Wednesday, October 31, 2012

அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள்


அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள் 


சந்தையில் புதிதாக ஒரு பொருள் வந்தால் அதை வாங்க ஆசைப் படுகிறோம். புதிய கை தொலைபேசி, கணணி, சமையலறை சாதனம், புதிய புடவை, புதிய வண்டி என்று பொருள்கள் மேல் ஆசைப் படுகிறோம். 

ஆசைப் பட்டு வாங்கிய பொருள்கள் நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றின் பலனை அனுபவிக்கிறோம். சந்தோஷமாய் இருக்கிறது. இது இல்லாம எத்தனை நாள் கஷ்டப் பட்டேன் என்று நிம்மதி பெரு மூச்சு விடுகிறோம். 

நாள் ஆக ஆக பொருள் பழையதாகிறது. அடிக்கடி பழுதாகிறது. அதைவிட சிறந்த பொருள் சந்தையில் வருகிறது. நாம் பெருமையாய் நினைத்த பொருள் இன்று நன்றாக இல்லை. சில சமயம் அந்தநாள் எரிச்சல் வருகிறது. " இந்த சனியனை முதலில் தலைய சுத்தி விட்டு எரியனும்...இதை கட்டி யாரு மேய்கிறது ..." என்று அங்கலாய்க்கிறோம்.

பின் கொஞ்சம் தெளிவு வருகிறது. எல்லா சாமானும் இப்படித்தான். வாங்குன கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கும். அப்புறம், இப்படித்தான். சரி சரின்னு போக வேண்டியது தான் என்று ஒரு ஞானம் பிறக்கிறது. 

அபிராமி, அந்த பொருளாகவும், அந்த பொருள் தரும் சுகமாகவும், அது சுகமா அல்லது சுமையா என்ற குழப்பமாகவும், அந்த குழப்பத்தில் இருந்து வரும் அறிவாகவும் இருக்கிறாள், இதை எல்லாம் அறிந்து கொள்ளும் அருளையும் அவள் எனக்குத் தந்தாள். 

முதலில் பொருட் செல்வம். பின்னர் அருட் செல்வம் ...இரண்டு செல்வத்தையும் தருபவள் அபிராமி.  

அவள் என் மனத்தில் வஞ்சமாகிய இருள் ஏதும் இல்லாமல் அத்தனையும் ஒளி வெள்ளமாகச் செய்தாள். 

அவளின் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்

Tuesday, October 30, 2012

திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம்


திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம் 


மாணவன் எப்படி படிக்க வேண்டும் ? ஒரு பாடத்தை ஒரு ஆசிரியரிடம் மட்டும் கேட்டுத் தெரிந்தால் போதாது. அந்த பாடத்தைப் பற்றி நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒரு புத்தகம் மட்டும் படித்தால், ஒரே பாடத்தை இரண்டு மூணு புத்தகங்களில் படிக்க வேண்டும், துணை பாடல் நூல் (நோட்ஸ் ) இருந்தால் அதை பார்க்க வேண்டும். இன்டெர் நெட் இருந்தால், அதில் அந்த பாட சமந்தமாய் என்ன இருக்கிறது என்று தேட வேண்டும். இப்படி பல வழிகளில் அறிவை பெற்ற பின், கர்வம் இல்லாமல், தான் பெற்ற அறிவால் மற்றவர்களுக்கு இதமான சுகம் தர வேண்டும்...

இதற்கு ஒரு உதாரணம் தருகிறார் பரஞ்சோதியார்...திரு விளையாடார் புராணத்தில்...

தென்றல் காற்று இருக்கிறதே...அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும். அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில் உள்ள குளத்தில் குதித்து கொஞ்சம் குளிர்ச்சியை எடுத்துக் கொள்ளும். அந்த குளத்தில் உள்ள தாமரை மலரை தொட்டு தடவி அதன் மணத்தையும் தேனையும் எடுத்துக் கொள்ளும். பின் அங்கிருத்து கிளம்பிப் போய் மல்லிகை, இருவாட்சி, முல்லை போன்ற மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும்...இப்படி குளிர்ச்சியையும், நறு மணத்தையும், தேனையும் சுமந்து கொண்டு இதமாக வீசும் தென்றல் காற்று ... பல பல இடங்களில் சென்று பலவிதமான அறிவை பெரும் மாணவனை போல் இருக்கிறதாம்.....

பாடல்

Monday, October 29, 2012

குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


புதிதாய் திருமணம் முடித்து கணவனோடு அவன் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். வீடு ஒண்ணும் பெரியது அல்ல. விறகு அடுப்பு. அவன் வெளிய நிமித்தம் வெளியே போய் இருக்கிறான். மதியம் உணவுக்கு வீட்டிற்கு வருவான். புது மனைவி அல்லவா.

அவன் வருவதற்குள் எப்படியாவது உணவு சமைத்து வைத்து விட வேண்டும் என்று பர பர வென்று வேலை செய்கிறாள். அவளுக்கு சமைத்து அவ்வளவா பழக்கம் இல்லை. இருந்தாலும் சுவையான உணவை சமைத்து அவனுக்கு ருசியாக உணவளிக்க வேண்டும் ஆசைப் படுகிறாள். 

சாதம் ஆச்சு. என்ன பண்ணலாம் ?

தயிர் சாதம் பண்ணலாமா ?

கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர் விட்டு அவளுடைய காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள்.

பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள்.  தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு...பழக்கம் வேறு இல்லை. அவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல். 

விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. 

அவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று புளிக் குழம்பு செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள். 

அவன் வந்து விட்டான். அவனுக்கு பரிமாறுகிறாள். அவன் ருசித்து சாப்பிடுகிறான். அவன் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து அவளுக்கும் சந்தோஷம்.

அந்த குறுந்தொகைப் பாடல் 

Sunday, October 28, 2012

கம்ப இராமாயணம் - இக்கட்டான கட்டங்கள்


கம்ப இராமாயணம் - இக்கட்டான கட்டங்கள் 


இராம காதையில் பல இக்கட்டான கட்டங்கள் உள்ளன. காப்பிய முடிச்சுகள். அந்த இடங்களில் , சில கதா பாத்திரங்கள் எப்படி நடந்து கொள்ளும் விதம் காவியப் போக்கையே மாற்றி விடும் அளவுக்கு கதை ஓட்டத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

இந்த இக்கட்டான இடங்களை கம்பன் எப்படி கையாளுகிறான் என்பதை தொகுத்தால் அது ஒரு சுவாரசியமான புத்தகமாக உருவெடுக்கும்.

கைகேயி மனம் மாறும் இடம், இராமன் கானகம் செல்ல ஒத்துக் கொள்ளும் இடம், இராமன் பரதனின் வேண்டுகோளை புறக்கணிக்கும் இடம், வாலியை மறைந்து நின்று கொல்லும் இடம், சீதை லக்ஷ்மணனை இராமனை தேடிச் சொல்ல போக பணிக்கும் இடம், சூரபனகை மூக்கு அறுபடும் இடம், விபீடணன் கட்சி மாறும் இடம் என்று பல தர்ம சங்கடமான இடம். 

அதில் விபீடணன் இராவணனை விட்டு செல்லும் நிகழ்வுகளைப் பார்ப்போம். 

விபீடணன் செய்தது சரியா ? 

இராவணன் செய்த அத்தனை குற்றங்களுக்கும் துணை போனவன் விபீடணன். அவன் சீதையை தூக்கி வந்த போது ஒன்றும் சொல்லவில்லை. இராவணின் செல்வத்தை, செல்வாக்கை அனுபவித்து வந்தவன் அவன். 

ஆபத்து என்று வந்த போது இராவணனுக்கு அறிவுரை சொல்லத் தொடங்குகிறான். முதலிலேயே சொல்லி திருத்தி இருக்க வேண்டாமா ? எல்லாம் நடக்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு , கடைசியில் அறிவுரை சொல்கிறான். அறிவுரை சொல்லும் நேரம் அல்ல அது. 

இராவணன் கேட்கவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் விபீடணன். அண்ணனுக்காக சண்டை இட்டு இருக்க வேண்டாமா ? நல்லது சொன்னேன், நீ கேட்கவில்லை, நான் இராமனிடம் போகிறேன் என்று கிளம்பி விட்டான். 

திருக்குறள் - தீயா வேலை செய்யணும்


திருக்குறள் - தீயா வேலை செய்யணும்


எப்படி வேலை செய்யணும் என்பதற்கு வள்ளுவர் கொஞ்சம் டிப்ஸ் தருகிறார். 

அதில் முதலாவது. 

ஒரு வேலை செய்யும் முன்னால் அதோடு கூட வேற என்ன வேலை எல்லாம் சேர்த்து செய்யலாம் என்று சிந்தித்து எல்லாவற்றையும் ஒன்றாக செய்து முடிக்க வேண்டும் என்கிறார்.

எப்படி ?

இப்ப ஒரு வெளியூருக்கு வேலை நிமித்தமாய் போவதாய் வைத்துக் கொள்ளுவோம்..அப்படியே அந்த ஊரில் உள்ள நம்ம நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து விட்டு வரலாம், அங்கே உள்ள நல்ல கோவில் அல்லது சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு வரலாம், அந்த ஊரில் ஏதாவது சிறப்பான பொருள் அல்லது மலிவான பொருள் இருந்தால் அதை வாங்கி வரலாம். இப்படி, அலுவலக வேலையோடு இன்னும் ஓரிரண்டு வேலைகளை சேர்த்து செய்வது உத்தமம். 

அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்போது வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரலாம். 

எப்போதும் ஒரு வேலைய மட்டும் செய்யக் கூடாது...ஒரு வேலை கூட ஒண்ணு ரெண்டை சேர்த்து செய்ய வேண்டும் என்கிறார். 

எப்படி ஒரு யானையை வைத்து இன்னொரு யானையை பிடிப்பார்களோ அது மாதிரி...ஒரு வேலையின் மூலம் இன்னொரு வேலையும் செய்து முடிக்க வேண்டும்....

பாடல்

அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி, இந்த பிறவி வஞ்சம்  நிறைந்ததாய் இருக்கிறது. முதலில் நான் வஞ்சகன். நினைப்பது ஒன்று செய்வது ஒன்றாய் இருக்கிறது என் நிலை. என் சுற்றி உள்ளவர்களும் அப்படியே. 

வஞ்சம் நிறைந்த இந்த பிறவி முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீ அந்த பிறவி தொடரை உடைத்தாய். 

கல்லைப் போன்ற என் கடின நெஞ்சை நீ நெகிழ வைத்தாய். உருக வைத்தாய். உன் அன்பை கண்டு என் உள்ளம் உருகுகிறது.

உன் தாமரை போன்ற பாதங்களை என் தலையின் மேல் சூடும் பாக்கியத்தை நீ தந்தாய். 

என் மனத்தில் எத்தனையோ அழுக்குகள் குவிந்து கிடக்கிறது. அதை கொஞ்சம் தண்ணி விட்டு கழுவ முடியாது என்பதால் உன் அருளாகிய வெள்ளத்தால் அத்தனை அழுக்கையும் அடித்துக்கொண்டு போக வைத்தாய்.

உன் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்

Friday, October 26, 2012

அபிராமி அந்தாதி - இருவர் அறிந்த இரகசியம்


அபிராமி அந்தாதி - இருவர் அறிந்த இரகசியம்


எனக்கு அவள் மேல் தீராத காதல். 

அவள் என் மனம் எல்லாம் நிறைந்து நிற்கிறாள். எந்நேரமும் அவள் நினைவு தான். வேறு ஒருவரை பற்றியும் சிந்தனை இல்லை. 

என் மனதில் தான் அவள் இருக்கிறாள். அவள் மனதில் நான் இருக்கிறேனா என்று தெரியாது. ஒரு வேளை இருக்கலாம். 

இதை அவளிடம் சொல்லவில்லை. அவள் எங்கே , நான் எங்கே. எப்படி சொல்வது. ஒரு நாள் அவளோட அண்ணன் விசாரித்தான்..."ஆம், உன் தங்கையை நான் நேசிக்கிறேன்...ஆனால் அவளிடம் கூட இதை சொல்லவில்லை " என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு போய் விட்டான்.

கொஞ்ச நாள் கழித்து அவளுக்கு திருமணம் ஆகி விட்டது.  ஒரு நாள் அவள் கணவனிடம் போய் " நான் உன் மனைவியை நேசிக்கிறேன்" என்று சொன்னேன். அவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

திருமணம் ஆன பெண்ணை நேசிக்கக் கூடாது என்று யார் சொன்னது ?

நாயகன் நாயகி பாவம் என்று கேள்வி பட்டு இருக்கிறோம். இறைவனை நாயகனகாவும் தன்னை நாயகியாகவும் வரித்து பல ஆண் பக்தர்கள் பாடல் புனைந்து இருக்கிறார்கள். 

ஆனால் இறைவியை காதலியாகவோ, துணைவியாகவோ யாரும் பாடிய மாதிரி தெரியவில்லை. 

அது இலக்கண இலக்கிய வரம்புக்குள் வராத ஒன்றாக இருக்கலாம். 

அபிராமி அந்தாதியின் பாடல்களைப் படிக்கும்போது எனக்கு காதலியின் அதீத காதல் கொண்ட ஒரு காதலன் அதை சொல்ல முடியாமல் தவிக்கும் பாடல்கள் போலவே தோன்றும்.

இது சரியா தவறா என்று தெரியவில்லை. எனக்கு இப்படி தோன்றுகிறது.

பாடல் 

கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்

கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்

தாமரை மலர் பார்த்து இருப்பீர்கள் தானே ? அது எப்படி இருக்கும் ? மெல்லிய சிவப்பு, மென்மையான மலர் இதழ்கள், பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி தரும் ஒரு தோற்றம், காற்றில் அது அசையும் போது ஒரு சிலிர்ப்பு, நீரின் மேலேயே இருப்பதால் ஒரு ஜில்லிப்பு....

இது எல்லாம் தாமரை மலருக்கு எப்படி வந்தது தெரியுமா ?

கைகேயின் பாதம் அந்த மாதிரி இருந்ததாம். 

அந்த தாமரை மலர் தன் தண்டு என்னும் ஒற்றை காலில் தவம் இருந்ததாம், கைகேயின் பாதம் போல் தானும் ஆகவேண்டி.  

இராமனுக்கு முடி சூட்ட முடிவு ஆகிவிட்டது. ஊரெலாம் ஒரே கோலாகலம். கைகேயி படுக்கையில் படுத்து இருக்கிறாள். கூனி வருகிறாள். 

கைகேயின் பாதம் தொட்டு எழுப்புகிறாள் கூனி


பாடல்

Thursday, October 25, 2012

கம்ப இராமாயணம் - சீதையின் கானகப் பயணம்


கம்ப இராமாயணம் - சீதையின் கானகப் பயணம்

அது ஒரு jungle resort . நீங்கள் உங்கள் மனம் கவர்ந்தவளோடு வந்து இருக்கிறீர்கள். காலையில், இருவரும் சிற்றுண்டி உண்டு விட்டு, அப்படியே ஒரு நடை போகலாம் என்று கிளம்புகிறீர்கள். 

நீங்களும், அவளும் மட்டும். யாரும் இல்லாத கானகம். அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டே வருகிறாள். அவள் குரலைத் தவிர வேறு வேறு யார் குரலும் அக்கம் பக்கத்தில் இல்லை.   

"அட டா, எவ்வளவு இனிமையானவள் இவள். கண்ணு என்ன ஒரு அழகு. அவள் குரல் அதை விட அழகு" என்று அவளின் அழகை ரசிக்கிறீர்கள்.

ஈரித்த அடர்ந்த கானகம். ஒரு பக்கம் மூங்கில் நீண்டு வளர்ந்து இருக்கிறது. அதில் வண்டுகள் இட்ட துளையில் காற்று நுழைந்து இனிய புல்லாங்குழல் இசை பிறக்கிறது. உங்களவளின் குரல், அப்படி புல்லாங்குழலில்  இருந்து பிறக்கும் இசையும், நரம்புகளை கட்டி இசைக்கும் யாழ் போன்ற கருவிகளின் இசையும் போல் இனிமையாக இருக்கிறது.

அவளின் சமீபம் தேனைப் போல, சர்கரை பாகு போல் தித்திக்கிறது  உங்களுக்கு. அங்கே மரக் கிளைகளில் கிளிகள் கீச் கீச்சென்று சப்த்தம் உண்டாக்குகின்றன. அந்த கிளி மொழி உங்கள் காதலியின்  பேச்சு போல் இருக்கிறது. தூரத்தில், கிராமத்தில் உழவர்கள் தங்கள் வயலில் பூத்து இருந்த குவளை மலர்களை பறித்து வரப்போரம் போடுகிறார்கள். அந்த குவளை மலர், அவளின் கண் போல தோன்றுகிறது உங்களுக்கு.  

அப்படித்தான் இராமனுக்கு தோன்றியது, சீதையுடன் கானகம் போனபோது.
 
பாடல் 

Wednesday, October 24, 2012

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

நீங்கள் பைத்தியம் ஆனால் அதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்வீர்களா ? கிறுக்கு பிடிபதென்ன அவ்வளவு சிறந்த விஷயமா ?

உங்களை யாராவது மூச்சு முட்ட வெள்ளத்திற்குள் அமுக்கினால், நீங்கள் அவர்களுக்கு நன்றி சொல்வீர்களா ?

உங்களின் உறுதியான, தைரியாமான, கல்லை போல் கடினமான உள்ளத்தை யாராவது மாற்றி, மென்மையாகச் செய்தால், நீங்கள் அதற்கு நன்றி சொல்வீர்களா ?


மாணிக்க வாசகர் சொல்கிறார். 

பாடல் 

Tuesday, October 23, 2012

திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


பக்த கோடிகள், இறைவனை நம்பாதவர்களை விட புத்திசாலிகளா ?

இறைவனை தேடுவதும் அவனை அடைவதும் ஒரு அறிவான செயலா ? இறை அருள் பெற்ற பின் ஒருவன் முன்பிருந்ததை விட அறிவு அதிகம் பெற்றதாக கூற முடியுமா ? இறை அருள் பெறாதவர்கள் அறிவில் குறைந்தவர்களா ? 

இந்த குழப்பம் மாணிக்க வாசகருக்கும் இருக்கிறது. இறைவனிடமே கேட்கிறார். "உன் அருள் பெறுவதற்கு முன் நான் அறிவற்றவனாக இருந்தேன் என்று எனக்கு தெரியும்.. ஆனால், உன் அருள் பெற்ற பின், என் அறிவு கூடி விட்டதா?"  என்று 


 பாடல்:


அறிவ னேஅமு தேயடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.

சீர் பிரித்த பின் 

அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அரு ஈசனே 

பொருள் 

அறிவனே = அறிவில் சிறந்தவனே

அமுதே = அமுதம் போன்றவனே

அடி நாயினேன் = நாயையை போன்ற அடிமையான நான்

அறிவனாகக் கொண்டோ = என்னை அறிவுடையவனாக ஆக்குவதற்கோ

எனை ஆண்டது = எனை ஆண்டு கொண்டது ?

அறிவிலாமை = (நான்)அறிவு இல்லாமை இருந்தது

அன்றே கண்டது = அன்றே நான் கண்டு கொண்டது

ஆண்ட நாள் = நீ என்னை ஆண்டு கொண்ட நாள் முதல் 

அறிவனோ = நான் எதையும் அறிந்தவனா ?

அல்லனோ = இல்லை அறிவில்லாதவனோ ?

அரு ஈசனே  = நான் அதை தெரிந்து கொள்ள அருள் புரிவாய் ஈசனே 

Monday, October 22, 2012

திருச்சதகம் - கரை காணாக் கடல்


திருச்சதகம் - கரை காணாக் கடல் 


பிறவியை பெரிய கடல் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 

கடல், அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. நமக்கு என்ன என்று நாம் இருப்போம். 

மாணிக்க வாசகர் அந்த பிறவி பெருங்கடலை நம் மனதில் தைக்கும்படி உணர்த்துகிறார். 

பெரிய கடல். அந்த கடல் நடுவே (கரையோரம் அல்ல) நீங்கள் தனியாக மாட்டிக் கொண்டு தத்தளிகிறீர்கள். அலை உங்களை போட்டு புரட்டி எடுக்கிறது. புயல் காற்று ஒரு புறம் ஊசி போல் துளைக்கிறது. சற்று தூரத்தில் சில சுறா மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. எப்படி கரை சேர்வது என்று தவித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு மரத்துண்டு கிடைக்கிறது பற்றிக்கொள்ள. உங்கள் அருகே வந்து ஒரு மாலுமி கரை இருக்கும் இடத்தை காட்டுகிறார்.  உங்களுக்கு எப்படி இருக்கும் ?

பிறவி என்ற பெருங்கடல்.

துன்பம் என்ற அலை அடித்துக்கொண்டே இருக்கிறது

பெண்கள் மேல் கொண்ட மோகம் என்ற புயல் காற்று அலைகழிக்கிறது

ஆசை என்ற சுறாமீன் விழுங்க வருகிறது

அஞ்செழுத்து தான் தெப்பம்

கரை காட்டியது அவன் அருள்

பாடல் 

அபிராமி - வளைக் கை


அபிராமி - வளைக் கை


அவளோட கை ரொம்ப அழகா இருக்கும். அதிலும் வளையல் குலுங்கும் அந்த கையை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

எனக்கு சில சமயம் பயமா இருக்கும், மனம் சஞ்சலமா இருக்கும். அவ கிட்ட போய் அமர்ந்து கொள்வேன். அவள் என் கையையை எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, " என்ன கவலை உனக்கு ? என் கிட்ட சொல்ல கூடாதா ? நான் இருக்கேன்ல, பயப்படாதே " என்பாள். 

அப்படியே அவள் தோளில் சாய்ந்து கொள்வேன். அவள் என் தோளில் தட்டி கொடுப்பாள்...எல்லாம் சரியாகிவிடும், கவலைப் படாதே என்பதைப் போல் இருக்கும். 

அவள் குரலே கேட்பதற்கு அவ்வளவு சுகம். பேசும் போது, சிரிக்கும் போது அவ்வளவு இனிமை. அவளிடம் இருந்து இசை வரவில்லை. அவளே இசை வடிவானவள். வீணை இருக்கிறது. அதில் நரம்பு இருக்கிறது. அதில் இசை எங்கு இருக்கிறது என்று கேட்டால் காட்ட முடியாது. அந்த கருவிக்குள்தான் இருக்கிறது. ஆனால் காட்ட முடியாது. அப்படிப்பட்ட இசை போன்றவள். அவளை அனுபவிக்க முடியும். அறிய முடியாது. 

இந்த உடலுக்குள் உயிர் குடியிருக்க வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருக்கும். அப்புறம் போய் விடும். உயிரை விட உடலுக்கு மனசு இல்லை. கிடந்து மறுகும். கவலைப் படும். அப்ப அவ வந்து, ஏன் கவலைப் படுற, நான் இருக்கேன்ல என்று அந்த நேரத்திலும் ஒரு ஆறுதல் தருவாள். 

பாடல்:

Sunday, October 21, 2012

அபிராமி அந்தாதி - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதாவள்


அபிராமி அந்தாதி - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதாவள்

அவள் எப்படி இருப்பாள் ? கறுப்பா ? சிவப்பா ? உயராமா ? குள்ளமா ?

அவளை எப்படி சொல்லப் போனாலும் சரியாக வர மாட்டேன் என்கிறது. அவள் வார்த்தைகளுக்குள் வரதாவள். அவளின் பேரழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

சரி வார்தையையை விட்டு விட்டு வார்த்தை இல்லாமல் நினைத்துப் பாப்போம் என்றால் அந்த நினைவையும் தாண்டி அவள் நிற்கிறாள். அவளை எப்படி தான் நினைப்பது ?

அப்படி கூட சொல்ல முடியாது. அவளைப் பற்றி உங்களுக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதே தவிர எனக்கு அவளைத் தெரியும். அவளை நான் பார்த்து இருக்கிறேன். என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். உங்களுக்குச் சொன்னால் புரியாது. உங்கள் கற்பனைக்கு அவள் எட்ட மாட்டாள். 

அவளின் கணவன் காமத்தை கடந்தவன். காமனை எரித்தவன். அப்பேர்பட்டவனை, காமம் கடந்த அவன் விரதத்தை இந்த உலகமே பழிக்கும் படி அவனின் ஒரு பாகத்தை எடுத்துகொண்டு ஆள்பவள் நீ.. அவ்வளவு அன்யோன்யம்.
 
பாடல்

Saturday, October 20, 2012

அபிராமி அந்தாதி - மனம் நெகிழ வைக்கும்


அபிராமி அந்தாதி - மனம் நெகிழ வைக்கும்

அபிராமி அந்தாதியில் பல இடங்களில் அபிராமி பட்டர் அபிராமியின் மார்பகங்களை குறித்துப் பாடுகிறார். என்னடா இது ஒரு பக்தி பாடலில், ஒரு இறைவியையை பற்றி இப்படி கூறலாமா என்று பலர் நினைக்கலாம்.

ஒரு குழந்தை இந்த உலகில் வந்தவுடன், அது இயற்கையாக தேடுவது அதனுடைய தாயின் மார்புகளை தான். தாய் தன் உதிரத்தை பாலாக்கி தன் குழதைக்குத் தருகிறாள். குழந்தை உயிர் வாழ, அது வளர, அதை நோயில் இருந்து பாதுகாக்க தாய் பால் உதவுகிறது. தாய் பால் உணவு மட்டும் அல்ல, அது தாயின் அன்பு, காதல், பாசம், வாஞ்சை, அவளின் அரவணைப்பு எல்லாம் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. 

கஷ்டம் வரும் போது எல்லாம் நாம் தாயை தான் நினைக்கிறோம். துன்பம், கஷ்டம் வரும்போது "ஐயோ, அம்மா" என்று அவளை நினைக்கிறோம். சுகம் வரும்போது தந்தையை நினைக்கிறோம் ("அப்பாட " ) என்கிறோம்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் 
அருள் நினைந்தே அழும் குழவி அது போல் ஆனேனே 

என்று உருகும் பிரபந்தம்.

ஒரு குழந்தை தாயின் மார்பை பார்பதை போல் பட்டர் அபிராமியையை பார்க்கிறார். உலகுக்கு எல்லாம் அமுது ஊட்டுபவள் அல்லவா அவள். 

பாடல்: 

Thursday, October 18, 2012

கம்ப இராமாயணம் - பசையற்ற பாலை


கம்ப இராமாயணம் - பசையற்ற பாலை நிலம்


இராமனும், இலக்குவனும், விச்வாமித்ரனும் பாலை நிலம் வழியே செல்கிறார்கள். வறண்ட பூமி. ஈரப் பதம் எள்ளளவும் இல்லை. 

கொஞ்சம் கூட ஈரம் இல்லை, பசை இல்லை என்று சொல்ல வேண்டும். அதற்க்கு எதை உதாரணமாய் காட்டலாம் என்று கம்பன் நினைக்கிறான்.

பற்றற்ற ஞானிகளின் மனமும், விலை மகளிரின் மனமும் எப்படி இருக்குமோ, அது போல் பசை அற்று இருந்தது என்கிறான் கம்பன். 

அது என்ன பசை ?  

பசை என்ன செய்யும். இரண்டு பொருட்களை ஒன்றொன்று ஒட்டச் செய்யும். பிணைக்கும். ஒன்றோடு ஒன்றாக பிணைக்கும். 

ஈர நிலம் தாவரங்களை நிலத்தோடு பிணைக்கிறது. உயிர் வாழ வழி வகுத்து மக்களையும், விலங்குகளையும் ஓரிடத்தில் ஒன்று படுத்துகிறது. 

பாலை நிலத்தில் ஈரம் இல்லை. செடி கொடிகள் இல்லை. உயிர்கள் இல்லை. தனந் தனியே ஒரு வித பற்றும் இல்லாமல் கிடக்கிறது. எதோடும் ஒட்டாமல் தானே தனியே இருக்கிறது.

ஞானிகள் எதோடும் யாரோடும் ஒட்டுவதில்லை. இறை சிந்தனை, முக்தி என்று சிந்தித்து இருப்பார்கள். இந்த உலகோடு அவர்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. 

விலை மகளிரும் அப்படித்தான். அன்போடு , நட்போடு இருப்பதை போல் அவர்கள் பழகினாலும், அவர்களுக்கு யார் மேலும் ஒட்டும் உறவும் கிடையாது. 

பாடல் 

Wednesday, October 17, 2012

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


இறைவன் மேல் பயம் கொள்வது ஒரு நிலை. பக்தி செய்வது மற்றொரு நிலை. நன்றி செலுத்துவது இன்னும் ஒரு நிலை. அன்பு செலுத்துவது உன்னத நிலை.

எனக்கும் அவளுக்கும் இடையே உயர்வு தாழ்வு இல்லை. உயர்வு தாழ்வு இருந்தால் பயம் வரும். பக்தி வரும். 

அவள் தந்து நான் பெற்றால் நன்றி வரும். எங்களுக்குள் அப்படி எந்த பேதமும் கிடையாது. 

அன்பு ஒன்றே எங்களுக்குள்.

அவளின் அழகு அப்பேற்பட்டது. பார்த்தவுடன் அன்பு தானாகவே வரும். அவளின் தோற்றம் என்னை அவள் மேல் அன்பு செய்ய வைத்தது. அது ஒண்ணும் நான் முயன்று செய்ததில்லை. அவள் வந்தால். அன்பு பிறந்தது. 

அவளைப் பார்த்த பின், காலமே நின்று போனமாதிரி இருக்கு. எது பகல், எது இரவு, எது என்ன கிழமை, எது என்ன பருவம் ஒன்றும் தெரியவில்லை. எந்நேரமும் அவள் நினைப்பே தான். "இனி எண்ணுதற்கு சமயங்களும் இல்லை".

இந்த மனித பிறவி பெற்றதின் பலன் அவளைப் பார்த்தது, அவள் மேல் அன்பு வைத்தது. முக்தி இதுதான். சொர்க்கம் இதுதான். வீடு பேறு இதுதான். இனி சென்று பிறப்பது ஒன்று இல்லை. இனி என்னை கருவில் சுமக்க ஒரு தாயும் இல்லை. நான் அவளுள் அடங்கி விட்டேன். இனி வேறு எங்கு போய் பிறப்பது. 

இது தான் அந்தம். இது தான் முடிவு. அவள் தான் எல்லாம்.

அவளைப் பார்த்த பின் மற்ற பெண்களை பார்த்தால் ஒண்ணுமே தோன்ற மாட்டேன் என்கிறது. அவளை கடந்து என்ன இருக்கிறது ?  மற்ற பெண்கள் மேல் இருந்த ஆசை எல்லாம் அமைதி பெற்று விட்டது. அடங்கவில்லை, அமைதி ஆகி விட்டது. அடங்கினால், அடக்கினால் ஒரு வேளை மீண்டும் எழலாம். எது அமைதி. சலனம் அற்ற மனம். மற்ற பெண்களை பார்த்தால் ஒரு சலனமும் மனதில் எழவில்லை. மனம் நிர்மலாமாய் இருக்கிறது. தெளிந்த நீர் பரப்பு போல. 

பாடல்

Tuesday, October 16, 2012

நள வெண்பா - நீண்ட இரவு


நள வெண்பா - நீண்ட இரவு


இந்த இரவு ஏன் இப்படி நீண்டு கொண்டே போகிறது. எவ்வளவு நேரம் ஆகிறது பொழுது விடிய. நகரவே மாட்டேன் என்கிறதே இந்த இரவு. இந்த சேவல் கோழிகளுக்கு எல்லாம் என்ன ஆகிவிட்டது ? ஏன் அவை கொக்கரிக்க மாட்டேன் என்கிறது. இந்த இரவு விடியவே விடியாதா ? இந்த கடல் ஏன் இப்படி அலை அடித்துக்கொண்டே இருக்கிறது. தூங்கவே தூங்காதா ? இந்த நிலவு ஏன் இப்படி வெயிலாய் காய்கிறது ? ஏன்  இப்படி சுடுகிறது ? இந்த சூட்டில் என் உடலே உருகி விடும் போல் இருக்கிறதே...என்று புலம்புகிறாள் தமயந்தி...காதல் பிரிவு அவளை வாட்டுகிறது ....


பாடல் 

நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


கடவுளை நாம் விரும்பினால் போதுமா ? அவன் நம்மை விரும்ப வேண்டாமா ?

நாம் பூஜை, புனஸ்காரம், பஜனை, வேண்டுதல், அர்ச்சனை என்று எல்லாம் செய்கிறோம்.

நம்மால் முடிந்தது அவ்வளவு தான். 

ஆண்டாள் ஒரு படி மேலே போகிறாள். 

மன்மதனே, அந்த கண்ணன் என் மேல் காதல் கொள்ளும்படி அவன் மேல் மலர் கணை தொடு என்று மன்மதனை வேண்டுகிறாள். காதல் வயப் பட்டவர்கள், தங்கள் காதலன் பெயரையோ அல்லது காதலியின் பெயரையோ தங்கள் கைகளில் எழுதி மகிழ்வார்கள். அந்த பெயருக்கு முத்தம் தருவார்கள். காதலன் அல்லது காதலியின் பெயரை எழுதுவது, பார்ப்பது என்பது ஒரு சுகமான விஷயம். ஆண்டாள் சொல்கிறாள், " என் மேல் கடல் வண்ணனின் பெயரை எழுதி, உன் மலர்கனையோடு என்னையும் அவன் மேல் எய்" . 

காதலின் உச்ச கட்டம். 

காதல் கனியும் அந்தப் பாடல்:

Monday, October 15, 2012

அக நானூறு - அவள் வருவாளா ?


அக நானூறு - அவள் வருவாளா ?


அவன்: அவ வருவாளாடா ? 

தோழன் : நிச்சயம் வருவா. 

அவன்: எப்படிடா சொல்ற ? ஒரு வேளை வரட்டா ? என் கிட்ட என்ன இருக்கு ? நான் அவளை சந்தோஷமா வச்சுக்க முடியுமா ? என் கூட வந்தா அவ கஷ்டத்தான் படப் போறா. எனக்கு என்னவோ அவ வர மாட்டான்னு தான் தோணுது. 

தோழன்: டேய், உன்கிட்ட பணம் காசு இல்லாம இருக்கலாம்...ஆனா அவளுக்கு கொடுக்க நீ எவ்வளவு அன்பு வச்சிருக்க...உன்னை விட அவளை யாரும் இந்த உலகத்தில அதிகமா நேசிக்க முடியாது...


அது ஒரு வறண்ட கிராமம். தண்ணியே இல்லை. ஊருக்கு வெளியே ஒரு ஆறு இருக்கிறது. அதில் எப்ப தண்ணி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த ஆற்றுப் படுகையை தோண்டினால் கொஞ்சம் போல ஊத்துத் தண்ணி வரும். தாகம் கொண்டு ஒரு ஆண் யானையும் பெண் யானையும் அந்த பக்கமா வருகின்றன. இருக்கும் நீரோ கொஞ்சம். வெயில் சுட்டு எரிக்கிறது. 

அந்த ஆண் யானை அந்த தண்ணீரை எடுத்து பெண் யானையின் மேல் தெளித்து அதன் சூட்டை தணிக்கிறது. மீதம் இருக்கும் கலங்கிய சேற்று நீரை தன் மேல் வாரி இறைத்துக் கொள்கிறது.  பின் இரண்டும் நடந்து செல்கின்றன. ஒதுங்க நிழல் இல்லை. மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்டன. அந்த மரத்தின் மொட்டை கிளைகள் தரும் நிழலில் அந்த ஆண் யானை ஒதுங்குகின்றது. 

இன்னும் கொஞ்ச தூரம் போனால், அங்கே சில கிராம வாசிகள் நடந்து போய் கொண்டு இருக்கிறார்கள். பனை ஓலையில் செய்த குடையையை அவர்கள் வைத்து இருக்கிறார்கள். காற்று வேகமாக அடிக்கிறது.  அந்த காற்று, குடையில் மோதி ஒரு வித சத்தத்தை எழுப்புகிறது. அந்த சத்தம் தன்னுடைய பெண் மானின் சத்தம் என்று நினைத்து அதை தேடி ஆண் மான் காட்டுக்குள் ஓடுகிறது. 

எங்கு பார்த்தாலும் வறட்சியின் கோர தாண்டவம். கடினமான வாழ்க்கை. இருந்தாலும் காதல் அங்கே இழை ஓடிக்கொண்டிருக்கிறது. 

பாடல்

நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் 
வேனில் நீடிய வானுயர் வழிநாள்
வறுமை கூரிய மண்ணீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொரிபுறம் உரிஞிய நெறியயல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ நம்மொடு
தான்வரும் என்ப தடமென் தோளி
உறுகண் மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கனைவிசைக் கடுவளி யெடுத்தலின் துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்
கருமுக முசுவின் கானத் தானே.


நாம் நகை யுடையம் - நாம் மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தோம்

கடுதெறல் = மிகுந்த வரட்சியான

வேனில் = கோடைக் காலம்

நீடிய வான் உயர் வழி - இந்த சாலையோ ஒரு முடிவு இல்லாமல் ஏதோ 
வானத்திர்க்கே போவது மாதிரி போய் கொண்டே இருக்கிறது

நாள் வறுமை கூரிய - ஒவ்வொரு நாளும் வறுமை மிக (இங்கே தண்ணீர் 
என்ற செல்வம் குறைந்து கொண்டே போக என்று அர்த்தம்), 

மண்நீர்ச் = மண் நிறைந்த நீர் உள்ள 

சிறுகுளத் = சிறிய குளத்தில் (சேறு நிறைந்த ஒரு குட்டை)

தொடுகுழி = பள்ளம் பறித்து வைத்த ஒரு சின்ன குழியில்

மருங்கில் -  உள்ளே  

துவ்வாக் கலங்கல் - அருந்த முடியாத கலங்கிய நீரால்

கன்று உடை = கன்றை உடைய

மடப்பிடிக் = பெண் யானை

கயந்தலை மண்ணி -  அதன் தலையில் நீரை ஊற்றி (கழுவி) , 

சேறுகொண்டு ஆடிய = மீதியுள்ள சேற்றை மேலே பூசிக் கொண்டு ஆடிக் கொண்டு

வேறுபடு = நிறம் வேறு பட்ட

வயக் களிறு - வலிமையான ஆண் யானை 
 
செங் கோல் = சிவந்த காம்பினை உடைய

வால்இணர் = மலர் கொத்துகளை

தயங்கத் தீண்டி - தயக்கத்துடன் தும்பிக்கையால் பற்றி 

சொரிபுறம் = தன் முதுகை

உரிஞிய -  உறாய்துக்   கொண்டு 

நெறி = வழியில்

அயல்= பக்கத்தில் உள்ள (ரோட்டோரம்_

மராஅத்து -  வெண்மையான கடம்ப மரத்தின் 
 
அல்குறு = சுருங்கிய

வரி நிழல் = வரி வரியாக விழும் நிழல் (இலை இல்லாத மரத்தின் நிழல்)

அசைஇ - அசைந்து இருந்து  

நம்மொடு = நம்முடன்

தடமென் = அழகிய மென்மையான

தோளி வரும் என்ப  - தோளினை உடைய அவள் வருவாள் என்று இருப்போம்

நம்முடன் பெரிய மென்மை வாய்ந்த தோளை யுடைய தலைவி வரும் என்பர், 

உறுகண் = செல்கின்ற வழி

மழவர் = மழவர்களின் 

உருள் கீண்டிட்ட- வழித்தடம் உண்டாக்கிட, 

ஆறுசெல் மாக்கள் -  வழியே செல்லும்  மக்கள்  

சோறு பொதி = சோற்று மூட்டை போல பெரிதாக உள்ள  

வெண்குடை -  வெண்மையான பனை ஓலை குடை  

கனைவிசை = மிகுந்த விசையுடன்

கடுவளி = வேகமாக வீசும் காற்று

எடுத்தலின் - தூக்கும்   போது

துணை செத்து - தனது பிணையின் குரல் என்று எண்ணி  

வெருள் ஏறு -  அஞ்சிய மான் 

பயிரும் ஆங்கண் -  அந்த துணை இருக்கும் இடங்களை  


கருமுக = கரிய முகத்தை உள்ள

முசுவின் = முசுக்கள் உள்ள 

கானத்தான் -  காட்டில் 


.


அபிராமி அந்தாதி - ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் செய்து விட்டாய்


அபிராமி அந்தாதி - ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் செய்து விட்டாய்


நீங்கள் ஒரு பெண்ண மேல் காதல் கொள்கிறீர்கள். அந்த பொண்ணு ரொம்ப அழகு. அவளின் அன்புக்காக உருகுகிறீர்கள். அவள் உங்களை பார்த்து ஒரு முறை புன்முறுவல் பூக்க மாட்டாளா என்று தவம் இருக்கிறீர்கள். 

நீங்கள் அவளை விடாமல் காதலிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

ஒரு நாள் அவள் உங்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள். உங்களிடம் வந்து அவளும் உங்களை விரும்புவதாகச் சொல்லி செல்கிறாள். 

எப்படி இருக்கும் உங்களுக்கு ? எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் ? 

நான் என்ன செய்து விட்டேன் ? என்ன ஆச்சு அவளுக்கு ? திடீர்னு வந்து அவளும் என்னை காதலிப்பதாக சொல்கிறாளே ? ஒருவேளை ஞாபக மறதியா வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லி விட்டு போகிறாளோ ? என்று உங்கள் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.  ஒவ்வொரு அணுவிலும் சந்தோஷம் கொப்பளிக்கிறது. இவ்வளவு சந்தோசத்தை எப்படி தாங்கப் போகிறீர்கள் ? 

இறை அருளும் அப்படித்தான். அபிராமி பட்டருக்கு அபிராமியின் அருள் கிடைத்தது.  அவரால் நம்ப முடியவில்லை. நான் என்ன செய்து விட்டேன், எனக்கு எப்படி அவளின் அருள் கிடைத்தது. ஒரு வேளை, அபிராமி ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் தந்து விட்டாளோ ? அவளின் அருள் மட்டும் அல்ல, அவளை அறியும் அறிவையும் தந்தாள். 

புலம்புகிறார்...தாயே, மலை மகளே, திருமாலின் தங்கச்சியே...என்று உருகுகிறார்.....

பாடல்

Saturday, October 13, 2012

அபிராமி அந்தாதி - நினைத்தாலும், மறந்தாலும்


அபிராமி அந்தாதி - நினைத்தாலும், மறந்தாலும்


நாம் எப்போது இறைவனை நினைக்கிறோம்...துன்பம் வரும்போது அவனை நினைக்கிறோம். சில சமயம் சந்தோஷம் வந்தால் அவனை நினைக்கிறோம். அவனிடம் ஏதாவது வேண்டுகிறோம். அப்படி இல்லாவிட்டால், அவனுக்கு நன்றி சொல்லவாவது கோவிலுக்குப் போகிறோம். 

அபிராமி பட்டர் சொல்கிறார், " அபிராமி, உன்னை நினைத்தாலும் சரி, மறந்தாலும் சரி, உன்னிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறார். 

அவளும் நானும் வேறாய் இருந்தால் என்னிடம் இல்லாத ஒன்றை அவளிடம் கேட்கலாம். அவளும் நானும் ஒன்று என்று ஆனபின், எதைக் கேட்பது ? 



அந்த அற்புதப் பாடல்:

இலக்கியம் என்றொரு கால இயந்திரம்

இலக்கியம் என்றொரு கால இயந்திரம்


உங்களுக்கு ஒரு கால யந்திரம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏறி நீங்கள் காலத்தில் பின்னோக்கி போகிறீர்கள். ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னால் போய் விட்டீர்கள். அந்த கால எந்திரத்தில் இருந்து இறங்கி நீங்கள் நடக்கிறீர்கள். அதே தமிழ் நாடு. 

தார்ச் சாலை இல்லை. மின்சாரம் இல்லை. தொலை பேசி இல்லை. கணனி இல்லை. அந்த தெருவோரம் சில பெண் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாட்டு வண்டிகள். தொழிற்சாலைகள் இல்லாதாதல் புகை இல்லை. வண்டிகள் எழுப்பும் ஒலி இல்லை. மூச்சு  முட்டும் அமைதி. எங்கும் வயல் வரப்புகள். பச்சை பசேல் என்று எங்கு திரும்பினாலும் பசுமை. சில குடிசைகள் தென் படுகின்றன. 

ஒரு குடிசையின் முன்னால் சில பெண் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

உங்களால் நம்ப முடியுமா ? அதில் ஒரு பெண் தான் நீங்கள் உருவாகக் காரணம் ஆனவள் என்று ? உங்களின் மூலம் அவள். நீங்கள் அவளின் சந்ததி. அவளில் இருந்து பிறந்த நதியில் நீங்கள் ஒரு கிளை. 

அவளோடு பேச உங்களுக்கு கொள்ளை ஆசை. அவளிடம் போய் அவள் பெயரை கேட்கிறீர்கள். அவளும் சொல்கிறாள். "நான் யார் தெரியுமா " என்று கேட்கிறீர்கள் . தெரியாது என்று அவள் தலை ஆட்டுகிறாள். 

அவள் தான் உங்கள் தாயின் தாயின் தாயின் தாயின்....தாய். 

அப்படி ஒரு கால இயந்திரம் கிடைத்தால் எப்படி இருக்கும் ? கிடைத்தால் அதில் ஏறி போய் வருவீர்களா ? 

அப்படி சவாரி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள் ? 

அப்படி ஒரு இயந்திரம் இருக்கிறது. அது தான் இலக்கியம். 

அதில் நீங்கள் ஏறி ஆயிரம் ஆண்டுகளை நொடி நேரத்தில் கடந்து சென்று விடலாம். அன்று நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை. அவர்கள் உண்ட உணவு, அவர்களின் பழக்க வழக்கங்கள். அவர்களின் சிந்தனைகள், அவர்களின் ஆசைகள், கனவுகள் எல்லாம் உங்கள் முன் விரியும்.  

நான் இது வரை இலக்கிய சுவைக்காக எழுதி வந்தேன். 

இனி கொஞ்சம் நம் முன்னோர்களின் வழக்கை, அவர்களின் மன நிலை, அவர்களின் கனவுகள், கற்பனைகள் எல்லாவற்றையும் பார்ப்போம். 

வாருங்கள், இலக்கிய கால் எந்திரத்தில் ஏறி ஒரு வலம் வருவோம்.

Thursday, October 11, 2012

குற்றாலக் குறவஞ்சி - எது முந்தியது ?


குற்றாலக் குறவஞ்சி - எது முந்தியது ?




காதலனை பார்க்க காதலி போகிறாள். தூரத்தில் அவன் தெரிகிறான். அவன் தானா ? அவன் போலத்தான் தெரிகிறது. ஒரு வேளை அவன் இல்லையோ ? இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்கிப் போகிறாள். அவன் தான். ஆனால் அந்தப் புறம் திரும்பி நிற்கிறான். தோளை தொட்டு திருப்பிப் பார்க்க எத்தனிக்கிறாள். அவள் கரம் நீள்கிறது. பின் ஒரு சின்ன தயக்கம். ஒருவேளை அவனை இல்லா விட்டால் ?

அவள் மனத்திற்கும், கண்ணிற்கும், கரத்திற்கும் பெரிய போட்டி...யார் முதலில் அவனை அறிவோம் என்று. 

சந்த நயம் நிறைந்த அந்தப் பாடல்:

Tuesday, October 9, 2012

கம்ப இராமாயணம் - அவனா இவன், இவனா அவன் ?


கம்ப இராமாயணம் - அவனா இவன், இவனா அவன் ?


கன்னி மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.

மறு நாள், இராமன் சிவ தனுசை உடைத்தான். சீதை மாலையிட வருகிறாள். 

அவளுக்கு ஒரு சந்தேகம். நேற்று மாலை பார்த்த காளை இவன் தானா? இவன் மாதிரி இருக்கு ? ஒரு வேளை இவன் இல்லையோ ? அது வேற ஆளோ ? இருக்காது. இவன் தான் அவன் என்று அவள் மனம் கிடந்து அலை பாய்கிறது.  எப்படி அலை பாய்கிறது ?

அவள் காதில் ஜிமிக்கி போட்டு இருக்கிறாள். அவள் நடந்து வரும் போது அது இங்கும் அங்கும், முன்னும் பின்னும், வலமும் இடமும் ஆடுவதைப் போல அவள் மனம் கிடந்து ஆடுகிறது. 

என்ன ஒரு கற்பனை. 

அந்தப் பாடல்: 

Monday, October 8, 2012

திருவரங்க கலம்பகம் - விடுங்கள், தொழுங்கள்


திருவரங்க கலம்பகம் - விடுங்கள், தொழுங்கள்


முதலில் அம்மா தான் எல்லாம் என்று இருந்தோம். இளமை ஏற ஏற அது மாறி மனைவி மேல் மோகம் முற்றத் தொடங்கியது (அல்லது கணவன் மேல்). பின் பிள்ளைகள் மேல் பாசம். அப்பாவின் மேல் அன்பு. நடுவில் பொருளின் மேல், சொத்தின் மேல் பற்று. அதை விரட்டிக் கொண்டு போகிறோம். புகழ், மதிப்பு என்று பேயாய் பறக்கிறோம். நாள் ஆக ஆக, மூப்பு வந்து சேருகிறது. அதன் கூடவே நோய். பின் இறப்பு, பின் பிறப்பு என்று வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டே இருக்கிறது ஒரு இலக்கு இல்லாமல். 

இது தேவையா ? இதை விட்டு பின் என்ன தான் செய்வது ? 

பிள்ளை பெருமாள் ஐயங்கார், திருவரங்க கலம்பகத்தில் வழி காட்டுகிறார்.

எல்லாவற்றையும் விட்டு விட்டு அந்த அரங்கனை தொழுங்கள் என்றுரைக்கிறார்.

கம்பராமாயணம் - மழைகண்


கம்பராமாயணம் - மழைகண்


பெயர் சொற்கள் இரண்டு வகைப்படும். இடுகுறிப் பெயர், காரணப் பெயர்.

காரணப் பெயர் என்பது ஒரு காரணத்தால் வரும் பெயர். நாற்காலி என்பது காரணப் பெயர். நான்கு கால்கள் இருப்பதால் அது நாற்காலி.
அலைகடல், தோய்தயிர், என்பது எல்லாம் காரணப் பெயர்கள். 

ஒரு காரணமும் இல்லாமல், ஒரு பொருளுக்கு பெயர் இட்டு வழங்கினால், அதற்க்கு இடுகுறிப் பெயர். மரம், செடி என்பன உதாரணம். 

மழை கண் என்பது பொதுவாக ஒரு இடுகுறிப் பெயர்.

எப்போதும் மழை போல் பொழிந்து கொண்டு இருக்கும் கண் யாருக்கும் இருக்காது.

ஒரு உதாரணத்திற்கு சொல்வார்கள் மழை கண் என்று.

அழகுக்காக சொல்வதும் உண்டு.

எப்போதாவது சில பல நீர் துளிகள் வரலாம். அதனால் மழைக் கண் என்பதை காரணப் பெயராக கொள்ள முடியாது. 

ஆனால், ஒரே ஒரு ஆளுக்கு, மழை கண் என்பது காரணப் பெயராக இருந்ததாக கம்பன் சொல்கிறான்.

சீதை அசோக வனத்தில் இருக்கிறாள். கண்கள் நீர் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. நிற்காமல் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஏதோ அணைக் கட்டில் பெரிய ஓட்டை விழுந்தால் எப்படி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டே இருக்குமோ, அது போல் அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 

பாடல்

Sunday, October 7, 2012

இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்


இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்


ஆணும் பெண்ணும் இல்லறத்தில் கூடி காதல் இன்பம் அனுபவிப்பது இறுதியில் பேரின்பம் அடைய ஒரு வழி.

இல்லற இன்பமே இறுதி அல்ல.

கசப்பு மருந்தை நேரடியாக அப்படியே உண்பது கடினம்.

அதன் மேல் சிறிது சர்க்கரை தடவித் தந்தால், உண்பது எளிது, நோயும் குணமாகும்.

 மருந்தை கொடுத்தால் அதன் மேல் உள்ள சர்கரையையை மட்டும் ருசித்து விட்டு, மருந்தை தூக்கி எறிந்து விடுவது எவ்வளவு புத்திசாலித்தனமோ அதுபோல் இல்லற இன்பத்தை மட்டும் அனுபவிப்பது.

காதல் இன்பம் வேண்டும். ஆனால் அது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். 

பாடல் 

அபிராமி அந்தாதி - எது தவம்


அபிராமி அந்தாதி - எது தவம்


குழந்தை பிறந்தபின் ஒரு தாயின் மார்புகள் பெரிதாவது இயற்கை. குழந்தைக்கு உணவு தரவேண்டி இயற்கை அப்படி ஒரு மாற்றத்தை பெண்ணின் உடலில் உண்டாக்குகிறது. 

அபிராமி இந்த உலகுக்குத் தாய். அவளுக்குத்தான் எத்தனை குழந்தைகள். எத்தனை யுகங்களாய் உணவளித்து வருகிறாள். அபிராமி பட்டர் அவளின் மார்புகளை பார்க்கிறார். கவர்ச்சி அல்ல, கருணை அவருக்குத் தெரிகிறது. அவளை அவர் தாயகப் பார்க்கிறார். 

சிறிய இடை, பட்டுச் சேலை, பெரிய மார்புகள், அதன் மேல் தவழும் முத்து மணி மாலை, தலையில் பிச்சிபூ, கரு கரு என்று முடி, கண் மூன்று...பார்த்துக்கொண்டே இருக்கலாம்...இதை விட வேறு தவம் என்ன இருக்கிறது ?

பாடல்

Saturday, October 6, 2012

திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.

அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள். 

அந்தப் பெண்கள். வில் போன்ற புருவத்தை வளைத்து, மீன் போன்ற கண்களில் வேல் போன்ற பார்வையை தீட்டி, தங்கள் கொலுசு என்ற பறை முழங்க சண்டைக்கு வருகிறார்கள். 

இனிமையான கற்பனை கொண்ட அந்தப் பாடல் 

அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்

அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்


நாம் சில சமயம் நல்லது நினைத்து செய்யும் காரியங்கள் வேறு விதமாக முடிந்து விடுவது உண்டு. 

அமுதம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள்.

அமுதோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது.

என்ன செய்வது ?
நமக்கு அமுதம் வேண்டும், நஞ்சு வேண்டாம்.

பொருள்களும், உறவுகளும் வேண்டும்...அவற்றினால் வரும் துன்பம் வேண்டாம்.

ஐயோ, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று மனிதன் இறைவனிடம் சென்று புலம்புகிறான்.

அவன் அளவற்ற அருளாளன்.

நஞ்சை எடுத்து விழுங்கி விட்டான்.

நம் துன்பங்களை எல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் மனைவி, அபிராமி, அவனை விடவும் அன்பு மிகுந்தவள். அவன் அருந்திய நஞ்சை அவன் தொண்டையில் நிறுத்தினாள். அந்த நஞ்சை அமுதமாக மாற்றினாள். 

"அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை" அவள்.

அவள் ரொம்ப அழகானவள்.

அழகு என்றால் இப்படி அப்படி அல்ல.

பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அபிராமி பட்டார் அவள் அழகில் வைத்த கண் எடுக்காமல், எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

அவளுடைய கண், புருவம், இதழ், கழுத்து என்று பார்த்துக் கொண்டே வந்தவர், அவளின் மார்பக அழகில் லயித்துப் போகிறார். காமம் கடந்த, காதல் கடந்த, அந்த அழகில் தன்னை மறந்து கரைகிறார்.

இந்த பெரிய மார்புகளை அந்த சிறிய இடை எப்படி தான் தாங்குகிறதோ என்று வருந்துகிறார். 

"...முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல்.." மருங்குல்  என்றால் இடை. 

அவள் உண்ணா முலை அம்மை. ஞான சம்பந்தருக்கு, ஞானப் பால், கிண்ணத்தில் கொடுத்தாள். அவளின் மார்பகங்கள் செப்புக் கலசத்தை கவிழ்த்து வைத்த மாதிரி இருக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று உரசுகின்றன. 

"..செப்பு உரை செய்யும் புணர் முலையாள் ..." 

அபிராமி பட்டர் எதையும் மறைக்க வில்லை. அவளின் கண்ணை மட்டும் பார்த்தேன், முகத்தை மட்டும் பார்த்தேன் என்று பொய் சொல்லவில்லை. அவர் அம்பிகையை அணு அணுவாக பார்த்து ரசிக்கிறார். அவளின் அழகில் தன்னை மறக்கிறார். 
 
அவள் எங்கே இருக்கிறாள் ? அவளுடைய விலாசம் ஏதாவது இருந்தால் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாம். அவள் நம் மனத்தின் உள்ளே இருக்கிறாள். 

சிப்பியின் உள்ளே மறைந்திருக்கும் முத்து மணி போல், நம் மனத்தின் உள்ளே மறைந்திருக்கும் மணி அவள். மன + உள் + மணி = மனோன்மணி 

அவள் சுந்தரி - அழகானவள்.

அந்தரி - அந்தரத்தில் இருப்பவள். 

பாடல்

Friday, October 5, 2012

திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


டேய், அவ என்ன அவ்வளவு அழகா ? ஏதோ இருக்கா. அதுக்காக இப்படி கிடந்து உருகிற...

போடா, உனக்குத் தெரியாது...அவளோட அழகு...

சரிப்பா, எங்களுக்குத் தெரியாது...நீ தான் சொல்லேன்...

சொல்றேன் கேளு...அவளோட புருவம் இருக்கே, அது நிலவில் இநருந்து இரண்டு கீற்றை வெட்டி எடுத்து வைத்தது மாதிரி இருக்கும். அவ பார்வை இருக்கே, வேல் மாதிரி, அவ்வளவு கூர்மை....

டேய்..உனக்கே இது ரொம்ப ஓவரா படல....

இல்லடா...அவ எங்கேயோ இருக்க வேண்டியவ...அவங்க வீட்டுல அவ அருமை தெரியாம அவளை பள்ளிகூடத்துக்குப் போ, கடைக்குப் போ, வயகாட்டுக்குப் போ என்று அந்த தேவதைய போட்டு வேலை வாங்குறாங்க...பாவம்டா அவ...

ஆனா ஒண்ணுடா, அப்படி அனுப்புனதுலையும் ஒரு நல்லது நடந்துருக்கு...அவளை வயலைப் பாத்துக்க அனுபிச்சாங்க, இப்ப அவ என் மனசப் பாத்துகிரா....

அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


ஒரு நாள் அவன் திடீரென்று மயக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறான்.  

சுற்றிலும் பார்த்தால் கடல். 

ஒரே தண்ணீர். கரை காண முடியாத கடல் நடுவே தத்தளிக்கிறான்.

எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை.

பசி ஒரு புறம்.
சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்.

உப்பு கரிக்கும் கடல் நீர் மறு புறம்.

தாகம் வேறு வாட்டுகிறது.

தூக்கம் இல்லை.

பத்தா குறைக்கு அவனுக்கு கண் தெரியாது. கண் தெரிந்தாலே கரை காண முடியா கடல். கண் வேறு தெரியா விட்டால் என்ன எப்படி இருக்கும்.  

கடைசியில் ஒரு கட்டை கையில் தட்டுப் படுகிறது. அப்பாட, அதைப் பற்றிக் கொண்டு நீந்தி கரை சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறான் . அந்தோ, அந்த கட்டையும், ஒரே பாசி படிந்து இருக்கிறது. பிடிக்க பிடிக்க வழுக்கிக் கொண்டே போகிறது. 

என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டு இருக்கும் போது, அவள், அவள் தான் அபிராமி, அவன் மேல் பரிதாபப் பட்டு, அவளின் திருவடியையை நீட்டுகிறாள்.

அவன் அதை பிடித்துக் கொள்கிறான். உயிர் தந்த அந்த திருவடியையை தன் மேலை மேல் வைத்துக் கொண்டாடுகிறான். 

அந்தக் கடலிலும், அந்த நேரத்திலும், அந்த பாதத்தின் மென்மை அவனுக்குத் தெரிகிறது. அதன் சிவந்த நிறம். அதில் இருந்து வரும் இனிய வாசம்....அவளை நிமர்ந்து பார்க்கிறான். 

அவளின் அன்பு அவனை சிலிக்க வைக்கிறது. " உன் அன்பை நான் என்ன வென்று சொல்வேன் " என்று உருகுகிறான். 

பாடல் 
 

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

பொருள்:

ஆசைக்கடலில் = ஆசை என்ற கடலில்

அகப்பட்டு = சிக்கிக் கொண்டு

அருளற்ற = அருள் ஏதும் இல்லாத

அந்தகன் = குருடன்

கைப் = குருடனின் கை

பாசத்தில் = இரண்டு அர்த்தம் சொல்லலாம். ஒன்று, பாசி படிந்த இடங்களை 

பிடித்து கரை ஏற நினைக்கிறான். முடிய வில்லை. இன்னொரு பொருள்,  
பொருள்கள்  மேல், உறவுகளின் மேல் பாசம். ஆசைக் கடல், அதன் நடுவில் 
பாசம் என்னும் கடல்.

அல்லற்பட = கஷ்டப் பட்டுக் கொண்டு 

இருந்தேனை = இருந்தவனை

நின் பாதம் என்னும் = உன்னுடைய திருவடிகள் என்ற 

வாசக் கமலம் = வாசமான தாமரை மலர்களை

தலை மேல் = என்னுடைய தலையின் மேல்

வலிய வைத்து = நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட = என்னை ஆண்டு கொண்ட 

நேசத்தை = உன்னுடைய அன்பை

என் சொல்லுகேன் = என்ன என்று சொல்வேன்

ஈசர் பாகத்து = ஈசனின் ஒரு பாகம் கொண்ட

நேரிழையே = சிறந்த அணிகலன்களை அணிந்தவளே

இந்த பாடலுக்கு பொருள் எழுதிய பெரியவர்கள், "அந்தகன் கை பாசத்திடை அல்லல் படும் வேளை" என்ற வரிக்கு அந்தகன் என்றால் எமன். அவனுடைய பாசக் கயிற்றில் கட்டப் பட்டு அல்லல் படும் நேரம் என்று பொருள் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.