Friday, February 7, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று


காசி இராஜனின் மூன்று மகள்களை, பீஷ்மர் சிறை எடுத்து சென்றார் என்று பார்த்தோம்.

போகிற வழியில், சாளுவ தேசத்து அரசன் பீஷ்மரை தடுத்து போர் செய்தான்.

பீஷ்மர் அவனை வென்று, பெண்களை கொண்டு சென்றார்.

அரண்மனை சென்ற பின், அம்பை என்ற பெண் பீஷ்மரிடம் "நான் என் மனதை சாளுவ அரசனிடம் கொடுத்து விட்டேன். நான் அவனை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

பீஷ்மரும், அவளுடைய காதலை மதித்து, "விருப்பமில்லா பெண்ணை, பலவந்தமாக மணப்பது எமக்கு வழக்கம் அல்ல. எனவே, நீ உன் மனம் விரும்பிய சாளுவ மன்னனையே சென்று மணந்து கொள்" என்று கூறி அனுப்பி வைத்ததார்.

பாடல்

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.

பொருள்

சமரின் = போரில்

முந்திய = முன்னால் வந்த

சாலுவன் = சாளுவன்

மேல் மனம் = மேல் என் மனம்

அமர நின்றது = சென்று நின்றது

அறிந்துழி = அறிந்த போது

அம்பையை = அம்பை என்ற இளம் பெண்ணை நோக்கி

'எமர்களுக்கு = எங்களுக்கு

இஃது = இது

இயற்கை அன்று' = இயல்பானது அல்ல

என்னவே = எனவே

அமர் அழிந்த = போரில் தோற்ற

அவனுழைப் = அவனிடம் (சாளுவனிடம்)

போக்கினான். = அனுப்பினான்



சுயம்வரம் நடப்பதும், அதில் பெண்களை கொண்டு செல்வதும், மற்ற அரசர்கள் அதை  மறித்து போர் செய்வதும், வீரத்தை நிலை நாட்டி பெண்ணை திருமணம்  செய்து கொள்ள நினைப்பதும் வழக்கமான ஒன்று தான்.

இது வரை நடந்தது எதுவும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

பின் எங்கு தவறு நடந்தது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_7.html

2 comments:

  1. அதை அறிய காத்து கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  2. இதுவரை நடந்ததில் தவறு இல்லையா?

    இன்றையக் கண்ணோட்டப்படி, பெண்களை ஒரு பொருளாக, சொத்தாக எண்ணுவது தவறாகத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete