Showing posts with label வில்லி பாரதம். Show all posts
Showing posts with label வில்லி பாரதம். Show all posts

Sunday, January 22, 2023

வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு

 வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு 


ஏன் தமிழ் படிக்க வேண்டும்? இலக்கியம் ஏன் படிக்க வேண்டும்?  மொழி சோறு போடுமா? வேலை வாங்கித் தருமா? தமிழ் படிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாக படித்தால் இன்னும் நாலு காசு சம்பாதிக்கலாமே என்று நினைக்கலாம். 


அது சரிதான். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. 


ஆனால், பணம் மட்டும் போதுமா? வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதும் என்றால், இலக்கியம் வேண்டாம் என்று தள்ளி விடலாம். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? 


அது புறம் இருக்கட்டும். 



நாம் நினைக்கிறோம், பணம் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையையும் சரி செய்து விடலாம் என்று. பணத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்று.  


அது சரியா? 


வயது ஏற ஏற, பணத்தால் சாதிக்க முடியாத பலவற்றை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம். 


அப்போது என்ன செய்வது? 


மிகப் பெரிய பிரச்சனை. பெரிய துக்கம். தாங்க முடியவில்லை. பெட்டி பெட்டியாக பணம் இருக்கிறது. ஒரு பலனும் இல்லை. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் நம் துக்கம் தீராது என்ற நிலைகள் வரும். அப்போது என்ன்ன செய்வது? 


பணத்தால் சரி செய்ய முடியவில்லையே என்ற இயலாமை ஒரு புறம்.  இந்தப் பணத்தைச் சேர்க்கவா என் வாழ் நாள் எல்லாம் செலவழித்தேன். கடைசியில் இந்தப் பணத்தால் ஒரு பலனும் இல்லை. என் முயற்சிக்கு கிடைத்த பலன் இதுவா என்ற வெறுமை மறுபுறம். 


அந்த நிலை வரும் முன், மனதை பக்குவப்படுத்த வேண்டாமா? தயார் செய்து கொள்ள வேண்டாமா? 


அதற்குத்தான் இலக்கியம். 


மகா பாரதத்தில் அபிமன்யு இறந்து கிடக்கிறான். 


அர்ஜுனன், தருமன், கண்ணன், பீமன் எல்லோருக்கும் முன்னால் வில்லிப்புத்துராழ்வார் அழது புலம்புகிரார். அவரால் அதை சகிக்க முடியவில்லை. 


அபிமன்யு யார்? 


அவனுடைய தந்தை உலகின் மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். 


அவன் மாமன், உலகைக் காக்கும் கண்ண பிரான். 


பெரியப்பா, மிகப் பெரிய பலசாலி பீமன். 


தாத்தா, தேவர்களின் அரசனான இந்திரன். 


அப்படிப்பட்ட அபிமன்யு அனாதையாக இறந்து கிடக்கிறான் என்றால் காரணம் என்ன.  விதி. இத்தனை பேர் இருந்தும் அவனை காக்க முடியவில்லை என்றால் விதியை நம்புவதைத் தவிர வேறு என்ன செய்வது ?


பாடல் 


மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை;

                  வானோர்க்கு எல்லாம்

நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம்

                  நண்பாய் வந்தோர்; சேயனாம்

அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை

                  வெவ்வேறு

ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும்

                  விரகு ஆர் வல்லாரே?


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_22.html


(click the above link to continue reading)


மாயனாம் திருமாமன்= மாயங்களில் வல்லவன் மாமனாகிய கண்ணபிரான் 


தனஞ்சயனாம் திருத்தாதை = வில் வீரத்தில் ஒப்பற்றவன் தந்தையாக அர்ஜுனன் 


வானோர்க்கு எல்லாம் = தேவர்களுக்கு எல்லாம் 


நாயனாம் = நாயகனாம், தலைவனாம் 


பிதாமகன் = தாத்தாவாகிய இந்திரன் 


மற்று = மேலும் 


ஒரு கோடி = ஒரு கோடி பேர்கள் 


நராதிபராம் = நர + அதிபராம் = மக்களின் அதிபர்கள், அரசர்கள் 


நண்பாய் வந்தோர் = நண்பர்களாக உள்ளவர்கள் 


சேயனாம் = பிள்ளையாம் 


அபிமனுவாம் = அபிமன்யு 


செயத்திரதன் = ஜெயந்திரன் என்ற அரசனின் 


கைப்படுவான்!  = கையால் இறந்தான் 


செயற்கை  வெவ்வேறு = வேறு வேறு விதமாக நடக்கும் செயல்கள் எல்லாம் 


ஆய நாள் = அன்றில் இருந்து 


அவனிதலத்து = இந்த உலகில் 


அவ் விதியை வெல்லும் = அந்த விதியை வெல்லும் 


விரகு = வழி 


ஆர் வல்லாரே? = யாரிடம் இருக்கிறது ? யாரிடமும் இல்லை 


இவ்வளவு இருந்தும், அபிமன்யுவை காக்க முடியவில்லை. 


கடவுளான கண்ணனால் கூட முடியவில்லை. கண்ணன் நினைத்து இருந்தால் காத்திருக்கலாம். 


விதி. 


விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. 


சில சமயம், தாங்க முடியாத துக்கம் வரும் போது, மனதுக்கு ஒரே மருந்து விதியை நம்புவதுதான். இல்லை என்றால் எப்படி மனச் சமாதனம் அடைய முடியும். 


விதி என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிடுவது எளிது. 


பெரிய துக்கதில் இருக்கும் ஒருவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் என்றால், அதை பறிப்பானேன் ?


நம் இலக்கியம் முழுவதிலும் விதி அழுத்தமாக நம்பப் படுகிறது. 


இலக்கியம் படித்துப் பழகிவிட்டால் வாழ்வில் வரும் துன்பங்களை பொறுத்து, சகித்து, அதைத் தாண்டி மேலே வர முடியும். 


இல்லை என்றால் மன அழுத்தம், மன நோய், மருந்து, மாத்திரை என்று துன்பப் பட வேண்டிவரும். 


இலக்கியம் துன்பத்தை ஆற்றும். மனதைத் தேற்றும். மன வலிக்கு மருந்து போடும். சாய்ந்து கொள்ள தோள் தரும். கண்ணீர் துடைக்கும். 




Monday, June 20, 2022

வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை

 வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை


கம்ப இராமாயணம் அளவுக்கு வில்லி பாரதம் நம் மக்களிடை பெரிதாகப் போய்ச் சேரவில்லை. 


இராமயணத்தை விட கதை அமைப்பில், திருப்பங்களில், மனித மனச் சிக்கல்களில் பாரதம் சுவாரசியமானது என்றாலும், அது இராமாயணம் அளவுக்கு பிரபலமாகவில்லை என்பதும் உண்மைதான். 


அதற்கு பெரியவர்கள் ஒரு காரணம் சொல்லுவார்கள். 


அறம் என்றால் வேதம் முதலான உயர் நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் என்பார்கள். 


இராமாயணம் அறத்தை நேர் முறையில் சொல்லத் தலைப்பட்டது. 


பாரதம் எதைச் செய்யக் கூடாது என்று சொல்லத் தலைப்பட்டது. 


இருந்தும், நேர்மறையான காப்பியத்துக்கு கிடைத்த பிரபலம் மறைமுகமாக கூறிய பாரதத்துக்கு கிடைக்கவில்லை என்பது யதார்த்தம். 


இருந்தும், வில்லி பாரதத்தில் பல சுவையான இடங்கள், அழகான கவிதைகள் இருக்கின்றன. 


அதில் சிலவற்றைப் பார்ப்போம். 


தர்மன் அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டான். யாகம் முடித்த பின், யாருக்கு முதல் மரியாதை தருவது என்று தர்மன், பீஷமரை கேட்கிறான். 


யாரை எங்கே வைப்பது என்பதில் நம்மவர்கள் மிகுந்த முக்கியத்துவம் தந்து இருக்கிறார்கள். 


எதையும் ஒரு வரிசைப்படி செய்வது என்பது நம்மவர்கள் கலாசாரம். 


வீட்டில் ஒரு விழா, நிகழ்ச்சி என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு முதலில் மரியாதை செய்ய வேண்டும். மரியாதை என்பதெல்லாம் குறைந்து கொண்டே வரும் இந்தக் காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட சரி இல்லையோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. 


பொய் சொல்லி, ஊரை ஏமாற்றி, களவு எடுத்து, பணம் சேர்பவனுக்கு மாலை, மரியாதை என்று ஆகிவிட்ட காலத்தில் மரியாதை பற்றி என்ன சொல்லுவது?


இருந்தும், எப்படி இருந்த கலாசாரம் என்றாவது தெரிந்து கொள்ளலாமே?


பீஷ்மரையும், அங்கு இருந்த முனிவர்களையும், பெரியவர்களையும் நோக்கிக் கேட்கிறான் "யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும், கூறுங்கள்" என்று. 


பாடல் 



'பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகைக்

                                குலத்தும் உற்பவித்த

சுரபதி குழாத்தில் யாவரே பெறுவார், நவிலும் முற்பூசை,

                                மற்று'' என்ன,

கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன், கங்கையின்

                                திருமகன், தெய்வச்

சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி, தொல்

                                முனிவரையும் நோக்கி,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_20.html



(pl click the above link to continue reading)


பரிதியும் = சூரியனும் 

மதியும் = சந்திரனும் 

வன்னியும் = அக்கினியும் 


முதலாம் = முதலிய 


பல் வகைக் = பல வகை 


குலத்தும் = குலத்தில் (பலவிதமான அரச குலத்தில்) 


உற்பவித்த = தோன்றிய 


சுரபதி குழாத்தில் =  அரசர் குலத்தில் 


 யாவரே பெறுவார் = யார் பெறத் தகுதியானவர் 


நவிலும் = சொல்லுங்கள் 


முற்பூசை = முதல் மரியாதை 


மற்று'' என்ன, = என்று 


கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் = அட்ட வசுக்களில் ஒருவரும் 


கங்கையின்  திருமகன் = கங்கையின் மைந்தனுமான 


தெய்வச் = தெய்வத் தன்மை பொருந்திய 


சுருதி  = வேதம், வேதங்களில் கூறிய மாதிரி 


மா மகம் = பெரிய யாகத்தை 


செய் புனிதனை நோக்கி = செய்து தந்த புனிதனை நோக்கி  (வியாசர்) 


தொல் முனிவரையும் நோக்கி, = வயதில் மூத்த முனிவர்களையும் பார்த்து 


பீஷ்மன், வியாசர், மற்றும் உள்ள முனிவர்களை நோக்கி தர்மன் கேட்கிறான் "யாருக்கு நான் முதல் மரியாதை செய்ய வேண்டும் "  என்று 


இங்கே ஒரு கணம் நிறுத்துவோம். 


இராஜசூய யாகம் நடந்து முடிந்துவிட்டது. 


அத்தனை அரசர்களும் இருக்கிறார்கள். துரியோதனனும் இருக்கிறான். யாருக்கு முதல் மரியாதை செய்தாலும், மற்றவர்களுக்கு கோபம் வரும். 


யாகம் முடிந்தவுடன் சண்டை ஆரம்பித்து விடும். 


ஒரு சிக்கலான இடம். செய்தாலும் தப்பு, செய்யாவிட்டாலும் தப்பு என்ற ஒரு இடம். 


ஒரு படபடப்பு,  பதைபதைப்பு நம்மை பற்றிக் கொள்கிறது அல்லவா?  


ஒரு எதிர்பார்ப்பு, என்ன நடக்கப் போகிறதோ என்று ஒரு திகில், ஒரு சுவாரசியம் வருகிறதா இல்லையா?


அடுத்து என்ன ஆயிற்று என்று பார்ப்போம். 





Tuesday, October 26, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2

 

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2 


((இதன் முதல் பாகத்தை கீழே காணலாம்))



பாடல் 

தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/2.html


(Pl click the above link to continue reading)


தப்போதாமற்றம்பியர்க்குந் = தப்பு ஓதாமல் தம்பியற்கும் = தவறாகச் சொல்லி யார் மனதையும் நோகச் செய்யாத தர்மன், தன் தம்பிகளுக்கும் 


தருமக்கொடிக்கும் = தர்மத்தின் கொடி போன்றவளான பாஞ்சாலிக்கும் 



இதமாக  = மனதிற்கு இதமாக, நன்மை உண்டாகும் படி 


அப்போதுணரும்படி = அப்போது உணரும் படி 


யுணர்ந்தான =  உணர்ந்தான் 


சோதைமகனை = யசோதையின் மகனான கண்ணனை 


யறத்தின்மகன் = தர்ம தேவதையின் மகனான தர்மன் 


எப்போதியாவரெவ்விடத்தி லெம்மை = எப்போது, யார், எவ்விடத்தில் எம்மை 


நினைப்பாரெனநின்ற = நினைப்பார்கள் என்று நின்ற 


ஒப்போதரியான்  = ஒப்பு + ஓது + அறியான் = தனக்கு ஒப்பு உவமை சொல்லுதற்கு அரியவனான கிருஷ்ணன் 


உதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே. = உதிட்டிரன் உள்ளத்தில் வந்து அப்போது உதித்தான் 


இறைவன் காத்துக் கொண்டு இருக்கிறான். எப்போது, யார், எந்த இடத்தில் தன்னை அழைப்பார்கள் , போய் உதவி செய்யலாம் என்று. 


கேட்டுத் தான் கொடுக்கணுமா ? அவனுக்கே தெரியாதா? கேட்காமலேயே கொடுத்தால் என்ன?


கொடுக்கலாம் தான். எவ்வளவோ கேட்காமலேயே கொடுத்தும் இருக்கிறான். இந்த அறிவு, இந்த உடல், இந்த மனம், இந்த நாடு, இந்த மொழி என்று எவ்வளவோ நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான்.  இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு, இந்த காலத்தில், இந்த வடிவில், இப்படி இருக்க வேண்டும் என்று நாம் கேட்டோமா? 


இந்த காற்று, மழை, மரம், நிழல், உணவு, ஆரோக்கியம், கணவன்/மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று ஆயிரம் ஆயிரம் நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான். 


சில சமயம் கேட்டு கொடுப்பதில் சுகம் இருக்கிறது. 


பிள்ளை ஐஸ் கிரீம் வேண்டும் என்று ஆசையாக கேட்கிறான்/ள். ஓடிப் போய் வாங்கி தருகிறோம். அந்தக் குழந்தை சுவைத்து மகிழ்வதை பார்த்து பெற்றோர் மகிழ்வார்கள் அல்லவா? கேட்காமலேயே தினம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கித் தந்தால், "வேண்டாம் போ " என்று தூக்கி எறிந்து விடும். 


மனைவிக்கு ஆயிரம் பரிசுகள் வாங்கித் தரலாம். ஆனால், அவள் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை வாங்கித் தருவதில் உள்ள சுகமே தனி.


இராமனுக்குத் தெரியாதா பொன் மான் என்று ஒன்று இல்லை என்று. வசிட்டரிடமும், விஸ்வாமித்திரரிடமும் பயின்றவனுக்கு இது கூடத் தெரியாதா. 


மனைவி கேட்டு விட்டாள். தன் பொருட்டு எவ்வளவோ துன்பம் அனுபவிக்கிறாள். அவள் ஆசைப் பட்டு கேட்டு விட்டாள். அவளிடம் போய் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருப்பதில் என்ன சுகம். அவள் கேட்டதை பிடித்துத் தர வேண்டும் என்று கிளம்பி விட்டான். 


அது போல, இறைவனும் காத்துக் கொண்டே இருக்கிறானாம். நினைத்தவுடன் தர்மன் மனதில் வந்து விட்டான்.


கூப்பிடவுடன் யானைக்காக வந்தான், பாஞ்சாலிக்காக வந்தான். 


நமக்கும் வருவான் என்ற நம்பிக்கையை இந்த இலக்கியங்கள் விதைக்கின்றன.


நான் நினைத்தால் வருவானா? எத்தனையோ தரம் நினைத்து இருக்கிறேன். வரவே இல்லை என்றால். 


தர்மன் பிறர் மனம் நோகும்படி தவறாகவே பேச மாட்டானாம். 


இறைவன் மனதில் வர வேண்டும் என்றால் அது தூய்மையாக இருக்க வேண்டாமா. 


நான் மனதை குப்பையாக வைத்து இருப்பேன், இறைவன் வர வேண்டும் என்றால் நடக்குமா?






------------------------------ பாகம் 1 -------------------------------------------------------------------------


வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 1





பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



Wednesday, October 20, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?


பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



Thursday, November 12, 2020

வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள

 வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள 


காப்பியங்களில் எவ்வளவோ அவலச் சுவையை நாம் பார்த்து இருக்கிறோம்.  கதா நாயகனும், கதா நாயகியும் படாத பாடு படுவார்கள்.  கடைசியில் வெற்றி பெறுவார்கள். 

நான் படித்த வரை, மிகவும் வருந்துதற்கு உரிய அவலமான நிலை கர்ணனின் நிலை. 


தன் தாயிடம் ஒரு பிள்ளை கேட்கும் வரம்...


"நான் இறந்த பிறகு எனக்கு நீ பாலூட்ட வேண்டும்" என்று ஒரு பிள்ளை தாயிடம் கேட்கும் அவலம், அவலத்தின் உச்சம். 


செத்த பிறகாவது தாயன்பு கிடைக்காதா என்று ஏங்கும் அவன் அன்பின் தாகம் எவ்வளவு இருக்க வேண்டும்?  

சிலருக்கு அப்படி ஒரு அவலம் நிகழ்து விடுகிறது. விதி. 


பாடல் 


பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற

                தாயினைக் கரம் குவித்து,

'தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு

                எலாம் தாயீர்!

வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,

                அவனிபர் அறிய,

மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்

                எனும் வாய்மையும் உரைப்பீர்.


பொருள் 


பெரு வரம் = பெரிய வரம் 

இரண்டும் பெற்றபின் = (குந்தி) இரண்டையும் பெற்ற பின் 

தன்னைப் பெற்ற = தன்னைப் பெற்ற 

தாயினைக் = தாயிடம் 

கரம் குவித்து, = கை கூப்பி 

'தரு வரம் = தரக்கூடிய வரம் 

எனக்கும் இரண்டு உள = எனக்கும் இரண்டு உள்ளது 

உலகில் சராசரங்களுக்கு = இந்த உலகுக்கு

எலாம் தாயீர்! = எல்லாம் தாய் போன்றவளே 

வெருவரும் அமரில்  =  அஞ்சத்தக்க போரில் 

பார்த்தனால் = அர்ஜுனனால் 

அடியேன் வீழ்ந்தபோது, = நான் வீழ்ந்த பின் 


அவனிபர் அறிய, = உலகில் உள்ள அனைவரும் அறிய 

மரு வரும் = மனம் மகிழ்ந்து 

முலைப்பால்  = உன் தாய் பாலை 

எனக்கு அளித்து = எனக்கு அளித்து 

உம்தம் மகன் = நான் உன் மகன் 

எனும்  = என்ற 

வாய்மையும் உரைப்பீர். = உண்மையை உரைப்பீர் 


குழந்தை பசித்து தாய் பாலுக்கு அழலாம். 


ஒரு வளர்ந்த பிள்ளை, தான் இறந்த பின், எனக்கு தாய் பால் தா என்று ஏங்கும் ஏக்கம் இருக்கிறதே ....




Friday, September 18, 2020

வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம்

வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம் 


உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. 

அது எந்த இடம் தெரியுமா?


கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். 


கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான். 


அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான். 

கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. 

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான். கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.

கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். 

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 


"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான். 


பாடல் 

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர் உகந்து உகந்து,  அவனைக்

கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை நீர் ஆட்டி,

'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி,

முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்-மூவரும் ஒருவனாம் மூர்த்தி.


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_18.html


மைத்துனன் = தனது அத்தை மகனான கர்ணன் 

உரைத்த = சொல்லிய 

வாய்மை = உண்மையான வார்த்தைகளைக் 

கேட்டு = கேட்டு 

ஐயன் = கண்ணன் 

மன மலர் உகந்து உகந்து = மலர் போன்ற மனம் மகிழ்ந்து 

அவனைக் = கர்ணனனை 

கைத்தல மலரால் = மலர் போன்ற தன் கைகளால் 

மார்புறத் தழுவி = மார்போடு தழுவிக் கொண்டு 

கண் மலர்க் = மலர் போன்ற கண்களில் இருந்து 

கருணை நீர் ஆட்டி = வழிந்த கருணை என்ற கண்ணீரால் அவனை நனைத்து 

'எத்தனை பிறவி எடுக்கினும் = எத்தனை பிறவி எடுத்தாலும் 

அவற்றுள் = அந்தப் பிறவிகளில் 

ஈகையும் = தானம் செய்து 

செல்வமும் எய்தி, = செல்வம் பெற்று 

முத்தியும் பெறுதி முடிவில்' = முடிவில் முக்தியும் பெறுவாய் 

என்று உரைத்தான் = என்று கூறினான் 

மூவரும் ஒருவனாம் மூர்த்தி. = மூன்று பேரும் ஒன்றாய் நின்ற மூர்த்தி. 

இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 

கர்ணன் இறைவனை காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை. 

இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வ ரூப தரிசனம் தந்தான்.  அவனை கட்டி அணைத்துக்  கொண்டான்.  கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான். 

இறைவனை தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மை கட்டி அணைத்துக் கொள்வான். 

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான். 

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.

உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார். 

ஈகை எவ்வளவு பெரிய விஷயம் !

Wednesday, July 1, 2020

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?



உறவுகளுக்குள்ளும், நட்பினிலும் சில சமயம் சிக்கல்கள் வந்து விடுகின்றன. உணர்ச்சி வேகத்தில் ஏதோ சொல் வந்து விழுந்து விடுகிறது அல்லது செயல் நிகழ்ந்து விடுகிறது.

அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அந்த உறவும் நட்பும் அற்றுப் போய் விடும்.

சரி சரி என்று ஏற்றுக் கொண்டு போகப் பழக வேண்டும்.

பதிலுக்கு பதில் சொல்வது, செய்வது என்று இருக்கக் கூடாது.

சில சமயம் தவறி நம் விரல் நம் கண்ணில் பட்டு விடுகிறது. வலி தான். கண் கலங்கித்தான் போகிறது. அதற்காக நாம் விரலை வெட்ட முடியுமா?

நம்மையும் அறியாமல் நம் பல் நம் நாக்கை நறுக்கென்று கடித்து விடுகிறது. என்ன செய்ய. சில சமயம் இரத்தம் கூட வரும். "என் நாக்கையா கடித்தாய்" என்று அந்தப் பல்லை பிடுங்கி வீச முடியுமா?

அது போல நண்பர்களும், உறவினர்களும் சில சமயம் நமக்குத் தவறு இழைத்து விடலாம். மன்னித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் எல்லாம் முடிந்த பின் பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனை தூது அனுப்புகிறார்கள்.

அப்போது, தர்மன் சொல்கிறான்.

"கௌரவர்கள் செய்தது தவறுதான். பாஞ்சாலியின் துகிலை பற்றியது தவறுதான். என்ன செய்ய. சில சமயம் கண்ணில் கை படுவது போல  நிகழ்ந்தது அது.  நாங்கள் ஒருவருக்குள் ஒருவர். என் கண்ணில் என் கை பட்டால்  என் விரலை நான் வெட்டுவேனா. அது போல அவன் மேல் கோபித்து சண்டை போட வேண்டாம். சமாதானமாகப் போய் விடலாம்"

என்கிறான்.

பாடல்


'உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
                  அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
                  பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
                  கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!' என
                  மொழிந்தான்-புகழே பூண்பான்.

பொருள்


'உரிமையுடன் = உரிமையுடன் (பகையினால் அல்ல)

தம்பியர் அன்று = கௌரவர்கள் அன்று

உணர்வு அறியாமையின் = உணர்வு அல்லாமல்

அவைக்கண் = அரசவையில்

உரைத்த மாற்றம் = சொன்ன சொற்கள்

பரிபவமோ? = அவமானமா?

கேட்டோர்க்குப் = கேட்பவர்களுக்கு (அதாவது நமக்கு)

பரிபவம் என்பது  = அவமானம் என்பது

பிறரால் = நமக்கு உறவு அல்லாத பிறரால்

பட்டால் அன்றோ? = வருவது அன்றோ

கருதில் = இதை கருத்தில் கொண்டால்

இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? = இதை புரிந்து கொண்டால், இது எல்லோருக்கும் பொருந்தும் என்பது புரியும்

கண் மலரில் = கண்ணின் மேல்

கை படாதோ? = கை பட்டு விடாதா ?

பொரு தொழிலும் = பொருதல் சண்டை பிடித்தல். சண்டை பிடிக்கும் தொழில்

கடை நிலத்தில் கிடந்ததே!'  = கடைசியாக வருவது

என மொழிந்தான் = என்று கூறினான்

புகழே பூண்பான். = புகழை மட்டுமே அடைபவன்

இந்தப் பாட்டில் சில விடயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாம் படிப்பது நமக்கு பயன் தர வேண்டும். சும்மா படித்து கொண்டே போவது. எவ்வளவு நல்ல நூல்களை படித்தாலும் வாழ்வில் ஒரு துளி கூட மாறாமல் அப்படியே செல்வது என்பது அறிவீனம்.

"அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும். நடை முறைக்கு சாத்தியம் இல்லை " என்று செக்கு மாடு மாதிரி பழைய வாழ்க்கையிலே சுத்தி சுத்தி வரக் கூடாது.

"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று படித்து இருக்கிறோம்.

குற்றம் பார்க்காமல் இருக்கிறோமா? பின் படித்ததின் பயன் என்ன?

தர்மன் அதை நடைமுறை படுத்திக் காட்டுகிறான்.

தனக்கும் தன் தம்பிகளுக்கும் எவ்வளவோ துன்பம் செய்து இருந்தாலும், அது கை விரல் கண்ணைக் குத்துவது மாதிரித்தான் என்று சொல்கிறான். கோபமே இல்லை.

இரண்டாவது,

"இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ?"

இது கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோரும் நம் சொந்தம்தான்.  அப்படி   நினைத்து விட்டால், பின் யார் நம்மை அவமானம் செய்ய முடியும்?  சொல்பவன் அல்லது செய்பவன்  மற்றவன் என்று நினைத்தால்தானே கோபம் வரும்,  பகை வரும்..எல்லோரும் ஒரு குடும்பம் என்று நினைத்து விட்டால் பின் எங்கிருந்து அவமானம் வரும்.

இன்றைய சிக்கல் என்ன என்றால், பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, உடன் பிறப்புகள் ஏதாவது சொன்னால் கூட தவறாக எடுத்துக் கொண்டு பகைமை பாராட்டும் ஒரு உலகிற்குள் வந்து விட்டோம் நாம்.

தர்மன், இந்த உலகத்தில் எல்லோரும் என் குடும்பம் தான். அவர்கள் சொன்னால் என்ன , செய்தால் என்ன என் தம்பிதானே என்று நினைக்கும் பக்குவத்துக்கு வந்து விட்டான்.

நம்மால் அந்த அளவு முடியாவிட்டாலும், நெருங்கிய சொந்தத்திற்குள்ளாவது  நாம் இதை கடை பிடிக்க முயல வேண்டும்..

மூன்றாவது,


"பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே"

சிக்கல் என்று வந்து விட்டால் சாம, தான, பேத , தண்டம் என்று சொல்லப் படும் நான்கு உபாயங்களில், தண்டம் அதாவது தண்டனை, சண்டை என்பது  நான்காவதாக, கடைசியில் வருவது. முதலில் சமாதானத்தை  செய்ய முயல்வோம்  என்கிறான்.

படித்ததை செயல் வாழ்க்கையில் கடை பிடிக்கிறான்.

நான்காவது,


"உரிமையுடன் தம்பியர் அன்று"


அவர்கள் செய்தது  கோபத்தால்,பொறாமையால். ஆனால் தர்மன் சொல்வதோ, "தம்பி என்ற உரிமையில் அப்படி செய்து விட்டார்கள்" என்று பெருந்தன்மையோடு  பார்க்கிறான். "சொன்னது யாரு, கணவன் தானே / மனைவி தானே/ பெற்றோர் தானே/ நம் பிள்ளை தானே...அவர்களுக்கு இல்லாத உரிமையா ...அவர்கள் என்னோடு இல்லாவிட்டால் வேறு யாரோடு சண்டை போடுவார்கள் " என்று நினைக்கும் பரி பக்குவம் வேண்டும்.

ஐந்தாவது,

உரிமை என்றால் ஏதோ நல்லது செய்வதற்கு மட்டும் தான் உரிமை என்று அல்ல. சில சமயம் கோபிக்கவும், அதனால் சில பல சொற்கள் வந்து விழுவதும், செயல் நிகழ்வதும் கூட உரிமையால் தான்.

ஆறாவது

"உணர்வு அறியாமையின்"

குழந்தைக்கு பல்  வளரும் போது  நம் கை விரலை இழுத்து வாயில் வைத்து  கடித்து விடும். கடிப்பது மட்டும் அல்ல, கடித்து விட்டு சிரிக்கவும் செய்யும்.  அது வலிக்கத்தான் செய்யும். அதற்காக குழந்தையை அடிக்க முடியுமா?  "நீ என் விரலை கடித்தாய் அல்லவா,  பார் பதிலுக்கு நான் உன் விரலை கடிக்கிறேன்" என்று  குழந்தையின் விரலை நாம் எடுத்துக்  கடிக்க முடியுமா?

நமக்கு வலிக்கும் என்று குழந்தைக்குத் தெரியாது. அதுக்கு ஈறு உறுத்தும். எதையாவாவது   கடிக்கும். தெரியாமல் செய்து விடும்.

அது போல, நம் சுற்றத்தார் நமக்கு ஏதாவது தவறு செய்தால், "தெரியாமல் செய்து விட்டார்கள் " என்று நினைத்து அதை பெரிது படுத்தக் கூடாது.

இதெல்லாம் வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும்.

இல்லை என்றால், பாடவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த குடும்பப் பகையை  அறிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? என்றோ நடந்த குடும்பச் சண்டை.  அதை ஏன் வேலை மெனக்கெட்டு படிக்க வேண்டும்?

கதையாகப் படிக்கக் கூடாது.

வாழ்க்கைப் பாடமாக படிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post.html

Friday, May 29, 2020

வில்லி பாரதம் - இப்படியும் முடியும்

வில்லி பாரதம் - இப்படியும் முடியும் 


இன்பம் வரும்போது துள்ளிக் குதிக்கிறோம்.

துன்பம் வரும்போது துவண்டு போகிறோம்.

அதுதானே இயற்கை.

துன்பம், எவ்வளவு சின்னதாக இருந்தாலும், தாங்க முடியாததாக இருக்கிறது. சுண்டு விரலில் ஒரு சின்ன அடி பட்டுவிட்டால் கூட "வலி உயிரே போகிறது" என்கிறோம்.

வெயிலில் கொஞ்சம் நடந்து விட்டு வந்தால் "தலை வலி மண்டைய பிளக்கிறது" என்கிறோம்.  மண்டை என்ன பிளந்தா போய் விட்டது?

துன்பத்தை தாங்கும் குணம் இல்லை. துன்பமே வரக் கூடாது என்று நினைக்கிறோம். அப்படி தப்பித் தவறி வந்து விட்டால், உடனே போய் விட வேண்டும் என்று துடிக்கிறோம்.

கொஞ்சம் உடம்பு சரி இல்லை என்றாலும், மருந்தை வாங்கி ஊத்தி, மாத்திரையை போட்டு, இரண்டு ஊசி போட்டு, உடனே குணமாகி விட வேண்டும் என்று நினைக்கிறோம்.

வாழக்கை என்றால் துன்பம் வரும். வந்த துன்பம் உடனே போகாது. அதுதான் இயற்கை.  "வந்து விட்டாயா, சரி...உன்னோடு கொஞ்ச நாள் வாழ்கிறேன்" என்று   வாழ வேண்டுமே அல்லாமல், "ஐயோ வந்து விட்டதே, எப்ப போகுமோ" என்று ஒவ்வொரு நாளும்    துடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.

நம் இலக்கியங்கள் இதை பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

இராமன் 14 வருடம் காட்டுக்குப் போனான். போகும் போது அழுது கொண்டேவா போனான்? போகிற வழியெல்லாம் தந்தையையும், கைகேயியையும் திட்டிக் கொண்டுவா போனான்? கூனியை கூட அவன் வசை பாடவில்லை.

வில்லிப் புத்தூரார் ஒரு காட்சியை காட்டுகிறார்..

நாடு, நகரம், செல்வம் அனைத்தும் இழந்து, மனைவியை சபையில் வைத்து அவமானம் செய்த செயல் முடிந்து, பதின்மூன்று வருடம் காட்டுக்குப் போ, அப்புறம் ஒரு வருடம் தலை மறைவு வாழ்க்கை என்று ஆன பின், தம்பிகளையும், மனைவியையும் கூட்டிக் கொண்டு தெருவில் நடந்து (பல்லக்கு இல்லை, இரதம் இல்லை) போகிறான்.

ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது.

அவன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். அவன் மனதில் என்னவெல்லாம் ஓடி இருக்கும் ?

அவன் மன நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வில்லி புத்தூரார், வியக்க வைக்கும் உதாரணம். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று ஆச்சரியப் படவைக்கும் உதாரணம்.

"...நாட்டின் எல்லை கடந்து, கால்கள் சிவக்க, காட்டுக்குள் நுழையும் போது, இந்த உலக வாழ்க்கையை விட்டு ஸ்வர்கம் போகும் போது மெய் ஞானிகள் எவ்வாறு மகிழ்வார்களோ, அப்படி மகிழ்ந்தான்"

என்கிறார்.

என்ன ஒரு உதாரணம்.

உதாரணம் ஒரு புறம் இருக்கட்டும்.

இத்தனையும் இழந்து, அவமானப்பட்டு, காட்டுக்குள் போது மகிழ்ச்சியாக சென்றான் என்கிறார் வில்லியார்.

முடியுமா?

வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒரு காய் நன்றாக இல்லை என்றால், "சே, அந்தக் கடைக்காரன் நம்மை ஏமாற்றி விட்டான் / நான் ஒரு சரியான லூசு, பாத்து வாங்கி இருக்க வேண்டாமா" என்று மனம் நோகிறது.

அனைத்தையும் இழந்து காடு செல்வதானால், எப்படி இருக்கும்.

பற்று இல்லை. இந்த நாடு என்னோடது என்று நினைத்ததால் தானே, அதை இழக்கும் போது துன்பம் வரும்.

பாடல்

நாட்டிடை யெல்லை பொற்றா ணறுமலர்சிவக்க வேகிக்
காட்டிடை புகுந்த போதுங்கலக்கமற் றுவகை கூர்ந்தான்
கூட்டிடை யின்ப துன்பக்கொழும்பயன் றுய்த்தி மாறி
வீட்டிடை புகுதும் போதுமெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.


பொருள்


நாட்டிடை யெல்லை  = நாட்டின் எல்லை

பொற்றா ணறுமலர்சிவக்க = பொன் + தாள் + நறுமலர் + சிவக்க. பொன் போன்ற, மென்மையான, மலர் போன்ற பாதங்கள் சிவக்க. முன்ன பின்ன நடந்தது இல்லை. பல்லக்கு, இரதம் அப்படி வாழ்ந்து பழகியவன். நடந்தால் கால் சிவக்கிறது.


வேகிக் = ஏகி, சென்று

காட்டிடை = காட்டின் உள்ளே

புகுந்த = செல்லும்

போதுங் = போதும்  , செல்லுகின்ற போதும்

கலக்கமற் று வகை  கூர்ந்தான் = கலக்கம் அற்று , உவகை கூர்ந்தான்
மனதில் கொஞ்சம் கூட கலக்கம் இல்லை. சந்தோஷம் இருந்தது.

கூட்டிடை  = இந்த உடம்பில்

யின்ப துன்பக் = இன்பம் துன்பம்

கொழும்பயன்  = பெரிய பயனை

றுய்த்தி = அனுபவித்து (உய்தி)

மாறி = அதை விட்டு மாறி

வீட்டிடை = வானுலகம்

புகுதும் போது = செல்லும் போது

மெய்ம்மகிழ் = உள்ளம் மகிழும்

விபுதர் = மெய் ஞானிகள்

போல்வான். = போல இருந்தான்.


இதெல்லாம் நடக்கிற காரியமா ? ஏதோ கதையில் வருகிறது. சரிதான் படிச்சிட்டு போறத விட்டுட்டு, அதை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு வாழ்வில்  கடை பிடிக்க முடியுமா?

முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி.

துன்பத்தையும், இன்பத்தையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான்.

இவ்வளவு பெரிய துன்பத்தைக் கூட, சந்தோஷாமாக ஒருத்தன் பார்த்தான்.

அவ்வளவுதான்.

நமக்கு ஒரு துன்பம் வரும் போது என்ன செய்ய வேண்டும் நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

தையா தக்கா என்று குதிக்கலாம்.

ஊரில் உள்ள எல்லோரையும் ஏசலாம்.

சரி வந்து விட்டது, விதியே என்று மனம் வாடி நிற்கலாம்.

வந்தா என்ன, வந்து விட்டு போகட்டும். போராடி வெற்றி பெறலாம் என்று  துணிவோடு  களம் இறங்கலாம்.

இந்த துன்பத்திலும் என்ன செய்யலாம், என்ன பாடம் படிக்கலாம், எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்ளலாம் என்றும் சிந்திக்கலாம்.

வந்த துன்பத்துக்கு ஒரே ஒரு வழியில் தான் நாம் சிந்திக்க செயல்பட வேண்டும் என்று இல்லை.

நமக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படியும் இருக்க முடியும் என்று இலக்கியங்கள் கோடு போட்டு காட்டுகின்றன.

எதை எடுப்பது என்பது நம் கையில்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_29.html

Tuesday, May 5, 2020

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும்

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும் 


உறவுகளில் சிக்கல் வருவது இயல்பு.  அது எந்த உறவாக இருந்தாலும் அதில் அவ்வப்போது ஏதோ ஒரு இடைவெளி வருவது இயல்பு.

கோபம், வேறுபாடு, மனக் கசப்பு, நம்மை  புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம், ஏன் எப்போதும் நானே விட்டு கொடுக்க வேண்டும்? இந்த தடவை என்ன ஆனாலும் சரி, நான் விட்டு கொடுக்கப் போவதில்லை.  விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து எல்லாரும் என்னை ஒரு ஏமாளி என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்....என்று ஒரு கோபத்தின், வெறுப்பின் உச்சம் தொடும் நேரங்களும் நம் வாழ்வில்  வந்திருக்கும்.

பொதுவாகவே, சண்டை, மனக் கசப்பு, எண்ண வேறுபாடு என்று வந்து விட்டால், நமக்கு இது தான் வேண்டும் என்று இரு சாராரும் அடம் பிடிப்பது வழக்கம். தாங்கள் பிடித்த ஒன்றை விட்டு இறங்கி வர இரண்டு பக்கத்திலும் ஒத்துக் கொள்வதில்லை.

கொடுப்பதனால் முழுவதும் கொடு, இல்லை என்றால் ஒன்றும் வேண்டாம்...என்ற அடம் சரியானதா?

எல்லாம் நடந்த பின்னால், கண்ணனை தூது அனுப்புகிறான் தர்மன்.

என்ன கேட்டு இருக்க வேண்டும் ? தாங்கள் சூதில் வைத்து இழந்த நாட்டை திருப்பி கேட்டு இருக்க வேண்டும். அதுதானே முறை? எங்கள் நாட்டைக் கொடு, இல்லை என்றால் யுத்தம் என்று அறிவித்திருக்க வேண்டும்.

தர்மன் அப்படிச் செய்யவில்லை.

"நாடு கேள். நாடு தராவிட்டால், ஐந்து ஊரு கேள். ஊரும் தராவிட்டால், ஐந்து வீடாவது  கேள்.   வீடும் தராவிட்டால், யுத்தம் கேள்"

என்று சொல்லி அனுப்புகிறான்.

தர்மனின் நோக்கம் யுத்தம் அல்ல. யார் பெரியவன், யார் சிறியவன் என்ற போட்டி இல்லை. எல்லோரும் அன்போடு, சண்டை இல்லாமல் சமாதானமாகப் போக வேண்டும் என்பது. 


பாடல்

முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர்
                                    முன்றிறோறு,
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில்,
ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு
                                  போர் வேண்டு,
சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த
                                  செங்கண்மாலே.

பொருள்


முந்தூர் = முந்தி ஊர்ந்து. வேகமாக செல்லும்

வெம்பணிக் கொடியோன்  = கொடிய பாம்பின் கொடியைக் கொண்ட துரியோதனன்

மூதூரி னடந்து  = பழமையான ஊரில்

உழவர் = உழவர்கள்

முன்றிறோறு, = முன்றில் தோறும். முன்றில்  = இல்லத்தின் முன்

நந்தூரும் = சங்குகள் ஊறும்

புனனாட்டின் = புனல் + நாட்டில் = நீர் வளம் நிரம்பிய நாட்டில்

திறம்வேண்டு = பங்கை வேண்டு

 நாடொன்றுநல்கானாகில் = நாடு ஒன்று நல்கானாகில் (நாடு தராவிட்டால்)

ஐந்தூர் வேண்டு = எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர் வேண்டு

அவையிலெனி ல் = அதுவும் இல்லை என்றால்

ஐந்திலம்வேண்டு = ஐந்து இல்லம் வேண்டு

அவை மறுத்தால்  = அதையும் மறுத்தால்

அடு  போர் வேண்டு = மோதும் போரை வேண்டு

சிந்தூரத் திலக நுதற்  = சிவந்த திலகம் முடிந்த நெற்றியை உடைய

 சிந்துரத்தின் மருப்பொசித்த = யானையின் தந்தத்தை ஒடித்த

செங்கண்மாலே. = சிவந்த கண்களை உடைய திருமாலே

இது தான் வேண்டும் , இல்லை என்றால் வேறு எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கக் கூடாது.  அப்படி இருந்தால் எங்கும் எப்போதும் சண்டை சச்சரவோடு தான்  வாழ வேண்டி வரும்.

இது இல்லை என்றால், அது என்று கொஞ்சம் வளைந்து கொடுத்து போக வேண்டும்.

சரி தவறு என்பதல்ல வாழ்க்கை.  அனுசரித்து போவது.

தர்மன் எவ்வளவு வளைந்து கொடுக்கிறான். அரசில் பாதி கேள் என்று ஆரம்பித்து  கடைசியில் ஐந்து வீடாவது கொடு என்று கேட்கிறான்.

துரியோதனன் முட்டாள்.  ஐந்து வீட்டைக் கொடுத்து இருக்கலாம். அதற்கு பதிலாக தன்னையும், 99 தம்பியாரையும், மாமன், மைத்துனன், பீஷ்மர், துரோணர்,  கர்ணன் என்று அனைவரையும் பலி கொடுத்தான்.

தர்மன் எவ்வளவு இறங்கி வந்தான். கொஞ்சம் பெருந்தன்மையாக ஐந்து ஊரை கொடுத்து இருக்கலாம். எவ்வளவு அழிவு. கடைசியில் முழு இராஜ்யமும் போனது.


பாரதம் சொல்லும் பாடம் - உலோப குணம் அழிவைத் தரும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_5.html

Tuesday, April 28, 2020

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 


சில சமயம் உறவினர்கள் இடையே மனக் கசப்பு வரலாம். ஏதோ ஒரு கோபத்தில் வார்த்தைகள் தடம் மாறிப் போகலாம். நாம் ஒன்று சொல்ல, மற்றவர் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு பிரச்சனை வரலாம்.

உறவுகளுக்குள் இந்த மாதிரி பிரச்சனை வருவது இயல்புதான். அப்படி வந்து விட்டால் அப்புறம் என்ன செய்வது?

திருப்பியும் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? எப்படி நடந்து விட்ட தவற்றை தள்ளி வைத்து விட்டு உறவை மேலே கொண்டு செல்வது?

மற்ற உறவை விடுங்கள். கணவன் மனைவி உறவில், பெற்றோர் பிள்ளைகள் உறவில், உடன் பிறப்புகள் இடையில் நிரந்தர விரிசல் விழுந்து விடுவது இல்லையா.

தவறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாக வாழ்வது எப்படி?

ஒரு தயக்கம், பழைய நினைவுகள், வராமல் இருக்குமா ?

பாரதம் வழி காட்டுகிறது?

பாண்டவர்களுக்கு, கௌரவர்கள் செய்யாத கொடுமை இல்லை. பாஞ்சாலியை சபைக்கு முடியை பிடித்து இழுத்து வந்து, அவள் ஆடையை களைய முயன்றார்கள்.

சகிக்க முடியுமா? மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா?

இதை எல்லாம் நினைத்து தருமனை தவிர எல்லோரும் கொதித்துக் கொண்டு இருந்தார்கள். யுத்தம் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் நிறைந்து நின்றது.

ஆனால், தர்மர் மட்டும் வேறுபட்டு சொல்கிறார்.

"பீமா, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒரே குலத்தில் பிறந்தவர்கள் ஒன்றாக வாழ்வதைப் போல உறுதி வேறொன்றில்லை. மாறாக, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் , இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா"

என்றான்.

நாம் நினத்துக் கொண்டு இருக்கிறோம், சண்டை என்று வந்து விட்டால், ஒருவர் பக்கம் நியாயம் இருக்கும். மற்றது அநியாயம் என்று. தர்மன் மிகப் பெரிய உண்மையை எடுத்துச் சொல்கிறான். பகை என்று வந்து விட்டால், பழி இரண்டு பக்கமும் வரும் என்கிறான். சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாடல்


பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
                  பணித்து, நோக்கி,
'குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
                  சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
                  உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
                  எதிர்ப்பது?ன்றான்.

பொருள்

பரிவுடன் = பரிவுடன், அன்புடன்

மற்று இவை = இவற்றை

கூறும் = கூறிய

பவன குமாரனை  = வாயு குமாரனான பீமனைப் பார்த்து

மலர்க்கை = மலர் போன்ற கையால்

பணித்து = அமைதி படுத்தி விட்டு

நோக்கி = அவனை நோக்கி

'குருகுலத்தோர் போர்ஏறே! = குருகுலத்தில் தோன்றிய ஏறு போன்ற போர்க் குணம் கொண்டவனே

குற்றமது பார்க்குங்கால் = குற்றம் பார்த்தால்

சுற்றம் இல்லை; = சுற்றம் இல்லை

ஒரு குலத்தில் பிறந்தார்கள் = ஒரே குலத்ததில் பிறந்தவர்கள்

உடன் வாழும் வாழ்வினைப்போல் = ஒன்று பட்டு வாழும் வாழ்வைப் போல

உறுதி உண்டோ? = உறுதி உண்டோ ?

இருவருக்கும் வசை அன்றோ = இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா?

இரு நிலம் காரணமாக = இந்த நிலம் காரணமாக

எதிர்ப்பது?ன்றான். = எதிர்த்து நின்றால் என்றான்

தவறு எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், மன்னித்து, மறந்து, ஒன்றாக வாழ்வதே  சிறந்தது என்கிறான்.

சுற்றம் என்று இருந்தால், அவ்வப்போது தவறு ஏற்படுவது இயல்பு. அதையே நினைத்துக் கொண்டிருந்தால், சுற்றம் என்ற ஒன்றே இருக்காது. தனித்து இருக்க வேண்டியதுதான்.

இது போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவை கொஞ்சமாவது நம் மனதில் , நம் வாழ்வில் கடை பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_95.html


Tuesday, February 18, 2020

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வேம்

வில்லி பாரதம் - இரு திறத்தேமும்  சென்று மாள்வேம்


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கும். அந்த குணங்களை நாம் பெரும்பாலான சமயங்களில் கடை பிடிப்போம். அது அல்ல சாமர்த்தியம். அந்த நல்ல பண்புகளுக்கு ஒரு சோதனை நேரும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான் கேள்வி.

இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பது நம் கொள்ககையாக இருக்கலாம். நமக்கு என்று ஒரு அவசரம் வரும் போது நாம் இலஞ்சம் கொடுக்காமல் இருப்போமா என்பது தான் கேள்வி.

பிள்ளைக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் வேண்டும். போதுமான மதிப்பெண்கள் இல்லை. பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும். கொடுப்போமா, மாட்டோமா?

பொறுமை நல்லது. கோபம் கெட்டது. நமக்கு இது தெரியும். இருந்தும், நமக்கு தீங்கு செய்தவர்கள் மேல் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்போமா? மனது அளவிலாவது அவர்களுக்கு தீங்கு வர வேண்டும் என்று நினைக்க மாட்டோமா?

தர்மன்.

இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு ஒரு கதா பாத்திரம்.

சூதில் தோற்று, மனைவியை, அரச சபையில் துகில் உரிந்தவனை, தன்னையும் தன்   தம்பிகளையும் பதினான்கு வருடம் காட்டுக்கு அனுப்பியவன் மேல் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா?

சொல்லியபடி நாட்டை தர மறுக்கிறான் துரியோதனன்.

பஞ்ச பாண்டவர்களிடம் , கண்ணன் கேட்கிறான், "நான் தூது போகிறேன். துரியோதனனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்" என்று.

தர்மன் சொல்கிறான்

"காட்டிலே மூங்கில் காடுகள் இருக்கும். அதில் உள்ள மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பிடித்துக் கொள்ளும். அப்படி பிடித்த தீ, அந்த இரண்டு மூங்கில்களை மட்டும் அல்ல, அந்த காட்டையே எரித்து அழித்து விடும். அது போல, எங்களுக்குள் யுத்தம் வந்தால், இரண்டு பக்கத்து மக்களும் அழிவோம். எனவே சண்டை வேண்டாம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வழி தேடு"  என்று.

பாடல்

வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர்
                                வரைக்காடென்னச்,
செயிரமரில் வெகுளிபொரச் சேரவிருதிறத்தேமுஞ்
                            சென்றுமாள்வேம்,
கயிரவமுந்தாமரையுங் கமழ்பழனக்குரு நாட்டிற்கலந்துவாழ,
வுயிரனையாய் சந்துபடவுரைத்தருளென்றானறத்தினுருவம்
                                 போல்வான்.

பொருள்


வயிரமெனுங் = வயிரம் போன்று

கடு நெருப்பை = கொடிய நெருப்பை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கினுயர் = வளர்கின் உயர் = வளர்த்தால் உயர்ந்த

வரைக் = மலை போல் பெரிய

காடென்னச் = காடு போல

செயிரமரில் = வரும் போரில்

வெகுளிபொரச் = கோபம் போங்க

சேர = ஒன்றாக

விருதிறத்தேமுஞ் = இரு திறத்தில் உள்ளவர்களும்

சென்று மாள்வேம், = சென்று இறப்போம்

கயிரவமும் = ஆம்பல் மலர்களும்

தாமரையுங்  = தாமரை மலர்களும்

கமழ் = மலர்ந்து  மணம் வீசும்

பழனக் = பழைய,

குரு நாட்டிற் = குரு நாட்டில்

கலந்துவாழ, = நாங்கள் எல்லோரும் கலந்து வாழ

வுயிரனையாய்  = எங்கள் உயிர் போன்றவனே

சந்துபட = சமாதானத்துடன் வாழ

வுரைத்தருளென்றான = உரைத்து அருள் என்றான்

அறத்தினுருவம் = அறத்தின் உருவம்

போல்வான். = போன்றவன்

எங்களுக்குள் சண்டை வந்தால் நாங்கள் மட்டும் அல்ல, எங்களை சேர்ந்தவர்களும் அழிவார்கள். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப் பிடித்தால், அந்த மரங்கள் மட்டும் அல்ல, அவை சேர்ந்த காடும் அழியும். அது போல.

இரவில் மலர்வது ஆம்பல்.

பகலில் மலர்வது தாமரை.

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண் பட்ட மலர்கள் ஒன்றாக இருக்கும் நாட்டில், மனிதர்களாகிய  நாங்கள் ஒன்றாக இருக்க முடியாதா. எனவே, நாங்கள் ஒன்றாக வாழ வழி பார் என்றான்.

கௌரவர்கள் செய்தது சின்ன கொடுமை அல்ல. எங்களுடைய கோபத்தால், எத்தனையோ பேர்  அழிந்து போவார்கள். அவர்கள் பக்கம் மட்டும் அல்ல, எங்கள் பக்கத்திலும்  அழிவு இருக்கும். எனவே, போர் வேண்டாம் என்கிறான்.

கோபம் யார் மேல் வருகிறதோ, அது அவர்களை அழிக்கிறதோ இல்லையோ, கோபம் கொண்டவர்களை  கட்டாயம் அழிக்கும்.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் எமப் புணையைச் சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. யாரிடம் இருக்கிறதோ, அவர்களைக் கொல்லும்.

இன்று உலக அரங்கில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன. நாடுகள் ஒன்றோடு ஒன்று   மோதிக் கொண்டு இருக்கின்றன.

சமாதானம் என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.

பாரதம் போன்ற நீதி நூல்கள் நம் சிந்தனையை பக்குவப் படுத்த உதவும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_18.html

Monday, February 10, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்

வில்லி பாரதம் -  சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்


அம்பையை பீஷ்மர் சிறை எடுத்தார். அம்பையோ, தான் சாளுவ மன்னனை விரும்பவதாகச் சொன்னாள். 'சரி, நீ அவனையே மணந்து கொள் ' என்று பீஷ்மரும் அம்பையை சாளுவனிடம் அனுப்பி வைத்தார். மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவளை திருப்பி அனுப்பிவிட்டான்.

போக வழி இல்லாமல் தவித்த அவள், தன்னுடைய தந்தையிடமே வந்து சேர்ந்தாள். நடந்ததை எல்லாம் கூறினாள். தன் மகள் நிலை கண்டு வருந்தி, காசி மன்னனும், பீஷ்மருக்கு ஒரு தூது அனுப்பினான்.


பாடல்


தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்த னின்னலுரை
                                           தந்ததும்,
கோதை யாலுறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன்
                                         மறுத்ததும்,
பேதை கூறமன நொந்தி ரங்கியவன் மிக்க நண்பினொடு
                                        பின்னையும்,
தூதை யேவிமண முற்றி ரந்தனன்வி சும்பு லாவுநதி
                                         சுதனையே.

பொருள்

தாதை  = தந்தை

தாளினில் = கால்களில்

விழுந்து = விழுந்து

சந்தனுவின் = சந்தனு மகாராஜாவின்

மைந்த னின் = மைந்தனின் (பீஷ்மர்)

இன்னலுரை = துன்பம் தரும் செய்தி

தந்ததும் = தந்ததும்

கோதை யால் = பூ மாலையால்

உறவு கொண்டு = மணந்து கொள்ள இருந்த

கைதரல் = கை பற்றி

குறித்த = தான் மனதில் நினைத்த

கோமகன் = மன்னன் (சாளுவன் மன்னன்)

மறுத்ததும், = தன்னை மணந்து கொள்ள மறுத்ததுவும்

பேதை கூற = மகள் கூற

மன நொந்து = மனம் வாடி

இ ரங்கியவன் = இரக்கப்பட்டு அவன்

மிக்க நண்பினொடு = மிகுந்த நட்போடும்

பின்னையும், = மேலும்

தூதை யேவி = தூதை அனுப்பி

மண முற்றி ரந்தனன் = மணம் செய்து கொள்ளும் படி வேண்டினான்

விசும்பு லாவு = ஆகாயத்தில் உலவும்

நதி = கங்கை

சுதனையே. = மகனையே

கங்கா தேவியின் மகனான பீஷ்மரிடம் தன் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி  வேண்டினான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

தூக்கிச் சென்ற பீஷ்மர் வேண்டாம் என்று சாளுவனிடம் போனாள், மகள்.

சாளுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

கையை பிசைந்து கொண்டு நிற்கும் மகள். அவளின் மன நிலை எப்படி இருக்கும்.

தன் மகளின் வாழ்வு இப்படி ஆகி விட்டதே என்று வருந்தும் தந்தையின் மன நிலை எப்படி இருக்கும்?

பீஷ்மரை எதிர்க்கவும் முடியாது. சாளுவன் கூறுவதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது. பெண் ஆசைப்பட்டதிலும் தவறு இல்லை.

பாரதம் பூராவும் இது போன்ற உணர்ச்சி மிகுந்த இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனித மனத்தின் சலனங்களை, ஆசா பாசங்களை, சிக்கல்களை  படம் பிடித்து காட்டுவதில் பாரதம், இராமாயணத்தை விட ஒரு படி  மேலே நிற்கிறது.

சரி, இதற்கு என்னதான் தீர்வு?

கதை எப்படி மேலே நகர்கிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_10.html

Sunday, February 9, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - நின் மெய் தொடேன்

வில்லி பாரதம்  - சிகண்டி - நின் மெய் தொடேன் 


"நான் சாளுவனை மனதால் விரும்புகிறேன்" என்று சொன்ன அம்பையை, "சரி நீ அவனிடமே போ" என்று சொல்லி அனுப்பினார் பீஷ்மர்.

அம்பையும் சந்தோஷமாக சாளுவனிடம் சென்றாள். தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனிடம் வேண்டினாள்.

அதற்கு அவனோ "மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீ அவனுக்கு உரியவள். உன்னை நான் தொட மாட்டேன். நீ பீஷ்மரிடமே போ " என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அவள் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டினாள்.


பாடல்

சென்றவம்பையைத் தீமதிச்சாலுவன்
வென்றுதெவ்வர் கவர்ந்தநின்மெய்தொடேன்
என்றிகப்ப விவனுழைமீளவும்
மன்றல்வேண்டினண் மன்றலங்கோதையாள்.


பொருள்


சென்றவம்பையைத் = சென்ற அம்பையை

தீ மதிச் சாலுவன் = தீய மதி கொண்ட சாளுவன்

வென்று = என்னை வென்று

தெவ்வர் = என் எதிரி

கவர்ந்த = கவர்ந்து சென்ற

நின் மெய் தொடேன் = உன் உடலை நான் தொட மாட்டேன்

என்றிகப்ப = என்று இகழ்ந்து திருப்பி அனுப்ப

விவனுழை = இவன் (பீஷமர்) வீட்டுக்கு

மீளவும் = மீண்டும்

மன்றல் வேண்டினள் = மணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள்

மன்றலங்கோதையாள். = மணமுள்ள மாலை அணிந்த அந்தப் பெண்



சாளுவன் செய்ததும் சரி என்றே படுகிறது. தன்னை தோற்கடித்து, தூக்கிச் சென்ற பெண்ணை எந்த மன்னன் மணம் செய்து கொள்வான்?


நான் சாளுவனை காதலிக்கிறேன், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்  என்று சொல்லி விட்டு, இப்போது திரும்பி வந்து என்னைத் திருமணம் செய்து கொள் என்று கூறினால் பீஷ்மர் எவ்வாறு ஏற்பார்?

அம்பை யோசித்து இருக்க வேண்டும்.

இப்போது இரண்டும் கெட்டானாக அங்கும் இல்லை, இங்கும் இல்லை என்று  நடுவில்  கிடந்து அல்லாடுகிறாள்.

இனி, அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?

ஒரு நிகழ்ச்சியில் எதிர்காலமே கேள்வி குறியாகிப் போனது.

எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

பிறந்த வீட்டுக்கும் போக முடியாது. பீஷ்மரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார். சாளுவனும் திருமணம் செய்து கொள்ள மாட்டான். மற்ற அரசர்கள் யாரும் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவள் செய்த தவறுதான் என்ன?

அவளுக்கு கோபம் வருகிறது. தன் நிலை குறித்து சுய பச்சாதாபம் வருகிறது.   இந்த ஆண்கள் தன் வாழ்வில் இப்படி விளையாடுகிறார்களே என்று ஆங்காரம் வருகிறது.

ஒரு பெண் பொங்கினால் என்ன செய்வாள் என்று பாரதம் காட்டுகிறது.

ஒரு முக்கியத்துவமும் இல்லாத அம்பை, பாரதக் கதையை புரட்டிப் போடுகிறாள். தனி ஒரு பெண்ணாக நின்று.

அர்ஜுனனும், கண்ணனும் சாதிக்க முடியாத ஒன்றை இந்தப் பெண் சாதித்துக் காட்டுகிறாள்.

பெண்ணின் கோபம் எது வரை போகும் என்று பாரதம் காட்டுகிறது.

பார்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_9.html

Friday, February 7, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று


காசி இராஜனின் மூன்று மகள்களை, பீஷ்மர் சிறை எடுத்து சென்றார் என்று பார்த்தோம்.

போகிற வழியில், சாளுவ தேசத்து அரசன் பீஷ்மரை தடுத்து போர் செய்தான்.

பீஷ்மர் அவனை வென்று, பெண்களை கொண்டு சென்றார்.

அரண்மனை சென்ற பின், அம்பை என்ற பெண் பீஷ்மரிடம் "நான் என் மனதை சாளுவ அரசனிடம் கொடுத்து விட்டேன். நான் அவனை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

பீஷ்மரும், அவளுடைய காதலை மதித்து, "விருப்பமில்லா பெண்ணை, பலவந்தமாக மணப்பது எமக்கு வழக்கம் அல்ல. எனவே, நீ உன் மனம் விரும்பிய சாளுவ மன்னனையே சென்று மணந்து கொள்" என்று கூறி அனுப்பி வைத்ததார்.

பாடல்

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.

பொருள்

சமரின் = போரில்

முந்திய = முன்னால் வந்த

சாலுவன் = சாளுவன்

மேல் மனம் = மேல் என் மனம்

அமர நின்றது = சென்று நின்றது

அறிந்துழி = அறிந்த போது

அம்பையை = அம்பை என்ற இளம் பெண்ணை நோக்கி

'எமர்களுக்கு = எங்களுக்கு

இஃது = இது

இயற்கை அன்று' = இயல்பானது அல்ல

என்னவே = எனவே

அமர் அழிந்த = போரில் தோற்ற

அவனுழைப் = அவனிடம் (சாளுவனிடம்)

போக்கினான். = அனுப்பினான்



சுயம்வரம் நடப்பதும், அதில் பெண்களை கொண்டு செல்வதும், மற்ற அரசர்கள் அதை  மறித்து போர் செய்வதும், வீரத்தை நிலை நாட்டி பெண்ணை திருமணம்  செய்து கொள்ள நினைப்பதும் வழக்கமான ஒன்று தான்.

இது வரை நடந்தது எதுவும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

பின் எங்கு தவறு நடந்தது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_7.html

Monday, January 20, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என 


திருமணம் செய்து கொள்ள ஆவலோடு வந்திருந்த அனைத்து நாட்டின் அரசர்களில், தங்களுக்கு பிடித்த அரசரை தேர்ந்து எடுக்க ஆசையோடு வந்த காசி இராஜாவின் பெண்கள் மூவரும், அங்கே பீஷ்மரை கண்டு கொஞ்சம் ஆச்சரியப் பட்டார்கள். இந்தக் கிழவன் இங்கே என்ன செய்கிறான் என்று.

பீஷ்மர் அதை எல்லாம் பற்றி கவலைப் படவில்லை. அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

மதம் கொண்ட யானை போல சென்றார் என்கிறார் வில்லியார்.

பாடல்

ஏனைவேந்த ரெதிரிவரைப்பெருந்
தானைசூழ்மணிச் சந்தனத்தேற்றியே
சோனைமாமதஞ் சோருங்கடதட
யானையென்ன விளவலொடேகினான்.

பொருள்

ஏனை = மற்ற

வேந்தர் = அரசர்கள்

எதிர் = எதிரில்

இவரை = இந்த மூன்று பெண்களையும்

பெருந் = பெரிய

தானை = படை

சூழ் = சூழ்ந்த

மணிச்  = மணிகள் கட்டிய

சந்தனத்தேற்றியே = தேரில் ஏற்றி

சோனை =அடை மழை போல

மாமதஞ் சோருங் = மதன நீர் சொரியும்

கடதட = பெரிய தலையை உடைய (கடம் = மதம், தடம் = இடம், மதம் பிறக்கும் இடம்)

யானையென்ன = யானை போல

விளவலொடேகினான். = இளவரசனோடு சென்றான்



அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

என்பது கந்தர் அலங்காரம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/5.html

Sunday, January 19, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு 


ஏதோ அந்தக் காலம் முதல் இன்று வரை பெண்களை அடக்கியே வைத்து இருந்தார்கள் என்று இன்றைய பெண்களில் பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. பெண் விடுதலை வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள்.

உண்மை அதுவா என்று வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டும்.

அந்தக் காலத்தில், பெண்களுக்கு சுயம்வரம் என்று வைத்திருந்தார்கள். இராஜா வீட்டில். பெரிய பெரிய நாட்டின் அரசர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள். பெண்ணின் கையில் மாலையைக் கொடுத்து, உனக்கு யாரைப் பிடித்து இருக்கிறதோ, அவரை தேர்ந்து எடுத்துக் கொள் என்ற உரிமையை தந்து இருந்தார்கள். பெண்ணின் தந்தை நினைத்து இருந்தால், அந்தப் பெண்ணை யாராவது ஒரு அரசனுக்கு மணமுடித்து இருக்கலாம். அப்படிச்  செய்யாமல், மணமகனை தேர்ந்து எடுக்கும் உரிமையை பெண்ணுக்கு கொடுத்து இருந்தார்கள்.

"ஹா...அதெல்லாம் இராஜா வீட்டு பெண்களுக்கு...சாதாரண பெண்களுக்கு அப்படியெல்லாம் உரிமை இருந்ததா ?" என்று கேட்பதற்கு முன், மீண்டும் ஒரு முறை நம் இலக்கியங்களை, வரலாற்றினை வாசியுங்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

காசி இராஜன் பெண்கள் மூவரும் சுயம்வர மண்டபத்துக்கு மாலையும் கையுமாக வருகிறார்கள்.

அங்கே பல மன்னர்கள் காத்து இருந்தார்கள். அவர்களோடு பீஷ்மரும் இருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தப் பெண்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, இந்த வயதான தாத்தா எதுக்கு இங்க வந்து   உட்காந்து இருக்காருன்னு ...


பாடல்


'கையில் மாலை இவற்கு' எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.


பொருள்


'கையில் மாலை இவற்கு' எனக்  = கையில் உள்ள மாலை இவருக்கு என்று

கன்னியர் = அந்த கன்னிப் பெண்கள்

வெய்ய = ஆசை கொண்ட

நெஞ்சொடு = மனதோடு

மின் என வந்தவர், = மின்னலைப் போல் வந்தனர் (வாம்மா மின்னல்)

வைய = உலகுக்கே

மன்னன் = அரசனான  (பீஷ்மரின்)

வய நிலை = வயதின் நிலை

நோக்கியே, = நோக்கி

ஐயம் உற்றனர் = சந்தேகப் பட்டனர்

அன்புறு காதலார் = அன்பும் காதலும் கொண்ட அந்தப் பெண்கள்

ஒரு புறம் வெவ்வேறு நாட்டின் அரசர்கள்.

இன்னொரு புறம் பீஷ்மர்

மற்றொரு புறம் கையில் மாலையுடன் காசி இராஜாவின் மூன்று பெண்கள்.

அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்து என்ன நடக்கும்?

அந்தப் பெண்கள் மற்ற அரசர்கள் கழுத்தில் மாலையை போடுவார்களா?

அல்லது பீஷ்மர் கழுத்தில் மாலையைப் போடுவார்களா?

அல்லது பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து செல்வாரா? அப்படிப் போனால் மற்ற  அரசர்கள் சும்மா இருப்பார்களா?

கதை சூடு பிடிக்கிறதா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/4.html

Saturday, January 18, 2020

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன்

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன் 


தன் தம்பிக்கு மணம் முடிக்க என்று காசி இராஜனின் மகள்களின் சுயம்வரத்துக்கு பீஷ்மர் போகிறார்.

தம்பிக்காக போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் குழப்புகிறார்கள்.

"இந்தக் கிழவன் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தவன் ஆயிற்றே, இப்போது , இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த சுயம்வரத்துக்கு வருகிறான்" என்று ஏனைய அரசர்கள் கலங்கினார்கள்.

கலக்கத்துக்குக் காரணம், சுயம்வரம், போட்டி என்று வந்து விட்டால், பீஷ்மரை தங்களால் வெல்ல முடியாது என்பதால்.

பாடல்

குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்
ஒருத்தரன் றறிவாருலகோர்பலர்
விருத்தன்வந்தனன் மேலினியேதிவன்
கருத்தெனாமனங் காளையர்கன்றினார்.

பொருள்

குருத்தலந்தனிற் = குருகுலத்தில்

கூறிய வஞ்சினம் = முன்பு செய்த வஞ்சினம் (சத்தியம், விரதம்)

ஒருத்தரன் றறிவாருலகோர்பலர் = ஒருத்தர் அன்றி அறிவார் உலகோர் பலர்

விருத்தன் = வயதானவன்

வந்தனன் = வந்தனன்

மேலினியேதிவன் = மேல் இனி ஏது இவன்

கருத்தெனா = கருத்து என்று

மனங்  = மனத்தில்

காளையர் = அங்கு வந்திருந்த காளை போன்ற இளைய அரசர்கள்

கன்றினார். = வருந்தினர்

விருத்தன் என்றால் வயதானவன் என்று பொருள்.

விருந்தா நாரி பதி விரதா என்று வடமொழியில் ஒரு பழ மொழி உண்டு. வயதான பெண்  பதி விரதை என்பது பொருள்.


அசலம் என்றால் மலை என்று பொருள்.

விருத்தாச்சலம் என்றால் வயதான மலை என்று பொருள். விருதாச்சலத்துக்கு திருமுதுக்குன்றம்  என்பது தமிழ் பெயர்.

அங்குள்ள அம்பிகையின் பெயர் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி.  வயதானவளாக காட்சி தருகிறாள்.

குகை நமச்சிவாயர் என்று ஒரு பக்தர் இருந்தார். அவர் பெரியநாயகி நோக்கி சில பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு பசிக்கும் போதெல்லாம் அன்னைக்கு கட்டளையிடுவார். "சோறு கொண்டு வா" என்று. தாயிடம் என்ன கெஞ்ச வேண்டி இருக்கிறது. "எனக்குப் பசிக்கிறது, சோறு கொண்டு வா" என்று  உரிமையுடன் கேட்பார்.

பெரிய நாயகியிடம் ஒரு நாள்

"நன்றி புனையும் பெரிய நாயகியே நுங்கிழத்தி
என்றும் சிவன்பாலிடக் கிழத்தி-நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழுநீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா!"

என்று பாடினார். அம்பாளை கிழவி, கிழவி என்றே பாடினார்.

எந்த பெண்ணுக்குத்தான் தான் கிழவி என்று ஏற்றுக் கொள்ள மனம் வரும். இப்போதெல்லாம்  பாட்டி என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஆச்சியம்மா  என்று சொல் என்று பேரப்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். பாட்டி என்று சொன்னால் வயதானவளாகத் தெரியுமாம்.

அம்பாள் நேரில் வந்து, "என்னப்பா என்னை இப்படி கிழவி கிழவி என்று சொல்லி விட்டாயே. நல்லாவா இருக்கு. இளமை உள்ளவளாகப் பாடு" என்று வேண்டினாள்.

குகை நமச்சிவாயரும்,

"முத்தாநதி சூழும் முதுகுன்றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம் தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா!"

என்று பாடினார்.

அம்பாளும் மகிழ்ந்து சோறு கொண்டு வந்து தந்தாளாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/3.html

Friday, January 17, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான்

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான் 


காசி மன்னனுக்கு மூன்று பெண் குழந்தைகள்.  அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கு திருமண வயது வந்ததும், காசி மன்னன், திருமணம் பற்றி அறிவித்தான்.

அழகில் சிறந்த அந்ப் பெண்களை மணந்து கொள்ள பல அரசர்கள் நான் நீ என்று ஆசைப்பட்டார்கள்.

பீஷ்மனும், தன்னுடைய தம்பியான விசித்திர வீரியனுக்கு அந்த பெண்களை மனமுடித்து வைக்க எண்ணினான். எனவே, சுயம்வரத்தில் கலந்து கொள்ள, பீஷ்மரும் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்


பாடல்

வரித்தமன்னர் மறங்கெடவன்பினால்
திரித்துமெம்பியைச் சேர்த்துவல்யானெனாத்
தரித்தவில்லொடுந் தன்னிளவேந்தொடும்
வரித்தவெண்குடை வீடுமனேகினான்.

பொருள்

வரித்த மன்னர் = (தங்கள் மனதுக்குள் அந்தப் பெண்களை) வரித்துக் கொண்ட. அதாவது, அந்தப் பெண்கள்தான் என் மனைவி என்று எல்லா அரசர்களும் மனதுக்குள் நினைத்து இருந்தார்கள்.

 மறங்கெட = மறம் + கெட = அவர்களின் வீரம் கெட

வன்பினால் = வன்மையால்

திரித்து = அவர்களை திரும்பி ஓடச் செய்து

மெம்பியைச்  =என் தம்பியிடம்

சேர்த்துவல்யானெனாத் = சேர்த்து வைப்பேன் நான் என்று

தரித்த   வில்லொடுந் = வில்லை எப்போதும் ஆடை போல தரித்து இருக்கும்


தன்னிள வேந்தொடும் = தன்னுடைய இளைய வேந்தனோடும்

வரித்த வெண்குடை = சூடிய வெண் குடை உள்ள

வீடுமனேகினான். = வீடுமன் (பீஷ்மன்) சென்றான்

சுயம்வரத்தில் கலந்து, வீரத்தை நிலை நாட்டி, அந்தப் பெண்களை கொண்டு வந்து தன் தம்பிக்கு மணம் முடிக்க பீஷ்மர் புறப்பட்டார்.

அடுத்து என்ன ஆகப் போகிறதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/2.html

Tuesday, January 14, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - ஒரு முன்னோட்டம்

வில்லி பாரதம் - சிகண்டி  - ஒரு முன்னோட்டம் 


பெண்ணின் மனதை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாததால் வரும் சிக்கல்களை வைத்துத்தான் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பின்னப் பட்டு இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

ஒரு கூனியை, கைகேயியை, சூர்பனகையை புரிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்சிகளோடு ஆண்கள் தவறாக விளையாடியதால் என்ன நிகழ்ந்தது என்று இராமாயணம் காட்டுகிறது.

பாரதமும் அப்படித்தான்.

அதில் ஒரு மிக மிக சுவாரசியமான பாத்திரம் சிகண்டி.

எனக்குத் தெரிந்து, ஒரு அலியின் மன நிலை எப்படி இருக்கும் என்று எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லை. ஆணின் மனம் புரிகிறது. பெண்ணின் மனம், சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஓரளவு புரிகிறது.

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலியின் மனம் எப்படி வேலை செய்யும்.

சிகண்டியை அலி என்று கூட சொல்ல முடியாது. பெண்ணாய் பிறந்து, ஆணாக மாறிய ஒரு பாத்திரம். இதுவரை வேறு எந்த இலக்கியத்திலும் கேள்விப் படாத ஒரு பாத்திர படைப்பு.

காதல் - தோல்வி - பச்சாதாபம் - ஏளனம் - கோபம் - ஆங்காரம் - வன்மம் - விடா முயற்சி - என்று அந்த உணர்சிக்களின் படைப்பு  சிகண்டி.

பாரதத்தின் மிகப் பெரிய பாத்திரமான பீஷ்மரை கொன்ற பாத்திரம்.

சிகண்டி இல்லாவிட்டால், பாண்டவர்கள் போரை வென்றிருக்க முடியாது.

பார்த்ததில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய பாத்திரம் சிகண்டி.

எல்லாம் முடிந்த பின்,  சிகண்டி மேல் நமக்கு ஒரு பரிதாபம்தான் வரும். ஒரு பச்சாதாபம்   .தான் வரும். அப்படி ஒரு பாத்திரம்.

தவறு யார் மேல் என்று நம்மால் உறுதி செய்ய முடியாத கதைப் போக்கு.

பீஷ்மர் செய்ததும் சரிதான். சிகண்டி செய்ததும் சரிதான். என்று நம்மை நியாய அநியாயங்களுக்கு நடுவில் நிறுத்தி ஒரு பக்கமும் சாய முடியாமல் செய்கிறது  பாரதக் கதை இந்த சிகண்டி பாத்திரத்தின் மூலம்.

மற்றவர்களின் உணர்ச்சிகளை நாம் எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும்  என்று உணர்த்தும் பாத்திரம்.

யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அம்புப் படுக்கையில் படுக்க வைத்தது  அவரின் மெத்தனப் போக்கு.  அம்பையின் உணர்வுகளை மதிக்காமல் இருந்ததால் , உடல் எல்லாம் சல்லி சல்லியாக துளை பட்டு பீஷ்மர் கிடந்தார்.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காததால் பீஷ்மரே அந்த பாடு பட்டார் என்றால், நாமெல்லாம் எந்த மூலை?

வர இருக்கும் நாட்களில் சிகண்டி பற்றி காண இருக்கிறோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_14.html




Monday, November 25, 2019

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும்

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும் 


கர்ணன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறான். அர்ஜுனன் எத்தனையோ அம்புகளை விடுகிறான். அவை கர்ணனை தீண்டவில்லை. கர்ணன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது.

பார்த்தான் கண்ணன். கர்ணன் செய்த தர்மம் அவனுக்கு பக்க பலமாக உள்ளவரை அவனை கொல்ல முடியாது என்று கருதி, கிழ வேதியர் வடிவம் தாங்கி, கர்ணனிடம் அவன் செய்த தவங்கள் யாவையும் தானமாகப் பெற்றான். (செய் தர்மம் - வினைத்தொகை). அதற்குப் பின், அர்ஜுனனிடம் "நீ இனி அம்பு விடு, அவன் இறந்து விடுவான்" என்று சொல்கிறான்.

அதே போல் அர்ஜுனனும், அம்பு விட்டு அவனை கொல்கிறான்.

நான் சொல்ல வந்தது இந்த கதை அல்ல.

அர்ஜுனன் விட்ட அம்பு குறி தவறாமல் கர்ணனின் மார்பை துளைத்தது என்பதற்கு ஒரு உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்த வில்லி புத்தூர் ஆழ் வார் ஒரு உவமையை தேர்வு செய்கிறார்.

"தகலுடையார் மொழி போல"

என்று சொல்கிறார்.

அதாவது தவம் செய்த பெரியவர்கள் சொன்ன சொல் எப்படி தவறாகாதோ , அது போல் தவறில்லாமல் அந்த அம்பு அதன் இலக்கை அடைந்தது என்கிறார்.

அந்த மாதிரி பெரியவர்கள் சபித்தாலும் சரி, ஆசீர்வாதம் செய்தாலும் சரி, அது பலிக்கும் என்று நம்மவர்கள் நம்பினார்கள்.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அது சொல்பவர்களைப் பொறுத்தது.

பாடல்

பகலவன்தன்மதலையைநீபகலோன்மேல்பாற்பவ்வத்திற்
                    படுவதன்முன்படுத்தியென்ன,
விகல்விசயனுறுதியுறவஞ்சரீக மெனுமம்பாலவ
                            னிதயமிலக்கமாக,
வகலுலகில்வீரரெலாமதிக்கவெய்தா னந்தவாசுக
                         முருவியப்பாலோடித்,
தகலுடையார்மொழிபோலத்தரணியூடு தப்பா
               மற்குளித்ததவன்றானும்வீழ்ந்தான்.


பொருள்

பகலவன்தன்மதலையை = பகலைத் தருகின்ற சூரியனின் மகனை (கர்ணனை)

நீ = நீ (அர்ஜுனா)

பகலோன் = சூரியன்

மேல்பாற் = மேற்கு திசையில்

பவ்வத்திற் = உள்ள கடலில்

படுவதன்முன் = மறைவதன் முன்

படுத்தியென்ன, = அம்புகளை விடுவாய் என்று  சொல்ல

விகல்விசயனும் = இகல் விஜயன் - வீரம் பொருந்திய அர்ஜுனன்

உறுதியுற = உறுதியாக,

அஞ்சரீக மெனும் அம்பால்  = அஞ்சீரகம் என்ற அந்த அம்பால்

அவனிதயமிலக்கமாக, = அவன் (கர்ணன்) இதயம் இலக்காக  (குறி வைத்து)

அகலுலகில் = அகன்ற உலகில்

வீரரெலாமதிக்க = வீரர் எல்லாம் மதிக்க

வெய்தா னந்த = எய்தான், அந்த

ஆசுகம் = அம்பு

முருவியப்பாலோடித், = உருவி அப்பால் ஓடி

தகலுடையார் = தவமுடையவர்

மொழிபோலத் = மொழி போல

தரணியூடு = உலகத்தின் வழி

தப்பாமற் = தப்பாமல்

குளித்ததது = விழுந்தது

வன்றானும்வீழ்ந்தான். = அவனும் (கர்ணனும்) வீழ்ந்தான்

வார்த்தைகள் வலிமை மிக்கவை. அவற்றை நாம் வீணடிக்கக் கூடாது.

பெரியவர்களின் ஆசி அப்படியே பலிக்கும்.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் அல்ல. திருதராட்டிரன் கூட வயதில் பெரியவன் தான். அதற்காக அவன் சொன்னது எல்லாம் நடக்கும் என்று கொள்ளக் கூடாது. காட்டு எருமைக்கும், காண்டா மிருகத்துக்கும், கடல் ஆமைக்கும் கூடத்தான் வயதாகும். வயது ஒரு பொருட்டு அல்ல.

தவத்தால், ஒழுக்கத்தால் , அறிவால் பெரியவர்கள்.


அப்படிப் பட்டவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.

நாமும் அப்படிப்பட்டவர்களாக முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_25.html