Showing posts with label நீத்தல் விண்ணப்பம். Show all posts
Showing posts with label நீத்தல் விண்ணப்பம். Show all posts

Tuesday, June 3, 2014

நீத்தல் விண்ணப்பம் - பிழைக்கே குழைந்து

நீத்தல் விண்ணப்பம் - பிழைக்கே குழைந்து 


எவ்வளவோ பிழைகள் செய்கிறோம்.

தெரிந்து சில. தெரியாமல் சில.

சில பிழைகளை மறக்கிறோம். சில பிழைகளை ஞாயப்படுத்துக்றோம். சில பிழைகளால் வருந்துகிறோம்.

மாணிக்க வாசகர் சொல்லுகிறார்.

பிழைக்கே குழைந்து...தான் செய்த பிழைகளை நினைத்து அப்படியே உருகி குழைந்து  போகிறாராம்.

இறைவா , நான் உன்னை  புகழ்ந்தாலும்,இகழ்ந்தாலும், என் குற்றங்களை நினைத்து நான் வருந்துகிறேன். என்னை கை விட்டு விடாதே. சிவந்த மேனி உடையவனே, என்னை ஆள்பவனே. சிறிய உயிர்களுக்கு இரங்கி அவை அமுது உண்ண நீ ஆலகால நஞ்சை உண்டாய். கடையவனான எனக்கும் அருள் புரி என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே.


பொருள்

ஏசினும் = உன்னை இகழ்ந்தாலும்

யான் உன்னை ஏத்தினும் = நான் உன்னை புகழ்ந்தாலும்

என் பிழைக்கே குழைந்து = என்னுடைய பிழைக்கு குழைந்து (வருந்தி)

வேசறு வேனை  = துன்பப்படுவேனை

விடுதிகண் டாய் = விட்டு விடாதே

செம் பவள = சிவந்த பவளம் போன்ற

வெற்பின் = மலையின் தோற்றம் போல

தேசுடை யாய் = தேகம் கொண்டவனே

என்னை ஆளுடை யாய் = என்னை ஆள்பவனே 

சிற் றுயிர்க்கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி

காய்சின  = காய்கின்ற சினம் போன்ற

ஆலமுண் டாய் = நஞ்சை உண்டாய்

அமு துண்ணக் = மற்றவர்கள் அமுது உண்ணக்

கடையவனே = கடையவனான எனக்கும் அருள் புரி

கடையவனே என்று ஆரம்பித்து கடையவனே என்று முடித்து வைக்கிறார் நீத்தல் விண்ணபத்தை. அருமையான பாடல்  தொகுதி. ஒரு சில பாடலகளைத் தவிர்த்து அனைத்து பாடல்களையும் தந்து இருக்கிறேன்.

சமயம் கிடைக்கும் போது விடுபட்ட பாடல்களையும் மூல நூலில் இருந்து படித்துப் பாருங்கள்.

இதுவரை இவற்றை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.


Wednesday, May 7, 2014

நீத்தல் விண்ணப்பம் - நின்னைச் சிரிப்பிப்பனே

நீத்தல் விண்ணப்பம் - நின்னைச் சிரிப்பிப்பனே


மாணிக்க வாசகரில் கிண்டல், நகைச்சுவை உள்ள பாடல்களை காண்பது அரிது.  "அழுதால் உன்னைப் பெறலாமே " என்று பாடியவர்.

அவர் சிவனிடம் சொல்கிறார்...

"நீ பெரிய வீரனாக இருக்கலாம். நீ என்னை கை விட்டு விட்டால் நான் என்ன ஆவேன். திக்குத் தெரியாமல் அலைவேன். என்னை எல்லோரும் கேட்பார்கள், "இப்படி அலைகிறாயே, நீ யாருடைய அடியான் " என்று. அப்போது அவர்களிடம் நான் உன் அடியவன் என்று சொல்லுவேன். எனகென்ன , அவர்கள் உன்னை பார்த்துதான் சிரிப்பார்கள். அப்படி அவர்கள் உன்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் என்னை கை விட்டு விடாதே"


பாடல்

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யார்அடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.


பொருள்

தாரகை போலும் = நட்சத்திரம் போல (வெண்மையாக, சிறு புள்ளி போல )

தலைத் = தலைகளை அதாவது மண்டை ஓடுகளை

தலை மாலைத் = உன் தலையில் மாலையாக கொண்டவனே

தழலரப்பூண் = தழல் + அரவு + பூண் = வேள்வித் தீயில் வந்த பாம்பை அணிகலமாக அணிந்த

வீர = வீரனே 

என் றன்னை = என்னை

விடுதி கண் டாய் = விட்டு விட்டாதே

விடி லென்னைமிக்கார் = விடில் + என்னை + மிக்கார் = அப்படி நீ விட்டு விட்டால் , மற்றவர்கள்

ஆரடி யான் = யார் + அடியான் = நீ யாருடைய அடியவன்

என்னின் = என்று கேட்டால்

 உத்தர கோசமங் கைக்கரசின் = உத்தர கோச மங்கைக்கு அரசனின்

சீரடியார் அடியானென்று = அடியவர்களின் அடியவன் என்று கூறி 

 நின்னைச் சிரிப்பிப்பனே. = உன்னை பார்த்து அவர்கள் சிரிக்கும்படி செய்வேன்

பழி உனக்கு மட்டும் அல்ல, உன் மற்ற அடியார்களுக்கும்தான் என்று சிவனின் மேல்  அழுத்தத்தை (Pressure ) அதிகரிக்கிறார்.

மற்ற பாடல்களில் இருந்து வித்தியாசமான பாடல்



Thursday, May 1, 2014

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?  


குழந்தையோடு ஒரு கோவிலுக்கோ, திருவிழாவுக்கோ, சினிமாவுக்கோ போகிறோம். நடுவில் பிள்ளையை காணவில்லை.

எப்படி பதறிப் போவோம். எப்படி தேடுவோம் ? எங்கெல்லாம் தேடுவோம் ? எதிரில் பார்க்கும் எல்லோரையும் கேட்போம் "இந்த மாதிரி ஒரு பிள்ளையை பார்த்தீர்களா " என்று. மனம் பதறும், பயம் கவ்விக் கொள்ளும், வயறு என்னோவோ செய்யும். என்னவெல்லாமோ நினைப்போம்....

அப்படியா இறைவனைத்  தேடுகிறோம் ?

நாள் கிழமை என்றால் கோவிலுக்குப் போவது, வீட்டில் விளக்கு ஏற்றுவது, பலகாரங்கள் பண்ணி உண்பது, அப்பப்ப சில பல பாடல்களை பாடுவது....

இதுவா தேடல் ?

தேடலில் ஆழம் இல்லை, அவசரம் இல்லை, நம்பிக்கை இல்லை. பின் எப்படி கிடைக்கும்.

மணி வாசகர் சொல்கிறார்.....

உன்னைப் பற்றி பாட மாட்டேன், உன்னை பணிய மாட்டேன், எனக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் உன்னை காண முடியாமல் இந்த ஊன் உடலை விட மாட்டேன், உன் பெருமைகளை நினைத்து வியக்க மாட்டேன், நீ எங்கே அலறித் தேட மாட்டேன், சிவன் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டார்கள் என்று ஓடி சென்று அறிய முயல மாட்டேன், உள்ளம் உருக மாட்டேன், நின்று உழல்கிறேனே என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; `சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.


பொருள்

பாடிற்றிலேன் = உன்னைப் பற்றி பாட மாட்டேன்

பணியேன் = உன்னை பணிய மாட்டேன்

மணி = மணி போன்ற

நீ = நீ

ஒளித்தாய்க்குப் = எனக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாய்

பச்சூன் = பசிய ஊன் (ஊன் உடம்பு)

வீடிற்றிலேனை = விட மாட்டேன்

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வியந்து = உன் பெருமைகளை வியந்து

ஆங்கு = அங்கு

அலறித் = அலறி

தேடிற்றிலேன் = தேட மாட்டேன்

`சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று = செய்வான் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டவர்கள் என்று

ஓடிற்றிலேன்; = ஓடிச் சென்று அறிய முயல மாட்டேன்

கிடந்து உள் உருகேன் = உள்ளம் உருக மாட்டேன்

நின்று உழைத்தனனே = கிடந்து உழல்கிறேனே

ஆர்வத்தோடு, ஆழத்தோடு, அவசரமாகத் தேடுங்கள்....

தேடுங்கள் கண்டடைவீர்கள்


Friday, April 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை 



பெண்களின் கண்கள் நெருப்பு போன்றவை. பார்த்ததும் பற்றிக் கொள்ளும். ஆணின் மனம் மெழுகு போல், வெண்ணை போல் உருகும் அந்த கண் எனும் நெருப்பில்.

உருகும் மெழுகு பொம்மைக்கு தன்னை எப்படி காப்பாற்றிக்  கொள்வது என்று தெரியாது. அது போல மணி வாசகர் இருக்கிறார்.

நான் உருகுகிறேன், என்னை காப்பாற்று என்று இறைவனிடம் வேண்டுகிறார்.அது  மட்டும் அல்ல, ஒரு முறை காப்பாற்றி விட்டு விட்டால் மீண்டும் அங்கு தான் போவேன். என் குணம் அப்படி. எனவே, நான் அவ்வாறு போகாமால் இருக்க என்னை உன் அடியவர்கள் மத்தியில் விட்டு விடு. அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்று  கூறுகிறார்.

அவராலேயே  முடியவில்லை.

பாடல்

முழுதயில் வேற்கண் ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாய்உன்னைப் பாடுவனே.


பொருள்

முழு = முழுவதும்

அயில் = கூர்மையான

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே

என்பார் அருணகிரி நாதர்.

வேற் = வேல் போன்ற

கண்ணியரென்னும் = கண்களை கொண்ட பெண்கள் என்னும்

மூரித் = மூண்டு எழும்

தழல் = தீயில்

முழுகும் = முழுகும்

விழுதனை யேனை = வெண்ணை போன்றவனை

விடுதி கண் டாய் = விட்டு விடாதே

நின் = உன்னுடைய

வெறி மலர்த் தாள் = மணம் பொருந்திய மலர் போன்ற திருவடிகளில்

தொழுது = வணங்கி

செல் = செல்கின்ற

வானத் தொழும்பரிற் = வானத்தில் உள்ள அடியவர்கள் 

கூட்டிடு = என்னை சேர்த்து விடு 

சோத்து = வணங்கி

தெம்பிரான் =  எம்பிரான்

பழுது = குற்றங்கள்

செய் வேனை = செய்கின்ற என்னை

விடேலுடை யாய் = விடாமல் காக்கின்றவனே

உன்னைப் பாடுவனே = உன்னை நான் பாடுவேனே

மண்ணாசையும், பொன்னாசையும் விட்டு விடும்.

பெண்ணாசை விடாது  போலிருக்கிறது.

ஆண்டிகளையும் ஆட்டிவிக்கிறது.

துறவிகளையும் துரத்திப்  பிடிக்கிறது.

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது பெண் என்று வள்ளுவரும் ஜொள்ளி இருக்கிறார்.


Thursday, April 24, 2014

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி 


காமம் சுடும்.

எல்லா ஆசையும் சுடும். ஆசைகள் மனிதனை ஆட்டுவிக்கும்.  மனத்திலும்,உடலிலும் சூட்டினை ஏற்றும்.

பெண்ணின் இதழ்கள் எவ்வளவு மென்மையானது. இனிமையானது. அழகானது.  சுவையானது.

அது முதலையின் வாயைப் போலத் தெரிகிறது மாணிக்க வாசகருக்கு. பிடித்தால்  விடாது. உயிரை வாங்கிவிடும் என்பதால்.

பயப்படுகிறார்.

உலகிலேயே பெரிய சுமை எது ?

இந்த உடல் தான்.  இதை தூக்கிக் கொண்டு அலைய வேண்டி  இருக்கிறது. ஒரு நிமிடம் இறக்கி வைக்க முடியுமா ?

இதை எவ்வளவு காலம்தான் பொறுத்துக் கொண்டு இருப்பது. என்னால் முடியவில்லை என்கிறார்  மணிவாசகர்.

பாடல்


முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே.


பொருள்

முதலைச் = முதலை போல்

செவ் வாய்ச்சியர் = சிவந்த வாயை கொண்ட பெண்களின்

வேட்கை = ஆசை என்ற

வெந் நீரிற் = வெந்நீரில் 

கடிப்பமூழ்கி = ஆழ்ந்து மூழ்கி

விதலைச் செய் வேனை  = நடுக்கம் கொண்ட என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விடக்கு  ஊன் மிடைந்த = மாமிச நாற்றம் கொண்ட

சிதலைச் = நோய்

செய் காயம் = உண்டாக்கும், அல்லது இடமான இந்த உடலை

பொறேன் = பொறுத்துக் கொண்டு இருக்க  மாட்டேன். பொறுக்க முடியவில்லை 

சிவனே = சிவனே 

முறை யோ முறையோ = இது சரிதானா, இது சரிதானா

திதலைச் செய் = தேமல் படர்ந்த 

பூண் முலை = ஆபரணம் அணிந்த மார்பை கொண்ட

மங்கை பங்கா = மங்கையை பாகமாகக் கொண்டவனே

என் சிவகதியே = என் சிவகதியே



Thursday, April 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்  


மானின் கண்கள் அழகானவை. பயந்த தன்மையை காட்டுபவை. மருண்ட பார்வை கொண்டவை.

அந்த மான், வலையில் சிக்கிக் கொண்டால், அதன் பார்வை எப்படி இருக்கும் ? மேலும் பயந்து, மேலும் மருட்சியை காட்டும் அல்லவா ?

பெண்களின் கண்கள் அந்த வலையில் அகப்பட்ட மானின் விழியைப் போல இருக்கிறது.

அந்த பார்வை எனும் வலையில் விழுந்தால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

அப்படிப்பட்ட வலையில் சிக்கிய என்னை கை விட்டு விடாதே - கருணாகரனே, கயிலை மலையின் தலைவா, மலைமகளின் தலைவனே என்று இறைவனை நோக்கி கசிந்து உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை

பாடல்

வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.


பொருள்

வலைத்தலை = வலையில் அகப்பட்ட

மான் அன்ன = மான் போன்ற

நோக்கியர் = பார்வை உடைய பெண்கள்

நோக்கின் வலையில்= பார்வை வலை (நோக்கின் வலை என்பது நல்ல சொற் பிரயோகம் )

பட்டு = அகப்பட்டு

மிலைத்து அலைந்தேனை  =  மயங்கி அலைந்தேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

 வெள் மதியின் = வெண் மதியின்

ஒற்றைக் கலைத் தலையாய் = பிறையை சூடிய தலைவனே

கருணாகரனே = கருணைக்கு இருப்பிடமாக இருப்பவனே

கயிலாயம் என்னும் மலைத் தலைவா = கைலாயம் என்ற மலைக்குத் தலைவனே

மலையாள் மணவாள = மலை மகளான உமாதேவியின் மணவாளனே

என் வாழ் முதலே = என் வாழ்க்கைக்கு முதலாக இருப்பவனே




Saturday, April 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை 


விலங்குகளை வலை வைத்துப் பிடிப்பார்கள். வலையில் மாட்டிக் கொண்ட விலங்குகள்  அதில் இருந்து விடுபட துள்ளும், தவிக்கும், தாவும் என்னென்னவோ செய்யும். அது எவ்வளவு முயற்சி செய்கிறதோ, அந்த அளவு மேலும் வலையில் சிக்கிக் கொள்ளும். வலை வைத்தவன் மனது வைத்தால் ஒழிய அந்த விலங்கு வலையில் இருந்து விடு பட முடியாது.

அது போல

இந்த உடல் என்ற  வலையில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உடலில் உள்ள பொறிகள் நாளும் பலப் பல அனுபவங்கள் மூலம் நான் என்ற எண்ணத்தை மேலும் மேலும் வலுப்  படுத்துகிறது. பின், நான் என்ற அகம்பாவத்தில் இருந்து வெளி வர முடியாமல் தவிக்கிறோம்.

அதைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் , ஒரு  கணம் கூட இந்த உடம்பு என்ற வலிமையான வலை தரும் துயரை பொறுக்க முடியாது என்கிறார்.

பாடல்


தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.


பொருள் 

தனித் துணை நீ நிற்க =  தனிச் சிறப்பான துணையான நீ இருக்கும் போது


யான் = நான்

தருக்கி = தலைக் கனம் கொண்டு

தலையால் நடந்த = காலால் நடக்காமல் தலையால் நடந்த

வினைத் துணையேனை = வினைகளையே துணையாகக் கொண்ட  என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வினையேனுடைய = வினை உடையவனான என்

மனத் துணையே = மனதிற்கு துனையாணவனே

என் தன் வாழ் முதலே = என் வாழ்வின் முதலே. (போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பதும் அவர் வாக்கே )

எனக்கு = எனக்கு

எய்ப்பில்= நலிந்த நேரத்தில்

வைப்பே = (கிடைத்த ) சொத்தே

தினைத்துணையேனும் பொறேன் = சிறிது நேரம் கூட பொறுக்க மாட்டேன்

துயர் = துயர் தரும்

ஆக்கையின் = உடம்பின்

திண்  = வலிமையான

வலையே = வலையே 

Wednesday, April 2, 2014

நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி

நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி 


நம் புலன்கள்  தானே, நம்மால் கட்டுப் படுத்த முடியாதா என்று நாம் நினைக்கலாம்.  ஒன்றை கட்டுப் படுத்தினால் இன்னௌன்று வேறு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடும்.  ஒரு ஆசை போனால் இன்னொரு ஆசை வரும்.

பேராசை எனும் பிணியில் பிணிப்பட்டு என்பார் அருணகிரி.

அவை நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. நம்மோடு எப்போதும் போர் தொடுக்கின்றன.

அது வேண்டும்,  இது வேண்டும், என்று சதா சர்வ காலமும் நம்மை நச்சரித்துக் கொண்டே இருக்கின்றன.  அவை நம்மை படுத்தும் பாட்டை நாம் அறிந்து கொள்ளாவிட்டால் அவை இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி தளர்ந்து போவோம்.

என்னோடு சண்டை பிடிக்கும் புலன் வயப்பட்டு, உன்னை பிரிந்து அஞ்சி நின்றேன். ஒரு புறம் சண்டை போடும் புலன்கள். இன்னொரு புறம் உன் துணை இல்லாத தனிமை. இதற்கு நடுவில், இந்த அழகான பெண்கள். அவர்கள் மேல் உள்ள பற்றையும் விட முடியவில்லை.   சுடர் போல் ஒளி விடுபவனே, சுடுகாட்டுக்கு அரசனே, தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே, அணுக முடியாதவனே, என் தனிமையை நீக்கும் துனையாணவனே, என்னை விட்டு விடாதே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.

கொஞ்சம் சிக்கலான பாடல். சீர் பிரிப்போம்

அடர் புலனால் நின்னை பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே 
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.



பொருள்


அடர் புலனால் = அடுத்து வருகின்ற புலன்களால்

நின்னை பிரிந்து = உன்னை பிரிந்து (புலன்கள் பின்னால் போய் )

அஞ்சி = அச்சப் பட்டு

அம் சொல் = அழகிய சொல்

நல்லார் = நல்லவர்கள் (நல்ல பெண்கள் )

அவர் தம் = அவர்களின்

விடர் விடலேனை = தொடர்பை விட முடியாதவனை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விரிந்தே எரியும் = பரந்து சுடர் விட்டு எரியும்

சுடர் அனையாய் = சுடர் போன்றவனே

சுடுகாட்டு அரசே = சுடு காட்டு அரசே

தொழும்பர்க்கு அமுதே = தொழும் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனே 

தொடர்வு அரியாய் = தொடர முடியாதவனே, நெருங்க முடியாதவனே

தமியேன் = அடியவனான என்

தனி நீக்கும் = தனிமையை நீக்கும்

தனித் துணையே = ஒப்பற்ற துணையே
.
அவனல்லால் ஒரு துணை இல்லை. 


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பார் அபிராமி பட்டர். 

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.


என்பார் அருணகிரி நாதர் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
  
என்பது நாவுக்கரசர் வாக்கு 

நீங்கள், உங்கள் துணை என்று எதை அல்லது யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? 

சேர்த்து வைத்த செல்வமும், கணவன் / மனைவி, பிள்ளைகள் எது துணை ?

உன் பற்று அல்லால் ஒரு பற்று அல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே என்று ஓலமிடுகிறார்  பட்டினத்தார். 


Tuesday, March 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்  


நீங்கள் ஒரு பெரிய சம வெளியில் நிற்கிறீர்கள். உங்களைச் சுற்றி தூரத்தில் பெரிய மலைகள் இருக்கின்றன. திடீரென்று அந்த மலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து உங்கள் மேல் சண்டைக்கு வருகின்றன.

ஒரு மலையோடு சண்டை போட்டு வெல்வதே முடியாத காரியம். பல மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் என்ன செய்வீர்கள் ?

ஓடவும் முடியாது. ஓரிடத்தில் நிற்கவும் முடியாது....

அது போல ....நீங்கள் இது வரை சேர்த்து வைத்த வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றன....மலை போல ....

கொஞ்சமாகவா செய்திருக்கிறோம்...

அப்படி மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் எனக்கு பயமாக இருக்கிறது. என்னை "பயப்படாதே" என்று சொல்லி என்னை காப்பாற்று.

அந்த சமயத்தில் என்னை கை விட்டு விடாதே...என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இறைவனை வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு `அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.


Thursday, March 20, 2014

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ 


மரம் என்னவோ பெரிய மரம் தான்.

தீ என்னவோ சின்ன தீ தான்.

தீயை மரத்தில் வைத்தால் என்ன ஆகும் ? முதலில் மெதுவாக எரியும். நேரம் செல்ல செல்ல அந்த மரமே விறகாக தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த மரத்தை முழுவதும் எரித்து கரியாக்கிவிடும்....அது போல

இந்த புலன் ஆசைகள் என்ற தீ, உடல் என்ற மரத்தை மெல்ல மெல்ல எரித்து சாம்பாலாக்கி விடும்.

புலனாசைகளால் வெந்து நீராவோம்.

அப்படி வெந்து நொந்து இருக்கும் என்னை விட்டு விடாதே என்று பதறுகிறார் மணிவாசகர்.

பாடல்

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே


பொருள் 

பொதும்பு உறு = மரப் பொந்தினை அடைந்த 

தீப்போல் = தீயைப் போல

புகைந்து எரிய = புகை விட்டு எரிய

புலன் தீக் கதுவ = புலன்களாகிய தீ பற்றிக் கொள்ள, பற்றிக் கொள்ள

வெதும்புறுவேனை = வெதும்பி துன்பப் படுபவனான என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விரை ஆர் = மணம் வீசும் 

நறவம் = தேன்

ததும்பும் = ததும்பும்

மந்தாரத்தில் = மந்தாரம் என்ற மலரில்

தாரம் பயின்று, = இசை பயின்று

மந்தம் = மந்தமாகிய இசையை

முரல் வண்டு = ரீங்காரமிடும் வண்டு

அதும்பும், = அழுந்தும்

கொழும் தேன் = செழுமையான தேன்

அவிர் சடை = விளங்கும் சடையை கொண்ட

வானத்து அடல் அரைசே =  வானில் உள்ள வீரமிக்க அரசே

மரமே தீயை வைத்துக் கொள்வது போல, நமக்கு நாமே தீயை வைத்துக் கொள்கிறோம்.

எரிவது தெரியாமல், அதுவே சுகம் என்று இருக்கிறோம்.





Tuesday, March 11, 2014

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே


நமக்கு ஏதாவது மிக மிக மகிழ்ச்சியான ஒன்று நிகழ்ந்து விட்டால் நமக்கு தலை கால் புரியாது அல்லவா ? லாட்டரியில் ஒரு கோடி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்...எப்படி இருக்கும் நம் நிலை.

இறைவன் திருவருள் கிடைத்து விட்டாலோ ?

உன் கருணை என்ற தேனைப் பருகி தலை கால் தெரியாமல் களிப்பு கொண்டு கண்டதையும் செய்து  அலைகிறேன்.  நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் பித்து பிடித்து அலைகிறேன். அதுக்காக என்னை கை விட்டு விடாதே. முன்பு எனக்கு உன் திருவடிகளை தந்து அருள் செய்தது போல மீண்டும் உனக்கு பணி செய்ய என்னை கூவி அழைத்துக் கொள். சும்மா கூப்பிட்டால் எனக்கு காது கேக்காது. கூவி, சத்தம் போட்டு கூப்பிடு. அது மட்டும் அல்ல, அருள் பயிருக்கு நடுவே வளர்ந்துள்ள உலக இன்பம் என்ற களையை நீக்கி விடு என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.


பொருள் 

கண்டது செய்து = கண்டதையும் செய்து.

கருணை மட்டுப் பருகிக் = மட்டு என்றால் தேன். கருணை என்ற தேனைப் பருகி

களித்து = இன்புற்று

மிண்டுகின்றேனை  = இன்பத்தில் தத்தளிக்கும் என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 நின் = உன்

விரை  = மணம் பொருந்திய

மலர்த் தாள் = மலராகிய திருவடி

பண்டு தந்தால் போல் = முன்பு தந்தது போல

பணித்து = என்னை பணி கொள்ளுமாறு செய்தது போல

பணிசெயக் கூவித்து = மீண்டும் என்னை பணி செய்யுமாறு கூவி அழைத்து

என்னைக் கொண்டு = என்னை கொண்டு (பணி செய்வித்து )

என் எந்தாய் = என் தந்தையே

களையாய் = களைந்து விடு

களை ஆய = களை ஆன

குதுகுதுப்பே = சிற்றின்பங்களையே



Monday, March 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை


ஒரு பெரிய கரிய யானை உங்களை நோக்கி வேகமாக வருகிறது. உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும் ?

என்ன செய்யுமோ ? ஏது செய்யுமோ என்று  பயத்தில் வெல வெலத்துப்  போவீர்கள் தானே ?

ஒன்று அல்ல ஐந்து மதம் கொண்ட யானைகள் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் ?

ஐந்து புலன்களும் ஐந்து யானைகள் போன்றவை.   அவற்றிற்கு கட்டாயம் பயப்பட வேண்டும். நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டவை அவை.

யாரால் அதை தடுத்து நிறுத்தி, அவற்றை  அடக்கி, அந்த யானைகளிடம் இருந்து வேலை வாங்க முடியும் ?

அப்படி செய்யும் தகுதி கொண்டவன் மிகப் பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

ஆலகால விஷத்தையே அமுதமாக்கியவனுக்கு, இந்த யானைகளிடம் இருந்து நம்மை காத்து அவற்றை நமக்கு அடிமை கொள்ளச் செய்வது ஒண்ணும் பெரிய காரியம்  இல்லை.

பாடல்


அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

பொருள் 

அடல் =  வலிமையான  (அடலருணை திருக் கோபுரத்தே அந்த வாசலுக்கு - கந்தர் அலங்காரம் )

கரி போல் = யானையைப் போல  இருக்கும்

ஐம் புலன்களுக்கு = ஐந்து புலன்களுக்கு

அஞ்சி = அஞ்சி

அழிந்த என்னை = அழிந்த என்னை

விடற்கு அரியாய் =  விட  முடியாதவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே

விழுத் = பெருமை மிகுந்த

தொண்டர்க்கு அல்லால் = தொண்டர்கள் அல்லாதவர்களுக்கு

தொடற்கு அரியாய் = தொட முடியாதவனே

சுடர் மா மணியே = ஒளி  வீசும் மணி போன்றவனே

சுடு தீச் சுழல = சுழன்று எழும் தீ சுழல

கடல் கரிது ஆய் = கடலில் இருந்து

 எழு நஞ்சு  = எழுந்த நஞ்சை

அமுது ஆக்கும் = அமுது ஆக்கும்

கறைக்கண்டனே = கழுத்தில் கறை உள்ளவனே

விஷத்தை அமுது ஆக்கியவனுக்கு இது எல்லாம் ஜுஜுபி....



Sunday, March 9, 2014

நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர்

நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர் 


தயிர் கடையும் போது தயிர் மத்தின் இடையில் அகப்பட்டு அங்கும் இங்கும் அலையும். அதுக்கு நிம்மதி கிடையாது. ஒரு மத்து என்றால் அப்படி. அதுவே 5 மத்தாக இருந்தால் எப்படி இருக்கும் ? அந்தத் தயிர் என்ன பாடு படும் ?

அது போல ஐந்து குற்றங்கள் / குறைகள் / மலங்கள் என்பவற்றால் நாம் அலைக் கழிக்கப் படுகிறோம்.

இப்படி துன்பப்படும் என்னை என் குற்றங்களை களைந்து என்னை காப்பாற்று என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

பொருள் 

குலம் களைந்தாய்; = சுற்றத்தாருடன் எனக்கு இருந்த தொடர்பை களைந்தாய்.

களைந்தாய் என்னைக் குற்றம் = என் குற்றங்களை களைந்தாய்

கொற்றச் சிலை ஆம் விலங்கல் = மேரு மலையை வெற்றி பெரும் வில்லைக்

 எந்தாய், = என் தந்தை போன்றவனே

விட்டிடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே

பொன்னின் = பொன்னைப் போல்

மின்னு  = மின்னும்

கொன்றை = கொன்றை மலரை

அலங்கல் = மாலையாகக் கொண்டவனே

அம் தாமரை மேனி அப்பா = அழகிய தாமரை போன்ற உடலை கொண்டவனே

ஒப்பு இலாதவனே = ஒப்பு இல்லாதவனே

மலங்கள் ஐந்தால் = குற்றங்கள் ஐந்தால்

சுழல்வன் = சுழல்கின்றேன்

தயிரில் பொரு மத்து உறவே = தயிரில் பொருந்திய மத்தைப் போல



Wednesday, March 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


புலன்கள் புதுப் புது இன்பங்களை கண்டு திகைக்கிறது. அட, இப்படி கூட இருக்குமா என்று திகைக்கிறது. பின்  அதை அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப் படுகிறது. அதை அனுபவித்த பின், ஆஹா என்று திகைக்கிறது.

பின் சிறிது காலத்தில் இதுவா இன்பம், இந்த இன்பத்திற்கா இவ்வளவு அலைந்தேன் என்று திகைப்படைக்கிறோம்.

எல்லா இன்பங்களும் ஒரு நிலைக்கு அப்பால் சலிப்பைத் தரும். அவை நிரந்தரமானவை அல்ல. முதலில் இன்பம் போல் தோன்றினாலும் துன்பத்தில் போய் முடியும்.

அவை நம்மை தவறான வழியில் இட்டுச் செல்லும்.    அந்த பொய்யான பாதையில் செல்லும் என்னை கை விட்டு விடாதே.

நஞ்சை அமுதாக்கினவன் நீ. எனவே என் தவறுகளை நீ பொறுத்து என்னை நீ நல் வழியில் செலுத்துவது ஒன்றும் உனக்கு பெரிய காரியம் இல்லை.

பாடல்


புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.


பொருள் 

புலன்கள் திகைப்பிக்க = புலன்கள் என்னை திகைக்க வைக்க

யானும் திகைத்து = நானும் திகைத்து

 இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே = இந்த வாழ்க்கையில் பொய்யான வழிகளில்

விலங்குகின்றேனை = செல்லுகின்ற என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா ?

விண்ணும், மண்ணும், எல்லாம் = விண்ணும் மண்ணும் எல்லாம்

கலங்க = கலங்கும்படி

முந்நீர் = ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்று நீரால் நிறைந்த கடல், அதில் தோன்றிய 

நஞ்சு அமுது செய்தாய் = நஞ்சை அமுதாகச் செய்தவனே

கருணாகரனே! = கருணைக் கடலே

துலங்குகின்றேன் அடியேன் = பயந்து இருக்கும் அடியவனாகிய என்னை

 உடையாய் = என்னை ஆட்க் கொண்டவனே

என் தொழுகுலமே. = என் தொழுகைக்கு உரியவனே


Tuesday, March 4, 2014

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு 


நம்மிடம் பல வேண்டாத கொள்கைகள், செயல்கள், பழக்கங்கள் இருக்கின்றன. வேண்டாத என்றால் நம் இன்பத்திற்கு இடையுரான, நம் முன்னேற்றத்திற்கு தடையானவை.

இவற்றை எப்படி விடுவது, எப்படி நலனவற்றை ஏற்பது ?

நல்லன அல்லாதவற்றை விட்டு நல்லவற்றை எப்படி கைக் கொள்வது ?


வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கல் இது.

மாணிக்க வாசகர் வழி காட்டுகிறார்.

முதலில் தவறுகள் செய்யும் இடத்தை விட்டு விலக வேண்டும். கள்ளுக் கடையில் நின்று கொண்டு சாராயத்தை எப்படி விடுவது என்று யோசித்தால் நடக்குமா ?

சரி, தவறான சூழ்நிலையை விட்டு விலகி ஆயிற்று....அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

நல்லவர்கள் மத்தியில் போய் இருக்க வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். அவர்கள் செய்யும் செயல்களை, சொல்லுவதை கேட்க வேண்டும்.

நாள் ஆக நாள் ஆக நம்மை அறியாமலேயே கெட்டவை விலகி, நல்லன நிகழத் தொடங்கும்.


பாடல்

கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

பொருள் 

கொழு மணி = சிறந்த மணிகள் போன்ற 

ஏர் நகையார் = அழகிய சிரிப்பை கொண்ட பெண்கள் . ஏர் என்பதற்கு கூரிமையான, ஆழமாக மனதை உழும் என்று பொருள் கொள்ளலாமோ?


(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் 
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்)

கொங்கைக் = மார்புகள் என்ற 

குன்றிடைச் சென்று = இரண்டு குன்றுகள் இடையே சென்று

குன்றி = துவண்டு (பலம் குன்றி )

விழும் அடியேனை  = விழும் அடியவனாகிய என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா

மெய்ம் முழுதும் கம்பித்து = உடல் முழுதும் நடுங்கி

அழும் = கண்ணில் நீர் ஆறாக பெருக்கெடுக்கும்

அடியாரிடை = அடியவர்கள் மத்தியில்

ஆர்த்து வைத்து = என்னை வைத்து

ஆட்கொண்டருளி என்னை = என்னை ஆட் கொண்டு அருளி

கழு மணியே = தூய்மையான மணி போன்றவனே 

இன்னும் காட்டு = மேலும் காட்டுவாய்

கண்டாய் நின் புலன் கழலே = நான் முன்பு கண்ட உன் திருவடிகளை

இறைவன், மாணிக்க வாசகருக்கு தன் திருவடிகளை முதலில் காட்டி அருளினார். அதை மீண்டும் காட்டு என்கிறார்.

பெண் சுகம் என்ற சிற்றின்பத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடியை அடைய  அடியார்கள் மத்தியில் இருக்க வேண்டும். 

நீங்கள் இறைவனை நம்புகிறீர்களோ இல்லையோ. 

நீங்கள் அடியவர்களை நம்புகிறீர்களோ இல்லையோ.

ஒரு புறம் பெண் சுகம் என்ற சிற்றின்பம். மறு புறம் இறைவன் திருவடி என்ற பேரின்பம். 

இரண்டையும் இணைப்பது நல்லவர்களின் கூட்டு.

அல்லனவற்றை தாண்டி நல்லனவற்றை அடைய நல்லவர்களின் கூட்டு உதவும்  என்ற வரையில் நீங்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளலாம். 

தவறு செய்து பின் தன் காலைப் பிடித்த சந்திரனை இறைவன் தன் தலை மேல் தூக்கி  வைத்தான். 

யார் அறிவார், நீங்கள் பற்றித் தொடரும் நல்லவர்கள் உங்களை , நீங்களே எண்ணிப் பார்க்காத  இடத்திற்கு உங்களை கொண்டு ஏற்றி விடக் கூடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை என்பார் வள்ளுவர். 


Friday, February 28, 2014

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை 


குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கழித்து அதற்கு அந்த பொம்மைகளின் மேல் சலிப்பு வரும். அம்மாவை தேடும். அம்மாவைக் காணாவிட்டால் அழும். அம்மாவைக் கண்டவுடன் ஓடி சென்று அவளின் காலைக் கட்டிக்  கொள்ளும். அப்போதுதான் அதற்கு நிம்மதி, சந்தோஷம்.

குழந்தை மட்டுமா ?

நாமும் தான்.

பொம்மைகள் வேறு அவ்வளவுதான்.

நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.  பொங்கி வரும் கங்கை நீரில்  மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கை விட்டு விடாதே.

பாடல்


பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே


கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டு ஆங்கு  நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரு நீர் மடுவுள் மலைச் சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை வானக் கொழு மணியே


பொருள் 

பெரு நீர் = பெரிய நீர். பெருகி வரும் நீர்

அறச் = அற்றுப் போக.

சிறு மீன் = சிறிய மீன்

துவண்டு = நீரின்றி துவண்டு

ஆங்கு = அங்கு துடிப்பதைப் போல

 நினைப் பிரிந்த = உன்னை விட்டுப் பிரிந்த

வெரு = பயம் கொள்ளும் (வெருட்சி = பயம் )

நீர்மையேனை = கொள்ளும் என்னை 

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் கங்கை பொங்கி = பெரிய கங்கை பொங்கி

வரு நீர் = வெள்ளம் வருகின்ற போது

மடுவுள் = தேங்கிய நீரில்

மலைச்  = மலைத்து நிற்கும்

சிறு தோணி வடிவின் = சிறு தோணி போல

வெள்ளைக் குரு நீர் மதி = வெண்மையான பிறைச் சந்திரனை

பொதியும் = பொதிந்து வைத்து இருக்கும்

சடை = சடையைக் கொண்ட

வானக்  = வானில் உள்ள

கொழு மணியே = சிறந்த மணி போன்றவனே


அது ஏன் பிறை சந்திரன் ?

ஒரு முறை சந்திரன் தவறு செய்தான். நாளும் ஒரு கலையாக தேய்ந்து அழியும்படி  சபிக்கப் பட்டான். 

மூன்றே கலைகள் இருக்கும் போது கடைசியில் சிவனை தஞ்சம் அடைந்தான். 

அவர், அவனை மன்னித்து தன் தலையில் சூடிக் கொண்டார். அவன் அழிவு தவிர்க்கப் பட்டது. 

எவ்வளவு தவறு செய்து இருந்தாலும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் , பாவ விமோசனம் தருவான் அவன்.

காலில் விழுந்த சந்திரனை தலையில் தூக்கி  வைத்தார்.

இதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார், நிலவு உலாவிய நீர் மலி வேணியன் என்றார்.  நிலவு உலவுகிரதாம். ஏன் உலவமாட்டான் ? சிவனின் தலையில் அல்லவா இருக்கிறான் ? உலாத்தலுக்கு என்ன குறைச்சல் ? 

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; 
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
 
 

Wednesday, February 26, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு 




நாங்கூழ் புழு என்று ஒரு புழு  உண்டு.மண் புழு  என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த புழுவை எறும்புகள் சூழ்ந்து கொண்டு அதை கடித்து கடித்து தின்னும். அந்த புழுவால் ஓடவும் முடியாது. எறும்புகளை எதிர்த்து போராடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, வலி கொண்டு, துடித்து துடித்து சாகும். அந்த எறும்புகளுக்கே இரையாகும்.

அது போல இந்த ஐந்து புலன்கள் என்ற எறும்புகள் நம்மை நாளும் அந்த புழுவை எறும்பு தின்பது போல அரித்து  தின்கின்றன.

என்ன செய்வது என்று அறியாமல் அலைகின்றோம்.

அப்படி தனியாக அலையும் என்னை கை விட்டு விடாதே.

மார்கண்டேயனை அந்த கூற்றுவன் பற்ற வந்த போது உன் மலர் பாதங்களால் கூற்றுவனை உதைத்து அவனை ஒடுங்கப் பண்ணினாய்  நீ.

உணர்வு உள்ளவர்கள் பெறும் பெரியவனே. அடியார்கள் உன்னை விட்டு என்றும் நீங்காத பெருமை உள்ளவனே.

பாடல்

எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.


பொருள் 

எறும்பிடை = எறும்புகளிடையே

நாங்கூழ் = நாங்கூழ் என்ற புழு


என = அகப்பட்டது போல

புலனால் அரிப்புண்டு = புலன்களால் நாளும் அரிக்கப்பட்டு

அலந்த = அலைந்த

வெறும் தமியேனை = ஒன்றும் இல்லாத தனிமையானவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெய்ய கூற்று ஒடுங்க = கொடுமையான கூற்றுவன் ஒடுங்கும்படி

உறும் கடிப் போது = அடக்கிய மணம் பொருந்திய மலரை போன்ற திருவடிகளை உடையவனே . போது என்றால் மலர். கடி என்றால் சிறந்த, உயர்ந்த என்று அர்த்தம்

அவையே = அந்த திருவடிகளே

உணர்வு உற்றவர் = ஆழ்ந்த உணர்வு உள்ளவர்கள்

உம்பர் உம்பர் = உயர்ந்தவர்களுக்கு உயர்ந்தவர்கள்

பெறும் பதமே = அடையும் பதமே

அடியார் பெயராத பெருமையனே = அடியார்கள் உன்னை விட்டு என்றும் விலகாத  பெருமை உடையவனே



Monday, February 24, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா

நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா 


நம் புலன்கள் நம்மிலிருந்து வெளியே செல்வது மட்டும் அல்ல, வெளியில் இருப்பவற்றை உள்ளே இழுத்துக் கொண்டு வருகின்றன. நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பைப் போல புலன்கள் நம் மேல் சதா சர்வ காலமும் பற்றி ஏறி நம்மை காலி செய்கின்றன.

இந்த புலன்களால் என்ன செய்கிறோம் ?

இல்லாத பொய்களின் பின்னால்  போகிறோம்.உண்மையானவற்றை விட்டு விடுகிறோம்.

ஆசை. ஆசைப் பட்டதை அடைந்தவுடன் ஒரு ஆரவாரம். கிடைக்க வில்லை என்றால் சோகம். இப்படி புலன்களால் அலைகிறோம் .

அது மட்டும் அல்ல, இந்த புலன்கள் தப்பித் தவறி கூட நம்மை இறைவன் பக்கம் திருப்பாது. எப்போதும் சின்ன சின்ன சந்தோஷங்களின் பின்னேயே நம்மை விரட்டிக் கொண்டு இருக்கும்.


பாடல்


உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.


பொருள் 

உள்ளனவே நிற்க =  நிலையாக உள்ளவை ஒரு புறம் நிற்க

இல்லன செய்யும் = நிலை இல்லாதவற்றை செய்யும்

மையல் துழனி = ஆசை மற்று ஆரவாரம்

வெள்ளனலேனை = வெண்மை இல்லதாவனை. வெண்மை என்றால் தூய்மை. தூய்மை இல்லாதவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வியன் மாத் தடக் கைப் = பெரிய கை

பொள்ளல் = துளை உள்ள

நல் வேழத்து = நல்ல யானையின்

உரியாய் = தோலை உரித்து அதை உடையாக கொண்டவனே

புலன் = என் புலன்கள்

நின்கண் = உன்னிடம்

போதல் ஒட்டா = செல்வதற்கு விடாது

மெள்ளெனவே மொய்க்கும் = மெள்ள மெள்ள மொய்க்கும்

நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே = நெய்க் குடத்தை மொய்க்கும் எறும்பைப் போல

குடம்  பெரிது.எறும்பு  சின்னது.இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக எறும்புகள் குட நெய்யையும் காலி பண்ணி விடுவது போல புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை காலி செய்து விடுகின்றன.

நெய் குடம் பற்றி ஆழவார் பாடல் ஒன்று இந்த ப்ளாகில் இருக்கிறது. தேடிக் கண்டு பிடியுங்கள்.....






Sunday, February 23, 2014

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி 


எதை கொடுத்தாலும் அதை வைத்து மேலும் மேலும் பிழை செய்வது மனித இயல்பு. கிடைத்ததை வைத்து நல்லது செய்வது கிடையாது. மேலும் மேலும்  .தவறு செய்வது.

அது  .மட்டும் அல்ல. நாளும் நம் அன்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. எத்தனை பேரிடம் அன்பு செய்கிறோம் ? எவ்வளவு அன்பு செய்கிறோம் ?

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்  வள்ளலார்.அது அவரின் அன்பின் வீச்சு.

நாம் , நமக்கு நெருங்கியவர்களைக் கூட   முழுவதும் அன்பு செய்கிறோமா ?

இறைவா, நீ தந்ததை எல்லாம் பெற்றுக் கொண்டு, நாளும் தவறுகளையே செய்து, என் அன்பை சுருக்கி வாழும் இந்த வெற்று அடியேனை விட்டு விடாதே. நீ என்னை கை விட்டு விட்டால் நான் கெட்டுப் போவேன். உன்னை விட்டால் என்னை தாங்குபவர் யாரும் இல்லை. என் வாழ்வின் முதலே. எனக்கு என்று உள்ளவன் நீ மட்டும் தான்.....

பாடல்

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.


பொருள் 

பெற்றது கொண்டு = என்னவெல்லாம் கிடைக்குமோ அதை எல்லாம் பெற்றுக் கொண்டு

பிழையே பெருக்கி = நாளும் பிழைகளை பெருக்கி

சுருக்கும் அன்பின் = அன்பினைச் சுருக்கி

வெற்று அடியேனை = ஒன்றும் இல்லாத வெறுமையான அடியேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா?

விடிலோ = நீ என்னை கை விட்டு விட்டால்

கெடுவேன் = நான் கெட்டுப் போவேன்

மற்று = மேலும்

அடியேன் தன்னை = அடியவனாகிய என்னை

தாங்குநர் இல்லை = தாங்குபவர் யாரும் இல்லை

என் வாழ் முதலே = என் வாழ்வின் ஆதாரமான முதல் பொருளே

உற்று = துன்பங்களை உற்று , அனுபவித்து

அடியேன் = அடியவனாகிய நான்

மிகத் தேறி நின்றேன் = இந்த உலகம் இன்னது என்று அறிந்து தெளிந்து நின்றேன்

எனக்கு உள்ளவனே = எனக்கென்று உள்ளவன் நீயே 

எல்லாம் முடியாவிட்டாலும் அன்பை மட்டுமாவது பெருக்கிப் பாருங்கள். 


Saturday, February 22, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி

நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி 




இரண்டு யானைகள் சண்டை போடுகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த சண்டையில் அங்கு இருக்கும் சின்ன சின்ன செடிகள் என்ன ஆகும் ?

இரண்டு அல்ல, ஐந்து யானைகள் சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் சின்ன செடிகளின் நிலை என்ன ஆகும் ?

அது போல இந்த ஐந்து புலன்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் அகப்பட்ட குறுஞ் செடிகளாக நாம் கிடந்து அல்லல் படுகிறோம்.

ஒன்று நல்ல ருசியான உணவு வேண்டும் என்கிறது.
ஒன்று உடை வேண்டும், இசை வேண்டும், வீடு வாசல் வேண்டும், உடல் சுகம் வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று நம்மை பாடாய் படுத்துகிறது. அவைகளுக்கு தீனி போட நாம் கிடந்து அழைக்கிறோம்.


அப்படி கிடந்து அல்லல் படும் என்னை கை விட்டு விடாதே. என் மனதினில் இன்பத்தை வார்த்தவனே, என் உடலையும், எலும்பையும் உருக்கியவனே என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்

ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.


பொருள் 

ஆனை = யானைகள்

வெம் போரில் = ஈடுபட்ட பெரிய கொடிய போரில்

குறும் தூறு = குற்றுச் செடிகள்

எனப்  = என

புலனால் = புலன்களால்

அலைப்பு உண்டேனை = அலைக்கழிக்கப் பட்ட என்னை

எந்தாய் = என் தந்தையே

விட்டிடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வினையேன் மனத்துத் = வினை உள்ள என் மனதில்

தேனையும் = தேனையும்

பாலையும் = பாலையும்

கன்னலையும் = கரும்பின் சாற்றையும்

அமுதத்தையும்  ஒத்து  = அமுதம் போல சேர்த்து

ஊனையும் = ஏன் உடலையும்

என்பினையும் = எலும்பையும்

 உருக்காநின்ற = உருக்கி நின்ற

ஒண்மையனே = ஒளி மயமானவனே


இறைவனை தனிமையில் சிந்தித்தால் இனிமை வரும். அந்த இனிப்புக்கு முன்னால் மற்ற இனிப்புகள் எல்லாம் கசந்து போகும்.

"....மெய் அன்பினால் மெள்ள மெள்ள உள்ள...கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து  அறக்கைத்ததுவே" என்பார் அருணகிரிநாதர்.