Showing posts with label Thirukothumbi. Show all posts
Showing posts with label Thirukothumbi. Show all posts

Thursday, May 15, 2014

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை


மகான்களின் வாழ்வில் ஏதோ நிகழ்கிறது. அவர்கள் வாழ்கை அதற்குப்பின் மாறிப் போகிறது.

இறைவன் நேரில் வந்து அருள் செய்ததாக கூறுகிறார்கள். உபதேசம் செய்ததாக, ஆட் கொண்டதாக, அருள் புரிந்ததாக, சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய்  முருகன் ஜெப மாலை தந்ததாக கூறுகிறார். "செப மாலை தந்த சத் குரு நாதா, திருவாவினன் குடிப் பெருமாளே" என்பார்.

இங்கே மாணிக்க வாசகர்,

கண்ணப்பன் போல் என்னிடம் அன்பு இல்லை. இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டு எனக்கு ஒரு நல் வழியை காட்டினாய். உன்னுடைய கருணை வான் போல பரந்து விரிந்து அளவற்றது. அப்படிப் பட்ட , திருநீறு அணிந்த சிவனை நீ பாடு, அரச வண்டே

என்கிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!


பொருள் 


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பது  = ஒப்பிட்டு பார்க்கும் படி

ஓர் அன்பு = ஒரு உயர்வான அன்பு

இன்மை கண்டபின் = இல்லாமை கண்ட பின்பும்

என் அப்பன் = என் தந்தை போன்றவனும்

என் ஒப்பு இல் = என்னுடைய ஒப்பு இல்லாதவனும்

என்னையும் ஆட்கொண்டருளி = என்னையும் ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்து = எந்த வண்ணம் (வழி) நான் வாழ வேண்டும் என்று என்னைப் பணித்து

என்னை  = என்னை

`வா' என்ற வான் கருணைச் = வா என்று அழைத்து சேர்த்துக் கொண்ட வான் போன்ற கருணை

சுண்ணப் = பொடி  (திரு நீறு )

பொன் = பொன் போன்ற நிறம் உடைய

நீற்றற்கே = நிறம் கொண்டவற்கே

சென்று ஊதாய்; = சென்று பாடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே 

Wednesday, May 14, 2014

திருக்கோத்தும்பி - ஆனந்தத் தேன் சொரியும்

திருக்கோத்தும்பி -  ஆனந்தத் தேன் சொரியும்


உலக இன்பங்கள் சிறிது நேரத்தில், சிறிது காலத்தில் தீர்ந்து போய் விடுபவை. நீண்ட காலம் இன்பம் தரும் ஒன்று இல்லை.

எவ்வளவு பெரிய இன்பம் என்றாலும் மனம் சிறிது காலத்தில் சலித்து விடும்.

இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு தன்னிரக்கம் வரும்.


சில இன்பங்கள் பார்க்கும் போது இன்பம் தரும். சில இன்பங்கள் தொடும்போது இன்பம் தரும். சில இன்பங்கள் சுவைக்கும் போது இன்பம் தரும்.

சரி பார்க்கும் போது இன்பம் தருகிறதே என்று பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா ?

சுவைக்கும் போது இன்பம் தருகிறதே என்று எப்போதும் சுவைத்துக் கொண்டே இருக்க முடியுமா ?

எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத் தான்.

எப்போதெல்லாம் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதெல்லாம் நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதேலாம் அதைப் பற்றி பேசுகிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்
அது மட்டும் அல்ல
அது மட்டும் அல்ல எல்லா நேரத்திலும், அனைத்து செயலிலும் இன்பத்தை மழையாக பொழிவது அவன் திருவடிகளே.

இந்த சின்ன பூவில் இருக்கும் தேனை விட்டு விட்டு அவன் திருவடியை நாடு என்று தும்பிக்குச்  சொல்கிறார். நமக்கும்தான்.

பாடல்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

தினைத்தனை உள்ளது = தினை அளவு சிறிய

ஓர் பூவினில் = ஒரு பூவில்

தேன் உண்ணாதே, = தேனை உண்ணாமல்

நினைத்தொறும், = நினைக்கும் ஒவ்வொரு பொழுதிலும்

காண்தொறும் = எப்போதெல்லாம் காண்கிறோமோ அப்போதெல்லாம்

பேசும்தொறும் = எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போதெல்லாம்

எப்போதும் = எல்லா சமயத்திலும்

அனைத்து எலும்பு உள் நெக = உடம்பில் உள்ள அனைத்து ஏலேம்புகளும் உருக

ஆனந்தத் தேன் சொரியும் = ஆனதமயமான தேனை பொழியும்

குனிப்பு உடையானுக்கே = குனிப்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம். ஒன்று நடனம். இன்னொன்று வளைக்கை. வளையல் அணிந்த கை. வளையல் அணிந்த கை உடையவன் அவன் ஒருவன் தான். மாதொரு பங்கன். அர்த்த நாரி.

சென்று ஊதாய் = சென்று ரீங்காரமிடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே

இது மேலோட்டமான பொருள்.

ஆழமான பொருள் என்ன ?

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தை உருவாகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனக்குள் தாயின் (பெண்ணின்) அம்சத்தையும், தந்தையின்  (ஆணின்) அம்சத்தையும் கொண்டு பிறக்கிறது.

நாளடைவில், இந்த சமுதாயம் ஆண் குழந்தை என்றால் பெண் அம்சத்தையும், பெண் குழந்தை என்றால் ஆண் அம்சத்தையும் அழுத்தி நாளடைவில் மறக்கடித்து  விடுகிறது.

நாம் பெரியவர்கள் ஆகும் போது குறை பட்டவர்களாகவே இருக்கிறோம். ஏதோ  ஒன்று நம்மில் குறைகிறது.  அந்த குறையை வெளியில் இருந்து இட்டு நிரப்ப முயல்கிறோம். என்னதான் இட்டு நிரப்பினாலும் அது நிறைய மாட்டேன்  என்கிறது.

நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும்.

ஆண் என்றால் அழுத்தி வைக்கப்பட்ட பெண் உணர்வு வெளி வர வேண்டும். ஒன்றாகக் கலக்க வேண்டும்.

அதே போல் பெண் என்றால் அவளுக்குள் அழுந்திக் கிடக்கும் ஆண் உணர்வு வெளி வர வேண்டும்.

ஆணுக்குள் இருக்கும் பெண்ணும், பெண்ணுக்குள் இருக்கும் ஆணும் ஒன்றாக சேரும்போது  உண்மையான , நிரந்தரமான இன்பம் பிறக்கிறது.


இதே கருத்தை நாவுக்கரசரும் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவற்றை இன்னொரு நாள்  பார்ப்போம்.


Tuesday, May 13, 2014

திருக்கோத்தும்பி - நான் யார் ?

திருக்கோத்தும்பி - நான் யார் ?


நான் யார் ?

நான் என்பது என் உடலா ? என் உள்ளமா ? என் நினைவுகளா ? என் அறிவா ? என் மனமா ? இவை அன்றி கண்ணுக்கு காணாத உயிரா ? ஆத்மாவா ?

எது நான் ?

நான் என்பது மாறிக்  .இருக்கிறது. இப்படி மாறும் நானில் மாறாத நான் யார் ?

காலம் காலமாக இந்த கேள்வி பெரிய பெரிய ஞானிகளை வாட்டி வதைத்து இருக்கிறது.

மாணிக்க வாசகரையும் இந்த கேள்வி விடவில்லை.

இருந்தாலும்,

இறைவா நீ என்னை ஆட்கொள்ளாவிட்டால்,  நானும்,என் அறிவும், என்ன ஆகியிருப்போம் ? என்னை இந்த உலகில் யார் அறிந்து இருப்பார்கள். உன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டதால் நான் பிழைத்தேன். அப்படிப் பட்ட சிவனின் தாமரை போன்ற பாதங்களில் சென்று நீ வணங்குவாய் என்று தேனியிடம் (தும்பி)  கூறுகிறார் அடிகள்.

பாடல்

நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

நான் ஆர்? = நான் யார்

என் உள்ளம் ஆர்? = என் உள்ளம் யார்

ஞானங்கள் ஆர்? = என் அறிவு என்பது என்ன

என்னை யார் அறிவார் = நான் என்று சொல்லும் என்னை , அது என்ன என்று யார் அறிந்து சொல்ல முடியும் ?


வானோர் பிரான் = வானவர்களின் தலைவன் (பிரியாதவன் என்பது பிரான் என்று ஆயிற்று)

என்னை ஆண்டிலனேல்? = என்னை ஆட்கொல்லா விட்டால்

மதி மயங்கி = மதி மயங்கி . சிவன் ஏன்  மணிவாசகரை ஆட்கொள்ளவேண்டும்? அதனால் சிவனுக்கு கிடப்பது என்ன ? ஒன்றும் இல்லை. ஏதோ மதி மயங்கி, என்னை ஆட் கொண்டு விட்டான் என்று அடக்கத்தோடு அடிகள். நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. அவன் என்னவோ மயக்கத்தில் எனக்கு அருள் செய்து விட்டான் என்கிறார்.


ஊன் ஆர் = மாமிசம் இருக்கும்

உடை தலையில் = உடைந்த மண்டை ஓட்டில்

உண் பலி = உணவு உண்ணும்

தேர் அம்பலவன் = அம்பலத்தில் ஆடும் அவனின்

தேன்  ஆர் = தேன் சொரியும்

கமலமே = தாமரை போன்ற திருப்பாதங்களில்

சென்று ஊதாய்; = சென்று ஊதாய்

கோத்தும்பீ! = அரச வண்டே

நான் என்ற  எண்ணமும்,அறிவும் இறை அருள் பெறும் போது நிறைவு பெறுகிறது.

இதையே வள்ளுவரும்

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்  என்றார்.

அறிவு, அருள் பெறும்போது அர்த்தம் பெறுகிறது