Showing posts with label நற்றிணை. Show all posts
Showing posts with label நற்றிணை. Show all posts

Tuesday, December 4, 2018

நற்றிணை - அம்ம , நாணுதும்

நற்றிணை - அம்ம , நாணுதும்


அவள் ஒரு இளம் பெண். கடற்கரை ஓரம் அவள் ஊர். எந்நேரமும் அலையின் சத்தமும், தலை வருடும் கடல் காற்றும் உள்ள ஊர். வயதில் வரும் காதல் அவளுக்கும் வந்தது. காதலனோடு ஓடி ஆடி மகிழ்கிறாள். இருவரும் ஓடி வந்த களைப்புத் தீர ஒரு பபுன்னை மரத்தின் அடியில் வந்து நிற்கிறார்கள். இருவர் முகத்திலும் சந்தோஷம் கரை புரண்டு ஓடுகிறது.

அந்த சந்தோஷத்தில், அவன் அவளிடம் ஒரு முத்தம் கேட்கிறான். அவளுக்கும் ஆசை தான். இருந்தும் நாணம் அவளைத் தடுக்கிறது.

அவள் சொல்கிறாள்

"நான் சிறு பிள்ளையாக  இருந்த போது, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது , ஒரு நாள்  ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை.  என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய்யும் பாலும் ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை  போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு கட்டிப் பிடித்து இன்பம் அனுபவிக்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம்  " என்று.

பாடல்


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே- 5

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. 10

பொருள்


விளையாடு = என்னோடு விளையாடும்

ஆயமொடு = தோழிகளோடு

வெண் மணல் அழுத்தி = வெள்ளை மணலில் அழுத்தி

மறந்தனம் = மறந்து விட்டோம்

துறந்த = துறந்தும் விட்டோம்

காழ் = விதை

முளை = முளை விட்டு

அகைய = கிளை விட்டு பெரிதாகி

'நெய்  பெய் = நெய் ஊற்றி

தீம் பால் பெய்து = சுவையான பாலை இட்டு

இனிது வளர்ப்ப; = சிறப்பாக வளர்த்து வரும் போது

நும்மினும் சிறந்தது = உன்னை விட சிறந்தவள்

நுவ்வை ஆகும்' என்று = உன் தமக்கை ஆகும் என்று

அன்னை கூறினள் = என் தாய் கூறினாள்

புன்னையது நலனே = என்று அதன் சிறப்பை புனைந்து உரைத்தாள்

அம்ம! = அம்மா

நாணுதும் = எனக்கு வெட்கமாக இருக்கிறது

நும்மொடு நகையே = உன்னோடு சிரித்து மகிழ்ந்து இருப்பது

விருந்தின் பாணர் = விருந்தாக வந்த பாணன்

விளர் இசை கடுப்ப = மெல்லிய இனிய இசை போல

வலம்புரி = வலம்புரி சங்கு

வான் கோடு நரலும் = வானம் போல வெளுத்த , அது இசைக்கும்

இலங்கு நீர்த் = அப்படிப்பட்ட நீரை உடைய

துறை கெழு = நிலத்தின் தலைவனே

கொண்க!- = அறிந்து கொள்

நீ நல்கின் = நீ கொடுத்தால், நீ சம்மதித்தால்



இறைபடு நீழல் = நிறைந்த நிழல் தரும் மரங்கள் 

பிறவுமார் உளவே. = இங்கு நிறையவே இருக்கிறது

நாம், நமது சூழ்நிலையை மறந்து இயந்திரம் போல வாழ்கிறோம். நம் சூழ்நிலை
நம்மை பாதிக்கும். அதை நாம் உணர்வது இல்லை.

நாம் வாழும் வீடு, அது இருக்கும் இடம், அதன் சுற்றுப் புற சூழல் இவை எல்லாம்
நம்மை , நம் சிந்தனைகளை பாதிக்கும்.

பெரிய வீடு, சுத்தமான வீடு, தோட்டம் உள்ள வீடு,அமைதியான வீடு நம்மை
ஒரு விதத்தில் பாதிக்கும் என்றால், சிறிய வீடு, குப்பை போல இருக்கும் வீடு,
நெருங்கிய வீடுகளின் நடுவில் இருக்கும் வீடு வேறு விதத்தில் பாதிக்கும்.

இந்த பாதிப்புகளை அறியாமலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சுற்றுப் புறத்தை மேம் படுத்துங்கள்..உங்கள் மனமும் மேம்படும்.

தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நிலத்தை ஒட்டி அமைத்தார்கள். நிலம், அதில் பெய்யும் மழை, அங்கு வளரும் தாவரங்கள், அங்கே இருக்கும் விலங்குகள் எல்லாமே நம்மை பாதிக்கும். நம் எண்ணங்களை, சிந்தனைகளை மாற்றும். வீட்டில் ஒரு நாயோ, பூனையோ, கிளியோ வளர்ப்பவர்களுக்குத் தெரியும் அந்த விலங்குகள் எப்படி தங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது என்று.

அதே போலத் தான் வீட்டில் ஒரு துளசிச் செடியோ, வேறு எந்த செடியோ, கொடியோ நட்டு வைத்து வளர்த்துப் பாருங்கள், அவை வெளியில் மட்டும் அல்ல, உங்கள் மனதுக்குள்ளும் வேர் விட்டு வளர்வதை உணர்வீர்கள்.

இந்த பாடலின் பெண், தான் நட்ட மரம் தன் உணர்வுகளை எப்படி பாதிக்கிறது என்று சொல்கிறாள். அப்படி இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள்.

மரத்தைக் கூட உடன் பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்த சமுதாயம் நம்  சமுதாயம். 

குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம், உன்னோடு எழுவரானோம் என்று இராமன் கூறினான்.

அனைத்து மக்களையும் சகோதர அன்புடன் கண்டது அவன் மனம்.

இங்கே ஒரு படி மேலே போய் , தான் நட்டு வைத்த மரத்தை கூட தன் சகோதரியாக நினைக்கிறாள்.

நாணம் வந்தாலும், ஆசையும் விடவில்லை. இந்த மரம் வேண்டாம்...இது போல நிறைய  நிழல் தரும் மரங்கள் இருக்கின்றன என்று கூறுகிறாள். குறும்பு  கொப்பளிக்கும் இடம்.

யார் கண்டது அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின், பாட்டியின் பாட்டியாகக் கூட இருக்கலாம்.

நற்றிணை. சங்ககாலப் பாடல். எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டது.

அவளின் காதல், அவளின் நாணம், அந்த மரத்தின் மேல் அவள் கொண்ட அன்பு எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கிறது அல்லவா...அது தான் கவிதை.

கொடுத்து வைத்திருக்க வேண்டும்...இதையெல்லாம் படிக்க, இரசிக்க.

கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். 

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_4.html

Thursday, September 8, 2016

நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள்

நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள் 


அது ஒரு பழங்கால தமிழ் நாட்டின் ஒரு கிராமம். ஊரில் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. அந்த வேப்ப மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வசிக்கிறது. அப்போதுதான் முட்டை போட்டு இருக்கிறது. அந்த வேப்ப மரத்தின் நிழலில் கொஞ்சம் சிறுவர்கள் நெல்லிக் காயை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மாலை வந்து விட்டது. உழவர்களும் , பயிற்சிக்கு சென்ற வீரர்களும் வீடு  திரும்புகிறார்கள். வீட்டில் , இனிமையான அவள் விளக்கு ஏற்றுகிறாள். இரவு நீள்கிறது.

இதை விவரிக்கும் பாடல்

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே.


ஈன் பருந்து = ஈன்ற பருந்து. முட்டை இட்ட பருந்து

உயவும் = வருந்தவும்

வான் பொரு = வானளாவிய

நெடுஞ் = நீண்ட

சினைப் = கிளைகளைக் கொண்ட

பொரி = கடினமான

அரை வேம்பின் = வேப்ப மரத்தின் கிளையின்

புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல்

கட்டளை அன்ன இட்டு  = கட்டளை இட்டது போல

அரங்கு இழைத்து = விளையாடும் இடம் செய்து

கல்லாச் சிறாஅர் = கற்காத சிறுவர்கள்

நெல்லி வட்டு ஆடும் = நெல்லிக் கனியை விளையாடும் காயாகக் கொண்டு ஆடும்

வில் = வில்

ஏர் உழவர் = கலப்பையை கொண்ட உழவர்

வெம் முனைச் சீறூர்ச் = கூரிய முனையைக் கொண்ட சின்ன ஊர்

சுரன் முதல் வந்த = புஞ்சை நிலத்தில் முதலில் வந்த

உரன் மாய் = வலியைக் குறைக்கும்

மாலை = மாலைப் பொழுது

உள்ளினென் = நினைத்தேன்

அல்லெனோ = ஒரு வேளை நினைக்க வில்லையோ

யானே = நானே

உள்ளிய = நினைத்த

வினை முடித்தன்ன இனியோள் = வேலை செய்து முடித்ததை போன்ற இனிமையானவள்

மனை = இல்லத்தில்

மாண் = மாண்பொடு

சுடரொடு = விளக்கு ஏற்றி வைத்து

படர் பொழுது எனவே.= நீளும் பொழுதைப் போல

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வரிகளாக இருக்கிறதா ?

முட்டை போட்ட பருந்து, வேப்ப மர நிழல், விளையாடும் சிறுவர்கள், வீடு  திரும்பும் ஆண்கள். விளக்கு ஏற்றும் நேரம்.

இதில்  என்ன கவிதை இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும்.

கொஞ்சம் கரடு முரடான தமிழ்தான்.

 சிந்திப்போம்.

இந்த பாடலை எழுதியது யாராக இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி எழுதியதால் எழுதியது ஒரு ஆண் என்று புரிகிறது.

எந்த மனநிலையில் இருந்து எழுதி இருக்கிறான் ?

பிரிவின் சோகத்தில் இருந்து  எழுதுகிறான்.

எப்படி என்று  பார்ப்போம்.

முதலில், பருந்து முட்டை இட்டு வலியில் இருக்கிறது.  ஆனால்,அது அந்த மரத்தின்  அடியில் விளையாடும் சிறுவர்களுக்குத்  தெரியாது.அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது, கல்லாச் சிறார் என்றதால், அந்த காலத்தில் எல்லா பிள்ளைகளும் பள்ளிக் கூடம் போய் படிக்கவில்லை என்று தெரிகிறது.  படிப்பறிவு இல்லாத சிறுவர்கள். அவர்கள் எப்படி பருந்தின் வலியை உணர மாட்டார்களோ, அப்படி நானும் அவளின் சோகத்தை அறியாமல் பொருள் தேடி வெளியூர் போகிறேன் என்பது சொல்லாமல் சொன்ன கதை.

மூன்றாவது, மாலை நேரத்தில் வேலைக்குப் போன ஆண்கள் எல்லோரும் வீடு திரும்புகிறார்கள். உழவர்கள், வீரர்கள் எல்லோரும் வீடு திரும்பும் நேரம். தான் மட்டும் வீடு திரும்பாமல் எங்கோ தனிமையில் தவிக்கும் நிலை புரிகிறது அவனுக்கு.

நான்காவது, தனிமையில், அவள் விளக்கு ஏற்றி வைத்து காத்திருக்கும் சோகம் நம் மீதும் படர்கிறது.

 ஐந்தாவது, அவள் மிக மிக இனிமையானவள். அவளின் இனிமைக்கு ஒரு உதாரணம் கண்டு பிடித்த இந்த கவிஞனுக்கு ஒரு கோவில்  கட்டி கும்பிடலாம்.

" உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்"

நினைத்த வேலையை நல்ல படியாக முடித்தால் வரும் இன்பம் வருமே, அந்த இன்பத்தைப் போன்றவள் அவள் என்கிறான்.

ஒரு வீட்டை நன்றாக கட்டி, பால் காய்ச்சி குடி போகும் போது வரும்  இன்பம்,  பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து அவர்கள்  மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது வரும் இன்பம், இப்படி ஒரு பெரிய வேலையை நன்றாக முடித்த பின் வரும்  இன்பம் போன்றவள் அவள்.

அதிலும் குறிப்பாக "உள்ளிய வினை" அதாவது நினைத்த வேலை. யாரோ சொன்ன வேலை. நாம் நினைத்து செய்த வேலை.

அடடா, என்ன ஒரு உதாரணம்.

தமிழனாகப் பிறந்ததற்கு இன்னுமொருமுறை கர்வப் பட்டுக் கொள்ளலாம்.


ஆறாவதாக, வெளியூரில் இருக்கும் அவன் வேலை மும்முரத்தில் சில சமயம் அவளை நினைப்பதைக் கூட மறந்து விடுகிறான். அப்படி நினைக்காதது அவனுக்கு ஒரு குற்ற உணர்வை தருகிறது. எனக்காவது வேலை இருக்கிறது. அவள் பாவம் தனியாக இருப்பாளே என்று தவிக்கிறான்.


"உள்ளினென் அல்லெனோ"

முதலில் நினைத்தேன் என்கிறான். உடனே குற்ற உணர்வு வருகிறது. "அல்லெனோ' , நினைக்கவில்லையோ என்று தவிக்கிறான்.

ஏழாவதாக, பகல் எல்லாம் எப்படியோ போய் விடும். இந்த மாலைதான் படுத்தும்.  வலிமையை குன்றச் செய்யும் மாலை என்கிறான்.

உரன் மாய் மாலை


வலிமையை மாய்க்கும் (அழிக்கும்) மாலை.

கடைசியாக, இந்த மாலையும் அதை தொடர்ந்து வரும் இரவும் இருக்கிறதே, அது சட்டென்று முடியாமல் நீண்டு கொண்டே  போகிறதாம்.

"படர் பொழுது"

விளக்கு ஏற்றி வைக்கிறாள். விளக்கின் ஒளியில் நடக்கும் போது நிழல் எப்படி  நீண்டு தெரியுமோ அப்படி இந்த மாலையும் இரவும் நீண்டு கொண்டே போகிறது. உருவம் என்னவோ சின்னது தான், ஆனால், இந்த நிழல் மட்டும் நீண்டு கிடக்கும் . அது போல,  எப்போதும்  சின்னதாக இருக்கும் மாலை இப்போது நீண்டு கிடக்கிறது.

வரிக்கு வரி பிரிவின் சோகம் நிழலாடும் பாடல்.

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து வந்து, ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தை, பெயர் தெரியாத ஒரு ஆணையும்,பெண்ணையும், அவர்களின் பிரிவுத் துயரையும் நம் கண்   முன் கொண்டு வந்து நிறுத்துகிறதல்லவா இந்தப் பாடல்.

இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

அந்த  கிராமமும்,அந்த அந்தி  நேரமும், விளக்கேற்றிய அந்த வீடும், அதில்  பிரிவின் சோகத்தில் இருக்கும் அந்த பெண்ணும் உங்களுக்குத்   தெரிவார்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_8.html


Thursday, February 11, 2016

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்




நின்ற சொல்லரநீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.


தலைவன் உன்னை விட்டு பிரிந்து போகப் போகிறான் என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

அவர்களுக்குள் இன்னும் திருமணம் ஆகவில்லை. காதல்தான்.

அவனுக்கு, அவள் மேல் உள்ள காதலை விட, அவளுக்கு, அவன் மேல் உள்ள காதல்  அதிகம். அது மட்டும் அல்ல, அவன் தன்னை அளவு கடந்து நேசிக்கிறான்  என்றும் அவள் நினைக்கிறாள். மேலும், அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியாது என்பதையும் அவன் அறிவான் என்றும் நினைக்கிறாள்.


இவை எல்லாம் உண்மையா ? தெரியாது.

அவன் தன்னை விட்டுப் பிரிந்து போகப் போகிறான் என்று சொன்னவுடன், தலைவி  உருகுகிறாள்.

அப்படியெல்லாம் இருக்காது.

"அவன் எப்போதும் என் தோள்களை விட்டுப் பிரிய மாட்டான். இந்த உலகுக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவன் எனக்கு முக்கியம் என்பதை அவன் அறிவான். அவனை விட்டுப் பிரிந்தால், நான் வாடிப் போய்விடுவேன் என்பது அவனுக்குத் தெரியும். எனவே  அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான்"

சீர் பிரித்த பின்

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் 
என்றும் என் தோள் பிரிவு அறியலரே 
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின்ற்றி அமையா உலகம் போலத்
தம் இன்றி அமையா நன்மை நயந்து அருளி 
நறு நுதல் பசத்தல் அஞ்சி 


சிறுமை உறுபவோ செய்வது அறியலரே 

பொருள் 

நின்ற சொல்லர் = நிலைத்த சொல்லை உடையவர். பேச்சு மாறாதவர். ஒன்று சொன்னால், அதில் எப்போதும் நிலையாக நிற்பவர்

நீடு தோன்று இனியர் = எப்போதும் இனிமையானவர். நீடு என்பதற்கு நீண்ட நாட்களாக என்று பொருள் கொள்ளலாம். நீண்ட நாள் இனிமையாக இருப்பவர் என்பதால், இப்போதும் அந்த இனிமை மாறமாட்டார் என்ற பொருள் மறைந்து நிற்கிறது.

என்றும் = எப்போதும்

என் தோள் = என் தோள்களை

பிரிவு அறியலரே = பிரிவு என்ன என்றால் அறியாதவர். பிரிந்தால் அல்லவா , பிரிவு என்ன என்பதை அறிய

தாமரைத் = தாமரை மலரின்

தண் = குளிர்ந்த

தாது = மகரந்தமும்

ஊதி = பறந்து

மீமிசைச் = மேலே சென்று

சாந்தின் தொடுத்த = சந்தன மரத்தில் உள்ள

தீந் தேன் போலப் = சுவையான தேனைப் போல

புரைய மன்ற = புரை என்றால் உயர்ந்த என்று பொருள். புரைய மன்ற என்றால் உயர்ந்தது அன்றோ

புரையோர் கேண்மை = உயர்ந்தவர் நட்பு

நீரின்ற்றி அமையா உலகம் போலத் = தண்ணீர் இல்லாமல் இயங்க முடியாத உலகம் போல. பயிர் வளர்க, உயிர் வளர்க நீர் எவ்வளவு முக்கியமோ அவன் எனக்கு அவ்வளவு முக்கியம். நீர் இல்லாவிட்டால், பயிர் வாடி, வதங்கி கருகி விடும். அது போல, அவன் இன்றி நான் வாடி வதங்கி இறந்து போய் விடுவேன். மழைத் துளி விழுந்தவுடன் செடிகள் சிலிர்த்து புத்துயிர் பெற்று விளங்கும். அது போல, அவன் வந்தால் நான் மலர்ந்து, சிலிர்த்து புதுப் பொலிவுடன் இருப்பேன்.

தம் இன்றி = அவர் இன்றி

அமையா = என்னால் உயிர் வாழ முடியாது

நன்மை நயந்து அருளி = என் மேல் அன்பு வைத்து நன்மையை விரும்பி அருளிச் செய்த

நறு நுதல் = என் நெற்றி

பசத்தல் அஞ்சி = பசலை நிறம் அடைவதை நினைத்து



சிறுமை உறுபவோ = என்னை விட்டுப் பிரியும் அந்த சிறிய செயலை

செய்வது அறியலரே = செய்வது எப்படி என்று அறிய மாட்டார்

தன்னை விட்டு அவன் பிரியப் போகிறான் என்ற கவலையால் இவற்றை சொல்கிறாள்  என்பது பாட்டில் நேரடியாக இல்லை. அது ஊடாடும் சோகம்.

கவிதை என்பது வார்த்தைகளைத் தாண்டி, வரிகளைத் தாண்டி, உள்ளாடும் உணர்வு.

அந்த உணர்வு , இந்தக் கவிதையில் உங்களுக்குப் புரிந்தால், நீங்கள் பாக்கியசாலிகள்.



Thursday, February 4, 2016

நற்றிணை - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

நற்றிணை - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


பெண்கள், திருமணம் முடிந்த பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். திருமணத்திற்கு முன், தங்கள் வீட்டில் அந்த பெண்கள் மிக மிக செல்லமாக வளர்க்கப் பட்டிருப்பார்கள். திருமணம் ஆன பின் வீட்டை விட்டு போய் விடுவாளே என்று பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் செல்லம் அதிகம்தான் வீட்டில். கேட்டது எல்லாம் கிடைக்கும், ரொம்ப வேலை சொல்வது கிடையாது...கிட்டத் தட்ட இராணி மாதிரிதான் நடத்துவார்கள்.

திருமணம் ஆன பின், கணவன் வீட்டில் இந்த செல்லம் எல்லாம் நடக்காது. வசதியான வீடாக இருந்தால் கூட, மருமகளுக்கு உடனே அவ்வளவு செல்வாக்கும் அதிகாரமும் வந்து விடாது. அது வரை அந்தப் பெண் கொஞ்சம் அடங்கியும், பொறுமையுடனும்தான் இருக்க வேண்டும்.

போன இடம் கொஞ்சம் வறுமையான இடமாக இருந்தால், இன்னும் கஷ்டம்.

இங்கே, நற்றிணையில், பணக்கார வீட்டுப் பெண், ஒரு ஏழை வீட்டில் வாக்கப் பட்டுப் போகிறாள். திருமணம் முடிந்த கொஞ்ச நாள் கழித்து, அந்தப் பெண்ணின் தாயார் , தன் மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் என்று காண்பதற்குச் செல்கிறாள்.

புகுந்த வீட்டில் வறுமை. மூணு வேளை சாப்பாடு கூட கிடையாது.  அதை உண்டு, அந்தப் பெண் மகிழ்வாக இருக்கிறாள்.

நம் வீட்டில், தேன் போல சுவைக்கும் உணவை வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சாப்பிட வா என்றாள் வர மாட்டேன் என்று அங்கும் இங்கும் ஓடிய இந்தச் சின்னப் பெண், எப்படி இந்த மாதிரி மாறி விட்டாள் . இந்த அறிவும், ஆசாரமும் இவ எப்ப படித்தாள் என்று தாய் வியக்கிறாள்.

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 அழகான ஒரு கிராமம். அதில் ஒரு பணக்கார் வீடு. அந்த வீட்டில் ஒரு அழகான  ஒரு பெண் குழந்தை. செல்லமோ செல்லம். அவளை பார்த்துக் கொள்ள தனி வேலைப் பெண்கள். அவளுக்கு சோறு ஊட்டுவது என்றால் எளிதான காரியம்  அல்ல.தங்கக் கிண்ணத்தில் பாலும் தேனும் சேர்த்து எடுத்துக் கொண்டு சாப்பிடுமா சாப்பிடுமா என்று வந்தால், ஒரே ஓட்டம் ஓடி விடுவாள். வீட்டின் வெளிய நிறைய மல்லிகை,முல்லை பந்தல் எல்லாம் இருக்கிறது. அந்த பந்தலுக்குள் ஓடி விடுவாள். இந்தப் பணி பெண்கள் அவளை துரத்திக் கொண்டு ஓடுவார்கள்.

திருமணத்திற்கு பின், மூணு வேளை கூட உணவு கிடையாது. இருந்தும், தந்தை வீட்டு   செல்வத்தை  நினைக்காமல், புகுந்த வீட்டில் மகிழ்வோடு இருக்கிறாள்.




பாடல்
   

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே

Tuesday, September 17, 2013

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு 


நற்றிணை , 400 தனிப் பாடல்களை கொண்டது. அந்த கால தமிழர்களின் வாழ்கையை படம் பிடித்து  காட்டும்  நூல்.

அதில் ஒரு பாடல்.....

தலைவி அவளுடைய தோழியிடம் கூறுகிறாள்.

"..அவன் சொன்ன சொல் தவற மாட்டான். எப்போதுமே இனியவன். கட்டி அணைக்கும் என் தோள்களை என்றும் பிரியாதவன். தேன் போல இனிமையானவன். எப்படி இந்த உலகம் நீர் இல்லாமல் வாழ முடியாதோ, அது போல அவன் இல்லாமல் நான் வாழ முடியாது என்று அவன்  அறிவான். அவன் என்னை பிரியும் அந்த சிறுமையான செயலை ஒரு போதும் செய்ய மாட்டான். "

பாடல்


நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!


பொருள்

நின்ற சொல்லர் = சொன்ன சொல் தவறாதவன். அவன் சொன்ன சொல் என்றும் நிலைத்து இருக்கும்.  ஒரு தடவை ஒன்று சொன்னால் அதில் இருந்து மாற மாட்டான்.

நீடு தோறு இனியர் = ரொம்ப இனிமையானவன். நீடு என்றால் நீண்ட, ரொம்ப நாள், என்று பொருள். 

என்றும் என் தோள் பிரிபு அறியலரே = என் தோள்களை விட்டு பிரியவே மாட்டான்


தாமரைத் = தாமரை மலரில் 

தண் = குளிர்ச்சியான

தாது ஊதி = மகரந்தப் பொடிகளை ஊதி. ஊதி என்றால் துளைத்து, நுழைந்து, உறிஞ்சி  என்று பொருள்

மீமிசைச் = உயர்ந்த இடத்தில்

சாந்தில் = சந்தன மரத்தில்

தொடுத்த தீம் தேன் போல = சேர்த்து வைத்த சுவையான தேனைப் போல

புரைய மன்ற = நிச்சயமாக உயர்ந்தது

புரையோர் கேண்மை = உயர்ந்த அவனின் நட்பு அல்லது உறவு

நீர் இன்று அமையா உலகம் போலத் = நீர் இல்லாமல் அமையாத உலகம் போல

தம் இன்று = அவன் இன்றி


அமையா நம் நயந்தருளி = அமையாத நம்முடைய நன்மையைக் கருதி, அருள் செய்து

நறு நுதல் பசத்தல் அஞ்சிச் = என் நெற்றி பசலை நிறம் அடையும் என்று அஞ்சி

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! = என்னை பிரியும் அந்த சிறிய செயலை  செய்வானா ? அவனுக்கு அதைச் செய்யத் தெரியாது

சந்தன மரத்தில் உள்ள தேன் போல அவன் காதல் உயர்ந்தது. கெட்டுப் போகாதது.