Showing posts with label நீதி நூல். Show all posts
Showing posts with label நீதி நூல். Show all posts

Saturday, February 23, 2019

நீதி நூல் - இனிய சொல்

நீதி நூல் - இனிய சொல் 


நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும் ?

எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.

முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம், சிரிச்சு பேசி, மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்..." னு நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா, எப்ப பாரு எரிஞ்சு எரிஞ்சு விழும்...வாயில நல்ல வார்த்தையே வராதே " என்ற இகழ் வரும்.

இரண்டாவது, நம்மை பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள். இனிய சொல் பகையை முறிக்கும். கொடிய சொல் நட்பை பிரிக்கும்.

மூன்றாவது, இனிய சொல் பேசுவதனால் நமக்கு என்ன இழப்பு வந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை. பின் எதற்கு தயங்க வேண்டும். எப்போதும் இனிய சொற்களையே பேச வேண்டும்.

நான்காவது, நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மோடு எப்போதும் இணை பிரியாமல் கூடவே இருப்பார்கள்.

பாடல்


வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ.


பொருள் 


வட்டவுல = வட்ட உலகில்

கெட்டு = எட்டு திசையும்

மிசை = இசை, இசை என்றால் புகழ்

மட்டற நிரப்பும் = அளவு இல்லாமல் நிரப்பும். புகழ் வந்து சேரும்.

வெட்டவரு = நம்மை வெட்ட வரும்

துட்டரை = தீயவர்களை, கொடியவர்களை

விலக்கி = நம்மை விட்டு விளக்கி

வச மாக்கும் = அவர்களை நம் வசமாகும்

நட்டமிலை = இனிய சொல் சொல்வதானால் நமக்கு ஒரு நட்டமும் இல்லை

யெட்டனையு = எத்துணையும்

நட்டுநர ரெல்லாம் = நாட்டில் உள்ள மக்களை எல்லாம்

இட்டமுறு = விருப்பத்துடன்

கட்டுதவும் = கட்ட உதவும். பிணைக்க உதவும்

இன்மொழிய தன்றோ. = இனிய மொழி அல்லவா ?


இனிய சொற்களை கூறுவதானால் என்னவெல்லாம் பயன் இருக்கிறது.

எனவே, எப்போதும் இனிய சொற்களையே பேச பழக வேண்டும்.

இனிய சொற்களை பேச வேண்டும் என்றால், முதலில் இனிய சொற்களை கேட்க வேண்டும். நல்லவற்றை கேட்க கேட்க அது நம்மையும் அறியாமல் நம்மிடம்  ஒட்டிக் கொள்ளும்.

கேளுங்கள். 


Sunday, May 11, 2014

நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து

நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து 


பசித்து இருப்பது நல்லது. பசிக்காமல் இருக்கும் போது உண்பது நோய் செய்யும். அந்த நோய்க்கு மருந்து ஒன்றும் கிடையாது, பட்டினி போடுவதைத் தவிர.

சாப்பிடுவது என்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.

நினைத்த போது நினைத்ததை சாப்பிடக் கூடாது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், ஏன் சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும்  என்று அறிந்து உண்ண வேண்டும். காரண காரியங்களை அறிந்து உண்ண வேண்டும்.

பாடல்

பாரண மின்றிச் சின்னாள் பசித்திருந் தாலு நன்றாஞ்
சீரண மின்றி யுண்ணும் தீனிநோய் செயும தற்கோர்
சூரண மிலைமெய்த் தன்மை துவ்வுணாத் தன்மை யேனைக்
காரண காரி யங்கள் கண்டுண்பா ரறிஞ ரம்மா.

சீர் பிரித்த பின்

பாரணம் இன்றி சில நாள் பசித்து இருந்தாலும் நல்லதாம் 
சீரணம் இன்றி உண்ணும்  தீனி நோய் செய்யும் அதற்கு ஓர் 
சூரணம் இல்லை மெய்த் தன்மைது உண்ணாத்  தன்மை யேனைக்
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா 


பொருள்

பாரணம் இன்றி = உணவு இன்றி

சில நாள் = சில நாள் (சில மணி நேரம் இல்லை )

பசித்து இருந்தாலும் = பசியோடு இருந்தாலும்

நல்லதாம் = நல்லதே

சீரணம் இன்றி = முன் உண்ட உணவு சீரணம் ஆவதற்கு முன்னால்

உண்ணும்  = உண்ணும்

தீனி = உணவு அல்ல தீனி. தீனி என்பது விலங்குகள் உண்ணும் உணவு.

நோய் செய்யும் = நோயை உண்டாக்கும்

அதற்கு ஓர் சூரணம் இல்லை = அந்த நோய்க்கு மருந்து இல்லை.

மெய்த் தன்மைது = உண்மை உணர்ந்து

உண்ணாத்  தன்மை யேனைக்  = உண்ணாத தன்மையே அதற்கு மருந்து

காரண காரியங்கள் கண்டு  = உண்பதற்கான காரண காரியங்களை கண்டு

உண்பார் = பின் அதுற்கு தகுந்த மாதிரி உண்பார்கள்

அறிஞர் அம்மா = அறிஞர்கள்.

காரணம் காரியம் இல்லாமல் உண்பவர்கள் மடையர்கள் என்பது சொல்லாமல்  சொன்ன பொருள்.



Tuesday, May 6, 2014

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆற்றல் அழியும்

நீதி நூல் - அதிகம் உண்டால்  ஆற்றல் அழியும் 


உணவில் இருந்து நமக்கு சக்தி கிடைக்கிறது.

அதிகம் உண்டால் அதிகம் சக்தி கிடைக்க வேண்டும் அல்லவா ?

 அதுதான் இல்லை.

அளவோடு உண்டால், அது உடலில் சக்தியாக மாறி உடல் எங்கும்  இயங்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் ?

ஒரு குளத்தில் கொஞ்சம் நீர் இருக்கிறது. மேலும் கொஞ்சம் நீர் வந்தால் குளம்  நிறையும்.மேலும் மேலும் நீர் வந்து கொண்டே இருந்தால், அது குளத்தின் கரையை உடைத்து இருக்கின்ற நீரையும் சேர்த்து கொண்டு போய் விடும். அது போல அளவுக்கு அதிகமாக உண்டால் உடலில் ஏற்கனவே உள்ள சக்தியையும் அது கொண்டு போய் விடும்.

சரி, அந்த அளவை எப்படி கண்டு பிடிப்பது ?

உணவு உண்ட பின் வயிறு பள்ளமாக இருக்க வேண்டும். மேடாக மாறக் கூடாது. அதாவது வயிறு முட்ட சாப்பிடக் கூடக் கூடாது.

பாடல்

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ளநீ ரையுமி ழக்கும் உண்மைபோற் பேர கட்டின்
பள்ளமே டாக வுண்ணும் பதமுடல் வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற்று ணாவற் றுடலெங்கு மியங்கு மாலோ.

சீர் பிரித்த பின் 

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல்  பேர் அகட்டின் 
பள்ளம்  மேடாக உண்ணும்  பதம் உடல்  வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற் உணவால் அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ 


பொருள் 

கொள்ளுரு நீரைக் = அளவுக்கு அதிகமான நீரைக்

கொண்ட  குளங்கரை = கொண்ட குளத்தின் கரை

புரண்டு = உடைந்து

முன்னம் = முன்பே

உள்ள = உள்ள

நீரையும் இழக்கும் உண்மை போல் = இழக்கும் உண்மை போல

பேர் அகட்டின் = அகடு என்றால் வயிறு

பள்ளம் = ஒட்டிய வயிறு

 மேடாக = உப்பி பெரிதாகும் வரை

உண்ணும்  பதம் = உண்ணும் உணவு

உடல்  வளத்தைப் போக்கும் = உடல் வளத்தை போக்கும்

எள்ளலில் = சிறந்த

சிற் உணவால் =கொஞ்சமான உணவை  உண்டால் 

அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ = அது செரிமானமாகி சக்தியாக உடல் எங்கும்  இயங்கும்.


வயிறு முட்ட உண்ணாதீர்கள். அது சக்தியை அழிக்கும். 

வயறு ஒட்டி இருக்கும் படி உண்ணுங்கள். அது உடலுக்கு சக்தியை  தரும்.


நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து 


அளவுக்கு அதிகமாக உண்பவர்கள் இன்று மட்டும் அல்ல நீதி நூல் எழுதப் பட்ட அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.

அதிகம் உண்டால் என்ன  ஆகும் என்று சொல்கிறது நீதி நூல்.

நீதி என்றால் ஏதோ சட்டம் என்று நினைத்துக் கொள்ள கூடாது. வாழ்க்கைக்குத் தேவையான நல்லவைகளை எடுத்துக் கூறுவது நீதி நூல்.

நெல் வளர நீரும், மிதமான வெப்பமும் தேவை. அதிகமான நிழல், அதிகமான தண்ணீர் இருந்தால் நெல் பயிர் அதிகமாக வேகமாக வளராது. அழுகிப் போகும்.

நோய் வந்தால் மருந்து உண்கிறோம். சீக்கிரம் குணமாக வேண்டும் என்று இருக்கின்ற மருந்தை எல்லாம் ஒரே நாளில் உண்டால் நோய் தீர்க்கும் மருந்தே விஷமாகி நம்மை கொன்றுவிடும்.

அது போல

அளவுக்கு அதிகமாக உண்டால், அது சிலவற்றை அன்போடு கூடவே அழைத்து  வரும். அவை என்ன தெரியுமா ?

- பனி - (சளி, காய்ச்சல் ,இருமல் முதலியன )
- பிணி - அனைத்து விதமான நோய்கள்
- மடமை - முட்டாள் தனம் (அறிவு மழுங்கிப் போகும் )
- மந்தம் - சுறுசுறுப்பின்மை, சோம்பேறித்தனம்
- பழிச் சொல் - வேலை இல்லாமல் , முட்டாளாக இருந்தால் பழிச் சொல் வராமல் பாராட்டா வரும் ?

இவற்றையெல்லாம், இந்த அளவுக்கு அதிகமாக உண்ணும் செயல், ஒரு தூதுவனைப் போல சென்று அன்போடு அழைத்துக் கொண்டு வரும்.

பாடல்

நனிநிழல் புனல்கொள் பைங்கூழ் நாசமா மிகவே யுண்ணும்
இனியமா மருந்து நஞ்சா மின்பமு மிகிற்றுன் பாகும்
பனிபிணி மடமை மந்தம் பழியெலாம் வம்மி னென்னக்
கனிவொடு மழைக்குந் தூதாங் கழியபே ருண்டி மாதோ.

சீர்  பிரித்த பின்

நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசம் மிகவே உண்ணும் 
இனிய மாமருந்து நஞ்சாம் இன்பம் மிகித்து உண்பாகும் 
பனி பிணி மடமை மந்தம் பழி எல்லாம்  வம்மி னென்னக்
கனிவொடு அழைக்கும் தூதாம்  கழிய பேருண்டி மாதோ.

பொருள்


நனி நிழல் = அதிகமான நிழல்

புனல் = அதிகமான நீர்

கொள் = கொள்ளும்

பைங்கூழ் = நெற் பயிர்

நாசம் = நாசமாகும்

மிகவே உண்ணும் = அதிகமாக உண்டால்

இனிய = இனிமையான

மாமருந்து = சிறந்த நோய் தீர்க்கும் மருந்து

நஞ்சாம் = விஷமாகிவிடும்

இன்பம் மிகித்து = இன்பம் இருக்கிறது என்று அதிகமாக

உண்பாகும் = உண்டால்

பனி = சுரம்

பிணி = நோய்

மடமை = முட்டாள்தனம்

மந்தம் = சோம்பேறித்தனம்

பழி = பழிச் சொல்

எல்லாம் = எல்லவாற்றையும்

வம்மி னென்னக் = தீமைகளை எல்லாம்

கனிவொடு அழைக்கும் = அன்போடு அழைக்கும் 

 தூதாம்  = தூதனாக செயல் படும்

கழிய பேருண்டி மாதோ = அளவுக்கு அதிகமான உணவு

கழி என்றாலே அதிகம் என்று  அர்த்தம்.இதில் பேருண்டி என்று இன்னொரு அடைமொழி.



Monday, May 5, 2014

நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம்

நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம் 


பெண்ணின் அழகில் மயங்காதவர்கள்  யார் ?

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருபவள் அவள் என்று வள்ளுவர்  கூறுகிறார்.

அவள் ஒரு அழகான பெண். அவள் கிட்ட போனாலே ஒரு இனிய மணம்  வீசும்.தாமரை இதழ்கள் போன ஆதாரங்கள். நூல் போல இடை; அன்னம் போல  நடை, அழகிய  மார்புகள், பிறை சந்திரன் போன்ற  நெற்றியும்,மீன் போன்ற கண்கள், பால் போல மொழியும் எல்லாம் அவளிடம்  இருக்கும். ஒரு நாள் அவள் இறந்து போனாள் . அவளைத் தேடி சுடுகாடு போனோம். அங்கே இவை ஒன்றும்  இல்லை. காய்ந்த குசிகளை அடுக்கி வைத்தது போல சில எலும்புகள் தான் கிடந்தன,  தேடிச் சென்ற அழகியைக்  காணோம்.

 பாடல் 

தோல்வாசம் துறந்திறந்து கிடந்தஅழ
    கியைக்காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள்ளென்பின் குவையொன்றே
   கண்டனஞ்செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையுமன நடையுமணி
   தனமுமதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும்பான் மொழியுங்கா
   ணாமலுளந் திகைத்தோமன்னோ.

 சீர்  பிரித்த பின்


தோல் வாசம் துறந்து இறந்து கிடந்த அழகியை 
    காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள் எலும்பின் குவை ஒன்றே 
   கண்டனம் செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையும் அன்ன நடையும் அணி 
   தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும் பால் மொழியும் 
   காணாமல் உள்ளம்  திகைத்தோம் அன்னோ.

பொருள்

தோல் வாசம் = அவள் உடலில் இருந்து  வரும் வாசம்

 துறந்து = விட்டு

இறந்து கிடந்த அழகியை = இறந்து கிடக்கும் அழகியை

காணச் = காண்பதற்கு

சுடலை சென்றோம் = சுடுகாட்டிற்குப் போனோம்

கோல்போன்ற = குச்சி போன்ற

வெள் எலும்பின் = வெண்மையான எலும்பின்

குவை ஒன்றே கண்டனம் = குவியல் ஒன்றைக் கண்டோம்

செங் குமுத வாயும் = சிவந்த தாமரை போன்ற வாயும் (இதழ்களும்)

நூல்போன்ற இடையும் = நூல் போன்ற சிறிய இடையும்

அன்ன நடையும் = அன்னம் போன்ற நடையும் 

அணி தனமும் = ஆபரணங்கள் அணிந்த மார்புகளும்

 மதி நுதலும்= நிலவு போன்ற நெற்றியும்

வாய்ந்த = கொண்ட

சேல்போன்ற விழியும் = மீன் போன்ற விழியும்

பால் மொழியும்  = பால் போன்ற மொழியும்

காணாமல் உள்ளம்  திகைத்தோம் அன்னோ= காணாமல் உள்ளம் திகைத்தோம்


இத்தனயும் ஒரு நாளில் சில பல எலும்புக் குவியலாக மாறிவிடும்.

அந்த எலும்பு குவியலுக்கா இத்தனை  உருக்கம், பாடல்,  காதல், கலவி, வலி, வேதனை,  இலக்கியம், சண்டைகள்....?




Sunday, May 4, 2014

நீதி நூல் - அழகென்னும் செருக்கு

நீதி நூல் - அழகென்னும் செருக்கு 


ஆணவம் பல வழியில் வரும்.

அழகு ஒரு வழி. நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஆணவத்திற்கு அடிகோலும். எல்லா ஆணவமும் அழிவுக்கு, துன்பத்திற்கு வழி கோலும்.

அழகாய் இருக்கிறோம் என்று  படாதே. அழகான ஆடையை நீக்கி, உடலை கழுவாமல் கண்ணாடியில் பார்த்தால் தெரியும் எவ்வளவு அழகு என்று. சுடுகாட்டுக்குப் போய் பார்த்தால் நிறைய மண்டை ஓடுகள் கிடக்கும். அந்த மண்டை ஓடுகள் எல்லாம் ஒரு காலத்தில் உன் முகம் போலத்தான் இருந்தன என்று அறிந்து கொள் என்கிறது நீதி நூல்.

பாடல்

எழிலு ளேமெனச் செருக்குறு நெஞ்சமே யிழைதுகில் நீத்தங்கம்
கழுவிடாதுற நோக்குதி முகந்தனைக் கஞ்சந் தனில்நோக்கின்
எழுநி லத்திடை யுன்னின்மிக் காருள ரெனவறி வாயீமத்து
அழியும் வெண்டலை யுன்றலை போலிருந் தவணுற்ற தறிவாயே.

சீர் பிரித்த பின் 

எழில் உள்ளேம் என செருக்கு உறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் 
கழுவிடாது உற நோக்குதி முகம் தனை கஞ்சம் தனில் நோக்கின் 
எழு நிலத்திடை உன்னின் மிக்காருளர் என அறிவாய் மற்று 
அழியும் வெண் தலை உன் தலை போல் இருந்தவன் உற்றது அறிவாயே 

பொருள் 


எழில் உள்ளேம்  = அழகாக இருக்கிறோம் 

என = என்று 

செருக்கு உறு நெஞ்சமே = ஆணவம் கொள்ளும் மனமே 

இழை துகில் நீத்து = ஆடையை நீக்கி  

அங்கம் கழுவிடாது = உடலை கழுவாமல்  

உற நோக்குதி = ஆழ்ந்து நோக்கு 

முகம் தனை = முகத்தை 

கஞ்சம் தனில் = கண்ணாடியில் 

நோக்கின் = நோக்கினால் 
 
எழு நிலத்திடை = இந்த உலகில் 

உன்னின் மிக்காருளர் = உன்னைவிட அழகானவர்கள் இருக்கிறார்கள் 

என அறிவாய் = என்று அறிவாய் 

மற்று = அது மட்டும் அல்ல 
 
அழியும் வெண் தலை = அழியும் மண்டை ஓடு (வெண் தலை)

உன் தலை போல் = உன்னுடைய தலை போல ஒரு காலத்தில் 

இருந்தவன்  = இருந்ததை 

உற்றது அறிவாயே  = உணர்ந்து அறிந்து கொள்