Showing posts with label இராமானுஜர் நூற்றந்தாதி. Show all posts
Showing posts with label இராமானுஜர் நூற்றந்தாதி. Show all posts

Tuesday, January 18, 2022

இராமாநுச நூற்றந்தாதி - வேதத்தின் பொருள்

 இராமாநுச நூற்றந்தாதி - வேதத்தின் பொருள் 


வேதத்தின் உண்மையான பொருள் என்ன? 


எந்த மொழிக்கும் ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலான சமயங்களில் சொல்ல நினைத்தது வார்த்தைகளில் வராது. நாம் ஒன்று நினைத்து சொல்வோம். கேட்பவர் வேறு மாதிரி புரிந்து கொள்ளலாம்.  இந்தச் சிக்கல் எவ்வளவு பெரிய மகான்களுக்கும் உண்டு. 


வேதத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது? வேதத்தை எழுதியது யார்? அவர் வேறு ஏதாவது நூல் செய்திருகிறாரா? விரிவுரை, பொழிப்புரை என்று ஏதாவது உரை இருக்கிறதா என்றால் இல்லை. 


ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் இது தான் வேதம் சொல்கிறது என்று சொல்கிறார்கள்? யார் சொல்வதை நம்புவது? எல்லோரும் பெரிய மகான்கள் தான், படித்தவர்கள்தான், ஞானிகள்கள் தான். இருந்தும் ஒருவருக்கு ஒருவர் முரண்பாடான கருத்துக்களை சொன்னால், நாம் யார் சொல்வதை பின்பற்றுவது?


உதாரணமாக,


ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு இருக்கிறது. எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.


இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு  என்பதில் பல்வேறு விதமான கருத்துகள் இருக்கின்றன. 


ஜீவாத்மாவை யார் படைத்தது? எதில் இருந்து அது படைக்கப்பட்டது, படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன, நோக்கம் நிறைவேறாமல் தடுப்பது எது? ஜீவாத்மா மூலம் தான் அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமா?  பரமாத்மா நின்னைதால், இந்த ஜீவாத்மாக்கள் இல்லாமலேயே அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா? பின் எதற்கு இந்த ஜீவாத்மா? எதற்கு இத்தனை ஜீவாத்மாக்கள்? இன்னும் வருமா? அல்லது ஜீவாத்மாவை படைப்பது நின்று விட்டதா? 


இப்படி எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. ஆளாளுக்கு ஒரு உரை சொல்கிறார்கள். 


"வேதம் சொல்வது இது தான் என்று சில பேதையர்கள் சொல்லித் திரிகிறார்கள். பிரமம் நல்லது அல்லது நிரந்தரமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். மற்றைய உயிர்கள் எல்லாம் அந்த பிரம்மம் தான் என்றுஅவர்கள் சொல்கிறார்கள். உயிர்கள் உடலை விட்டு பிரிந்த பின், இறைவனோடு கலந்து விடுகின்றன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் தவறு என்று தன்னுடைய வாதத் திறமையால் நிரூபித்தார் இராமானுசர்"


என்கிறார் திருவரங்கத்து அமுதனார். 


பாடல் 




பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்


றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்


டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்


வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_18.html



(please click the above link to continue reading)


பேதையர்  = பேதைகள், முட்டாள்கள், அறிவு இல்லாதவர்கள் 


வேதப் பொருளிதென் னுன்னிப் = வேதப் பொருள் இது என்று உன்னி = வேதத்தின் பொருள் இதுதான் என்று நினைத்து 


பிரமம்நன்றென் றோதி = பிரமம் நல்லது, நிரந்தரமானது, உயர்ந்தது என்று பாடம் சொல்லி 


மற் றெல்லா உயிரும் = மற்ற உயிர்கள் எல்லாம் 


 அஃதென்று = அதுவே (பிரமமே) என்றும் 


உயிர்கள் மெய்விட் = உயிர்கள் உடம்பை (மெய்) விட்ட பின் 


டாதிப் = ஆதி 


பரனொடொன் றாமென்று = பரன் என்று சொல்லும் கடவுளிடம் ஒன்று ஆகும் என்று  


சொல்லுமவ் = சொல்லும் அந்த 


வல்லலெல்லாம் = வல்லமை எல்லாம் 


வாதில்வென் றான் = அவை தவறு என்று வாதத்தில் வென்றான் 


எம் இராமா னுசன்  = எம் தலைவனான இராமானுசன் 


மெய்ம் மதிக்கடலே. = உண்மையான கல்விக் கடலே 


சரி, அவை எல்லாம் தவறு என்றால், பின் எது சரி? 


இராமனுசர் என்னதான் சொல்கிறார்? 


அது ஒரு தனி விளக்கம். வைணவ சித்தாந்தம். அது பற்றி தனியே ஆராய்ந்து அறிய வேண்டும். 


இராமானுசர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுதான் அவருக்கு செய்யும் மரியாதை. 


இராமனுசர் எனக்கு கடவுள் என்று சொல்லிவிட்டு, அவர் என்ன சொன்னார் என்று அறிந்து கொள்ளாமல் இருப்பது சரியா? 


நியூட்டனை நான் வணங்குகிறேன். ஆனால், அவர் சொன்ன அறிவியல் உண்மைகள் எனக்குத் என்ன என்று எனக்குத் தெரியாது என்று சொல்வது மதியீனம் அல்லவா?


இராமானுச நூற்றந்தாதி படிப்பதின் நோக்கம், இராமானுசர் கண்டு சொன்ன உண்மைகளை அறிவதுதான். சும்மா பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அல்ல. 


அவர் சொல்லிச் சென்ற உண்மைகளை அறிந்து கொள்ள முயற்சிப்போம். 




Thursday, May 7, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?

இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?



முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம். போய் இறங்கியாச்சு. போய் சேர வேண்டிய இடம் தெரியும் ஆனால் வழி தெரியாது. வெளி நாடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தாச்சு. இந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை. முன்ன பின்ன இந்த ஊருக்கு வந்ததும் இல்லை.

என்ன செய்யணும்?

தெரிஞ்ச யார் கிட்டயாவது கேக்கணும். யார் கிட்ட என்றால், நம்மைப் போல முதன் முதலாய் அந்த ஊருக்கு வந்த இன்னொரு பயணியிடம் அல்ல. வழி தெரிந்த ஆளிடம் கேட்கணும்.

சரி, கேட்டாச்சு. அவரும் சரியான வழி சொல்லி விட்டார்.

போக வேண்டியதுதான் பாக்கி.

அங்க தான் சிக்கல் இருக்கு.

"அவரு சொல்ற வழி நல்லாத்தான் இருக்கு. ஆனா, அது எனக்கு சரிப் பட்டு வருமான்னு தெரியல. அந்த வழி எல்லாம், நடை முறைக்கு சரியா வராது..." என்று சொல்லி விட்டு, கால் போன போக்கில் நாம் போய் கொண்டிருந்தால் அது எவ்வளவு புத்திசாலித்தனம்?

அது போல,  முன்ன பின்ன தெரியாத இந்த பூவுலகில் வந்து பிறந்து விட்டோம்.  முக்தி, வீடு பேறு என்று சொல்லும் இடத்துக்குப் போக வேண்டும்.

போக வழி சொல்லி இருக்கிறார்கள்.  பெரியவர்கள், ஆச்சாரியர்கள்,குருமார்கள், ஞானிகள், துறவிகள்...எல்லோரும்.

வழி எல்லாம் கேக்க வேண்டியது. அப்புறம், "...அது வந்து, வழி நல்லாத்தான் சொல்றாரு....ஆனா பாருங்க...நமக்கு அது சரிப்பட்டு வருமான்னு தெரியல "...என்று சொல்லி விட்டு  நாம் அன்றாட வேலைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

புத்திசாலித்தனம்?

"சரணம் என்று அடைத்த தருமனுக்காக முன்பு கௌரவர்களை அழித்த மாயனை, நம்மை எல்லாம் வணங்க வைத்த இராமானுஜன் இல்லை என்றால் நமக்கெல்லாம் வேறு துணை ஏது "

என்று பாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

பாடல்


சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு
அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?

பொருள்


சரணம் அடைந்த தருமனுக்காப் = தன்னைச் சரணம் அடைந்த தருமனுக்காக

பண்டு  = முன்பு

நூற்றுவரை = நூற்றுக்கணக்கான கௌரவர்களை

மரணம் அடைவித்த = கொன்ற

மாயவன் தன்னை  = திருமாலை

வணங்கவைத்த = வணங்க வைத்த

கரணம்  இவை  = கரணங்கள் (புலன்கள்) இவை

யுமக் கன்று = உமக்கு அன்று

என்று = என்று

இராமா னுசன் = இராமானுஜன்

னுயிர்கட்கு = உயிர்களுக்கு

அரணங் கமைத்தில னேல் = அரண் வேலி ) அமைதிராவிட்டால்

அர ணார் = அரண் (வேலி ,காவல்) யார்

மற்றிவ் வாருயிர்க்கே? = மற்ற இந்த ஆருயிர்க்கே

நமக்கு புலன்கள் எதற்காக இருக்கின்றன?

ஆண்டு, அனுபவிக்கத்தானே ? எல்லாவற்றையும், ஒன்று விடாமல் அனுபவிக்கத்தானே இந்த புலன்கள் இருக்கின்றன?

இல்லை.

எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க இறங்கினால் என்ன ஆகும்?

எதிலும் ஒரு அளவு வேண்டும். வரை முறை வேண்டும்.

இன்பங்களின் பின்னால் போகும் புலன்களை, தடுத்து,  அரண் அமைத்து, இறைவன் பால்  வழி நடத்திய, இராமானுசன் இல்லை என்றால், இந்த உயிர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள்?

ஐந்து புலன்களும், உலகில் கிடந்து துன்பப் படுகின்றன.

அவனை சரண் அடைந்து விட்டால்,  நூற்றுக்கணக்கான கௌரவர்களை அழித்தது போல, நம் புலன்களுக்கு எதிரான அனைத்தையும் அவன் அழித்து விடுவான். புலன்கள் தறி கெட்டு ஓடாது.

அதற்கு, முதலில் அவனிடம் சரண் அடைய வேண்டும்.

அவன் யார், எப்படி சரண் அடைவது என்று நமக்குத் தெரியாது. அதைச் சொல்லித் தரத்தான்  இராமானுஜர் போன்ற மகான்கள்  அவதரித்தார்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால்,  நாம் சரண் அடையப் போவதும் இல்லை, எதிரிகள் அழியப் போவதும் இல்லை.

குருவை நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். பின் ,அவர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.

உடம்பு சரி இல்லை என்று மருத்துவரிடம் போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார்.  வாங்கி சாப்பிட வேண்டியதுதானே?

"...அவரு சொல்லுவாரு ...நம்மால முடியுமா...." என்று நமக்குத் தெரிந்த மாத்திரைகளை  வாங்கி தின்று கொண்டு இருந்தால், நோய் குணமாகுமா?

சாதாரண ஜலதோஷம் காய்ச்சலுக்கே இந்த கதி என்றால், மிகப் பெரிய நோயான பிறவிப் பிணிக்கு  என்ன சொல்ல?

வழி தான் சொல்ல முடியும். அதில் பயணிப்பதும், அல்லது வேறு திசையில் போவதும்  அவரவர் விருப்பம், விதி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_14.html

Tuesday, April 28, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே 


வகுப்புக்கு ஒழுங்கா வருகிற மாணவனைத்தான் ஆசிரியர் நிறைய கேள்வி கேட்பார், பரீட்சை வைப்பார், வீட்டுப் பாடம் தருவார். போட்டு படுத்தி எடுப்பார். வகுப்புக்கு வரமால், ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருப்பவனை ஆசிரியர் கண்டு கொள்ள மாட்டார்.

ஒழுங்கா வருகிறவனைப் போட்டு படுத்துகிறார். ஊரு சுற்றுபவவனை ஒன்றும் சொல்வதில்லை. இது சரியில்லையோ என்று தோன்றும்.

ஆனால், கேள்வி, பரீட்சை, வீட்டுப் பாடம் என்று போட்டு படுத்தி எடுத்த மாணவனுக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி என்று பட்டம் கிடைக்கும்.

தகுதி இருக்கானு பாக்கணும் இல்ல.

அது  போல, இறைவனும், முக்தி தருவதற்கு முன்னால் பக்தர்களை போட்டு படுத்தி எடுத்து விடுவான்.

ஞானம், பக்தி, என்று கிடந்து அல்லாட வேண்டும். அப்புறம் தான் முக்தி தருவான்.

ஆனால், ஒரு தாய் என்பவள் அப்படி அல்ல. பிள்ளை படிச்சானா, வேலை செஞ்சானா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஐயோ , என் பிள்ளைக்கு பசிக்குமே என்று சோறிடுவாள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்


"ஞானம் பெற்று, நல்லது செய்து, பக்தியால் நாளும் உள்ளம் நைந்து உருகுபவர்களுக்குத்தான் திருமால் முக்தி கொடுப்பான். ஆனால், இராமானுஜரோ, அவரிடம் வந்தவர்களுக்கு, அவர்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை எல்லாம் அகற்றி, தன்னுடய கருணையினால் அவர்களுக்கு முக்தி கொடுப்பார் "

என்று.


பாடல்


ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.


பொருள்

ஞானம் கனிந்த  = ஞானத்தை முழுமையாகப் பெற்று

நலங்கொண்டு = நல்லவற்றை செய்து

நாடொரும் = ஒவ்வொரு நாளும்

-நைபவர்க்கு = பக்தியால் உருகுபவர்க்கே

வானம் கொடுப்பது = முக்தி தருவது

மாதவன் = மாதவனான திருமாலின் வழி

வல்வி னை யேன்மனத்தில் = கொடிய வினைகள் கொண்ட என் மனத்தில்

ஈனம் கடிந்த = கீழான எண்ணங்களை மாற்றி

 இராமா னுசன் = இராமானுஜன்

தன்னை எய்தினர்க்குத் = தன்னை அடைந்தவர்களுக்கு

தானம் கொடுப்பது = தானமாக கொடுப்பது

தன்தக வென்னும் = தன்னுடைய சான்றாண்மை என்ற

சரண் கொடுத்தே. = திருவடிகளை கொடுத்தே


சும்மா இருக்கிற புத்தகத்தை எல்லாம் படிச்சா போதாது. படித்து தெளிந்த ஞானம் பெற வேண்டும்.

பின், பெற்ற ஞானத்தால் பிறருக்கு  உதவ வேண்டும்.

பின், பக்தியால் மனம் தினமும் உருக வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தால், திருமால் முக்தி தருவார்.

விடிஞ்சிரும்.

இராமாநுஜரிடம் இப்படி எல்லாம் ஒரு கெடு பிடியும் கிடையாது.

நீயே சரண் என்று அவரை பிடித்து விட்டால் போதும், நேரே சுவர்க்கம் தான்.

point to point service மாதிரி.

எது வசதி?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_71.html

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி 



ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்கள் எது அறம், எது அறம் அல்லாதது என்று வழி தெரியாமல் தவித்து இருக்கிறார்கள்.

ஓரினத்தில் திருமணம் செய்து கொள்வது அறமா, அறம் அற்ற செயலா ?

பல பெண்களை மணந்து கொள்வது சரியா தவறா ?

மாமிசம் உண்பது சரியா, தவறா ?

சூதாடுவது சரியா, தவறா?

வட்டி வாங்குவது சரியா, தவறா ?

இப்படி பல குழப்பங்களில் மக்கள் தடுமாறி இருக்கிறார்கள். தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி, மக்கள் திசை தெரியாமல் தவிக்கும் போது, பெரியவர்கள் தோன்றி மக்களை வழி காட்டி இருக்கிறார்கள்.

 திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்

"கடல் போல அஞ்ஞான இருள் உலகமெங்கும் சூழ்ந்து இருந்த போது, இராமானுஜர் மட்டும் வந்து நான்கு வேதத்தின் சாரத்தை எடுத்து அறிவொளி தந்து இருக்கா விட்டால், இந்த ஆன்மாக்களை உடையவன் நாராயணன் என்று  யாருமே உற்று உணர்ந்து அறிந்து இருக்க மாட்டார்கள்"

பாடல்


கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

பொருள்

கடலள வாய = கடல் அளவான

திசையெட்டி னுள்ளும் = திசை எட்டினுள்ளும்

கலியிருளே = கலி புருஷனின் இருள். அதாவது அஞ்ஞான இருள்

மிடைதரு காலத்தில் = அடர்ந்து இருந்த காலத்தில்

இராமா னுசன் = இராமானுஜன்

மிக்க = சிறந்த

நான்மறையின் = நான்கு வேதத்தின்

சுடரொளியால் = சுடர் ஒளியால்

அவ் விருளைத் = அந்த இருளை

துரத்தில னேல் = துரத்தி இருக்காவிட்டால்

உயிரை = உயிரை

உடையவன் = உடையவன்

நாரணன் = நாராயணன்

என்றறி வாரில்லை = என்று அறிவாரில்லை

உற்றுணர்ந்தே = உற்று உணர்ந்தே

முதலாவது,  குழப்பத்தில் இருந்த மக்களை வழி காட்டி நடத்த அவர் வந்தார்.

இரண்டாவது, என்ன குழப்பம்?  மக்களுக்கு புரியவில்லை. யார் இறைவன், யாரை வழிபடுவது போன்ற குழப்பங்கள். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்கின்றன.   ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆளுக்கு ஒரு மதம்,  மதத்துக்கு ஒரு கடவுள் என்ற குழப்பங்கள்.

மூன்றாவது, அவர் இருளை விலகினார். உடனே எல்லோருக்கும் புரிந்து விட்டதா?  இல்லை. ஒரு அறையில் நல்ல  புத்தகம் இருக்கிறது. ஆனால், அறை முழுவதும்   ஒரே இருள். இராமானுஜர் வந்து விளக்கை ஏற்றி வைத்தார். புத்தகம் இருக்கிற இடம் தெரிகிறது. ஆனால், புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது நம் பொறுப்பு.  "அறிவாரில்லை உற்று உணர்ந்தே" என்கிறார்.

அறியவும் வேண்டும். உணரவும் வேண்டும்.

அறிவது எளிது. உணர்வது கடினம்.

இரண்டையும் அடைய இராமானுஜர் ஞான ஒளி ஏற்றினார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_28.html

Tuesday, October 1, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - காரிய வன்மை

இராமானுஜர் நூற்றந்தாதி  - காரிய வன்மை 


திருவரங்கத்து அமுதனார், இராமானுஜர் மேல் உள்ள பக்தியால் அந்தாதி பாடினார். நாம் ஏன் அதைப் படிக்க வேண்டும்? படித்து என்ன ஆகப் போகிறது. சரி, அவருக்கு அவர் மேல் பக்தி இருத்தது என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதற்கு எதற்கு 100 பாடலைப் படிக்க வேண்டும். ஒரு வரியில் சொன்னால் போதாதா?

அது ஒரு கேள்வி.

அது ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒருவருடைய வழியைப் பின் பற்றுகிறோம் என்றால், நாம் எப்படி இருக்க வேண்டும்? யாருடைய வழியைப் பின் பற்றுகிறோமோ அவர் சொன்ன மாதிரி, செய்த மாதிரி நாமும் இருக்க வேண்டும் அல்லவா?

காந்தியை நான் பின்  பற்றுகிறேன் என்றால், நானும் அகிம்ஸையை கடைபிடிக்க வேண்டும் அல்லவா. மூன்று வேளையும் மாமிசம் தின்று கொண்டு, அடி தடியில் இறங்கிக் கொண்டு, காந்தியவாதி என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

இராமனுஜரை பின்பற்றுகிறேன் என்றால் என்ன அர்த்தம்?  சும்மா அவர் பெயரை சொல்லிக்கொண்டு திரிவது, எந்த பிரச்சனை வந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்று அவர் மேல் எல்லாவற்றையும் போட்டு விடுவது, அவரை வணங்குவது என்பதெலாம் அல்ல.

பின் என்னதான் செய்ய வேண்டும்?

இராமனுஜரின் அடியார்கள் காரியங்களை செய்து முடிப்பதில் வல்லவர்களாய் இருப்பார்கள். சும்மா பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்கிறார்.

பாடல்


சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த
பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.

பொருள்


சீரிய = சிறந்த

நான்மறைச் = நான்கு வேதங்கள்

செம்பொருள் = அவற்றில் உள்ள உயர்ந்த கருத்துகளை

செந்தமி ழாலளித்த = செந்தமிழால் அளித்த

பாரிய லும் = இந்த உலகில்

புகழ்ப் = புகழ் பெற்ற

பாண்பெரு மாள் = திருப்பாணாழ்வார்

சர ணாம் = பாதங்கள் என்ற

பதுமத் = தாமரை

தாரியல் = மலர்களை

சென்னி = தலையில்

இராமா னுசன்றனைச் = இராமானுஜரை

சார்ந்தவர்தம் = சேர்ந்தவர்கள்

காரிய வண்மை = காரியம் செய்து முடிப்பதில் உள்ள வல்லமையை

என்னால் = என்னால்

சொல்லொ ணா = சொல்ல முடியாது

இக்  கடலிடத்தே = இந்த கடல் போல பெரிய உலகத்திலே


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பக்தி என்பது சும்மா ஏதோ பூஜை செய்வது, தூப தீபம் காட்டுவது, விரதம் இருப்பது என்று.

சும்மா பொழுது போக்குவது அல்ல. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று சோம்பேறியாக இருப்பது அல்ல பக்தி.


பக்தி என்பது செயல் சார்ந்தது.

காரிய வண்மை வேண்டும்.

செயல் ஊக்கம் வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.

இராமானுஜர் என்ன செய்தார்? எல்லோரும் வைகுண்டம் போக வேண்டும் பாடுபட்டார். அது காரிய வன்மை.

சும்மா மடத்தை கட்டிவைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டு இருக்கவில்லை.

இராமானுஜரின் பக்தர்கள் என்றால், காரிய வண்மை இருக்க வேண்டும்.

அந்த கரிய வண்மை எல்லாம் இல்லை என்றால் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post.html

Thursday, September 19, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்


இரவு நேரம். வீட்டுக்குள் நுழைகிறோம். மின்சாரம் இல்லை. ஒரே இருட்டு.  எது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கண் திறந்துதான் இருக்கிறது. சாமான்கள் அந்தந்த இடத்தில் தான் இருக்கிறது. இருந்தும் கண் தெரியவில்லை.

ஏன் ?

இருட்டு.

வெளிச்சம் இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்.

வெளிச்சம் இல்லாவிட்டால், கண் முன் இருக்கும் தூண் கூடத் தெரியாது. முட்டிக் கொள்வோம்.

இறைவன் கண் முன் இருந்த தூணில் இருந்தான். ப்ரகலாதனுக்குத் தெரிந்தது. இரணியனுக்கு தெரியவில்லை.

காரணம், அறியாமை என்ற இருள் அறிவை செயல் பட விடாமல் தடுக்கிறது.

அறியாமை என்ற இருள் விலகினால் இறை தரிசனம் கிடைக்கும். இல்லை என்றால், இருட்டில் நின்று கொண்டு, எதிரில் என்ன இருந்தாலும், எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் எல்லாம் பளிச் சென்று தெரியும்.

அமுதனார் சொல்கிறார்,

"கொடிய இருள் மறைந்த பின் திருக்கோவலூர் என்ற திருத்தலத்தில் உள்ள ஆயனை, அவனுடைய  தேவியுடன் தரிசிக்கப் பெற்ற தமிழ்த் தலைவன் பேயாழ்வாரின் பொன்னடிகளைப் போற்றும் இராமானுஜர் மேல் அன்பு பூண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடும் பக்தி உடையவர்கள் சிறந்தவர்களே "

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.



பொருள்

மன்னிய = நிலைத்து நின்ற

பேரிருள்  = பெரிய இருள் (அறியாமை என்ற இருள்)

மாண்டபின் = மறைந்த பின்

கோவலுள் = திருக்கோவளுள்

மாமலராள் = திருமகள்

தன்னொடு = அவளோடு

மாயனைக் = மாயனை

கண்டமை = தான் தரிசித்ததை

காட்டும் = உலகுக்கு காட்டும்

தமிழ்த்தலைவன் = தமிழ் தலைவன்  (பேயாழ்வார்)

பொன்னடி = பொன் போன்ற அடிகளை

போற்றும் = போற்றும்

இராமா னுசற்கு  = இராமானுஜருக்கு

கன்பு = அன்பு

பூண்டவர்தாள் = கொண்டவர்கள் தாள் (அடிகள்)

சென்னியிற் = தலையில்

சூடும் = சூடிக் கொள்ளும்

திருவுடை யாரென்றும் சீரியரே = பக்தி உடையவர்கள் என்றும் சிறந்தவர்களே .


திருக்கோவலூர் மாயன், அவனுடைய தேவி திருமகள்

அவர்களின் தரிசனம் பெற்ற பேயாழ்வார்

பேயாழ்வாரின் திருவடிகளை போற்றும் இராமானுஜர்

இராமானுஜர் மேல் அன்பு கொண்டவர்கள்

அன்பு கொண்டவர்களின் பாதங்களை தலை மேல் சூடி கொண்டவர்கள் சிறந்தவர்கள்

புரிகிறதா ?

ஆண்டவன்,
அடியார்  (பேயாழ்வார்)
அடியார்க்கு அடியார் (இராமானுஜர்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அவர் மேல் அன்பு கொண்டவர்கள்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அன்பு கொண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடி கொண்டவர்கள்)

ஆண்டவனை அடையும் படிகள்

பிறவி என்ற இருட்டில் கண் இருந்தும் தெரியாமல் தவிக்கிறோம்.

ஞான விளக்கை கையில் கொண்டவர் பேயாழ்வார். அவர் முன் செல்ல , அவர் பின்னே  வரிசையாக சென்று விட வேண்டியது தான்.


இராமானுஜர் நூற்றந்தாதியில் ஒவ்வொரு பாடலும் தேன் போல தித்திப்பவை.

உள்ளத்தை உருக்குபவை.

மூல நூலை தேடி படியுங்கள்.

நான் சொன்னதை விடவும் உங்களுக்கு மேலும்   பல தோன்றலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_19.html


Wednesday, September 18, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே


தாய் நமக்கு தந்தையை அறிமுகப் படுத்துகிறாள். அவள் சொல்லித்தான், தந்தை யார் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.

தந்தை நமக்கு ஆசிரியரை அறிமுகப் படுத்துகிறார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.

ஆசிரியர் நமக்கு இறைவனை அறிமுகப் படுத்துவார்.

அதெல்லாம் இல்லை, ஆசிரியர் பாடம் சொல்லித் தருவார்.அவருக்கே கடவுள் என்றால் யார் என்று தெரியாது. அவர் எப்படி எனக்கு கடவுளை காட்ட முடியும் என்று சிலர் கேட்கலாம்.

அவர் கடவுளை காட்ட வேண்டாம். கல்வியை ஒழுங்காக சொல்லித் தந்தால் போதும். அந்த கல்வி இறைவனை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த்தும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்பார் வள்ளுவர்.

கல்வி, இறைவனின் திருவடிகளில் கொண்டு சேர்க்கும்.

எனவேதான் ஆசிரியர், ஆச்சாரியனை நம் இனம் கொண்டாடுகிறது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

என்பார் அருணகிரிநாதர்.

ஆச்சாரியன் கையை பிடித்துக் கொண்டு இறைவனை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.

இறைவனை விட்டு விடுங்கள் ,
அவனை கண்ட ஆழ்வார்களை விட்டு விடுங்கள்,
ஆழ்வார்களை மனதால் எப்போதும் கொண்ட இராமாநுஜரையும் விட்டு விடுங்கள்.
இராமானுஜரை மனதில் கொண்ட அடியவர்கள் யாரோ, அவர்களே இந்த உலகில் வேதம் நிலைத்து நிற்க செய்பவர்கள் என்கிறார்  அமுதனார்.

பாடல்


இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.


பொருள்


இறைவனைக் = இறைவனை

காணும் = காணும் போது

இதயத் திருள்கெட = இதயத்தில் உள்ள இருள் எல்லாம் கெட

ஞானமென்னும் = ஞானம் என்ற

நிறைவிளக் கேற்றிய = நிறைவான விளக்கை ஏற்றிய

பூதத் திருவடி = பூதத்தாழ்வார்

தாள்கள் = திருவடிகள்

நெஞ்சத் = மனதில்

துறைய = உறைந்து இருக்கும்படி

வைத் தாளும் = வைத்து போற்றும்

இராமா னுசன் = இராமானுசன்

புகழ் = புகழை

ஓதும் நல்லோர் = சொல்லும் நல்லவர்ககள்

மறையினைக்  = வேதத்தை

காத்த = காத்து

இந்த மண்ணகத் தே = இந்த மண்ணில்

மன்ன = நிலைத்து நிற்கும்படி

வைப்பவரே. = செய்வார்கள்


என்ன சொல்ல வருகிறார்?

இராமானுஜரை மனதில் வைத்து இருந்தாலே போதும், அவர்கள் தீய செயல்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்லும் வழி நல்ல வழியாகத்தான் இருக்கும். வேதம் சொன்ன வழியாகத்தான் இருக்கும். வேதத்தில் சொன்ன படி   வாழ்வதால், அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாழ்வார்கள். வேதம் வாழ்க்கையோடு சேர்ந்து நிலைத்து நிற்கும்.

யாருமே அதில் சொன்ன படி வாழாவிட்டால், பின் அந்த நூலுக்கு என்னதான் பலன், பயன்?

அது எப்படி இராமனுசரை மனதில் வைத்தாலே நாம் நல்லவர்களாகி விடுவோமா?

உதாரணம் பார்ப்போம்.

கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.

"அதெல்லாம் நடை முறை இல்லை, நான் சாதாரண மனுஷன்/மனுஷி, நம்மால் அது முடியாது,  மனது ஏற்றுக் கொள்கிறது ஆனால் செய்யத்தான் முடியவில்லை " என்று சாக்கு போக்கு சொல்பவர்களுக்கு அல்ல.


ஆய் தந்து, அவன், அவ் உரை
    கூறலும் ‘ஐயன், ‘நின் தன்
வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?
நீ தந்தது அன்றே நெறியோர்
    கண் இலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர்மேல்
    சலிக்கின்றது என்னோ? ‘

"வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?"

வேதம் சொன்ன வாயால், வாய்க்கு வந்த படி பேசலாமா" என்று கேட்கிறான். படித்தால் மட்டும் போதாது, அதற்கு தக வாழவும் வேண்டும்.

இராமாநுஜரை மனதில் வைத்தவர்கள், வேதம் நிலைத்து இருக்கும் படி வாழ்வார்கள்.

அதாவது, நான் இராமானுஜரை வழிபடுகிறேன், அவரை மனதால் எப்போதும் வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, வேதம் காட்டிய நல் வழியில் வாழவும் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி மத பேதம் இல்லாமல், எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் இராமானுஜர். அவரை மனதில் வைத்தவர்கள் அப்படி செய்ய வேண்டும் என்பது மறைமுக கட்டளை.

முடியுமா என்ன ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_18.html

Saturday, September 14, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை


வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். அதற்கு திரி திரித்து போடுவார்கள். பஞ்சில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை எடுத்து அதை திரியாக திரித்து , எண்ணெயில் நனைத்து விளக்கு ஏற்றுவார்கள்.

ஒரே பஞ்சை போட்டால் என்ன? எரியாதா ?

எரியும். ஆனால் சீக்கிரம் கரிந்து விடும்.

இரண்டு அல்லது மூன்று பஞ்சை சேர்த்து திரிக்கும் போது, அந்த திரிகளுக்கு நடுவில் ஒரு மெல்லிய குழாய் போன்ற அமைப்பு உருவாகும். அதன் மூலம் எண்ணெய் வேகமாக மேலேறும். தமிழில் தந்துகி கவர்ச்சி என்பார்கள். ஆங்கிலத்தில் capillary effect என்று சொல்லுவார்கள்.

எப்படி திரி திரிப்பதால் எண்ணெய் நன்றாக மேலேறி வருகிறதோ, அது போல உண்மை என்ற எண்ணெய் மேலேறி வந்து உலகுக்கு எல்லாம் வெளிச்சம் காட்ட வேதத்தையும், தமிழையும் திரித்து உலகுக்கு  அளித்த பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களை மனதில் எப்போதும் வைத்திருக்கும் இராமானுஜன் , அவரே என் தலைவன், இறையவன் என்று அமுதனார் பாடுகிறார்.


பாடல்


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள்

வருத்தும்  = வருத்தம் தருகின்ற

புறவிருள் = புற இருள்

மாற்ற = மாற்ற, போக்க

எம் பொய்கைப்பி ரான் = பொய்கை பிரானான பொய்கை ஆழ்வார்

மறையின் = வேதத்தின் 

குருத்தின் = வெளிப்படும் உண்மை

பொருளையும் = அதன் பொருளையும்

செந்தமிழ் = தமிழ்

தன்னையும் = அதையும்

கூட்டி = சேர்த்து

ஒன்றத் = ஒன்றாக

திரித்தன் றெரித்த = திரித்து எரித்த, ஏற்றிய

திருவிளக் கைத் = திருவிளக்கை

தன் = தன்னுடைய

திருவுள்ளத்தே = மனதில்

இருத்தும் = எப்போதும் வைத்திருக்கும்

பரமன் = தலைவன்

இராமா னுசனெம் இறையவனே. = இராமானுசன் எம் இறையவனே

புற இருள் என்றால் என்ன ?

வெளியே ஏதோ இருக்கிறது என்று நாம் தேடி அலைகிறோம். இன்பம், செல்வம், புகழ், செல்வாக்கு, நட்பு, உறவு, என்று எதை எதையோ தேடி அலைகிறோம். கடைசியில் கையில் மிஞ்சுவது ஒன்றும் இல்லை. என்ன வேண்டும் என்றே தெரியாமல் தேடுகிறோம்.  எதைத் தொலைத்தோம் என்று தெரியாமலே தேடுகிறோம்.

எனவே, அதை இருட்டில் தேடுவது போல என்று புற இருள் என்றார்.

விளக்கை ஏற்றின்னால், இருள் அகன்று விடும்.

இங்கே இருள், வெளிச்சம் என்பது அறியாமை, ஞானம் என்பதைக் குறிக்கும்.

இராமானுஜர் நூற்றந்தாதியில் இப்படி பல அருமையான பாடல்கள் இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

நல்ல விஷயங்களுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கினால்தான் என்ன?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_72.html

Thursday, January 31, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - வாயமுதம் பரக்கும்

இராமானுசர் நூற்றந்தாதி  - வாயமுதம் பரக்கும் 



நாம பெரிய சந்நியாசி, துறவி எல்லாம் கிடையாது. அதே சமயம் சமய கோட்பாடுகளை முற்றும் விட்டு விட்டவர்களும் கிடையாது. குடும்ப வாழ்கை கொஞ்சம், ஆன்மீகம் கொஞ்சம், சமயம் கொஞ்சம், உண்மை பற்றிய ஆவல் மற்றும் தேடல் கொஞ்சம் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறோம். 

சமய உண்மைகளை அறிந்து கொள்ள ஆசை உண்டு. அவற்றை கடை பிடிக்கவும் ஆசை உண்டு. ஆனால், கடமைகள் மறு புறம் இழுக்கின்றன. படித்து, அவை சரி என்று அறிந்தாலும், "நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று ஒதுக்கி வைத்து விடுகிறோம். 

உள்ளும் இல்லை, புறமும் இல்லை. வாசல் படியில் இருக்கிறோம்.  இரணியன் கேட்ட வரம் போல - உள்ளும்  இல்லை,புறமும் இல்லை  வாசல்படி தான்  இடம். 

ஆரவமுதனார் சொல்கிறார் , "படியில் உள்ளவர்களே , உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இராமனுஜரின் பெருமையை கூறுகிறார். 

பாடல்  

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே 

பொருள் 

சுரக்கும் = தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் 

திருவும் = செல்வமும் 

உணர்வும் = உண்மையை உணரும் ஞானமும் 

சொலப்புகில் = சொல்லத் தொடங்கினால் 

வாயமுதம் = வாயில் அமுதம் 

பரக்கும் = தோன்றும் 

 இருவினை = இரு வினைகள் 

பற்றவோடும் = பற்றிக் கொள்ள, நாளும் அது துரத்த ஓடும் 

படியிலுள்ளீர் = படியில் உள்ளவர்களே 

உரைக்கின்றனன் = சொல்லுகின்றேன் 

உமக்கு = உங்களுக்கு 

யான்  = நான் 

அறம் சீறும்  = அறத்தை மறுக்கும் 

உறு கலியைத் = பெரிய தொல்லை தரும் கலியை 

துரக்கும் = .விலக்கி விடும் 

பெருமை = பெருமை கொண்டது 

இராமானுசன் = இராமானுசன் 

என்று சொல்லுமினே = என்று சொல்லுங்கள் 


துன்பம் ஏன் வருகிறது ? அறத்தை விட்டு விலகுவதால் துன்பம் வருகிறது. தர்மத்தை  விட்டு விலகினால் துன்பம் வரும். 

"அறம் சீர் உறு கலி"


கலி என்றால் சனியன். 

"இராமானுசன்" என்று சொன்னால் போதும் 

- செல்வம் பெருகும் 
- அறிவு வளரும் 
- துன்பம் தொலைந்து போகும்  


பாடலை வாசித்துப் பாருங்கள். 

நிச்சயம் வாயில் அமுது ஊறும் .

Saturday, October 27, 2018

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி 



உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம். அவர் ஸ்கேன், X Ray , blood test எல்லாம் எடுத்து பார்த்து விட்டு, சாதாரண வியாதி என்றால் மருந்து மாத்திரை தருவார்.


அதுவே கொஞ்சம் சிக்கலான வியாதி என்றால், "இதற்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் " என்று சொல்லி அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விடுவார்.


அறுவை சிகிச்சை என்றால் என்ன சும்மாவா ?


இரத்த அழுத்தம் பார்க்க வேண்டும், சர்க்கரை அளவு பார்க்க வேண்டும் , எல்லாம் சரியாக இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து தருவார்கள். சிகிச்சை முடிந்து உடம்பு பழைய படி வர அதற்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.


உடம்பில் ஒரு உபாதை என்றாலே இந்தப் பாடு.


மனதில் சிக்கல் என்றால் என்ன செய்வது?


மனதுக்கு எவ்வளவு வியாதி வருகிறது - கோபம், தாபம், பொறாமை, பயம், காமம், என்று ஆயிரம் வியாதி வருகிறது. மனதுக்குள் போய் இவற்றை அறுவை சிகிச்சை செய்து அறுத்து அகற்ற வேண்டும். அதுவும் வலி இல்லாமல்.  யார் செய்வது ? எப்படி செய்வது ?


அது மட்டும் அல்ல, நமக்கு அப்படி ஒரு மனோ வியாதி இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. உடம்பில் நோய் என்றால் தெரியும். வலிக்கும். சோதனை செய்து கண்டு பிடித்து விடலாம். மனதில் ஒரு வியாதி வந்தால் தெரியக் கூட செய்யாது.


அது மட்டும் அல்ல, ஒரு முறை சரி செய்தால் மீண்டும் அந்த வியாதி வரக் கூடாது. அப்படி ஒரு மருத்துவம் செய்ய வேண்டும்.


யார் செய்வார்கள் ? எப்படி செய்வார்கள் ?


ஒரு நல்ல ஆசிரியன், ஆசாரியன் தான் நம்மை அறிந்து, நம் மனதில் உள்ள குற்றங்களை களைந்து, நம்மை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பிக்க முடியும்.


எங்கு போய் அப்படி ஒரு ஆச்சரியனை நாம் தேடி கண்டு பிடிப்பது? தேவையே இல்லை. நாம் தயாராக இருந்தால், ஆசாரியன் நம்மைத் தேடி வருவான்.


திருவரங்கத்தமுதனார் சொல்கிறார்


"இராமானுஜரே , நீர் என் மனதுக்குள் நான் அறியாமல் புகுந்து, என் மனதில் உள்ள குற்றங்களை எல்லாம் நீக்கி விட்டீர். அது மட்டும் அல்ல, இனி அக்குற்றங்கள் என்னிடம் வரமால் செய்து விட்டீர். மேலும், என்னை அந்த திருமகள் துணைவனிடம் கொண்டு சேர்த்தும் விட்டீர் "


என்ன உன் கருணை என்று உருகுகிறார்.


பாடல்


கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.

பொருள்


கருத்திற் புகுந்து = என் மனதினில் புகுந்து

உள்ளிற் = உள்ளத்தில் உள்ள

கள்ளம் கழற்றிக் = கள்ளம் (குற்றம்) நீக்கி

கருதரிய = நினைத்தும் பார்க்க முடியாத

வருத்தத்தி னால் = சிரமப் பட்டு

மிக வஞ்சித்து = என்னை ஏமாற்றி

நீயிந்த = நீ இந்த

மண்ணகத்தே = மண்ணுலகில்

திருத்தித் = என்னை திருத்தி

திருமகள் = இலக்குமி தேவியின்

ள்வனுக் காக்கிய பின் = துணைவனுக்கு என்று என்னை ஆக்கிய பின்

என் நெஞ்சில் = என் நெஞ்சில்

பொருத்தப் படாது = பொருந்தாது

எம் இராமா னுச! = எம் இராமானுச

மற்றோர்  = வேறு ஒரு

பொய்ப் பொருளே.= பொய் பொருளே

ஒருவரின் மனதால், அவரே அறியாமல் போய் அதில் உள்ள குற்றங்களை களைவது என்றால்  எளிதான காரியம் அல்ல. இராமானுசர் அப்படி , திருவரங்கத்து அமுதனார்  மனதில், அவரே அறியாமல் கள்ளத்தனமாக புகுந்து, அவர் மனதில் உள்ள குற்றங்களை நீக்கினாராம். அது மட்டும் அல்ல, குற்றங்களை நீக்கி  அவரை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பித்தும் விட்டார்.


"என் உள்ளம் கவர் கள்வன் " என்பார் திரு ஞான சம்பந்தர். இறைவனோ, ஆச்சாரியனோ , நம்மை கேட்டு நமக்கு நல்லது செய்வது இல்லை. நமக்குத் தெரியாமலேயே பல நன்மைகளை செய்து விடுகிறார்கள்.


வீட்டுக்கு வரும் திருடன் , நம்மை கேட்டு விட்டா வருகிறான். நமக்குத் தெரியாமல் நம் வீட்டுக்குள் புகுந்து நல்லதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


இங்கே, ஆசாரியன் , வஞ்சககமாக நம் மனதில் நுழைந்து, நம் மனதில் உள்ள  வேண்டாத விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


"பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி " என்பார் மணிவாசகர்.


நல்லது எது கெட்டது எது என்று நமக்கு எங்கே தெரிகிறது?


நல்ல ஆசாரியன், குரு நமக்கு எது நல்லதோ அதைச் செய்வான், அதுவும் நாம் அறியாமலேயே.


எல்லாம் குருவருள்.


ஆச்சரியனின் அருள் எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்று இராமானுச நூற்றந்தாதியில்  திருவரங்கத்து அமுதனார் உருகி உருகி நூறு பாடல்கள் பாடி இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


குருவருள் சேரட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_27.html

Thursday, October 29, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக



உலகில் எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. அதை வேண்டியே முயற்சியும் செய்கின்றன. இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

துன்பத்திற்கு மூல காரணம் என்ன ?

காமம் - வெகுளி - மயக்கம் எந்த மூன்றும் தான் துன்பத்திற்கு காரணம்.

காமம் புரிகிறது - ஆசை, பற்று. பொருளின் மேல், புகழின் மேல், பெண்ணின் மேல், இப்படி ஆயிரம் பற்றுகள்.

வெகுளி - கோபம். ஆசைப் பட்டது கிடைக்காவிட்டால் கோபம் வருகிறது. கோபத்திற்கு காரணம் ஆசை.

மயக்கம் - எது சரி, எது தவறு / எது உண்மை, எது பொய் / எது நிரந்தரமானது, எது நிரந்திரம் இல்லாதது என்ற குழப்பம் மயக்கம் எனப்படும்.

இந்த மூன்றும் நம் துன்பத்திற்கு காரணம்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்

என்பார் வள்ளுவர்.

இந்த மூன்றும் எப்படி போகும் ?

ஆசாரியனின் பாதங்களைப் பிடித்தால் காமம், வெகுளி , மயக்கம் என்ற இந்த மூன்றும்  போகும். அவை போய் விட்டால் துன்பம் தானாக ஓடிவிடும்.


அமுதனார் சொல்கிறார்.

"எனக்கும் வருத்தம் இருந்தது. ஆனால், அந்த வருத்தம் இப்போது இல்லை.  போய் விட்டது.

எப்படி தெரியுமா ?

வார்த்தைகளுக்கு எட்டாத பெரும் புகழை உடைய நம் கூத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின் , எனக்கு இராமனுஜரின் புகழைப் பாடும் தைரியம் வந்து விட்டது. இனி மேல் இந்த பிறவி என்ற பெரும் வழியைக் கடந்து விடுவேன். எனக்கு இப்போது எந்த வருத்தமும் இல்லை. "


பாடல்

மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.


பொருள் 


மொழியைக் = வார்த்தைகளை 

கடக்கும் = தாண்டி, வார்த்தைகளுக்கு அடங்காத 

பெரும்புகழான் = பெரிய புகழை உடையவன் 

வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகமான மூன்று குறும்பான 

குழியைக் கடக்கும் = குழியை கடக்க உதவும் 

நம் = நம்முடைய 

கூரத்தாழ் வான்  = கூரத்தாழ்வானை 

சரண் கூடியபின் = சரணம் அடைந்த பின் 

பழியைக் கடத்தும் = பழியை கடக்கும் 

இராமா னுசன் = இராமானுசன் 

புகழ் பாடியல்லா = புகழைப் பாடி 

வழியைக் கடத்தல் = வழியைக் கடப்பது 

எனக்கினி யாதும் வருத்தமன்றே. = எனக்கு + இனி + யாதும் + வருத்தம் + அன்றே 

அது என்ன முக்குறும்பு ? 

குறும்பு என்றாலே செய்வதோ சொல்வதோ ஒன்றாக இருக்கும், ஆனால் அதற்குப் பின்னால்  வேறு ஒன்று இருக்கும். இந்த காம வெகுளி மயக்கம் என்ற மூன்றும்   முதலில் நல்லது போலத் தோன்றினாலும், பின்னாளில் வருத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும். 

முந்தைய பாடலில் இராமனுசன் மேல் தனக்கு அன்பில்லை, பக்தி இல்லை என்று கூறினார். பின் கூரத்தாழ்வானின் சரணம் புகுந்த பின், பயம் தெளிந்து விட்டது. இனி இராமானுஜரின் புகழைப் பாடலாம் என்று நினைக்கிறார்.

அது மட்டும் அல்ல, அபப்டி அவர் புகழ் பாடுவதன் மூலம், இந்த பிறவி என்ற நீண்ட பாதையை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வருகிறது. இனி ஒரு கவலை இல்லை என்கிறார். 

ஆசாரியன் மேல் அவ்வளவு பக்தி. அவ்வளவு நம்பிக்கை.


Friday, October 23, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால்

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால் 


நம்மைப் பார்த்து "நீங்கள் யார் " என்று கேட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நம்முடைய வீர தீர பிராதாபங்களை எடுத்து  அடுக்குவோம். நம்மிடம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லாவிட்டாலும்,  நம் பரம்பரையில்  சில பல தலைமுறைகளுக்கு முன்னால் யாராவது எதையாவது சாதித்து இருந்தால் அதைச் சொல்லி நம்மை அதோடு  தொடர்பு படுத்தி பெருமை கொள்வோம்.

அடக்கம் என்பது அணுவளவும்  கிடையாது.

ஆரவமுதனார் சொல்கிறார்

"சொல்லையும் பொருளையும் இசையோடு சேர்த்து, அன்போடு இராமனுஜரை எத்தனையோ பேர் பாடி இருக்கிறார்கள். எனக்கு புத்தி இல்லாமல், கவிதை எழுதி பழகும் நான், இந்தப் பாவி,  இராமானுஜரின் பெருமைகளை பாட முயல்கின்றேன் "

என்ன ஒரு அடக்கம் 


பாடல்

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.


பொருள்

இயலும் = சொல்லும் (சப்தமும்)

பொருளும் = சொல்லின் பொருளும்

இசையத் தொடுத்து = இசையோடு சேர்த்து

ஈன் கவிகளன்பால் = ஈன் + கவிகள் + அன்பால் = ஈனுகின்ற என்றால் பெற்று  எடுக்கின்ற   என்று பொருள். பசு கன்று ஈன்றது என்று சொல்லுமாப் போல். கவிதை  மனதில் கருக் கொண்டு, நாளும் வளர்ந்து பின் ஒரு குழந்தை பிரசவத்தில்  வருவது போல கவியின் மனதில் இருந்து கவிதை பிறக்கிறது. அப்படி, வரும் கவிதையும் , அன்பால்  வந்தது.

மயல்கொண்டு = ஆசை கொண்டு

வாழ்த்தும் = வாழ்த்தும்

இராமா னுசனை = இராமானுஜரை

மதியின்மையால் = அறிவு இல்லாமையால்

பயிலும் கவிகளில் = படித்துக் கொண்டிருக்கும் கவிதையில்

பத்தியில் லாதவென் = பக்தி இல்லாத என்

பாவிநெஞ்சால் = பாவி நெஞ்சால்

முயல்கின் றனன் = முயற்சி செய்கிறேன்

அவன் றன் = அவன் தன்

பெருங் கீர்த்தி = பெரிய புகழை

மொழிந்திடவே = சொல்லி விடவே .


என்னிடம் பக்தியும் இல்லை, அன்பும் இல்லை, கவி பாடும் திறமையும் இல்லை என்று எவ்வளவு தன்னடக்கத்துடன் கூறுகிறார்.






Thursday, October 15, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....


=============== பாகம் 3 ========================================

நல்லது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 
தீயது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 

எப்படி ஆயினும், அனுபவித்தது போக, மீதி பழ வினையாக மீண்டும் வந்து சேரும். 

பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

செயல்களின் மேல் பற்று இல்லாமல் அந்த செயல்களை செய்தால் அவற்றின் பாவ  புண்ணியங்கள் நம்மைச் சேராது என்கிறான் கண்ணன் கீதையில். 

तस्मादसक्त: सततं कार्यं कर्म समाचर |
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुष: || 19||

tasmād asaktaḥ satataṁ kāryaṁ karma samāchara
asakto hyācharan karma param āpnoti pūruṣhaḥ

tasmād = எனவே 

asaktaḥ = பற்று இல்லாமல் 

satataṁ = சதா சர்வ காலமும் 

kāryaṁ = கடமைகளை 

karma =செயல்பட்டு 

samāchara = வந்தால் 

asakto = பற்றின்மை 

hy = நிச்சயமாக 

ācharan = செய்வது 

karma = வினை 

param āpnoti pūruṣhaḥ = பரம நிலையை அடைகிறான் அவன் 

காரியங்களின் மேல் பற்று இல்லாமல் செய்தால், அந்த காரியங்களின் பாவ புண்ணியங்கள்  உங்களைச் சேராது. 

இன்னும் ஒரு படி மேலே போவோம்...

இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனம் வந்து விட்டால் , செயல்களின் விளைவுகள் நம்மை பாதிக்காது.

இதைத்தான் சைவ சிந்தாந்தம் "இரு வினை ஒப்பு" என்கிறது. 

மாணிக்க வாசகர் சொல்லுவார் "என் வினை ஒத்த பின், வித்து மேல் விளையாமல், கணக்கில்லா திருக்கோலம் நீ வந்து காட்டினாய், திருக் கழுக்குன்றிலே" என்று. 


பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

நல்லது, கெட்டது 
பாவம் , புண்ணியம் 
உயர்ந்தது, தாழ்ந்தது 

என்ற இரு வினைகளும் ஒன்றான பின், பிறவி முடிந்தது என்கிறார்.

விதை இனி முளைக்காது , அது உலர்ந்து விட்டது. "உணக்கு இல்லாதது ஓர் வித்து "  

இதையே கீதையும் ஸ்தத ப்ரன்ஞன் என்கிறது. 

மனம் அங்கும் அலையாமல் நிலை பெற்று நிற்பது. 

இந்த பாடலுக்கு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...மற்ற பாடல்களையும் பார்க்க வேண்டி இருப்பதால், இங்கே நிறுத்திக் கொண்டு அடுத்த பாடலுக்கு போவோம்.




Wednesday, October 14, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 2

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 2


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....





 

Tuesday, October 13, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து 


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....