாந்தம் என்றால் என்ன ?

ஏக + அந்தம்.

அந்தம் என்றால் முடிவு. ஏகம் என்றால் ஒன்று. ஒன்றான முடிவு. அல்லது ஒன்றில் முடிவது. ஒன்றில் இலயித்து விடுவது. அதில் கரைந்து போவது.

வாழ்க்கையின் பல சிக்கலகளுக்கு காரணம் மனம் ஒன்றாதது தான். ஒன்றிருக்கும் போது இன்னொன்றுக்குத் தாவுவது.

படிக்கும் போது தொலைக் காட்சி
அலுவலத்தில் இருந்தால் வீட்டின் எண்ணம்.
வீட்டில் இருந்தால் அலுவகலத்தின் எண்ணம்
இப்படி மனம் எதிலும் ஒன்றாமல் அலை பாய்ந்து கிடப்பதால் எதிலும்  நாம் சாதிக்க முடிவதில்லை.

ஏகாந்தம் இனிது.

சரி, அது தான் இனிமையா ? அதை விட இனிமையானது ஏதாவது இருக்கிறதா என்றால் ,

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

என்றார்.

கடவுளைத் தொழுதால் என்று சொல்லவில்லை. கடவுள் என்று சொன்னால் , உடனே எந்தக் கடவுள் என்று கேட்போம். அந்த சிக்கலைத் தவிர்த்து  அவ்வையார் "ஆதியைத் தொழுதல்" என்றார். 

எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆதி என்று ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை ஏன் தொழ வேண்டும்  ? அதை விட இனியது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், 


"அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்"

ஆதியைத் தொழுவதை விட இனியது அறிவுடயவர்களைச் சேர்வது.


இதைப் புரிந்து கொள்வது சற்று கடினம். அறிவுடையவர்களை சேர்வது என்ன அவ்வளவு இனிமையான செயலா என்றால் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் இனிமை தெரியும்.

அறிவுடையவர்கள் நம் வாழ்க்கையின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். நம்மை மிக மிக உயரத்தில் கொண்டு சேர்க்கும் வலிமை பெற்றவர்கள். நமது பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு சொல்பவர்கள். அவர்களோடு சில நேரம் இருந்து விட்டு வந்தாலே, நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், ஒரு உற்சாகமும், வாழ்வில் ஏதாவது  சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் தோன்றும்.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எத்தனை அறிவுடையவர்களோடு தொடர்பு வைத்து இருக்கிறீர்கள் என்று. இல்லை என்றால், இன்றிலிருந்து தொடங்குங்கள். தேடிப்  பிடியுங்கள். அப்புறம் பாருங்கள்  உங்கள் வாழ்வின் திசை போகும் போக்கை. எங்கோ உயரத்திற்கு போய் விடுவீர்கள்.

சரி, அதை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா ?


அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே


நான் எங்கே இருக்கிறேன் , இந்த அறிவில் சிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களோடு நான் எப்படி சேர்வது ? அவர்கள் என்னை தங்களோடு சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறதா ?

நீங்கள் சேரக் கூட வேண்டாம் ...அறிவுள்ளவர்களை பார்த்தால் கூட போதும். நேரில் கூட பார்க்க வேண்டாம், கனவில் கண்டால் கூடப் போதும்...

பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தாள் ஆண்டாள். அவள் கனவிலும் அவன் வந்தான். 

"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் " என்றாள் . 

கனவு கண்டவள் , நிஜமாகவே கைப் பிடித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

கனவு காணுங்கள். கனவு மெய்படும்.

சரி, இந்தப் பாடலை சற்று வேறு விதமாகப்  பார்ப்போம். 

பாடலை அடியில் இருந்து மேல் நோக்கிப் படிப்போம். 

முதலில் அறிவுடயவர்களை கனவில் காணுதல், பின் அவர்களை நேரில் காணுதல், பின் அவர்களோடு சேர்தல், சேர்ந்த பின் ஆதியைத் தொழுதல் , அதையும் கடந்து பின் ஏகாந்தமாய் இருத்தல்.

ஆதியோடு ஒன்றாகி விடுதல். ஏக அந்தம்.  முடிவில் எல்லாம் ஒன்றாக இருத்தல். 

ஏக போகமாய், நீயும் நானுமாய் , இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் என்று அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். 


இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ்)

அறிவுடையவர்களை தேடிக் கண்டு பிடியுங்கள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


(மேலும் வாசிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post.html )


Friday, September 4, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2



வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்

=============== பாகம் 2 =================================================

ஈதல் - அறம்
தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டது - இன்பம்
பரனை நினைத்து இம்மூன்றையும் விடுவது - வீடு பேறு

இது பாடலின் சாரம்.

இதை மேலும் ஆழ்ந்து சிந்தித்தால், ஒன்று புலப்படும்.

இந்த "பரனை நினைத்து" என்ற சொற்றடரை மற்ற மூன்றுக்கும் சேர்த்துப் பார்ப்போம்.

பரனை நினைத்து ஈதல் - அறம்
பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
பரனை நினைத்து காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே - இன்பம்
பரனை நினைத்து இம் மூன்றையும் விடுதல் - வீடு பேறு


அது என்ன பரனை நினைத்து ஈதல் அறம் ?

பொருளை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டா வெறுப்பாக, எரிச்சலோடும் கொடுக்கலாம். அப்படி கொடுப்பது அறமாகாது.

நாம் பெற்ற பொருள் அவன் தந்தது என்று நினைத்து அதை மற்றவர்களுக்குத் தருவது அறம்.

வரும் போது கொண்டா வந்தோம் ?

இதையே அருணகிரிநாதரும்

"வையிற் கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்கு என்றும் நொய்யிர்  பிளவேனும் பகிருங்கள்"

என்றார்.

கொடுக்கும் போது முருகனை நினைத்து, இப்படி ஒரு செல்வத்தை நமக்கு கொடுத்ததற்கும், கொடுத்த செல்வத்தை மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனதை தந்ததற்கும் அவனை வாழ்த்தி மற்றவர்களுக்குத் ஈதல் வேண்டும் என்கிறார்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 

இறைவனை வாழ்த்தி தானம் செய்ய வேண்டும். நான் கொடுக்கிறேன், என் செல்வம், என்ற ஆணவம் இல்லாமல் ஈதல் அறம் .

பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்

இரை தேடும் போதும் இறையும் தேட வேண்டும். 

செய்யும் செயலில் பக்தி கலக்கும் போது அதில் ஒரு ஆனந்தம், அமைதி பிறக்கிறது.  அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது.  போட்டி பொறாமை  மறைகிறது. இறைச் செயல் என்று நினைத்து செய்யும் போது  அதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற சுயநல கலப்பு மறைகிறது. 

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது 

கணவனும் மனைவியும்  ஒன்றாக இருக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும்  என்கிறார்.

இப்படி ஒரு அன்பான, அழகான, பண்புள்ள, என் மேல் ஆர்வம் உள்ள கணவனையோ, மனைவியையோ தந்த இறைவனுக்கு நன்றி என்று நினைக்க வேண்டும்.  நினைத்துப் பாருங்கள் , உங்கள் துணை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நீங்கள் விரும்படியும் இருக்கலாம், மற்றபடியும் இருக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன், அழகுடன், அன்புடன், பண்புடன், உங்கள் நலத்தில்  அக்கறை உள்ள துணை இறைவன் அருளால் அமைவது. நீங்கள்  என்ன செய்து விட முடியும் இங்கே. உங்களுக்கு கிடைத்தது அவன் அருள் . அதை நினைத்து, காதல் செய்யுங்கள். அடுத்த முறை உங்கள் துணையை  அன்போடு பார்க்கும் போது , அவன் அருளை நினைத்துப் பாருங்கள். அதன் சுகமே தனிதான். 

இந்த மூன்றையும் விடுவது என்பது எளிதான காரியம் அல்ல.  வேண்டா வெறுப்பாக  விடுவது ஒரு துறவறம் இல்லை. மருத்துவர் உங்களுக்கு சர்க்கரை வியாதி  என்று சொல்லி விட்டார்.  சர்கரையின் பக்கமே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்.  அதற்காக நீங்கள் சர்க்கரையை விட்டால் அதன் பெயர்  துறவறம் அல்ல. 

பரனை நினைத்து விடுவது வீடு பேறு.

இவற்றையெல்லாம் விடுவது இவற்றை விட பெரிய ஒன்றை அடைய என்று நினைக்கும் போது,  விடுவது ஒன்றும் பெரிதாகத் தெரியாது. 

பாட்டி பெரிய ஆளு....
 

Wednesday, September 2, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்


வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்