Saturday, March 30, 2013

ஓராண்டு நிறைவு !


ஓராண்டு நிறைவு !


இந்த ப்ளாக் ஆரம்பித்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. 31-மார்ச் - 12 அன்று தொடங்கியது இந்த ப்ளாக். 

இதுவரை ....

603 ப்ளாகுகள் 
32,000 பக்க வாசிப்புகள் (page views)
5,687 வாசிப்பாளர்கள் (visitors )
326 நகரங்கள் (cities )

........

எல்லோருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. 


இன்னும் எழுதுவேன் 

இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது


இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது


அலுவகலத்தில் நீங்கள் பதவி உயர்வை எதிர்ப்பார்த்து காத்து இருகிறீர்கள். உங்கள் மேலதிகாரி சொல்லிவிட்டார் இந்த வருடம் உங்களுக்கு பதவி
உயர்வு கட்டாயம் உண்டு என்று.

உங்கள் மனைவியடம் சொல்லிவிட்டு போகிறீர்கள் ...இன்னைக்கு சாயங்காலம் வரும் போது பதவி உயர்வு (promotion ) கடிதத்தோடு வருவேன்...சினிமாவுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு சந்தோஷமா அலுவகலம் போகிறீர்கள்...பதவி உயர்வு கடிதத்திற்கு பதில் உங்களை வேலையை விட்டு தூக்கி விட்டோம் என்று சொல்லி ஒரு கடிதம் கொடுத்தால் எப்படி இருக்கும் ?

இராமனுக்கு அப்படி தான் இருந்தது....

சக்கரவர்த்தி ஆக போகிறோம் என்று நினைத்து போனவனிடம், சகரவர்த்தி எல்லாம் ஒண்ணும் கிடையாது நீ ஊருக்குள்ளேயே இருக்கக் கூடாது, காட்டுக்குப் போ , அதுவும் பதினாலு வருஷம் என்று சொன்னால் எப்படி இருக்கும் ....

சரி இப்ப கதைக்கு வருவோம்...பதினாலு வருடம் கானகம் போ அன்று சொன்ன அந்தத் தருணத்தில் யார் யார் இருந்தார்கள் அந்த இடத்தில் ?

இராமனும், கைகேயியும் மட்டும் இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. வேண்டுமானால் கடவுள் இருந்தார், அவருக்குத் தெரியும் என்று சொல்லலாம்.

இராமன் முகம் எப்படி மாறியது என்று யாருக்குத் தெரியும் ?

கம்பன் கூறுகிறான் .... அவன் முகம் எப்படி மாறியது என்று எம்மை போன்ற கவிஞர்களால் சொல்லுவது எளிது அல்ல. யாராலும் சொல்ல முடியாத அருமையான குணங்கள் கொண்ட இராமனின் முகம் அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னால், கேட்க்கும் அந்த தருணம், அந்த நொடி, கேட்ட பின் இந்த மூன்று சமயத்திலும் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போல இருந்தது என்றார்

ஒரு கணம் கூட முகம் வாடவில்லை. ஏன் இப்படி என்ற சந்தேகம் குறி கூட இல்லை முகத்தில்.

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன். செய்து காண்பித்தான் இராமன்.

எவ்வளவு பெரிய அதிர்ச்சி...எவ்வளவு பெரிய ஏமாற்றம்..சிரித்த முகத்தோடு ஒரு சின்ன  மாற்றம் கூட இல்லாமல் ஏற்றுக் கொண்டான்...

அதை விடவா நமக்கு பெரிய இழப்பும், நட்டமும் வந்து விடும்.....

வாழ்வில் எதையும் sportive ஆக எடுத்துக் கொள்ள பழக வேண்டும்...


பாடல்


இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

பொருள்


Friday, March 29, 2013

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப்  படும் 



சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள்


சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள் 


குதர்க்கம் பேசுபவர்கள் இன்று மட்டும் அல்ல அன்றும் இருந்திருக்கிறார்கள்.

கோவலனும், கண்ணகியும் புகார் நகரை விட்டு மதுரை நோக்கி செல்லும் வழியில் கவுந்தி அடிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் மூவரும் ஒரு சோலையில் ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது ஒரு குதர்க்கவாதி வருகிறான். அவனை வறு மொழியாளன் என்கிறார் இளங்கோ. வறுமையான மொழி...மொழியில் சிறப்பு இல்லாமல் வறண்ட மொழிகள்.

அவன் கவுந்தி அடிகளை பார்த்து கேட்க்கிறான் காமனும் அவன் மனைவி ரதியும் போல் இருக்கும் இவர்கள் யார் என்று.

கவுந்தி அடிகள், இவர்கள் என் பிள்ளைகள் என்று கூறினார்

குதர்க்கவாதி - உங்கள் பிள்ளைகள் என்றால் எப்படி அவர்கள் கணவன் மனைவியாக இருக்க முடியும் ?

அதை கேட்ட கண்ணகி நடுங்கிப் போனாள். கையால் காது இரண்டையும் பொத்திக் கொண்டாள். அப்படியே போய் கோவலன் பின்னால் மறைந்து கொண்டாள்.

தீய சொல்லை கேட்டாலே நடுங்கும் குணம். எவ்வளவு சிறந்த குடிப் பிறப்பு. தீச்சொல் சொல்லுவதை விடுங்கள். பிறர் சொல்வதை கேட்டாலே நடுங்கும் குணம்.

பாடல்:


வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-


"கவுந்தியின் மறுமொழி"

மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

"கவுந்திஅடிகள் சாபம்"

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-


பொருள்


Thursday, March 28, 2013

இராமாயணம் - தோல்வி கண்டு துவளாதீர்கள்

இராமாயணம் - தோல்வி கண்டு துவளாதீர்கள் 


 உங்களுக்கு  ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி எது என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, பங்கு சந்தையில் தோல்வி என்று பல தோல்விகள் இருக்கலாம். அப்படி எல்லாம் பெரிய தோல்வி ஒன்றும் இல்லை என்று நீங்கள் கூறினால், நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

தோல்வியில் மனிதன் துவண்டு போகிறான்...சில சமயம் வாழ்க்கையே முடித்துக் கொள்ள கூட செய்கிறான்.

தோல்வியை எப்படி எதிர்கொள்வது . ?

இராமன் எப்படி எதிர் கொண்டான் என்று பார்ப்போம்.

இராமனுக்கு முடி சூட்ட தசரதன் முடிவு செய்து விட்டான். மந்திரிகள் அதை அமோதித்தார்கள். ஊரே விழாக் கோலம் பூண்டு விட்டது.

இராமன் சக்ரவர்த்தியாகப் போகிறான். ஒரு தடையும் இல்லை.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். மிகப் பெரிய பதவி, அதிகாரம், செல்வம் எல்லாம் வரப் போகிறது. நீங்களாய் இருந்தால் எப்படி இருப்பீர்கள்.

இராமன் தசரதன் மாளிகைக்கு வருகிறான்.

கைகேயியை வணங்குகிறான்.

தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 

தாய் என்று நினைத்துப் போனான், அவளோ கூற்றுவானாக வந்து நின்றாள் .

உன் தந்தை உனக்கு ஒன்றை சொல்ல சொன்னார் என்றாள். என்ன சொன்னாள்  என்று உங்களுக்குத் தெரியும்.

நீ 14 வருடம் காடு போ. பரதன் நாடு ஆள வேண்டும் என்று கூறுகிறாள்.


நாட்டை ஆள இருந்தவனை, நாடு இல்லை என்பதுடன் நிற்காமல், காட்டுக் போ என்றாள்.

எப்படி இருக்கும் ? மலை உச்சியில் இருந்து பாதாளத்தில் தள்ளி விட்ட மாதிரி.

நீங்களா இருந்த என்ன செய்து இருப்பீர்கள்? கோபம் வந்திருக்கும். வருத்தம் வந்திருக்கும். ஒண்ணும் முடியவில்லை என்றால் துக்கத்தில் மனம் ஒடிந்து வாழ்க்கையையே முடித்து கொள்ளலாம் என்று கூட நினைத்து இருப்பீர்கள்.

அரசு கிடைக்காதது ஒரு புறம். எப்படி மற்றவர்களிடம் முகம் காட்டுவது. எல்லோரும் சிரிப்பார்களே. மற்றவர்களை விடுங்கள், சீதை என்ன நினைப்பாள். தன் கணவன் சக்ரவர்த்தியாகப் போகிறான் என்று நினைத்து கொண்டு இருந்தவளிடம் போய் , காட்டுக்குப் போக வேண்டும் என்றால் அவள் என்ன நினைப்பாள் ?

இராமன் முகம் வாடி இருக்க வேண்டும் அல்லவா ? துவண்டு இருப்பான் அல்லவா ? ஒரு கணமாவது வருந்தி இருப்பானா ?

அந்த ஏமாற்றத்தை , தோல்வியை அவன் எப்படி எதிர் கொண்டான் என்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம். இராமனுக்கு வந்த அளவிற்கு நமக்கு ஏமாற்றமோ, இழப்போ வர வழியில்லை

அவன் அதை எப்படி ஏற்றுக் கொண்டான் என்பதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.




Wednesday, March 27, 2013

இராமாயணம் - உயர்வு தாழ்வு


இராமாயணம் - உயர்வு தாழ்வு 


மனிதர்களில் உயர்வு தாழ்வு உண்டா ? 

இல்லை என்று நீங்கள் சொல்லலாம். எல்லோரும் சமம் என்று சொல்லுவது எளிது. 

உங்கள் தெருவை சுத்தம் செய்யும் ஆளை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவீர்களா ? முடியுமா ?

மற்ற ஒரு ஜாதிக்காரனை உங்கள் வீட்டில் ஒருவனாக , உங்கள் சகோதரனாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ? 

நீங்கள் சுத்த சைவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்...உங்களுக்கு முன்ன பின்ன அறிமுகள் இல்லாத ஒருவர் உங்களைப் பார்க்க கொஞ்சம் மாமிசம் எடுத்துக் கொண்டுவந்தால்  உங்களுக்கு எப்படி இருக்கும் ? உங்களால் அதை சகிக்க முடியுமா ?

இராமனால் முடிந்திருக்கிறது.

உங்களையும் என்னையும் விட மிக உயர்ந்த இடத்தில் இருந்த, சக்ரவர்த்தி திருமகனான   இராமன்,  தன்னை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்த குகனை, "வா என்னோடு பக்கத்தில் அமர் "என்றான் , நீ என்னுனடைய தம்பி என்றான். தன் மனைவியான சீதையை அவனின் உறவினன் என்றான்....நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாது. 


குகன் என்ற அந்த கதா பாத்திரம் கதைக்கு தேவையே இல்லை. கதையை முன் எடுத்துச் செல்லவோ , அதில் ஒரு திருப்பம் கொண்டுவரவோ அந்த கதா பாத்திரம் எந்த விதத்திலும் உதவி செய்ய வில்லை.

பின் எதற்கு அந்த கதா பாத்திரம் ?

குகன் மூலம் கம்பன் ஒரு உயரிய செய்தியை சொல்ல வருகிறான். 

குகன் எப்படி பட்டவன் ?


காயும் வில்லினன், கல் திரள் தோளினான்

தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான்.

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.

மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான்

கருத்த மேனி, இருளுக்கு எண்ணெய் தடவிய மாதிரி ஒரு உருவம், சிரிப்பு என்பதே கிடையாது, கோபம் வராமலே கூட  தீ விழ நோக்கும் விழியை உடையவன், எமனும் அஞ்சும் குரல் வளம், மீன் வாடை அடிக்கும் உடல் ....

அப்படி பட்ட குகனை, இராமன் வேற்றுமை பாராட்டாமல், உடன் பிறப்பாய் நினைத்தான். 

இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தினால் எத்தனை போர்கள், எத்தனை உயிர் இழப்புகள், எத்தனை துவேஷம், எவ்வளவு சண்டை சச்சரவுகள் ...

அத்தனை வேற்றுமையும் மறைந்து எல்லோரும் ஒற்றுமையாக சகோதரர்களாய் வாழ வழி காட்டுகிறான் இராமன். 

அந்த குகனைப் பார்த்து "தாயினும் நல்லான் ", "தீராக் காதலன்" என்று அன்பு பாராட்டுகிறான்  இராமன்.

யாதினும் இனிய நண்ப!  என்று நட்பு பாராட்டுகிறான் 

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ? 

இன்று உலகில் எத்தனை சண்டைகள் - கறுப்பர் - வெளுப்பர், பாலஸ்தினியர் - இஸ்ரேலர் , தமிழர் - சிங்களவர் , இந்தியா - பாக்கிஸ்தான் என்று ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு இனமும் ஒன்றை ஒன்று  அழிக்க நினைத்து சண்டை இட்டுக் கொண்டிருகின்றன....

அன்பும் சகோதரத்துவமும் அழிந்து போய் விட்டன ...

இதை படிக்கும் நீங்கள், இதுவரை தூரத்தில் வைத்த சில நபர்கள் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட  இராமன் காட்டிய வழியில் நீங்கள் முதல் அடி எடுத்து வைத்து இருக்கீர்கள்  என்று பொருள்.

யோசித்துப் பாருங்கள் எவ்வளவு  இராமனிடம் எவ்வளவு அன்பும், கருணையும் இருந்திருக்க வேண்டும்... 

நெகிழ வைக்கும் அன்பு. 

இராமாயணம் படிப்பது கம்பனின், வால்மீகியின்  கவித்திறமையை இரசிக்க மட்டும் அல்ல.அவர்கள் சொல்ல வந்ததை உணர்ந்து அதில் ஒரு சிலவற்றையாவது நாம் உள் வாங்கி அதன் படி நடக்க வேண்டும்...அது நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு.....

நம்மை விட தாழ்தவர்களை, மதித்து அவர்களிடம் அன்பு பாராட்டி வாழ முயற்சிப்போம்.

அவர்களோடு, இராமன் செய்தது மாதிரி  ஒன்றாக இருக்க வேண்டாம், அவர்களை நமது உடன் பிறப்பாய் நினைக்க வேண்டாம், அவர்களை பாராட்ட வேண்டாம்...அவர்களை அங்கிகரிக்கவாவது செய்வோம்...

கம்பன் சந்தோஷப் படுவான் - பட்ட பாடு வீணாகவில்லை என்று....   

 

இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி


இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி  


அவதாரம் என்ற சொல்லுக்கு எது கீழே இறங்கி வர வேண்டிய அவசியமே இல்லாவிட்டாலும், கீழே இருப்பவர்களை மேலே ஏற்றிவிட வந்ததோ அது என்று பொருள் படும். 

திருமாலுக்கு இந்த பூமிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இங்குள்ள மக்களை மேலே உயர்த்தி விட அந்த சக்தி கீழே இறங்கி வந்தது. எனவே அது அவதாரம். 

இரு கை வேழத்து இராகவன்தன் கதை

வேழம் (யானை ) என்ன செய்யும்...தன் காலை பிடித்தவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி விடும். அது போல நம்மை கடைந்தேற்ற வந்த ஒரு சக்தி இராமன். 

நீங்கள் இறைவனை நம்புங்கள், நம்பாமல் இருங்கள். 

நீங்கள் இராமன் என்று ஒருவன் இருந்தான் என்பதை நம்புங்கள், அல்லது நம்பாமல் போங்கள்.

இராமாயணம் ஒரு கதை என்றே இருக்கட்டும். 

நான் எதற்கு இராமாயணம் படிக்க வேண்டும் ? வேற வேலை இல்லையா ? அதைவிட ஆயிரம் முக்கியமான வேலை இருக்கு...இது எல்லாம் தாத்தா பாட்டி  வயசுல படிக்க  வேண்டியது ..இப்ப என்ன அவசரம் என்று நினைக்கும் இளைய தலை முறைக்கு அவர்கள் வாழ்வை எதிர் கொள்ள உதவும் ஒரு அற்புதமான நூல்  கம்ப இராமாயணம். 

இளைய தலைமுறை தான் இதை முதலில் படிக்க வேண்டும். 

அந்த கதையில் வாழ்ந்த ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டி இருக்கிறான். 

நம் வாழ்வின் வரும் ஒவ்வொரு சிக்கலும் அவன் வாழ்விலும் வந்தது. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட பல மடங்கு துயரம் அவனுக்கு வந்தது. அவன் அவற்றை எப்படி எதிர் கொண்டான், எப்படி வாழ்ந்தான் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது 

தொழிலில் சின்ன நஷ்டம், வாங்கிய பங்கு (share ) விலை குறைந்து விட்டால், வீடு ஒரு மாதம் வாடகைக்கு  போகாமல் பூட்டி இருந்து விட்டால் ஏதோ உலகமே இருண்டு போன மாதிரி  கவலைப் படுகிறோம்....

நாம் மலை போல் நம்பிய ஒருவர் நம்மை கை விட்டால் நாம் எப்படி உடைந்து போவோம்..

உறவினர்களை, நண்பர்களை எப்படி அரவணைத்துப் போவது, பெரியோரிடம் மரியாதை, ஆசிரியரிடம் பக்தி, மனைவியிடம் அன்பு, அண்டியவர்களை காக்கும் உயர் குணம், மற்றவர்களின் உயர் குணங்களை பாராட்டும் நற்பண்பு, பொறுமை, வீரம், இதமாக பேசுவது, இனிமையாகப் பேசுவது, மக்களை எடை போடுவது, அன்பு பாராட்டுவது, மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வது , பாசம், இறை உணர்வு, என்று வாழ்வின் அத்தனை  பரிணாமங்களையும் தொட்டுச் செல்கிறது இராமன் என்ற அந்த கதா பாத்திரம். 

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டிச் செல்கிறது. 

வாழ்வில் சிக்கல் வரும்போது, துன்பம் வரும் போது , கவலை வரும்போது, இழப்புகளும், நட்டங்களும்  வரும்பொழுது என்ன செய்யலாம், எப்படி செய்யாலாம் , யாரக் கேட்கலாம் என்று நாம் தவிக்கும் போது, நமக்கு வழி காட்டியாய் இருப்பது இராமனின் வாழ்க்கை. 


கம்ப இராமாயணம் காட்டும் இராமனின் வாழ்க்கை நமக்கு எப்படி உதவும், வழி காட்டும், துன்பங்களை தாங்கிக் கொள்ள, சிக்கல்களை விடுவிக்க, எப்படி அது உதவும் என்ற  அடுத்து வரும் சில ப்ளாகுகளில் சிந்திப்போம். 



குறுந்தொகை - மொழி தெரியாத காதலன்

 குறுந்தொகை - மொழி தெரியாத காதலன் 



காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள்...காதுமா இல்லை ? மொழி தெரியாத  பற்றிய ஒரு பாடல் குறுந்தொகையில்...


கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் 
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி 
ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே 
எழுவினி வாழியென் னெஞ்சே முனாது 
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
மொழிபெயர் தேஎத்த ராயினும் 
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே. 


படிச்சாச்சா ? நல்லா இருக்குல ? எவ்வளவு இனிமையான பாடல்...அப்படின்னு சொல்லிட்டு போனா "உன்னை தூக்கி சைப்ரஸ்ல போட "னு  என்கூட சண்டைக்கு வருவீர்கள் 

சீர் பிரிக்கு முன், வார்த்தைக்கு வார்த்தைக்கு அர்த்தம் பார்க்குமுன் , பாடலின் பின்னணியை பார்ப்போம் ...


அவளுக்கு அவன் மேல் காதல். 

இரண்டு பேருக்கும் மொழி கூட பொது கிடையாது. எப்படிதான் காதலை சொன்னார்களோ. அதுதான் சுவாரசியமான விஷயம் 

அவன், அவனுடைய சொந்த ஊருக்குப் போய் விட்டான்....காதலிக்கு   வழக்கம் போல் கை வளையல்கள் நெகிழ்கிறது, தூக்கம்  வரவில்லை, (மின்சாரம், மின் விசிறி இல்லாமல் அந்த காலத்தில் எப்படி  தான் தூங்கினார்களோ ?)...பேசாம அவன் இருக்கும் ஊருக்கு போயிரலாமா  என்று யோசிக்கிறாள் ..என்ன அந்த ஊரில் எல்லோரும் வேறு மொழி பேசுபவர்கள் ... 

முதலில் பாடலை சீர் பிரிப்போம் 



கோடு ஈர் இலங்கு வளை நெகிழும் நாள் தொறும் 
பாடு இல் கலி உழும் கண்ணோடு புலம்பி 
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே 
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது 
குல்லை கண்ணி வடுகர் முனை அது 
பல் வேறு கட்டி நல் நாட்டு உம்பர் 
மொழி பெயர்த்தே எத்தர் ஆயினும் 
வழி பாடல் சூழ்ந்திசினி அவருடைய நாடே 

நிறையவே புரியுது இல்ல ?

வார்த்தை வார்த்தையா பிரிச்சு மேஞ்சுருவோமா ?



Tuesday, March 26, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4



கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4




அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் மூன்று  அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று கடைசி அடி

தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே


ஒளியில் விளைந்த, உயர் ஞானமான மலையின் உச்சியில், அன்பில் அருளில் விளைந்த  ஆனந்தத் தேனை, வெறும் பாழில், வெறும் தனியில் உதித்த அதை  அருளியவன்  தேசிகன். தேசிகன் என்றால் குரு என்று பொருள்

எத்தனையோ குரு உண்டு அதில் இது எந்த குரு என்ற கேள்வி வரும் அல்லவா ?

முகம் ஆறு உடை தேசிகன்...ஆறுமுகம் உள்ள குரு ஒரே ஒருவன் தான், அவன் தான் முருகன்

அவன் என்ன செய்தான் ...

அருணகிரி தெரிய சொல்லவில்லை, தெளிய சொன்னான்...அதாவது தெரிதல் அறிவின்பால் பட்டது...தெளிதல் உணர்வின் பால் பட்டது...."பட்டு தெளிஞ்சா தான்  உனக்கு புத்தி வரும் " என்று சொல்வதைப்  போல ....சொன்னால் புரியாது  அனுபவித்தால் தான் தெரியும்.எனவே தெளிய விளம்பியவா என்றார்

இப்படி ஒரு பாடலில் இவ்வளவு அர்த்தம்....

வேறு என்ன சொல்லப் போகிறேன் ...முடிந்தால் மூல நூலை படித்துப்  பாருங்கள் ...இப்படி எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன

திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு


திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு 




தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

தீய செயல்களை செய்ய கெட்டவர்கள் அஞ்ச மாட்டார்கள், நல்லவர்கள் அஞ்சுவார்கள்.

இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? நமக்கே தெரியும் இல்லையா ?

சற்று உன்னிப்பாக கவனிப்போம்.

தீவினையார் அஞ்சார், விழுமியவர் அஞ்சுவர் - ஏன் ?

ஒரு தீய செயலை செய்ய முதன் முதலில் முற்படும் போது  நிறையவே பயம் இருக்கும். ஒரு வேளை மாட்டிக் கொள்வோமோ என்று ? அதுவே நாள் ஆக ஆக பழகி விடும். பயம் விட்டுப் போகும்.

பயம் இல்லாமல் ஒருவன் ஒரு தீய செயலை செய்கிறான் என்றால் அவன் அதை நிறைய நாட்களாகச் செய்கிறான் என்று அர்த்தம்.

மேலும்,  அப்படி செய்து செய்து அதில் பெரிய வல்லுனராகி விடுவான். அந்த தீச் செயல்  செய்வதில் அவனுக்கு ஒரு பெருமையும் கூட இருக்கும். "தீவினை என்னும் செருக்கு " என்றார் வள்ளுவர்.

மறை பொருள் என்ன வென்றால்,

தீய செயல்கள் செய்ய ஆராம்பிக்காமல் இருப்பதே நல்லது. முதலில் பயம் வரும். அப்பவே விட்டு விட வேண்டும். என்ன தான் ஆகும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தால் , பின் பயம் போய் விடும்...அது மட்டும் அல்ல அந்த தீவினை செய்வதே பெரிய பெருமை போல்  ஆகி விடும்.....பயம் போய் செருக்கு வந்து விடும்.  செருக்கு கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். அழிவு நிச்சயம்.

ஒரே ஒரு தடவை என்று ஆரம்பிப்பது பின்னால் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும்.

நாம் நிறைய பேரை பார்க்கலாம் ... தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, லஞ்சம் கொடுத்து காரியம்  சாதிப்பது இதை எல்லாம் பெரிய பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள்..

அது எல்லாம் தவறு என்பதே மறந்து போகும். ...

குழந்தைகளுக்கும் சொல்லி வையுங்கள்....பின்னாளில் உதவும் அவர்களுக்கு.


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3



அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் இரண்டு அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று மூன்றாவது அடி


வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை

அந்த ஆனந்தத்தேன் எங்கு விளைந்தது தெரியுமா ?

தனிமையில் விளைந்தது.....

எப்படிப்பட்ட தனிமை 

வெறும் தனிமை...

அது என்ன வெறும் தனிமை...?

தனிமைக்கும் , வெறும் தனிமைக்கும் என்ன வித்தியாசம் ? 

நீங்க உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கு ஒரு விடுமுறை தினத்தன்று போகிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம் ? அங்க யார் இருப்பா ? யாரும் இருக்க மாட்டார்கள். வாசலில் ஒரு காவல் காரன் மட்டும் தனியா இருப்பான்.

அவன் தனியாகவா இருக்கிறான் ? பள்ளிக் கூட கட்டிடம் , அங்கு உள்ள மரம் செடி கோடி எல்லாம் இருக்கிறதே ...எப்படி தனியாக இருப்பான் ?  

தனி என்றால் வேறு மனிதர்கள் யாரும் இல்லாமல் என்று குறிப்பு. அதாவது தன்  இனம் இல்லாதது தனிமை.  அந்த புகை வண்டி நிலையத்திற்கு சென்றேன்..ஒரே ஒரு என்ஜின் மட்டும் தனியா நின்று கொண்டிருந்தது என்று சொல்லுவோமே அத போல. 

இனம் இல்லாதது தனிமை. மற்ற பொருள்களும் இல்லை என்றால் ? ஏதுமற்ற தனிமை? 

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை, மரம் செடி கொடிகள் இல்லை, தரை இல்லை, காற்று இல்லை, வெளிச்சம் இல்லை அந்த காவல் காரன் மட்டும் இருந்தான் என்றால் அது வெறும் தனி 


அந்த வெறும் தனிமையில் விழைந்தது பாழ்... பாழ் என்றால் ஒன்றும் இல்லாதது....

அதோ தெரிகிறதே அது ஒரு பாழடைந்த கட்டிடம், அது ஒரு பாழ் நிலம் (பாலை நிலம்) என்று கூறுவது போல. 

பாழ் நிலம், என்றால் அதை அடுத்து வேறு எதாவது இருக்கும். 

அருணகிரி சொல்லுகிறார் ...

வெறும் பாழ் 

அப்படி என்றால் அந்த பாழை தாண்டி ஒன்று இல்லை.

வெறும் பாழ் பெற்ற வெறும் தனிமை.....


அந்த வெட்ட வெளியில் விளைந்த பாழில் இருந்து விளைந்த ஆனந்தத் தேன் 


என்னய்யா இது பாழ், தனிமை, தேன் அது இதுனு போட்டு ஒரே குழப்பமா இருக்கே..இது எல்ல்லாம் யாரு சொன்னா ? இதை எல்லாம் எப்படி நம்புறது ? 

அதையும் சொல்கிறார் அருணகிரிநாதர் 











சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து


சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து 


முதலிலேயே சொல்லி விடுகிறேன்...இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

சிலபதிகாரத்தில், கானல் வரிப் பாடல்

அது ஒரு கடற்கரை உள்ள ஊர். கடற்கரை காற்று நீர்த் திவலைகளை சுமந்து வந்து உங்கள் முகத்தோடு உரசிப் போகும். வெண்மையான மணர் பரப்பு.

கரையின் கன்னத்தில் ஓயாமல் முத்தமிடும் அலைகள்.

அந்த கடற்கரையில் வலம்புரி சங்குகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலைந்ததால், கடற்கரை மணலில் வரி வரியாக கோடு  விழுகிறது. .

அந்த கடற்கையில் நிறைய புன்னை மரங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்த புன்னை மரங்கள் பூத்து குலுங்குகின்றன.

காற்றடிக்கும் போது, புன்னை மலர்கள் உதிர்கின்றன. புன்னை மரங்கள் பூமிக்கு பூவால் அர்ச்சனை செய்வது போல் இருக்கிறது.

சங்கு வரைந்த கோடுகள், தடங்கள் எல்லாம் இந்த பூக்கள் விழுந்து மறைந்து விட்டன.

காதலனும் காதலியும் ஒருன்றாக இருக்கும் போது ஏற்படும் சில பல தடங்களை ஆடையிட்டு மறைப்பதில்லையா...அது மாதிரி..

அந்த கடற் கரையில் அவனும் அவளும் நாளும் பேசாமல் பேசியது அந்த கடலுக்கு மட்டும் தெரியும்.

இன்று அவள் இல்லை. வரவில்லை. அவன் மட்டும் தனித்து இருக்கிறான்.

இருக்கப் பிடிக்கவில்லை. போகலாம் என்றால் , போய் தான் என்ன செய்ய ?

காதலும் கருணையும் கலந்த அவள் கண்களை காணாமல் அவன் வாடுகிறான்.

இந்த கவலை நோய்க்கு என்னதான் மருந்து ? ஒரே ஒரு மருந்து இருக்கிறது...அதுவும் அவ கிட்டதான் இருக்கு....

பாடல்

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
    தோற்ற மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
    போர்க்குங் கானல்
நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
    தீர்க்கும் போலும்.

பொருள்


Monday, March 25, 2013

சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும்


சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும் 


அவள்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா ?

தோழி: ம்ம்..சொல்லு...என்ன விஷயம்

அவள்: அவனுக்கு வர வர என் மேலே அன்பே இல்லைன்னு தோணுது

தோழி: ஏன், என்ன ஆச்சு ...

அவள்: அப்ப எல்லாம் என் பின்னாடி எப்படி சுத்துவான் ? இப்ப என்னடானா , கண்டுக்க கூட மாட்டேங்கிறான்....

தோழி: அப்படி எல்லாம் இருக்காது...அவனுக்கு என்ன பிரச்சனையோ....கொஞ்சம் பொறு...

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

சீர் பிரித்தபின்


காதலராகி கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யான் அறியோம் ஐய 
மாதரார் கண்ணும் மதி நிழல் நீரினை கொண்டு மலர்ந்த நிலப் 
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகார் எம்மூர் 

பொருள்

காதலராகி = காதலராகி

கழிக் கானற் = மிக விரும்பி காண்பதற்கு


கையுறை = பரிசு பொருள்கள்

 கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு என் பின் வந்தார்

ஏதிலர் தாமாகி = (இன்னைக்கு என்னடா என்றால் ), ஏதோ அயலானைப் போல

யாம் இரப்ப நிற்பதை = நான் விரும்பி வேண்டி நின்றாலும்

 யான் அறியோம் ஐய = அறியாதவர் போல் நிற்கிறார்

மாதரார் கண்ணும் = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலை

 நீரினை கொண்டு = நீரில் கொண்டு

 மலர்ந்த = மலர்ந்த

 நிலப் போதும் = மலர்களை (போது = மலர் )

அறியாது = எது என்று அறியாது

வண்டு ஊசலாடும் = வண்டு ஊசலாடும்

புகார் எம்மூர் = புகார் எங்கள் ஊர்

வண்டுகள் பெண்களின் முகத்திற்கும், நிலவின் நிழல் சேர்ந்த நீரில் உள்ள மலருக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும்  வண்டுகள் உள்ள ஊர் எங்கள் ஊர்.

அந்த வண்டு மாதிரி இந்த தலைவனும், நான் என்று நினைத்து வேறு எவ பின்னாடியோ போய் விட்டானோ என்பது தொக்கி நிற்கும் பொருள்.



திருக்குறள் - தீச்சொல்


திருக்குறள் - தீச்சொல் 


சில குறள்கள் கொஞ்சம் வளைந்து செல்வது போல் இருக்கும். Curved ball என்று சொல்லுவார்களே அந்த மாதிரி

அப்படி ஒரு குறள்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும் .

சீர் பிரித்தபின்

ஒன்றானும் தீச் சொல் பொருட் பயன் உண்டாயின் 
நன்று ஆகாதாகி விடும் 

நாம் ஒருவருக்கு எவ்வளவோ நன்மை செய்திருப்போம். ஆனால், ஒரே ஒரு தீச் சொல் அவரிடம் சொல்லி, அதுவும் பலித்து விட்டால், இது வரை செய்த நன்மை எல்லாம் போய் விடும். சொன்ன தீச் சொல் பொருட் பயன் உண்டாயின், (இதுவரை செய்தது எல்லாம் ) நன்று இல்லை என்று ஆகி விடும்.  அந்த தீமையை மட்டுமே அவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள்.

இன்னொரு பொருள்

ஒரே ஒரு தீச் சொல் சொல்லி, அதன் மூலம் நமக்கு பொருட் பயன் ஏற்பட்டால் , அந்த பயன் நல்லது அல்ல. இங்கே தீச் சொல் என்பதை பொய் என்று கொள்ளலாம் . பொய் சொல்லி பணம் சம்பாதித்தால், அது நன்மை பயக்காது என்று ஒரு பொருள்.


இன்னொரு பொருள்

தீச் சொல் சொல்லி பொருள் சேர்த்தால், நாம் செய்த மற்ற அறங்கள், நல்லவை எல்லாம்  ஆகாதாகி விடும்.. "இவன் எப்படி சொத்து சேர்த்து இப்படி நல்லது எல்லாம்  செய்றானு எனக்குத் தெரியாதா " என்று உலகம் ஏசத் தலைப்படும்


தீச் சொல் என்பது பொய், புறம் சொல்லுவது, புண் படுத்துவது,  திரித்துக் கூறுவது, பயனில்லாத சொல் என்று பலவகைப்படும்

எனவே, தீச்சொல் பற்றி மிக மிக கவனமாய் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு சொல், இதுவரை செய்த நல்லவை எல்லாவற்றையும் அழித்துவிடும்.

ஒரு தீச் சொல் உங்களின் வாழ்நாள் பூராவும் சேர்த்த நல்லவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது .

வள்ளுவர் எச்சரிக்கிறார்....

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2 


அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

நேற்று இந்தப் பாடலின் முதல் வரியை சிந்தித்தோம்.. இன்று இரண்டாவது வரி. 


ஞானத்தின் உச்சியில் இருந்து பார்கிறார் அருணகிரி. என்ன தெரிகிறது ?

அளியில் விளைந்த  


அளி என்ற சொல்லுக்கு அன்பில் விளைந்த அருள் என்று பொருள். ஆங்கிலத்தில் "grace" என்று சொல்லலாம்.

அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை 


சாலை, வீடுகள், கட்டிடங்கள் என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு ஊர், மலை மேல் ஏறி நின்று பார்த்தால் எப்படி இருக்கும் ? அங்கொரு மலை, இங்கொரு குளம், சற்று தள்ளி வளைந்தோடும் ஒரு நதி, இந்த பக்கம் கொஞ்சம் பசுமையான வயல்கள் என்று பார்க்க மிக அழகாக இருக்கும் அல்லவா ?

வாழ்க்கையோடு நாளும் ஒட்டி, உறவாடி அதில் அமிழ்ந்து கிடந்தால் அதில் உள்ள சின்ன சின்ன  விஷயங்கள் கூட பெரிதாய் தெரியும். ஞானம் ஏற ஏற...அதே வாழ்க்கை மிக இனிமையாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

அன்பில் விளைந்த ஆனந்தத் தேனை....ஆனந்தமான தேன்....

தேன் எப்படி இருக்கும் ? இனிக்குமா, கசக்குமா ? இனிக்கும் என்றால் எப்படி இனிக்கும் ? சர்க்கரை மாதிரி இருக்குமா ? பால்கோவா மாதிரி இருக்குமா என்று கேட்டால்  எப்படி ? அதை அறிய வேண்டும் என்றால் அதை சுவைத்துப் பார்க்க வேண்டும். அந்தத் தேன் எங்கு கிடைக்கும் ? ஞானத்தின் உச்சியில் கிடைக்கும்.




Sunday, March 24, 2013

இராமாயணம் - அழியா அழகு


இராமாயணம் - அழியா அழகு 


வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


இராமன், இலக்குவன், சீதை மூவரும் கானகம் போகிறார்கள். 

இராமன் மேல் வெயில் அடிக்கிறது. கம்பனுக்குத் தாங்க முடியவில்லை. இந்த பகலவன் இராமனை இப்படி சுடுகிறானே என்று தவிக்கிறான். 

பகலவனுக்கு ஆயிரம் பெயர்  இருக்கிறது. சூரியன், ஞாயிறு, பகலவன், ஆதவன் என்று ஆயிரம் பெயர் இருந்தாலும், கம்பன் "வெய்யோன்" என்று குறிப்பிடுகிறான். வெய்யோன் என்றால் கொடியவன் என்று பொருள் 

வெய்யோனின் ஒளி இராமனின் மேல் படுகிறது. மற்றவர்கள் மேல் பட்ட ஒளி பிரதிபலிக்கும். இராமன் மேல் பட்ட ஒளி, அவன் மேனியின் ஒளியில் மறைந்து போனதாம். 

சூரியனின் மேல் டார்ச் லைட் அடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி சூரியனின் ஒளி இராமனின் மேனி ஒளியில் மழுங்கிப் போனது.

கம்பன் இன்னும் மெருகு ஏத்துகிறான் பாடலுக்கு.

சூரியனில் இருந்து வருவது ஒளி; இராமனின் மேனியில் இருந்து வருவது சோதி. ஜோதி என்பது ஒரு ஆன்மீக அர்த்தம் கொண்டது. விளக்கில் உள்ளதும் நெருப்புதான், சிகரட் லைட்டரில் உள்ளதும் நெருப்புதான் என்றாலும் விளக்கில் உள்ளதை ஜோதி என்று சொல்லுவது மாதிரி.

வெய்யோனின் ஒளி வெறும் ஒளி அவ்வளவுதான். இராமனின் உடலில் இருந்து புறப்படுவதோ விரி ஜோதி...வினைத்தொகை...விரிந்த விரிகின்ற இன்னும் விரியும் ஜோதி. 

அடுத்த இரண்டு வரி சீதைக்கும் இலக்குவனுக்கும். பொய்யோ என்னும் இடை உள்ள சீதை, இளையவனான இலக்குவனோடும் போனான். 

போனவன் யார் ? அவர் எப்படி இருப்பான் ?

அவன் மேனி வண்ணம் சொல்ல வேண்டும்.

கறுப்பாக  இருக்கிறான். கறுப்புக்கு எதை உதாரணம் சொல்லலாம் என்று யோசிக்கிறான் கம்பன். 

கண் மை நல்ல கறுப்பு தானே ...அதை சொல்லலாம் என்று நினைத்தான். இருந்தாலும் சந்தேகம் ....

மையோ ? 

என்று கேள்வியோடு கேட்க்கிறான்.

சரி இல்லை. மை ரொம்ப மலிவான பொருள். இராமனை அப்படி ஒரு மலிவான பொருளுக்கு உதாரணம் சொல்ல முடியாது என்று நினைத்து 

மரகதமோ ?

என்று கேட்கிறான். இல்லையே, மரகதம் ஒரு சின்ன பொருள். இராமனின் அழகை எப்படி ஒரு சின்ன பொருள் உவமையாக கொள்ள முடியும் ? மேலும், அது எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். இராமன் உருவம் அப்படியா? நாளும் ஒரு புதுமை தெரியுமே...அப்ப வேற என்ன சொல்லலாம் என்று சிந்திக்கிறான் ...
 
மறி கடலோ ?


அலை பாயும் கடலோ ? ம்ம்ம்.அது தான் சரி...இராமனின் அழகு போல் பரந்து விரிந்தது ...ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் ....அது தான் சரி...என்று நினைக்கிறான்...அப்புறமும் அவனுக்கு திருப்தி இல்லை..இந்த கடல் எவ்வளவு பெரிதாய் இருந்தால் என்ன ? ஒரே உப்புத் தண்ணீர் ...இந்த கடலால் என்ன பிரயோஜனம் ? மேலும் இந்த கடல் ஒரே இடத்தில் தானே இருக்கிறது...இராமன் அப்படியா ? கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவானே...அப்படி எது இருக்கும் ?

கறுப்பாகவும் இருக்க வேண்டும், நாளும் நாளும் மாறிக் கொண்டும் இருக்க வேண்டும், இருக்கும் இடம் தேடி வந்து உதவி செய்ய வேண்டும் ? அப்படி என்ன இருக்கிறது ?

ஹா..மழை முகில் அது தான் சரி....கறுப்பா இருக்கு, மாறிக் கொண்டே இருக்கிறது, உயிர் வாழ வழி செய்கிறது, நாம் இருக்கும் இடம் தேடி வருகிறது... மழை முகில் தான் சரி என்று நினைக்கிறான்....

அப்புறமும் திருப்தி இல்லை...மழை சில சமயம் வரும், சில சமயம் வராது.இராமன் அப்படி இல்லையே...எப்போதும் வருவானே...மேலும் முகில் சில சமயம் அதிக மழை பெய்தும் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும்...இராமன் கருணை அப்படி அல்லவே....

பின் என்னதான் சொல்லுவது...

ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியவில்லையே என்று தவித்து "ஐயோ " என்று வாய்விட்டே அலறிவிட்டான்..கம்பன். 

அறிவு ஆண்டவனை பற்றி சொல்ல நினைத்து சொல்ல முயற்சி செய்து கலைத்து போனது....அறிவு நின்ற இடத்தில் உணர்வு மேலிட்டது...."ஐயோ" என்பது உணர்வின் வெளிப்பாடு...ஆண்டவனை உணர முடியும்...அறிய முடியாது..என்பதை சொல்லாமல் சொல்லும் அற்புதமான பாடல் ....

 சரி, உணர்வு மேலிட்டது...ஐயோ என்று சொல்லிவிட்டான்...இன்னும் திருப்தி இல்லை....

சில பேருக்கு உடல் அழகாக வடிவமாக இருக்கும்...வடிவம் ஒரு அழகுதான்....ஆனால் அதுவே அழகாக ஆகி விட முடியாது...உடல் அழகோடு உள்ள அழகும் சேர வேண்டும்...மேலும் வடிவம் என்பது வயது ஆக ஆக மாறிக் கொண்டே போகும்.கூன் விழும் முடி நரைக்கும் பல் விழும்...வடிவு மாறும் ....ஆனால் இராமனின் வடிவு காலத்தால் அழியாதது....

இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.

எவ்வளவு இனிமையான பாடல்....இப்படி 12,000 பாடல் இருக்கிறது கம்ப இராமாயணத்தில்...

நேரம் கிடைக்கும் போது மூல நூலை படித்துப் பாருங்கள். நிறைய பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். அதையும் படியுங்கள். 

திகட்டாத தேன் தமிழ் பாடல்கள்....






கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1 

அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

விளக்க உரை 

சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத


சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத 


பெரிய கடல். எப்போதும் அலை அடிக்கும் கடல். சிலு சிலு என்று காற்று தலை கலைக்கும் கடற்கரை. 

காலோடு இரகசியம் பேசும் பொடி மணல்.

அந்த ஊரில் அவ பெரிய ராங்கிக்காரி. அவ நடையே பெரிய இராணி மாதிரி இருக்கும். கடல் மணலில் அவ கால் படித்து நடப்பதை பார்த்தால் என்னவோ  அவதான் இந்த கடல் பூராவையும் வாங்கிட்ட மாதிரி ஒரு மிதப்பு. 

அவ நடந்து போகும் போது , அவ பின்னாடி ஒரு சில அன்னங்கள் நடந்து போகும். அவ நடக்கிற மாதிரியே நடந்து  பழகிக் கொள்ளலாம் என்று....

நடக்குமா ? நடையாய் நடந்தாலும் நடக்காது....

ஏய், அன்னமே, அவ பின்னாடி போகாத. அவ பின்னாடி போனேனா, அவ நடைய பார்த்துட்டு உன் நடையை எல்லோரும் கேலி பண்ணுவார்கள்.

அவ நடைய பாரு, என்னமோ இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி, என்ன ஒரு இராணி மாதிரி நடந்து போறா...அவ பின்னாடி போனா உன் நடைய யாரு பாக்கப் போறா...சொல்றத சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம்....

பாடல் 


சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்

பொருள் 

Saturday, March 23, 2013

பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும்


பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும் 


திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர். 

அந்த ஊரில் சில வருத்ததோடு இருந்தன. சில பரிதாபமாக இருந்தன. இன்னும் சில ஊரை விட்டே ஓடி விட்டன. 

என்ன ஊரு இது இல்ல ? இப்படி ஊரா ?

கொஞ்சம் பொறுங்கள்...அதெல்லாம் எது எதுன்னு பார்த்துரலாம்....

அந்த ஊரில் வருந்துவன பெண்களின் இடைகள். அந்த ஊரில் உள்ள பெண்களின் மார்புகளின் பாரம் தாங்காமல்  அவர்களின் சின்ன இடைகள் ரொம்ப வருத்தப் பட்டனவாம்....இவ்வளவு பெரிய பாரத்தை எப்படி சுமப்பது என்று....

அவர்கள் இடையில் புனையும் மேகலைகள் பாவமாய் இருந்தனவாம்....நாளும் மெலியும் இடையில் தொங்கிக் கொண்டு இருப்பதால்.....

அந்த ஊரை விட்டு தீமை விலகி ஓடி விட்டதாம்...

பாடல் 

 ஆங்குவன முலைகள்சுமந் 
   தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள் 
   இரங்குவன மணிக்காஞ்சி 
ஓங்குவன மாடநிரை 
   யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி 
   நெருங்குவன பெருங்குடிகள். 


பொருள் 

ஆங்கு = அங்கு 

வன = வனப்பான 

முலைகள் = மார்பகங்களை 

சுமந்தணங்குவன = சுமந்து + அணங்குவன = அணங்குதல் என்றால் வருந்துதல். 

மகளிரிடை = பெண்களின் இடை 

ஏங்குவன = சப்த்தம் போடுவன 

நூபுரங்கள் = அவர்கள் அணிந்த காலில் உள்ள கொலுசுகள் 
 
இரங்குவன = பரிதாபத்திற்கு உரியன 

 மணிக்காஞ்சி  = அவர்கள் இடையில் அணியும் மேகலை போன்ற ஆபரணம். 

ஓங்குவன = உயர்ந்து இருப்பன 

மாட = மாடங்கள் 

நிரை  யொழுகுவன = சிறந்தபடி செல்வது 

வழுவிலறம் = வழு இல்லாத அறம் 

நீங்குவன = அந்த ஊரை விட்டு செல்பவை 

தீங்குநெறி = தீய நெறிகள் 
 
நெருங்குவன = நெருங்கி இருப்பவை 

பெருங்குடிகள். = உறவினர்கள் 

பெண்களின் இடையைத் தவிர யாருக்கும் கவலை இல்லை. 

அவர்களின் மணிமேகலை தவிர யாரும் பரிதாபப் படும் நிலையில் இல்லை. 

அது ஊரு . அங்க போவோமா ? அந்த ஊரில் தீ சைட்டுகள் இருக்கும் போல இருக்கே...ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா ?


Friday, March 22, 2013

இராமாயணம் - செம்மை சேர் நாமம்


இராமாயணம் - செம்மை சேர் நாமம் 


வாலியின் உடலில் இராமனின் அம்பு பாய்ந்தது. தன்  மேல் அம்பு எய்தது யார் என்று அறிய வாலி அந்த பாணத்தை தன் வாலினால் தடுத்து நிறுத்துகிறான். அம்பில் "இராம" என்று எழுதி இருந்தது.  

இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான். வாலி ஆயிரம் கேள்விகள் கேட்கப் போகிறான்.

அதன் தொடக்கத்திலேயே கம்பன் எய்தது யார் சொல்கிறான்....வாலியின் பார்வையில் இருந்து.....


மும்மை சால் உலகுக்கு எலாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராம என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கன்டான்.


இந்த பாடலை இந்த ப்ளாகில் முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.

கடைசி வரியை மட்டும் எடுத்துக் கொள்வோம்


செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கன்டான்.

அது என்ன செம்மை சேர் நாமம் ?

அம்பு வாலியின் உடலில் புகுந்தது ? அவன் அதை இழுத்தான்...அதில் வாலியின் இரத்தம் இருந்தது...எனவே அந்த அம்பு சிவப்பாக இருந்தது...

அதனால் செம்மை சேர், சிவப்பு சேர்ந்த என்று பொருள் கூறுவார் உள்ளர்.




வாயினால் உண்மை சொல்வது வாய்மை எனப்படும்
மெய்யால் உண்மையை செய்வது மெய்மை எனப்படும்
உள்ளத்தால் உண்மையை நினைப்பதும் சொல்வதும்  உண்மை எனப்படும் 

மனம் வாக்கு காயம் மூன்றும் சேர்ந்து உண்மையை சொல்வது செம்மை.

அந்த செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.

மனதாலும் வாக்காலும் மெய்யாலும் தவறு செய்யாதவன் இராமன் என்பதை முதலிலேயே  சொல்லாமல் சொல்லி விடுகிறான் கம்பன்.

செம்மை சேர் நாமம்


திருக்குறள் - நன்றாம் பணிதல்


திருக்குறள் - நன்றாம் பணிதல் 


பணிவுடைமை. அடக்கம்.

இது பற்றி கூறவந்த வள்ளுவர்,

எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

பணிதல் எல்லார்க்கும் நல்லது. அதிலும் செல்வர்களுக்கு அது இன்னொரு செல்வம் கிடைத்த மாதிரி

என்றார்


சரி, இதில் என்ன புதியதாய் இருக்கிறது. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

யோசித்துப் பாருங்கள், விடை தெரியாத கேள்விகள் எத்தனை இந்த பாடலில் ஒளிந்து கொண்டு இருக்கின்றன என்று.

- செல்வம் என்றால் எது எல்லாம் செல்வம். செல்வர்க்கு செல்வம் தகைத்து என்றால், பணம் காசு தவிர வேறு ஏதோ இருக்கிறது...அது என்ன செல்வம் ?

- எல்லார்க்கும் என்றால் யார் எல்லாம். ஒன்றும் இல்லாத பிச்சைகாரன் பணிவாய் இல்லாமல் எப்படி இருப்பான் ? அவனிடம் போய்  நீ பணிவாய் இரு என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?

- செல்வர்கே செல்வம் தகைத்து என்றால் மற்றவர்கள் யார் ...செல்வர்களுக்கு சமமாக கருதப்படும்  மற்றவர்கள் யார் ?

- ஏன் செல்வர்களுக்கு மட்டும் செல்வம் தகைத்து ? ஏன் மற்றவர்களுக்கு பணிதல் இன்னொரு செல்வமாக இருக்காது ?

பரிமேல் அழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இதற்க்கெல்லாம் நாம் எங்கு போய் விடை காண்பது ?


இங்கே செல்வம் என்பது பெருமை, சிறப்பு என்ற பொருளில் வந்தது.

ஒருவனுக்கு பெருமை, சிறப்பு மூண்டு வழியால் வரும்.

கல்வி
குலம்
பொருள்

இந்த மூன்றினால் ஒருவன் சிறப்படைவான். கல்விச் சிறப்பு சொல்லவே வேண்டாம். நமகெல்லாம் தெரியும்.

நல்ல குலத்தில் பிறப்பதும் ஒரு சிறப்பு, ஒரு மதிப்புதான். அந்த குலத்தின் மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் அந்த குலத்தில் பிறந்தவனுக்கும் கிடைக்கும்.

பொருள் - பணம், காசு, சொத்து, வீடு வாசல் என்ற இவற்றால் ஒருவனுக்கு பெருமையும், சிறப்பும் வரும்.

இந்த மூன்றில், முதல் இரண்டை விட்டு விட்டு மூன்றாவதாக வரும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்று சொல்லுவானேன் ?

கல்வியும், குலமும் அடக்கத்தை தானே தரும். ஒருவன் மேலும் மேலும் படிக்க படிக்க அவனுக்கு அடக்கம் தானே வரும்...நமக்குத் தெரியாதது எவ்வளவு இருக்கிறது என்ற பிரமிப்பு வரும். அது அடக்கத்தை தானே தரும். அடக்கம் இல்லாமல் அழிந்தவர்கள் பற்றிய வரலாறு இது எல்லாம் அவர்களுக்கு  அடக்கத்தை தானே தரும்.

அதேபோல் நல்ல குலத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள் நல்ல சொல் சொல்லி அவர்களை திருத்துவார்கள்.

ஆனால், செல்வம் படைத்தவர்களுக்கு அந்த வசதி இல்லை. இன்னும் சொல்லப் போனால் செல்வம் படைத்தவர்களை சுற்றி உள்ளவர்கள் செல்வந்தர்களின் செல்வத்தை கண்டு, பயந்து, அவர்களின் அகந்தையை மேலும் வளர்த்து விடுவார்கள். எனவே செல்வர்கள் பணிவாக இருப்பது அவர்கள் மேலும் ஒரு செல்வம் பெற்றது போல. மேலும், செல்வர்கள் பணிவாக இல்லாமல்  அகந்தையோடு செயல்பட்டால் அவர்களுக்கு கீழே உள்ளவர்கள், அந்த செல்வர்களின் மேல் வெறுப்படைந்து அவர்களுக்கு எதிராக வேலை செய்யலாம். அதே சமயம், செல்வர்கள் பணிவாக இருந்தால், அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களிடம் மேலும் விஸ்வாசமாக இருந்து அவர்களின் செல்வத்தை பெருக்க உதவுவார்கள். எனவே, பணிவு செல்வர்களுக்கு இன்னொரு செல்வம் கிடைத்த மாதிரி என்றார்.

தகைத்து என்ற சொல்லுக்கு அழகு படுத்துதல், பிணைத்தல்,கட்டுதல், என்று பொருள்.

இன்னொரு மறை பொருள் கல்வி பணிவைத் தரவேண்டும். அகந்தை இருக்கிறதென்றால் கல்வி சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

 தம்மின்   மெலியாரை நோக்கித் தமதுடைமை

 அம்மா !  பெரிதென்று அகமகிழ்க
 தம்மின் கற்றாரை நோக்கிக் கருத்துஒழிக
 எற்றே இவர்க்கு நாம் என்று



என்ற நாலடியார் சிந்தித்து நோக்கத் தக்கது.

குலமும், கல்வியும் பணிவைத் தரவேண்டும். பணிவில்லாதவன் நல்ல குலத்தில் தோன்றியவனாக இருக்க முடியாது.

சிந்திக்க சிந்திக்க ஆழமான பல அர்த்தங்களை தரும் நூல். திருக்குறள்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் குறள் படியுங்கள்.


திருக்குறள் - அகர முதல - 2

திருக்குறள் - அகர முதல - 2


அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

அது என்ன பகவன் ? இதற்கு முன்னால் பகவன் என்று கேட்டு இருக்கிறீர்களா ?

பகவன் என்பது பகு என்ற வேர்ச்சொல்லில் வந்தது.

பகுப்பவன் - உயிர்களின் நல் வினை, தீவினை அவற்றை அறிந்து அவற்றிற்கு பலன்களை பகுத்து கொடுப்பவன் என்பதால் பகவன். இது ஒரு பொருள்.

இன்னொரு பொருள்

இன்றைய அறிவியல் உயிர்கள் எப்படி தோன்றின என்றால் பரணாம வளர்ச்சியின் மூலம் தோன்றின  (Evolution ). ஒன்று பலவாக பிரிந்து, உரு மாறி, உரு மாறி இத்தனை உயிர்களும் தோன்றின என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆதி அணுவில் இருந்து வெடித்துச் சிதறி, இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறது. இப்படி பகுக்கப் பட்டு வந்ததால் பகவன். அவனில் இருந்து வந்ததுதான் எல்லாம். (பகுத்து உண்டு பல்லோர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பதும் வள்ளுவம் )

அப்படி என்றால், உடனே நம்ம ஆளு "எல்லாம் ஒன்றில் இருந்து வந்தது என்றால், அந்த பகவன் எங்கிருந்து வந்தான் " என்று கேட்ப்பான். கேட்பான் என்று வள்ளுவருக்கும் தெரியும்.

எனவே வெறும் பகவன் என்று சொல்லவில்லை, "ஆதி பகவன்" என்று கூறினார். அவன் ஆதி. அவன் மூலம்.

ஆதல் , ஆகுதல் என்ற தொழிற்பெயரில் இருந்து வந்த சொல் தான் "ஆதி". அவனில் இருந்து எல்லாம்  ஆகி வந்ததால் அவன் ஆதி பகவன்.


இன்று நாம் பல தெய்வங்களை கூறுகிறோம்...அல்லா, ஏசு, புத்தர், பெருமாள் சிவன், பிள்ளையார், காளி, என்று பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றன. வடிவங்கள் எத்தனை இருந்தாலும், எல்லாம் ஒரே ஒரு தெய்வத்தைத்தான்  குறிக்கும்...அது தான் "ஆதி பகவன்". அந்த ஆதியில் இருந்து வந்ததுதான்  இத்தனை தெய்வங்களும், மனிதர்களும், விலங்குகளும், பொருள்களும்.. எனவே, ஆதி பகவன்.

அருவில் இருந்து உருவாகவும், உருவில் இருந்து பல்வேறு வடிவாகவும் ஆனவன் . உருவாய், அருவாய், உளதாய், இலதாய் என்பார் அருணகிரி.


ஒரு குறளில் இவ்வளவு அர்த்தம். 1330 குறள் இருக்கிறது.

மேலும் அறிவோம்.

Thursday, March 21, 2013

அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்


அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்

நமக்கு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில் என்று கேட்டால் பணம், பொருள், புகழ், ஆரோக்கியம் என்று நாம் அடுக்கிக்கொண்டே போவோம்...அபிராமி பட்டர் சொல்கிறார்.


நமக்கு என்ன வேண்டும்...அவளோட பாதங்கள், அவளுடைய கைகள், அழகான அவள், அப்புறம் அவளோட பெயர், ...எல்லாத்துக்கும் மேல அவளோட கண்கள் ...இதுக்குமேல வேற என்ன வேணும் ....

அவஅணியும் ள் வேண்டும், அவளோட கைகள் , பாதம் , பெயர், கண்ணு எல்லாம் அவருக்குன்னு கிடைத்த பொக்கிஷமாம்....

 பாடல்


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே


பொருள்



திருக்குறள் - அகர முதல


திருக்குறள் - அகர முதல 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ " எழுத்துக்கு எல்லாம் முதல். அது போல் இறைவன் உலகத்திற்கு எல்லாம் முதல். 

வள்ளுவர் எந்த அளவிற்கு யோசித்து எழுதி இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதை உணர்ந்து உரை எழுதி இருக்கிறார் பரிமேல் அழகர்.

இந்த குறளில் அப்படி என்ன சிறப்பு என்று பார்ப்போம்.

மாணவன்: ஐயா, இறைவன் இருக்கிறானா ? 

வள்ளுவர்: இறைவன் இருக்கிறான்.. 

மா: இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ?

வ: நீக்கமற எல்லா இடத்திலும் இருக்கிறான்.

மா: அப்படிஎன்றால் அவன் எல்லா உயிர்களிலும், பொருள்களிலும் இருக்கிறான்...அப்படிதானே ?

வ: அப்படித்தான். 

மா: அப்படி என்றால், அவன் தனித்து இருக்க மாட்டானா ? ஏதோ ஒன்றை சார்ந்துதான் இருப்பானா ?

வ: நான் அப்படி சொல்லவில்லையே ...அவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான், அவன் தனித்தும் இருக்கிறான். 

மா: குழப்பமாக இருக்கிறதே...அது எப்படி ஒரு ஆள் எல்லாவற்றிலும் இருப்பான், தனித்தும் இருப்பான் ? ஒரு பொருள் ஒன்றில் இருக்கிறது என்றால் அது மற்றவற்றில் இல்லை என்று தானே பொருள்....நீங்கள் சொல்லுவது மாதிரி எல்லாவற்றிலும் இருக்கும், தனித்தும் இருக்கும் என்பது மாதிரி ஒன்றை உதாரணமாக காட்ட முடியுமா ? அப்படி ஒன்று இருக்க முடியுமா ? நீங்கள் அப்படி ஒன்றை காட்டினால், எனக்கு இறைவனை நீங்கள் சொல்வது மாதிரி புரிந்து கொள்ள முடியும்....

வ: ஓ, காட்டலாமே....நீ இந்த "அ " என்ற எழுத்தைப் பார்த்து இருக்கிறாயா ? 

மா: ஆம். தெரியும். பார்த்திருக்கிறேன். 

வ: அதில் இருந்துதான் எல்லா எழுத்தும் வருகிறது என்று தெரியுமா ? 

மா: இல்லை ஐயா. தெரியாதே. அது எப்படி..

வ: தொல்காப்பியம் என்ற நூலைப் படித்துப் பார். எழுத்துக்கள் எப்படி பிறக்கின்றன என்று தொல்காபியர் சொல்லி இருக்கிறார். 

மா: ஐயா, நீங்களே சொல்லுங்களேன்....

வ: சுருக்கமாகச் சொல்லுகிறேன்...மேலே வேண்டுமானால் நீ தொல்காப்பியம் படித்து தெரிந்து கொள்....அ, ஆ  இந்த இரண்டு எழுத்தும் விகாராம் இல்லாமல் பிறக்கும். அதாவது உராய்வு இல்லாமல் பிறக்கும். அதாவது, மூச்சை எழுத்து வாய் வழியே விட்டால் அ, ஆ என்ற இரண்டு சொல்லும் பிறக்கும். "ஹ" என்ற சப்த்தம் பிறக்கிறது அல்லவா ? அந்த அ என்ற எழுத்துதான் உயிர் நாடி. 

மா: சரி ஐயா, மத்த எழுத்துகள் எப்படி வருகின்றன ?

 வ: இந்த அ என்ற எழுத்தில் இருந்து வரும் ஒலியை நாக்கு, பல், அன்னம், உதடு இவற்றின் மூலம் நெருக்கியும், நீட்டியும், சுருக்கியும் மத்த எழுத்துகள் உருவாகின்றன. தொல்காப்பியர் சொல்கிறார் ....

இ, ஈ, எ, ஏ, ஐ, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன;
அவைதாம்
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.  உரை
   
உ, ஊ, ஒ, ஓ, ஓள, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
இப்படி, எல்லா எழுத்துகளும் அ என்ற எழுத்தில் இருந்து பிறக்கின்றன. மெய் எழுத்திற்கும் அடி நாதம் அ என்ற ஒலி தான். 

மா: சரி ஐயா...அ  என்ற ஒலி எல்லாவற்றிற்கும் மூல ஒலி என்று வைத்துக் கொள்வோம்...அதற்க்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் ?

வ: அ என்ற எழத்து தனித்தும் நிற்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் வரும். இது புரிகிறதா ?

மா: புரிகிறது. 

வ: அ என்ற எழுத்திற்கு வேறு எந்த எழுத்தும் மூல எழுத்து கிடையாது. ஆனால், எல்லா எழுத்திற்கும் அ என்ற அந்த எழுத்துதான் மூல எழுத்து. புரிகிறதா ?

மா: ம்ம்...புரிகிறது

வ: அது தான் நீ கேட்ட உதாரணம். எல்லாவற்றிற்கும் மூலம், அதுக்கு முன்னால் எதுவும் கிடையாது, தானாக தனித்து இயங்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்...இறைவனுக்கு உதாரணம் அ  என்ற அந்த எழுத்து. 

மா: புரிகிறது ஐயா...ஆனால் , அ  என்ற அந்த எழுத்து தமிழுக்கு மட்டும்தானே முதலில் வருகிறது ...அப்படி என்றால் இறைவனும் தமிழனுக்கு மட்டும்தானா ?

வ: இல்லையப்பா...அ  என்ற அந்த ஒலி எல்லா மொழிகளிலும் அதுதான் முதல் எழுத்து ...அதனால் தான்...அகர முதல எழுத்து எல்லாம் என்று கூறினேன்...எல்லாம் என்றால் எல்லா மொழிகளுக்கும் என்று அர்த்தம். 

அனைத்து உலகங்களும் அவனில் இருந்து பிறக்கின்றன, அவன் எதில் இருந்தும் பிறப்பது இல்லை, அவன் தனித்தும் இருக்கிறான், உயிர்களோடு கலந்தும் இருக்கிறான் ...

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 


வ: புரிகிறதா  ?

மா: மிக நன்றாக புரிகிறது ஐயா...நன்றி ....