Tuesday, April 29, 2014

கம்ப இராமாயணம் - தழுவிய கைகள்

கம்ப இராமாயணம் - தழுவிய கைகள் 


போரில் அடிபட்டு இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

இராவணா, யாரையெல்லாம் தழுவிய கைகள் உன்னுடையவை ....

போர்மகளை , கலை மகளை, புகழ் மகளை, சீர் மகளை, திருமகளை என்று எல்லோரையும் தழுவினாய். இது எல்லாம்  போதாது என்று கற்பின் கனலியான சீதையை தழுவ நினைத்தாய். அதனால் உயிரைக் கொடுத்தது மட்டும் அல்ல, பழியும் கொண்டாய். கடைசியில் இப்போது மண்ணைத் (பார் மகழை ) தழுவி கிடக்கிறாயே

என்று புலம்புகிறான்.


பாடல்

'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர, 
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின் 
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப் 
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத் மார்பால்?' 


பொருள்


போர்மகளை = போர் மகளை
கலைமகளை = கலை மகளை
புகழ்மகளை = புகழ் மகளை
தழுவிய கை  = தழுவிய உன் கைகள்
பொறாமை கூர = பொறாமை கொள்ளும் படி இருக்க

சீர்மகளை = செல்வ மகள்
திருமகளை = திருமகளை

தேவர்க்கும்  = தேவர்களுக்கும்
தெரிவு அரிய = அறிய முடியாத
தெய்வக் கற்பின் = தெய்வீக கற்பு நெறி கொண்ட 
பேர்மகளை = பேர் கொண்ட சீதையை

தழுவுவான் = தழுவ நினைத்து

உயிர் கொடுத்து = அதில் உயிரைக் கொடுத்து

பழி கொண்ட பித்தா! = பழி கொண்ட பித்தனே

பின்னைப் = பின்னால் 

பார்மகளைத் தழுவினையோ = நில மகளை தழுவி கிடக்கிறாயோ

திசை யானைப் = எட்டுத் திசைகளை காக்கும் யானைகளை
பணை இறுத்த = தந்தங்களை உடைத்த
பணைத் மார்பால்?' = பெரிய மார்பால்
 
உயிர் கொடுத்தும் புகழ் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். 

இவன் உயிர் கொடுத்து பழி கொண்டதால் அவனை பித்தன் என்று வீடணன் அழைத்தான். 

கல்வி, செல்வம்,  வீரம் என்று எல்லாம் இருந்தும் சீதையைத் தழுவ நினைத்து  பழி சுமந்து உயிர் கொடுத்தான். 

பழி சுமத்தும் பாடல்தான். 

சோகமான பாடல் தான். 

இருந்தும் கம்பனின் கவிச் சுவை எப்படி இருக்கிறது பாருங்கள். 

என்ன ஒரு கற்பனை. என்ன ஒரு சொல் ஆளுமை !


Friday, April 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை 



பெண்களின் கண்கள் நெருப்பு போன்றவை. பார்த்ததும் பற்றிக் கொள்ளும். ஆணின் மனம் மெழுகு போல், வெண்ணை போல் உருகும் அந்த கண் எனும் நெருப்பில்.

உருகும் மெழுகு பொம்மைக்கு தன்னை எப்படி காப்பாற்றிக்  கொள்வது என்று தெரியாது. அது போல மணி வாசகர் இருக்கிறார்.

நான் உருகுகிறேன், என்னை காப்பாற்று என்று இறைவனிடம் வேண்டுகிறார்.அது  மட்டும் அல்ல, ஒரு முறை காப்பாற்றி விட்டு விட்டால் மீண்டும் அங்கு தான் போவேன். என் குணம் அப்படி. எனவே, நான் அவ்வாறு போகாமால் இருக்க என்னை உன் அடியவர்கள் மத்தியில் விட்டு விடு. அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்று  கூறுகிறார்.

அவராலேயே  முடியவில்லை.

பாடல்

முழுதயில் வேற்கண் ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாய்உன்னைப் பாடுவனே.


பொருள்

முழு = முழுவதும்

அயில் = கூர்மையான

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே

என்பார் அருணகிரி நாதர்.

வேற் = வேல் போன்ற

கண்ணியரென்னும் = கண்களை கொண்ட பெண்கள் என்னும்

மூரித் = மூண்டு எழும்

தழல் = தீயில்

முழுகும் = முழுகும்

விழுதனை யேனை = வெண்ணை போன்றவனை

விடுதி கண் டாய் = விட்டு விடாதே

நின் = உன்னுடைய

வெறி மலர்த் தாள் = மணம் பொருந்திய மலர் போன்ற திருவடிகளில்

தொழுது = வணங்கி

செல் = செல்கின்ற

வானத் தொழும்பரிற் = வானத்தில் உள்ள அடியவர்கள் 

கூட்டிடு = என்னை சேர்த்து விடு 

சோத்து = வணங்கி

தெம்பிரான் =  எம்பிரான்

பழுது = குற்றங்கள்

செய் வேனை = செய்கின்ற என்னை

விடேலுடை யாய் = விடாமல் காக்கின்றவனே

உன்னைப் பாடுவனே = உன்னை நான் பாடுவேனே

மண்ணாசையும், பொன்னாசையும் விட்டு விடும்.

பெண்ணாசை விடாது  போலிருக்கிறது.

ஆண்டிகளையும் ஆட்டிவிக்கிறது.

துறவிகளையும் துரத்திப்  பிடிக்கிறது.

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது பெண் என்று வள்ளுவரும் ஜொள்ளி இருக்கிறார்.


Thursday, April 24, 2014

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி 


காமம் சுடும்.

எல்லா ஆசையும் சுடும். ஆசைகள் மனிதனை ஆட்டுவிக்கும்.  மனத்திலும்,உடலிலும் சூட்டினை ஏற்றும்.

பெண்ணின் இதழ்கள் எவ்வளவு மென்மையானது. இனிமையானது. அழகானது.  சுவையானது.

அது முதலையின் வாயைப் போலத் தெரிகிறது மாணிக்க வாசகருக்கு. பிடித்தால்  விடாது. உயிரை வாங்கிவிடும் என்பதால்.

பயப்படுகிறார்.

உலகிலேயே பெரிய சுமை எது ?

இந்த உடல் தான்.  இதை தூக்கிக் கொண்டு அலைய வேண்டி  இருக்கிறது. ஒரு நிமிடம் இறக்கி வைக்க முடியுமா ?

இதை எவ்வளவு காலம்தான் பொறுத்துக் கொண்டு இருப்பது. என்னால் முடியவில்லை என்கிறார்  மணிவாசகர்.

பாடல்


முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே.


பொருள்

முதலைச் = முதலை போல்

செவ் வாய்ச்சியர் = சிவந்த வாயை கொண்ட பெண்களின்

வேட்கை = ஆசை என்ற

வெந் நீரிற் = வெந்நீரில் 

கடிப்பமூழ்கி = ஆழ்ந்து மூழ்கி

விதலைச் செய் வேனை  = நடுக்கம் கொண்ட என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விடக்கு  ஊன் மிடைந்த = மாமிச நாற்றம் கொண்ட

சிதலைச் = நோய்

செய் காயம் = உண்டாக்கும், அல்லது இடமான இந்த உடலை

பொறேன் = பொறுத்துக் கொண்டு இருக்க  மாட்டேன். பொறுக்க முடியவில்லை 

சிவனே = சிவனே 

முறை யோ முறையோ = இது சரிதானா, இது சரிதானா

திதலைச் செய் = தேமல் படர்ந்த 

பூண் முலை = ஆபரணம் அணிந்த மார்பை கொண்ட

மங்கை பங்கா = மங்கையை பாகமாகக் கொண்டவனே

என் சிவகதியே = என் சிவகதியே



Wednesday, April 23, 2014

கம்ப இராமாயணம் - எளிமை ஆனாய்

கம்ப இராமாயணம் - எளிமை ஆனாய் 


போரில் இராவணன் இறந்து கிடக்கிறான். அவன் மேல் விழுந்து அழுகிறான் வீடணன்.

சீதை மேல் கொண்ட காதல் எவ்வளவு பெரிய இராவணனை எவ்வளவு கீழிறங்கி வர வைத்து சாதாரண ஆளாக ஆக்கி விட்டது. கடைசியில் ஒன்றும் இல்லாமால் வெறும் போர்க்  களத் தரையில் கிடக்கிறான்.

காதலுக்கு அவன் கொடுத்த விலை அது.

வீடணன் ஏதேதோ நினைக்கிறான்.

இராவணன் ஒரு முறை சூர்பனகையின் கணவனை ஒரு போரில் கொன்று விட்டான். அதற்கு பழி தீர்க்கத்தான் சூர்பனகை சீதை மேல் காதலை இராவணனிடம் ஊட்டி, இராமனின் பகையைத்  ,தேடித் தந்து, இராமன் இராவணனை கொல்லும்படி செய்தாளோ என்று நினைக்கிறான் வீடணன். சூர்பனகை பழி தீர்த்துக் கொண்டாள் என்று நினைக்கிறான். உன்னை பார்க்க எல்லோரும் அஞ்சி நடுங்குவார்களே. இன்று நீ யார் முகத்தை பார்க்கிறாய் என்று அவலத்தின் உச்சியில் நின்று புலம்புகிறான் வீடணன்.


பாடல்

''கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்'' என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, 

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! 

நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு 

எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 



பொருள்


''கொல்லாத மைத்துனனைக் = கொல்லத் தகாத மைத்துனனை 

 கொன்றாய்''  = (இராவணா நீ ) கொன்றாய்

என்று = என்று

அது குறித்துக் = அதை மனதில் குறி கொண்டு

கொடுமை சூழ்ந்து = கொடுமை மனதில் சூழ

பல்லாலே = தன்னுடைய பெரிய பற்களால் 

இதழ் அதுக்கும் = இதழை கடிக்கும் (கோபத்தில் )

கொடும் பாவி = கொடுமையான பாவியான சூர்பனகை

நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! = பாரமான நீண்ட பழியைத் தீர்த்துக் கொண்டாளோ ?


நல்லாரும் = நல்லவர்களும்

தீயாரும் = தீயவர்களும்

நரகத்தார் = நரகத்தில் உள்ளவர்களும்

துறக்கத்தார் = சொர்க்கத்தில் இருப்பவர்களும்

நம்பி! = சகோதரனே

நம்மோடு எல்லாரும் பகைஞரே; = நமக்கு எல்லோரும் பகைவர்களே

யார் முகத்தே விழிக்கின்றாய்? = இன்று நீ யார் முகத்தில் விழிப்பாய்

எளியை ஆனாய்! = எவ்வளவு பெரிய ஆளாக இருந்து இன்று எவ்வளவு சாதாரண ஆளாக   மாறி விட்டாய்

Tuesday, April 22, 2014

கம்ப இராமாயணம் - குளிர்ந்தானோ மதியம் என்பான் ?

கம்ப இராமாயணம் - குளிர்ந்தானோ மதியம் என்பான் ?



வீடணன் புலம்பல்.

இராவணன் போரில் அடிபட்டு இறந்து  கிடக்கிறான். அவன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

"நீ வீரர்கள் சென்று அடையும் வீர சுவர்க்கம் அடைந்தாயோ ? உன் பாட்டன் பிரமனின் உலகம் அடைந்தாயோ ?  கைலாயம் அடைந்தாயோ ? உன் உயிரை இப்படி தைரியமாக யார் கொண்டு சென்று இருப்பார்? அது எல்லாம் இருக்கட்டும், இதுவரை உன்னிடம் ஆடிய மன்மதன் இனி ஓய்வு கொள்வானா ? உன்னை  எரித்த சந்திரனும் இனி குளிர்வானா "

என்று புலம்புகிறான்.

மன்மதன் இராவணனோடு விளையாடினானாம். அந்த விளையாட்டு நின்று போய்விட்டதா என்று கேட்கிறான் வீடணன்.

காதல், எவ்வளவு பெரிய ஆளை எங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

ஆச்சரியம்.

பாடல்

வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் முன்பன் 
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே,  கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 

பொருள்

வீர நாடு உற்றாயோ? = வீரர்கள் அடையும் வீர சுவர்க்கம் அடைந்தாயோ ?

விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? = எல்லா      உயிர்களையும் படைத்த, அவைகளின் முன்பே தோன்றிய பிரமனின் , உன் பாட்டனின் நாட்டை அடைந்தாயோ ?

பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? = பிறை சூடும் சிவனின் கைலாயம் அடைந்தாயோ ?

ஆர், அணா! = யார், அண்ணா ?

 உன் உயிரை, அஞ்சாதே,  கொண்டு அகன்றார்? = உன் உயிரை அஞ்சாமல் கொண்டு சென்றது

அது எலாம் நிற்க = அது ஒரு புறம் நிற்கட்டும்

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? = மன்மதன் உன்னிடம் ஆடிய ஆட்டம் முடித்தானா ?

குளிர்ந்தானோ, மதியம் என்பான்? = இத்தனை நாள் உன்னை எரித்துக் கொண்டிருந்த  சந்திரன் என்பவன் இனி குளிர்வானா ?


Monday, April 21, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


வாழ்க்கைக்கு சிறந்த துணைவி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர்  சொல்லுகிறார்.

முதலாவது, இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த பண்புகளுடன் இருக்க வேண்டும்.  அது என்ன இல்லற வாழ்க்கைக்கு தகுந்த பண்புகள் ?

பரிமேல் அழகர் சொல்கிறார் ....


நல்ல குணங்கள் :  துறவிகளை பாதுகாத்தலும் மற்றும் போற்றுதலும், விருந்தினர்களை உபசரித்தலும் ,  ஏழைகள் மேல் அருளுடமையும் முதலாயின.

நல்ல செயல்களாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், தொழில் வன்மையும், சமுதாயத்தோடு ஒத்து வாழ்தலும் முதலாயின.

இரண்டாவது, கணவனின் வருவாய்க்குத் தக்கபடி வாழ்கை நடத்துதல்.


பாடல்

மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை.

பொருள்

மனைத் தக்க = வீட்டிற்கு வேண்டிய

மாண்பு உடையள் ஆகி = மாண்புகளை கொண்டு

தற் கொண்டான் = தன்னைக் கொண்டவனின்

வளத்தக்காள் = வளத்திற்குள் வாழ்பவள்

வாழ்க்கைத்துணை = வாழ்க்கைத் துணையாவாள்

என்ன தெரிகிறது ?

அந்தக்  காலத்தில் வீட்டுச் செலவை பார்த்துக் கொண்டது மனைவிதான்.  கணவனின்  வருமானத்திற்குள் செலவு செய்பவள் நல்ல மனைவி.

அதே போல் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது மனைவிதான்.

துறவிகளைப் போற்றுவதும், ஏழைகளுக்கு உதவுவதும் அவள் தான்.

மொத்தத்தில் வீட்டை முழுவதும் ஏற்று நடுத்துபவள் அவளாகவே இருந்திருக்கிறாள்.

திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் போய் , வீட்டை வாங்கு, காரை வாங்கு என்று  வருமானத்திற்கு அதிகமாக செலவை அதிகரிப்பவள் அல்ல நல்ல துணை  என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

 

இராமாயணம் - இராமன்தன் யாவருக்கும் இறைவன்

இராமாயணம் - இராமன்தன் யாவருக்கும் இறைவன்


இராவணனன் இறந்து கிடக்கிறான். அவன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

பிரமனும், சிவனும் கொடுத்த வரங்கள் எல்லாம் உன் பத்துத் தலையோடு பொடியாக உதிர்ந்து போய் விட்டன. இராமன் தான் எல்லோருக்கும் கடவுள் என்று சீதையை தூக்கி வந்த அன்று நீ உணரவில்லை. இன்று வைகுந்தம் போகும் போதாவது உணர்வாயா ?

என்று புலம்புகிறான்.

பாடல்

'மன்றல் மா மலரானும், வடி மழு வாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவன் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் யாவருக்கும் இறைவன் ஆதல்? 

பொருள்


'மன்றல் = மணம் பொருந்திய

மா மலரானும் = பெரிய தாமரை மலரில் வாழும் பிரம தேவனும்

வடி = வடிவான

மழு = மழுவும்

வாள் படையானும் = வாளை படையாகக் கொண்ட சிவனும் 

வரங்கள் ஈந்த = வரங்கள் தந்த போது

ஒன்று அலாதன = ஒன்று அல்லாமல் (பத்துத் தலை)

உடைய முடியோடும் = உடைய தலைகளோடும்

 பொடி ஆகி உதிர்ந்து போன = பொடிப் பொடியாக உதிர்ந்து போய் விட்டன 

அன்றுதான் = அன்று (சீதையை தூக்கி வந்த அன்று )

உணர்ந்திலையே ஆனாலும் = உணரவில்லை என்றாலும்

அவன் நாட்டை  = அவனுடைய நாட்டை (இராமனின் நாடு, வைகுண்டம்)

அணுகா நின்ற = அணுகி நின்ற

இன்றுதான் உணர்ந்தனையே = இன்று உணர்ந்திருப்பாய்

இராமன்தன் = இராமன் தான்

யாவருக்கும் இறைவன் ஆதல் = எல்லோருக்கும் இறைவன் ஆவதை



Tuesday, April 15, 2014

பழமொழி - எப்படி படிக்க வேண்டும்

 பழமொழி - எப்படி படிக்க வேண்டும் 


எப்படி நாம் பல விஷயங்களை அறிந்து கொள்வது ?

புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளலாம். அது ஒரு வழி. அதை விட சிறந்த வழி, அப்படி புத்தகங்களைப் படித்து அறிந்து, தங்கள் அனுபவமும் கூடச் சேர்த்த அறிஞர்களை கண்டு அவர்கள் பேசுவதை கேட்டு அறிவது.

கற்றலை விட கேட்பது சிறந்தது.

வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தருவதை கவனமாக கேட்டாலே போதும், பலமுறை படிப்பதை விட அது சிறந்தது.

அது மட்டும் அல்ல,

நாம் வாசித்து அறியும் அறிவு மிக மிக சொற்பமாக இருக்கும். நாம் படித்தது மட்டும் தான் உலகம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் மொத்தம் ஒரு பத்து பதினைந்து புத்தகங்களை வாசித்து விட்டு, எல்லாம் அறிந்தவர் போல் பேசுவார்கள்.  தாங்கள் அறிந்தது மட்டும்தான் அறிவு. அதைத் தாண்டி வேறு இல்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.

கற்றறிந்த பெரியவர்கள் பேசுவதைக் கேட்கும் போது அறிவின் வீச்சு புரியும்.  நாம்  அறிந்தது  ஒன்றும் இல்லை என்ற பணிவு வரும். அகந்தை அழியும். பேச்சு குறையும். மேலும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

கிணற்றுக்குள் இருக்கும் தவளை, தான் இருக்கும் கிணற்றைத் தவிர உலகில் வேறு தண்ணீர் கிடையாது என்று நினைப்பது போல நாம் படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு அறிவின் அகலம், கல்வியின் கரை இதுதான் என்று நினைக்கக் கூடாது.

அறிஞர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.


பாடல்


உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.


பொருள் 

உணற்(கு) = பருகுவதற்கு

இனிய இன்னீர் = இனிமையான நல்ல நீர்

பிறி(து)உழிஇல் = உலகில் வேறு எங்கும் இல்லை

என்னும் = என்று சொல்லும்

கிணற்(று)  அகத்துத் = கிணற்றின் உள்ளே உள்ள

தேரை போல் = தவளை போல

ஆகார் = ஆக மாட்டார்கள்

கணக்கினை = அற நூல்களை

முற்றப்  = முழுவதும்

பகலும்  = நாள் முழுவதும்

முனியா(து) = சிரமம் பார்க்காமல்

இனிதோதிக் = இன்பத்துடன் கற்று

கற்றலிற் கேட்டலே நன்று = கற்பதை விட கேட்பதே நல்லது

படிப்பு ஒரு இனிமைதான். அதை விட கேட்பது மிக இனிது.

யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

கல்வி என்பது வெளியே இருந்து உள்ளே போவது.

அறிவு என்பது உள்ளே இருந்து வெளியே வருவது.

சில பேர் பிறவியிலேயே அறிவை கொண்டு வருவார்கள். அவர்கள் படிக்க படிக்க உள்ளிருந்து ஞானம் வெளியே வரும்.

அதை கேளுங்கள்.



Monday, April 14, 2014

சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை

சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை   


அனுமன் இலங்கைக்கு கடலைத் தாவிப் போனான் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகலாம் தானே ? அதை விட்டு விட்டு ஏன் இவ்வளவு நீட்டி முழங்க  வேண்டும் ?

அதில் ஏதோ  காரணம் இருக்க வேண்டும் ? ஏதோ செய்தி இருக்க வேண்டும்.

அது என்ன செய்தி என்று நாம் சிந்தித்து அறிய வேண்டும்.

எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் சில தடைகள் வரத்தான் செய்யும்.

இராம காரியமாக அனுமன் செல்கிறான். அவனுக்கே தடை வந்தது என்றால் நம் காரியங்கள் எம்  மாத்திரம், அனுமனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மாத்திரம் ?

நமக்குத் தடைகள் வரதா ? வரும்.

ஐயோ தடைகள் வந்து விட்டதே என்று நினைத்து ஓய்து விடக் கூடாது. அவற்றை முறியடித்து எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பது ஒரு செய்தி.

மைநாக மலை கடலின் நடுவே உயர்ந்து எழுந்தது.

எப்படி எழுந்தது தெரியுமா ? ஒரு நொடியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றது.

ஒரு கண்ணாடியின் மேல் உழுந்தை உருட்டி விட்டால் அது எவ்வளவு சீக்கிரம் உருண்டு ஓடுமோ அவ்வளவு நேரத்தில் அது வளர்ந்து நின்றது.

அனுமன் "என்னடா இது " அயர்ந்து நின்றான்.

பாடல்

எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க,
     இலங்கும்ஆடி
உழுந்து ஓடுகாலத்திடை, உம்பரின் 
     உம்பர்ஓங்கிக்
கொழுந்துஓடிநின்ற கொழுங்குன்றை 
     வியந்துநோக்கி,
அழுங்கா மனத்துஅண்ணல் 'இது என்கொல்'
     எனாஅயிர்த்தான்.

பொருள்

எழுந்து ஓங்கி = எழுந்து ஓங்கி

 விண்ணொடு மண் ஒக்க = விண்ணும் மண்ணும் ஒன்றாகும் படி நின்ற. அதாவது அதை தாண்டி குதித்துப் போக முடியாது. விண் வரை உயர்ந்து நின்றது.

இலங்கும் = ஒளி வீசி பிரகாசிக்கும்

ஆடி = கண்ணாடி

உழுந்து ஓடு காலத்திடை = ( அதன் மேல் ) உழுந்து உருண்டு ஓடும் காலத்தில்

உம்பரின் உம்பர் ஓங்கிக் = மேலும் மேலும் வளர்ந்து

கொழுந்து ஓடிநின்ற = அதன் சிகரங்கள் உயர்ந்து வளர்ந்து நின்ற

கொழுங் குன்றை = அதன்  குன்றங்களை 
   
வியந்துநோக்கி = வியப்புடன் பார்த்து

அழுங்கா மனத்து = புலன் இன்பங்களில் அழுந்தாத மனம் கொண்ட

அண்ணல்  = அனுமன்

'இது என்கொல்' = இது என்ன

எனாஅயிர்த்தான். = என்று அதிசயப்பட்டான்



Saturday, April 12, 2014

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?


பெரிய எரி. பரந்த நீர் பரப்பு.  அதன் மேல் சிலு சிலுவென வீசும் காற்று.

அந்த ஏரியின் கரையில் பெரிய மூங்கில் காடு. அங்குள்ள மூங்கில் மரங்களில் (மூங்கில் ஒரு வகை புல் இனம்) வெள்ளை வெள்ளையாக பூக்கள் பூத்து இருக்கின்றன. அது ஏதோ பஞ்சை எடுத்து ஒட்டி வைத்தது மாதிரி இருக்கிறது.

அந்த மூங்கில்களை ஒட்டி சில பெரிய மரங்கள். அந்த மரங்களில் உள்ள இளம் தளிர்களை காற்று வருடிப் போகிறது.

ஏரியில் உள்ள மீன்களை உண்டு குருகு என்ற பறவை அந்த மர நிழலில் இளைப்பாறுகின்றன. உண்ட மயக்கம் ஒரு  புறம்.தலை வருடும் காற்று மறு பக்கம். சுகமான மர நிழல். அந்த குருகுகள் அப்படியே கண் மூடி உறங்குகின்றன.

ஊருக்குள் கரும்பும் நெல்லும் செழிப்பாக விளைந்திருகின்றன.

அந்த ஊரில் ஒரு விலைமாது, தலைவனைப் பற்றி இகழ்வாகப் பேசிவிட்டு சென்றாள் . அது மட்டும் அல்ல அவனை நோக்கி ஒரு பார்வையை  வீசிவிட்டு,அவன் அணிந்திருந்த மாலையை பறித்துச் சென்றாள் . அவள், தலைவி இருக்கும் வீதி வழியே சென்றாள். இதைத் தலைவி , தலைவனிடம் கூறுகிறாள்.



பெரும்பெயர் மகிழ்ந பேணா தகன்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
5. ஆர்குரு குறங்கும் நீர்சூழ் 1வளவயற்
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட
10. மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை யொருத்தி
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் 2பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறுதுனி செய்தெம்
15. மணன்மலி மறுகின் இறந்திசி னோளே.

Thursday, April 10, 2014

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை 



சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று  சொல்லுவார்கள். அப்படி என்றால் எல்லோரும் சுந்தர காண்டம் படித்தால் போதுமே. எல்லா துன்பங்களும் விலகி விடுமே. வேறு ஒன்றும் செய்ய வேண்டாமே !

அப்படி அல்ல.

சுந்தர காண்டம்  படிப்பது,  நாம் முயற்சி செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும். (Motivation ).

சும்மா உக்காந்து கொண்டு "ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று உறைந்து போய் விடாமல், முயன்று துன்பங்களைப் போக்க சுந்தர காண்டம் வழி காட்டுகிறது.

எதிர் காலம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.

சீதையைத் தேடிப்  போகிறான். முன் பின் தெரியாத ஊர். இராவணன் பெரிய அரக்கன். மாயாவி. எங்கே சீதையை மறைத்து வைத்திருப்பான் என்று தெரியாது. அந்த ஊரில் யாரிடமாவாது போய் கேட்க முடியுமா ? தானே கண்டு பிடிக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நடுவில் பெரிய கடல். பெரிய தடை.

தனி ஆளாகப் போகிறான். ஒரு துணையும் கிடையாது. வழி தெரியாது. ஊர் தெரியாது. பயங்கரமான எதிரி.

கிட்டத்தட்ட நம் நிலை மாதிரியே இருக்கிறது  அல்லவா.

கவலையில், துன்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் நிலை இதுதான்.

என்ன செய்ய வேண்டும் தெரியாது. எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஆயிரம் தடைகள் வேறு.

அனுமன் என்ன செய்தான் என்று ஒரு உதாரணம் தருகிறது  இராமாயணம். அதில் இருந்து  நம்பிக்கையும், உற்சாகமும் பெற.

அனுமன் பலசாலி, அறிவாளி...நாம் அப்படி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

அவன் சமாளிக்க வேண்டிய சவால்களும்  அப்படித்தானே.கடலைக் கடக்க வேண்டும். உங்களால முடியுமா ?

அவரவர் திறமை, வலிமையை பொறுத்து அவர்களின் சவால்களும் அமைகிறது.

உங்களாலும் முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். செயல் படத் தொடங்குங்கள்.

அப்படி செய், இப்படிச் செய் என்று சொன்னால் "வந்துட்டானுக, அறிவுரை சொல்ல " என்று அலுத்துக்  கொள்வோம்.

அனுமன் என்ற  ஒருவன் இப்படிச் செய்தான் என்று கூறுவதன்  மூலம்,நீங்களும்  முயன்றால் வெற்றி பெறலாம் என்று சொல்லாமல் சொல்கிறது இராமாயணம்.


அனுமனின் வழியில் மைநாகம் என்ற மலை ஒன்று குறிக்கிடுகிறது. அவனைத் தடுத்து, இங்கு இளைப்பாறி விட்டு போ  என்கிறது.

அது பற்றி அடுத்து வரும் சில தினங்களில் பார்ப்போம்.

முதல் பாடல்


உந்தாமுன் உலைந்து உயர்வேலை
     ஒளித்தகுன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும்
     தீர்வில்அன்பால்
வந்துஓங்கி ஆண்டு ஓர்சிறு
     மானிடவேடம்ஆகி
எந்தாய்இதுகேள்என இன்ன
     இசைத்ததுஅன்றே.

பொருள்

உந்தாமுன் = உந்தி வருவதற்குள்

உலைந்து  = அச்சம் கொண்டு

உயர் = உயர்ந்த

வேலை = கடலில்

ஒளித்த குன்றம் = ஒளிந்து இருந்த மலை

சிந்தாகுலம் உற்றது = சிந்தனையில் மயக்கம் உற்றது

பின்னரும் = பின்னால்

தீர்வில்அன்பால் = எல்லையற்ற அன்பால்

வந்துஓங்கி = அனுமனின் முன் வந்து ஓங்கி நின்று

ஆண்டு  = அங்கு

ஓர் சிறு = ஒரு சிறிய

மானிடவேடம்ஆகி = மானிட உரு கொண்டு

எந்தாய் = என் தந்தை போன்றவனே

இது கேள் என = இதைக் கேள் என்று

இன்ன இசைத்ததுஅன்றே = சொல்லத் தொடங்கியது

இந்திரனுக்கு பயந்து  கடலில் ஒளிந்து இருந்தது மைநாகம் என்ற அந்த மலை.

என்ன ஆயிற்று என்று மேலும் பார்ப்போம்.


நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்  


மானின் கண்கள் அழகானவை. பயந்த தன்மையை காட்டுபவை. மருண்ட பார்வை கொண்டவை.

அந்த மான், வலையில் சிக்கிக் கொண்டால், அதன் பார்வை எப்படி இருக்கும் ? மேலும் பயந்து, மேலும் மருட்சியை காட்டும் அல்லவா ?

பெண்களின் கண்கள் அந்த வலையில் அகப்பட்ட மானின் விழியைப் போல இருக்கிறது.

அந்த பார்வை எனும் வலையில் விழுந்தால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

அப்படிப்பட்ட வலையில் சிக்கிய என்னை கை விட்டு விடாதே - கருணாகரனே, கயிலை மலையின் தலைவா, மலைமகளின் தலைவனே என்று இறைவனை நோக்கி கசிந்து உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை

பாடல்

வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.


பொருள்

வலைத்தலை = வலையில் அகப்பட்ட

மான் அன்ன = மான் போன்ற

நோக்கியர் = பார்வை உடைய பெண்கள்

நோக்கின் வலையில்= பார்வை வலை (நோக்கின் வலை என்பது நல்ல சொற் பிரயோகம் )

பட்டு = அகப்பட்டு

மிலைத்து அலைந்தேனை  =  மயங்கி அலைந்தேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

 வெள் மதியின் = வெண் மதியின்

ஒற்றைக் கலைத் தலையாய் = பிறையை சூடிய தலைவனே

கருணாகரனே = கருணைக்கு இருப்பிடமாக இருப்பவனே

கயிலாயம் என்னும் மலைத் தலைவா = கைலாயம் என்ற மலைக்குத் தலைவனே

மலையாள் மணவாள = மலை மகளான உமாதேவியின் மணவாளனே

என் வாழ் முதலே = என் வாழ்க்கைக்கு முதலாக இருப்பவனே




Wednesday, April 9, 2014

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள்

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள் 


இளமையில் படிக்க வேண்டும் என்று சொல்லியாச்சு.

எப்படி படிக்க வேண்டும் என்றும் விளக்கியாகி விட்டது.

எதைப் படிக்க வேண்டும் ? அதைச் சொல்ல வேண்டும் அல்லவா ?

நாம் எதற்காக ஒரு விளக்கை வாங்குவோம்?

அது நல்ல வெளிச்சம்  தரும்.அந்த வெளிச்சத்தில் நாம் மற்ற பொருள்களைத்   தெளிவாக பார்க்கலாம் என்று தானே விளக்கை வாங்குகிறோம்.

இன்றைய நடை முறையில் சொல்வது என்றால், எதற்க்காக பல்பை, டியூப் லைட்டை வாங்குகிறோம் ?

அந்த விளக்கு வெளிச்சம் தராமால், மங்கலாக எரிந்து, அணைந்து அணைந்து எரிந்து கண்ணுக்கு எரிச்சல் ஊட்டும் என்றால் அதை வாங்குவோமா ? அடிக்கடி கெட்டுப் போய் , நமக்கு வேண்டிய நேரத்தில் வெளிச்சம் தராது என்றால் அதை வாங்குவோமா ?

அது போல, வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும், அற நூல்களை, நீதி நூல்களை, பொருள் தேடித் தரும் பயனுள்ள நூல்களை படிக்க வேண்டும். கண்ட குப்பைகளை படிக்கக் கூடாது.

பாடல்

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம்இன்(று) என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

பொருள் 

விளக்கு = விளக்கை

விலைகொடுத்துக் = பொருள் கொடுத்து

கோடல் = வாங்குதல்

விளக்குத் = அந்த விளக்கானது

துளக்கம்இன்(று) = குழப்பம் இன்றி

என்றனைத்தும்  = எப்போதும், அனைத்தையும்

தூக்கி விளக்கு = தெளிவாக விளங்கச் செய்யும்  என்று

மருள் படுவதாயின் =  மயக்கம்,குழப்பம் தருவதாக இருந்தால்

 மலைநாட = மலை நாட்டின் அரசனே

என்னை = எதற்கு

பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் = விலை கொடுத்து   யாராவது இருளை வாங்குவார்களா ?

இது படிப்புக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கு பயனில்லாதவற்றை பொருள் கொடுத்து  வாங்குவது மதியீனம்.

சிகரெட், மது, அளவுக்கு அதிகமான உணவு என்று இப்படி எத்தனையோ தேவையில்லாத , பயன்  இல்லாத,துன்பம் தரக் கூடிய பொருள்களை விலை கொடுத்து வாங்கி துன்பப் படுகிறோம்.

சிந்திப்போம்.



Monday, April 7, 2014

சுந்தர காண்டம் - சுவர்க்கமும் மோட்சமும்

சுந்தர காண்டம் - சுவர்க்கமும் மோட்சமும் 


சுவர்க்கம் வேறு, மோட்சம் வேறா ?

சொர்கத்திற்கு போனால் மோட்சம் அடைந்த மாதிரிதானே ? இல்லையா ?

 இல்லை.

சொர்க்கம் வேறு. வீடு பேறு என்பது வேறு.

சொர்க்கம் தாண்டி வீடு பேறு .

 இந்தக் கருத்தை கம்பர் சுந்தர காண்டத்தில் கொண்டு வந்து வைக்கிறார்.

அனுமன்,  மகேந்தர மலையில் இருந்து கிளம்பி விட்டான். அவன் தாவிய வேகத்தில் அந்த மகேந்திர மலை அப்படியே மத்து போல சுழன்றது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற்கடலை கடைந்த போது மேரு மலையை மத்தாக வைத்து கடைந்தார்களே, அது போல மகேந்திர மலை மத்துபோல சுழன்றது. அந்த சமயத்தில், புலன்களை வென்ற முனிவர்கள் சொர்கத்தை  அடைந்தார்கள்.செய்ய வேண்டிய கர்மங்களை முழுமையாக  முடிக்காததால்,  உடலின் மேல் கொண்ட பாசம் விடாததால், விண்ணுலகம் செல்வாரை ஒத்து  இருந்தார்கள்.


பாடல்


‘கடல்உறுமத்துஇது’ என்னக்
     கருவரை திரியும் காலை,
மிடல்உறுபுலன்கள் வென்ற
    மெய்த்தவர் விசும்பின் உற்றார்;
திடல்உறுகிரியில் தம்தம்
     செய்வினைமுற்றி, முற்றா
உடல்உறு பாசம்வீசாது,
     உம்பர்செல்வாரை ஒத்தார்.


பொருள்

‘கடல்உறுமத்துஇது’ = கடலில் உள்ள மத்து இது

என்னக் = என்று

கருவரை = கருமையான வரை. வரை என்றால் மலை. இங்கே மகேந்திர மலை

திரியும் காலை = சுழலும் வேளையில்

மிடல் உறு புலன்கள் = மிடல் என்றால்  வலிமையான.வலிமையான புலன்களை

 வென்ற = வென்ற

மெய்த்தவர் செய்த  = உண்மையான தவம் புரிந்த முனிவர்கள் 

விசும்பின் உற்றார் = விண்ணை அடைந்தவர்கள் 

திடல்உறு கிரியில் = மேடு பள்ளம் நிறைந்த மலையில்

தம்தம் = தாங்களுடைய

செய்வினை முற்றி = செய்கின்ற வினைகள் முடிந்து

முற்றா = இன்னும் முடியாத

உடல்உறு பாசம்வீசாது = உடலின் மேல் கொண்ட பாசம் விலகாது

உம்பர்செல்வாரை ஒத்தார் = விண்ணுலகம் செல்பவரை ஒத்து இருந்தார்கள்.

வினை முற்றியதால் சுவர்க்கம் போக முடிந்தது.

பாசம் விடாததால் - முக்தி, மோட்சம் அடைய  முடியவில்லை.

நல்ல வினைகள் காரணமாக சொர்க்க போகம் கிடைக்கும்.

பற்றற்று இருந்தால் முக்தி கிடைக்கும்.


சொர்க்கம் தாண்டி ஒரு இடம் இருக்கிறது. அது தான் வீடு பேறு . முக்தி. மோட்சம். அதை வாலி வதையிலும் கம்பன் சொல்லுவன். 

"வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்" 

சொர்கத்தையும் தாண்டி உள்ள உலகம். மோட்சம் அடைந்தான் என்று சொல்லாமல்  சொல்கிறான்.



தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்


Sunday, April 6, 2014

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு


முந்தைய பாடலில், இளமையில் கற்க வேண்டும் என்று பார்த்தோம்.

எப்படி கற்க வேண்டும் ?

அதை இந்தப் பாடல் விளக்குகிறது.

கற்றவர்கள் முன்னால் ஒன்றைச் சொல்லும் போது நமக்கு ஒரு பயமும், தயக்கமும் (சோர்வு) வரும் அல்லவா ? அந்த சோர்வு வராமல் இருக்க, கற்கும் போது நாம் இது வரை எதுவும் கற்கவில்லை என்று உணர்ந்து,  இதுவரை கற்காமல் விட்ட காலத்திற்காக வருந்தி, ஆழமாக சிந்தித்து, கடினமான முயற்சியுடன், கற்க வேண்டும். கற்கும் போது "இது   தான் எனக்குத் தெரியுமே " என்ற இறுமாப்போடு படிக்கக் கூடாது.

பாடல்

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.


பொருள் 


சொற்றொறும் = சொல் தோறும். ஒவ்வொரு முறை சொல்லும் போதும்

சோர்வு படுதலால் = சோர்வு உண்டாவதால். சரியாக சொன்னோமா, முழுவதுமாகச் சொன்னோமா, விளங்கும் படி சொன்னோமா என்ற சோர்வு

சோர்வின்றிக் = களைப்பு இன்றி

கற்றொறும் = கற்கும் ஒவ்வொரு சமயத்திலும்

கல்லாதேன் = நான் இன்னும் முழுமையாக கற்காதவன்

என்று = என்று

வழியிரங்கி = அதற்காக இரக்கப் பட்டு

உற்றொன்று = உள்ளத்தில் ஒன்றே ஒன்றை (concentration )

சிந்தித்து = சிந்தித்து

உழன்று = சிரமப்பட்டு

ஒன்(று) அறியுமேல் = ஒன்றை அறிய வேண்டும். எப்படி என்றால்

கற்றொறுந்தான்  = கற்கும் தொறும்

கல்லாத வாறு = கல்லாதவன் எப்படி கற்பானோ அப்படி கற்க வேண்டும்.

அடக்கம் வேண்டும். நாம் எல்லாம் அறிந்தவர்கள், இனி அறிய என்ன இருக்கிறது என்று  நினைக்காமல், நாம் ஒன்றும் அறியாதவர்கள் என்ற அடக்க உணர்வோடு கற்க வேண்டும்.



Saturday, April 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை 


விலங்குகளை வலை வைத்துப் பிடிப்பார்கள். வலையில் மாட்டிக் கொண்ட விலங்குகள்  அதில் இருந்து விடுபட துள்ளும், தவிக்கும், தாவும் என்னென்னவோ செய்யும். அது எவ்வளவு முயற்சி செய்கிறதோ, அந்த அளவு மேலும் வலையில் சிக்கிக் கொள்ளும். வலை வைத்தவன் மனது வைத்தால் ஒழிய அந்த விலங்கு வலையில் இருந்து விடு பட முடியாது.

அது போல

இந்த உடல் என்ற  வலையில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உடலில் உள்ள பொறிகள் நாளும் பலப் பல அனுபவங்கள் மூலம் நான் என்ற எண்ணத்தை மேலும் மேலும் வலுப்  படுத்துகிறது. பின், நான் என்ற அகம்பாவத்தில் இருந்து வெளி வர முடியாமல் தவிக்கிறோம்.

அதைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் , ஒரு  கணம் கூட இந்த உடம்பு என்ற வலிமையான வலை தரும் துயரை பொறுக்க முடியாது என்கிறார்.

பாடல்


தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.


பொருள் 

தனித் துணை நீ நிற்க =  தனிச் சிறப்பான துணையான நீ இருக்கும் போது


யான் = நான்

தருக்கி = தலைக் கனம் கொண்டு

தலையால் நடந்த = காலால் நடக்காமல் தலையால் நடந்த

வினைத் துணையேனை = வினைகளையே துணையாகக் கொண்ட  என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வினையேனுடைய = வினை உடையவனான என்

மனத் துணையே = மனதிற்கு துனையாணவனே

என் தன் வாழ் முதலே = என் வாழ்வின் முதலே. (போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பதும் அவர் வாக்கே )

எனக்கு = எனக்கு

எய்ப்பில்= நலிந்த நேரத்தில்

வைப்பே = (கிடைத்த ) சொத்தே

தினைத்துணையேனும் பொறேன் = சிறிது நேரம் கூட பொறுக்க மாட்டேன்

துயர் = துயர் தரும்

ஆக்கையின் = உடம்பின்

திண்  = வலிமையான

வலையே = வலையே 

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம்

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம் 


பதினெண் கீழ் கணக்கு நூல்களில் பழமொழி 400 என்ற நூல் உண்டு.

பழ மொழி என்பது அனுபவங்களின் சாரம். பல பேர் அனுபவித்து,  அதை ஒரு விதி போல சொல்லி, சொல்லி நாளடைவில் அது ஒரு நிரந்தர வாக்கியமாக மாறி விடுகிறது.

பழ மொழிகள் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தரும் அனுபவ பாடங்கள். யாரோ பட்டு , உணர்ந்து நமக்குச் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

அப்படிப் பட்ட பழ மொழிகளை கடைசி வரியாக கொண்டு, அந்த பழ மொழி சொல்லும் செய்தியை முன் மூன்று அடிகளில் எடுத்து இயம்புவது பழமொழி 400 என்ற இந்த நூல்.

அதில் இருந்து சில பாடல்கள்....

மரம் போக்கி கூலி கொண்டார் இல்லை என்பது பழ மொழி.

 இதற்கு என்ன அர்த்தம் ?  இது என்ன சொல்ல வருகிறது ?


எவ்வளவோ படிக்க வேண்டியது இருக்கிறது. எங்க நேரம் இருக்கு, அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று நாளும் நாளும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அப்புறம் எப்போது வருமோ தெரியாது.

இளமையில் படித்து விட வேண்டும். பின்னால் படித்துக் கொள்வோம் என்று எதையும் தள்ளிப் போடக் கூடாது.

நெடுஞ்சாலைகளில் போகும் போது சில இடங்களில் சுங்கம் தீர்வை (Excise  Duty , entry tax , toll charges ) போன்றவை  இருக்கும்.வண்டி அந்த இடத்தை கடக்கும் முன் அவற்றை வசூலித்து விட வேண்டும். வண்டியைப் போக விட்டு பின் வசூலித்துக் கொள்ளலாம் என்றால் நடக்காது.

அது போல, படகில் ஏறும்போதே படகு சவாரிக்கான கூலியை வாங்கிவிட வேண்டும். அக்கரையில் கொண்டு சேர்த்தப் பின் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அக்கறை இல்லாமல் போய் விடுவார்கள் பயணிகள்.

காலாகாலத்தில் படித்து விட வேண்டும்.

பாடல்

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

பொருள் 

ஆற்றும் = வழிப் படுத்தும்

இளமைக்கண் = இளமை காலத்தில்

கற்கலான் = கற்காமல்

மூப்பின்கண் = வயதான காலத்தில்

போற்றும் = படித்துக் கொளல்லாம்

எனவும் புணருமோ = என்று நினைக்கலாமா?

ஆற்றச் = வழியில்

சுரம்போக்கி = செல்ல விட்டு

உல்கு கொண்டார் = தீர்வை (toll , excise ) கொண்டவர்கள்

இல்லையே இல்லை = இல்லவே இல்லை

மரம்போக்கிக் = இங்கே மரம் என்றது மரத்தால் செய்யப்பட்ட படகை. படகில் பயணிகளை அக்கரை சேர்த்த பின் 

கூலிகொண் டார். = கூலி பெற்றவர் யாரும் இல்லை.

தள்ளிப் போடாமல் படியுங்கள்.


இந்த சமுதாயம் படிப்பிற்கு எவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறது என்று நினைக்கும்  போது பெருமை படாமல் இருக்க முடியவில்லை. 


Friday, April 4, 2014

திருக்குறள் - சொல்லின் கண் சோர்வு

திருக்குறள் - சொல்லின் கண் சோர்வு 


ஒருவனுக்கு ஆக்கமும், கேடும் எப்படி வருகிறது ?

அவன் பேசும் பேச்சால் வருகிறது.

யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், பேசுவது சரியா தவறா என்றெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும்.

ஆக்கமும் கேடும் சொல்லின் சோர்வால் வரும் என்பதால் அதை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும்.


பாடல்

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

பொருள்

ஆக்கமுங் = ஆக்கமும்

கேடும் = கேடும்

அதனால் வருதலால் = அதனால் வருவதால்

காத்தோம்பல் = காத்து ஓம்புதல் வேண்டும்

சொல்லின்கட் சோர்வு. = சொல்லில் ஏற்படும் சோர்வு

மேலோட்டமான பொருள் இதுதான். 

சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் பொருள் விரியும். 


முதலாவது, 

நல்ல சொற்களால் ஆக்கம் வரும் 

தீய சொற்களால் தீமை வரும். 

எனவே நல்லதைச் சொல்லி, தீயதை விலக்க வேண்டும். 


இரண்டாவது, 

சோர்வு எப்போது வரும் ? ஒரு வேலையை அளவுக்கு அதிகமாக செய்தால் சோர்வு வரும். அல்லது செய்யத் தெரியாமல் செய்தால் சோர்வு வரும்.  எனவே, அதிகம் பேசக் கூடாது, பேசத் தெரியாமல் பேசக் கூடாது. 

மூன்றாவது, 

சோர்வு என்ற சொல்லுக்கு மறதி என்று ஒரு பொருள் உண்டு.  முன்பு என்ன சொன்னோம்  என்று மறக்காமல் பேச வேண்டும். இல்லை என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏளனத்திற்கு உள்ளாக நேரிடும்.

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து 
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே

என்பது பிரபந்தம். (பெரியாழ்வார் பாசுரம்)




நான்காவது,

சோர்வு என்ற சொல்லுக்கு, சலிப்பு என்று பொருள் உண்டு.  அதிகம் பேசினால் பேசுபவருக்கு மட்டும் அல்ல கேட்பவருக்கும் சலிப்பு வரும். 

ஐந்தாவது, 



ஓம்புதல் என்றால் என்ன ? ஓம்புதல் என்ற சொல்லுக்கு காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல் என்று பல அர்த்தங்கள் உண்டு. 

சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். ஒரு சொல்லை சொல்வதற்கு முன்னால் அது சரியானதுதானா என்று சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். மிக ஆழமான வார்த்தை. 

வெற்றியும் தோல்வியும் நாம் உபயோகப் படுத்தும் சொற்களில் உள்ளது. 

வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச பழக வேண்டும். 

அது வெற்றிக்கு வழி வகுக்கும். 


Thursday, April 3, 2014

கம்ப இராமாயணம் - சிறிது இது என்று இகழாதே

கம்ப இராமாயணம் - சிறிது இது என்று இகழாதே 


சிலர் இருக்கிறார்கள் - என்ன கேட்டாலும் "அது ஒன்றும் பிரமாதமில்லை, எனக்கு அவனைத் தெரியும், எனக்கு இவனைத் தெரியும், நானாச்சு உனக்கு உதவி செய்ய, இறங்கு இதில் " என்று நம்மை இழுத்து விட்டு விடுவார்கள். பின் வெளியே வரத் தெரியாமல் கிடந்து தள்ளாடுவோம்.

இப்படி உசுபேத்தி உசுபேத்தி விட்டே உடம்பை இரணகளமாய் ஆக்கி விடுவார்கள்.

நல்ல நண்பர்கள் நமக்கு தகுந்த புத்திமதி சொல்லி, நாம் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வழி சொல்வார்கள்.

அனுமன், கடலைத் தாண்டுகிறான். செல்லும் வழியில் தேவர்கள் அவனுக்கு அறிவுரை தந்தார்கள்....

"அகத்தியர் குடித்த கடல்தானே என்று அலட்சியமாக இருந்து விடாதே. எச்சரிக்கையோடு இரு." என்று அவனுக்கு அறிவுரை பகர்ந்தனர்.

அனுமனும் அதை கேட்டுக் கொண்டான்.  

பாடல்

'குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது; விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர!
"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; நீ சேறி' என்னா,
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான், பொருப்பை ஒப்பான். 

பொருள்

'குறுமுனி = குள்ள முனிவர் , அகத்தியர்

குடித்த வேலை = வேலை என்றால் கடல். குடித்த கடல்

குப்புறம் கொள்கைத்து = பாய்ந்து கடக்க வேண்டியது

ஆதல் = ஆதல்

வெறுவிது;  = மட்திக்கத் தகாதது

விசயம் வைகும்  = வெற்றி குடியிருக்கும் 

விலங்கல்-தோள் = மலை போன்ற தோள்களில் 

அலங்கல் வீர! = மாலை அணிந்த வீரனே

"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; = இந்த கடல் என் ஆற்றலுக்கு சிறிது என்று  அதை இகழாமல்

 நீ சேறி'  = நீ செல்வாய்

என்னா, = என்று

உறு வலித் துணைவர் சொன்னார்;  = வலிமை உடைய நண்பர்கள் சொன்னார்கள்

ஒருப்பட்டான், = அதை சரி என்று ஒப்புக் கொண்டான்

பொருப்பை ஒப்பான். = மலையை போன்ற ஆற்றல் கொண்ட அனுமன்

நண்பர்கள் என்றால் அப்படி இருக்க வேண்டும். 

அது ஒரு புறம் இருக்க, அப்படிப்பட்ட நண்பர்களை நாம் தேர்ந்தெடுத்து கைக் கொள்ள வேண்டும். 

நாம் துன்பத்தில் இருக்கும் போது , எதையாவது சொல்லி நம்மை மேலும் துன்பத்தில் இழுத்து  விடும் நண்பர்கள் பற்றி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


Wednesday, April 2, 2014

திருக்குறள் - அறிவும் நட்பும்

திருக்குறள் - அறிவும் நட்பும் 


அறிவு என்ன செய்யும் ?

கணக்குப் போடுமா ? கவிதை எழுதுமா ?  பெரிய பெரிய காரியங்களைச் செய்யுமா ? ஒருவன் அறிவுடையவன் என்றால் அவன் என்னென்ன காரியங்கள் செய்வான் ?

அது தெரிந்தால் நாமும் அதுபோல செய்யலாம் ....

வள்ளுவர் சொல்லுகிறார் - நல்லவர்களை , உயர்ந்தவர்களை ஒன்றி இருக்கும் அறிவு. அப்படி சிறந்தவர்களை நட்பாகக் கொண்ட பின் , அதை விட்டு விலகாமல் இருக்கும்.

பாடல்

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் 
கூம்பலு மில்ல தறிவு.

 சீர் பிரித்த பின்

உலகம் தழுவியது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் அல்ல அறிவு 


பொருள்

உலகம் = உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது நிகண்டு. உலகத்தில் உள்ள உயர்ந்தவர்களை, சிறந்தவர்களை, அறிவுள்ளவர்களை

தழுவியது = அவர்களோடு ஒன்றாக இருப்பது

ஒட்பம் = கூரிய அறிவு

மலர்தலும் = அப்படி நட்பு கொண்ட பின்

கூம்பலும் = அந்த  நட்பை விட்டு வில்குதலும்

அல்ல = செய்யாதது

அறிவு = அறிவு

அறிவுள்ளவன் எப்போதும் உயர்ந்தவர்களை சேர்ந்து இருப்பான். அப்படி சேர்ந்த பின் அவர்களை விட்டு விலக மாட்டான்.

நீரில் பூக்கும் தாமரை, அல்லி மலர்கள் ஒரு சமயம் பூக்கும், மறு சமயம் கூம்பும். மீண்டும் மலரும், பின்  வாடும்.

நல்ல நட்பு என்பது எப்போதும் மலர்ந்து இருக்கும்.

நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் இடுங்கள்.

அவர்களோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது ?  சில சமயம் நன்றாக இருக்கிறது...மற்ற சமயங்களில் கொஞ்சம் இழு பரியாக இருக்கிறதா ?

அப்படி என்றால் அது அறிவின்பாற்பட்ட செயல் அல்ல.

தேர்ந்தெடுங்கள்....யாரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று.


அது அறிவின் முதற்படி.


நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி

நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி 


நம் புலன்கள்  தானே, நம்மால் கட்டுப் படுத்த முடியாதா என்று நாம் நினைக்கலாம்.  ஒன்றை கட்டுப் படுத்தினால் இன்னௌன்று வேறு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடும்.  ஒரு ஆசை போனால் இன்னொரு ஆசை வரும்.

பேராசை எனும் பிணியில் பிணிப்பட்டு என்பார் அருணகிரி.

அவை நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. நம்மோடு எப்போதும் போர் தொடுக்கின்றன.

அது வேண்டும்,  இது வேண்டும், என்று சதா சர்வ காலமும் நம்மை நச்சரித்துக் கொண்டே இருக்கின்றன.  அவை நம்மை படுத்தும் பாட்டை நாம் அறிந்து கொள்ளாவிட்டால் அவை இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி தளர்ந்து போவோம்.

என்னோடு சண்டை பிடிக்கும் புலன் வயப்பட்டு, உன்னை பிரிந்து அஞ்சி நின்றேன். ஒரு புறம் சண்டை போடும் புலன்கள். இன்னொரு புறம் உன் துணை இல்லாத தனிமை. இதற்கு நடுவில், இந்த அழகான பெண்கள். அவர்கள் மேல் உள்ள பற்றையும் விட முடியவில்லை.   சுடர் போல் ஒளி விடுபவனே, சுடுகாட்டுக்கு அரசனே, தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே, அணுக முடியாதவனே, என் தனிமையை நீக்கும் துனையாணவனே, என்னை விட்டு விடாதே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.

கொஞ்சம் சிக்கலான பாடல். சீர் பிரிப்போம்

அடர் புலனால் நின்னை பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே 
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.



பொருள்


அடர் புலனால் = அடுத்து வருகின்ற புலன்களால்

நின்னை பிரிந்து = உன்னை பிரிந்து (புலன்கள் பின்னால் போய் )

அஞ்சி = அச்சப் பட்டு

அம் சொல் = அழகிய சொல்

நல்லார் = நல்லவர்கள் (நல்ல பெண்கள் )

அவர் தம் = அவர்களின்

விடர் விடலேனை = தொடர்பை விட முடியாதவனை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விரிந்தே எரியும் = பரந்து சுடர் விட்டு எரியும்

சுடர் அனையாய் = சுடர் போன்றவனே

சுடுகாட்டு அரசே = சுடு காட்டு அரசே

தொழும்பர்க்கு அமுதே = தொழும் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனே 

தொடர்வு அரியாய் = தொடர முடியாதவனே, நெருங்க முடியாதவனே

தமியேன் = அடியவனான என்

தனி நீக்கும் = தனிமையை நீக்கும்

தனித் துணையே = ஒப்பற்ற துணையே
.
அவனல்லால் ஒரு துணை இல்லை. 


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பார் அபிராமி பட்டர். 

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.


என்பார் அருணகிரி நாதர் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
  
என்பது நாவுக்கரசர் வாக்கு 

நீங்கள், உங்கள் துணை என்று எதை அல்லது யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? 

சேர்த்து வைத்த செல்வமும், கணவன் / மனைவி, பிள்ளைகள் எது துணை ?

உன் பற்று அல்லால் ஒரு பற்று அல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே என்று ஓலமிடுகிறார்  பட்டினத்தார்.