Saturday, August 31, 2013

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர்

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர் 


அவர்களுக்குள்  காதல். அவர்கள் காதலிப்பதை ஊரே  அறியும். திருமணத்திற்கு பொருள் சேர்க்க வேண்டாமா ? அவன் திரும்பி வருவதாகச் சொல்லி, பொருள் தேட சென்று  .விட்டான். நாள் ஆகிக் கொண்டே  இருக்கிறது.அவன் வந்தபாடில்லை. ஊர் எல்லாம் ஒரு மாதிரி பேசத் தொடங்கி  விட்டது. "இனிமேல் எங்கே வரப் போகிறான்....இவளை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்...பாவம் இவ...இனிமேல் இவளை யார் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள்" என்று கண்டமேனிக்கு ஊர் பேசுகிறது.

அவளுக்கோ, அவன் வரவில்லையே என்று ஒரு புறம்  கவலை. இன்னொருபுறம் அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலை. போன வழியோ பாலை  வனம். நல்ல ரோடு  கிடையாது. கொதிக்கும் பாலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நீர்ச் சுனைகள்  இருக்கும்.வழிப் பறி கொள்ளைகாரர்கள் வேறு. அவனுக்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று கவலை. 
இன்னொரு புறம், இந்த ஊரைப் பற்றி  எரிச்சல்...அவளுடைய வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறதே என்று....

பாடல்


எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்பவர் தேர் சென்ற ஆறே
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

பொருள்


எறும்பி அளையின் = எறும்பு ஊர்ந்து சென்ற தடம் போன்ற சின்ன பாதைகள் உள்ள

குறும்பல் சுனைய = சின்ன , பல குட்டைகளை  கொண்ட

உலைக் கல் அன்ன பாறை ஏறிக் = உலை போல் கொதிக்கும் பாறையின் மேல் ஏறி


கொடு வில் எயினர் = கொடிய வில்லை ஏந்திய வேடர்கள்

 பகழி மாய்க்கும் = அம்புகளை எய்து ஆட்களை கொல்லும்

கவலைத்து = கவலை தரக் கூடியது

என்பவர் தேர் சென்ற ஆறே = அவர் தேர் சென்ற வழி

அது மற்ற அவலம் கொள்ளாது = அப்படி அவர் சென்ற துன்பத்தை நினைக்காது

நொதுமல் கழறும் = பழிச் சொற்களை கூறும் 

இவ் அழுங்கல் ஊரே. = இந்த ஆரவாரமான, சத்தம் போடும் ஊரே



வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும்

வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும் 


சமாதானமாய் போகலாம் என்று சொன்ன தருமனைப் பார்த்து பீமன் கோபம் கொண்டு சொல்கிறான் .....

"நாம் என்னவெல்லாம் முடித்து விட்டோம்...போரை முடித்து விட்டோம், பாஞ்சாலியின் விரித்த கூந்தலை முடித்து விட்டோம், துரியோதனன் சபையில் நாம் எடுத்த சபதங்களை முடித்து விட்டோம், பிச்சை எடுப்பதில் பேர் வாங்கி பெருமையை, புகழை  முடித்து விட்டோம், நம்முடைய புகழை முடித்து விட்டோம், இவனோடு பிறந்த நான் என்னவெல்லாம் சாதித்து விட்டேன்"

என்று வெறுத்து  கூறுகிறான்.

பாடல்

போர்முடித்தானமர்பொருது புலம்புறுசொற்பாஞ்சாலி பூந்தண்
                                         கூந்தற், 
கார்முடித்தா னிளையோர்முன் கழறியவஞ்சின முடித்தான்
                                    கடவுட்கங்கை, 
நீர்முடித்தா னிரவொழித்த நீயறியவசையின்றி
                               நிலைநின்றோங்கும், 
பேர்முடித்தா னிப்படியே யார் முடித்தாரிவனுடனே
                                    பிறப்பதேநான்.


சீர் பிர்த்தபின்


Friday, August 30, 2013

இராமாயணம் - வரம்பு அறு திருவினை

இராமாயணம் - வரம்பு அறு திருவினை 


அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் தசரதன்  வேண்டுகிறான்.

"எனக்கு வயதாகி விட்டது. நொண்டி எருது பாரம் சுமப்பது மாதிரி இந்த வயதான காலத்தில் நான் இந்த அரச பாரத்தை இழுத்துக் கொண்டு  செல்கிறேன். இதை விடுத்து , அந்த எல்லை இல்லாத இன்பத்தை அடையும் ஆசை எனக்கு இருக்கிறது...ஐயா, நீ இதை எனக்கு அருள வேண்டும் " என்று இரைஞ்சுகிரான் .

பாடல்

ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும்
அருந்தி உண்டு, எனக்கு; ஐய! ஈது அருளிடவேண்டும்

பொருள்


வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன்

வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன் 


சமாதானமாக  போகலாம் என்று தருமன் சொன்னதை கேட்டு பீமன் கோபம் கொள்கிறான். துரியோதனன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றவன் மேலும் சொல்லுவான்.

நம்மை காடு ஆள விட்ட அந்த துரியோதனன் உன்னை வெறுக்காதபடி அவனுக்கு வேறு ஒரு அரசை நான் தருவேன். அது எந்த  அரசு தெரியுமா ? அந்த விண்ணரசை அவனுக்கு தருவேன். அதனால் அவனும் உன் மேல் வெறுப்பு கொள்ள  மாட்டான்.

பாடல்

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன் 
                  காதல் மைந்தன் 
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ 
                  ஆளத் தருவன், இன்றே; 
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன், 
                  உனை வெறாதவண்ணம், 
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே 
                  வழங்குவேனே.

பொருள்


Thursday, August 29, 2013

இராமாயணம் - உய்யல் ஆவது ஓர் நெறி

இராமாயணம் - உய்யல் ஆவது ஓர் நெறி 


இராமனிடம் தசரதன்  வேண்டுகிறான்.  ஐயா, கடினமானதும், மிக நீண்டதுமான மூப்பு எனக்கு  வந்துவிட்டது. இந்த  அரசாட்சி என்ற சிறையை விட்டு வெளியேறி நான் பிழைக்கும் வழியை காண நீ எனக்கு உதவிட வேண்டும் என்றான்.

பாடல்

‘ஐய ! சாலவும் அலசினென் ; 
     அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது ; வியல் இடப்
     பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நிலச் சுமை உறு
     சிறை துறந்து, இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக,
     உதவிட வேண்டும்.

பொருள்

‘ஐய ! = ஐயனே

சாலவும் = ரொம்பவும்

அலசினென் = தளர்ந்து விட்டேன் 

அரும் = அரிய  இங்கு கடினமான என்று  கொள்ளலாம்

பெரு மூப்பும் = பெரிய  மூப்பு.அதாவது நீண்ட மூப்பு. எது நமக்கு பிடிக்காதோ அது நீண்டு கொண்டே போவது மாதிரி  இருக்கும். காதலிக்கு காத்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் யுகம் போல இருக்கும். அவளோடு இருக்கும் போது யுகமும் நொடி போல்  போகும்.


மெய்யது ஆயது = உண்மையை ஆராயப் போனால்

வியல் இடப் = பரந்த இந்த உலகம் என்ற

பெரும் பரம் = பெரிய பாரத்தை

விசித்த தொய்யல் = விசித்தல் என்றால் வலிந்து கட்டப்பட்ட. தொய்யல் என்றால்  துன்பம்.

மா நிலச் சுமை = பெரிய, நிலைத்த பாரத்தை

உறு = கொண்ட

சிறை துறந்து = சிறையை துறந்து

இனி யான் = நான் இனிப் போய்

உய்யல் ஆவது = பிழைக்கும் வழியை காண. உய்தல் என்றால் தப்பி பிழைத்தல். உய்வார்கள் உய்யும் வழி எல்லாம் உய்து அறிந்தோம், எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்  என்பது மணிவாசகம்

ஓர் நெறி புக = ஒரு நல்ல வழியில்  புக. நெறி என்றால் வழி. அது எப்படி நல்ல வழி என்று பொருள் கொள்வது என்றால் பெரியவர்கள் நெறி என்றால் நல்ல நெறி  என்றுதான் கொள்வார்கள்.  நெறி அல்லாத நெறி தன்னை நெறியாகக் கொள்வேனை என்பார்  மணிவாசகர். வழியே ஏகுக, வழியே மீளுக என்பது அவ்வை  வாக்கு.நல்ல வழியில் சென்று நல்ல வழியில் திரும்பி வர வேண்டும்.

உதவிட வேண்டும் = நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்

ஒரே ஒரு நரை முடியை காதோரம் பார்த்தான் தசரதன். அவனுக்கு மூப்பை பற்றி இவ்வளவு  கவலை.

நாமாக இருந்தால் ஒரு டை அடித்து சரி செய்து  விடுவோம்.

இயற்கைக்கு முரணாக வாழ்வதே வழியாகப் போனது நமக்கு. 

சக்ரவர்த்தி பதவி ஒரு சிறை, ஒரு பாரம் என்று நினைக்கிறான்  தசரதன். 60000  மனைவிகள், அளவற்ற செல்வம், புகழ் இது எல்லாம் பிழைக்கும் வழி அல்ல என்று  உணர்ந்தான்.

வாழ்க்கைக்கு வேறு ஏதோ வேண்டும் என்று நினைக்கிறான். அதைத் தேடித் போக   விரும்புகிறான்.

அரச பொறுப்பை நீ ஏற்றுக் கொண்டு எனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று இராமனிடம்  வேண்டுகிறான். 

காலம் வரும்போது பொறுப்பை இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். 

மிக மிக ஆழ்ந்து படிக்க வேண்டிய  பாடல்கள்.

பதவி, புகழ் ,  பணம்,செல்வம், செல்வாக்கு என்று ஓடிக்  கொண்டிருக்கிறோம். ஆனால்  அது அல்ல வாழ்வின் நோக்கம் என்று அதை ஆண்டு அனுபவித்தவன்    சொல்கிறான். அது சுமை, அது சிறை  என்கிறான். அந்த சிறைக்கு  செல்ல இத்தனை பேர் போட்டி போட்டுக்  கொண்டிருக்கிறார்கள். அந்த தண்டனை  கிடைக்கவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உள்ளே  இருப்பவன்,எனக்கு விடுதலை தா என்று  கெஞ்சுகிறான்.


சிந்தனைக்குரிய பாடல். 


Wednesday, August 28, 2013

வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன்

வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன் 


தருமன் , கிருஷ்ணனிடம், நாட்டில்  பாதி கேள், அது தராவிட்டால் ஐந்து ஊர் கேள், அதுவும் தராவிட்டால் ஐந்து வீடு கேள், அதுவும் தராவிட்டால் போரைக் கேள் என்று சொன்னான்.

அதை கேட்டு பீமன் கோபம்  கொண்டான்.அன்று அரசவையில் திரௌபதி வெட்கப் பட்டு வேதனையில் நின்றபோது , அண்ணா, நீ எங்களைத்  தடுத்தாய். நாம் காடு  போகவும்,அஞ்ஞாத வாசம் போகவும் நீயே காரணம்  ஆனாய். துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.


துரியோதன் கொடுமை  செய்தான். அந்த கொடுமையை எப்படியாவது சண்டைபோட்டு , அவனை வென்று, அந்த கொடுமைகளை குறைத்துக் கொள்ள  முடியும். ஆனால், அண்ணா, உன் அருள் உள்ளத்தினால்  படும் பாட்டை எங்களால் பொறுத்துக் கொள்ள  முடியவில்லை. அவன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.

பாடல்

விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
                                வெகுளே லென்று, 
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், 
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையாநின்றாய், 
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
                                    கஞ்சினேனே.

சீர்  பிரித்த பின்

விரி குழல் பைந்தொடி நாணி வேந்தர் அவையில் முறையிடும்  நாள்
                                வெகுளேல் என்று, 

மரபினுக்கும்  நமக்கும் குலம் உள்ள அளவும்  தீராத வசையே கண்டாய், 

எரிதழல்  கானகம் அகன்று பின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையா நின்றாய், 

அரவு உயர்த்தோன் கொடுமையினும்  முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே 



பொருள்


Tuesday, August 27, 2013

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள்

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள் 


பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் பாண்டவர்களுக்குத் தரவேண்டிய அரசை துரியோதன் தரவில்லை.

அவனிடம் தூது போகச் சொல்லி கண்ணனை பாண்டவர்கள் வேண்டினார்கள்.

முதலில் தருமன் வேண்டுகிறான்.....

"நீ எங்களுக்காகத் தூது சென்று நாங்கள் நினைப்பதை அவனிடம் சொல்லி,  எங்களுக்குச் சேர வேண்டிய பாகத்தை கேள். கொடுத்தால் நல்லது. நாட்டை கொடுக்க  மாட்டேன், போரை (war )க்  கொடுப்பேன் என்றால் அதுவும் நல்லது. நாடு அல்லது போர், இதில் இரண்டில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு வா " என்கிறான்.



பாடல்

நீதூதுநடந்தருளி யெமதுநினைவவர்க்குரைத்தானினைவின்வண்ணந்
தாதூதியளிமுரலுந் தண்பதியுந் தாயமுந்தான் றாரானாகின்
மீதூதுவளைக்குலமும் வலம்புரியுமிகமுழங்கவெய்யகாலன்
மாதூதர்மனங்களிக்கப்பொருதெனினும் பெறுவனிது வசையுமன்றே.


சீர் பிரித்த பின்

நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் 

தாதூ ஊதி அளி  முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின் 

மீது ஊது வளைக் குலமும்  வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்

மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றே 

பொருள்

நீ தூது நடந்து அருளி = நீ தூது சென்று அருளி

எமது நினைவு = நாங்கள் நினைப்பதை

அவர்க்கு உரைத்தால் = துரியோதனுக்கு உரைத்தால்

 நினைவின் வண்ணம்  = நினைத்த மாதிரி

தாதூ ஊதி = பூக்களில் உள்ள மகரந்தப் பொடிகளை ஊதி

அளி  முரலும் = வண்டுகள் முரலும்

தண் பதியும் = குளிர்ச்சியான இடமும்

தாயமும் = அதிகாரமும்

தாரானாகின் = தரவில்லை என்றால்

மீது = அதற்கு மேல்

 ஊது வளைக் குலமும் = சப்தமிடும் சாதாரண சங்குகளும்

வலம்புரிம் =  சிறந்த வலம்புரி சங்குகளும்

மிக முழங்க = மிகுந்த சப்த்தம் எழுப்ப

வெய்ய காலன் = கொடிய காலனின்


மா தூதர் = பெரிய தூதர்கள்

மனங் களிக்கப் = மனம் சந்தோஷப் படும்படி (ஏன் சந்தோஷம் ? போர் வந்தால் நிறைய உயிர்கள் கிடக்குமே...அடிக்கடி அலைய வேண்டாமே ...அந்த சந்தோஷம் )

பொருதெனினும் = போர் என்றாலும்

பெறுவன் இனிது = சந்தோஷமாக பெற்றுக் கொள்வேன்

வசையும் அன்றே = அது வசை பேச்சுக்கு உரியது அல்ல . உறவினனை கொன்றான் என்ற பழி வராது. போருக்கு அஞ்சி கானகம் போனான் என்ற பழியும் வராது.







திருக்குறள் - பாலோடு தேன்

திருக்குறள் - பாலோடு தேன் 


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

தமிழில் நிறைய காம இரசம் உள்ள புத்தகங்கள் உள்ளன. விடலைப் பருவத்தில் மாணவர்கள் அவற்றை மறைத்து மறைத்து வைத்துப் படிப்பார்கள். 

திருக்குறளிலும் காமத்துப் பால் உண்டு. ஒரு பையன் தன் தந்தையோடு அமர்ந்து படிக்கலாம். முகம் சுளிக்க வேண்டியது இல்லை. மறைத்து வைத்துப் படிக்க வேண்டியது இல்லை. 

 அதில் இல்லாத காமம் இல்லை....சைட் அடிப்பதில் இருந்து, கனவு, உண்ணாமல் மெலிவது, கண்டவுடன் கட்டி அணைப்பது, களவு, வதந்தி, புணர்ச்சி என்று எல்லாம் இருக்கிறது. 

அவை அனைத்தையும் விரசம் எங்கும் தட்டாமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார் ஜொல்லுவர் . 

அவள் தந்த முத்தம். 

அது எப்படி இருந்தது ? மிக மிக சுவையாக இருந்தது...

சுவை என்றால் எப்படி ? 

பால் சுவையாக இருக்கும்.  தேன் சுவையாக இருக்கும். அந்த இரண்டையும் கலந்தால்  அதன் சுவை எப்படி இருக்கும் ?

தனித்தனியாக இரண்டின் சுவையும் தெரியும். ஒன்றாகக் கலந்தால் அதன் சுவை தெரியாது. அது போல இருந்தது அவள் வாயில் ஊறிய நீர். 

அது மட்டும் அல்ல, பாலும் தேனும் கலக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு தனிச் சுவை  தோன்றும். ஏன் என்றால் பாலின் சுவையும் தேனின் சுவையும் தனித்தனியே எப்போதும் ஒன்று போல் இருக்காது.   அதுவும் அன்றி அவற்றை எந்த  விகிதத்தில் சேர்கிறோமோ அதற்க்கு தகுந்த மாதிரி சுவை  மாறும்.


அவள் முத்தமும் அப்படித்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை. 

பாலும் தேனும் அப்படியே எளிதாகக் கிடைப்பது இல்லை.  தேன் வேண்டும் என்றால்  கொஞ்சம் முயற்சி செய்ய  வேண்டும். 

இரண்டும் வற்றாமல் வந்து கொண்டே இருப்பது அல்ல. கொஞ்சம் கிடைத்த பின் நின்று போகும்.  இன்னும் வேண்டும் என்றால், பொறுத்து இருக்க வேண்டும். 

பொருள் 


பாலொடு = பாலோடு

தேன்கலந் தற்றே = தேன் கலந்த மாதிரி

பணிமொழி = பணிவான மொழி பேசும்

வாலெயி றூறிய நீர் = வாயில் உள்ள பல்/எயிறு ஊறிய நீர்

ஊறிய என்றால் மீண்டும் மீண்டும் சுரக்கும். ஊற்றுபோல் ஊறிக் கொண்டே இருக்கும். 

தொட்டனைதூறும் மணர்க் கேணி என்பதும் வள்ளுவம்.

இப்படி ஒரு 250 பாட்டு இருக்கு.


நேரம் கிடைத்தால் மூல நூலை படித்து நீங்களும் ஜொள்ளு விடலாம்....



Sunday, August 25, 2013

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே 




ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் 
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம் 
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் 
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.

சூர பத்மனை அழிக்க ஒரு பிள்ளை  வேண்டும்.அதை  சிவன்தான் உருவாக்க வேண்டும். சிவனோ தவத்தில்  இருக்கிறான். அந்த தவத்தை கலைக்க வேண்டும்.

என்ன  செய்வது என்று யோசித்த தேவர்கள், சிவனின் தவத்தை கலைக்க  காமனை அனுப்பினார்கள்.

காமனும்  சென்றான்.சிவன் நெற்றிக் கண்ணால்  வந்தான்.

சிவன் காமத்தை  கடந்தவன்.

பிள்ளை வேண்டும் என்றால் காமம் வேண்டும். என்ன செய்வது. ?

அபிராமி, சிவனுக்கு முருகனை படைக்கும் வல்லமையை தந்தாள் என்று பட்டர்  நாசூக்காக  சொல்கிறார்.

அகிலமும், வானும்,பூமியும் அறிய காமனை எரித்த சிவனுக்கு முருகனை உருவாக்கும்  சக்தி தந்த உன் வல்லமையே வல்லமை என்று அபிராமியை துதிக்கிறார்.

அவளும் காமத்தை ஆட்சி  செய்யும் காமாட்சி தான்...



பொருள்


ககனமும் = அண்ட சராசரங்களும்

வானும் = வானமும்

புவனமும் = இந்த பூமியும்

காண = காணும்படி

விற் காமன் = வில் பிடித்த மன்மதனின்

அங்கம் = அங்கங்களை

தகனம் முன் செய்த = முன்பு தகனம் செய்த

தவம் பெருமாற்கு = தவம்  கொண்டிருந்த பெருமானான சிவனுக்கு

தடக்கையும் =  தடக் கைகளும்

செம் முகனும் = செம்மையான முகங்களும்

முந்நான்கு = பன்னிரண்டு (தடக் கைகள் )

இருமூன்று = ஆறு (முகங்கள்)

எனத் தோன்றிய = என்று தொன்றிய

மூதறிவின் = முதிர்ந்த அறிவின்

மகனும் உண்டாயது அன்றோ? = பிள்ளை உண்டானது உண்டானது அன்றோ

வல்லி = வல்லி , கள்ளி

நீ செய்த வல்லபமே = உன்னுடைய திறமையான காரியமே

காமத்தை வென்ற காமேஸ்வரனுக்கும் அன்பை சுரக்க வைத்து, பிள்ளை உருவாக  வழி செய்தாள் என்றால் என்னே அவள் அன்பின் எல்லை.

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதியை ஒவ்வொரு வார்த்தையாக  படிக்கக் கூடாது....அதை முழுமையாக உணர வேண்டும்.     பட்டரின் மனதில் இருந்து அதைப் படிக்க வேண்டும்



இராமாயணம் - இராமனிடம் தசரதன் கேட்டுப் பெற்றது

இராமாயணம் - இராமனிடம் தசரதன் கேட்டுப் பெற்றது 


ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து,
     அன்புற நோக்கி,
‘பூண்ட போர் மழு உடையவன்
     பெரும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய ! 
     நிற் பயந்தெடுத்த யான், நின்னை
வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது’
     என, விளம்பும்.

முந்தைய ப்ளாகில் தசரன் தன் அரசை இராமனுக்கு தருவது என்ற நிச்சயித்த பின்,  அதற்கு தகுதியானவன் தானா என்று அவனை தன் தோளால்  அளந்தான் என்று பார்த்தோம்.

இராமன் தகுதியானவன் தான் என்று  அறிந்த பின், "இந்தா அரசாட்சி,   ஏற்றுக் கொள்" என்று கொடுத்து  விடவில்லை.

ஒரு வேளை இராமன் அரசாட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாவிட்டால் ? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைத்து விட்டால் ? இப்ப தானே திருமணம் முடிந்தது, இன்னும் கொஞ்ச நாள்  சந்தோஷமாக இருந்து விட்டு அப்புறம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டால் ?

பதவி  என்பது பெரிய  விஷயம். அதை சரியாக பரிபாலித்தவர்களுக்குத்தான் தெரியும்  அதன்  கஷ்டம்.

இராமா, நீ தான் மூத்த  மகன்,நீ தான் இந்த அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று  வலுக் கட்டாயமாக அவன் மேல் அரசை திணிக்கவில்லை.

ஒரு பெரிய பதவியில் இருப்பவன், வேலையை விடுவது என்று முடிவு செய்து விட்டால்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக்  கூடாது.

தனக்குப் பின் தகுதியான ஒருவனை கண்டு பிடித்து, அவன் விருப்பம் அறிந்து, அந்த பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அது தான் முறை.

தசரதன் , இராமனிடம்  கெஞ்சுகிறான்...நீ இந்த அரச பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று....

பொருள்
 

ஆண்டு = அங்கு

தன் மருங்கு இரீஇ = தன் அருகில் இருந்த இராமனை

உவந்து = மகிழ்வுடன்

அன்புற நோக்கி = அன்போடு பார்த்து

‘பூண்ட போர் மழு உடையவன் = எப்போதும் போர்க் கோலம் பூண்டு, கையில் மழு என்ற ஆயுதத்தோடு இருப்பவன் (பரசுராமன்)

பெரும் புகழ் குறுக =  அவனுடைய பெரிய புகழ் குன்றும்படி செய்த 

நீண்ட தோள் ஐய = நீண்ட நெடிய தோள்களை உள்ள ஐயனே

நிற் பயந்தெடுத்த யான் = உன்னை பெற்றெடுத்த யான்

நின்னை வேண்டி = உன்னை வேண்டி

எய்திட விழைவது ஒன்று உளது பெற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது

என, விளம்பும் = என்று சொல்லினான்

எவ்வளவு பெரிய பாரம்பரியம் இந்த நாட்டில் இருந்திருக்கிறது !

எல்லாவற்றையும் தொலைத்து விட்டோமோ என்று கவலையாக இருக்கிறது....



நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை

நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை 




ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப .

கல்வியை எப்படி கற்றுத் தர வேண்டும் என்று சொல்கிறார் பவணந்தியார்.

கல்வி கற்றுத் தரும் ஆசிரியனின் தகுதி, சொல்லிக் கொடுக்கும் இடம், மாணவனின் அறிவுத் திறம் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது கல்வி கற்றுத் தரும் முறை.

முதலில் சீர் பிரிப்போம்.


ஈதல் இயல்பு இயம்பும் காலை 
காலமும் இடமும் வால் இதனை நோக்கி 
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி 
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைந்து 
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து 
கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள 
கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப 

பொருள்


ஈதல் = கல்வி கற்றுத் தருதல்  என்பது தானம் தருவது போன்றது. அது வியாபாரம்  அல்ல. வேண்டுபவர்களுக்கு தானமாகக் கொடுப்பது ஈதல் எனப்படும்.

இயல்பு = அது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாக இருக்க வேண்டும்.

இயம்பும் காலை  = எப்படி என்று சொல்லுவது என்றால்


காலமும் = கல்வி கற்க சிறந்த காலத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.

இடமும் = படிக்கும் இடம் நன்றாக இருக்க வேண்டும்

வால் இதனை நோக்கி = இவற்றை நோக்கி

சிறந்துழி இருந்து = இதில் சிறந்தவற்றை தேர்ந்து எடுத்து

தன் தெய்வம் வாழ்த்தி = (ஆசிரியனின்) குல தெய்வத்தை வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் = எதை சொல்லிக் கொடுக்கப் போகிறோமோ அதன் பொருளை

உள்ளத்து அமைந்து = மனதில் அமைத்து....புத்தகத்தை பார்த்து சும்மா வாசிக்கக் கூடாது. ஆசிரியனின் மனதில் அந்த பாடமும், அதன் பொருளும் இருக்க வேண்டும். புத்தகம் , நோட்ஸ் இல்லாமல் பாடம் நடத்த வேண்டும்.

 
விரையான் = அவசரப் படக் கூடாது

வெகுளான் = மாணவனுக்கு புரியவில்லை என்றால், கோபிக்கக் கூடாது. மாணவன் தவறாக புரிந்து கொண்டாலோ, தவறு செய்தாலோ, அவன் மேல் கோபம் கொள்ளக் கூடாது

விரும்பி = விருப்பத்துடன் சொல்லித் தர வேண்டும். ஏதோ வாங்கின சம்பளத்திற்கு வேலை என்று இருக்கக் கூடாது

முகமலர்ந்து = மலர்ந்த முகத்துடன்

கொள்வான் கொள் வகை அறிந்து = மாணவனின் அறியும் திறம் அறிந்து

அவன் உள்ளம் கொள்ள = அவன் உள்ளத்தில் பாடம் ஏறும் வண்ணம்

கோட்டம் இல் மனதில் = கோட்டம் என்றால் வளைவு. குற்றம் இல்லாத மனத்தோடு

 நூல் கொடுத்தல் என்ப = நூலை சொல்லிக் கொடுத்தல் முறை

இன்றைய காலக் கட்டத்தில் இது எல்லாம் முழுவதுமாக முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை முயற்சிக்கலாம்.

எல்லா ஆசிரியருக்கும் இதை முதலில் சொல்லித் தர வேண்டும்.


எப்படி இருந்த இனம், இந்தத் தமிழ் இனம். எவ்வளவு சிந்தித்திருக்கிறார்கள்.



வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை

வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை 




வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.

நிறைய நல்ல விஷயங்களை நாளை செய்வோம், நாளை செய்வோம்  என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். நாளை வருமா ? வரும்போது நமக்கு நினைவு இருக்குமா ?

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார்  வள்ளுவர். அன்னைக்கு செய்துக் கொள்ளலாம் என்று . இருக்கக் கூடாது.  எப்போதும் அற வழியில் நிற்க வேண்டும் என்றார். 

கர்ணன் இறக்கும் தருவாயில் சொல்கிறான்...."கண்ணா, இறக்கும் தருணத்தில்   உன் திருவடிகளை வணங்கும் பேறு பெற்றேன், உன்னால் மதிகப் பெற்றேன், உன்  கைகளால் தீண்டப் பெற்றேன், உன் நாமத்தை உரைக்கும்  பேறு பெற்றேன்...இந்தப் பேறு உலகில் யாருக்கு கிடைக்கும் " என்றான். 

நினைத்துப் பாருங்கள்.  மரணம் நம்மிடம் சொல்லிவிட்டா வருகிறது. என்று , எப்படி வரும் என்று  நமக்குத் தெரியாது. 

அப்புறம் செய்யலாம் என்று நினைத்தது எல்லாம் அப் புறம் போய் விடும். கர்ணனுக்கு  இறக்கும் தருவாயில் இறைவனின் தரிசனம் கிடைத்தது, அவன் பெயரை சொல்லும்  புண்ணியம் இருந்தது, அவன் திருவடிகளைத் தொழ அவகாசம் இருந்தது, கிருஷ்ணனே அவனைத் தொட்டு அனுக்ரஹம் பண்ணினான்....

அதற்கு காரணம் அவன் செய்த கொடை , அவன் செய்த தர்மம்...மங்காத புகழையும் , முக்தியையும் கொடுத்தது....

பாடல் 


வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.


சீர் பிரித்த பின் 


வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப் பெற்றேன் மதி பெற்ற
             திரு உள்ளத்தால் தான் மதிக்கப் பெற்றேன்,
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப  மார்பும் 
             திருப்புயமும் தை வந்து தீண்டப் பெற்றேன் ,
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்து உணர்வுடன் உன் திரு 
             நாமம் உரைக்க பெற்றேன்,
யான் பெற்ற பெருந்தவப் பேற்றை என்னை அன்றி இரு நிலத்தில் 
             பிறந்தோரில் யார் பெற்றாரே 


பொருள்



Saturday, August 24, 2013

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல்

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல் 


சாகும் தருவாயில், எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று கூறாமல் இருக்கும் வரம் என்று கண்ணனிடம் கேட்டான். கண்ணனும் மகிழ்ந்து அந்த வரத்தை  தந்தான். பின் அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டினனான்.

கர்ணன் இறக்கும் செய்தி குந்திக்கு அசரீரி மூலம் தெரிய வந்தது.

கர்ணன், குந்தியிடம் வரம் வாங்கி இருந்தான், தான் சாகும் முன்னம், அவள் தன்னை அவள் மடியில் ஏந்தி பிள்ளை போல் அமுது ஊட்ட வேண்டும் என்று.

மனதை உருக்கும் அந்தப் பாடல்


என்றென்றே யமர்க்களத்தி னின்ற வேந்தர் யாவருங்
                   கேட் டதிசயிப்ப வேங்கி யேங்கி,
யன்றன்போ டெடுத்தணைத்து முலைக்க ணூற
               லமுதூட்டி நேயமுட னணித்தா வீன்ற,
கன்றெஞ்ச வினைந்தினைந்துமறுகா நின்ற கபிலையைப்போ
                      லென்பட்டாள் கலாபம் வீசிக்,
குன்றெங்கு மிளஞ்சாயன் மயில்க ளாடுங் குருநாடன்
                           றிருத்தேவி குந்திதேவி..

சீர் பிரித்த பின்


என்றென்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் 
கேட்டு அதிசயிப்ப ஏங்கி ஏங்கி 
அன்போடு எடுத்து அணைத்து முலைக் கண் ஊற 
அமுது ஊட்டி நேயமுடன் ஆ ஈன்ற 
கன்று ஏஞ்ச இனைத்து இனைந்து மறுகா நின்ற கபிலையைப் போல் 
எனப் பட்டாள் கபலாம் வீசி 
குன்று எங்கும் இளம் மஞ்சு சாயல் மயில்கள் ஆடும் குருநாடன் 
திருத்தேவி குந்திதேவி 

பொருள்


திருக்குறள் - எல்லா அறமும் ஒரே வரியில்

திருக்குறள் - எல்லா அறமும் ஒரே வரியில் 


 நாம்: ஐயா, வணக்கம். இந்த அறம் அறம் அப்படின்னு சொல்றாங்களே, அப்படினா என்ன ?

வள்ளுவர்: அதைத்தானே இந்த திருக்குறளில் சொல்லி இருக்கேன். படித்துப் பாரு...

நாம்: ஐயா, இந்த 1330 குறளையும் படித்து, அதுக்கு அர்த்தம் புரிஞ்சு...ரொம்ப நாள் ....ஆகும் போல இருக்கே...சட்டுன்னு, எளிமையா புரியும்படி சொல்லுங்களேன்...

வள்ளுவர்: அப்படியா...சரி...உனக்கு...சுருக்கமா அறம் அப்படினா என்னனு தெரியனும் அவ்வளவு தானே....

நாம்: ஆமாங்க ஐயா...

வள்ளுவர்: சரி சொல்றேன் கேட்டுக்கோ ... இரண்டே வரியில் சொல்றதுனா

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

நாம்: அப்படினா என்னங்க ஐயா ?


வள்ளுவர்: மனசுல ஒரு குற்றமும் இல்லாட்டி, அதுவே எல்லா அறமும் செய்த மாதிரிதான்.

நாம்: புரியலேயே ஐயா...இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

வள்ளுவர்: எல்லா குற்றங்களும், அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின் தான் வாக்கும்  செயலும்  அதை செயல்படுத்துகிறது.  நினைக்காத ஒன்றை பேசவோ செய்யவோ முடியாது அல்லவா ?

நாம்: ஆம்...

வள்ளுவர்:  எனவே,மனதில் மாசு, அதாவது, குற்றம் இல்லை இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.

நாம்: சரிதான் ஐயா ...ஆகுல நீர பிற என்று சொல்லி இருக்கிறீர்களே, அது என்ன ?


வள்ளுவர்: ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள். நீர என்றால் தன்மை உடைய என்று பொருள். பிற என்றால் மற்றவை.


நாம்: கொஞ்சம் விளக்க முடியுமா ?


வள்ளுவர்:  ஒருவன் மனதில் மாசை, அதாவது குற்றத்தை வைத்துக் கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக் குற்றத்தை மறைக்க செய்ததாகும். ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம், பகட்டு, விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.

மனதில் மாசு இல்லாதவன், விளம்பரம் வேண்டும் என்று கூட நினைக்க மாட்டான்...அவனிடம் ஒழுக்கம் இருக்கும், அன்பு இருக்கும், இரக்கம் இருக்கும், வேண்டாத படோபாடம் இருக்காது.

-------------------------------------

மனம் தான் எல்லாவற்றிற்கும் மூலம்.


விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி,

என்பார் மாணிக்க வாசகர்.  மனம் விலங்கு போன்றது.  நல்லது கெட்டது தெரியாது.  சுயநலம் கொண்டது.

Thursday, August 22, 2013

வில்லிபாரதம் - கர்ணன் கேட்ட வரம்

வில்லிபாரதம் - கர்ணன் கேட்ட வரம் 


பதினேழாவது நாள் போரில் கர்ணன் சண்டையிட்டு சோர்ந்து விழுகிறான். அப்போது கண்ணன் ஒரு வேதியர் உருவில் வந்து கர்ணனின் அனைத்து புண்ணியங்களையும் தானமாகப் பெற்றுக் கொள்கிறான். கர்ணனும் அதை மகிழ்வோடு தானமாக தருகிறான்.

பெற்றுக் கொண்டபின், கண்ணன் "உனக்கு வேண்டிய வரம் கேள் " என்று கூறுகிறான்.

கர்ணன் ஒரு வரம் கேட்கிறான்.

நாமாக இருந்தால் சொர்க்கம் வேண்டும் என்று கேட்ப்போம், இறைவன் திருவடி வேண்டும் என்றும் கேட்போம், பிறவா வரம் வேண்டும் என்று கேட்போம்...

கர்ணன் கேட்ட வரம்...."என்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு நானும் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் இதயம் தா " என்று கேட்கிறான்.

அவன் வரம் கேட்ட இடம் - தாய்க்கு மகன் இல்லை என்று ஆகி, தம்பிகளுக்கு அண்ணன் இல்லை என்று ஆகி, தவறு என்று தெரிந்தும் செஞ்சோற்று கடன் கழிக்க துரியோதனன் பின் போய் , பரசுராமனிடம் கற்ற வித்தையெல்லாம் மறந்து போய் , தாய் கேட்ட வரத்தால் அர்ஜுனனை கொல்லாமல் விட்டு, செய்த புண்ணியத்தை எல்லாம் தானமாகக் கொடுத்து விட்டு, அடி பட்டு, உயிர் போகும் நேரம்....

அவன் மனம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்க வேண்டும்....சாகும் போதும் மற்றவர்கள் மேல் கருணை.

பாடல்

மல்லலந்தொடையனிருபனைமுனிவன்மகிழ்ந்துநீவேண்டிய
                                       வரங்கள்,
சொல்லுகவுனக்குத்தருதுமென்றுரைப்பச்சூரன்மாமதலையுஞ்
                                     சொல்வான்,
அல்லல்வெவ்வினையாலின்னமுற்பவமுண்டாயினுமேழெழு
                                         பிறப்பு,
மில்லையென்றிரப்போர்க்கில்லையென்றுரையாவிதயநீயளித்

                                   தருளென்றான்.

சீர் பிரிக்காமல் புரிந்து கொள்வது கடினம்

மல்லல் அம்  தொடை அணி நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் 

சொல்லுக உனக்குத் தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் 

அல்லல் வெவ் வினையால் இன்னமும் உற்பவம் உண்டாயினும் ஏழேழு பிறப்பும் 

இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்து அருள் என்றான் 



பொருள்


Wednesday, August 21, 2013

இராமாயணம் - தோள் அளவு

இராமாயணம் - தோள் அளவு 




நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,
விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். 

பதவி என்பது சாதாரண விஷயம் அல்ல. பதவியை கொடுப்பதும் ஏற்றுக் கொள்வதும் மிகுந்த அக்கறையுடன் செய்யப் பட வேண்டிய விஷயங்கள். பதவியோடு கூடி பொறுப்பு  வரும். பொறுப்புகளை நிறைவேற்றும் போது தவறுகள் நிகழலலாம். பதவியின் பொறுப்பை உணராதவன்தான் பதவி பதவி என்று அலைவான்.

தசரதன், இராமனுக்கு அரசாட்சி என்ற பொறுப்பை,  அரச பதவியை தருவதற்கு முடிவு செய்து விட்டான்.  இராமனை அழைத்து வரச் சொன்னான். இராமனும் வந்தான்.

வந்தவனை கட்டித் தழுவினான்.

எதற்கு ? அன்பினாலா ? இல்லை.

இத்தனை வருடம் தசரதன் அரசை ஆண்டான்.  அந்த ஆட்சிப் பொறுப்பு அவன் தோளில் இருந்தது.   இப்போது அனுவம் எதுவும் இல்லாத இராமனிடம் அரசைக் கொடுக்கப் போகிறான். இராமனால் இந்த பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா ? அவன் தோள்களுக்கு அந்த வலிமை இருக்கிறதா என்று அறிய, அவனை அணைக்கும் போது  இராமனின்  தோளை தன் தோள்களால் அளந்து பார்த்தானாம்.

பொருள்



நலம் கொள் = நன்மைகள் நிறைந்த

மைந்தனைத் = மகனை (இராமனை)

தழுவினன்' என்பது என்? = தழுவினான், எதற்காக

நளிநீர் = கடல் சூழ்ந்த

நிலங்கள் = இந்த உலகத்தை

தாங்குறு நிலையினை = தாங்கக் கூடிய நிலையை

நிலையிட நினைந்தான் = அளவிட நினைத்தான்

விலங்கல் அன்ன திண் தோளையும் = மலை போன்ற தன்னுடைய தோளையும்

மெய்த் திரு இருக்கும் = உண்மையான திரு இருக்கும். அதாவது திருமகள் நிஜமாக இருக்கும்

அலங்கல் மார்பையும் = மாலை அணிந்த மார்பையும்

தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். = தனது தோளையும் மார்பையும் கொண்டு அளந்தான்


Tuesday, August 20, 2013

நன்னூல் - மாணாக்கன் தன்மை

நன்னூல் - மாணாக்கன் தன்மை 


நன்னூல்  ஒரு தமிழ் இலக்கண  நூல்.எழுதியவர் பவணந்தி  முனிவர்.

தமிழ் இலக்கணத்தை  எளிய முறையில் பாடல் வடிவில் தொகுத்து  .தரும் நூல்.

 அதில்,மாணாக்கர்களை தரம் பிரிக்கிறார் பவணந்தியார்.

முதல் இடை கடை என்று கடை என்று மூன்று நிலையாக மாணவர்களைப் பிரிக்கிறார்.


பாடல்

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.


பொருள் 

இராமாயணம் - நீங்கள் நல்லவரா? கெட்டவரா ?

இராமாயணம் - நீங்கள் நல்லவரா? கெட்டவரா ?


இப்படி ஒரு கேள்வியை கேட்டால் யாரும் தாங்கள் நல்லவர்கள் என்றே சொல்லுவார்கள். அது பெரும்பாலனவர்கள் விஷயத்தில் சரியாகவும் இருக்கும்.

ஒரு மிக சிறந்த நல்லவன், மிகப் பெரிய கெட்டவனாக மாற எவ்வளவு  ஆகும் ?

கைகேயி மிக மிக நல்லவள். தசரதன் அவள் மேல் உயிரையே வைத்து இருந்தான். அவளும் அவன் மேல் உயிரை வைத்து இருந்தாள் . அவன் போருக்குப் போனபோது கூட அவனை பிரிந்து இருக்க முடியாமல், அவன் கூடவே போருக்குப் போனாள் . அவனுக்கு தேர் ஓட்டினாள் .

இராமனை தன் மகனாக நினைத்து வளர்த்ததாள்.

இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை தசரதன் அவளுக்குத் தான் சொல்ல  வந்தான் .... இராமனைப் பெற்ற கோசலையிடம் கூட முதலில் சொல்ல  நினைக்கவில்லை.

அவளைப் பற்றி சொல்ல வந்த கம்பன், பாற்கடலில் கிடக்கும் இலக்குமி மாதிரி இருந்ததாள் என்றான்.

அப்படிப் பட்ட நல்லவள், அடியோடு மாற எவ்வளவு நேரம் ஆனது ?

கூனி மொத்தம் 24 பாடல்கள் சொல்லும் நேரம்தான் ஆனது.

மிக மிக நல்லவள்...மிக மிக கொடியவளாக மாறுவதற்கு மொத்தம் 24 பாடல்கள்தான் தேவைப்  பட்டது.

கொடியவர்களை, நல்லவர்களை எவ்வளவு சீக்கிரம் மாற்றி விடுவார்கள் என்பதற்கு  இது ஒரு  உதாரணம்.

கணவனின் உயிர்  போனது, அன்போடு வளர்த்த இராமன் காடு  போனான், யாருக்காக இவ்வளவும் கேட்டாளோ அந்த பரதன் அவளை தாயீர் அல்லீர் நோயீர், பேயீர் என்று அவளை வைது தீர்த்தான்....

அவ்வளவு கொடியவளாக கூனியின் 24 பாடல்கள் போதுமானதாய்  இருந்தது.

பால் போல் இருந்த அவள் மனம் திரிந்தது என்றான் கம்பன்.

பால்தான், ஆனால் அதில் ஒரு துளி புளிப்பு விழுந்தவுடன் தயிராக திரிவது போல அவள் மனம் திரிந்தது என்றான் கம்பன்.


பாடல்

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

பொருள்


Monday, August 19, 2013

இராமாயணம் - கடல் கடந்தவன்

இராமாயணம் - கடல் கடந்தவன்  


தசரதன்.

அவன் அனைத்தின் எல்லைகளையும் கடந்தவன்.


அவனிடம் உதவி என்று  வந்தவர்கள், கடல் போல, கணக்கில் அடங்கா அலை அலையாய் வந்து கொண்டு இருப்பார்கள். அந்த இரப்பவர்கள் என்ற கடலை தானம் கொடுத்தே கடந்து விட்டான். இனிமேல் தனம் பெற யாருமே இல்லை என்ற அளவிற்கு தானம் தந்தே இரப்போர் என்ற கடலை கடந்தான்.

அறிவு கடல் போன்றது. அந்தக் கடலையும் அவன் கடந்தான். எப்படி ? ஆய்வு செய்து ஆய்வு செய்து அறிவு அத்தனையும் அடைந்தான். இனி அறிய ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு ஆய்வு செய்தே கல்விக் கடலை கடந்தான்.

பகை எனும் கடல். பகைவர்கள் என்ற கடலை வாளால் சண்டையிட்டே கடந்தான். அவனுக்கு இனி யாரும் பகைவர்களே இல்லை என்ற அளவிற்கு அத்தனை பகைவர்களையும் வென்றான்.

ஆசை எனும் கடல். வாழ்க்கையின் போகம் எல்லாம் அனுபவித்தே கடந்தான்.   ஆசைக்கு  .அளவு இல்லை. ஆசை கடல் போன்றது. அதை நீந்தி கடந்தவர் யாரும் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக விரிந்து கொண்டே போகும்.  அளவற்ற ஆசை அனைத்தையும் அடைந்தவர் யாரும் இல்லை - தசரதனைத் தவிர. தசரதன் ஆசை எனும் கடலை அனுபவித்தே கடந்தானாம். இனிமேல் அனுபவிக்க எதுவும் இல்லை. அத்தனை ஆசைகளையும் அனுபவித்து விட்டான்.

பாடல்


ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 

பொருள்


Sunday, August 18, 2013

பெரிய புராணம் - தொழுது வென்றார்

பெரிய புராணம் - தொழுது வென்றார்


http://interestingtamilpoems.blogspot.in/2013/08/blog-post_17.html

இதற்கு முந்தைய ப்ளாகின் தொடர்ச்சி.

முத்தநாதன், கையில் உள்ள ஓலைச் சுவடி கட்டுக்குள் கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்தான்.

மெய் பொருள் நாயனார் அவருடைய அரண்மனை காவலர்களிடம் சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்களை தடுக்காமல் உள்ளே விட வேண்டும்  என்று.

முத்தநாதன், மெய் பொருள் நாயானார் இருக்கும் படுக்கை அறைக்கே வந்துவிட்டான். நாகரீகம் இல்லாதவர்கள், ஒரு வசதி இருந்தால் அதை எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு  உதாரணம்.

வந்தவன், சிவாகம இரகசியங்கள் உள்ள நூல் ஒன்று எனக்கு கிடைத்து இருக்கிறது. அதை தங்களுக்கு உணர்த்த அதை கொண்டு வந்துள்ளேன் என்றான்.

அவரும்,கண் மூடி, வாய் பொத்தி , அடக்கமாக அதை கேட்க  அமர்ந்தார்.

அந்த சமயத்தில், ஓலைச் சுவடிகள் வைத்து இருந்த கத்தியை எடுத்து மெய் பொருள் நாயனாரை கொன்றான்.

தெய்வப் புலவர் சேக்கிழார், கொன்றான் என்று  சொல்லவில்லை.கத்தியால் குத்தினான் என்று சொல்லவில்லை.

தீய செயல்களை, தவறான செயல்களை விவரித்து சொல்லக்  கூடாது. அப்படி சொன்னால், அறியாதவர்கள் கூட அதை செய்ய அது ஒரு தூண்டுதலாய் இருக்க முடியும்.

இன்றைய உலகில்  பார்க்கிறோம்,  தீமைகளும்,தவறுகளும் மிக மிக  தெளிவாக, விரிவாக செய்தித்  தாள்களிலும்,  நாவல்களிலும், சினிமாவிலும்  காட்டப்   படுகிறது.

இவற்றைப்  படிப்பவர்கள்,பார்பவர்கள் நாளடைவில் குற்றங்கள் மற்றும் தீய செயல்களைப் பற்றி அதிர்ச்சி கொள்வது  குறையும். அவை சாதாரணமான விஷயங்களாக  மாறும். செய்தால் ஒன்றும் தவறு இல்லை என்ற எண்ணம் தோன்றும்.

சேக்கிழார் சொல்கிறார் "தான் முன் நினைத்தபடி செய்தான்" . அவ்வளவு தான்.
சதக் சதக் என்று குத்தினான், குபுக் குபுக் என்று இரத்தம் வந்தது என்று அந்த குற்றத்தை விவரிக்காமல் நாசூக்காக சொல்லி  விடுகிறார்.


மெய் பொருள்

கைத்தலத்து இருந்த வஞ்சக்
     கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று    
     புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
     பொருள்எனத் தொழுது வென்றார் 

பொருள்

கைத்தலத்து = கையில் இருந்த

இருந்த = இருந்த

வஞ்சக் கவளிகை =  வஞ்சகமான சுவடிக் கட்டை

மடிமேல் வைத்துப் = மடிமேல் வைத்து

புத்தகம் அவிழ்ப்பான் போன்று = புத்தகம் அவிழ்ப்பான் போன்று
   
புரிந்து = செயல் புரிந்து

அவர் வணங்கும் போதில்  = அவர் வணங்கி இருந்த போது

பத்திரம் =  கத்தி, உடை வாள்

வாங்கித் = எடுத்து

தான்முன்  நினைந்த = தான் முன்பு நினைத்த

அப் பரிசே செய்ய = அந்த எண்ணத்தை செய்ய

மெய்த்தவ வேட மே = மெய் தவ வேடமே

மெய்ப் பொருள்எனத் தொழுது = மெய் பொருள் என தொழுது

வென்றார்  = வென்றார்

அவர் கத்தியால் குத்துப் பட்டு  இறந்தார். ஆனால் சேக்கிழார் சொல்கிறார் - அவர் வென்றார் என்று. 

கொண்ட கொள்கையில்  நிற்பது, அதற்காக உயிரையும் கொடுப்பது தோல்வி  ஆகாது.

அதுதான்  வெற்றி.

நம்பிக்கை - ஒரு மிகப் பெரிய  சக்தி. 

இலக்கியங்கள், நம் மனதில் நல்ல விதைகளை நாளும் விதைக்கின்றன.   என்றைய விதை  நம்பிக்கை.



Saturday, August 17, 2013

பெரிய புராணம் - மை பொதி விளக்கு

பெரிய புராணம் - மை பொதி விளக்கு 


முடிவுகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா ?

கொள்கைக்காக உயிர் துறப்பது வெற்றியா, தோல்வியா ?

நாட்டுக்காக ஒருவன் போராடி உயிர் துறக்கிறான். அவன் வென்றவனா ? தோற்றவனா ?

ஒரு மாணவன் மிகுந்த கவனத்தோடு, இரவும் பகலும் கண் விழித்து படிக்கிறான்.  ஏதோ ஒரு காரணத்தால் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற முடியவில்லை.ஓரிரு மதிப்பெண்கள் குறைந்து  போகிறது. அவன் வெற்றி பெற்றவனா ? தோல்வி அடைந்தவனா ?

I I t , cut off mark  கிடைக்கவில்லை என்று பிள்ளைகளை நாம்  கோபித்து கொள்கிறோம். பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து இருந்தாலும் மதிப்பெண்கள் வராவிட்டால் எல்லாம் போய் விட்டது என்று கவலைப்  படுகிறோம்.பிள்ளகைளை திட்டுகிறோம்.

 படிப்பு, விளையாட்டு, உத்தியோக உயர்வு என்று  எங்கு பார்த்தாலும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று உலகம் மாறி விட்டது.

அது சரிதானா ?

புராணங்கள் நமக்கு வழி  காட்டுகின்றன.

பெரிய புராணத்தில் ஒரு  கதை. மெய் பொருள் நாயனார் என்பவரின் கதை.

மெய் பொருள் நாயனார் என்று  அரசன்  இருந்தார். சிறந்த சிவ பக்தர்.

அடியார்கள் சேவையே தன் சேவை என்று வாழுந்து வந்தவர்

சிவனடியார்களை காண்பதுதான் மெய் பொருள் என்று எண்ணி வாழ்ந்த உத்தமர்.

அவருக்கு ஒரு எதிரி இருந்தான். முத்தநாதன் என்பது அவன்  பெயர். அவன் மெய்பொருள் நாயனாரோடு பல முறை சண்டையிட்டு தோற்றவன்.

அவரை, நேரடி சண்டையில் வெல்ல முடியாது என்று எண்ணி, ஒரு சூழ்ச்சி  செய்தான்.

சிவனடியார் போல் வேடமிட்டு அவருடைய அரண்மனையை அடைந்தான்.

பாடல்

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப் 
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்


பொருள்


Friday, August 16, 2013

திருக்குறள் - அறம் என்பது என்ன

திருக்குறள் - அறம் என்பது என்ன 



A big misunderstanding. I never said that we should join all the bad people and correct them or perish in that attempt.. But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.

அதற்காக நான் தீயவர்களோடு சேர்ந்து நானும் கேட்டு போக போகிறேன்என்று நான் சொல்லவே இல்லை. கெட்டவர்கலுக்கும் திருந்த ஒரு வழி இருக்க வேண்டும், வழி நடத்த சில நல்லவர்கள் முன் வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

கெட்டவர்கள் திருந்த என்ன செய்ய வேண்டும் ?  அவர்களோடு  சேர்ந்து, பழகி, உறவாடி அவர்களை திருத்த வேண்டும் என்று நினைப்பது தவறான ஒரு வழி.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேல் அழகர் அறம் என்பது என்ன என்று பற்றி ஒரே வரியில் விளக்கம்  தருக்கிறார்.

பரிமேல் அழகரைப் போல் திருக்குறளுக்கு இன்னொருவர் உரை செய்ய  முடியாது.


அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

இது பரிமேலழகரின் அறம் என்பது என்ன என்பது பற்றிய  விளக்கம்.

அறம் என்றால் மனு போன்ற நூல்களில்  ,சொன்னவற்றை செய்வது, அது செய்யக் கூடாது என்று   சொன்னவற்றை  செய்யாமல்  இருப்பது.

அது மட்டும்  அல்லாமல், அந்த அறம் என்பது  ஒழுக்கம்,வழக்கு, தண்டனை என்று  மூன்று பகுதிகளை  கொண்டது.

கெட்டவர்கள் என்பவர்கள் அற வழியில் செல்லாமல், அறம் அல்லாத வழியில்  செல்பவர்கள்.

அவர்கள் ஒழுக்கம்  அற்றவர்கள்.

அப்படி ஒழுக்கம் அற்றவர்களை எப்படி திருத்துவது என்றும் பரிமேலழகர்  கூறுகிறார்.

ஒழுக்கம் தவறியவர்களுக்கு அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த  இரண்டு விதிகள் இருக்கிறது.

ஒன்று வழக்கு. இன்னொன்று தண்டம்.

வழக்கு என்பது அவர்கள் வழுவிய அறத்தை விசாரித்து அறிவது.

அறிந்த  பின்,அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த அவர்களுக்குத் தண்டனை  விதிக்க வேண்டும் என்கிறார்.

பரிமேலழகர்  அற வழியில் இருந்து பிறழந்தவர்களை சீர் திருத்த பெரியவர்கள் அவர்களோடு பழகி, அவர்களுக்கு நல்லுரை கூறி, அவர்களை திருத்த வேண்டும் என்று  சொல்லவில்லை.

ஒருவன் குற்றம்  செய்தான் என்று தெரிந்தால் அவனை தண்டித்துத்தான் திருத்த வேண்டும்.  அவனோடு  பழகி,உறவாடி அவனை நல்வழிப் படுத்த வேண்டும் என்றும் யாரும் சொல்ல வில்லை.

உலகில் எந்த தண்டனைச் சட்டமும் கெட்டவர்களை திருத்த நல்லவர்கள் அவர்களோடு பழகி உறவாட வேண்டும் என்று சொல்லவில்லை.

தவறுக்கு தண்டனைதான் சரியான வழி.

கொலையில் கொடியாரை வெந்து ஒறுத்தல் பைங்கூழ் கழை கட்டதனோடு நேர் என்றார் .

களையை பிடுங்கி எறிய  வேண்டும். இல்லாவிட்டால் நல்ல பயிரையும் அது கெடுத்து   விடும்.




 But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.

Why to stop the question there ?

How about Jails ? Cells ? etc.  If a person raped a girl or killed somebody, should not there be any options fro them to correct or guide ? Why we hang the killers ? or why we put them in jail ?

Instead, we should ask good people to go and build relationship with them and change them. In other words, when somebody does something wrong, we should punish the good people in the country by forcing them to build relationship with those bad people and rectify them.

A country which does not punish the wrong doers and mandate the good people to rehabilitate those bad people, will flourish.

All tax evaders, murderers, rapists, drug smugglers, thieves, terrorists should be given unlimited options. They never should be put in jail. All good people should put all their effort to rehabilitate them.

Great idea !

Valluvar should be turning in his grave.


திருக்குறள் - சுற்றத்தார் கண்ணே உள

திருக்குறள் - சுற்றத்தார் கண்ணே உள 


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.

வர வர திருக்குறள் பற்றி எழுதவே அச்சமாக இருக்கிறது. 

பெரியவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள் என்று வள்ளுவர் கூறினார் என்றால், அப்படி என்றால் தீயவர்களை எப்படி திருத்துவது....நாங்கள் தீயவர்களோடு சேர்ந்து, அவர்களோடு உறவாடி, அவர்களை திருத்தப் போகிறோம்...வள்ளுவர் கிடக்கிறார், அவருக்கு என்ன தெரியும்...நாங்கள்  ஆள் என்று சில பேர் கிளம்பி விடுகிறார்கள். 

திருக்குறளைப் படித்து கெட்டு போக சிலர் தயாராக இருக்கிறார்கள். 

இவர்கள் மத்தியில் மேலும் குறள்களை சொல்ல அச்சமாக இருக்கிறது. 

வள்ளுவர் கள் உண்ணாதே என்று  இருக்கிறார் என்றால், அப்படி என்றால் கள் இறக்குபவன், அதை விற்பவன் பாடு என்ன ஆவது. அவர்களுக்கு யார் உதவி செய்வார்கள். எனவே,நான் கள்  குடித்தே தீருவேன் என்று ஆரம்பித்தால் என்ன செய்வது?

திருடாதே என்று சொன்னால்...பின் காவல் காரர்களுக்கும், நீதி பதிகளுக்கும் யார்  வேலை தருவார்கள். அவர்களைப் பற்றி இந்த வள்ளுவருக்கு அக்கறை இல்லை.  அவர்களுக்கு வாழ்வு அளிக்கவாவது நான் திருடப் போகிறேன் என்று கிளம்பி விடுவார்களோ என்று  பயமாக இருக்கிறது. 

அறம் சொல்லுவது கடினமான வேலைதான் போல் இருக்கிறது. 

விதுரன் சொன்னதை கேட்கவில்லை துரியோதனன். சகுனி சொன்னதைக் கேட்டான். 

வசிஷ்டர் சொன்னதை கேட்கவில்லை கைகேயி, கூனி சொன்னதை கேட்டாள் . 

விபீஷணன் சொன்னதை கேட்கவில்லை இராவணன், சூர்பனகை சொன்னதை கேட்டான். 

அததற்கு நேரம் வர வேண்டும் என்று நினைக்கிறேன். 

நான் யோசிப்பது உண்டு...ஏன் நம் முன்னோர்கள் தாங்கள் அறிந்த இரகசியங்களை  எல்லோருக்கும் சொல்லிப் போகவில்லை என்று. 

இப்போது தெரிகிறது. 

பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டி இருக்கிறது. 

குழந்தையிடம் வைரத்தை கொடுத்தால் அதுக்கு என்ன தெரியும். தூக்கிப் போட்டு விடும். நாள் ஆக வேண்டும், வைரத்தின் மதிப்பு தெரிய. 

குறள் படித்து சிலர் கெட்டுப் போக நான் காரணமாக இருக்க வேண்டுமா என்று  யோசித்துக் கொண்டிருக்கிறேன்.....


அபிராமி அந்தாதி - அவளை வணங்கினால் கிடைக்காதது

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

அபிராமியை வணங்கினால் எல்லாம் கிடைக்கும் ஆனால் இரண்டு விஷயம்  .கிடைக்காமல் போகும். அபிராமியை வணங்காதவர்களுக்கு கிடைக்கும், ஆனால் அவளை வணங்குபவர்களுக்கு கிடைக்காது.

அவை என்ன ?

ஒன்று, மறு பிறவி

இரண்டு, இன்னொரு தாயார்

மீண்டும் பிற்பதாய் இருந்தால் தானே இன்னொரு தாய் வேண்டும். மறு பிறவியே இல்லை என்றால் எதற்கு இன்னொரு தாய் ?

இந்த இரண்டும் அபிராமியின் பக்தர்களுக்கு கிடைக்காது. மத்தது எல்லாம் கிடைக்கும்.

எல்லாம் கிடைக்கும் என்றால், என்ன எல்லாம் கிடைக்கும் ?

ரொம்ப ஒண்ணும் இல்லை - கற்பக மரத்தின் நிழலில் தங்கும் நிலை கிடைக்கும். கற்பக மரம்  நினைப்பதை எல்லாம் தரும். எனவே, கற்பக மரத்தின் நிழலில் தங்குவது என்றால் நினைப்பது எல்லாம்   நடக்கும்.

 சரி,அந்த கற்பக மரத்தின் நிழலில் எவ்வளவு நாள் தங்குவது ? ஏதோ கொஞ்ச  காலம்  தங்கி பின் அங்கிருந்து போய் விட வேண்டுமா ?

கற்பக மரம் வானுலகில்  இருக்கிறது.அங்கு போன பின், மீண்டும் பிறவியே கிடையாது . நிரந்தரமாய் அங்கேயே இருக்க வேண்டியதுதான். மறு பிறவியும் கிடையாது, இன்னொரு தாயாரும் கிடையாது.

யாருக்குக் கிடைக்கும் ?

 அபிராமிக்கு பூஜை பண்ணுபவர்களுக்கா ? அவளை போற்றி பாடுபவர்களுக்கா ?

இல்லை.

பின் ?

கூந்தலில் நிறைய பூக்களை சூடியிருக்கும் அபிராமியின் அழகை மனதில் நினைத்துப் பார்பவர்களுக்கு, அது எல்லாம் கிடைக்கும். சும்மா, அந்த வடிவழகை நினைத்துக் கொண்டே இருந்தால் போதும்....

பொருள்


Thursday, August 15, 2013

தாயுமானவர் - சிங்காரம்

தாயுமானவர் - சிங்காரம் 



உன்னைச் சிங்காரித்து உன்னழகைப் பாராமல் 
என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே 

 இறைவா,உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.

சரி.இதில் என்ன  பிரமாதம்.  இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

தாயுமானவர், மிக  பெரியவர். உண்மை உணர்ந்த  ஞானி.

ஏன் இறைவனை அலங்கரிக்கிறோம் ? ,கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின்   சிலையை, படத்தை  துடைத்து,அபிஷேகம்  பண்ணி,  பூவாலும்,சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் பண்ணுகிறோம் ?

இறைவன்  பவனி வரும்  பல்லக்கு,தேர் போன்றவற்றையும் நாம் அலங்காரம் பண்ணுகிறோம்...ஏன் ?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம்  பண்ணு என்று இறைவன் கேட்டானா ? இல்லையே ...பின் எதற்கு அந்த அலங்காரம் ?

மனித மனம் அலைபாயக்  கூடியது.ஒரு  இடத்தில் நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு தியானம்  தேவை.

மனக் கட்டுப்பாடு அவ்வளவு எளிதில் வருவது  இல்லை.

முதலில் மனதை  ஒன்றின் மேல் படிய  , பதிய வைக்க வேண்டும். மனம் அதில் இலயிக்க வேண்டும். அதிலேயே கலக்க வேண்டும்.

அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம்.

கோவில் நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம்,சொற்பொழிவுகள் என்றும்,

மூக்குக்கு இனிமையாக  கற்பூரம்,ஊதுபத்தி, மலர்கள் என்றும்,

நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும்,

உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும்,

கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்ப்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள்,அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.


இறைவனை எவ்வளவுக்  எவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை.

நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா ...அது போல்.

குழந்தைகளுக்கு அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ.

மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்க்கிறோம்,அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்....

அப்படி அழகை இரசிக்கும் போது மனம் இலயிக்கிறது ...மனம் ஒன்று  படுகிறது. ஆவல்  எழுகிறது.

ஒன்றை இரசிக்கும் போது,  இரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி கொள்கிறோம்...கண்ணை மூடி  இரசிக்கிறோம்...அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும்  ...இரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை .அனுபவிக்கிறோம்..

இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது , அதில் இலயித்து அதை அப்படியே மனதில்  காண்போம்.

அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

 எனவே, உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் , அழியும் இந்த உடலை அலங்காரித்து  இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.  


தாயுமானவர் இது போல் 389 பராபரக் கண்ணிகளை எழுதி இருக்கிறார்.ஒவ்வொன்றும் ஆழ்ந்த கருத்துகளை  உடையது.

 மூல   நூலைப் படித்துப்  பாருங்கள்.


Wednesday, August 14, 2013

திருக்குறள் - இனத்தால் உண்டாகும் இன்னான் என்ற சொல்

திருக்குறள் - இனத்தால் உண்டாகும் இன்னான் என்ற சொல் 


மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா 
மின்னா னெனப்படுஞ் சொல்.

சீர் பிரித்த பின்

மனத்தானாகும் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாகும்
இன்னான் எனப்படும் சொல்

பொருள்

மனிதர்களுக்கு உணர்ச்சி மனத்தால் உண்டாகும்.

ஒருவன் இன்னவன் என்ற சொல் அவன் சேரும் இனத்தால் வரும்.

நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால், நல்லவன் என்ற பெயர் கிடைக்கும்.

கெட்டவர்களோடு சேர்ந்து இருந்தால், அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று கூட, கெட்டவன் என்ற பெயர் கிடைக்கும்.

மனிதனின் உணர்சிகள் அவன் மனதில் இருந்து பிறக்கிறது. மனம் நல்லது கெட்டது அறியாதது. சுத்தமான நீர் போன்றது.

நீர் சேரும் இடத்திற்கு தகுந்த மாதிரி மாறுவது போல மனிதர்கள் சேரும் இடத்தை  பொறுத்து மாறுகிறார்கள்.

நல்லவர்களோடு சேரும்போது நல்லவர்களாகவும்
தீயவர்களோடு சேரும்போது தீயவர்களாகவும் மாறி விடுவார்கள்.


இன்னும் சொல்லப் போனால், மனிதர்கள் மாறுவது இல்லை, அவர்கள் மாறிவிட்டதாக  இந்த உலகம் சொல்லும்.

இன்னான் எனப்படும் சொல்

என்கிறார்  வள்ளுவர்.

கெட்டவர்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் உலகம் கெட்டவன் என்றே  "சொல்லும்"

(இந்த குறள் பற்றி மேலும் எழுத ஆசை....)

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?


குசேலரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது எனக்கு.

வீட்டில் வறுமை. 27 பிள்ளைகள். அவர் ஒண்ணும் பெரிதாக வேலைக்குப் போய் சம்பாதித்தாகத் தெரியவில்லை.

பிள்ளைகள் அது வேணும், இது வேணும் என்று நாளும் கேட்டு தொந்தரவு செய்கின்றன.

சாதரணாமாக ஒரு பெண் என்ன செய்வாள் ?

கணவனை முதலில் திட்டித் தீர்பாள். அடுத்தது பிள்ளைகள் மேல் எரிந்து விழுவாள். ஏதோ பிள்ளைகள் பெறுவதும் , கணவனை குறை கூறுவதும் தான் தன்  முழு நேர வேலை என்று நினைத்துக்கொண்டு.

குசேலரின் மனைவி....

....வறுமை என்ற கடலில் அழுந்தினாலும், தன் கணவனை வெறுத்து பேச மாட்டாள், அவன் மேல் ஒரு பழியும் சொல்ல மாட்டாள், பிள்ளைகளை ஒரு சிறிதும் கடிந்து பேச மாட்டாள். இந்த வறுமை கடலை எவ்வாறு கடப்பது என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பாள்.....

பாடல்


இவ்வாறு மிடியென்னும் பெருங்கடலுள்
          அழுந்தியுந்தற் கினிமை சான்ற
செவ்வாய்மை அந்தணனை வெறுத்துரையாள்
          அலர்மொழிகள் சிறிதும் செப்பாள்
துவ்வாமை மைந்தர்கள்பால் மறந்துமியற்
          றாளவள்தன் சுகுணம் என்னே 
எவ்வாறித் துயர்க்கடல்நீந் துவமெனுமோர்
          எண்ணமுளத் தென்றும் உண்டால்.

பொருள் 

Monday, August 12, 2013

பாரதியார் - கடவுள் எங்கே ?

பாரதியார் - கடவுள் எங்கே ?


பாடல்

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

ஒரு நாள் ஒரு சீடன் பாரதியிடம் கேட்டான், குருவே, நான் இறைவனைக் காண வேண்டும். அவர் எப்படி இருப்பார் ? எங்கே இருப்பார் ? இராமர்  போல, கிருஷ்ணர் போல, சிவன் போல, திருமால் போல இருப்பாரா ? கோவிலில்,  குளத்தில்,மரத்தில், மலையில் ...எங்கே காணலாம் அவரை என்று கேட்டான்.

பாரதி பதில் சொன்னான்....வேதாந்தத்தின் உச்சம் அந்த  பாடல்கள்.

கடவுள் என்பவர் இரவி வர்மா வரைந்த படங்களில் உள்ளதைப் போல இருக்க மாட்டார்.

இந்த உலகம்  எல்லாம் அவன் படைத்தது என்பதால் எல்லாவற்றிலும் அவன் இருப்பான். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எல்லாம் மனிதனின் மடமை. எல்லாம் அவன் படைத்தது . அதில் உயர்வு ஏது , தாழ்வு ஏது ?

பாரதி  சொல்கிறான்.

 கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;


கழுதையை, கீழான பன்றியை, தேளைக் கண்டு தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும். 

சிவன் எங்கு இருக்கிறான்...எப்படி இருப்பான்....அழுக்கை சுமக்கும் கழுதை, அழுக்கை  உணவாக உண்ணும் பன்றி, விஷத்தை கக்கும் தேள் அவற்றின் பாதத்தில் சிவன் இருக்கிறான். 

சொன்ன பின் பாரதி யோசிக்கிறான்...அடடா எல்லாம் இறைவனின் அம்சம் என்று  சொல்ல வந்த நானே தவறு செய்து விட்டேனே என்று  நினைக்கிறான். கழுதையை  வெறுமனே சொன்ன பாரதி பன்றியை கீழான பன்றி என்று சொல்லி  விட்டான். விலங்குகளுக்குள் என்ன உயர்வு தாழ்வு.....

 தவறை திருத்துகிறான் அடுத்த வரியில் 

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

குப்பையையும் மலத்தையும் வணங்க வேண்டும்  என்றான்.அதிலும் கடவுள் இருக்கிறான். கடவுள் என்பவன்  வில்லேந்தி,சங்கு சக்கரம் ஏந்தி, திரி சூலம் ஏந்தி  வருபவன் அல்ல. கூளத்திலும் மலத்திலும் இருப்பவன். 

மீண்டும் பாரதி யோசிக்கிறான்.  அடடா மீண்டும் தவறு நிகழ்ந்து விட்டதே...அது என்ன  இறைவனை கழுதை, பன்றி, தேள், கூளம் , மலம் என்று சொல்லி ..வருகிறேன்..

ஏன்  குயிலை, மயிலை,  சந்தனத்தை, வைரத்தை,தங்கத்தை சொல்லாமல் விட்டு  தாழ்ந்த பொருள்களையே சொல்லிக் கொண்டிருக்கிறோமே ... என்று நினைக்கிறான்....அடுத்த வரியில் அதையும் திருத்துகிறான் .....

கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

சுற்றியுள்ள எல்லா பொருளும் தெய்வம் என்றான். 

பொருளே தெய்வம் என்றால் உயிர்களை என்ன  சொல்லுவது ? 

நீங்கள் வேண்டி விரும்பி வணங்கும் கடவுள் உங்களை சுற்றி எல்லா இடத்திலும்  இருக்கிறான். நீங்கள் தான் அவற்றை விட்டு விட்டு நீங்கள் நினைத்த  வண்ணத்தில் இறைவன் வேண்டும் என்று அடம்  பிடிக்கிறீர்கள். அப்படி வர வில்லை என்றால்  இறைவனை நீங்கள் ஏற்றுக் கொள்ள  மாட்டீர்கள். 

நீங்கள் விரும்பிய வண்ணம்  இராமனாகவோ,க்ரிஷ்ணனாகவோ, எசுவாகவோ  இறைவன் வர வேண்டும்....இல்லை என்றால் அவன் இறைவன் இல்லை, உங்களைப்  பொருத்தவரை.

விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே

கடவுள் விண்ணில் மட்டும் அல்ல, மண்ணும் அவனே.  

கோவிலை விடுங்கள் - விக்ரகங்களை விடுங்கள் - படங்களை விடுங்கள் - 

எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர பிரமத்தை உணருங்கள். 

ஓர் உருவம் ஓர் நாமம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ! ....என்பார் மணிவாசகர்.

அவனுக்கு எத்தனை பெயர்கள்  ... மரம், செடி, கொடி , வண்டி, காவல்  காரன்,பால் காரன்,  தபால் காரன், வேலைக்காரி, வாத்தியார், நண்பன்,  மாணவி,  கணவன், பிள்ளைகள், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவன்....

ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ....

இராமாயணம் - நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள்

இராமாயணம் - நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள் 


சீதை மேலும் சொல்லுகிறாள் மாறு வேடத்தில் வந்த இராவணனிடம், "தீயவர்களோடு சேர்ந்தவர்கள் நல்லவர்கள் அல்லர். சொல்லப் போனால், தூயவர்கள், நல்லவர்கள், என்றும் காலம் காலமாக தொடர்ந்து வரும் அற வழியில் நிற்பார்கள். தீயவர்கள் ஒரு நெறியில் நிற்க மாட்டார்கள். இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று இருப்பார்கள். இதை எல்லாம் அறிந்த சீதை, அவர்கள் கொள்கை மாறுவார்கள் என்று அறிந்தாள் , ஆனால் உருவமும் மாறுவார்கள் என்று அறியவில்லை.

தீயவர்களோடு சேர்ந்து, அவர்களை நல் வழிப் படுத்துவோம் என்று நல்லவர்கள் நினைக்க மாட்டார்கள். நல்லவர்கள், தூய்மையானவர்கள் என்று சொன்னாலே அவர்கள் தீயவர்களோடு  சேராதவர்கள் என்று அர்த்தம். மாறி சேர்ந்து விட்டால், என்ன காரணத்திற்காகவும், அவர்கள் நல்லவர்கள் அல்லாதவர்களாக மாறி விடுவார்கள்.

பாடல்  

சேயிழை-அன்ன சொல்ல,-'தீயவர்ச் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொல்  நெறி தொடர்ந்தோர்' என்றாள்;
'மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க' என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின், அயல் ஒன்று எண்ணாள். 

பொருள்


சேயிழை = சிறந்த அணிகலன்களை பூண்ட சீதை

அன்ன சொல்ல = இராவணன் , அப்படி சொல்லக் கேட்டு

'தீயவர்ச் சேர்தல் செய்தார் = தீயவர்களோடு சேர்ந்தவர்கள்

தூயவர் அல்லர் = நல்லவர்கள் அல்லர். அது என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சை விட்டால் அது அந்த பாலை கெடுக்குமே அன்றி தான் நல்லதாக மாறாது.

சொல்லின்= சொல்லப் போனால்

தொல்  நெறி தொடர்ந்தோர்' என்றாள் = நல்லவர்கள், பழைய, காலம் காலமாக இருந்து வரும் அற வழியில் செல்பவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள். தீயவர்களோ கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நேற்று ஒரு வாழ்க்கை என்று வேறு ஒன்று என்று இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு வழி  முறை கிடையாது. பாதைகள் நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.


'மாய வல் அரக்கர் வல்லர் = மாயங்கள் செய்யும் அரக்கர்கள் வல்லவர்கள்

வேண்டு உரு வரிக்க' என்பது = விரும்பிய உரு எடுக்க வல்லவர்கள் என்று

ஆயவள் அறிதல் தேற்றாள் = அவள் அறிந்து இருக்கவில்லை

ஆதலின், அயல் ஒன்று எண்ணாள்.  = ஆதலால் வேறு ஒன்றும் அவள் நினைக்கவில்லை

சீதை வாயிலாக கம்பன் ஒரு பாடம் நடத்துகிறான்....

1. நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள். அப்படி சேர்ந்தால் அவர்கள் நல்லவர்கள் இல்லை. 

2. நல்லவர்கள் என்றும் ஒரு வழியில் நடப்பார்கள்.

4. தீயவர்கள் அடிக்கடி தங்கள் கொள்கைகளை, வழிகளை மாற்றிக் கொள்வார்கள். அவர்களை நம்ப முடியாது.

5. கொள்கைகளை மட்டும் அல்ல, அவர்கள் உருவத்தையும் மாற்றிக் கொள்வார்கள். உருவம் என்றால் நடை  , உடை, பாவனை, தோளில் போடும் கட்சித் துண்டு , எல்லாம் மாறும். நேற்றுபோல் இன்று இருக்க மாட்டார்கள். 

6. அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பவன் நல்லவன் அல்ல. 

"அவனை நம்பி மோசம் போய் விட்டேன் "

"அவன் இப்படி மாறுவான் என்று நான் நினைக்கவே இல்லை "

"எப்படி இருந்தான், இப்ப எப்படி மாறிப் போய் விட்டான்...கைல நாலு காசு வந்ததும் ஆளே  அடையாளம் தெரியாம மாறிட்டான் "

என்று மோசம் போனவர்கள் பேசக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ?


Sunday, August 11, 2013

இராமாயணம் - வரம்பு இலான் மறுமொழி

இராமாயணம் - வரம்பு இலான் மறுமொழி 


இராவணன் கபட சந்நியாசி  வேடத்தில் வந்து சீதையிடம் தான் இலங்கையில் இருந்து வருவதாகவும் அங்கு ஆட்சி செய்யும் இராவணன் மிகச் சிறந்த பலசாலி என்று  கூறியதோடு அல்லாமல் அவன் சிறப்புகளை மேலும் மேலும் எடுத்துக்  கூறினான்.

சீதை கொஞ்சமும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவள் இராவணனிடம் திருப்பி " நீங்கள் இந்த தவ முனிவர்கள் இருக்கும் கானகத்திலோ அல்லது புனிதர்கள்  வாழும் நகரத்திலோ இருந்து இருக்கலாமே...அதை விட்டு விட்டு ஏன் அரக்கர்கள் வாழும் இலங்கையில் போய் இருந்தீர்கள் " என்று கேட்டாள் ....

இராவணன் சொல்கிறான் 

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு
     இலான், "மறுவின் தீர்ந்தார், 
வெங் கண் வாள் அரக்கர்" என்ன 
     வெருவலம்; மெய்ம்மை நோக்கின், 
திங்கள் வாள் முகத்தினாளே! 
     தேவரின் தீயர் அன்றே; 
எங்கள் போலியர்க்கு நல்லார் 
     நிருதரே போலும்' என்றான்.

" குற்றமற்ற அவர்களை கொடுமையான வாள் வீசும் அரக்கர் என்று கூறினாலும்  நான் அஞ்ச மாட்டேன்...உண்மையை  அறியப் போனால் சந்திரனைப் போல் ஒளி வீசும்   முகம் கொண்டவளே அவர்கள் (அரக்கர்கள்) தேவர்களை  விட கொடியவர்கள் அல்லரே...எம் போன்றோருக்கு அரக்கர்களே   நல்லவர்கள் "


பொருள்

மங்கை = சீதை

அஃது உரைத்தல் = அப்படி சொன்னதை

கேட்ட = கேட்ட

வரம்பு  இலான் = எல்லை  இல்லாதவன். வரம்பு என்றால் நெறி, ஒழுக்கம் என்ற உண்டு. அவன் ஆற்றலுக்கு வரம்பு இல்லை. அவன் அரசுக்கு எல்லை இல்லை. அவனும் எந்த எல்லைக்கும் உட்பட்டவன் அல்ல . கம்பனின் வார்த்தை விளையாட்டு

 "மறுவின் தீர்ந்தார் = மறு என்றால் கறை . மறுவின்  தீர்ந்தார் என்றால் குற்றமற்றவர்கள்

வெங் கண் வாள் அரக்கர் = வெம் கண் என்றால் வெம்மையான கண். அருள் இல்லாத, கருணை இல்லாத கண்கள் என்று ஒரு பொருள். வெங்கண் என்றால் பாவம். பாவம் உள்ள வாளைக்  கொண்ட அரக்கர்கள்

என்ன   வெருவலம் = அப்படி சொன்னால் அச்சப்  படமாட்டோம் அல்லது கவலைப் பட மாட்டோம்

மெய்ம்மை நோக்கின், = உண்மையை சொல்ல வேண்டும் என்றால்

திங்கள் வாள் முகத்தினாளே! = சந்திரனைப் போல் ஒளி வீசும் முகத்தை கொண்டவளே

தேவரின் தீயர் அன்றே = (அவர்கள்) தேவர்களை விட   தீயவர்கள் அல்லவே

எங்கள் போலியர்க்கு = எங்களைப் போன்றவர்களுக்கு. எங்களைப் போன்ற போலியானவர்களுக்கு என்றும்  அர்த்தம் சொல்லலாம்


 நல்லார் = நல்லவர்கள்

நிருதரே போலும்' என்றான் அரக்கர்களே என்றான்


Saturday, August 10, 2013

திருவாசகம் - வானாகி மண்ணாகி

திருவாசகம் - வானாகி மண்ணாகி 


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்  வீடு,என்  மனைவி, என்  மக்கள்,என் செல்வம்,   நான் எவ்வளவு  ஆள், எவ்வளவு படித்தவன், எவ்வளவு புத்திசாலி என்று மனிதன் நான் எனது என்று சொந்தம் கொண்டாடுகிறான்.

 எது அவன் சொந்தம் ? எது அவன் உடமை ? மனிதன் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மை என்று அறிந்தான் இல்லை. எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று  நினைக்கிறான்.

அப்படி நினைப்பவர்களையும் ஆட்டுவிப்பவன் அந்த  இறைவன்.

அவனை எப்படி வாழ்த்துவது ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? வாழ்த்துவது என்று முடிவு செய்து விட்டால் என்ன சொல்லி வாழ்த்துவது.

மாணிக்கவாசகர் திகைக்கிறார் ....

சீர்  பிரித்த பின்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


பொருள் 

வானாகி = வானமாகி

மண்ணாகி =  பூமியாகி

வளியாகி = காற்றாகி

ஒளியாகி = வெளிச்சமாகி

ஊனாகி = உடலாகி

உயிராகி = உயிராகி 

உண்மையுமாய்  = உண்மையானவையாகி

இன்மையுமாய் = உண்மை இல்லாதனவாகி

கோனாகி = எல்லாவற்றிற்கும் அரசனாகி

யான் எனது என்றவரை = நான் எனது என்று கூறுபவர்களை

கூத்தாட்டு வானாகி = கூத்தாடுபவனாகி. உயிர்களை எல்லாம் ஆட்டுவிப்பவன் அவன்.

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்பார் நாவுக்கரசர்.

தில்லையுட் கூத்தனே தென் பாண்டி நாட்டானே என்பது மணிவாசகம்

 கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவர் யார் தருவார் அச்சோவே என்பதும் மணிவாசகம்

நின்றாயை = நின்ற தாய் போன்றவனை 

என்சொல்லி வாழ்த்துவனே = என்ன சொல்லி வாழ்த்துவேன் ?

தேவாரம் - மீண்டும் பிறந்தால் மறப்பேனோ ?

தேவாரம் - மீண்டும் பிறந்தால் மறப்பேனோ ?




துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்

மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே. 

உயிருக்கு இந்த  உடல் மேல் தீராத  காதல். விடவே  விடாது. இருப்பினும் ஒரு நாள் நான் இந்த உடலை விட்டு விட்டு கால தூதரோடு வானுலகம் போவேன். போன பின், என்  வினைப் பயனால் மீண்டும் வந்து பிறப்பேன். இறப்பதற்கோ, வானுலகம் போவதற்கோ, மீண்டும் வந்து பிறப்பதற்கோ எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஆனால், அப்படி மீண்டும் வந்து  போறது , இறைவா உன்னை மறந்து விடுவேனோ என்று என் மனம் கிடந்து மறுகுகிறது .

சீர் பிரித்த பின்

துறக்கப் படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு 
இறப்பன் , இறந்தால் இரு விசும்பு ஏறுவன் , ஏறி வந்து 
பிறப்பன் , பிறந்தால் பிறை அணிவார் சடை  பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே 

பொருள்

துறக்கப் படாத உடலை = துறப்பதற்கு கடினமான இந்த உடலை

துறந்து = துறந்து

வெம் தூதுவரோடு = வெம்மையான (காலனின் ) தூதுவர்களோடு

இறப்பன் = இறப்பேன் 

இறந்தால் = இறந்தபின்

இரு விசும்பு ஏறுவன் = வானுகலம் போவேன் 

ஏறி வந்து = அங்கு போன பின்

பிறப்பன் = மீண்டும் பிறப்பேன் 

பிறந்தால் = அப்படி பிறந்தால்

பிறை அணிவார் = பிறைச் சந்திரனை அணியும்.

நிலவு உலாவிய நீர் மலி வேனியன் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்

சடை = சடை முடி கொண்ட

பிஞ்ஞகன் =  அழிப்பவன்.எதை அழிப்பவன் ? நம் பாவங்களை, நம் இருவினை பயன்களை, நம் பிறவித் தொடரை  அழிப்பவனை.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க என்பார் மணிவாசகர் 

பேர் மறப்பன் கொலோ = ஒரு வேளை  மறந்து போவேனோ

என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே = என்று என் உள்ளம் கிடந்து மயங்குகின்றது

திருநாவுக்கரசருக்கே இந்த கதி என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் 




Thursday, August 8, 2013

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க 


தமயந்தியைப் பார்த்த பின் நளன் பிரிந்து சென்று  விட்டான்.

தமயந்தி  வாடுகிறாள்.

அவள் உள்ளம் அவன் பின்னே போய்  விட்டது.அதனால் அவள் நாணமும் சென்று விட்டது.  பேச்சில்லை.கண்ணில் நீர் வற்றி விட்டது.  தளிர் போன்ற அவள் உடல்  வேகிறது. மன்மதன் பூவால் செய்த கணைகளை அவள் மேல்   விடுகிறான்.அது அவளின் உள்ளத்தை  அரிக்கிறது. அவள் உயிரும்  சோர்கிறது.

பாடல்

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல்-பிள்ளைமீன்
புள்ளரிக்கு நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்.


பொருள்

உள்ளம்போய் = அவள் உள்ளம் அவன் பின்னே போய் விட்டது

நாண்போய் = அதனால் நாணமும் போனது

உரைபோய் =  மனமும்,நாணமும் போனதால் திகைத்து அவள் பேச்சு மூச்சு அற்றுப் போய் விட்டாள்

வரிநெடுங்கண் = நீண்ட நெடுங்கண்

வெள்ளம்போய் = கண்ணீர் வற்றிப் போய்

வேகின்ற மென்தளிர்போல் = வெயிலில்   மென்மையான தளிரைப் போல்

பிள்ளைமீன் = மீன் குஞ்சுகளை

புள்ளரிக்கு = கொக்கு உண்ணும்

நாடன் திருமடந்தை= நாட்டைச் சேர்ந்த அரசனின் (வீமன்) மகளான தமயந்தி

பூவாளி = பூவால் செய்யப்பட்ட அம்பு

உள்ளரிக்கச் = உள்ளத்தை அரிக்க

 சோர்ந்தாள் உயிர் = உயிர் சோர்ந்தாள்

இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர்

இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர் 




வனத்திடை மாதவர் 
     மருங்கு வைகலிர்; 
புனல் திரு நாட்டிடைப் 
     புனிதர் ஊர் புக 
நினைத்திலிர்; அற 
     நெறி நினைக்கிலாதவர் 
இனத்திடை வைகினிர்; என் 
     செய்தீர்!' என்றாள்.

சீதை மேலும் கபட வேடத்தில் இருக்கும் இராவணனிடம் வினவுகிறாள்....

தவம் செய்யும் முனிவர்கள் வாழும் கானகத்தில்   வாழவில்லை. சரி காடுதான் வேண்டாம் என்றால், நீர் நிரம்பிய, புனிதர்கள் நிரம்பிய ஊர்களிலாவது வாழ்ந்து  இருக்கலாம்.அதை எல்லாம் விட்டு விட்டு 
அற நெறியை பற்றி நினைக்கக் கூட செய்யாத அரக்கர்கள் வாழும் இடத்திற்குச் சென்றீர், இது என்ன செயல் என்று  வினவினாள் .

பொருள்



வனத்திடை = கானகத்தில்

 மாதவர் = பெரிய தவம் செய்யும் முனிவர்கள்

மருங்கு வைகலிர்= அவர்களோடு சேர்ந்து இருக்க நினைக்கவில்லை 

புனல் = நீர் நிரம்பிய 

திரு நாட்டிடைப்  = சிறந்த நாட்டில்

புனிதர் ஊர் புக =நல்லவர்கள் வாழும் ஊரில் சென்று வாழ 

நினைத்திலிர் = நினைக்கவில்லை

அற நெறி நினைக்கிலாதவர் = அற  நெறிகளை பற்றி நினைக்கக் கூட செய்யாத

இனத்திடை வைகினிர் = அது போன்ற இனத்தவர்கள் (அரக்கர்கள்) இடையில் சென்று இருந்தீர்


என் செய்தீர்!' என்றாள். = என்ன காரியம் செய்தீர்கள் என்றாள்

நல்லவர்களோடு இருக்க  வேண்டும். தீயவர்களோடு இருக்கக் கூடாது என்ற  கருத்தில்.

ஏன், நல்லவர்கள் தீயவர்களோடு கலந்து பேசி அவர்களை நல்லவர்களாக ஆக்கக் கூடாதா ? பின் கெட்டவர்கள் எப்படிதான் நல்லவர்களாக  ஆவது என்று கம்பனுக்குத்  தோன்றவில்லை.நம்மில் சில பேருக்கு அப்படித்  தோன்றலாம்.

ஹ்ம்ம்...என்ன செய்வது....

Wednesday, August 7, 2013

குசேலோபாக்கியானம் - ஊர் வளம்

குசேலோபாக்கியானம் - ஊர் வளம் 


 எத்தனையோ இலக்கியங்களில் ஊர் வளம் பற்றிப் படித்து இருக்கிறோம். ஆனால்,   குசேலோபாக்கியானம் போல ஒரு வர்ணனையை பார்த்து  இருக்க
முடியாது.

இந்த பொருள்களில் என்ன சுகம் இருக்கிறது என்று அவற்றை வெறுத்து துறவறம் போனவர்கள் கூட இந்த ஊருக்கு வந்தால் அடடா நாம் இதை எல்லாம் இழந்து விட்டோமே என்று எண்ணி வருந்தும் அளவுக்கு அந்த ஊரில் செல்வம் நிறைந்து  கிடந்தது.

சரி, துறவிகள் பாடு அப்படி என்றால் இல்லறத்தில் இருப்பவர்கள் சங்கடம் வேறு  மாதிரி  இருந்தது.அந்த ஊரில் உள்ளவர்கள் விருந்து என்று  வந்தாலும் விருந்தினர்களை நன்றாக உபசரித்து அவர்களுக்கு நிறைய பரிசுகள்  தருவார்கள். இப்படி கையில் இருந்ததை எல்லாம் மற்றவர்களுக்குத் தந்துவிட்டு அவர்கள் ஏழையாகப் போய் மற்றவர்கள் சிரிக்கும்படி  ஆகி,   யாரும் கண் காணாத இடத்திற்கு துறவியாகப் போய்  விடுவார்கள்.

இப்படி துறவிகள் இல்லறத்தானைப் பார்த்து ஏங்க , இல்லறத்தில் உள்ளவர்கள் துறவியாகப் போக எண்ண , அந்த ஊரில், போகத்தை விற்கும் பெண்கள் நிறைந்த  தெருக்கள்  பல இருந்தன.

பாடல்

 துறவறத் தடைந்தோ ரில்லந்
          துறந்தமைக் கிரங்க இல்லத்
     துறவிருக் கின்ற மாந்தர்
          உள்ளன வெல்லாம் ஈந்து
     பிறர்நகை பொறாமல் அந்தப்
          பெருந்துற வடையப் போகந்
     திறமுற விற்கும் மின்னார்
          செறிதருந் தெருக்கள் பல்ல.


சீர்  பிரித்த பின்

துறவரத்து அடைந்தோர் இல்லம்
இல்லம் துறந்தமைக்கு இரங்க

இல்லத்து உறவிருக்கின்ற  மாந்தர்
 உள்ளன எல்லாம் ஈந்து
பிறர் நகை  பொறாமல் அந்த
பெரும் துறவு அடைய

போகம் திறமுற விற்கும் மின்னார்
செறி தரும் தெருக்கள் பல்ல
 
அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....




Tuesday, August 6, 2013

திருக்குறள் - நிலமும் நீரும்

திருக்குறள் - நிலமும் நீரும் 



நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.

போன குறளில் பெருமை சிற்றினம் கண்டு அஞ்சும் என்று  பார்த்தோம்.

சிலருக்கு அதில் சந்தேகம். எல்லோரும் நமக்கு ஏன் வம்பு என்று விலகி விட்டால் கெட்டவர்களை யார் திருத்துவது என்று ?

வள்ளுவர் சொல்லுகிறார்....

நம் அறிவு இருக்கிறதே அது  நீர் போன்றது. அது எந்த நிலத்தில் விழுகிறதோ அந்த நிலத்தின் தன்மையை  பெரும்.

செம்மண் நிலத்தில் விழுந்தால் செந்நீராக மாறும்.

கரிசல் காட்டில் விழுந்தால் கரிய நீராக மாறும்.

திரிதல் என்றால்  மாறுதல்.பால் திரிந்து விட்டது என்றால் பால் அப்படியேதான் இருக்கும், அதன் குணம்  மாறிப் போகும்.

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்  மாந்தர்க்கு
இனத்து இயல்பாகும் அறிவு

நிலத்தோடு சேர்ந்த நீரின் குணம்  மாறுவது போல மக்களுக்கு அவர்கள் சேர்ந்த  இனத்தால் அறிவு மாறும்.

 நல்ல  அறிவு வேண்டும் என்றால் நல்ல இனத்தோடு சேருங்கள்.

அப்படி நல்ல அறிவு வேண்டாம் என்றால் மற்ற இனத்தோடு சேருங்கள். கெட்டவர்களை  திருத்துவது உங்கள் நோக்கம் என்றால் கெட்டவர்களோடு
பழகுங்கள் அவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, உங்கள் அறிவு மாற்றம்  அடையும்.

நீர் திரிந்து அற்றாகும் என்றார். அது என்ன அற்றாகும் ? அற்றம் என்றால் முடிவு. அறிவு அற்றம் காக்கும்  கருவி என்பது  வள்ளுவம்.

நீர் திரிந்து போவது மட்டும் அல்ல, அது அதன் முடிவை அடையும். அழிந்து போகும்.

அது போல கெட்டவர்களோடு சேர்ந்த நல்லவர்களின் அறிவும் அழிந்து போகும்.

  

இராமாயணம் - உடலும் மிகை

இராமாயணம் - உடலும் மிகை 




வேதமும் வேதியர் அருளும் வெ·கலா
சேதன மன் உயிர் தின்னும், தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏது என்?-உடலமும் மிகை என்று எண்ணுவீர்!

சந்நியாசி வேடத்தில்  இராவணன், அவன் பெருமையை அடுக்கிக் கொண்டே போகிறான். எல்லாம் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட இராவணன் வாழும் ஊரில்  வருகிறேன்  என்று சீதையிடம்  சொல்கிறான்.

இதையெல்லாம் கேட்டு சீதை மயங்குவாள் என்பது அவன் எண்ணம்.

ஆனால் சீதை கேட்கிறாள்.....

"தங்கள் உடலை கூட சுமை என்று நினைக்கும் முனிவரே, வேதத்தையும், வேதம் பயின்ற முனிவர்களையும் விரும்பாமல், உயிர்களை தின்னும் அந்த ஊரில் நீங்கள் ஏன் போய் இருந்தீர்கள் ?" என்று.

இவ்வளவு பெரிய அமைதியான கானகம் இருக்கிறது. இதை விட்டுவிட்டு அரக்கர்கள் வாழும் அந்த நகரத்திற்கு எதற்கு போனீர்கள் என்பது அவள் கேள்வி.

அரக்கர்களுக்கு (=கெட்டவர்களுக்கு ) நல்லதும் பிடிக்காது, நல்லவர்களையும் பிடிக்காது. அவர்கள் மனிதர்களை தின்பவர்கள்.

முனிவர்களுக்கு ஒரு விதி சொல்கிறான் கம்பன். அவர்கள் இந்த உடலை கூட சுமையாக   நினைப்பார்களாம். அவ்வளவு மெலிந்த உடலே சுமை என்று நினைக்கிறார்கள். நம்ம உடம்பை என்ன என்று சொல்லுவது?

உடம்பு சுமை என்றால் எதற்கு சுமை ? மனதிற்கா? உயிருக்கா ?

போற போக்கில் கொளுத்தி போட்டு விட்டுப் போகிறான் கம்பன். யோசியுங்கள் என்று.

அறிவும், தவமும்  வளர வளர உடல்  மெலியும். சாப்பாட்டில் கவனம் குறையும். புலன் இன்பங்கள் மட்டுப் படும்.

உணவு மருந்தாகவிட்டால், மருந்து உணவாகும் என்று அவர்கள்  அறிந்திருக்கிறார்கள்.

பொருள்



வேதமும் = வேதமும்

வேதியர் அருளும் = வேதம் பயின்ற வேதியர்களின் அருளும்

வெ·கலா = விரும்பாத

சேதன = சேதனம் என்றால் வெட்டுதல். இங்கே பகுத்தல். பகுத்து அறிதல். பகுத்தறிவு உள்ள (மனிதர்களை) 

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

தின்னும் = தின்னும்

தீவினைப் =  தீய செயல்கள் செய்யும்

பாதக அரக்கர்தம் பதியின் = பாதகங்கள், பாவங்கள் செய்யும் அரக்கர்கள் வாழும் அந்த ஊரில்

வைகுதற்கு ஏது என்? = ஏன் தங்கினீர்கள் ?

உடலமும் மிகை என்று எண்ணுவீர்! =  உடலைக் கூட தேவை இல்லாத சுமை, அதிகம் என்று என்னும் முனிவராகிய நீங்கள் ?

உடலே தேவையில்லாத சுமை என்றால் பின் எதுதான்  தேவையானது ?  உடல் சார்ந்த    சுகங்கள், உடல் சார்ந்த உறவுகள் இவையும் தேவை இல்லாமல் போகும்தானே.....





Monday, August 5, 2013

இராமாயணம் - இராவணன் தன் பெருமை கூறல்

இராமாயணம் - இராவணன் தன்  பெருமை கூறல் 


இராவணன் சீதையிடம் தன் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகிறான்.

நம் அற நூல்கள், தற்பெருமை பேசுவது தற்கொலை செய்வது கொள்வதற்கு ஒப்பாகும் என்று கூறுகின்றன.  இராமாயணத்தில், அநேகமாக எல்லா பாத்திரங்களும் தற்பெருமை பேசுகின்றன...இராமன் உட்பட.

இராவணன் தன் பெருமைகளை கூறுகிறான் இங்கே.....

நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவரே;
சொல் பகும், மற்று, அவன் பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய நிதியம் கையன;
பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர்

பொருள்

Sunday, August 4, 2013

இராமாயணம் - ஆணவம்

இராமாயணம் - ஆணவம் 




'ஈசன் ஆண்டு இருந்த பேர் 
     இலங்கு மால் வரை 
ஊசி-வேரொடும் பறித்து 
     எடுக்கும் ஊற்றத்தான்; 
ஆசைகள் சுமந்த பேர் 
     அளவில் யானைகள் 
பூசல் செய் மருப்பினைப் 
     பொடிசெய் தோளினான்.

ஏதோ இராவணன் என்று ஒரு அரக்கன் இருந்தான், பெரிய பலசாலி, படித்தவன், அவன் சீதையை தூக்கிக் கொண்டு போனான், இராமன் அவனை கொன்று சீதையை  சிறை மீட்டான் என்பதுதான் இராமாயண கதையின் நோக்கமா ?

இதில் என்ன பெரிய கதையோ அர்த்தமோ இருக்கிறது. ஒருவனின் மனைவியை இன்னொருவன் கவர்ந்து சென்றால், மனைவியை பறி கொடுத்தவன் சண்டையிட்டு மீட்பது ஒன்றும் பெரிய விஷயமைல்லையே.


இதுக்கு ஒரு காப்பியமா ? அது ஏன் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது ?

கதை அதுவல்ல .

இராவணன் என்ற அரக்கன் வேறு யாரும் அல்ல. நீங்களும் நானும்தான்.

அளவுதான் வேறு, செய்யும் செயல்கள் எல்லாம் ஒன்றுதான்.

அவன் செய்ததில் எதை நாம் செய்யவில்லை ?

படித்தோம். அறிவு பெற்றோம்.

அவன் தவம் செய்து பல வரங்களை பெற்றான்.

நாமும்தான் கோவிலுக்குப் போகிறோம், தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். எதற்கு ? உலக நன்மைக்காகவா ? நமக்கு செல்வம்  வேண்டும்,  
,பதவி வேண்டும், புகழ் வேண்டும், இப்படி பல வரங்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவன் நாடு பிடித்தான்...நாமும்  போடுகிறோம், வீடு மேல வீடு வாங்குகிறோம்.

அவன் தேவர்களை வேலை வாங்கினான் ..நாம் நம் வீட்டு வேலை காரியை, வண்டி ஓட்டுபவனை, வீட்டு காவல்காரனை என்று வேலை வாங்குகிறோம்.

 அழகான பெண்ணை கண்டால் ஆசைப் படாதவன் யார் ?

அழாகான ஆணைக் கண்டால் ஆசைப் படாத பெண் யார் ?

காப்பியங்கள் எதையும் அதீத கற்பனையோடுதான் சொல்லும். அடிப்படையில்  நமக்குள் ஒன்றல்ல பல அரக்கர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால் ?

யோசித்துப் பாருங்கள்.

கபட சந்நியாசி வேடத்தில் வந்த இராவணன் சீதையிடம் இராவணின் (தன் ) பெருமையை   பற்றி சொல்லிக் கொண்டு போகிறான்.

சிவன் வாழும் கைலாய மலையை வேரோடு பிடுங்கி எடுத்த ஆற்றல் உடையவன்.

எட்டு திசைகளை சுமந்த யானைகளின் தந்தத்தை ஒடித்து பொடியாக்கியவன்   பேராற்றல்  பெற்றவன் என்று தன் பெருமைகளை  கூறுகிறான்.

ஆணவம்.

நீங்கள் என்றாவது உங்கள் திறமைகளை பெருமைகளை மற்றவர்களிடத்து  பட்டியல்  இட்டு இருக்கிறீர்களா ?

பொருள்


ஈசன் = சிவன்

ஆண்டு இருந்த = அன்று இருந்த

பேர்  இலங்கு மால் வரை = பெருமையுடன் விளங்கும் பெரிய மலையை (கைலாய மலை)

ஊசி-வேரொடும் பறித்து = ஆணி வேரோடு பறித்து 

எடுக்கும் ஊற்றத்தான் = எடுக்கும் வலிமை வாய்ந்தவன்

ஆசைகள் சுமந்த பேர் = திசைகளை சுமந்த பெரிய 

அளவில் யானைகள் = அளவிலான யானைகளின்

பூசல் செய் மருப்பினைப் = வலிய தந்தங்களை

பொடிசெய் தோளினான் = பொடிப் பொடியாக்கும் தோள் வலிமை கொண்டவன்

ஆணவம் அழிவுக்கு வழி கோலும். நாவுக்கரசர், தனது தேவாரத்தில் இராவணின்  ஆணவத்தைப் பற்றி பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.

நமக்குள் இருக்கும் இராவணனைப் பற்றி.



Saturday, August 3, 2013

திருக்குறள் - சிறியோரை சேராமை

திருக்குறள் - சிறியோரை சேராமை 


சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சீர் பிரித்த பின்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாகச் சூழுந்து விடும்

பொருள்

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். இது மு. வரதராசனாரின் உரை.

விரிவுரை

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், சிற்றனத்தை சேர்ந்தவர்களை கண்டால் அஞ்சுவார்கள். சிறியவர்களோ ஒருவரோடு ஒருவர் உறவாக  வாழ்வார்கள்.

சரி. சிற்றினம் என்றால் யார் ?

அறிவில் குறைந்தவர்களா ? ஆற்றலில் குறைந்தவர்களா ? பண்பாட்டு இல்லாதவர்களா ? செல்வத்தில் குறைந்தவர்களா ?

சிற்றினம் என்றால் யார் ?

அறிவை திரித்து, இருமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்கள் என்கிறார் பரிமேல் அழகர்.

நம் அறிவை குழப்புபவர்கள் சிற்றினத்தை சேர்ந்தவர்கள். தெளிவு இல்லாதவர்கள். அரை  குறை அறிவு  உள்ளவர்கள். ஒன்றும் தெளிவாக தெரியாவிட்டாலும்  எல்லாம் தெரிந்த மாதிரி  பேசுபவர்கள்.

இருமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்கள் என்றால் என்ன ?

இந்த  வாழ்விலும், இறப்பிற்கு பின் மறு வாழ்விலும் நமக்கு ஒரு   நன்மை இல்லாமல்   செய்பவர்கள் சிற்றினத்தை சேர்ந்தவர்கள்.

யோசித்துப் பாருங்கள். நம்மை குழப்பி, நமக்கு ஒரு விதத்திலும் நன்மை செய்யாதவர்களின் கூட்டு நமக்குத் தேவையா ?

குறள்  இன்னும் முடியவில்லை.

இந்த சிற்றினத்தை சேர்ந்தவர்களை கண்டால் பெரியவர்கள் அஞ்சுவார்கள் .

அதாவது, சும்மா ஒதுங்கிப் போனால் போதாது. அஞ்சி ஒதுங்க வேண்டும். அவர்களைப்  பார்த்தால்  பயப்படவேண்டும். எங்கே வந்து நம்மோடு ஒட்டிக் கொள்வானோ  அல்லது கொள்வாளோ என்று ஒரு பயம் இருக்க வேண்டும்.

வந்தால் வரட்டுமே, என்னை என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கக் கூடாது.  நம்மை கெடுத்து குட்டிச் சுவராக ஆக்கி விடுவார்கள்.

நாம் அவர்களோடு உறவாக இருப்போம். ஆனால் நாம் தப்பு தண்டா எதுவும் செய்யாமல்  இருந்தால் போதாதா என்று நினைக்கக் கூடாது. சிற்றினத்தை சேர்ந்தவர்களோடு  உறவாக இருப்பதே நம்மையும் அவர்களில் ஒருவனாக உலகம்  நினைக்கத் தலைப்படும். நாம் தவறே செய்யா விட்டாலும், நம் மீது பழி வந்து சேரும்.

எனவே, பெரியவர்கள், சிற்றனத்தை சேர்ந்தவர்களை கண்டால்  அஞ்சுவர்.

குறள்  இன்னும் முடியவில்லை.

பெரியவர்கள் அஞ்சுவார்கள். ஆனால் இந்த சிற்றினத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே  அவர்கள் ஒருவரோடு ஒருவர் உறவினர் போல் ஒன்றாக வாழ்வார்கள்.

கெட்டவர்கள் ஒரு முறை பழக்கம் கொண்டு விட்டால் பிடித்துக் கொள்வார்கள். ரொம்ப நாள் பழகிய உறவினர்கள் போல் நம்மை விட மாட்டார்கள்.

எனவே, சிற்றினம் சேர்ந்தவர்களை கண்டால் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்களோடு  ஏற்கனவே ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தால், வெட்டி விட  முயற்சி செய்யுங்கள்.

சிற்றினம் என்றால் திருடன், கொள்ளைக்காரன் என்று இல்லை, தெளிந்த அறிவு இல்லாதவர்கள், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை செய்யாதவர்கள்.

இன்னும் கூட முடியவில்லை இந்த குறள் ...இருப்பினும் விரிவஞ்சி இத்தோடு முடித்துக் கொள்கிறேன்....


Thursday, August 1, 2013

திருக்குறள் - பொய்யாமையும் செய்யாமையும்

திருக்குறள் - பொய்யாமையும் செய்யாமையும் 



பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன் பொய் சொல்லாமல் இருந்தால் அவன் மற்ற அறங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பொய்யாமையே பெரிய அறம் .

இருப்பதே ஏழு வார்த்தைகள். அதிலே இரண்டு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வரும்படி எழுதுவானேன்.

பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்று

என்று சொல்லி இருக்கலாம்தானே. பொருள் ஒன்றும் சிதையவில்லையே ? பின் எதற்கு அந்த வார்த்தைகளை இரண்டு தரம் சொல்லுவது ?

வள்ளுவர் சும்மா சொல்லுவாரா ?

பொய் சொல்லாமல் இருந்தால் மற்ற அறங்கள் செய்யத் தேவை இல்லை.

சரி. பொதுவாக நான் பொய் சொல்லுவது இல்லை, ஆனால் எப்போதோ, ஒரு சில சமயங்களில், கடினமான நேரங்களில், தர்ம சங்கடமான நேரங்களில் பொய் சொல்லுவது உண்டு. அது பரவாயில்லையா ? என்று கேட்டால் வள்ளுவர் சொல்கிறார்....

பொய்யாமை என்ற செயலை  பொய்யாமல் செய்ய வேண்டும். அது ஒரு போதும்  பொய்த்துப்  போகக் கூடாது. இந்த ஒரு தடவை தானே, அந்த ஒரு தடவை தானே  என்று சாக்கு சொல்லக் கூடாது.

பொய்யாமை , பொய்யாமை ஆற்றின். பொய்யாமையை பொய்யாமல் செய்தால்

சரி, பொய்யாமை பொய்யாமை புரிகிறது.

அது என்ன செய்யாமை செய்யாமை நன்று ?

ஒருவன் பொய்யாமை என்ற அறத்தை கடை பிடித்துக் கொண்டே மற்ற அறங்களையும்  செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி மற்ற அரண்களை செய்யும்போது  அதில் சில தீமைகளும், தவறுகளும் நிகழலாம். இவனால்  அவற்றை மறைக்க முடியாது ஏன் என்றால் அவன் பொய்யாமை என்ற அறத்தை  செய்து  கொண்டு இருக்கிறான். அந்த சிறிய தவறுகளால் அவன்  தண்டனை அடைய  நேரிடலாம். அவனைப் பிடிக்காதவர்கள், அந்த தவறுகளை பெரிதாக்கி அவனை அழிக்க நினைக்கலாம்.

எனவே, பொய்யாமை என்ற ஒரு அறத்தை பற்றி ஒழுகுபவர்கள், மற்ற அறங்கள்  எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

இது ஒரு செய்யாமை.

பொய்யாமை வழி  நிற்பவர்கள், மற்ற அறங்களை கடை பிடித்து அதில் தவறோ  தீங்கோ ஏற்பட்டால், அதன் மூலம் அவர்கள் தண்டனை அடைவார்கள், ஏன் என்றால் அவர்கள் அதை மறைக்க  மாட்டார்கள்.   இப்படி தண்டனை பெற்று, திருந்தி எல்லா தீவினைகளும் அவனை விட்டுப் போய் விடும். மற்ற அறங்களை செய்யாமல் இருப்பது என்பது தானகவே  நிகழும்.
அதாவது, செய்யாமை என்ற செயல் செய்யாமல் தானகவே நிகழும்.

அதாவது, கள் உண்ணாமை என்ற  அறம் இவன் முயற்சி எதுவும் செய்யாமலே  தானாகவே  நிகழும்.அதாவது இவன் கள்  உண்ணாமல் இருக்க எந்த முயற்சியும்  செய்ய வேண்டாம். செய்யாமை என்பது   பெரும்பாலும் முயற்சியால் விளைகிறது.

நான் இனிப்பு பண்டங்களை உண்ணாமல் இருக்க ரொம்ப முயற்சி எடுக்கிறேன். எனக்கு இனிப்பு பண்டங்கள் மேல் அவ்வளவு ஆர்வம். அதை உண்ணாமல்  இருக்க நான் ரொம்ப முயற்சி எடுக்கிறேன்.

ஆனால், களவு என்ற கெட்ட செயலை செய்யாமல் இருக்க நான் எந்த முயற்சியும்   எடுப்பது இல்லை. அது இயல்பாக நிகழ்கிறது.    ஒன்றும் செய்யாமல்  களவு செய்யாமை நிகழ்கிறது.

வள்ளுவர் ரொம்ப யோசித்து இந்த குறளை எழுதி இருக்கிறார்.

நீங்களும் யோசியுங்கள்