Showing posts with label sundhara kaandam. Show all posts
Showing posts with label sundhara kaandam. Show all posts

Monday, April 14, 2014

சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை

சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை   


அனுமன் இலங்கைக்கு கடலைத் தாவிப் போனான் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகலாம் தானே ? அதை விட்டு விட்டு ஏன் இவ்வளவு நீட்டி முழங்க  வேண்டும் ?

அதில் ஏதோ  காரணம் இருக்க வேண்டும் ? ஏதோ செய்தி இருக்க வேண்டும்.

அது என்ன செய்தி என்று நாம் சிந்தித்து அறிய வேண்டும்.

எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் சில தடைகள் வரத்தான் செய்யும்.

இராம காரியமாக அனுமன் செல்கிறான். அவனுக்கே தடை வந்தது என்றால் நம் காரியங்கள் எம்  மாத்திரம், அனுமனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மாத்திரம் ?

நமக்குத் தடைகள் வரதா ? வரும்.

ஐயோ தடைகள் வந்து விட்டதே என்று நினைத்து ஓய்து விடக் கூடாது. அவற்றை முறியடித்து எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பது ஒரு செய்தி.

மைநாக மலை கடலின் நடுவே உயர்ந்து எழுந்தது.

எப்படி எழுந்தது தெரியுமா ? ஒரு நொடியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றது.

ஒரு கண்ணாடியின் மேல் உழுந்தை உருட்டி விட்டால் அது எவ்வளவு சீக்கிரம் உருண்டு ஓடுமோ அவ்வளவு நேரத்தில் அது வளர்ந்து நின்றது.

அனுமன் "என்னடா இது " அயர்ந்து நின்றான்.

பாடல்

எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க,
     இலங்கும்ஆடி
உழுந்து ஓடுகாலத்திடை, உம்பரின் 
     உம்பர்ஓங்கிக்
கொழுந்துஓடிநின்ற கொழுங்குன்றை 
     வியந்துநோக்கி,
அழுங்கா மனத்துஅண்ணல் 'இது என்கொல்'
     எனாஅயிர்த்தான்.

பொருள்

எழுந்து ஓங்கி = எழுந்து ஓங்கி

 விண்ணொடு மண் ஒக்க = விண்ணும் மண்ணும் ஒன்றாகும் படி நின்ற. அதாவது அதை தாண்டி குதித்துப் போக முடியாது. விண் வரை உயர்ந்து நின்றது.

இலங்கும் = ஒளி வீசி பிரகாசிக்கும்

ஆடி = கண்ணாடி

உழுந்து ஓடு காலத்திடை = ( அதன் மேல் ) உழுந்து உருண்டு ஓடும் காலத்தில்

உம்பரின் உம்பர் ஓங்கிக் = மேலும் மேலும் வளர்ந்து

கொழுந்து ஓடிநின்ற = அதன் சிகரங்கள் உயர்ந்து வளர்ந்து நின்ற

கொழுங் குன்றை = அதன்  குன்றங்களை 
   
வியந்துநோக்கி = வியப்புடன் பார்த்து

அழுங்கா மனத்து = புலன் இன்பங்களில் அழுந்தாத மனம் கொண்ட

அண்ணல்  = அனுமன்

'இது என்கொல்' = இது என்ன

எனாஅயிர்த்தான். = என்று அதிசயப்பட்டான்



Thursday, April 10, 2014

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை 



சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று  சொல்லுவார்கள். அப்படி என்றால் எல்லோரும் சுந்தர காண்டம் படித்தால் போதுமே. எல்லா துன்பங்களும் விலகி விடுமே. வேறு ஒன்றும் செய்ய வேண்டாமே !

அப்படி அல்ல.

சுந்தர காண்டம்  படிப்பது,  நாம் முயற்சி செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும். (Motivation ).

சும்மா உக்காந்து கொண்டு "ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று உறைந்து போய் விடாமல், முயன்று துன்பங்களைப் போக்க சுந்தர காண்டம் வழி காட்டுகிறது.

எதிர் காலம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.

சீதையைத் தேடிப்  போகிறான். முன் பின் தெரியாத ஊர். இராவணன் பெரிய அரக்கன். மாயாவி. எங்கே சீதையை மறைத்து வைத்திருப்பான் என்று தெரியாது. அந்த ஊரில் யாரிடமாவாது போய் கேட்க முடியுமா ? தானே கண்டு பிடிக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நடுவில் பெரிய கடல். பெரிய தடை.

தனி ஆளாகப் போகிறான். ஒரு துணையும் கிடையாது. வழி தெரியாது. ஊர் தெரியாது. பயங்கரமான எதிரி.

கிட்டத்தட்ட நம் நிலை மாதிரியே இருக்கிறது  அல்லவா.

கவலையில், துன்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் நிலை இதுதான்.

என்ன செய்ய வேண்டும் தெரியாது. எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஆயிரம் தடைகள் வேறு.

அனுமன் என்ன செய்தான் என்று ஒரு உதாரணம் தருகிறது  இராமாயணம். அதில் இருந்து  நம்பிக்கையும், உற்சாகமும் பெற.

அனுமன் பலசாலி, அறிவாளி...நாம் அப்படி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

அவன் சமாளிக்க வேண்டிய சவால்களும்  அப்படித்தானே.கடலைக் கடக்க வேண்டும். உங்களால முடியுமா ?

அவரவர் திறமை, வலிமையை பொறுத்து அவர்களின் சவால்களும் அமைகிறது.

உங்களாலும் முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். செயல் படத் தொடங்குங்கள்.

அப்படி செய், இப்படிச் செய் என்று சொன்னால் "வந்துட்டானுக, அறிவுரை சொல்ல " என்று அலுத்துக்  கொள்வோம்.

அனுமன் என்ற  ஒருவன் இப்படிச் செய்தான் என்று கூறுவதன்  மூலம்,நீங்களும்  முயன்றால் வெற்றி பெறலாம் என்று சொல்லாமல் சொல்கிறது இராமாயணம்.


அனுமனின் வழியில் மைநாகம் என்ற மலை ஒன்று குறிக்கிடுகிறது. அவனைத் தடுத்து, இங்கு இளைப்பாறி விட்டு போ  என்கிறது.

அது பற்றி அடுத்து வரும் சில தினங்களில் பார்ப்போம்.

முதல் பாடல்


உந்தாமுன் உலைந்து உயர்வேலை
     ஒளித்தகுன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும்
     தீர்வில்அன்பால்
வந்துஓங்கி ஆண்டு ஓர்சிறு
     மானிடவேடம்ஆகி
எந்தாய்இதுகேள்என இன்ன
     இசைத்ததுஅன்றே.

பொருள்

உந்தாமுன் = உந்தி வருவதற்குள்

உலைந்து  = அச்சம் கொண்டு

உயர் = உயர்ந்த

வேலை = கடலில்

ஒளித்த குன்றம் = ஒளிந்து இருந்த மலை

சிந்தாகுலம் உற்றது = சிந்தனையில் மயக்கம் உற்றது

பின்னரும் = பின்னால்

தீர்வில்அன்பால் = எல்லையற்ற அன்பால்

வந்துஓங்கி = அனுமனின் முன் வந்து ஓங்கி நின்று

ஆண்டு  = அங்கு

ஓர் சிறு = ஒரு சிறிய

மானிடவேடம்ஆகி = மானிட உரு கொண்டு

எந்தாய் = என் தந்தை போன்றவனே

இது கேள் என = இதைக் கேள் என்று

இன்ன இசைத்ததுஅன்றே = சொல்லத் தொடங்கியது

இந்திரனுக்கு பயந்து  கடலில் ஒளிந்து இருந்தது மைநாகம் என்ற அந்த மலை.

என்ன ஆயிற்று என்று மேலும் பார்ப்போம்.


Monday, April 7, 2014

சுந்தர காண்டம் - சுவர்க்கமும் மோட்சமும்

சுந்தர காண்டம் - சுவர்க்கமும் மோட்சமும் 


சுவர்க்கம் வேறு, மோட்சம் வேறா ?

சொர்கத்திற்கு போனால் மோட்சம் அடைந்த மாதிரிதானே ? இல்லையா ?

 இல்லை.

சொர்க்கம் வேறு. வீடு பேறு என்பது வேறு.

சொர்க்கம் தாண்டி வீடு பேறு .

 இந்தக் கருத்தை கம்பர் சுந்தர காண்டத்தில் கொண்டு வந்து வைக்கிறார்.

அனுமன்,  மகேந்தர மலையில் இருந்து கிளம்பி விட்டான். அவன் தாவிய வேகத்தில் அந்த மகேந்திர மலை அப்படியே மத்து போல சுழன்றது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற்கடலை கடைந்த போது மேரு மலையை மத்தாக வைத்து கடைந்தார்களே, அது போல மகேந்திர மலை மத்துபோல சுழன்றது. அந்த சமயத்தில், புலன்களை வென்ற முனிவர்கள் சொர்கத்தை  அடைந்தார்கள்.செய்ய வேண்டிய கர்மங்களை முழுமையாக  முடிக்காததால்,  உடலின் மேல் கொண்ட பாசம் விடாததால், விண்ணுலகம் செல்வாரை ஒத்து  இருந்தார்கள்.


பாடல்


‘கடல்உறுமத்துஇது’ என்னக்
     கருவரை திரியும் காலை,
மிடல்உறுபுலன்கள் வென்ற
    மெய்த்தவர் விசும்பின் உற்றார்;
திடல்உறுகிரியில் தம்தம்
     செய்வினைமுற்றி, முற்றா
உடல்உறு பாசம்வீசாது,
     உம்பர்செல்வாரை ஒத்தார்.


பொருள்

‘கடல்உறுமத்துஇது’ = கடலில் உள்ள மத்து இது

என்னக் = என்று

கருவரை = கருமையான வரை. வரை என்றால் மலை. இங்கே மகேந்திர மலை

திரியும் காலை = சுழலும் வேளையில்

மிடல் உறு புலன்கள் = மிடல் என்றால்  வலிமையான.வலிமையான புலன்களை

 வென்ற = வென்ற

மெய்த்தவர் செய்த  = உண்மையான தவம் புரிந்த முனிவர்கள் 

விசும்பின் உற்றார் = விண்ணை அடைந்தவர்கள் 

திடல்உறு கிரியில் = மேடு பள்ளம் நிறைந்த மலையில்

தம்தம் = தாங்களுடைய

செய்வினை முற்றி = செய்கின்ற வினைகள் முடிந்து

முற்றா = இன்னும் முடியாத

உடல்உறு பாசம்வீசாது = உடலின் மேல் கொண்ட பாசம் விலகாது

உம்பர்செல்வாரை ஒத்தார் = விண்ணுலகம் செல்பவரை ஒத்து இருந்தார்கள்.

வினை முற்றியதால் சுவர்க்கம் போக முடிந்தது.

பாசம் விடாததால் - முக்தி, மோட்சம் அடைய  முடியவில்லை.

நல்ல வினைகள் காரணமாக சொர்க்க போகம் கிடைக்கும்.

பற்றற்று இருந்தால் முக்தி கிடைக்கும்.


சொர்க்கம் தாண்டி ஒரு இடம் இருக்கிறது. அது தான் வீடு பேறு . முக்தி. மோட்சம். அதை வாலி வதையிலும் கம்பன் சொல்லுவன். 

"வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்" 

சொர்கத்தையும் தாண்டி உள்ள உலகம். மோட்சம் அடைந்தான் என்று சொல்லாமல்  சொல்கிறான்.



தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்


Saturday, March 29, 2014

சுந்தர காண்டம் - செயலைத் தொடங்குங்கள், உதவி உடனே வரும்

சுந்தர காண்டம் - செயலைத் தொடங்குங்கள், உதவி உடனே வரும்  


"Until one is committed, there is hesitancy, the chance to draw back-- Concerning all acts of initiative (and creation), there is one elementary truth that ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favor all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamed would have come his way. Whatever you can do, or dream you can do, begin it. Boldness has genius, power, and magic in it. Begin it now."

~Goethe

சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று ஏன் சொல்கிறார்கள் ?

எதையும் படித்தால் மட்டும் போதாது. படித்ததின் படி நடக்கவும் வேண்டும். 

சுந்தர காண்டம், கவலையில் சோர்ந்து போய் , உட்கார்ந்து விட்டவர்களை தட்டிக் கொடுத்து வேலை செய்ய ஊக்குவிக்கிறது. 

அனுமன், மகேந்தர மலையில் இருந்து  கிளம்பி விட்டான். தேவர்கள் கூட அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். அவர்களின் அனுக்ரஹம் அவனுக்கு உண்டு என்று அவர்கள் உணர்த்தினார்கள். 

ஒரு நல்ல காரியத்தை தொடங்கிவிட்டால், இந்த உலகமே உங்களுக்கு உதவி செய்யத் தயாராகி விடும். 

இந்த உலகம் மட்டும் அல்ல, விண்ணுலகும் உங்களுக்கு துணை நிற்கும். 

துன்பத்திற்கு காரணம், முயற்சி இன்மை. முயற்சி குறைவு.

உற்சாகத்தோடு தொடங்குகள். நீங்கள் எதிர் பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் உதவி தானாக வந்து சேரும். 

என்னால் எப்படி முடியும், இது எல்லாம் நடக்கிற காரியமா, எவ்வளவு பெரிய வேலை என்றெல்லாம் சோர்ந்து விடாதீர்கள். 

தொடங்குகள். உதவி வரும். 

பாடல் 


இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி,
'வித்தக! சேறி' என்றார்; வீரனும், விரைவது ஆனான். 

Thursday, March 27, 2014

சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று

 சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று 


அனுமன் மகேந்தர மலையில் இருந்து புறப்பட்டு விட்டான். அவன் கிளம்பிய நேரத்தில் மலை கிடுகிடுத்தது.

அந்த அதிர்வு விண்ணுலகம் வரை எட்டியது.

அங்கே......

தேவ மாதர்கள், மது அருந்தி தங்கள் துணைவர்களோடு ஊடல் கொண்டு இருந்தனர். இந்த அதிர்வினால், அவர்கள் பயந்து போய் , ஊடலை விட்டு, தங்கள் தங்கள் துணைவர்களை கட்டி பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் , தாங்கள் கூண்டில் இருந்து வெளியில் விட்ட கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் பட்டனர்.

பாடல்

ஊறியநறவும் உற்ற
     குற்றமும்உணர்வை உண்ண,
சீறிய மனத்தர்,தெய்வ
     மடந்தையர்ஊடல் தீர்வுற்று
ஆறினர்,அஞ்சுகின்றார்,
     அன்பரைத்தழுவி உம்பர்
ஏறினர், இட்டு,நீத்த
    பைங்கிளிக்கு இரங்குகின்றார்.

பொருள்

ஊறியநறவும் = நறவு என்றால் மது. ஊறிய நறவு - நாட்பட்ட மது.

உற்ற குற்றமும் = அதனால் எழுந்த குற்றமும்

உணர்வை உண்ண = உணர்வை அழிக்க

சீறிய மனத்தர் = சிறந்த மனத்தை உடைய

தெய்வ மடந்தையர் = தேவ லோகப் பெண்கள்


ஊடல் தீர்வுற்று = ஊடல் தீர்ந்து

ஆறினர் = உடலும், உள்ளமும் ஆறுதல் கொண்டனர்.

,அஞ்சுகின்றார் = அச்சம் கொண்டனர்

அன்பரைத்தழுவி = அவர்கள் தத்தம் துணைவர்களைத் தழுவி

 உம்பர் ஏறினர் = விண்ணோர் தங்கள் இடம் சென்றனர்

, இட்டு,நீத்த = கூண்டில் முன்பு போட்டு வைத்து , பின் வெளியில் விட்ட

பைங்கிளிக்கு இரங்குகின்றார். = கிளி என்ன ஆயிற்றோ என்று அதற்காக வருந்தினர்.

அச்சம் ஒரு ஊடல் தீர்க்கும் வாயில்.

ஊடல். ஊடல் தீர்ந்து கூடல். அந்த கூடல் நேரத்திலும் தாங்கள் வளர்த்த கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் படும் உயிர்களின் மேல் நேசம்.

கிளிக்காக கவலைப் படும் எவ்வளவு மென்மையான மனமாக  இருக்க வேண்டும் ?



Tuesday, March 25, 2014

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும்

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும் 


அனுமன் மிகுந்த ஆற்றலோடு மகேந்திர மலையை உந்திக் கிளம்புகிறான்.

அப்போது என்னென்ன  நிகழ்ந்தது என்று கம்பர் பட்டியல்  இடுகிறார்.

பூமி மட்டும் அல்ல, வானமும் சும்மா அதிர்ந்துதுல்ல...

வானுலகப் பெண்கள் எல்லாம் பயந்து அருகில் உள்ள தேவர்களை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் அந்த தேவர்கள் அழகு மேலும் கூடி பொலிந்தனர்.

இருக்காத பின்ன...?

தேவலோகப் பெண்கள் கட்டிப் பிடித்தால் மகிழ்ச்சியில் முகம் பிரகாசிக்காதா என்ன ?

அப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தேவனை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எப்படி இருந்தது என்றால் ...

முன்பொரு நாள் , இராவணன் கைலாய மலையை தூக்க முயன்ற போது உமா தேவியார் சிவனைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்த மாதிரி இருந்தது.

பாடல்

வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார்


Monday, March 24, 2014

சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்

சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்  


ஒரு ஆகாய விமானம் எப்போது அதிக பட்ச விசையை செலவிடும் ?

அது தரையில் ஓடி, பறக்கத் தொடங்கும் அந்த நேரத்தில், தரையை விட்டு வானை நோக்கித் தாவும் அந்த நேரத்தில் அதிகபட்ச விசை தேவைப்படும்.

அது போல, நாம் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால், தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன், மிகுந்த பலத்துடன் தொடங்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே, இது எங்க உருப்படப் போகுது என்று சோர்வோடு ஆரம்பித்தால், அந்த காரியம் சரியாக நடக்காது.

அனுமன், மகேந்தர மலையில் இருந்து கிளம்புகிறான்.

என்ன ஒரு உத்வேகம், செய்யத்  தொடங்கிய வேலையில் என்ன ஒரு உற்சாகம், ஒரு புத்துணர்வு....

அங்குள்ள குகைகள் எல்லாம் நசுங்கி, அவற்றில் உள்ள பாம்புகள் நெளிந்து நெளிந்து வெளியே வந்தன. அப்படி ஒரு அழுத்தம் கொடுத்து வேலைக்கு கிளம்புகிறான்.

பாடல்


வன்தந்தவரிகொள் நாகம்,
     வயங்குஅழல் உமிழும் வாய,
பொன்தந்தமுழைகள்தோறும்
     புறத்து உராய்ப் புரண்டு போவ - 
நின்று, அந்தம்இல்லான் ஊன்ற -
    நெரிந்துகீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன்வயிறு கீறிப்
     பிதுங்கினகுடர்கள் மான.

பொருள்

வன் தந்த = தந்தம் என்றால் பற்கள். வன்மையான பற்களை உடைய

வரி கொள் நாகம் = வரி வடிவம் போன்ற நாகப் பாம்புகள் அல்லது உடலில் வரிகளைக் கொண்ட பாம்புகள்

வயங்கு = விளங்கும்

அழல் = தீயை

உமிழும் வாய = வெளிவிடும் வாய்

பொன் தந்த = பொன் தரும்

முழைகள்தோறும் = குகைகள் தோறும்

புறத்து = வெளியே

உராய்ப் புரண்டு போவ = உராய்ந்து கொண்டு புரண்டு போயின

நின்று =  நின்று

அந்தம்இல்லான் = முடிவு இல்லாத (சிரஞ்சீவி ) அனுமன்

ஊன்ற  = ஊன்றி எழும்பி

நெரிந்து கீழ் = அமுக்கி , கீழ் நோக்கி

அழுந்தும் = அழுந்தும்

நீலக் குன்றம் = நீல நிறக் குன்றம்

தன்வயிறு கீறிப் = தன் வயிறு கீறி

பிதுங்கின குடர்கள் மான = குடல்கள் வெளியே வந்தன

.


Sunday, March 23, 2014

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?


 நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் ?

பணம், புகழ், அதிகாரம், ஆரோக்கியம், அன்பு, புலன் இன்பங்கள்,  மோட்சம்...இதில் எது வேண்டும் நமக்கு ? எல்லாம் வேண்டுமா ?

இந்த நிமிடத்தில், இன்று, இந்த வாரம் எதைத் தேடி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியுமா ?

நாம் விரும்புவது ஒன்று, வேலை செய்வது மற்றொன்றுக்காக .

உடல் ஆரோக்கியம் பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று நினைக்கிறோம்...ஆனால் உணவு விடுதிக்கு சென்று வேண்டாததை எல்லாம் உண்கிறோம்.

இது என்ன மதியீனம்.

அனுமன், சீதையைத் தேடி இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.

போகிற வழியில் வானவர் நாட்டை ( துறக்க நாடு) கண்டான்.  பொன்னும், பொருளும் நிறைந்த இடம், அழகான இளம் பெண்கள், இனிய இசை, கற்பக மரம் நிறைந்த சோலைகள்.

நாமாக இருந்தால், கொஞ்சம் தங்கி , அந்த ஊரையெல்லாம் சுற்றி பார்த்து விட்டு, நிதானமாக போய் இருப்போம்.

அனுமன்  அறிவாளி.

இது அல்ல நம் நோக்கம் என்று உடனே அறிந்து கொண்டு அங்கிருந்து விலகுகிறான்.


பாடல்

ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
'ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;

'காண் தகு கொள்கை உம்பர் இல்' என, கருத்துள் கொண்டான்.

பொருள்

ஆண்தகை = ஆண்மையில் சிறந்த அனுமன்
ஆண்டு = அங்கு

அவ் வானோர்  = அந்த வானவர்கள் (தேவர்கள்)

துறக்க நாடு = விண்ணோர் உலகம் (சொர்க்கம்)

அருகில் கண்டான் = பக்கத்தில் பார்த்தான்

'ஈண்டு, = இங்கு

இதுதான்கொல் = இதுதான்

வேலை = கடல் சூழ்ந்த

இலங்கை? = இலங்கை

என்று ஐயம் எய்தா = என்று ஐயம் கொண்டான்

வேண்டு = எல்லோரும் விரும்பும்

அரு விண்ணாடு = அருமையான சுவர்க்கம்

என்ணும் மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை கண்டு கொண்டு

உள்ளம் மீட்டான் = அதன் பின் சென்ற தன் உள்ளத்தை மீட்டுக் கொண்டான்


'காண் தகு கொள்கை உம்பர் இல்' என = காண வேண்டிய கொள்கை, அதாவது சீதை, இந்த இடத்தில் இல்லை

கருத்துள் கொண்டான் = என்று கருத்தில் கொண்டான்.

நாம் ஒரு கொள்கை நோக்கி செல்லும் போது , நடுவில் இந்த மாதிரி சபலங்கள் , குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் மயங்கி நாம் நின்று விடக் கூடாது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அதில் குறியாக இருக்க வேண்டும்......

சுந்தர காண்டம் தரும் முதல் பாடம் இது....



Thursday, March 20, 2014

சுந்தர காண்டம் - 2 - துன்பம் நேர்கையில்

சுந்தர   காண்டம் - துன்பம் நேர்கையில்  



நமக்கு  துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?

முதலில், எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்து கொள்வோம்.

 பின்,  துன்பத்திற்கு யார் யார் எல்லாம் காரணம் என்று மனதுக்கு தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் திட்டித் தீர்ப்போம்.

பின், இந்த துன்பத்தில் இருந்து விடுபட நமக்கு உதவி செய்யாதவர்கள் மீது கோபம் கொள்வோம்.

பின், எதிலும் எரிச்சல். எதிலும் ஒரு பிடிப்பின்மை. நாட்டமின்மை என்று உலகே அஸ்தமானம் ஆனது போல் இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம்.

இராமன் என்ன  செய்கிறான்,நமக்கு எப்படி  வழி காட்டுகிறான் என்று பார்ப்போம்:

1. முதலாவது, மனைவியிடம் அன்பாக  இருக்கிறான். அவள் அழகை இரசிக்கிறான். இராஜ்யமே போய் விட்டது என்று இடிந்து போய்  விடவில்லை.

2. இயற்கையை இரசிக்கிறான், மனைவியோடு சேர்ந்து. பணம் போனால் என்ன ? இராஜ்ஜியம் போனால் என்ன ? பதவி போனால் என்ன ? என் அன்பு மனைவி  என்னோடு இருக்கிறாள் என்று உலகை அவளோடு சேர்ந்து இரசிக்கிறான்.

3. மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கிறான். குகனிடம், சுக்ரீவனிடம், வீடணினிடம்  சகோதர அன்பு  பாராட்டுகிறான்.

4. விருந்தில் கலந்து கொள்கிறான்.

5. மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்.  நானே துன்பத்தில் இருக்கிறேன், இவர்கள் வேறு என்னிடம் வந்து நை நை என்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எரிந்து  விழவில்லை.முடிந்த உதவிகளை செய்கிறான்.

6. துன்பத்தை எதிர்த்து  போராடுகிறான். 

7. கடமைகளைச் செய்கிறான். ஜடாயுவுக்கு நீர் கடன்  செய்தான்.

8. நிதானம் தவறாமல் இருக்கிறான்.

9. பகைவனுக்கும்  அருள்கிறான்.இன்று போய் நாளை வா என்று நிதானமாக இருக்கிறான்.

10. எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்....

11. அநீதியை எதிர்த்து போராடுகிறான்.

12. மன்னிக்கிறான்.

துன்பம் வரும். எல்லோர் வாழ்விலும் துன்பம் வரும். துன்பம் வந்தால் எப்படி இருக்க  வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்.

இத்தனையும் சுந்தர காண்டம் நமக்குச் சொல்லித் தருகிறது.

மிகப் பெரிய துன்பத்தை தாங்கி, போராடி எவ்வாறு இராமன் வாழ்ந்து காட்டினான் என்று   பாடம் நடத்துகிறது சுந்தர காண்டம்.

இனி வரும் பகுதியில் இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சுந்தர காண்டத்தை , நம் வாழ்க்கைக்கு அது எப்படி வழி காட்டும் என்ற கோணத்தில்   சிந்திப்போம்.




Tuesday, March 18, 2014

சுந்தர காண்டம் - அறிமுகம்

சுந்தர காண்டம் - அறிமுகம் 


இராமாயணத்தில் மிக முக்கியமான பகுதி சுந்தர காண்டம்.

சுந்தர காண்டம் படித்தால் துன்பங்கள் எல்லாம் விலகி மனதில் அமைதி பிறக்கும் என்பது ஐதீகம்.

துன்பம் இல்லாத மனிதன் யார் ?

உறவுகள், பணம், வேலை, ஆரோக்கியம்,  பிள்ளைகள், கணவன், மனைவி, அண்டை , அயல், அலுவலகம் என்று ஆயிரம் வழிகளில் துன்பம் வருகிறது.

நம் துன்பம் எப்போது குறையும் ?

நம்மை விட அதிக துன்பம் உள்ளவர்களைப் பார்க்கும் போது , நம் துன்பம் அவ்வளவு பெரியதில்லை என்ற ஆறுதல் பிறக்கும். அவர்கள் அவ்வளவு பெரிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சமாளித்து வாழ்கிறார்கள் என்றால் நாம் ஏன் நமக்கு வந்த துன்பத்தை தாங்க முடியாது ? நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

இராமனுக்கு வராத துன்பமா ?

ஓர் இரவில் , சக்ரவர்த்தியாக வேண்டியவன் முடி துறந்தது மட்டும் அல்ல, காட்டுக்கும்  போக வேண்டி வந்தது என்றால் அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கும்.

ஒரு பத்து ரூபாய் தொலைந்து விட்டால் எவ்வளவு வருத்தப் படுவோம்.

ஒரு இராஜ்யத்தையே தொலைத்து விட்டால் ? தாங்க முடியுமா நம்மால் ?

துன்பத்தில் பெரிய துன்பம் நமக்கு வரும் துன்பங்கள் அல்ல....நம்மால் மற்றவர்களுக்கு  வரும் துன்பம்.

நம்மால் நம் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உடன் பிறப்போ துன்பப் பட்டால்  அது சகிக்க முடியாத துன்பம். நமக்கு வரும் துன்பத்தை நாம் தாங்கிக்  கொள்ளாலாம். நம்மால் மற்றவர்கள் படும் துன்பத்தை தாங்க முடியாது.

சீதையும், இலக்குவனும் இராமன் பொருட்டு கானகம் வந்தார்கள். அது இராமனுக்கு எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கும் ?

அதையும் தாங்கிக் கொண்டான்.

கானகம் போன இடத்திலாவது நிம்மதி உண்டா என்றால் - இல்லை.

கட்டிய மனைவியை மற்றவன் தூக்கிப் போனான்.

மனைவியைப் பறி  கொடுத்தான்.

துன்பம் மேலும் கூடியது.

அதையும் தாங்கிக் கொண்டான்.

அவன் பொருட்டு ஜடாயு உயிர் விட்டான்.

அதையும் தாங்கிக் கொண்டான்.

சக்கரவர்த்தி குமாரன், சுக்ரீவன் என்ற வானரத்திடம் உதவி வேண்டும் என்று கையேந்தி  நின்றான்.

இவ்வளவு துன்பமும் யாருக்கு ?

திருமாலின் அவதாரம் - தசரதனின் குமாரன் - ஜனகனின் மருமகன் - வசிட்டனின் சீடன் - பரசுராமனின் உரம் உருவியவன் - விச்வாமித்ரனின் வேள்வி காத்தவன் .....

அவனுக்கு இவ்வளவு துன்பங்கள் என்றால் , நாம் எல்லாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை -  அந்த துன்பங்கள் இராமனையும் விட்டு வைக்க வில்லை.

துன்பம் வந்த போது இராமன் என்ன செய்தான் ? எப்படி அவற்றை சமாளித்தான் ?

வாழ்க்கையில் நமக்கும் துன்பம் வரும்.

அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று சொல்லித்தரும் பகுதி சுந்தர காண்டம்.


சுந்தர காண்டம் பற்றி மேலும் பார்ப்போம்.