Showing posts with label Kandha Puraanam. Show all posts
Showing posts with label Kandha Puraanam. Show all posts

Thursday, November 21, 2019

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்


அவனுக்கு அவள் மேல் கொள்ளை காதல். எட்ட இருந்து, பார்த்து, இரசித்து , எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அவளிடம் போய்

"ஏங்க , ஏதாவது சொல்லுங்க. பிடிச்சுருக்குனு சொல்லுங்க, இல்லை பிடிக்கலேன்னு சொல்லுங்க...ஏதாச்சும் சொல்லுங்க" என்று சொல்கிறான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"சரிங்க, பேச வேண்டாம், ஒரு புன்சிரிப்பு?"

அதற்கும் அவள் ஒன்று செய்யாமல் நிற்கிறாள்.

"சரி போகட்டும், புன்னகை கூட வேண்டாம், ஒரே ஒரு பார்வை பாருங்க...அது போதும்" என்கிறான்.

அவள் மசியவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

"என்னங்க நீங்க, நான் கிடந்து தவிக்கிறேன்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க "

அவள் அப்போதும் மெளனமாக இருக்கிறாள்.

"ஏங்க, உங்க மனசு என்ன கல் மனசா ? எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல...பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு...எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா , அந்த பழி உங்க மேல தான் வரும் " என்று கூறுகிறான்.

அந்த அவன் = முருகன்.

அந்த அவள் = வள்ளி.

மேலே சொன்ன dialogue , அப்படியே கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னது.

பாடல்

மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய்  ஆயின்விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்.



பொருள்


மொழி ஒன்று புகலாய் ஆயின் = ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தால்

முறுவலும் புரியாய்  ஆயின் = ஒரு புன்னகை கூட புரியவில்லை என்றால்

விழி ஒன்று நோக்காய் ஆயின் = ஒரு கண் ஜாடை கூட காட்டவில்லை என்றால்

விரகம் மிக்கு = விரகம் அதிகமாகி

உழல்  வேன் உய்யும் = துன்பப்படும் நான் தப்பிக்கும்

வழி ஒன்று காட்டாய் ஆயின் = வழி ஒன்றும் காட்டாவிட்டால்

மனமும் சற்று உருகாய் ஆயின் = எனக்காக மனம் உருக்காவிட்டால்

பழி ஒன்று நின்பால் சூழும் = உன் மேல் தான் பழி வரும்

பராமுகம் தவிர்தி என்றான். = எண்னை பார்க்காமல் இருப்பதை விட்டுவிடு என்றான்.

தெய்வீகக் காதல்தான். முருகன் , வள்ளி மேல் கொண்ட காதல். அதை விட பெரிய தெய்வீக  காதல் என்ன இருக்க முடியும்?

அந்த காதலின் பின்னாலும், காமமே தூக்கி நிற்கிறது.

"விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்" என்கிறான் முருகன்.

பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக சொல்கிறார் கச்சியப்பர். "விரகம்" தான்  இந்தப் பாடு படுத்துகிறது என்று.

சரி, அது பக்கம் இருக்கட்டும்.

பக்தர்கள் பலர் இறைவனை வேண்டுவார்கள்..."ஆண்டவா, எனக்கு முக்தி கொடு,  வீடு பேறு கொடு, மோட்சம் கொடு, உன் திருவடி நிழலில் இருக்கும் பேற்றைத் தா " என்று.

"சரி பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். புறப்படு" என்று கூப்பிட்டால் எத்தனை பேர்  போவார்கள்?

மற்றவர்களை விடுங்கள்.

மணிவாசகர் போகவில்லை. இறைவன் வலிய வந்து அழைத்தான். இவர் போகவில்லை.

காரணம், மனம் பக்குவப்  படவில்லை.

பின்னால், அதை நினைத்து நினைந்து, நைந்து நைந்து புலம்பினார். அந்த புலம்பலின் மொத்த  தொகுப்புதான் திருவாசகம்.

இறைவன் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.

நமக்கு கேட்பதில்லை.

கேட்டாலும், கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் படிப்பு, அதுகளுக்கு ஒரு கல்யாணம், வயதான பெற்றோர், என்று இவ்வளவையும் விட்டு விட்டு எங்க போறது?

அப்புறம், இந்த இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று புலம்ப வேண்டியது.

முருகன் வலிய வந்து வள்ளியிடம் கேட்கிறான்.

அவளோ,ஒன்றும் பேசாமல் இருக்கிறாள்.

முருகன் சொல்கிறான் "இங்க பாரு...நான் வந்து கூப்பிடுகிறேன்...நீ வரவில்லை என்றால் , பழி உன் மேல் தான் வரும். என்னை யாரும் குறை சொல்ல முடியாது ..எனவே என் கூட வா" என்கிறான்.

பக்குவம் இல்லாத ஆன்மா. வந்திருப்பது இறை என்று அறியாமல் விழிக்கிறது.

எங்கோ இருந்த குகனுக்குத் தெரிந்தது , அருகில் இருந்த கூனிக்குத் தெரியவில்லை.

பிள்ளை பிரகாலதனுக்குத் தெரிந்தது, தந்தை இரணியனுக்குத் தெரியவில்லை.

தம்பி வீடணனுக்குத் தெரிந்தது, அண்ணன் இராவணனுக்குத் தெரியவில்லை.

என்ன செய்ய?

பக்குவம் வேண்டுமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_21.html

Monday, November 18, 2019

கந்த புராணம் - பேரினை உரைத்தி

கந்த புராணம் - பேரினை உரைத்தி 


அவளை அன்று தற்செயலாக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய  கடையில் பார்த்தான்.  வீணையின் ஒற்றை தந்தியை சுண்டி விட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு. யார் இவள் ? இவ்வளவு அழகா? சிரிக்கிறாளா இல்லை முகமே அப்படித்தானா? என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்தில போய் பேசலாமா என்று நினைக்கிறான். அதற்குள் அவள் போய் விட்டாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு அவஸ்தை.

சிறிது நாள் கழித்து, மீண்டும் அவளை ஒரு நூலகத்தில் பார்த்தான். அவள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்குள் ஒரு இனம் புரியாத பரபரப்பு. பேசவும் முடியாது. அவள் இருக்கும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து கொள்கிறான்.

அவள் வாசித்து முடித்து விட்டு செல்கிறாள். அவனும் அவள் பின்னையே போகிறான்.

ஏதாவது அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை. என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தவிக்கிறான். ஏதாவது கேட்டால் , அவள் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்றும் பயம்....

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அணுகி, தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு, அவள் பெயரை கேட்கிறான்.

அவள் பதில் சொல்லாமல் போய் விடுகிறாள்.

அப்புறம் சிறிது நாள் கழித்து, "ஏங்க , பேர் சொல்லாட்டாலும் பரவாயில்ல, நீங்க எந்த ஊருன்னாவது சொல்லுங்க" என்றான். அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நாள் சென்றது, "சரிங்க , ஊர் பேர் சொல்லாட்டாலும் பரவாயில்லை, உங்க ஊருக்கு போற வழியையாவது சொல்லுங்க. ஏதாவது சொல்லுங்க "  என்று  அவளை பேச வைக்க பாடாய் படுகிறான். ....

இது ஏதோ நம்ம ஊர் +2 , காலேஜ் படிக்கும் பையன் , பொண்ணுங்க கதை மாதிரி இருக்கா?

இல்லை, இது கந்தபுராண கதை.

நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். பாடலைப் பாருங்கள்.


பாடல்


வார் இரும் கூந்தல் நல்லாய் மதி தளர் வேனுக்கு  உன்றன்
பேரினை உரைத்தி மற்று உன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.


பொருள்

வார் இரும் = வாரி, வகிடு எடுக்கப்பட்ட

கூந்தல் = கூந்தலை கொண்ட

நல்லாய் = நல்ல பெண்ணே

மதி  தளர் வேனுக்கு = புத்தி தடுமாறும் எனக்கு

உன்றன் = உன்னுடைய

பேரினை உரைத்தி = பேர் என்னனு சொல்லு

மற்று  = அல்லாமல்

உன் பேரினை உரையாய் என்னின் = பேரை சொல்லமாட்டியா, சரி, அப்படினா

ஊரினை உரைத்தி = உன் ஊர் பேராவது சொல்லு

ஊரும் உரைத்திட முடியாது என்னில் = அதையும் சொல்ல முடியாது என்றால்

சீரிய = சிறந்த

நின் = உன்னுடைய

சீறுர்க்குச் = சிறப்பான ஊருக்கு

செல்வழி உரைத்தி என்றான். = போகிற வழியாவது சொல்லு  என்றான்

அது சிறந்த ஊருனு இவனுக்கு எப்படித் தெரியும்? ஊர் பேரே தெரியாது. ஆனால், அது சிறந்த ஊர் என்று எப்படித் தெரியும்?

அவள் பிறந்ததனால், அது சிறந்த ஊராகத்தான் இருக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

காதல் இரசம் கொஞ்சும் பாடல்.

இது கந்த புராணத்தில் 10149 ஆவது பாடல்.

எவ்வளவு பாடல்கள் இருக்கின்றன. என்னைக்கு அதை எல்லாம் படித்து இன்புறுவது?

whatsapp , youtube , facebook பாக்கவே நேரம் இல்லை...இதில் கந்த புராணத்தை  எங்கே போய்  படிப்பது ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_18.html

Saturday, November 16, 2019

கந்த புராணம் - அயன் படைத்திலன்

கந்த புராணம் - அயன் படைத்திலன் 


ஆயிரம் ஆனாலும், பெண்களுக்கு தங்கள் பிறந்த வீட்டைப் பற்றி குறை கூறினால் பிடிப்பது இல்லை. அதுவும் கட்டிய கணவனோ, அவனைச் சார்ந்தவர்களோ சொன்னால் இன்னும் பிடிப்பது இல்லை.

அதற்காக, சில சமயம் உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா?

வள்ளி, தினை புனத்திற்கு காவல் இருக்கிறாள். பயிர்களை, காகம் முதலிய  பறவைகள் வந்து சேதப்படுத்தால் அவைகளை விரட்டி, பயிரை காவல் செய்கிறாள்.

அங்கே முருகன், வயோதிக அந்தணர் வேடத்தில் வருகிறான்.


வந்து, வள்ளியிடம் சொல்கிறான்

" கூர்மையான வாளைப் போன்ற கண்களை உடைய பெண்ணே, கேள். உலகில் உள்ள பெண்கள் எல்லாம் கண்டு கை தொழும் படி இருக்கும் உன்னை, இந்த பயிர்களை பாதுகாக்க வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்களே, அந்த வேடர்களுக்கு, ஆய்ந்து அறியும் அறிவை அந்த பிரம்மன் வைக்கவில்லை போலும் " என்கிறான்.

உங்கப்பா முட்டாள் னு சொன்னா, எதை பொண்ணு பொறுத்துக் கொள்வாள்? அதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறான் கந்தன் "உங்கப்பாவுக்கு , அந்த பிரம்மன் அறிவை வைக்க மறந்து விட்டான் போல் இருக்கு
 னு. தப்பு உங்க அப்பா மேல இல்ல, அந்த பிரம்மன் மேல்தான் என்று சொல்லுமாப் போல.....


பாடல்


நாந்தகம் அனைய உண்கண் 

நங்கை கேள் ஞாலம்  தன்னில்

ஏந்திழையார் கட்கு எல்லாம் 

இறைவியாய் இருக்கும் நின்னைப் 

பூந்தினை காக்க வைத்துப் போயினார் 

புளினர் ஆனோர்க்கு 

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

அயன் படைத்திலன் கொல் என்றான்.



பொருள்

நாந்தகம் = கூறிய கொடுவாள்

அனைய போன்ற

உண்கண் = பார்ப்பவரை உண்ண க் கூடிய கண்களைகே கொண்ட

 நங்கை கேள் = பெண்ணே !, கேள்

ஞாலம்  தன்னில் = இந்த உலகம் தன்னில்

ஏந்திழையார் கட்கு = பெண்களுக்கு 

எல்லாம் = எல்லாம்

இறைவியாய் இருக்கும்   = தலைவியாய் இருக்கும்

நின்னைப் = உன்னை

பூந்தினை = தினைப்புனம் உள்ள  வயல் காட்டை

காக்க வைத்துப்  = காவல் காக்க  வைத்து  விட்டு

போயினார் = போனார்கள்

புளினர் = வேடர்கள்

ஆனோர்க்கு = அவர்களுக்கு

ஆய்ந்திடும் = ஆராய்ச்சி செய்யும்

உணர்ச்சி ஒன்றும் = ஒரு உணர்ச்சியையும்

அயன் = பிரம்மன்

படைத்திலன் = படைக்கவில்லை

கொல்  = அசைச் சொல்

என்றான். = என்றான் (முருகன்)

கச்சியப்ப சிவாச்சாரியாரின் தமிழ் கொஞ்சுகிறது.

இராமாயணம்,பாரதம் அளவுக்கு  கந்த புராணம் அவ்வளவாக பேசப் படுவது இல்லை.

இருந்தும், அதில் உள்ள பாடல்கள், அவ்வளவு இனிமையானவை.  எளிமையானவை.

வேறென்ன சொல்லப் போகிறேன்? மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_1.html

Friday, November 1, 2019

கந்த புராணம் - அந்த மூன்று

கந்த புராணம் - அந்த மூன்று 


எல்லாவற்றிற்கும் அடிப்படை எது என்ற ஆராய்ச்சி எல்லா துறைகளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

பொருள், அதன் அடிப்படை அணு என்றார்கள் . பின், அனுவின் அடிப்படை ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான் என்றார்கள். பின் அதற்கும் உள்ளே போய் போஸான், Neuon, quarks என்று சொல்லுகிறார்கள். நாளை வேறு ஏதாவது வரும்.

உடல், அதன் அடிப்படை உறுப்புகள், அதற்குக் கீழே திசுக்கள், அதற்கு கீழே செல்கள், அதற்கு கீழே DNA , mitochandria, golgai bodies என்று போய் கொண்டே இருக்கிறது.


எது நிரந்தரமானது என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலே சொன்னவை வெளி உலக ஆராய்ச்சி. நமக்கு எது அடிப்படை. மனித வாழ்வு, மனித உறவு, உண்மை, மெய் பொருள் இவற்றிற்கு எல்லாம் எது அடிப்படை என்று ஆராய்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின், அவர்கள் மூன்று பொருள்கள் நிரந்தரணமானவை, அழிவில்லாதவை என்று கண்டு கொண்டார்கள்.

இந்த உலகம், நம் வாழ்க்கை, நம் ஆசா பாசங்கள், உறவுகள், அதில் வரும் சிக்கல்கள், வாழ்வின் நோக்கம், குறிக்கோள், தோற்றம், வளர்ப்பு, முடிவு என்ற இவை அனைத்துமே  அந்த மூன்றை அடிப்படையாகக் கொண்டது என்று கண்டு  கொண்டார்கள்.

அது என்ன மூன்று ?

நமது சித்தாந்தம் மிக மிக விரிவாக அது பற்றி சொல்கிறது.  அந்த விரிவை பின்னொரு நாள் சிந்திப்போம்.

அந்த மூன்று என்ன என்று கச்சியப்பர் சொல்லுகிறார்.

அவை பதி , பசு, பாசம் என்ற மூன்று.  நம் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் எல்லாம் இதன் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் என்கிறார் கச்சியப்பர்.

பாடல்



சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம் பொருள்
மூன்று உள மறை எலாம் மொழிய நின்றன
ஆன்றது ஓர் தொல் பதி ஆர் உயிர்த்தொகை
வான் திகழ் தளை என வகுப்பர் அன்னவே .


பொருள்


சான்றவர் = பெரியவர்கள்

ஆய்ந்திடத் தக்க  வாம் = ஆராய்ச்சி செய்யத் தக்க

பொருள் = பொருள்கள்

மூன்று உள = மூன்று உள்ளன

மறை எலாம் = நம் வேதங்கள், உபநிடதங்கள் எல்லாம்

மொழிய நின்றன = அதையே சொல்லி நிற்கின்றன

ஆன்றது = அது என்ன என்றால்

ஓர் தொல் பதி  = பழமையான "பதி"

ஆர் உயிர்த்தொகை = உயிர்களின் கூட்டம் - "பசு"

வான் திகழ் = பெரிதாக விளங்குகின்ற

தளை  = தளை என்றால் விலங்கு, கையில் பூட்டும் விலங்கு.  அதாவது "பாசம்"

என வகுப்பர் அன்னவே . = என்று வகுப்பார்கள்

"பதி  - பசு - பாசம்"  என்ற மூன்றும் அனைத்துக்கும் அடிப்படை.

பதி கடவுள்

பசு நாம் மற்றும் உயிர் கூட்டங்கள்

பாசம் உயிரை , இந்த உலகோடு பிணிக்கும் தளை.

இது ஒரு மிகப் பெரிய தத்துவம். இதை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னவர்கள்  பின்னிய  சித்தாந்த வலை இருக்கிறதே, அது மிக மிக ஆச்சரியமானது. எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்று வியக்க வைக்கும்.

நேரம் ஒதுக்கி, தேடிப் பாருங்கள். கிடைக்காமலா போய் விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post.html

Thursday, October 31, 2019

கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?

கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?


இறைவன் பெரியவன். எல்லாம் தெரிந்தவன். அவனால் முடியாதது எதுவும் இல்லை. இந்த உலகம், இந்த உயிர்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவன் அவன் என்று பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பின் அவர்களே சொல்கிறார்கள், அந்தக் கடவுளுக்கு கண் இல்லை, எனக்கு ஏன் இந்த சோதனை என்று.

கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? நாம் எப்படி போனால் அவருக்கு என்ன? அவ்வளவு பெரிய ஆளுக்கு நாம் எம் மாத்திரம்.

நாம் பக்தி செய்தால் என்ன, பக்தி செய்யாவிட்டால் என்ன? நாம் வாழ்த்தினால் என்ன, வைத்தால் என்ன?

அது புரியாமல், இறைவா எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, அதில் இருந்து காப்பாற்று, என்றெல்லாம் வேண்டுகிறார்கள். வேண்டியது கிடைக்கவில்லை என்றால் இறைவன் மேல் நொந்து கொள்கிறார்கள்.

நாம் செய்த வினை நமக்கு மீண்டு வருகிறது என்று நினைப்பது இல்லை.

குளிர்ந்த நீரை நிறையக் குடித்தால் தொண்டை காட்டும்.

ஐஸ் கட்டி போட்டு குளிர்ந்த நீரை குடித்து விட்டு, ஆண்டவா எனக்கு தொண்டை கட்டு வரக்கூடாது என்று வேண்டினால் என்ன பலன்?

சூரபத்மன், தேவர்களை எல்லாம் சிறைபிடித்து படாத பாடு படுத்துகிறான். முருகன் அவதாரம் செய்தால் தான் சூரன் அழிவான்.

சிவனோ நிட்டையில் இருக்கிறார். அம்பாள் சிவனை நினைத்து தவம் இருக்கிறாள். ஆளுக்கு ஒரு புறம் இருந்தால், குமார சம்பவம் நிகழ்வது எப்படி?

எல்லோருமாக சேர்ந்து மன்மதனை அனுப்பி, சிவன் மேல் மலர் அம்புகளை விட்டு, சிவனுக்கு காமம் ஏற்படச் செய்ய முயன்றார்கள்.

மன்மதனும் அம்பு போட்டான்.  சிவனின் தவம் கலைந்தது. வந்த கோபத்தில், நெற்றிக் கண்ணால்  மன்மதனை எரித்து விட்டார்.

மன்மதன் சாம்பலாகி விட்டான்.

அவன் மனைவி இரதி புலம்புகிறாள். அருமையான தமிழ் பாடல்கள்.

என்னவெல்லாமோ சொல்லி அழுகிறாள். பின் தெளிகிறாள்.

"உன் தலையில் வெந்து போ என்று விதி எழுதி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? இதுக்கு யாரை நொந்து கொள்வது? " என்று தெளிகிறாள்.


பாடல்


போ என்று வரவிட்ட தேவர் எலாம் பொடி ஆகிப் போன உன்னை
வா என்று கடிது எழுப்ப மாட்டாரோ நின் தாதை வலியன் என்பார்
ஓ என்று நான் இங்கே அரற்றிடவும் வந்திலனால்  உறங்கினானோ
வே என்று நின் சிரத்தில் விதித்து இருந்தால் அவரை  லாம் வெறுக்கல் ஆமோ.


பொருள்


போ என்று = போ என்று

வரவிட்ட தேவர் எலாம் = உன்னை செலுத்திய தேவர் எல்லாம்

பொடி ஆகிப் போன உன்னை = எரிந்து பொடிப் பொடியான உன்னை

வா என்று = உயிரோடு திரும்பி வா என்று

 கடிது  = விரைந்து

எழுப்ப மாட்டாரோ  = எழுப்ப மாட்டாரோ?

நின் தாதை = உன் தந்தை (திருமால்)

வலியன் என்பார் = வலிமையானவர் என்று சொல்லுவார்கள்

ஓ என்று = ஓ என்று

நான் இங்கே அரற்றிடவும் = நான் இங்கே அழுது புலம்ப

வந்திலனால்  = வராமல்

உறங்கினானோ = எங்கே பள்ளி கொண்டு இருக்கிறானோ

வே என்று = வெந்து போ என்று

நின் சிரத்தில் = உன் தலையில்

விதித்து இருந்தால் =  விதித்து இருந்தால்

அவரை  எலாம் = அவர்களை எல்லாம்

வெறுக்கல் ஆமோ. = வெறுக்கலாமா ?

நாம் செய்த வினை நம்மை வந்து சேர்கிறது  என்றது நினைத்துக் கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா


கந்த புராணம் கிட்டத்தட்ட 1800 பாடல்களைக் கொண்டது

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது.

மூல நூலை தேடி பிடித்துப் படித்துப் பாருங்கள்.

தேன் சொட்டும் பாடல்கள்.  படித்துப் பாருங்கள், நல்ல வேளை தமிழனாக பிறந்தேன்  என்று நினைத்துக் கொள்வீர்கள். அவ்வளவு இனிய பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_31.html



Wednesday, November 14, 2018

கந்த புராணம் - வேதமும் கடந்து நின்ற

கந்த புராணம் - வேதமும் கடந்து நின்ற 


இன்று சூர சம்ஹார தினம். எனவே கந்த புராணத்தில் இருந்து ஒரு பாடலை சிந்திப்போம்.

சூரன் என்ற அரக்கன் சம்காரம் செய்யப்பட்டது எதனால் ?

பல காரணங்கள் சொல்லலாம்.

முதல் காரணம் - நன்றி மறந்தது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு

என்பார் வள்ளுவப் பேராசான்.

சூரனுக்கு அளவற்ற வரங்களை தந்தது யார் - சிவன்.

முருகன் போர் செய்ய வந்த போது முருகனை பாலன் என்று இகழ்ந்தான் சூரன்.

இராமனை , மானிடன் என்று எண்ணிக் கெட்டான் இராவணன்.

கண்ணனை, இடையன் என்று எண்ணிக் கெட்டான் துரியோதனன்

முருகனை, பாலன் என்று எண்ணிக் கெட்டான் சூரன்.

முருகன் வேறு, சிவன் வேறு அல்ல என்ற உண்மை தெரியாமல், வரம் தந்த சிவனோடு போரிட்டு, நன்றி கொன்று கெட்டான் சூரன்.

அது என்ன முருகன் வேறு சிவன் வேறு அல்ல என்ற புதுக் கதை ? முருகனும் சிவனும் வேறு வேறு தானே. அப்படித்தானே படித்து இருக்கிறோம்...

இல்லை. அந்தத் தவற்றை செய்தவன் சூரன். நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரன், தேவர்களை ஆட்டிப் படைக்கிறான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்படியே ஒரு வேண்டுகோளும் வைக்கிறார்கள்.

சைவ சித்தாந்ததின் சாரம் இந்தப் பாடல். இந்த ஒரு பாடலைப் புரிந்து கொண்டால் சைவ சித்தாந்தம் முழுவதும் புரிபடும்.

கச்சியப்ப சிவாசாரியாரின் தேனொழுகும் இனிய பாடல்...

பாடல்

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் 
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி 
வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை 
நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்.



பொருள்


ஆதியும் = ஆரம்பமும்

நடுவும் = நடுவும்

ஈறும் = இறுதியும்

அருவமும் = உருவம் இல்லாததும்

உருவும் = உருவம் உள்ளதும்

ஒப்பும் = ஒப்பிட்டு சொல்ல முடியாததும்

ஏதுவும் = வேறு எதுவும்

வரவும் = வருவதும்

போக்கும் = போவதும்

இன்பமும் = இன்பமும்

துன்பும் = துன்பமும்

இன்றி = இவை எல்லாம் இல்லாமல்

வேதமும் = வேதமும்

கடந்து நின்ற = அப்பால் நின்ற

விமல = மலம் என்றால் குற்றம். வி+மலம் = குற்றமற்ற

ஓர் குமரன் தன்னை = ஒரு பிள்ளையை

நீ தரல் வேண்டும் = நீ எங்களுக்குத் தர வேண்டும்

நின்பால் = உன்னிடம் இருந்து

நின்னையே நிகர்க்க = உன்னைப் போலவே

என்றார் = என்று வேண்டினார்கள்

உலகில் பெண் தானே பிள்ளை பெற்றுத் தர வேண்டும். ஆண் பிள்ளை பெற்றதாக எங்காவது கேள்விப் பட்டு இருக்கிறோமா ? இல்லையே?

தேவர்கள் , சிவனிடம் "உமா தேவியிடம் இருந்து எங்களுக்கு ஒரு குமாரனை பெற்றுத் தர வேண்டும் " என்று கேட்கவில்லை.

"நீ தரல் வேண்டும்" என்று சிவனிடம் வேண்டினார்கள்.

அது மட்டும் அல்ல, அந்தக் குழந்தை உன்னிடம் இருந்து வர வேண்டும்

"நின் பால்"

அது மட்டும் அல்ல , அது உனக்கு இணையாக இருக்க வேண்டும்

"நின்னையே நிகர்க்க" என்றார்.

சிவனிடம் இருந்து வர வேண்டும். சிவன் மட்டுமே தர வேண்டும். அது சிவனுக்கு இணையாக இருக்க வேண்டும்.

இதுதான் வேண்டுகோள்.

சிவனுக்கு இணையாக என்றால் சிவனும் , முருகனும் ஒன்று என்று ஆகிறது அல்லவா. சிவன் என்னவெல்லாம் செய்வானோ, முருகனும் அதை எல்லாம் செய்வான் என்று அர்த்தம்.

சிவன் வேறு , முருகன் வேறு அல்ல.

இந்த ஒற்றுமை தெரியாமல் மாண்டான் சூரன்.

தங்கள் குறை தீர்க்க ஒரு குமாரனைத் தரவேண்டும் என்று வேண்டும் பொழுது சிவனின் தன்மை பற்றி கூறுகிறார் கச்சியப்பர்.

ஆதி - நடு - அந்தம் இந்த மூன்றும் இல்லை.

போக்கும் வரவும் புணர்வும் இல்லா புண்ணியனே என்று மணிவாசகர் சொன்ன மாதிரி , போக்கும் வரவும் இல்லாதவனே என்கிறார்.

இன்பமும் துன்பமும் உள்ளானே இல்லானே என்று திருவாசகம் சொன்ன மாதிரி "இன்பமும் துன்பும் இன்றி " என்றார்.

இறைவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது. இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

என்பார் வள்ளுவப் பெருந்தகை.

அம்மையே அப்பா  ஒப்பிலா மணியே என்பார் வள்ளலார்

எல்லாம் ஒன்றையே குறித்து நிற்கிறது.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக மிக எளிமையான பாடல். ஆழ்ந்த அர்த்தமும் கவிதைச் சுவையும் நிறைந்த பாடல்.

கந்த புராணம் 10345 பாடல்களைக் கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். அத்தனையும் கற்கண்டு.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_14.html

Friday, August 15, 2014

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ 


சூரபத்மனின் கொடுமையால் அவதிப்பட்ட தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள்.

திருமால் "சிவன் தவத்தில் இருக்கிறான். அவர் தவம் முடித்து வந்தால், குமார சம்பவம் நிகழும். அவர் தவம் முடிய வேண்டும் என்றால், அது சாதாரண காரணம் இல்லை. மன்மதன் அவர் மேல் மலர் அம்புகளை போட்டால், அவர் தவம் கலையும் " என்று சொன்னார்.

அது கேட்ட பிரம தேவனும், மன்மதனை சிவன் மேல் அம்பு விட  அனுப்பினார்.மன்மதன் மறுத்தான். சிவன் தவம் கலைந்தால், அந்த கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். போகாவிட்டால் இப்போதே சாபம் கொடுக்கப் போவதாக பிரமன் மிரட்டவே, வேறு வழியின்றி சென்றான்.

அவன் நினைத்தது போலவே, தவம் கலைந்த சிவன், தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விட்டார்.

அங்கு வந்த இரதி புலம்புகிறாள்.

திருமாலுக்கு இரண்டு குமாரர்கள். ஒன்று பிரமன், மற்றவன் மன்மதன்.

இரதி சொல்கிறாள், "என் உயிரே நீ இறந்ததால், சொத்தில் ஒரு பங்கு குறைந்தது  என்று பிரமன் மகிழ்வான் " என்று.  நேரடியாகச் சொல்லவில்லை.

பாடலைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.....

பாடல்

செம் பதுமை திருக் குமரா தமியேனுக்குக் ஆர் உயிரே    திருமால் மைந்தா
சம்பரனுக்கு ஒரு பகைவா கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா
அம் பவளக் குன்று அனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவு உற்றாயே உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ அயன்
                        ஆரும் உவப்பு உற்றாரோ.

பொருள் 

செம் பதுமை = அழகான சிலை போன்ற

திருக் குமரா = சிறந்த இளையவனே

தமியேனுக்குக் ஆர் உயிரே = எனக்கு ஆருயிரே

திருமால் மைந்தா = திருமால் மைந்தா

சம்பரனுக்கு ஒரு பகைவா = சம்பரன் என்ற அரக்கனுக்கு பகைவனே

கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா = கரும்பு வில்லைப் பிடித்த வீரனே

அம் பவளக் குன்று அனைய = பவளக் குன்று போன்ற (சிவந்த பெரிய)

 சிவன் விழியால் = சிவனுடைய விழியால்

வெந்து = வெந்து

உடலம் அழிவு உற்றாயே = உடல் அழிந்தாயே

உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ = தேவர்கள் எல்லாம் இந்த கொடுமையைக் கண்டு கண் மூடி இருகிறார்களோ

அயன் ஆரும் உவப்பு உற்றாரோ = பிரமனும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறானோ

கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் படிக்க மிக மிக எளிமையானது. 

நேரம் இருப்பின், மூல நூலை படித்துப் பாருங்கள். 

தெள்ளு தமிழ் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். 


Wednesday, July 23, 2014

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்


படை வீரர்கள் எதிரிகளை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும், அவர்கள் கை கால்களை வெட்ட வேண்டும் என்று வெறியோடு செயல்படுவார்கள். அவர்களிடம் அன்பையும், நேசத்தையும் எதிர் பார்க்க முடியாது. "ஐயோ, ஒரு உயிரை கொல்கிறோமே, அந்த உயிருக்கு எப்படி வலிக்கும் " என்ற பச்சாதாபம் இருக்காது.

அதிலும் அரக்கர் படை என்றால் எப்படி இருக்கும்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

பொருளுக்காக தங்கள் உடலை விற்கும் விலை மாதர்களின் மனம் போல அன்பும், அருளும், கருணையும் அற்று இருந்தது அந்த படை வீரர்களின் மனம் என்றார்.

விலை மகளிர் தங்கள் மேல் அன்பாக  இருப்பார்கள் என்று நினைப்பவர்களை சிந்திக்க வைக்கிறார் கச்சியப்பர். கொலையில் கொடியாரைப் போன்றது விலைமகளிர் மனம்.

பாடல்


வஞ்சம் நீடி அருள் அற்று மாயமே
எஞ்சல் இன்றி இருள் கெழு வண்ணமாய்
விஞ்சு தம் அல்குல் விற்று உணும் மங்கையர்
நெஞ்சம் ஒத்தனர் நீள் படை வீரரே.

பொருள்

வஞ்சம் நீடி = நீண்ட வஞ்சனையை கொண்டு

அருள் அற்று = அருள் எதுவும் இன்றி

மாயமே = மாயங்களை

எஞ்சல் இன்றி = எதுவும் மிச்சம் இல்லாமல்

இருள் கெழு வண்ணமாய் = எங்கும் இருள் சூழும் வண்ணம்

விஞ்சு = பெருத்த (விஞ்சிய)

தம் = தங்களுடைய

அல்குல் விற்று = உடலை விற்று

உணும் மங்கையர் = உண்ணும், அல்லது பொருள் பெறும்

நெஞ்சம் ஒத்தனர் = மனதை ஒத்து இருந்தனர்

நீள் படை வீரரே = பெரிய படையின் வீரர்கள் (சூரபத்மனின் படை வீரர்கள்)

படை வீரர்கள் இறுதியில் தங்கள் எதிரிகளை கொல்லுவார்கள். விலை மாதரும் அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கச்சியப்பர்.

இலக்கியம் படிப்பதில், மனித மனதின் உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.




Tuesday, July 22, 2014

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே 


முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நீண்ட போர்.

முருகன் தன் விஸ்வரூபத்தை காண்பிக்கிறான்.

அதை கண்டு மகிழ்ந்து, வியந்து அவன் சொல்கிறான் ...

"குற்றம் இல்லாத தேவர்களை நான் சிறை வைத்தது தவறு என்று அனைவரும் கூறினார்கள். அப்படி செய்ததும் நல்லதாய் போய் விட்டது. நான் தேவர்களை சிறை வைத்ததால்தானே இன்று முருகனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது "

பாடல்

ஏதம் இல் அமரர் தம்மை யான் சிறை செய்தது எல்லாம் 
தீது என உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே 
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா 
நாதன் இங்கு அணுகப் பெற்றேன் நன்றதே ஆனது அன்றே.

பொருள்

ஏதம் இல் = குற்றம் இல்லாத

அமரர் தம்மை = தேவர்களை

யான் சிறை செய்தது எல்லாம் = நான் சிறை செய்தது எல்லாம்

தீது என = குற்றம் என்று

உரைத்தார் பல்லோர் = பலர் சொன்னார்கள்

அன்னதன் செயற்கையாலே = அந்த செய்கையாலே

வேதமும் = வேதங்களும்

அயனும் = பிரமனும்

ஏனை விண்ணவர் பலரும் = மற்ற தேவர்கள் எல்லோரும்

காணா = காணாத

நாதன் = நாதனை (முருகனை )

இங்கு அணுகப் பெற்றேன் = இங்கு அருகில்  பெற்றேன்

 நன்றதே ஆனது அன்றே = நல்லது, ரொம்ப நல்லது



Monday, July 7, 2014

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக 


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது கந்த புராணம். அதில் வரும் வாழ்த்துப் பாடல் இது.


மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.

எவ்வளவு ஒரு உயர்ந்த மனம்.

பாடல்


வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் 
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் 
                                       வாழ்க 
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க 
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

பொருள்


வான் முகில் = வானில் உள்ள மேகங்கள்

வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க.

மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு.

மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல்.

நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும்.

மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது.


குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும்.

நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும்.

நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும்

அது என்ன சைவ நீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டும்...எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம்.

இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்.

மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பாருங்கள்.




Monday, June 16, 2014

கந்த புராணம் - தர்மம் என்று ஒரு பொருள் உளது

கந்த புராணம் - தர்மம் என்று ஒரு பொருள் உளது 



கச்சியப்ப சிவாசாரியார் அருளியது கந்த புராணம்.

கந்த புராணத்தில், சூரபன்மன் முதலானோருக்கு அவர்களின் தந்தை காசிப முனிவர் பாடம் சொல்லித் தருகிறார்.

தருமம் என்று ஒரு பொருள் உள்ளது என்று என்கிறார்.

நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்க்கும் போது , தர்மம் என்று ஒன்று உளதா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வரும்.

தர்மம் வெல்லும். தர்மத்தின் வழி நடக்க வேண்டும்...என்றெல்லாம் நமக்குச் சொல்லப் பட்டது.

இருந்தாலும், தர்மம் இல்லாத வழியில் நடப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண்கிறோம்.

தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் அப்படி ஒன்றும் வாழ்வில் முன்னேறிய மாதிரி தெரியவில்லை.

இதை எல்லாம் பார்க்கும் போது , நமக்கு பொதுவாக ஒரு சந்தேகம் வரும்.

தர்மம் என்று ஒன்று இருக்கிறதா ? என்று

கச்சியப்பர் அடித்து சொல்கிறார்

தர்மம் என்று ஒன்று ஒரு பொருள் உண்டு என்று.

மேலும்  சொல்வார், அது இம்மை மறுமை என்ற இருமைக்கும் எப்போதும் தாழ்விலாத இன்பத்தை எளிதாகத் தரும். கிடைத்தற்கரிய பொருளை அருகில் வரச்  செய்யும். அந்த தர்மம் என்பது எல்லாவற்றையும் வேற்றுமை நீங்கி ஒருமையுடன் பார்பவர்களுக்கே புலப் படும்.

பாடல்


தருமமென் றொருபொருள் உளது தாவிலா 
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால் 
அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும் 

ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ

சீர் பிரித்த பின்

தருமம் என்று ஒரு பொருள் உளது தாழ்வு இல்லாத 
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்கும்
அருமையில் வரும் பொருளாகும் அன்னதும் 
ஒருமையினோர்க்கு அல்லால் உணர்தற்கு ஒண்ணுமோ ?


பொருள்

தருமம் என்று ஒரு பொருள் உளது = தருமம் என்ற ஒரு பொருள் உள்ளது. அதில் சந்தேகம் இல்லை.


தாழ்வு இல்லாத = ஒரு போதும் தாழ்வு இல்லாத

இருமையின் = இந்த பிறவி, மறு பிறவி என்ற இரண்டு பிறவிக்கும்

இன்பமும் எளிதின் ஆக்கும் = இன்பத்தையும் எளிதாக்கித் தரும்

அருமையில் வரும் பொருளாகும் = எளிதில் கிடைக்கதனவற்றையும் கிடைக்கச் செய்யும்

அன்னதும் =அப்பேற்பட்ட தர்மம்

ஒருமையினோர்க்கு அல்லால் = வேறுபாடுகள் ஒழித்து, ஒன்றிய காட்சி கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள்

உணர்தற்கு ஒண்ணுமோ ? = உணர முடியுமோ ?

தர்மம் இருக்கிறது. இருக்கும். 

தர்மத்தை நிலை நிறுத்த ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன் என்கிறான்  கண்ணன். 

தர்மத்தின் வழி நடக்காதவர்களை அந்த தர்மமே அழிக்கும். 

என்பில் அதனை வெயில் போலக் காயுமே அன்பில் அதனை அறம் என்றார் வள்ளுவர்.  

அற வழியில் நடக்காதவர்கள் வெற்றி பெற்றவர்களைப் போலத் தோன்றினாலும், அவர்கள் அழிக்கப் படுவார்கள். 

இது நமது இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் தத்துவம். 

நமது இலக்கியங்கள் ஆழமாக நம்பிய தத்துவம். 

நாமும் நம்புவோமே