Showing posts with label anuman. Show all posts
Showing posts with label anuman. Show all posts

Sunday, June 17, 2012

கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன்


கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன் 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான்.

அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.

"என் தோளின் மேல் ஏறிக்கொள், இப்போதே உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்..மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான். 

சீதை பதில் சொல்கிறாள்....

"துன்பம் தரும் விலங்குகளைப் போல உள்ள இந்த இலங்கை எம்மாத்திரம் ? 

எல்லையில்லா இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்.

நான் அப்படி செய்தால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைத்து அந்த எண்ணத்தை கூட குற்றம் என்று நினைத்து தூக்கி எரிந்து விட்டேன்" என்றாள்

நினைத்துப் பாருங்கள்.

ஒரு வேளை சீதை அவளே இராவணனை எரித்து விட்டு, நேரே இராமன் முன் வந்து நின்றால், எப்படி இருந்திருக்கும்?

இராமனை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கும் ?

கட்டிய மனைவியை எதிரியிடம் இருந்து காப்பாற்றத் தெரியாதாவன் என்று அல்லவா நினைக்கும்?

அந்த நினைப்புக்கு இடம் தரா வண்ணம் சீதை பொறுமை காத்தாள்.

அந்தப் பாடல்

Sunday, May 6, 2012

கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


யுத்த காண்டம். 

இராவணன் களம் புகுகிறான். தேரில் வருகிறான். 

இராமன் தரையில் நிற்கிறான். 

அனுமன் இராமனை தன் தோளில் ஏற்றி கொள்கிறான். 

சாதாரண நிகழ்வு தான். 

ஆனாலும் கம்பன் யார் யார் எல்லாம் எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டார்கள் இதனால் என்று கற்பனை செய்கிறான்.

உலகளந்த பெருமானை தன் தோளில் தாங்கிய அனுமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

திருமாலை தூக்கிச் சுமந்த கருடனுக்கு பொறாமை.

மாலோனை தாங்கிய ஆதி சேஷனுக்கு தலை நடுக்கம். 

நம்மால் தான் முடியும் என்றிருந்தோம், அனுமன் இராமனை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டானே என்று.

மாணியாய் உலகு அளந்த நாள்அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்மற்றை அனந்தனும்தலை நடுக்குற்றான்.

மாணியாய் = மாவலிக்காக

உலகு அளந்த நாள் = அன்று உலகு அளந்த நாள்

அவனுடை வடிவை = அவனுடைய வடிவை (குள்ள உருவமா ? உலகளந்த பெரிய உருவமா ?)

ஆணியாய் = ஆழமாக, தெளிவாக

உணர் மாருதி = உணர்ந்த மாருதி

அதிசயம் உற்றான் = அதிசயம் அடைந்தான். அவ்வளவு பெரிய ஆளை நம் தோளில் தூக்கி விட்டோமே என்று அவனுக்கு ஆச்சரியம்

காணி ஆகப் = காணி என்றால் பரம்பரை உரிமை. பிறப்பால் கிடைக்கும் உரிமை.

பண்டு உடையனாம் = முன்பே உடைய

ஒரு தனிக் கலுழன் = கலுழன் என்றால் கருடன். ஒரு தனிச் சிறப்பு மிக்க கருடனும்

நாணினான் = வெட்கம் அடைந்தான்

மற்றை அனந்தனும் = ஆதி சேடனும்

தலை நடுக்குற்றான். = தலை நடுக்கம் கொண்டான்


Thursday, April 12, 2012

கம்ப இராமயாணம் - இறைவனும் பக்தனும்





இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.

அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது. 

பக்தன் இறைவனை அறிவான்.

இறைவன் பக்தனை அறிவான்.

இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
 
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த இடம்.....