Friday, June 30, 2017

இராமாயணம் - ஆசிரியன் ஆணை

இராமாயணம் - ஆசிரியன் ஆணை 


நாட்டை ஏற்றுக் கொள் என்று பரதன் பல விதங்களில் கெஞ்சிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. "இப்போது இது  இராஜ்யம். இதை நான் உனக்குத் தருகிறேன். யார் என்ன சொல்வது. ஏற்றுக் கொள் " என்கிறான்.

இராமனோ மறுத்து, "அப்படியே நான் ஏற்றுக் கொண்டாலும், 14 வருடம் கானகம் போவதாக என் தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்ற வேண்டும் . எனவே நீயே ஆள் " என்கிறான்.

இவர்களுக்குள் இப்படி வாதம் நடந்து கொண்டிருந்த போது , அருகில் இருந்த குல குருவான வசிட்டன் இடைப்பட்டு , "நான் உனக்கு அறம் சொல்லித் தந்த குரு. நான் ஆணையிடுகிறேன். போய் அரசை ஏற்றுக் கொள் " என்று ஆணையிட்டு கூறுகிறான்.

பாடல்

என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்,
“அன்று” எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ
நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு’ என்றான்.

பொருள்

என்றலால் = என்று கூறுவதால். (பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர் தலைவர்கள் என்று கூறுவதால்)

யான் = நான்

உனை எடுத்து = வளர்த்து எடுத்து

விஞ்சைகள் = வித்தைகள்

ஒன்று அலாதன பல = ஒன்று அல்ல , பல விதமான வித்தைகளை

உதவிற்று = கற்றுத்தந்தது

உண்மையால் = உண்மையானனால்

“அன்று” எனாது = சரி அல்ல என்று மறுக்காமல்

இன்று எனது ஆணை; = இன்று எனது ஆணை

ஐய! = ஐயனே

நீ = நீ

நன்று போந்து அளி = போய்  நன்றாக நாட்டை காப்பாற்று

உனக்கு உரிய நாடு’ என்றான் = அது உனக்கு உரிய நாடு என்றான்

மிகப் பெரிய சிக்கல்.

 ஒரு புறம் தான் படித்த அறங்கள்.  இன்னொரு புறம் தந்தைக்கு   வாக்கு.  மறு புறம்  அரசை ஏற்க மறுக்கும் பரதன். இப்போது, இன்னொரு சிக்கல், குல குருவான  வசிட்டனின் ஆணை.

இராமன் என்ன செய்யப் போகிறான் ?

என்ன செய்தாலும் தவறாகப் போக வாய்ப்பு உள்ளது.

நாட்டை ஏற்றுக் கொண்டால் , கொடுத்த வாக்கில் இருந்து தவறியாக ஆகும்.

நாட்டை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , ஆசிரியனின் ஆணையை மீறியதாகும்.

இராமன் எப்படி இந்த சிக்கலை விடுவிக்கிறான் ? 

Wednesday, June 28, 2017

இராமாயணம் - வாய்மையும் தீமையும்

இராமாயணம் - வாய்மையும் தீமையும்


தயரதன் ஆணை கொண்டு இராமன் கானகம் போனான். போன இராமனைத் தேடி பரதன் வருகிறான். வந்தவன், இராமனை பார்த்துச் சொல்கிறான், "நடந்தது எல்லாம் தவறு. நீ வந்து அரசை ஏற்றுக் கொள் " என்கிறான்.

அதற்கு இராமன், "அதெல்லாம் முடியாது. எனக்கு என் தந்தை சொல்லை காப்பதுதான் தர்மம். அவர் சொன்ன சொல் தான் எனக்கு வேத வாக்கு" என்று சொல்கிறான்.

பரதனுக்கு சொல்லும் மறுமொழியில் இராமன் ஒரு மிகப் பெரிய உண்மையை உலகுக்கு எடுத்து உரைக்கிறான்.

தீமை என்றால் என்ன ? கெட்டது என்று எதைச் சொல்வது ?

சத்தியத்தில் இருந்து விலகுவதுதான் தீமை என்கிறான் இராமன்.

சத்தியத்தின் வழி நடப்பதுதான் தூய்மையான வழி என்று சொல்கிறான்.

பாடல்

வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,
“தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,
ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே?


பொருள்


வாய்மை என்னும் ஈது அன்றி = வாய்மை என்ற இது அல்லாது

வையகம் = உலகம்

“தூய்மை” என்றும் = தூய்மையான என்று

ஒன்று = ஒன்று உண்டென்று

உண்மை சொல்லுமோ? = ஒரு உண்மையைச் சொல்லுமோ ?

தீமைதான், = தீமை என்பது எது என்றால்

அதின் தீர்தல் அன்றியே = அதின் என்றால் அந்த வாய்மையின். சத்தியத்திற்கு புறம்பாக

ஆய் மெய்யாக = போவது அன்றி உண்மையிலேயே

வேறு = வேறு ஏதாவது

அறையல்  = சொல்ல

ஆவதே? = முடியுமா ?

வாய்மை, உண்மை, மெய்மை என்ற மூன்று சொற்களை சொல்கிறான் இராமன்.


இந்த மூன்றும் ஒரு பொருளை குறிப்பது தானே ? எதற்காக மூன்று சொற்கள் ?

மூன்றுக்கும் வேறுபாடு  இருக்கிறது.

மன , மொழி, மெய்யால் குற்றமில்லாமல் ஒருவன் ஒருவன் இருக்க வேண்டும். (மெய் , வாக்கு, காயம் என்று வட மொழியில் சொல்லுவார்கள் ).

உள்ளத்தில் (மனம்) இருந்து வருவது = உள்  + மை  = உண்மை
வாயில் இருந்து வருவது = வாக்கு + மை  = வாய்மை
மெய்யில் (உடல்) இருந்து வருவது = மெய் + மை  = மெய்மை

பரதா , நீ சொல்கிறாய் , "இப்போது நான் தானே அரசன் ? அப்படி என்றால் என் அரசை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள் " என்று.

அது வாதத்திற்கு சரியாக இருக்கலாம்.

ஆனால், உன்னுடைய உள்ளத்திற்கும், என் மனதிற்கும் தெரியும் அது சரி இல்லை என்று.

மன , மொழி, மெய்யால் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறான் இராமன்.

அதுதான்  தூய்மை. அதை அன்றி தூய்மை வேறு இல்லை.

புறத்தூய்மை நீரான் அமையும், அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்பார்  வள்ளுவர்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

என்பதும் அவர் வாக்கே.

எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன். 

Tuesday, June 27, 2017

திருக்குறள் - உலகிலேயே பெரிய முட்டாள்

திருக்குறள் - உலகிலேயே பெரிய முட்டாள் 


நிறைய பேர் நிறைய படிப்பார்கள். படித்தவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். அதை தீர அலசி ஆராய்ந்து அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்வார்கள்.

யார் கேட்டாலும், அதில் இப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று மேற் கோள் காட்டுவார்கள்.

படித்தது போதாது என்று மேலும் மேலும் படிப்பார்கள்.

சரி, இவ்வளவு படித்து அறிந்து கொண்டு இருக்கிறாயே, அதன் படி நடக்கிறாயா, அவற்றை வாழ்வில் கடை பிடிக்கிறாயா என்று கேட்டால்

"ஹாங்...அது எல்லாம் நடை முறைக்கு சரி வராது,  படிக்க வேண்டுமானால் நல்லா இருக்கும், வாழ்க்கைக்கு ஒத்து வராது, அதெல்லாம் செய்ய முடியாது, ரொம்ப கடினம் " என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விட்டு , மீண்டும் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தார்களோ , அப்படியே வாழ்க்கையை தொடருவார்கள்.

அவர்களைத்தான், உலகிலேயே பெரிய முட்டாள்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 
பேதையின் பேதையார் இல்.


பொருள்


ஓதி  = அறிய வேண்டியவற்றை படித்து அறிந்து

உணர்ந்தும் = அவற்றின் பயன்களை உணர்ந்து

பிறர்க்குரைத்தும் = பிறர்க்கு அதை எடுத்துச் சொல்லியும்

தானடங்காப் = தான் அடங்கா

பேதையின் பேதையார் இல் = முட்டாளைப் போல பெரிய முட்டாள் இல்லை .


ஓதி என்பதற்கு , மன மொழி மெய் அடங்குவதற்கு ஏதுவான நூல்களை ஓதி என்று குறிப்பிடுகிறார் பரிமேலழகர்.

புலன்களை அடக்கி, மனதையும், பேசும் மொழியையும் அடக்க உதவி செய்யும்  நூல்களை கற்று.

படித்தது மட்டும் அல்ல, அதன் பயன்களை உணர்ந்தும்.

அது மட்டும் அல்ல, ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டு.

தான் அடங்கா - தான் ஆசைகளை அடக்காமல் இருக்கும் முட்டாளை விட பெரிய முட்டாள் இல்லை.


நல்லவற்றை படிக்க வேண்டும்.

நல்லவை என்றால் - மன மொழி மெய் அடங்க உதவும் நூல்கள். அப்படி என்றால் சிற்றின்பத்தை தூண்டும் நூல்களை படிக்கக் கூடாது.

படித்ததன் பலன்களை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்து உணர்த்தவற்றின் படி வாழ வேண்டும்.

படிப்பு ஒரு பக்கம், வாழ்க்கை ஒரு பக்கம் என்று இருக்கக் கூடாது.

அப்படி என்றால், படிக்கவே வேண்டாமே.

நிற்க அதற்கு தக என்பார் வள்ளுவர்.

நல்லதைப் படித்து அதன் படி வாழவேண்டும்.

Sunday, June 25, 2017

இராமாயணம் - இசைந்த ஆண்டு எலாம் இன்றோடு ஏறுமோ ?

இராமாயணம் - இசைந்த ஆண்டு எலாம் இன்றோடு ஏறுமோ ?


கானகத்தில் இராமனைக் கண்டு, "நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று பரதன் வேண்டுகிறான்.

"இராமா, தயரதன் அரசை என்னிடம் கொடுத்தான். நான் ஏற்றுக் கொண்டதாகவே வைத்துக் கொள் . இப்போது இந்த அரசு என்னுடையது. என் அரசை உன்னிடம் தருகிறேன். நீ ஏற்றுக் கொள் " என்று கூறியதை முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அப்படி சொன்ன பரதனை, இராமன் மடக்குகிறான்.

"பரதா , நீ சொல்லியபடி நான் இந்த அரசை ஏற்றுக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தயரதன் , அரசை உனக்குக் கொடுத்தான். நீ அதை எனக்குத் தருகிறாய். அது எல்லாம் சரி தான்.  ஆனால்,பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல வேண்டும் என்பது தயரதனின் ஆணை. அந்த பதினான்கு ஆண்டுகள் இன்றோடு முடிந்து விடுமா ? " என்று கிண்டலாக கேட்கிறான்.

பாடல்

‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள, அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?


பொருள்


‘பசைந்த சிந்தை = அன்பு கொண்ட மனத்தை உடைய

நீ  = பரதனாகிய நீ

பரிவின் = என் மேல் கொண்ட பரிவினால் , அன்பினால்

வையம் = உலகை

என் வசம் செய்தால் = என்னிடம் தந்தால்

அது முறைமையோ? = அது முறையாகுமா ?

வசைக்கு = பழிக்கு

அசைந்த  = பயந்த

எந்தையார் = என் தந்தையான தயரதன்

அருள = கைகேயிக்கு கொடுத்த வரத்தினால்

அன்று நான் = அன்று நான்

இசைந்த = ஏற்றுக் கொண்ட

ஆண்டு எலாம் = பதினான்கு ஆண்டுகள் எல்லாம்

இன்றொடு ஏறுமோ? = இன்றோடு முடிந்து விடுமா ?


பதினான்கு ஆண்டுகள் கானகம் போவதாய் நான் ஏற்றுக் கொண்டு வந்து இருக்கிறேன். இப்போது நான் அரசை ஏற்றுக் கொண்டால் அது தயரதனின் சொல்லை மீறிய செயலாகும். தயரதன் , கைகேயிக்கு வரம் கொடுத்து இருக்கிறான். என் தந்தையான அவரின் வாக்கை காப்பாற்ற வேண்டியது என் கடமை. நான் அரசை ஏற்றுக் கொண்டால், அது தயரதன் வாக்கு தவறியதாக ஆகும். அவர் பழிக்கு அஞ்சியவர். எனவே நான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.


எவ்வளவு தான் துன்பமாக இருந்தாலும், தந்தையின் வார்த்தையை காப்பது மகனின் கடமை.   அது மட்டும் அல்ல, நான் கானகம் போவதாக வாக்கு கொடுத்து விட்டேன்.  என் வாக்கையும் காக்க வேண்டும். எனவே, நான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.

உயர்ந்த கொள்கைகளுக்காக வாழ்ந்த பாத்திரங்களை காட்டுகிறார் கம்பர். எப்படி வாழ வேண்டும் என்று பாடம் நடத்துகிறார்.  எப்படியும் வாழலாம் என்று உலகம் நினைக்கும் போது , இல்லை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று கோடு கிழித்து காட்டுகிறார்.

நம் வார்த்தையை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களின் வார்த்தைகளையும் நாம் காக்க வேண்டும். 

Friday, June 23, 2017

இராமாயணம் - மன்ன ! போந்து நீ மகுடம் சூடு

இராமாயணம் - மன்ன ! போந்து நீ மகுடம் சூடு 


ஆசை இல்லாத மனிதன் யார் ?

ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கு மட்டும் அல்ல பாவங்களுக்கும் காரணமாய் இருக்கிறது.

இல்லாத  மேல் ஆசைப் பட்டு மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்தையும் அடைய ஆசை பட்டு துன்பப் படுகிறார்கள்.

ஆசையை விட முடியுமா ? ஆசை இல்லாத வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கிறதா ? ஆசைதானே நம் முன்னேற்றத்திற்கு காரணம். ஆசை இல்லாத மனிதன் ஒரு மனிதனா ? என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்...நம்மிடம் எவ்வளவு ஆசைகள் இருக்கின்றன. பணம், செல்வாக்கு, பதவி, சொத்து, சுகம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்பு, என்று எண்ணில் அடங்கா ஆசைகள்.

அத்தனை ஆசைகளையும் தூர எறிந்து விட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

உப்பு சப்பு இல்லாமல் வெறுமையாக இருக்கும் அல்லவா ? அப்படித்தானே நினைக்கிறீர்கள் ?

 இல்லை.

ஆசை இல்லாமலும் முடியும். ஆசை இல்லாத வாழ்விலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. சுகம் இருக்கிறது என்று காட்டுவதற்குத் தான் இந்த திருவடி சூட்டு படலம் என்ற ஒன்றை வைத்து இருக்கிறார் கம்பர்.

மிகப் பெரிய இராஜ்யம்.  ஞானிகளையும் பாவ வழியில் செல்லத் தூண்டும் செல்வம் என்பாள் கூனி. அவ்வளவு செல்வம். கணக்கில் அடங்காத செல்வம். அதிகாரம்.  பெயர். புகழ். ஆள். அம்பு. சேனை.  சுகம்

அத்தனையும் காலடியில் கிடக்கிறது.

இராமனும் பரதனும் அதை வேண்டாம் என்கிறார்கள்.

பத்து ரூபாய் காணாமல் போனால் இரண்டு நாள் தூக்கம் வராது
நமக்கு.

எனக்கு இந்த அரசு வேண்டாம் என்று பரதன் சொல்கிறான். இராமா, நீ இதை வைத்துக் கொள் என்கிறான்.

இல்லை, இல்லை, எனக்கு வேண்டாம். நீயே அரசாள் என்று பரதனிடம் இராமன் கூறுகிறான்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?

பரதன் கூறுகிறான், "இந்த மூன்று உலகிலும் உனக்கு நிகரான ஒருவன் யாரும் இல்லை. எனக்கு முன் பிறந்தவன் நீ. நீ அந்த அரசை எனக்குத் தந்து விட்டாய் அல்லவா. இப்போது அது என்னுடைய சொந்தமான அரசு தானே ? அதை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா ?" என்று இராமனிடம் கேட்கிறான்.

இராமன் : "ஆம், அது உன்னுடைய அரசு. அதை நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீ தான் சக்கரவர்த்தி "

பரதன்: சரி அப்படினா, என் அரசை நான் உனக்குத் தருகிறேன். நீ ஆண்டு கொள் என்கிறான்.

பாடல்


‘முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு ‘எனா.

பொருள்


‘முன்னர் = எனக்கு முன்னால்

வந்து = வந்து

உதித்து = நீ உதித்து

உலகம் மூன்றினும் = இந்த மூன்று மூன்று உலகிலும்

நின்னை = உன்னை

ஒப்பு இலா = இணை இல்லா

நீ பிறந்த பார் = இந்த பிறந்த இந்த உலகில்

என்னது ஆகில் = என்னுடையது என்று நீ சொன்னால்

யான்  = நான்

இன்று தந்தனென் = இன்று அதை உனக்குத் தந்து விட்டேன்

மன்ன! = மன்னா

போந்து = போய்

நீ மகுடம் சூடு ‘எனா = நீ மகுடம் சூட்டு என்றான்

நீ எனக்கு முன் இந்த பாரில் பிறந்தாய். இந்த மூன்று உலகிலும் உனக்கு இணையானவன் யாரும் இல்லை. நீ எனக்குத் தந்த அரசை நான் உனக்குத் தருகிறேன். நீ போய் முடி சூட்டிக் கொள்

என்கிறான் பரதன்.

அரச முறைப் படி - நீ முதலில் பிறந்தவன். எனவே நீ தான் ஆள வேண்டும்.

மூன்று உலகிலும் நீ திறமையானாவான் = எனவே ஆள நீயே சரியான ஆள்.

நீ எனக்குத் தந்தாய். நான் ஏற்றுக் கொண்டேன். இப்போது அந்த அரசு என்னுடையது. என்னுடைய அரசை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்.

அப்படி பார்த்தால், இது தயரதனின் அரசு அல்ல. என் அரசு. அதை நான் உனக்குத் தருகிறேன். அதை ஏற்றுக் கொள்வதில் உனக்கு ஒரு தடையும் இல்லை.

ஒரு அரசை எப்படி ஒரு அண்ணணனும் தம்பியும் எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம்  என்று சொல்கிறார்கள்.

அப்படியும் வாழ முடியும்.

வாழ்திருக்கிறார்கள். 

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்


புற இருளை எவ்வாறு சூரியன் போக்குகிறதோ , அது போல அக இருளை நீக்க வந்தது இந்த பெரிய புராணம் என்று பாயிரத்தில் குறிக்கிறார் சேக்கிழார்.

இருள் , தான் எவ்வளவு தான் முயன்றாலும் அது தன்னை தானே வெளிச்சமாகிக் கொள்ள முடியாது.

அது போல, அக இருளை நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நாமே அதே போக்கிக் கொள்ள முடியாது. குருவருளும் , இறை அருளும் தேவை . இறைவனின் அருள் இல்லாமல் அது நிகழாது என்பதை பெரிய புராணம் முழுவதும் நாம் காண முடியும்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"  என்பார் மணிவாசகர்.

பெரிய புராணத்தில் முதல் கதை தடுத்தாட்கொண்ட புராணம்.

ஒரு பிரச்சனை, தவறு , சிக்கல் நிகழப் போகிறது என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் அதை தடுத்து நிறுத்தி, அதை செய்ய  இருந்தவர்களை அதில் இருந்து காப்பாற்றுவது தடுத்து + ஆண்டு + கொள்வது.

சுந்தரர், திருமணம் செய்து கொள்ள  இருந்தார். அப்போது சிவ பெருமான், வயோதிக வேதியர் வடிவில் வந்து, "இந்த சுந்தரன் எனக்கு அடிமை. இவனுடைய தாத்தா எனக்கு ஓலை எழுதி தந்திருக்கிறார். எனவே இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது " என்று தடுத்தார்.

சுந்தரர் வாது புரிகிறார். "பித்தா " என்று அந்த வேதியரை ஏசுகிறார்.

வேதியர் ஓலையை காண்பிக்கிறார்.  அந்த ஓலையை வாங்கி கிழித்துப் போட்டு விடுகிறார் சுந்தரர். வேதியர் விடுவதாய் இல்லை. "இது படி (copy ) ஓலை தான். மூல ஓலை என்னிடம் இருக்கிறது " என்று எல்லோரையும் கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கிறார். ஊரில் உள்ள எல்லோரும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். சுந்தரர் அடிமைதான் என்று சொல்லி விடுகிறார்கள்.

பின், சிவன் தன் சுய உருவத்தை காட்டி , "நீ இந்த சம்சார சாகரத்தில் கிடந்து அழுந்தாமல் இருக்கவே வந்து உன்னை தடுத்தாட்கொண்டேன்" என்று அருள் புரிகிறார்.

"என்னை பித்தா என்று திட்டினாய் அல்லவா, எனவே என்னை பித்தா என்றே ஆரம்பித்து பாடு " என்றார்.

"பித்தா  பிறை சூடி, பெருமானே அருளாலா " என்று பாடுகிறார்.

அந்தக்  கதைதான் நாம் பார்க்கப் போகிறோம்.

முதல் பாடல் சுந்தரர் பிறந்த நாட்டின் பெருமையை பற்றி பேசுகிறது.

பாடல்  

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு,
மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச்
செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.

பொருள்


கங்கையும்  = கங்கை நதியும்

மதியும் = நிலவும்

பாம்பும்  = பாம்பையும்

கடுக்கையும் = கொன்றை மலர்

முடி மேல் வைத்த = முடி மேல் வைத்த

அங்கணர் = அழகிய கண்ணை உடைய அவர் (சிவன்)

ஓலை காட்டி = ஓலையை காட்டி

ஆண்டவர் = ஆட்கொண்ட

தமக்கு நாடு = உரிமையாகக் கொண்ட நாடு

மங்கையர் = பெண்கள்

வதன = முகம்

சீத = குளிர்ச்சியான

மதி = நிலவு போன்ற

இரு மருங்கும் ஓடிச் = இரண்டு பக்கமும் ஓடி

செங் கயல் = சிறந்த மீன்கள்

குழைகள் = காதில் அணியும் ஆபரணங்களை

நாடும் = தேடும்

திருமுனைப்பாடி நாடு = திருமுனைப்பாடி  என்ற நாடு



நாடு நன்றாக  இருக்கிறது என்று சொல்ல வந்த சேக்கிழார் அதை  எப்படி சுருக்கமாக சொல்வது என்று யோசித்து சொல்கிறார்.

பெண்களின் முகம் குளிர்ந்த நிலவைப் போல இருந்தது என்கிறார் . பெண் மகிழ்ச்சியாக இருந்தால்  அவள், இருக்கும் வீடும், சமுதாயமும்,  நாடும் சிறந்து  விளங்கும். தான் இருக்கும் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் பெண் மகிழ்ச்சியாக இருப்பாள். எல்லா பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றால் , அங்குள்ள எல்லா குடும்பங்களும் மகிழ்வாக இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்ல, அவர்களின் மீன் போன்ற கண்கள் , அவர்களின் காதில் உள்ள குழையை தேடி போனதாம்.  கண்கள் நீண்டு இருந்தன என்று சொல்கிறார்.  நீண்ட கண்கள் பெண்களுக்கு ஒரு அழகு.

உறவுகள் கண்ணில் தொடங்கி , காதின் வழியே உறுதி அடைகின்றன.

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்தவுடன் ஏதோ ஒன்று பிடித்துப் போகிறது. எனக்கேற்ற பெண் / ஆண் இவள்/இவன் தான் என்று மனதில் எங்கோ பட்சி சொல்கிறது.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமாய் அவளோடு பேசி , அவள் பேசுவதை கேட்டு மேலும் பிடித்துப் போகிறது.

காதல் கண்ணில் ஆரம்பிக்கிறது.

உருவ வழிபாடு அது தான். பார்த்தவுடன் பக்தி வருகிறது. பின் இறைவனைப் பற்றி கேட்டு, படித்து அறிந்து கொள்கிறோம்.

அதை சொல்ல வந்த சேக்கிழார், அந்த ஊரில் உள்ள பெண்களின் கண்கள் காது வரை நீண்டு இருந்தது என்று  கூறுகிறார்.

சுந்தரை  -  ஓலை காட்டி ஆண்டார்
ஞான சம்பந்தரை  - பாலை (ஞானப்பால்) தந்து ஆண்டார்
மணி வாசகரை - காலை (திருவடி) காட்டி ஆண்டு கொண்டார்
நாவுக்கரசரை -  சூலை நோய் தந்து ஆண்டு கொண்டார்

இவைகள் வெறும் கதைகள் அல்ல. மிகப் பெரிய தத்துவங்களை சொல்ல வந்த ஒரு ஊடகம். அந்தத் தத்துவம் என்ன என்று பெரிய புராணம் முழுவதும் படித்தால் புரியும்.

நேரம் இருப்பின், முடிந்தவரை, தெரிந்தவரை பகிர்ந்து கொள்ள ஆசை.

Thursday, June 22, 2017

கம்ப இராமாயணம் - பெண்ணின் குணங்கள்

கம்ப இராமாயணம் - பெண்ணின் குணங்கள் 


பெண்ணின் குணங்களைப் பற்றி சொல்லும் போதெல்லாம் , அவளுக்கு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று நான்கு குணங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

மற்ற குணங்கள் எல்லாம் இருக்கட்டும், அது என்ன மடம்  ?

மடம் என்றால் மடத்தனம்,  அறிவின்மை என்ற பொருளில் தான் பலர் உரை சொல்ல படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன்.

அது சரிதானா ?  பெண்களுக்கு மட்டும் ஏன் மடத்தனம் என்ற அந்த குணத்தை சொல்லி இருக்கிறார்கள் ? எல்லா பெண்களுமா அப்படி இருப்பார்கள் ?

எனக்கு வேறு ஒரு யோசனை தோன்றுகிறது.

பெண் என்பவள் தன் ஆற்றல் என்ன என்பதை அறியாமல் இருக்கிறாள்.

அவளுக்குள் மாபெரும் ஆற்றல் இருக்கிறது.

மன வலிமையிலும், உடல் வலிமையிலும் பெண் ஆணை விட பல மடங்கு உயர்ந்தவள் தான்.

ஆண் பார்ப்பதற்கு வேண்டுமானால் முரடாய், வலிமையானவனாக தோன்றலாம். உலகிலேயே மிகப் பெரிய  பலமான ஆண் கூட ஒரு நோஞ்சான் பெண் தாங்கும் பிரசவ வலியை தாங்க முடியாது.

மெலிந்து, வலுவிழந்து இருக்கும் ஒரு கடைக் கோடி பெண் கூட, அந்த பிரசவ வலியை பொறுத்துக் கொள்கிறாள்.

கல்யாண வீட்டில் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டால் மூச்சு முட்டிக் கொண்டு அலைகிறோம் . மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு அரை கிலோ எடை இருக்கும் உணவு. ஒரு சில மணி நேரங்களில் சீரணம் ஆகி விடும். அதை பொறுத்துக் கொள்வதே கடினமாக இருக்கிறது.

பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமப்பது என்பதை ஒரு ஆணால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரசவம் அதற்கு அடுத்தபடி.

உடல் வலியில் பெண் ஆணை விட பல படிகள் மேல் என்பதில் சந்தேகமே இல்லை.

மன வலியிலும் பெண் உயர்ந்தே நிற்கிறாள். பிறந்த வீடு, பெற்றோர்,உற்றார், உறவு, உடன் பிறப்பு என்று அனைத்தையும் விட்டு விட்டு புகுந்த வீடு போய் ,    அனைவரையும் அணைத்துக் கொண்டு போய் , கணவன், குழந்தைகள் என்று அத்தனை போரையும் சமாளித்து கொண்டு போகும் அவளின் மன உறுதியும் பலமும் அசாதாரணமானது.

இவ்வளவு பலம் இருந்தும், தன்னிடம் பலம் இல்லை என்று நினைத்தே வாழ்கிறாள்.

ஆனால், சமயம் வரும்போது எவ்வளவு பெரிய சுமை, சிக்கல் , பிரச்சனை வந்தாலும் அவள் தன் பலத்தால் அவற்றை எதிர் கொண்டு சமாளிக்கிறாள். அவள் இல்லாமல் ஆணால் ஒன்றும் செய்ய முடியாது. தெரியாமலா சொன்னார் வள்ளுவர் "வாழ்க்கை துணை நலம் " என்று மனைவியை.

அவள் துணை இல்லாமல் , ஆண் ஒன்றும் சாதிக்க முடியாது.

அப்படி தன் வலிமை தெரியாமல் அவள் அடங்கி  போவதால், தன் பலம் அறியாத அந்த குணத்தை மடம் என்று சொல்லி இருக்கலாம்.

அது மடத்தனம் இல்லை. அவளின் இயற்கை குணம் , அவளின் ஆற்றலை அவள் அறியாமல் மறைக்கிறது.  அந்த மறை தன்மையை உலகம் மடத்தனம் என்று கூறுகிறது.

இது என் சொந்த கற்பனை அல்ல.

இராமாயணத்தில் சீதை.


அவள், வெகுளியாக இருக்கிறாள்.

இராமனும், இலக்குவனும் சீதையும் நகரத்தை விட்டு காடு நோக்கி போகிறார்கள்.

நகரின் வாசலை தாண்டியவுடன், இராமனிடம் சீதை கேட்கிறாள் "இதுதான் காடா ?" என்று. அவ்வளவு வெகுளி. ஒன்றும் தெரியாத பெண்ணாக இருக்கிறாள். நகர் வாசலை தாண்டியவுடன் காடு வந்துவிட்டது என்று எண்ணும் அளவுக்கு உலக அறிவே இல்லாமல் இருப்பதாக கம்பன் காட்டுகிறான்.


பாடல்


"நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?" என, இசைத்ததும் இசைப்பாய். 

பொருள்

"நீண்ட = நீண்ட நாள்

முடி வேந்தன் = முடி சூட்டி அரசாண்ட தயரதன்

அருள் ஏந்தி = கட்டளையை ஏற்று

நிறை செல்வம் = நிறைந்த செல்வத்தை

பூண்டு = = ஏற்று

அதனை நீங்கி = பின் அதை நீங்கி

நெறி போதலுறு நாளின் = (கானகம்) போகும் போது ,

ஆண்ட நகர் = ஆட்சி செய்த நகரமான அயோத்தி

ஆரையொடு வாயில் அகலாமுன் = வாசலை விட்டு விலகியவுடன்
,
யாண்டையது கான்?" = இதுதான் காடா ?

என = என்று

இசைத்ததும் இசைப்பாய் = என்று கேட்டதை (சீதையிடம் ) சொல்வாய் (என்று இராமன் சொல்லி அனுப்பினான்)

கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் ஆயிரம் அந்தரங்க பேச்சுகள், செயல்கள் இருக்கும். அதை, அனுமன் போன்ற மூன்றாம் மனிதனிடம் சொல்வது பண்பாடாக இருக்காது. அதே சமயம், அனுமன் , இராமனின் தூதன் தான் என்று உறுதி செய்ய இராமனுக்கும், சீதைக்கும் மட்டும் தெரிந்த சில செய்திகளை சொல்லவும் வேண்டும்.

தேர்ந்து எடுத்து சொல்கிறான் இராமன்.

அப்படி , ஒன்றும் தெரியாதா அப்பாவியாக இருந்த சீதையிடம் , அனுமன் சொல்கிறான்.

"அம்மா, மத்தது எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது என் தோள் மேல் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன் "

அதை கேட்ட சீதை சொல்கிறாள்.

"அனுமனே, எனக்கு தீங்கு செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும் என் சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன் . ஆனால் , அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு களங்கம் என்று நினைத்து செய்யாமல் இருக்கிறேன்"

என்று கூறுகிறாள்

பாடல்

'அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ? 
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என் 
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன் 
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்


பொருள் 


'அல்லல் = துன்பம் செய்யும்

மாக்கள் = விலங்குகளை போன்ற அரக்கர்கள் வாழும்

இலங்கையது ஆகுமோ? = இலங்கை மட்டும் அல்ல

எல்லை நீத்த உலகங்கள் யாவும் = எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும்

என் சொல்லினால் சுடுவேன்; = என் சொல்லினால் சுடுவேன் , எரித்து சாம்பலாக்கி விடுவேன்

அது = அப்படி செய்தால்

தூயவன் = இராமனின்

வில்லின் = வில்லின்

ஆற்றற்கு = ஆற்றலுக்கு

மாசு  = களங்கம்

என்று, = என்று நினைத்து

வீசினேன் = அந்த எண்ணத்தையே வீசி விட்டேன்


இலங்கையை அழிக்க இராமனுக்கு அனுமன் போன்ற அறிவாளி, பலசாலி துணை வேண்டி இருந்தது, ஆயிரக்கணக்கான வானரங்களின் துணை, இலக்குவனின் வீரம்,  வீடணனின் ஆற்றல், அங்கதனின் போர் திறம் என்று பல துணைகள் தேவைப் பட்டது.

சீதைக்கு அது ஒன்றுமே வேண்டாம். ஒரே ஒரு சொல் போதும் என்கிறாள்.

அவ்வளவு ஆற்றல் அவளுக்கு உள்ளே இருக்கிறது.

அதை அறியாமல், "இது தான் காடா " என்று வெகுளியாக கேட்கிறாள். "பொன் மான்  வேண்டும் " சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறாள்.

ஏதோ ஒரு காரணத்துக்காக, இயற்கை அவளின் ஆற்றலை அவளிடம் இருந்து மறைத்து வைக்கிறது.

அவளும் அது தெரியாமல், ஆற்றல் இல்லாதவளாகவே வலம் வருகிறாள்.

அந்த குணத்தைத்தான் உலகம் தவறாக மடமை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது.

ஒரு விதத்தில் தன்னை தான் அறியாதது மடமை தான்.

அனுமனுக்கும் அவன் ஆற்றல் அவனுக்குத் தெரியாது என்று சொல்லுவார்கள்.  அது மடமை இல்லை. அது தேவையாக இருக்கிறது.

ஆசிரியர் மாணவனிடம் கேட்பார் , இரண்டும் இரண்டும் எத்தனை என்று ....அவருக்குத் தெரியாமல்  அல்ல அவர் கேட்பது. அது ஒரு உத்தி. மாணவன் பதில்  சொல்லுவான், அவனை பாராட்டுவார், அவன் மகிழ்வான், மேலும் மேலும்  பல சிக்கலான கணக்கை போட்டு ஆசிரியரிடம் பாராட்டு வாங்கி பெரிய ஆளாவான்.

அனைத்துக்கும் காரணம், ஒன்றும் தெரியாத மடையன் மாதிரி அவர் கேட்ட  இரண்டும் இரண்டும்   எத்தனை என்ற கேள்வி.

பெண் தன் ஆற்றலை மறைத்து, மறந்து ஆணை உயர்த்துகிறாள்.

தன் ஆற்றலை அடக்கி இராமனுக்கு பெருமை சேர்த்தாள் சீதை.

அது மடமையா ?

அது மடமை என்றால், அந்த மடமையை வணங்குவோம்.

இப்படி பெண் தன் ஆற்றலை மறைத்து ஆணை உயர்த்திய பல சம்பவங்கள் நம் இலக்கியம்  எங்கும் கொட்டிக் கிடக்கிறது.

சரியாக பார்க்காமல் இருந்து விட்டோம்.

இன்னும் கொஞ்சம் உதாரணங்கள் சொல்ல ஆசை, தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை இருந்தால்.


Wednesday, June 21, 2017

திருவாசகம் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

திருவாசகம் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் 


பாடல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

இந்த பாடல் அநேகமாக எல்லோரும் கேட்டு அறிந்தது தான். இதை பற்றி சொல்லும் பலரும், டார்வின் பரிணாம கொள்கையை சொல்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அதை சொல்லிவிட்டார் என்று கூறி இந்த பாடல் வரிகளை சொல்வார்கள்.

பரிணாம வளர்ச்சியில் புல் , பூண்டு, புழு , மரம், மிருகம், பறவை என்று ஆகி , பின் மனிதராய், பேயாய், கணங்களாய் , அசுரராகி, தேவராக ஆவோம் என்று அர்த்தம் சொல்லுவார்கள்.

அப்படி ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

அதில் ஒரு சின்ன சிக்கல் என்ன என்றால், பரிணாம வளர்ச்சியில் உயிர்கள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் போவதைப் பார்க்கிறோம். புழுவில் இருந்து மரம் வருமா ? பாம்பில் இருந்து உயிரில்லாத கல் வருமா ?

வராது.

பின் மணிவாசகர் இந்த பட்டியலை எந்த வரிசையில் தந்திருப்பார் ?

ஒரு வரிசையும் இல்லை,  சும்மா செய்யுளின் இலக்கணத்திற்கு ஏற்ப பாடி  இருப்பார்   என்று சொல்லலாம்.

மணிவாசகர் போன்ற ஞானிகள் சும்மா அப்படி எழுதுவார்களா ? அவர்கள் ஒன்றும்  பணத்துக்கும், புகழுக்கும் எழுதியவர்கள் அல்ல. பின், இந்த பட்டியலின்  தர வரிசை என்ன ?

இப்படி யோசித்தால் என்ன ?

இது அத்தனையும் ஒரே பிறவியில் நாம் பிறந்து , மறைந்து , மறுபடியும் பிறந்து மறைந்து நிகழும் செயல் என்று சிந்தித்தால் என்ன ?

என்ன, குழப்புகிறதா ?

அது எப்படி, ஒரே பிறவியில் பல பிறவிகள் முடியும் ?

சிந்திப்போம்.

ஒரு நாள் ரொம்ப கோபம் வருகிறது. எல்லோர் மேலும் எரிந்து எரிந்து விழுகிறோம்.  வீட்டில் மனைவியோ, அம்மாவோ, "ஏன் இப்படி நாய் மாதிரி குலைக்கிற " என்று சொல்வதை கேட்டு இருக்கிறோம்.

" ஏதாவது சொல்லு...இப்படி கல்லு மாதிரி இருந்தா என்ன அர்த்தம் "

"அவன் சரியான கழுவுற மீன்ல , நழுவுற மீன் "

" பாம்புக்காவது பல்லில்  மட்டும்  தான் விஷம் , அவனுக்கு உடம்பு பூரா விஷம் "


"பணம் பணம் என்று ஏண்டா இப்படி பேயா அலையிற "

" அந்த பெண்ணை இப்படி கெடுத்திருக்கானே , அவனெல்லாம் ஒரு மனுஷனா, சரியான மிருகம் "

" நல்ல நேரத்தில உதவி செஞ்சீங்க , நீங்க தெய்வம் சார் "

" தெய்வம் மனுஷ ரூபே னு சொல்லுவாங்க, கடவுள் போல வந்து எங்களை காப்பாத்துனீங்க "

என்று நாம் தான் சில சமயம் மரமாகவும், கல்லாகவும், மனிதனாகவும், தேவனாகவும்  இருக்கிறோம்.

இப்படி மாறி மாறி, நாளும் பிறந்து இறந்து கொண்டு இருக்கிறோம்.

நேற்று இருந்த தெய்வம் இன்று காணோம். குரங்கு புத்தி. ஒன்றில் இருந்து மற்றொன்றாக தாவிக் கொண்டே இருக்கிறது.

இதில் உண்மையான நாம் யார் ?


நல்லவனா ? கெட்டவனா ? மிருகமா ? தெய்வமா ?

புரியாமல் தவிக்கிறோம்.

"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் " என்று தளர்ந்து சொல்கிறார் மணிவாசகர்.

சில உண்மைகள், சில வேஷங்கள், சில வேஷங்களை நாமே நம்பி விடுகிறோம்.

உண்மை எது , பொய் எது என்று தெரியாமல் போய் விடுகிறது.

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் "

என்கிறார் மணிவாசகர்.

இது ஒரு சிந்தனை.

ஒரு பிறப்புக்குள்ளே இத்தனை பிறப்புகள். மற்றவர்களை விடுங்கள். நம்மால் தாங்க முடியுமா ?

ஒரு நாளைக்கு பத்து வேடம் போட்டு நடிக்கிறோம்.

சில நாமே போட்டு கொள்வது. சில வேடங்கள் நம் மீது திணிக்கப் படுகிறது.

மனிதனாய் பிறக்கிறோம். கொஞ்ச நேரத்தில் மிருகமாய் உருவெடுக்கிறோம். பின் அது இறந்து, தேவனாய் பிறக்கிறோம்.

நாளுக்குள் ஆயிரம் முறை பிறந்து இறந்து பிறந்து ....

மெய் எது என்பதை அறிந்தால் வீடு பேற்றை அடையலாம்.

முயற்சி செய்வோம். 

திருக்குறள் - உலகை ஆளலாம்

திருக்குறள் - உலகை ஆளலாம் 


எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தால் கூட சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

மூன்று விடயங்களை கைக் கொண்டால் எந்த பெரிய காரியத்தையும் செய்து விடலாம்.

அது என்ன மூன்று ?

ஒன்று - காலம்
இரண்டாவது - இடம்
மூன்றாவது - செயல்

பாடல்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

பொருள்

ஞாலம் = உலகம்

கருதினும் = நினைத்தாலும்,

கைகூடும் = கிடைக்கும்

காலம் = காலம்

கருதி = தேர்ந்து

இடத்தான் = இடத்தால்

செயின் = செய்தால்

மேலோட்டமாக பார்த்தால் இடமும் காலமும் அறிந்து செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்பது கருத்து.

சற்றே ஆழ்ந்து சிந்திப்போம்.


ஞாலம் கருதினும் = இதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. ஞாலம் கருத்தின் கை கூடும் என்று சொல்லி இருக்கலாம். அப்படிச் சொல்லாமல், ஞாலம் கருதினும் என்று வலிந்து ஒரு  உம் மை சேர்க்கிறார். அப்படி என்றால், உலகை வெல்வது கடினம். ஆனால் , இடமும் காலமும் அறிந்து செய்தால் அதுவும் கூட  முடியும் என்று அர்த்தம். அப்படி என்றால்,  வேறு எல்லாமும் முடியும் என்றுதானே அர்த்தம். மலையையே தூக்கி விடுவான் என்றால், சின்ன கல்லை தூக்க மாட்டானா ?

கை கூடும் = கையில் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார். சந்தேகம் இல்லை.  கை கூடலாம் என்று சந்தேகமாகச் சொல்ல வில்லை.  கை கூடும் என்று  வரையறுத்துச் சொல்கிறார்.

காலம் கருதி இடத்தான் செய்யின் = காலம் புரிகிறது. அது என்ன இடம்.  இடம் என்றால் நிலத்தின் ஒரு பகுதியா ? பின்னால்  இடனறிதல் என்று ஒரு அதிகாரம் வருகிறது.  சொற் சிக்கனம் கொண்ட வள்ளுவர் ஒரே கருத்தை இரண்டு இடத்தில் சொல்வாரா ? அப்படி என்றால் காலமறிதல் என்ற இந்த அதிகாரத்தில்  இடத்தைப் பற்றி ஏன் கூறுகிறார் ?

இடம் என்றால் நிலை. தற்போதைய நிலை.

"நான் இப்போது சரியான இடத்தில் தான் இருக்கிறேன் " என்று ஒருவர் கூறினால், அவர் நல்ல நிலப் பகுதியில் இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. இருக்கின்ற பதவி, அவருக்கு மற்றவரின் தொடர்பு, செல்வாக்கு,

"நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்று தெரியுமா ? இருக்கும் இடம் தெரிந்து பேசு "என்று சொல்வது இருக்கின்ற நிலை அறிந்து பேசு என்ற பொருளில்.

காலம் சரியாக இருந்தாலும், நாம் இருக்கும் நிலையை அறிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

நம்முடைய நிலை, மாற்றான் நிலை, துணைவர்களின் நிலை என்று அனைத்தையும் ஆராய்ந்து


"கருதி" = கணக்கில் கொண்டு. ஆராய்ந்து. எது சரி , எது தவறு என்று ஆராய்ந்து....

"செயின் "...இறுதியில் செய்ய வேண்டும். சில பேர் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். செயல் இருக்காது. இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். செயல் ஒன்றும் இருக்காது. அப்படி இருந்தால் வெற்றி வராது.

செயல் பட வேண்டும்.

காலம் - இடம் - ஆராய்ச்சி (planning ) - செயல் (execution )  என்று இருந்தால் வெற்றி நிச்சயம்.

அடுத்த முறை ஏதாவது பெரிய செயல் வரும்போது , சற்று நிதானமாக இவற்றை கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்.

வெற்றியே வரும்.



Tuesday, June 20, 2017

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை 


கடினமான காரியம் என்று ஒன்று உள்ளதா ? கருவியோடு காலம் அறிந்து செய்தால் என்று கேட்கிறார் வள்ளுவர்.


பாடல்

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

பொருள்

அருவினை = கடினமான செயல், பெரிய செயல்

என்ப  =  என்று (ஒன்று)

உளவோ = உள்ளதா ?

கருவியான் = கருவியை உடையவன்

காலம் = காலம்

அறிந்து செயின் = அறிந்து செய்தால்


எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க இரண்டு இன்றியமையாதது - ஒன்று தகுந்த கருவிகள். மற்றொன்று செய்யத் தகுந்த காலம். 

காலம் என்பதற்கு தகுந்த காலம் என்று பொருள் சொல்லப் படுகிறது. ஒரு அரசன், தகுந்த காலத்தில் காரியத்தை செய்ய வேண்டும் என்பது பொதுப் பொருள். 

காலத்தை நாம் வேறு விதமாக பார்க்கலாம்.

எந்தக் காலத்தில் செய்ய வேண்டும் என்பது ஒரு பொருள். எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் பட வேண்டும். 

சில மாணவர்கள், தேர்வுக்கு சில நாள் முன்னால் படிக்கத் தொடங்குவார்கள். இரண்டு அல்லது மூணு நாளில் மொத்த புத்தகத்தையும் படித்து முடித்து விடலாம் என்று காலத்தை தவறாக எடை போடுவார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள்  ஆரம்பத்தில் இருந்தே தினம் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டே வருவார்கள். அவர்களுக்குத் தெரியும் உயர்ந்த மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு காலம் , நேரம் படிக்க வேண்டும் என்று. 

அதே போல் விளையாட்டுத் துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் வெற்றி பெற எவ்வளவு காலம் வேண்டும் என்று அறிந்து கொண்டு செயல் படவேண்டும். 

கருவியான் காலம் அறிந்து செயின்.....

சில காரியங்களை கருவி இல்லாமல் செய்தால் காலம் அதிகம் ஆகும். 

உதாரணமாக, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்தே போவது என்றால்  காலம் அதிகம் ஆகும். பேருந்து, கார், ஆகாய விமானம் என்ற கருவியின் துணை கொண்டு செய்தால் காலம் மிச்சப்படும். 

எந்த கருவியை உபயோகப் படுத்தலாம், எந்த காலத்தில் செய்யலாம், எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் படவேண்டும்.

அது மட்டும் அல்ல, ஒவ்வொரு செயலும் , சரியானபடி முடிய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். 

சரியான காலம் பார்த்து விதை விதைத்து விட்டோம் என்பதற்காக அந்த விதை உடனே முளைத்து காய் கனி தராது. அது வளர்ந்து பலன் தர காலம் ஆகும். 

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களாயினும் , பருவத்தால் அன்றி பழா . 

அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது. 

குழந்தை பத்து மாதம் தாயின் கருவில் இருந்தால்தான் அது ஆரோக்கியமாக பிறக்கும். குறை பிரசவம் என்றால் ஆரோக்கிய குறைவுதான். 

அவசரப் படக்கூடாது. 

சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு (gym ) இரண்டு நாள் போவார்கள். மூன்றாம் நாள் எடை குறையவில்லை, தசைகள் நல்ல வடிவில் வரவில்லை என்று நிறுத்தி விடுவார்கள். இது எல்லாம் வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று. 

எனவே,

காலம் என்பது 

- எப்போது செய்ய வேண்டும் என்று அறிவது 
- எவ்வளவு காலம் தேவை என்று அறிவது 
- பலன் கிடைக்க எவ்வளவு காலம் என்று அறிவது 

நல்ல கருவிகள் காலத்தை மிச்சப் படுத்த உதவும். அதையும் அறிந்து செயல் பட வேண்டும். 

ஒரு காரியத்தை மற்றவர்களை விட முன்னால் செய்து முடிக்க வேண்டும் என்றால் எந்த மாதிரி கருவி வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும். 

கருவி இருந்தால் மட்டும் போதாது, அதை சரியான முறையில் கையாளவும் தெரிய வேண்டும். 

ஓட்ட தெரியாமல் கார் வைத்திருந்து என்ன பலன். 


கருவி என்பதை இயந்திரம் என்று மட்டும் கொள்ளாமல் தொழில் நுட்பம் (டெக்னாலஜி) என்று கொள்ள வேண்டும். 

ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன், எந்த மாதிரி கருவிகள் வேண்டும், எவ்வளவு காலம் வேண்டும், என்று அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்தானே ?











 




Monday, June 19, 2017

கந்தர் அநுபூதி - குறியை குறியாது

கந்தர் அநுபூதி  - குறியை குறியாது 


ஒரு ஊரில் இருந்து , இன்னொரு ஊருக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் செல்லும் ஊர் தாங்கிய பெயர் பலகைகள் இருக்கும். சில சமயம் அந்த பெயருக்கு பக்கத்தில் அந்த ஊர் இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் எழுதி இருக்கும்.

அதை காணும் போது , நாம் சரியான வழியில் தான் செல்கிறோம், வழி தவறி விடவில்லை என்று நமக்குத் தெரிய வரும்.

உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் "கன்னியாகுமாரி" என்று பெயர் பலகை இருக்கும்.

உடனே, "ஓ, இதுதான் கன்யாகுமாரியா " என்று அங்கேயே இறங்கி விடக் கூடாது. அப்படி இறங்கினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும். அப்படி இறங்கிய ஒருவரிடம், "இது கன்னியாகுமாரி இல்லை. இது விழுப்புரம். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் " என்று கூறினால், "அப்ப ஏன் கன்னியாகுமாரி என்று இங்கே எழுதி இருக்கிறது " என்று சண்டை பிடித்தால், அந்த ஆளை நாம் என்னவென்று நினைப்போம்.

அவனை பித்தன், பேதை என்று சொல்வதற்கு முன்னால் , சற்று நிதானியுங்கள்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறைவனை அடைய பல குறியீடுகள், இருக்கின்றன. பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது,  அவன் மேல் உள்ள பாடல்களை படிப்பது, திருநீறு, திருமண்  இட்டுக் கொள்வது, விரதம் இருப்பது என்று பல இருக்கின்றன. இவை ஒரு குறியீடுகள் மட்டுமே. "கன்னியாகுமாரி " என்று பெயர் பலகை இருப்பது போல.

குறியீடுகளை தாண்டி அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொண்டு , மேலே செல்ல வேண்டும். கோவில் என்றால் என்ன, சிலைகள் ஏன், பாடல்கள் எதற்கு, சமய சின்னங்கள் எதற்கு என்று அறிந்து, அவை நம்மை எங்கே செலுத்த  முனைகின்றன என்று அறிந்து அங்கே செல்ல வேண்டுமே ஒழிய , குறியீடுகளையே  பற்றிக் கொண்டு இதுதான் முடிவு என்று இருக்கக் கூடாது.

கன்னியாகுமரிக்கு போக வேண்டும் என்றால், அந்த பெயர் பலகை காட்டும் திசையில் செல்ல வேண்டும். அந்த பெயர் பலகையை கட்டிக் கொண்டு அங்கேயே இருந்து விடக் கூடாது.


மருத்துவர் ஒரு மருந்தை சீட்டில் எழுதி, "இதை மூன்று வேளை சாப்பிடுங்கள்" என்றால், அதில் உள்ள மருந்தை மூன்று வேளை சாப்பிட வேண்டும். எழுதிக் கொடுத்த  காகிதத்தை துண்டு துண்டாக்கி மூன்று வேளை சாப்பிடக் கூடாது.  மருந்து சீட்டு ஒரு குறியீடு. மருந்தை உண்டு, நோய் குணமாக வேண்டும் என்பது நோக்கம்.

பல பேர் மருந்து சீட்டை சாப்பிட்டு விட்டு, "டாக்டர்,  நீங்க சொன்னபடி சாப்பிட்டேன், நோய் குணமாகவில்லையே " என்று குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இத்தனை கோவில், உற்சவம், குடமுழுக்கு, பூஜை, புனஸ்காரம், விரதம், என்றெல்லாம் இருந்தும் ஒருவரும் தன்னை உணர்ந்து ஞானியான மாதிரி தெரியவில்லை.

ஏன் ? குறியீடுகளை புரிந்து கொள்ளவில்லை.

இதைத்தான் அருணகிரி நாதர் கூறுகிறார்,

"குறியை குறியாது குறித்து அறியும்" என்று. குறிகளை விட்டு விட வேண்டும். அதை எதை குறிக்கிறதோ அங்கே போக வேண்டும்.

அறிவிப்பு பலகைகள் தேவை தான். அதை பார்த்து விட்டு, மேலே போய் கொண்டே இருக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள் 

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல் 

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு


அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


குறியை குறியாது, அது எதை குறிக்கிறதோ அதை குறித்துக் கொள்ள வேண்டும். 

அது எவ்வாறு நிகழ்ந்தது என்றால் , "வேலினால்" நிகழ்ந்தது என்கிறார். 

அது எப்படி வேல் நிகழ்த்தும் ?

வேல் என்பது ஒரு குறியீடு. 

வேல் என்பது ஞானத்தை குறிக்கும் குறியீடு. 

எப்படி ?

வேல் எப்படி இருக்கிறது = நீண்டு இருக்கிறது, முகப்பு அகன்று இருக்கிறது, நுனி கூர்மையாக இருக்கிறது. அறிவும் அது போல ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்க வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகர் திருவாசகத்தில். 

அது நிகந்ழ்த பின் என்ன ஆகும் ?

உலகியல் பற்றுகள் நீங்கும். 

அப்புறம் ?

பேச்சும், சிந்தனையும் அற்றுப் போய் விடும். 

அப்புறம் ?

அறிவும், அறியாமையும் அற்றுப் போய் விடும். 

அறிவும் , அறியாமையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. 


செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

என்று கூறுகிறார்.

இங்கே கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

'உம்' என்ற இடைச் சொல்லுக்கு பல வேலைகள் இருக்கிறது. 



" உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்."


எதிர்மறை 
சிறப்பு 
ஐயம் 
எச்சம் 
முற்றும் 
எண்ணும் 
தெரிநிலை 
ஆக்கம் 

என்ற எட்டு பொருளைத் தரும்.

உதாரணம் தந்தால் நன்கு விளங்கும். 

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்பது குறள்.

பெற்ற தாய் பசித்து இருப்பதைக் கண்டால் கூட, ஒருவன் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யக் கூடாது. 

இங்கே, குறளை ஊன்றி கவனியுங்கள் 


காண்பானாயினும் என்று ஒரு உம் மை சேர்க்கிறார். 


ஈன்றாள் பசி காண்பாயின்  செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்று சொல்லி இருக்கலாம்.

காண்பானாயினும் என்று சொல்வதன் மூலம், அப்போது கூட செய்யக் கூடாது என்ற எதிர் மறை பொருளைத் தருகிறது 


களவு செய்யினும் கொலை செய்யற்க என்று கூறும் போது , களவும் செய்யக் கூடாது என்ற பொருள் வரும். 

இங்கு உம்மை எதிர் மறை பொருளில் வந்தது. 

பாரதனைப் பற்றி இராமனிடம் கூறும் போது கோசலை கூறுவாள், 

"நின்னினும் நல்லன்"  என்று. 

நின்னின் நல்லன் என்று சொன்னாலும் அதே பொருள் தான். 

நின்னிலும் என்று சொல்லும் போது , "இராமா, நீ நல்லவன். பரதன் உன்னை விட நல்லவன் " என்ற பொருள் வரும்.

உயர்வு சிறப்பு உம்மை.

அடுத்தது ஐயம்.

இறுதிப் போட்டியில், இந்தியா வென்றாலும் வெல்லும் என்று சொல்லும் போது , வெல்லுமா, வெல்லாதா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா. இதில் உள்ள "உம் " மை நீக்கி விட்டுப் படித்துப் பாருங்கள். இந்த சந்தேகம் வராது. எனவே இது ஐயத்தை கொண்டு வரும் உம்மை.

அடுத்தது, எச்சம்.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்று கூறும் போது , மற்ற ஆசிரியர்கள் வந்திருந்தார்கள் என்பது தானாகவே புலப்படும். 

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வந்திருந்தார் என்று சொன்னால் , மற்றவர்கள் வந்தார்களா இல்லையா என்று தெரியாது. 

தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்றால் மற்றவர்களும் வந்தார்கள் என்று புலப்படும். 

மற்றவர்கள் இங்கே எச்சம். மீதி. 

எனவே இது எச்ச உம்மை. 

அடுத்தது முற்றும்மை. 

இராமனும் பரதனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் என்று கூறினால், வேறு யாரும் வரவில்லை, அவர்கள் இருவர் மட்டும் தான் வந்திருந்தார்கள் என்று ஒரு புரியும். வேறு யாரும் இல்லை. அவர்கள் மட்டும் தான் . முழு பட்டியலும் வந்து விட்டது என்பதால் இது முற்றும்மை.

ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 

ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும். 

இதில் , முதலாவதில், நிறைய புலன்கள் இருக்கிறது, அதில் ஐந்து புலன்களை அடக்க வேண்டும் என்று  சொல்லப்பட்டது போல தோன்றும். 

இரண்டாவதில், மொத்தமே ஐந்து புலன்கள் தான். அந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்பது பெறப்படும். 

எனவே இது முற்றும்மை.

இங்கே அருணகிரி சொல்கிறார் 


"செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே."

உலகப் பற்று, சொல், சிந்தனை இந்த மூன்று தான் மொத்தமும். இதற்கு வெளியில் ஒன்றும் இல்லை. உலகியலில் பற்று விட்டாலும், உள்ளுக்குள் சொல் ஓடிக் கொண்டே இருக்கும். விட்டது சரிதானா, ஒரு வேளை சரி இல்லையோ என்ற வாதம் உள்ளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். அது நின்றாலும், வார்த்தை இல்லாமல் சிந்தனை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்.


சிந்தையும் அற்று என்று ஒரு முற்றும்மையை போடுவதின் மூலம் எல்லாம் அற்றது என்று தெரிய வருகிறது.

குறியை குறியாது, குறித்து அறிந்தால் அந்த ஞானத்தின் மூலம் உலகப் பற்று, சொல் மற்றும் சிந்தனை நிற்கும்.

அப்படி நிற்கும் போது அறிவும், அறியாமையும் அற்றுப் போய்விடும்.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக ஆழ்ந்த பொருள் செறிவு கொண்ட பாடல்.

மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

Saturday, June 17, 2017

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க 


இன்று ஆன்மீக உலகில் உள்ள பெரிய சிக்கல் என்ன என்றால், ஒவ்வொருவரும் அவர்கள் கொண்ட கொள்கை தான் உண்மையானது, மற்றது எல்லாம் தவறு என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மதமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்கின்றன. தங்கள் தெய்வம் தான் மற்ற எல்லா தெய்வங்களை விடவும் உயர்ந்தது என்று அடம் பிடிக்கிறார்கள். மதங்கள் மட்டும் அல்ல, மதங்களின் உட் பிரிவில் உள்ளவர்களும் தங்கள் பிரிவே உயர்ந்தது என்று சாதிக்கிறார்கள்.

இதனால்  பல சண்டைகள் , சச்சரவுகள். போர்கள். உயிரிழப்பு. சதா தொல்லை.

அது ஒரு புறம் இருக்க, எது உண்மையை கண்டறியும் வழி ? இறைவனை, இயற்கையை, பிரபஞ்ச சக்தியை அறிய எது வழி ?

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல வித மார்க்கங்களை சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று சாதாரண மனிதன் குழம்புகிறான்.

அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத் வைதம் என்று பல வித கோட்பாடுகளை சொல்கிறார்கள். இவற்றை படித்து, அறிந்து தெளிய நேரம் இல்லை.

யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது ? எதைப் படித்து அறிந்து கொள்வது ? யாரை நம்புவது ? நாட்டில் பல போலி சாமியார்கள் அலைகிறார்கள். யார் உண்மையானவர் , யார் போலி என்று எப்படி இனம் கண்டு கொள்வது ?

இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் விடை தருவது பெரிய புராணம்.

ஒரு நூலை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்டால் அதை எழுதிய ஆசிரியனே ஒரு கணம் திகைப்பான்.

இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும் ? இராமாயணத்தில் ஆயிரம் செய்தி  இருக்கிறது. எதை என்று சொல்லுவது ? சற்று சிக்கலான காரியம்.

திருக்குறளை எதற்குப் படிக்க வேண்டும் ?

கீதையை எதற்குப் படிக்க வேண்டும் ?

என்றெல்லாம் கேட்டால், படித்தால் நல்லது, வழி காட்டும் என்று பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்லலாம்.

சேக்கிழார் சொல்கிறார் - பெரிய புராணத்தை எதற்குப் படிக்க வேண்டும் என்று. ஒரே வரியில் சொல்கிறார்.

"அக இருளை நீக்க "

பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று.

எப்படி சூரியன் புற இருளை நீக்குமோ, அது போல , அக இருளை நீக்க இந்த நூல் உதவும் என்கிறார்.

பாடல்

 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற 
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்


 இங்கிதன் = இங்கு இதன் (இந்த புத்தகத்தின்)

 நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

 இவ் உலகத்து  = இந்த உலகில்

முன்னாள்  = முன்பு

 தங்கிருள் =தங்கிய இருள்கள்

இரண்டில் =  இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

இருளை = இருளை

ஏனைப் = மற்றைய

புற இருள் = வெளி இருளை

போக்கு கின்ற = நீக்கு கின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = நீக்கும்

திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம்

என்பாம் = என்று சொல்லுவோம்

புற இருளை சூரியன் நீக்குவது போல, அக இருளை நீக்குவது இந்த புராணம்.

தங்கிய இருள் என்கிறார்.

இருள் ரொம்ப நாள் தங்கி இருக்கிறது.

சரி, ரொம்ப நாள் இருண்ட வீடாயிற்றே என்று அதில் வெளிச்சம் கொண்டு வர வேண்டும் என்றால், அதே போல ரொம்ப நாள் ஆகாது. ஒரு தீக்குச்சியை உரசிய மாத்திரத்தில் வெளிச்சம் வரும், இருள் விலகி விடும்.

அறிவு என்ற தீ பற்றிக் கொண்டால், அறிவீனம் என்ற இருள் உடனே விலகி விடும். எத்தனை நாளாக நாம் அறியாமையில் இருந்தோம் என்பதல்ல கேள்வி.

ஒரு நொடியில் அந்த அறியாமை விலகும்.

வெளியில் உள்ள இருளுக்கும், மனதுக்குள் இருக்கும் இருளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

"சிந்தையுள் சார்ந்து , நின்று, பொங்கிய" இருள் என்கிறார் சேக்கிழார்.

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

நமது மனதுக்குள் இருக்கும் இருள் இருக்கிறதே, அது நமது சிந்தனையை சார்ந்து நிற்கிறது. பற்றிக் கொண்டு நிற்கிறது. நிலைத்து நிற்கிறது. உள்ளேயே பொங்குகிறது. 

சற்று சிந்திப்போம். 

முதலில் நமது அறியாமை நமக்குத் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று  நாம் நினைக்கிறோம். நாம் அறிந்தவை தான் சரி என்று வாதிக்கிறோம். என் மதம், என் கடவுள்  என்று சொந்தம் கொண்டாடுகிறோம். அது நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. எத்தனையோ நாள்  இந்த அறியாமையில் மூழ்கி கிடந்ததால், அது பழகிப் போய் விடுகிறது. அசுத்தத்திற்கு நடுவில் வாழ்பவனுக்கு , அந்த துர் நாற்றம் பழகிப் போய் விடுவதைப் போல , அறியாமை நமக்கு பழகி போய் விடுகிறது. 


யாரவது நம் அறியாமையை சுட்டிக் காட்டினால் , அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அவரை கொல்ல முயல்கிறோம். 

சாகரடீஸ், இயேசு கிறிஸ்து, முகமது நபி, புத்தர் என்று உண்மையை யார் கண்டு சொன்னாலும், அவர்கள் மேல் சாதாரண மக்கள் கோபம் கொள்கிறார்கள்.  காரணம், அவர்கள், அந்த மக்களின் அறியாமை வெளிச்சம் போட்டு  காட்டுகிறார்கள். 

"நின்று "  நம் அறியாமை வந்து வந்து போவது இல்லை. எப்போதும் நம்முடனையே நிலைத்து நிற்கிறது. 

"பொங்கிய" ...இந்த அறியாமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு முட்டாள் சொல்வதை , இன்னொரு முட்டாள் கேட்டு இப்படியே அது  பெரிதாகிக் கொண்டே போகும். 

இதை நீக்கி, அறிவை அடைய இந்த திருத் தொண்டர் புராணம் வந்தது என்கிறார். 

எப்படி என்று பார்ப்போம். 


Friday, June 16, 2017

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம்

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் 


இலக்கியங்களை எதற்கு படிக்க வேண்டும் ?

படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது - அறிவியல், தொழில் நுட்பம், வணிகம், கணிதம், நிர்வாகம், என்று எவ்வளவோ முக்கியமான துறைகள் இருக்கும் போது , அவற்றை எல்லாம் விட்டு விட்டு , எப்பவோ எழுதிய கதைகளை ஏன் படிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ?

இளையவர்கள் மத்தியில் மட்டும் அல்ல, பெரியவர்கள் மத்தியிலும் இந்த கேள்வி இருக்கிறது.

இலக்கியம் படிக்க பல காரணங்கள் சொல்ல முடியும். அதில் ஒன்று, மன ஆறுதல் பெற.

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி போய்க் கொண்டு இருக்காது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும் போது மகிழும் நாம் , துன்பத்தில் துவண்டு போகிறோம்.

துன்பத்தில் தவிக்கும் போது , ஒரு தாயின் மடியாய், மனைவியின் இனிய தோளாய், நண்பனின் ஆதரவான கரமாய் இலக்கியம் இருக்கிறது.

காலங்கள் தாண்டி , தன் கற்பனை விரல்களால் நம் கண்ணீரை துடைத்து விடும் இந்த இலக்கியங்கள்.

மனதுக்கு மருந்து தடவி , சுகம் அளிப்பவை.

நமக்கு துன்பம் வரும் போது , எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சோர்ந்து போகிறோம்.

அந்த சமயத்தில் இலக்கியங்களை புரட்டுங்கள். நம்மை விட ஆயிரம் மடங்கு துன்பப பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் கவலை, துயரம் இவற்றை பார்க்கும் போது , நம் துன்பம் ஒன்றும் பெரியதில்லை என்று ஒரு ஆறுதல் பிறக்கும். அவர்களே மீண்டு வந்து விட்டார்கள் , நம்மால் முடியாதா என்று ஒரு தைரியம் பிறக்கும்.  நம்பிக்கை துளிர்விட்டால் , போதும், அது தானே வளரும்.

இலக்கியங்கள் கை கொடுத்து தூக்கி விடும் அந்தக் காரியத்தை செய்கின்றன.

தர்மன், சூதில், நாடு நகரம் எல்லாம் இழந்து, தம்பிகளோடு காட்டில் இருக்கிறான்.

நினைத்துப் பார்க்கிறான். எப்படி இருந்த நான் , இப்படி ஆகி விட்டேனே என்று  மனம் வருந்துகிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

சக்கரவர்த்தி, ஆள், அம்பு, சேனை, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று இருந்த தர்மன் அனைத்தையும் இழந்து, காட்டில் தனியாக தவிக்கிறான். அவன் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரிய துன்பம் ?


அப்போது , அங்கு வந்த முனிவரிடம் கேட்கிறன், அறிவை இழந்து, சூது ஆடி, மண்ணை இழந்து,  கானகம் வந்து ,இப்படி துன்பப் படும் என்னை போல வேறு யாராவது உண்டா என்று கேட்கிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறான்.

அதை கேட்ட அந்த முனிவர், "தர்மா கவலைப் படாதே, துன்பம் வருவது இயல்பு. உன்னை விடவும் உயர்ந்த நிலையில் இருந்து , உன்னை விடவும் துன்பப் பட்ட நள மகாராஜாவின் கதையை சொல்கிறேன் கேள் " என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்ணை இழந்து

மாயக் கவறாடிக் = மாயமான சசூது ஆதி

காவலர்தம் மண்ணிழந்து = காவல் செய்யும் (அரசு செய்யும்) மண்ணை இழந்து

போந்து = போய்

வனம்நண்ணி = காட்டினை அடைந்து

விண்ணிழந்த = விண்ணில் இருந்து வந்த

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூன்மார்பா  = நூல் +  மார்ப = பூணூலை அணிந்தவனே

மேதினியில்  = உலகில்

வேறுண்டோ = வேறு ஒருவர் உண்டா?

என்போ லுழந்தா ரிடர். = என் + போல் + உழந்தார் + இடர் = துன்பத்தில் சிக்கித் தவிப்பவர்

கண் இழந்து என்றால் இரண்டு கண்ணையும் இழந்து குருடாகி என்று அர்த்தம் அல்ல.

அதே போல் மண் இழந்து என்றால் ஏதோ கட்டிடம் கட்ட வாங்கி வைத்து இருந்த  இரண்டு வண்டி மணலை இழந்த மாதிரி என்று கொள்ளக் கூடாது. பின் என்ன ?

பின் என்ன அர்த்தம் என்று கேட்டால்,  கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

நிமிர்ந்து உட்காருங்கள்.

ஒரு நீண்ட மூச்சை இழுத்து விடுங்கள்.

விட்டாச்சா ? இப்ப படிப்போம்.

ஆகு பெயர், ஆகு பெயர் என்று ஒன்று உண்டு தமிழ் இலக்கணத்தில்.


ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது , ஆகு பெயர்.

உதாரணமாக,

ஊரே தூங்கிருச்சு என்றால் ஊர் தூங்குவது அல்ல. ஊரில் உள்ள மக்கள் தூங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.


ஊர் என்ற இடம், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது.

அரிசி எவ்வளவு  என்று கடை காரரிடம் கேட்கிறோம். அவர் படி அம்பது ரூபாய் என்கிறார். அரிசி என்ன விலை என்று கேட்டல் படிக்கு விலை சொல்கிறாரே என்று  நினைப்பது இல்லை. படி அம்பது ரூபாய் என்றால் ஒரு படி அரிசியின் விலை அம்பது ரூபாய் என்று அர்த்தம்.

படி இங்கே அரிசிக்கு ஆகி வந்தது.

நல்ல தமிழ் படிக்க வேண்டுமா , கம்பனை  வாசி என்று சொல்கிறோம். கம்பன்  என்ற ஒரு கவிஞனின் பெயர் அவர் எழுதிய கவிதைகளுக்கு ஆகி வந்தது.

புரிகிறது அல்லவா.

இந்த ஆகு பெயர்  18 வகைப்படும் என்று சொல்கிறது நன்னூல்

பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
         கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
         ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
         தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"

அவையாவன


  1. பொருளாகு பெயர் = சந்தனம் போல மணம் = சந்தன மரக் கட்டைக்கு பதிலாக சந்தனம் என்ற பொருள் வந்தது
  2. சினையாகு பெயர் = கூட்டத்துக்கு வருவது என்றால் , தலைக்கு நூறு ரூபாய், ஒரு பிரியாணி பொட்டலம் தர வேண்டும் என்றால் தலைக்கு தருவது அல்ல. தலை உள்ள ஆளுக்கு தருவது (தலை , சினை )
  3. காலவாகு பெயர் = கோடை வாட்டுகிறது. கோடை காலத்தில் உள்ள வெப்பம் வாட்டுகிறது
  4. இடவாகு பெயர் = இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது. இந்தியா என்ற இடத்தில் இருந்து சென்ற அணி வென்றது
  5. பண்பாகு பெயர் = என்ன மாதிரி துண்டு வேண்டும் ? அந்த சிவப்புல ஒண்ணு , பச்சையில ஒண்ணு குடு 
  6. தொழிலாகு பெயர் = அந்த பணத்தை அப்பவே நம்ம கணக்கு கிட்ட குடுத்து அனுப்பி விட்டேனே (கணக்கு = கணக்க பிள்ளை) 
  7. எண்ணலளவையாகு பெயர் = இரண்டு போட்டா எல்லாம் சரியா போகும் 
  8. எடுத்தலளவையாகு பெயர் = கத்தரிக்காய் எவ்வளவு வாங்கட்டும். மூணு கிலோ வாங்கிட்டு வா 
  9. முகத்தலளவையாகு பெயர் = இரண்டு லிட்டர் வாங்கிட்டு வா, ஒரு குவாட்டர் போட்டா சரியாயிரும் 
  10. நீட்டலளவையாகு பெயர் = ஒரு மீட்டர் போடு 
  11. சொல்லாகு பெயர் = அபிராமி அந்தாதி எனக்கு மனப்பாடம். அதில் உள்ள பாடல்கள் எனக்கு மனப்பாடம் என்பதற்கு ஆகி வந்தது 
  12. காரியவாகு பெயர் = நான் நல்லா type அடிப்பேன் (எனக்கு type writer என்ற இயந்திரத்தை நன்றாக இயக்க வரும் )
  13. கருத்தாவாகு பெயர் = அவரு கம்பன்ல பெரிய ஆளு. (கம்ப இராமாயணம் நன்றாக கற்றவர் )
  14. உவமையாகு பெயர் = மயில் வந்தாள் 
  15. அடை அடுத்த ஆகுபெயர் = மா நட்டான்.
  16. தானியாகுபெயர் = தானி என்றால் இடம். விளக்கு முறிந்தது என்றால் , விளக்கின் தண்டு முறிந்தது என்று பொருள். 
  17. இருபடியாகு பெயர் =  முகில் வந்தது என்றால் மேகத்தை தாண்டி அதற்கு பின் உள்ள மழையை குறிப்பது. 
  18. மும்மடியாகு பெயர் = கார் வந்தது என்றால், கருமையான நிறத்தைத் தாண்டி, அதை உள்ள மேகத்தைத் தாண்டி, மழை வந்தது என்பதை குறிப்பது. 

இங்கே கண்ணிழந்து , மண்ணிழந்து என்றால் எப்படி கண் எது எப்படி என்று காட்டுமோ அதுபோல் காட்டும் அறிவை இழந்து என்று பொருள். 

மண் என்பது அதில் வாழும் மக்களை குறிப்பது. இடவாகு பெயர் 


இன்னும் கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம். இன்று இவ்வளவு போதும். 

மேலும் நாளை சிந்திப்போம் 

சரியா ?







Thursday, June 15, 2017

திருக்குறள் - செல்வத்தை கட்டும் கயிறு

திருக்குறள் - செல்வத்தை கட்டும் கயிறு 


செல்வம் இருக்கிறதே, அதன் பெயரே அதன் நிலையைக் குறிக்கும்.

செல்வோம் என்பது செல்வம் என்று ஆனது. எப்போது வேண்டுமானாலும் சென்று விடும்.

முடி சாய்த்த மன்னரும் பிடி சாம்பராய் போய் விடுவர்.

செல்வம் நிற்காமல் உருண்டு ஓடிக் கொண்டே இருக்கும்.

இளமை எப்படி நில்லாமல் போய் கொண்டே இருக்குமோ, அது போல செல்வமும். அதை கட்டி வைக்க முடியாது.

ஆனால், அதையும் கட்டி வைக்க முடியும், அதற்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

உங்களிடம் வந்த செல்வம் , உங்களை விட்டு போகாமல் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டுமா ?

ஆம், என்றால் அதற்கு ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

நல்ல பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள், வீடு வாங்கி போடுங்கள், நிலத்தில் முதலீடு செய்யுங்கள், தங்கம் வாங்குங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

நிறைய உழையுங்கள், கடினமாக வேலை செய்யுங்கள், நிறைய படியுங்கள், நிறைய  பேரை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லவில்லை.

பின், என்ன தான் சொல்கிறார் ?

ஒன்றே ஒன்று தான், காலத்தோடு சேர்ந்து வாழுங்கள். அவ்வளவுதான்.

பாடல்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு

பொருள்

பருவத்தோடு = காலத்தோடு

ஒட்ட = சேர்ந்து

ஒழுகல் = வாழ்தல்

திருவினைத் = செல்வத்தை

தீராமை  = தீர்ந்து போகாமல்

ஆர்க்கும் = பிணைக்கும்க, கட்டும்

கயிறு = கயிறு

பருவத்தோடு ஓட்ட ஒழுகல் என்றால் என்ன ?

நிறைய மென்பொருள் (software ) பொறியாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். சில பேரை அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பி விடுகிறது. நிறுவனத்தின் மேல் கோபம் கொள்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன ?

அவர்கள் படித்த படிப்பு, இந்த காலத்துக்கு பொருந்த வில்லை.  சந்தையில் வேறு திறமைகள் வேண்டி இருக்கிறது.


நான் படித்த படிப்புக்கு வேலை கொடு என்றால், அந்த படிப்பு காலாவதியாகி விட்டது.

இப்போது எது தேவையோ , அதை படிக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்.

இது அரசர்களுக்கு சொல்லப் பட்ட அறிவுரை. நமக்கும் பொருந்தும்.

இதை இன்னும் கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

காலத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால், ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும்.

இன்று என்ன செய்ய வேண்டும், நாளை என்ன செய்ய வேண்டும், இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம், என்று கணக்கு பண்ணி செயலாற்ற வேண்டும்.


அது மட்டும் அல்ல, நமது பாதையை காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

இன்டர்நெட், கம்ப்யூட்டர், என்று புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. அவற்றை அறிந்து , அதில் நம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் படித்ததை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது.

சரி, அது என்ன "ஒழுகல் "

ஒழுகுதல் என்பதில் இருந்து ஒழுகல் , ஒழுக்கம் என்பவை வந்தன.


ஒழுகல் என்ற வார்த்தையில் இரண்டு பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று, உயர்ந்த இடத்தில் இருந்து தான் ஒழுகும். கூரையில் இருந்து நீர் ஒழுகி கீழே வரும். கீழிருந்து மேலே போகாது.

அது போல, ஒவ்வொவரு காலத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். உயர்ந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஒழுகுவது என்பது ஒரே சீராக வருவது. கொட்டுவது, தெளிப்பது, சிதறுவது என்றால் விட்டு விட்டு வருவது. ஒழுகுதல் என்றல் ஒரே சீராக வந்து கொண்டு இருப்பது.

அது போல, நல்ல விஷயங்களை பழக்கமாக கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என்று இருக்கக் கூடாது. ஒரு காரியத்தை எடுத்தால் அதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்டி ஒழுகினால், இருக்கின்ற செல்வம் நம்மை விட்டு போகாது.

ஒரு காகிதத்தை எடுத்து பட்டியில் போடுங்கள்.

எத்தனை காரியங்கள் நீங்கள் செய்கிறீர்கள், அதில் எத்தனை காலத்தோடு ஒட்டி இருக்கிறது என்று.

காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் எவை எவை என்று சிந்தியுங்கள் அவற்றை என்ன செய்வது என்று முடிவுக்கு வாருங்கள்.

இன்று என்ன செய்வது, நாளை என்ன செய்வது, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.

அப்படி சிந்தித்து செயல் பட்டால், உங்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும்.

நிற்கட்டும். 

Tuesday, June 13, 2017

திருக்குறள் - வலிமையையும் காலமும்

திருக்குறள் - வலிமையையும் காலமும் 


எதற்கும் ஒரு காலம் வேண்டும். காலம் பார்த்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாடல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்

பகல்வெல்லும் = பகலில் வெல்லும்

கூகையைக் காக்கை = ஆந்தையை காக்கை

இகல்வெல்லும் = எதிர்ப்பை வெல்ல நினைக்கும்

வேந்தர்க்கு = அரசர்களுக்கு

வேண்டும் பொழுது = வேண்டும் சரியான காலம்

இது எல்லோருக்கும் தெரிந்தா ஒன்று தானே. இதில் புதிதாக என்ன இருக்கிறது. எதற்கு இதை வேலை மெனக்கெட்டு வள்ளுவர் சொல்கிறார் ?

நமக்கு வாழ்வில் வெற்றி தோல்வி வருவது இயல்பு.

வெற்றி வரும்போது நம் திறமையால் நிகழ்ந்தது என்று நினைக்கிறோம்.

தோல்வி வரும் போது ஏதோ நம் திறமையில் குறை என்று நினைக்கிறோம்.  நம் திறமையின் மீது நமக்கு சந்தேகம் வருகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. பதற்றம் வருகிறது.

ஆனால் , முக்கியமான ஒன்றை நாம் மறந்து விடுகிறோம்.

காலம் என்ற ஒன்றை நாம் மறந்தே விடுகிறோம்.

பகலில் காக்கை ஆந்தையை வெல்லும். இரவில் , ஆந்தை ,காக்கையை வெல்லும். 

காரணம், பகலில் காக்கைக்கு கண் தெரியும். ஆந்தைக்குத் தெரியாது. 

அதே போல, இரவில் ஆந்தைக்கு கண் தெரியும். காக்கைக்குத் தெரியாது. 

வெல்லுதல் என்பது உடல் வலிமை / திறமை மட்டும் காரணம் அல்ல.  பகலில் காக்கை  வலிமையாகவும், இரவில் ஆந்தையை வலிமையாகவும் இருப்பது இல்லை. 

இரவில் காக்கைக்கு கண் தெரியாது என்பதால் காக்கையின் கண்ணில் குறை என்று  சொல்ல முடியாது. அந்த நேரத்தில் அதனால் பார்க்க முடியாது.  

என்ன தான் வலிமை இருந்தாலும், காலம் சரியாக இல்லாவிட்டால் அந்த திறமை  சரிவர எடுபடாது. 

தோல்வி வந்தால், நினைத்தது நடக்கவில்லை என்றால் , உங்கள் திறமையை சந்தேகப் படாதீர்கள். உங்கள் திறமையை சரியான காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தவில்லை  என்று அர்த்தம். 

சரி, அதற்காக நல்ல காலம் வரும் என்று சும்மா உட்கார்ந்து இருப்பதா ?

இல்லை. 

வள்ளுவர் சொல்கிறார் ....இகல் வெல்லும் வேந்தற்கு வேண்டும் பொழுது.

எல்லாவற்றையும் திட்டமிடும் போது காலத்தையும் சேர்ந்து திட்டம் இட வேண்டும். 

காலம் தவறினால் , நல்ல திறமையும், வலிமையையும் கூட வியர்த்தமாகி விடும். 

எப்போது உழ வேண்டும், எப்போது விதைக்க வேண்டும், எப்போது நீர் பாய்ச்ச வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டும். 

காலம் தவறினால் விளைச்சல் வராது. 

எந்த காரியத்தையும் செய்யத் தொடங்குமுன் அதை செய்யப்போகும் காலம் சரிதானா என்று சிந்தித்து செயல்படுங்கள். 

வெற்றி நிச்சயம். 

வள்ளுவர் ஏழு வார்த்தையில் சொன்னதை ஔவையார் மூன்றே வார்த்தையில் சொல்கிறார் 

"பருவத்தே பயிர் செய்" 

காலம் அறிதல் பற்றி பத்து குறள் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

மற்றவற்றையும் பார்ப்போமா ?

Monday, June 12, 2017

பெரிய புராணம் - அறிமுகம்

பெரிய புராணம் - அறிமுகம் 


பெரிய புராணம் பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறை.

63 நாயன்மார்களின் வரலாறுகளை கூறுவது.

பெரிய புராணத்தை பலர் , பல வழிக்களில் பார்த்தது, இரசித்து, வணங்கி எழுதி இருக்கிறார்கள்.

பிள்ளை பாதி, புராணம் மீதி என்று சொல்லுவார்கள். மொத்த பாடலில் , திருஞான சம்பந்தரைப் பற்றிய பாடல்கள் பாதி பாடல்கள். மீது 62 நாயன்மார்களின் புராணங்களும் மற்றொரு பாதி.

பெரிய புராணம் ஒரு புராணமே இல்லை. இது பல்வேறு நாயன்மார்களின் வாழ்க்க்கை வரலாற்று தொகுப்பே என்று கூறுவாரும் உள்ளனர்.

அதை மறுத்து, இல்லை, சுந்தரர் என்ற ஒரு நாயனாரின் வாழ்வை மையமாக வைத்து எழுதப் பட்டதுதான் இந்த பெரிய புராணம் என்று கூறுவாரும் உள்ளனர்.

இந்த பெரிய புராணம் தோன்றிய வரலாறே சுவாரசியமானது.

அநபாய சோழன் என்ற ஒரு சோழ அரசன் பல சிற்றின்ப நூல்களை படிப்பதில் காலம் செலவழித்து வந்தான்.

மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பது போல, மக்களும் அந்த வழியில் சென்று கெட்டு விடுவார்களே என்று அறிந்த , அமைச்சரான சேக்கிழார் , அரசனை  நல்ல நூல்களை படிக்கும் படி அறிவுரை வழங்கினார்.

நல்ல நூலகள் என்றால் எது என்று கேட்டான்.

திருத் தொண்டர்களின் வரலாற்றை படிக்கும்படி கூறினார்.

அது எங்கு இருக்கிறது என்று கேட்டான்.

"அது தொகுக்கப்படாமல் இருக்கிறது" என்றார் சேக்கிழார்.

"சரி, அப்படி என்றால் நீரே அந்த நூலை எழுதும் " என்று சொல்லிவிட்டான் அநபாய சோழன்.

அரச கட்டளை ஆயிற்றே , மீற முடியுமா ?

முதலமைச்சர் பதவியை துறந்து விட்டு, புராணம் எழுத முற்பட்டார் சேக்கிழார்.

எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பினார்.

நேரே சிதம்பரம் சென்று நடராஜரிடம் முறையிட்டார்.

"உலகெல்லாம் " என்று ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க , பெரிய புராணம்  பாடத் தொடங்கினார்.

பெரிய புராணத்தில் அப்படி என்ன சிறப்பு ? அது சொல்லும் சேதி என்ன ? ஒரு கம்ப இராமயணமோ , சிலப்பதிகாரமோ மக்களை சென்று அடைந்த மாதிரி பெரிய புராணம் சென்று அடைந்ததா ?

சிந்திப்போம்




Friday, June 9, 2017

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும் 



அரசை ஏற்றுக் கொள் என்று பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் உடன் படவில்லை.

பரதனிடம் இராமன் சொல்கிறான் ,  " பரந்த கேள்வி அறிவும் , குற்றமற்ற ஞானமும், கொண்ட ஒழுக்கமும்,  செய்யும் தொழிலின் மேன்மையும் , வணங்கத் தக்க தேவர்களும் , நமது பெரியவர்களே "

அதனால், நீ படித்த அறங்களும், நமது குல வழக்கமும், மனு நீதியும், எல்லாம் என் தந்தையான தயரதன் சொல்லுக்கு அப்புறம் என்று சொல்லி விடுகிறான்.

பாடல்



‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும் -
உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும்,
“குரவரே”எனப் பெரிது கோடியால்.


பொருள்


‘பரவு கேள்வியும் = புகழ் பெற்ற கேள்வி அறிவும்

பழுது இல் ஞானமும் = குற்றம் அற்ற ஞானமும்

விரவு சீலமும் = கடை பிடிக்கும் ஒழுக்கமும்

வினையின் மேன்மையும் = செயலின் மேன்மையும்

உர விலோய்! = உறுதியான வில்லைக் கொண்டவனே

தொழற்கு உரிய தேவரும் = தொழுதற்கு உரிய தேவர்களும்

“குரவரே”எனப் = பெரியவர்களே

பெரிது கோடியால் = பெரிதும் மனதில் கொள்வாய்

இதில் குரவர் என்றால் யார் என்று முதலில் பார்த்து விடுவோம்.

குரவர் என்றால் பெரியவர், முன்னோர், என்று கொள்ளலாம். ஆசாரக் கோவை என்ற நூல் ஐந்து பேரை  குரவர் என்று சொல்கிறது.

யார் அந்த ஐந்து பேர் ?

அரசன்,
ஆசிரியன் ,
தாய்,
தந்தை,
தனக்கு முன் பிறந்த சகோதரன், சகோதரி (அண்ணன் /அக்காள்)

இவர்களுக்கு இணையான குரவர் அல்லது பெரியவர்கள்  .யாரும் இல்லை. எனவே இவர்களை தினம் தொழ வேண்டும் என்று சொல்கிறது. 

அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைத் போலத் தொழுது எழுக!’ என்பதே-
யாவரும் கண்ட நெறி.


இராமனைப் பொறுத்தவரை, அறிவு , ஞானம், தேவர்கள், ஒழுக்கம், நெறி எல்லாம்  அவனுடைய தந்தை சொல்லுக்குப் பிறகுதான்.

இதை இந்த இடத்தில் மட்டும் அல்ல, இராமாயணத்தில் அத்தனை சிக்கலான  இடத்திலும் , எங்கெல்லாம் நடைமுறை சிக்கல்கள் வருகின்றனவோ , அங்கெல்லாம்  யாரோ ஒரு பெரியவரின் சொல் கேட்டுத்தான் நடக்கிறான்.

எனக்குத் தெரியும், நான் அறிந்த அறத்தின் படி நடக்கிறேன் என்று சொல்லவில்லை.

மாறாக, பாரதனோ, அம்மா சொன்னால் என்ன, அப்பா சொன்னால் என்ன, அறம்  இவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தது. அதன் படி நடக்க வேண்டும் என்று  கூறுகிறான்.

எது சரி, எது தவறு என்று பின்னால் கம்பன் கூறுகிறான்.

அதுவரை அவர்களின் பேச்சை கவனிப்போம்.

Wednesday, June 7, 2017

திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு

திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு


மணற் கேணியில் எவ்வாறு தோண்ட தோண்ட நீர் ஊறுகிறதோ அது போல மக்களுக்கு படிக்க படிக்க அறிவு வளரும்.

குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு. 

பொருள்

தொட்டனைத்து = தோண்டிய அளவில்

ஊறும் = ஊற்று எடுக்கும்

மணற்கேணி = மணற் கேணி

மாந்தர்க்குக்  = மக்களுக்கு

கற்றனைத்து = கற்ற அளவு

ஊறும் அறிவு. = ஊறும் அறிவு

சரி இது என்ன புது விஷயமா ? இதில் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

சிந்திப்போம்.

கல்வி என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது. கல்வி பற்றி சொல்ல வந்து வள்ளுவர் இந்த உதாரணத்தை சொல்கிறார்.

அது என்ன மணற் கேணி ? அதில் என்ன சிறப்பு ?

கேணியை மூன்று இடங்களில் தோண்டலாம்.

நிலத்தில் தோண்டும் கேணி - நிலக் கேணி

பாறையில் அல்லது மலையில் தோண்டும் கேணி = கற் கேணி

மணலில் தோண்டும் கேணி = மணற் கேணி.

இதில் , மணற் கேணியை ஏன் தேர்ந்தெடுத்தார் ?

மணல் கேணியில் , தோண்டிய பின், சிறிது காலத்தில்  மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும்.  அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.

அது போல,  ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம் , அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது.

படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மணற்கேணியில் , கொஞ்சம் தோண்டினால் நீர் வரும். அந்த நீரை மொண்டு எடுத்தால் மேலும் நீர் வரும்.  வற்றி விடாது.

அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும் மேலும் அறிவு வளரும். கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும்,  தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும்.

படித்ததை பகிர வேண்டும்.


நீர் என்பது குளம், குட்டை, ஆறு, கடல் என்று விரிந்து கிடக்கிறது. மணற்கேணியில் உள்ள நீர் உலகில் உள்ள நீரில் மிகச் சொற்பமானது. எவ்வளவுதான் தோண்டினாலும் அது கடல் நீர் அளவுக்கு ஆகி விடாது. கல்வி கற்று  வரும் அறிவு கொஞ்சம் தான். அந்த அடக்கம் வேண்டும்.

கல்லாதது கடலளவு.

முக்கியமாய் கவனிக்க வேண்டியது , தோண்டுதல் என்பது கற்பதற்கு சமம். நாம் தோண்டி நீரை வெளியில் இருந்து கொண்டு வந்து ஊற்றுவது இல்லை. நீர் உள்ளுக்குள் இருந்து வெளியே வருகிறது.

நாம் படிக்க படிக்க , நமக்குள் இருந்து அறிவு வெளியே வர வேண்டும்.


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும்  கல்வி.

என்று சொல்லவில்லை.

சொல்லி இருக்கலாம்.

கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது.

அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.

கற்க கற்க உள்ளே இருந்து வெளியே வர வேண்டும்.

விஷயங்களை உள்ளே திணிப்பது அல்ல கல்வி. அதை ஒரு கணிப்பொறி மிகச் சிறப்பாக செய்யும்.

கற்றது உள்ளே போய் , உள்ளே இருக்கும் அறிவை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு குறளுக்கு பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. நிதானமாக சிந்திக்க வேண்டும்.

Monday, June 5, 2017

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர


நமது உடலில் இரண்டு தாமரை மலர்கள் உண்டு. ஒன்று மலரும் போது ,மற்றது கூம்பும்.

நமது கைகள் ஒரு மலர். நம் இதயம் இன்னொரு மலர்.

இரண்டு கைகளையும் சேர்த்து , குவித்து வைத்தால் தாமரை மொட்டு போல இருக்கும். அப்படி உள்ளன்போடு வணங்கும் போது , உள்ளத் தாமரை மலரும்.

அதற்கு மாறாக,

எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று இரண்டு கைகளையும் விரித்து பிச்சை ஏற்பவனின் உள்ளத் தாமரை கூம்பும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது சோற்றை கை நுனிக்கு கொண்டு வந்து, மலர் மொட்டு போல கூம்பி , குழந்தையின் வாயில் தருவார்கள். அந்தத் தாயிடம் கேட்டுப் பாருங்கள், அந்த நொடியில் அவர்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று.

மணிவாசகர் சொல்கிறார்

"கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,"

கரமாகிய மலர் மொட்டுப் போல ஆகி, இருதய தாமரை மலர என்கிறார்.

போற்றித் திரு அகவல்.

இறைவன் தனக்குத் தந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். பதிலுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்துகிறார். ஒரு பக்கம் நன்றியில் மனம் நெகிழ்கிறது. மறு புறம் , தான் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வருந்துகிறது.

மணிவாசகர் குழைகிறார்.

பாடல்


தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!


பொருள் 

தப்பாமே = விடாமல்

தாம் பிடித்தது சலியா = தான் பிடித்த கொள்கையில் இருந்து விலகாமல்

தழல் அது கண்ட மெழுகு அது போல = தீயில் விழுந்த மெழுகு போல

தொழுது = வணங்கி

உளம் உருகி = உள்ளம் உருகி

அழுது = அழுது

உடல் கம்பித்து =  உடல் நடுங்கி

ஆடியும் = ஆடி

அலறியும் = அலறி

பாடியும் = பாடி

பரவியும் = போற்றி

`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும் = இது ஒரு பழ மொழி. கொடிறு என்பது குறடா போன்ற சாதனம். வீட்டில் சூடான பொருள்களை அடுப்பில் இருந்து இறக்க பயன் படுத்துவோமே , கிடுக்கி என்று சொல்லுவார்கள். அதுவும் , முட்டாளும் பிடித்ததை விட மாட்டார்கள்.  என்பது போல

படியே ஆகி = அப்படியே ஆகி

நல் இடை அறா அன்பின் = நல்ல , இடை விடாத அன்பின்

பசு மரத்து ஆணி அறைந்தால் போல = பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எப்படி இறுக பற்றிக் கொள்ளுமோ அது போல பற்றி

கசிவது பெருகி = கண்ணீர் பெருகி

கடல் என மறுகி = கடல் அலை போல அங்கும் இங்கும் அலைந்து

அகம் குழைந்து = உள்ளம் குழைந்து

அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து = அதற்கு ஏற்ப உடல் நடுங்கி

சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப = ஊரில் உள்ளவர்கள் (சகம் ) எல்லாம் என்ன இவன் இப்படி பேய் போல அலைகிறானே என்று சொல்லும் படி

நாண் அது ஒழிந்து = அதற்காக வெட்கப் படாமல்

நாடவர் பழித்துரை = நாட்டில் உள்ளவர்களின் பழிச் சொற்களையே

பூண் அதுவாக = அணிகலனாக கோட்னு

கோணுதல் இன்றி = குறைவு இன்றி

சதிர் இழந்து = திறமை இழந்து

அறியாமல் கொண்டு  சாரும் = தன்னை அறியாமல் கொண்டு போய் சேர்க்கும்

கதியது = உயர்ந்த கதியான அது

பரம அதிசயம் ஆக = பெரிய அதிசயமாக ,

கற்றா மனம் எனக் கதறியும் = கன்றை ஈன்ற பசுவைப் போல கதறியும்

பதறியும் = பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது = மற்ற வேறு ஒரு தெய்வத்தையும் கனவிலும் நினைக்காமல்

அரு பரத்து ஒருவன் = அரிய மேலான ஒருவன்

அவனியில் வந்து = உலகில் வந்து

குருபரன் ஆகி - உயர்ந்த குருவாகி

அருளிய பெருமையை = அருள் செய்த பெருமையை

சிறுமை என்று இகழாதே = சிறியது என்று இகழாமல்

திருவடி இணையை = இரண்டு திருவடிகளையும்

பிறிவினை அறியா நிழல் அது போல = உடலை விட்டு பிரிந்து அறியா நிழல் போல

முன் பின் ஆகி = முன்னும் பின்னும் ஆகி

முனியாது = கோபம் கொள்ளாமல்

அத் திசை = அந்தத் திசை நோக்கி

என்பு நைந்து உருகி = எலும்பு நைந்து உருகி

நெக்கு நெக்கு ஏங்கி = தேம்பி தேம்பி ஏங்கி

அன்பு எனும் ஆறு கரை அது புரள = அன்பென்ற ஆறு இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓட

நன் புலன் ஒன்றி = நல்ல புலன்கள் எல்லாம் ஒன்றாக

`நாத' என்று அரற்றி, = தலைவனே என்று அரற்றி

உரை தடுமாறி = பேச்சு தடுமாறி

உரோமம் சிலிர்ப்ப = மெய் கூச்சம் அடைந்து

கர மலர் மொட்டித்து, இருதயம் மலர = இரண்டு கரங்களும் கூப்பி, இருதயம் மலர்ந்து

கண் களி கூர, =  கண்கள் ஆனந்தத்தை வெளிப் படுத்த

நுண் துளி அரும்ப = வியர்வை அரும்ப

சாயா அன்பினை = தளராத அன்பினை

நாள்தொறும் தழைப்பவர் = தினமும் வளரச் செய்பவர்களுக்கு

தாயே ஆகி = தாய் போல இருந்து

வளர்த்தனை போற்றி! = வளர்த்தனை போற்றி

இறைவன் தாய் போல கருணை செய்வான்.

அது ஏன் தாய் போல என்றார்.  தாயன்பு உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும், ஏன் அது உயர்ந்தது என்று சிந்திப்போமா ?


முதலாவது, நமக்கு யாராவது துன்பம் செய்தால், அவர்களுக்கு திருப்பி துன்பம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. திரும்பிச் செய்ய முடியாவிட்டாலும் , அவர்களுக்கு ஒரு கெடுதல் வர வேண்டும் என்று உள்ளத்திலாவது நினைப்பது இயல்பு.

பத்து மாதம் , படாத பாடு படுத்திய குழந்தை, சொல்லொண்ணா வலி கொடுத்து பிறந்த குழந்தையை  கண்டு ஒரு தாய் மகிழ்வாள். அந்த குழந்தையின் மேல் கோபம் கொள்ள மாட்டாள். முடியுமா ?

இரண்டாவது, ஒரு பெண் எப்போதும் அழகாக இருக்க விரும்புவாள். அவளுடைய அழகை  சிதைத்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பெண் அறியாமல் , அவளுடைய கூந்தலை வெட்டி விட்டால் அவள் அடையும் துன்பத்திற்கும் , கோபத்திற்கும் அளவு இருக்காது.

சூர்பனகையை மூக்கையைம், காதையும், முலையையும் அரிந்தான் இலக்குவன். அவளால் தாங்க முடியவில்லை. எந்தப் பெண்ணாலும் சகிக்க முடியாது.

ஆனால், ஒரு பிள்ளை பெறுவது என்றால் ஒரு பெண்ணின் அழகு குன்றும்.  வயிற்றில்  வரி வாரியாக தோல் சுருங்கும். உடலின் கட்டு குலையும்.

இருந்தும் அந்தப் பிள்ளையை  தாய் பாராட்டி சீராட்டி வளர்ப்பாள் .

மூன்றாவது, கருவில் இருக்கும் பிள்ளை எப்படி இருக்கும் என்று கூட தாய்க்கு தெரியாது. ஆணா , பெண்ணா என்று கூட தெரியாது. கறுப்பா , சிவப்பா, ஒல்லியா, குண்டா என்று ஒன்றும் தெரியாது. முகம் கூட தெரியாத அந்த சிசுவின் மேல் அவ்வ்ளவு அன்பு பாராட்டி தன்னுள் வளர்ப்பாள் . குழந்தைக்கு வேண்டுமே என்று  காலாகாலத்தில் உணவு உண்பாள் . குழந்தைக்கு வலிக்கும் என்று   ஒரு விதமாக படுப்பாள். அவ்வளவு வலியையும் சகித்துக் கொள்வாள்.

அது போல இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும் , வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான் , ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.

குழந்தைக்குத் தெரியாது தாய் தனக்கு எவ்வளவு உதவி செய்கிறாள் என்று. வயிற்றில் எட்டி உதைக்கும். அதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வாள் ஒரு தாய்.


அந்த கருணையை நினைத்து உருகுகிறார் மணிவாசகர். 

Thursday, June 1, 2017

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும்

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும் 


அரசை நீ ஏற்றுக் கொள் என்று இராமனிடம் பரதன் சொல்கிறான். அதை மறுத்துச் சொல்கிறான் இராமன்.

மிக மிக முக்கியமான கட்டம்.


அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. ஆனால், எது சரியோ அதைச் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

தந்தை சொல் கேட்க வேண்டும் என்பது இராமனின் வாதம்.

யார் என்ன சொன்னாலும், அறம் தான் முக்கியம். அதற்கு எதிராக யார் சொன்னாலும் அதை கேட்கக் கூடாது என்பது பரதனின் வாதம்.

இங்கே இராமன் வாதத்தைத் தொடங்குகிறான்....அண்ணன் தம்பிக்குள் நடக்கும் வாதத்தைப் பார்ப்போம். எது சரியான வழி என்று நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

"சரியான வழியும், உண்மையும், நீதியும், மேலான அறமும் இவை யாவும் எல்லாம் படித்த தந்தை சொல்லில் அடங்கும் " என்கிறான் இராமன்.


பாடல்

‘முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.


பொருள் 


முறையும் = ஒழுக்கமும்

வாய்மையும் = உண்மையும்

முயலும் நீதியும் = அடைய நினைக்கும் நீதியும்.

அறையும் = சொல்லப் படும்

மேன்மையோடு அறனும் = மேலான அறங்களும்

ஆதியாம் துறையுள் = தொன்மையான வழிகள்

யாவையும் = அனைத்தும்

சுருதி நூல் விடா = வேத நெறிகளை விட்டு விலகாத

இறைவர் = அரசர் (தயரதன்)

ஏவலால் = செய்யச் சொன்ன செயல்களால்

இயைவ காண்டியால் = சேர்ந்திருக்க காண் .


இராமானுக்குத் தெரியும் , பரதன் நீதி, நேர்மை, அரம் , அரச குல வழக்கம் என்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறான் என்று. அதற்கு முன்பே, சொல்லி விடுகிறான், அவை எல்லாம் தயரதன் சொன்ன சொல்லில் இருக்கிறது என்று.

தயரதனுக்குத் தெரியாத, அவன் அனைத்தையும் அறிந்தவன் எனவே அவன் சொல்லில் எல்லாம் அடங்கி இருக்கிறது என்கிறான் இராமன்.

புத்தக அறிவா, சான்றோர் சொல்லும் மொழிகளா - எதை கடை பிடிக்க வேண்டும் ?

தந்தையும் , ஆசிரியரும் சொல்லவதை கேட்பதா அல்லது தான் படித்து அறிந்தவற்றை பின் பற்ற வேண்டுமா ?

விடை வருகிறது....