Showing posts with label கலித்தொகை. Show all posts
Showing posts with label கலித்தொகை. Show all posts

Friday, March 1, 2019

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா


மனித உணர்ச்சிகள் நுண்மையானவை. அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த மிகுந்த திறமை வேண்டும். மனதில் நினைப்பதை சரியாகச் சொல்லத் தெரியாமல், ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி, எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.

ஆண் பெண் உணர்வு என்பது மிக நுட்பமானது. மிகவும் அந்தரங்கமானது. பெண்ணுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், ஒரு நாணம், ஒரு பயம், ஒரு தயக்கம் அவளை எப்போதும் பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, அவள் சொல்வதில் பாதி உண்மை, மீதியை நாம் ஆண்  தேடி புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தவறாக புரிந்து கொண்டால், அதுவும் சிக்கல். என்ன

கலித்தொகை. பாலைக் கலி.

அற்புதமான பாடல்.

தலைவி, தன் தோழியிடம் சொல்கிறாள். காதல், காமம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதை எவ்வளவு நளினமாக, நாசூக்காக, ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்கிறாள் என்று பாருங்கள்.

"பல்லு கொஞ்சம் கூர்மையானது தான். முள்ளு போல இருக்கும். இருந்தாலும் குத்தாது. குத்தினாலும் வலிக்காது. அந்த பற்கள் நிறைந்த வாயில் இருந்து ஊறும் நீர், கள்ளை விட இன்பம் தரும் என்று சொல்லும் அவர், அதோடு நிற்காமல், என் உடையையும் திருத்துவார். ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு ஒண்ணும் தெரியல" என்கிறாள் பாவம் போல.

பாடல்

முள்ளுறழ்  முளை  யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்
கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ
ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முள்ளு உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை 
கள்ளினும் மகிழ் செய்யும் என உரைத்து அமையார் என் 
ஒன் ஒள்  இழை திருத்துவார் காதலர் மற்று 
அவர் உள்ளுவதென் கொல் அறியேன் என்னும் 

பொருள்


முள்ளு = முள்

உறழ் = மாறிய, மாறுபட்ட. முள்ளு மாதிரி இருக்கும், ஆனா முள்ளு இல்லை

முளை = முனை ,

எயிற்று = எயிறு என்றால் பல்

அமிழ்து ஊறும் = அமிழ்து ஊறும்

தீ நீரை  = தீ நீரை

கள்ளினும் = கள்ளை விட

மகிழ் செய்யும் = மகிழ்ச்சி தரும்

என உரைத்து = என்று சொன்னதோடு

அமையார் = சும்மா இருக்க மாட்டார்

என் = என்னுடை

ஒன் ஒள்  இழை = ஒள் என்றால் ஒளி பொருந்திய, shining.  இழை என்றால் ஆடை. சிறந்த பள பளப்பான ஆடை

திருத்துவார் = சரி செய்வார்

காதலர் = காதலர்

மற்று  = மேலும்

அவர் = அவர்

உள்ளுவதென் = மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ

கொல் = அசைச் சொல்

அறியேன் = எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

என்னும் = என்று சொல்லுவாள்



"முளை எயிற்று அமிழ்து ஊறும்"

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்பது திருமதிரம்.

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

இந்து என்றால் சந்திரன்

சந்திரனின் இளம் பிறையை போன்ற பல்லை (தந்தத்தை) உடைய விநாயகரை போற்றுகிறேன் என்கிறார் திருமூலர்.



"தீ நீர்"

சூடான நீர்.  குளிர்ச்சிதான். இருந்தாலும் கொஞ்சம் சூடும்தான். என்ன ஒரு வார்த்தை பிரயோகம்.

அவனை பார்ப்பதற்கு என்றே நல்லா உடை உடுத்திக் கொண்டு போய் இருக்கிறாள்.

அவன் அந்த ஆடையை "திருத்தினானாம்". எதுனால அப்படி செய்தான்னு எனக்குத் தெரியலை என்கிறாள். பாவம் போல.

ஏன் என்று சொல்லி இருந்தால், அது மூன்றாம் தர காம பத்திரிக்கையாகி இருக்கும். தெரியாது என்று சொன்னதில் அந்த இலக்கியம் உயர்ந்து நிற்கிறது.

காமத்தை எவ்வளவு நளினமாக, மென்மையாக வெளிப்படுத்துகிறது இந்த இலக்கியங்கள்.

மற்றதை எல்லாம் விட்டு விடுவோம்.

உணர்ச்சிகளை மென்மையாக, முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது என்று  இதில் இருந்து பாடம் படிப்போம். அது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post.html

Sunday, September 28, 2014

கலித்தொகை - இளமையும், வாழ்கையும்

கலித்தொகை - இளமையும், வாழ்கையும் 


இளமை கொஞ்ச காலம்தான் இருக்கும். அந்த நேரத்தில்தான் பொருள் தேடவும் வேண்டி இருக்கிறது. பொருள் தேடப் போனால் மனைவியை விட்டு பிரிந்து போக வேண்டும். பொருள் தேடி வந்த பின் கணவன் மனைவி இருவரும் வயதாகிப் போகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போகிறது.

பொருள் இல்லாமலும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

என்ன தான் செய்வது.

இந்த சிக்கல் காலம் காலமாய் தொடர்கிறது.

கலித்தொகை, அப்படி ஒரு தலைவனையும் தலைவியையும் படம் பிடித்து காட்டுகிறது.

தலைவன் பொருள் தேடப் போனான். தனக்கோ, தன் குடும்பத்திற்கோ அல்ல...வறுமையினால் தங்களிடம் வந்து பொருள் வேண்டுவோருக்கு கொடுக்க தலைவன் பொருள் தேடப் போனான். அப்படி பொருள் தேடப் போன தலைவனே, நீ தேடிக் கொண்டு வரும் பொருள் பெரிய பொருளாகுமா ? உன் கற்பு மாறாத மனைவியின் இளமை என்ற ஒரு பொருள் போய் விடுமே. அதை விட நீ தேடிக் கொண்டு வரும் பொருள் பெரியதா என்று கேட்பது போல இருக்கிறது இந்தப் பாடல்.


பாடல்  

தொலைவாகி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென
மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ
நிலைஇய கற்பினா ணீநீப்பின் வாழாதாண்
முலையாகம் பிரியாமை பொருளாயி னல்லதை

சீர் பிரித்தபின்

தொலைவாகி இரந்தோருக்கு ஒன்று ஈயாமை இழிவென 
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ ?
நிலை இய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் 
முலை அகம் பிரியாமை பொருளாயின் அல்லதை

பொருள்

தொலைவாகி = அயல் நாடு சென்று

இரந்தோருக்கு = உன்னிடம் யாசகம் கேட்போருக்கு

ஒன்று ஈயாமை = ஒன்று கொடுத்து உதாவமல் இருப்பது

இழிவென = இழிவான செயல் என்று எண்ணி

மலை இறந்து = மலைகளைத் தாண்டி

செயல் சூழ்ந்த = வேலை செய்து கொண்டு வரும்

பொருள் பொருளாகுமோ ? = பொருள் ஒரு பொருளாகுமோ ?

நிலை இய கற்பினாள் = நிலைத்த கற்பினை உடைய

நீ நீப்பின் வாழாதாள் = உன்னை விட்டு நீங்கினாள் உயிர் வாழதவளான உன் மனைவியின்

முலை அகம் பிரியாமை = இளமையான அழகான மார்புகளை விட்டு பிரியாமல் இருக்கும் அந்த இன்பத்தை விட 

பொருளாயின் அல்லதை = சிறந்த பொருள் அல்லாத பொருள்களை


நீ கொண்டு வரும் பொருள் ஒன்றும் பெரிதல்ல, மனைவியோடு ஒன்றாக இருந்து வாழ்வதே பெரிது என்று சொல்வது போல அமைந்து  இருக்கிறது.

கலித் தொகையைப் பற்றி கூறும்போது "கற்றறிந்தோர் ஏற்றும் கலி" என்று கூறுவார்கள்.

இந்த பாடலில் எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.


1. இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று சொல்வது இழிவு என்று நம் சமுதாயம்  நினைத்து வாழ்ந்திருக்கிறது. கைகேயின் மனதை மாற்ற நினைத்த கூனி கூறுவாள் "அடியே கைகேயி, நாளை இராமன் முடி சூடினால், அரண்மனை  செல்வம் அனைத்தும் கோசலையிடம்  போய் விடும். உன்னிடம்  உதவி என்று  வருபவர்களுக்கு நீ என்ன சொல்லுவாய் , கோசலையிடம் போய் நீ கையேந்தி நிற்பாயா, அல்லது உன்னிடம் உதவி என்று வருபவர்களிடம் நீ பதிலுக்கு இல்லை என்று  சொல்லுவாயா அல்லது அந்த நிலையை நினைத்து இதயம் வெடித்து இறப்பாயா" என்று கேட்கிறாள். கைகேயியால் நினைத்துப்  பார்க்க முடியவில்லை அந்த மாதிரி ஒரு நிலையை.


‘தூண்டும் இன்னலும் வறுமையும்
    தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு,
    இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ?
    விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ?
    எங்ஙனம் வாழ்தி?


இந்த மண் மீது பிறக்கும் போது கொண்டு வந்தது ஒன்றும் இல்லை. இந்த உலகை விட்டு போகும் போது கொண்டு போகப் போவதும் ஒன்றும் இல்லை. இதற்கிடையில் கிடைத்த செல்வம் எல்லாம் சிவன் கொடுத்தது என்று எண்ணி மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு என்னத்தச் சொல்ல என்று வருந்துகிறார் பட்டினத்தடிகள்.


பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.


இதையே சொல்ல வந்த வள்ளுவரும், 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 

2. பொருள் தேடும் புறத்திணையும், தலைவன் தலைவி அன்போடு ஒன்றி வாழும் அகத்திணையும் ஒன்றாக்கிக் காட்டுகிறது இந்தப் பாடல்.


3. எது முக்கியம் ? பொருள் பொருள் என்று நாளும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து  விட்டு நிற்கிறோம். பொருள் வேண்டியதுதான். அதற்காக உறவுகளை  உதறித் தள்ள வேண்டியது இல்லை. பொருள் எதற்க்காக சேர்கிறோம்  ? உறவுகளுக்காகத்தானே ? 

4. ஒரு பிச்சைகாரன் நம்மிடம் பிச்சை கேட்டால் பொதுவாக நாம் என்ன சொல்லுவோம் " சில்லறை இல்லை" என்று சொல்லுகிறோம். இல்லை என்று சொல்லுபவனிடம்  நாமும் இல்லை என்று சொல்கிறோம். அது இழிவு என்று நினைத்து  வாழ்ந்தது நம் சமுதாயம்.  கொடுத்து வாழ்ந்த சமுதாயம். 


5. பொருள் தேடும் போது இளமை போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது  என்று அறிவுறுத்துகிறது.

நல்ல பாடல் தானே ?


Friday, January 25, 2013

கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


தோழி: என்னடி, ரொம்ப dull -ஆ இருக்க ? உடம்பு கிடம்பு சரியா இல்லையா ?

அவள்: இல்லையே, நான் நல்லாதானே இருக்கேன்...

தோழி: மூஞ்சி, உன்னை பார்த்தாலே தெரியுது..என்னமோ சரி இல்ல..சொல்லு என்ன விஷயம்...

அவள்: ஒண்ணும் நேத்து அவன் கோவிச்சிக்கிட்டு போய்ட்டான்....

தோழி: அதச் சொல்லு முதல்ல...என்ன ஆச்சு...நீ என்ன சொன்ன 

அவள்: பின்ன என்ன..எப்ப பார்த்தாலும் சின்ன பையன் மாதிரி...ஒரு வயசுக்குத் தகுந்த பேச்சு வேண்டாம்...

தோழி: என்ன சொல்லிட்டானு நீ இப்படி குதிக்கிற....

அவள்: நேத்து சாயங்காலம் ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும்... பொழுது போகாம நம்ம friends  க கூட மண்ணு வீடு கட்டி விளையாடிகிட்டு இருந்தோம்...தொரை அப்படியே அந்த பக்கம் வந்து "...என்ன வீடு கட்டி விளையாடுறீங்களா ...நானும் வரட்டுமா வீடு கட்ட" அப்படினான்....

தோழி: அதுக்கு நீ என்ன சொன்ன ?

அவள்: இருக்க ஒரு சொந்த வீடு இல்ல...இங்க வீடு கட்ட வந்துடியாக்கும் ...அப்படின்னு சொன்னேன் 

தோழி: உனக்கு இது தேவையா ? அப்புறம் ?

அவள்: இந்தா பூ...உன் தலைல வச்சு விட்டா என்று ஆசையோடு கேட்டான்...

தோழி: சரின்னு சொல்ல வேண்டியது தானே...நீ என்ன சொன்ன ?

அவள்: யாரோ கொடுத்த பூவை கொண்டுவந்து என் தலைல ஒண்ணும் வைக்க வேண்டாம், அப்படின்னு சொன்னேன் 

தோழி: பாவம்டி அவன்...மூஞ்சியே வாடி போயிருக்குமே அவனுக்கு ...

அவள்: யாருக்கு அவனுக்கா ? ஒண்ணும் இல்ல...அதுக்கு அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா...வெட்கம் கேட்டவன்...இந்த ஆம்பிளைகளுக்கு வெட்கமே கிடையாதா...சீ சீ....

தோழி: என்ன தான் சொன்னான்...முத்தம் தரட்டுமானு கேட்டானா ?

அவள்: அப்படி கேட்டிருந்தால் கூட பரவாயில்ல...சொல்லவே என்னவோ போல இருக்கு...உன் மார்பின் மேல் என் பேரை எழுதட்டுமா ? அப்படின்னு கேக்குறான்...அவனுக்கு எழுதுறதுக்கு வேற இடமா இல்ல...சரியான ஜொள்ளு பார்ட்டி 

தோழி: உன்கிட்ட தான கேட்டான்...சரின்னு சொல்லிருக்க வேண்டியது தான....அப்புறம் நீ என்ன தான் சொன்ன ?

அவள்: எனக்கு வந்த கோவத்திற்கு....அது எல்லாம் முடியாது...கல்யாணத்திற்கு அப்புறம் தான் எல்லாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன் 

தோழி: ஐயா உடனே கோவிச்சிக்கிட்டு போயிட்டாராக்கும் ? அம்மாவுக்கும் மூடு அவுட்டா ? 

அவள்: அவன் அப்படி கேட்டிருக்கக் கூடாது தானே ? நீ என்ன சொல்ற ?

தோழி: நான் என்ன சொல்ல...சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப வந்து என் கிட்ட யோசனை கேக்குற...

அவள்: எனக்காக அவன் கிட்ட சொல்லி, முறைப்படி எங்க வீட்டுல வந்து பொண்ணு கேக்க சொல்லுவியா...ப்ளீஸ் டி...எனக்காக....

(சொன்னா  நம்பணும்...இது கலித்தொகையில் வரும் பாடல்....பாடல் கீழே...)
 
 
 
   

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

Saturday, May 12, 2012

கலித்தொகை - தாயின் மன நிலை


கலித்தொகை - தாயின் மன நிலை

இலக்கியங்கள் கடவுள்களையும், மன்னர்களையும், வீர சாகசம் புரிந்தவர்கையும் பேசிய அளவுக்கு சாதாரண மனிதர்களைப் பேசுவது இல்லை.

அவர்களின் கவலை, ஆசைகள், கனவுகள் இவற்றைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப் படுவது இல்லை.

தமிழில் கலித்தொகை சற்று வித்தியாசமான ஒரு இலக்கியம்.

இது சாதாரண மனிதர்களைப் பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி, அவர்களின் வாழ்கை சிக்கல்களைப் பற்றி பேசுகிறது.

அவள் ஒரு பெண்ணின் தாய்.

அந்தப் பெண்ணோ, அவள் காதலனோடு சென்று விட்டாள்.

ஒரு வேளை தந்தையும், உறவினர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையோ என்னவோ.

என்ன இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா ?

அந்தத் தாய், தன் மகளை தேடித் போகிறாள்.

அவள் எப்படி இருக்கிறாளோ, என்ன ஆனாளோ என்று கவலையோடு தேடுகிறாள்.

எதிரில் ஒரு புலவர் வருகிறார். அவர், அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பயபடாதே, உன் மகள் ஒரு நல்ல ஆண் மகனைத் தேர்ந்தெடுத்து அவனோடு கற்பு நெறியில் சென்று இருக்கிறாள். கவலைப் படாதே என்று.


உன் மகள் என்னைக்கு இருந்தாலும் உன்னை விட்டு போக வேண்டியவள் தானே ?

மலையில் பிறந்தது என்பதற்காக சந்தனத்தை யாரும் அரைத்து மலைக்கு பூசுவது இல்லை.

கடலில் பிறந்தது என்பதற்காக முத்தை யாரும் எடுத்து மாலையாய் கோர்த்து கடலுக்கே அணிவிப்பது இல்லை.

யாழில் இருந்து இசை பிறந்தாலும், அந்த இசை யாழுக்கு சொந்தமில்லை 
அது போல

உன் மகள் உன்னிடம் இருந்து வந்தாலும், அவள் உனக்கு சொந்தமில்லை.

அவள் ஒரு நல்ல துணையை தான் தேடித் போயிருக்கிறாள். ஒன்றும் கவலைப் படாதே என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.