Monday, February 24, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக

திருப்புகழ் - இரகு நாயக வருக 


ஆண் பிள்ளைகள் பெற்ற தாய்மார்கள், பிள்ளை சின்னஞ் சிறுவனாக இருக்கும் போது, அந்த ஆண் பிள்ளைக்கு, பெண் பிள்ளை போல பாவாடை , சட்டை போட்டு, இருக்கிற கொஞ்சம் முடியில் ஜடை பின்னி, பூ வைத்து, கண் மை போட்டு அழகு பார்ப்பார்கள். சில வீடுகளில் அந்தக் கோலத்தில் போட்டோ கூட இருக்கும்.  அதுவும் ஒரு அழகுதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தாய்மை என்பது இயற்கையாக வரக் கூடியது. ஒரு பெண், தன் பிள்ளையை கருவில் சுமக்கிறாள். குழந்தை அவளுடலில் ஒரு பாகமாக இருக்கிறது. பிறந்த பின், தன் உதிரத்தை பாலாகத் தருகிறாள். பிள்ளையோடு ஒரு தாய்க்கு இருக்கும் உறவு என்பது மிக மிக இயற்கையானது.

ஆனால், தந்தைக்கு அப்படி ஒன்றும் கிடையாது. பிரசவம் ஆகி கொஞ்ச நேரம் கழித்துத்தான், தந்தை உள்ளே போவார். மனைவி மயக்கத்தில் கூட இருக்கலாம். பிள்ளையை பார்த்தவுடன் உடனே தந்தை பாசம் பீறிட்டுக் கொண்டு வராது. தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு இயற்கையாக வருவது அல்ல. இந்த சமுதாயம் அதை வலிந்து திணிக்கிறது. தாயக இருப்பது சுலபம். தந்தையாக இருப்பது மிகக் கடினம்.

அதிலும், தந்தை ஒரு தாயாக தன்னை நினைத்து உருகுவது அதனிலும் ரொம்ப கடினம்.

அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு வயதுக்கு பின், உடம்பு தளர ஆரம்பிக்கும். என்ன உடற் பயிற்சி செய்தாலும், தொப்பை வரும். முடி நரைக்கும். பல்லு ஒவ்வொன்றாக ஆட்டம் காணும். முதுகு வளையும். உதடு தொங்கிப் போய் விடும். ஊன்று கோல் இல்லமால் நடக்க முடியாது. ஒரு கையில் ஊன்று கோல் வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும், "யார் இந்த கிழம்" என்று பேசத் தலைப்படுவார்கள். பதில் சொல்ல நினைத்தால் கிண் கிண் என்று இருமல்தான் வரும். நாக்கு குழறும். கண் மங்கும். காது கேட்காது.

புதுசு புதுசா நோய் வரும். அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் "பணத்தை இதில் போட்டு வச்சிருக்க...யார் கிட்ட எல்லாம் கடன் வாங்கி வச்சிருக்க " என்று சத்தம் போட்டு கேட்பார்கள்.

மலமும் ஜலமும் அது பாட்டுக்கு போகும். ஒரு கட்டுபாடு இருக்காது.  கட்டிய மனைவி கூட நம்மை பார்த்து அழுவாள். அந்த சமயத்தில் முருகா நீ மயில் மேல் வந்து என்னைக் காக்க வேண்டும் என்று உருகுகிறார் அருணகிரி.


பாடல்



தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


தொந்தி சரிய  = வயிறு சரிந்து முன்னால் விழ

மயிரே வெளிற = முடி நரைக்க

நிரை தந்த மசைய = தந்தம் என்றால் பல். வரிசையான பற்கள் ஆட.

 முதுகே வளைய = முதுகு வளைய

இதழ் தொங்க = உதடு தொங்க

வொருகை தடிமேல் வர  = ஒரு கை தடிமேல் (கைத்தடி) வர


மகளிர்  நகையாடி = பெண்கள் எல்லாம் பார்த்து நகைக்கும் படி


தொண்டு கிழவ னிவனா ரென  = தொண்டு கிழவன் இவன் யார் என


இருமல் = இருமல்

கிண் கி ணெனமுன் = கிண் கிண் என்று இருமல் வர

உரையே குழற = பேச்சு குழற

விழி துஞ்சு குருடு படவே = கண் அடைத்து தெரியாமல் போக


செவிடுபடு  செவியாகி = காது கேட்காமல் போக


வந்த பிணியும் = நோய் வந்து

அதிலே மிடையும் = அதற்காக இடையில்

ஒரு = ஒரு

பண்டி தனும் = மருத்துவனும்

உறு வேதனையும் = படுகின்ற வேதனையும்

மிள மைந்தர் = இளமையான பிள்ளைகள்

உடைமை = சொத்து

கடனே தெனமுடுக = கடன் ஏது என கேள்வி மேல் கேள்வி கேட்க

துயர்மேவி = துக்கம் மேலிட


மங்கை யழுது விழவே = மனைவி அழுது விழ

 யமபடர்கள் = எமனின் தூதர்கள்

நின்று சருவ = நின்று உயிரை கவர

மலமே யொழுக = மலம் ஒழுக

வுயிர் மங்கு பொழுது = உயிர் மங்கும் பொழுது

கடிதே = வேகமாக

மயிலின்மிசை  = மயில் மேல்

வரவேணும் = வர வேண்டும்

-------------- மீதி பொருளை நாளை பார்ப்போமா? --------------------------------------

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html

3 comments:

  1. Aiyoo old age is terrible! Please come before that Muruga and take me away.
    Don't wait until then.

    ReplyDelete
  2. அந்திம காலத்தின் கோலத்தை படம் பிடித்து காட்டினார் போல் இருக்கு.
    அடுத்தப் பதிவை பார்ப்போம்.

    ReplyDelete
  3. படிக்கவே பயமாக இருக்கிறது.

    ReplyDelete