Friday, December 23, 2016

இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்

இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்


தசரதன் இறந்து போனான். இராமன் கானகம் போனான். இறந்த தசரதனுக்கு இறுதிக் கடன்கள் எல்லாம் செய்து முடித்தாகி விட்டது.

 மீண்டும் மந்திரி சபை கூடுகிறது. அரசன் ஆணைப்படி, பரதன் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்று மந்திரிகள் பரதனை வேண்டுகிறார்கள்.

அதைக் கேட்ட பரதன் "விஷத்தை குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி பயந்து நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.

பாடல்

‘தஞ்சம் இவ் உலகம், நீ
    தாங்குவாய் ‘எனச்
செஞ் செவ்வே முனிவரன்
    செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர் ‘என,
    நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன்
    அருவிக் கண்ணினான்.

பொருள்

‘தஞ்சம் = அடைக்கலம்

இவ் உலகம் = இந்த உலகம்

நீ = நீ

தாங்குவாய் = காப்பாய்

எனச் = என்று

செஞ் செவ்வே = செம்மையாக

முனிவரன் = முனிவர்கள்

செப்பக் கேட்டலும் = சொல்லக் கேட்டதும்

‘நஞ்சினை நுகர் ‘ = விஷத்தை அருந்து

என = என்று சொல்லக் கேட்டு

நடுங்குவாரினும் = நடுங்குபவர்களை விட

அஞ்சினன் = பயந்தான்

அயர்ந்தனன் = தளர்ந்தான்

அருவிக் கண்ணினான் = அருவியே கண்ணாகக் கொண்ட பரதன்


அரசனின் ஆணை. ஆட்சிக்கு உரிய இராமனோ கானகம் போய் விட்டான். நாட்டுக்கு அரசன் இல்லை. மந்திரிகள் எல்லோரும் அரச பதவியை ஏற்றுக் கொள்ளும்படி  சொல்கிறார்கள்.

ஒரு வேளை பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் , அவனை பழி சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அவன் ஏற்றுக் கொண்டான் என்றுதான் உலகம் சொல்லும்.

பரதன் அப்படிச் செய்யவில்லை.

மந்திரிகள் அப்படிச் சொன்னவுடன், "விஷத்தைக் குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி  நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.

எவ்வளவு பெரிய பதவி. சக்கரவர்த்தி பதவி. அதிகாரம். செல்வம். ஆள். அம்பு. சேனை. புகழ். என்று கணக்கில் அடங்காத செல்வம்.

அதை  எடுத்துக் கொள் என்றால், உயிர் போவது போல (விஷத்தைக் குடிப்பது) நடுங்குகிறான்.

பதவியின் மேல் கொஞ்சம் கூட ஆசை இல்லாமல்  இருந்தவர்கள் இருந்த நாடு.

தந்தை சொல் உயர்ந்தது என்று பதவியை விட்டு விட்டு இராமன் கானகம் போனான்.

அறம் உயர்ந்தது என்று வந்த பதவியை வேண்டாம் என்று விலக்கி நிற்கிறான்  பரதன். எப்பேர்ப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம்.

இன்று நடக்கும் பதவிச் சண்டைகளை பார்த்தால் மனம் வலிக்கிறது.


சொத்துக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்கிறார்கள். நீதி மன்றத்தின் படி ஏறுகிறார்கள்.

சொந்த தாய் தந்தையரை கொலை கூட செய்து விடுகிறார்கள்.

அரசியலில் கேட்கவே வேண்டாம்.

சொத்து அல்ல. பதவி அல்ல. அதிகாரம் அல்ல.....தர்மம் தான் உயர்ந்தது என்று வாழ்ந்து காட்டினார்கள் .

கதையை பிடித்துக் கொண்டோம். கருத்தை விட்டு விட்டோமோ என்று சந்தேகம் வருகிறது.

பரதன் ஏன் இராமனை விட பல மடங்கு உயர்ந்தவன் என்பதற்கு  கம்பன் அமைக்கும்  அடித்தளம் இது.

போகப் போகத் தெரியும். பரதன் எப்படி உயர்ந்தவன் என்று.

போவோமா ?


Tuesday, December 20, 2016

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?


ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் ? வேலை செய்வதற்கு எப்படி திட்டமிட வேண்டும் ? திட்டமிடுவதற்கு என்னென்ன வேண்டும் ? எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு எப்படி முடிவு எடுக்க வேண்டும் ? இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

பொருள்

அழிவதூஉம் = அழிவதையும்

ஆவதூஉம் = ஆவதையும்

ஆகி = ஆன பின்

வழிபயக்கும் = வழியை தரும்

ஊதியமும் =  பயனையும்

சூழ்ந்து செயல் = ஆராய்ந்து செய்ய வேண்டும்


இதுல என்ன பெருசா இருக்கு ?

சிந்திப்போம்.

நாம் ஒரு செயலை செய்யப் போகும் போது பொதுவாக  அதில் உள்ள நன்மைகள், சுகம் மட்டும் தான் தெரியும்.

டிவி வாங்கணுமா,கார் வாங்க வேண்டுமா, வீடு வாங்க வேண்டுமா...அதை எப்படியெல்லாம்  அனுபவிக்கலாம் என்று நாம் கனவு காணுவோம். பெரிய டிவி, பெரிய கார், அதில் குளிர் சாதன வசதி, நல்ல ஒலி பெருக்கி சாதனம், அது இது என்று  கனவு காணுவோம்.

வீடு என்றால், அதில் என்னென்ன செய்யலாம், சோபா எங்க போடலாம், AC எங்க மாட்டலாம் என்று சிந்தனை ஓடும்.

ஆனால், அதில் இருந்து வரும் சிக்கல்கள் தெரியாது.

ஒரு வீடு வாங்கினால்,  அதற்கு  வட்டி கட்ட வேண்டும், வீட்டை பாதுக்காக்க வேண்டும், வரி கட்ட வேண்டும், பக்கத்து வீட்டுக்காரரின் தொல்லை, வழக்கு ஏதாவது வரலாம், எங்காவது விரிசல் விட்டால் மனம் வலிக்கும். இப்படி ஆயிரம் தொல்லைகள். நாம் இவற்றை யோசிப்பது கிடையாது.

திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்...மனைவி வருவாள், அவளோடு சந்தோஷமாக இருக்கலாம், ருசியாக சமைத்துத் தருவாள், சமுதாயத்தில் ஒரு  மதிப்பு , மரியாதை வரும் என்று மனம் இறக்கை கட்டி பறக்கும்.

இது ஆவது.

அழிவது எது ?  அவளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும். அவற்றை நிறைவேற்ற  வேண்டும். பிள்ளைகள் வரும். அவற்றை படிக்க வைத்து , ஆளாக்க வேண்டும். மாமியார் மருமகள் உறவில் வரும் சிக்கல்கள். எதிர்பார்ப்புகள். ஏமாற்றங்கள்.

இவை அழிவு.

இப்படி எதை எடுத்தாலும் ஆவதும் இருக்கும், அழிவதும் இருக்கும்.

சரி, புரியுது.

இரண்டையும் பட்டியல் போட்டாச்சு.

எப்படி முடிவு எடுப்பது. எதை எடுத்தாலும் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும். என்ன செய்வது. மேலே எப்படி போவது ?


"வழிபயக்கும் ஊதியமும்"  நீண்ட கால நன்மை, அல்லது பயன் என்ன என்று அறிய வேண்டும்.

எதைச் செய்தாலும், கொஞ்சம் இழப்பு இருக்கும். கொஞ்சம் பலனும் இருக்கும்.  நீண்ட கால நன்மை என்ன என்று யோசிக்க வேண்டும்.

ஒரு மாணவன் படிக்க உட்காருகிறான் என்றால், நண்பர்களோடு இனிமையாக அரட்டை அடிப்பது, டிவி பார்ப்பது போன்ற சுகங்கள் இழப்பு. அறிவு வளர்வது அதில் வரும்  ஆக்கம். அறிவு வளர்ந்து என்ன செய்வது ? நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்...இவை எல்லாம் நீண்ட கால பயன்கள்.


உடற் பயிற்சி செய்கிறோம் என்றால், வலி, உடற் பயிற்சி கூடத்திற்கு (gym ) கொடுக்கும் பணம்,  நேர விரயம் இவை எல்லாம் அழிவு.

ஆக்கம் , உடல் உறுதி.

நீண்ட கால பயன் - ஆரோக்கியமான உடல்,  குறையும் மருத்துவ செலவு, நீண்ட ஆயுள்.

சரி, அழிவு, ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றை அறிந்து கொண்டோம்.

அடுத்து என்ன செய்வது ?

"சூழ்ந்து"  அதாவது ஆராய்ந்து. அழிவு எவ்வளவு ? ஆக்கம் எவ்வளவு ? நீண்ட கால பயன் எவ்வளவு ?  எப்படி ஆராய்வது ? ஒவ்வொரு செயலுக்கும் வேற வேற மாதிரி  ஆராய வேண்டும். ஒரு டிவி வாங்குவது மாதிரி அல்ல ஒரு வீடு வாங்குவது. அழிவு , ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றின் அளவை பொறுத்து நம் ஆராய்ச்சி அமைய வேண்டும். சில விஷயங்களை நாமே ஆராய முடியும்.  சிலவற்றிற்கு மற்றவர்களின் உதவி தேவைப் படும்.

வீடு வாங்குவது என்றால் ஒரு வக்கீலை பார்க்க வேண்டும்.

திருமணம் செய்வது என்றால் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஆராய என்ன கருவிகள் (tools ) வேண்டும், எப்படி ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவை எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஆராய்ந்த பின், "செயல்" .

அதற்கு பின் செயல்பட வேண்டும்.

இதில் இன்னும் கூர்மையாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,

முதலில் அழிவை சொல்லி அடுத்து ஆக்கத்தை சொல்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

ஆக்கம் வராவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நட்டம் வந்து விட்டால்  அதை தாங்கும்  சக்தி வேண்டும்.

உதாரணமாக, வீடு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் விலை உயர்வது  ஆக்கம், நீண்ட கால பலன். அது நிகழாவிட்டால் பரவாயில்லை. ஆனால், வீடு வாங்கிய பின், அந்த வீட்டுக்கு இன்னொருவன்  உரிமை கொண்டாடி  நீதி மன்றம் போனால் , வீடு நம் கையை விட்டுப் போனால்  அந்த நட்டத்தை நம்மால் தாங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

முதலில் அழிவை ஆராய வேண்டும்.

மேலும், அழிவை ஆராய்வதன் மூலம், அதை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட முடியும். (Risk Management ).

முதலில் அழிவு.

பின் ஆக்கம்.

பின் நீண்ட கால பயன்

பின் இந்த மூன்றையும் சரியாக எடை போடுவது.

பின், செயல் படவேண்டும்.

புரியுதா ?  

Wednesday, December 14, 2016

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?


ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார். அவருக்குப் பின் யார் ஆட்சி செய்வது என்று பெரிய  குழப்பம் நிகழ்கிறது. இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது ?

இராமாயணம் போன்ற நூல்களை ஊன்றிப்  படித்தால்     இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கைகேயி வரம் கேட்டாள் . தசரதன் தந்து விட்டான். அதன்படி பரதன் அரசாள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி   இராமனிடம் கூறுகிறாள். அவனும் சரி என்று காட்டுக்கு கிளம்பி விட்டான். அரசு எனக்குத் தான் சொந்தம். பாட்டனார் சொத்து, அரச தர்மப்படி எனக்குத்தான் வர வேண்டும், தசரதன் யார் இதை பரதனுக்கு கொடுக்க என்று அவன் வாதம் பண்ணவில்லை. அரசை விட தந்தை சொல் முக்கியம் என்று இருந்தான் அவன்.

இராமன் கானகம் போன பின், பரதன் வருகிறான். தாயும், அமைச்சர்களும் அவனை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அவன் ஏற்றுக் கொண்டிருந்தால் அவனை யாரும் குறை சொல்ல முடியாது.  அவன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.  அண்ணன் இருக்கும் போது தான் அரசை ஏற்றுக் கொள்ளுவது  அறம் அல்ல என்று நினைக்கிறான்.

அவனை அரசை ஏற்றுக் கொள்ளும் படி சொன்ன அமைச்சர்களிடம்

"பெரிய கொடுமையைச் செய்த என் அன்னையின் செயலை நல்லது என்று நீங்கள் கூறினால் , இது கலி காலம் தான் வந்து விட்டதோ என்று எண்ணும்படி இருக்கிறது " என்கிறான்.

பாடல்


‘அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் தீ  நெறி்க் கலியின் ஆட்சியோ!


பொருள்

‘அடைவு = அடைய முடியாத. எங்கும் காணாத என்று பொருள்

அருங் கொடுமை = பெரிய கொடுமையை

என் அன்னை = என் தாயின்

செய்கையை = செயலை

நடைவரும் = உயர்ந்த ஒழுக்கத்தை

தன்மை நீர், = இயல்பாகக் கொண்ட நீரங்கள் (அமைச்சர்கள்)

“நன்று இது” = அது நல்லது

என்றிரேல் = என்று கூறினால்

இடை வரும் காலம் = இடையில் வரும் காலம்

ஈண்டு = இங்கு

இரண்டும் நீத்து, = இரண்டையும் தவிர்த்து

இது = இந்தக் காலம்

கடை வரும் = கடைசியில் வரும்

 தீ நெறி்க் = தீய வழியில் செல்லும்

கலியின் ஆட்சியோ! = கலிகாலத்தில் ஆட்சியோ , அல்லது கலி புருடனின் ஆட்சியோ


இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து என்றால் என்ன ?  

இராமாயணம் நடந்தது கிரேதாயுகம். அதற்குப் பின் திரேதாயுகம், துவாபர யுகம் என்று  இரண்டு யுகங்கள் வரவேண்டும். அதற்குப் பின் கலியுகம் வரும். நீங்கள்  சொல்வதைப் பார்த்தால் இப்போதே அந்த இரண்டு யுகங்களும் கழிந்து கலி யுகம்  வந்து விட்டது போலத் தெரிகிறது என்கிறான். 

ஆண்டது போதும் , அரசை இராமானுக்குத் தரலாம் என்று தயரதன் நினைத்தான். சாகும் வரை தானே ஆள வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அரசின் மேல் அவனுக்கு பற்று இல்லை. 

தந்தை சொல்லே உயர்ந்தது என்று நாட்டை விட்டு கானகம் போனான் இராமன். அவனுக்கும் அரசின் மேல் பற்று இல்லை. 

தந்தை சொல் கொண்டு தாய் தந்த அரசை வேண்டாம் என்கிறான் பரதன்.  அவனுக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. 

இராஜ்யத்தை ஆள்வதை விட மற்றவற்றை உயர்ததாக அவர்கள் கருதினார்கள். 

இவர்களாவது பரவாயில்லை. படித்தவர்கள். அறம் அறிந்தவர்கள். 

குகன், ஒரு வேடன், படகு ஓட்டுப்பவன். இராமனை கண்ட மாத்திரம் , அரசும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம், உன் கூடவே இருந்து விடுகிறேன். அந்த அரசு துன்பத்தின் இருப்பிடம்  என்கிறான். 

அரச பதவி என்பது "இன்னலின் இருக்கை " என்கிறான். 

கார் குலாம் நிறத்தான் கூற,
     காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
     இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
     இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
     செய்குவென் அடிமை’ என்றான்.

என்பது கம்பர் வாக்கு. 

பதவி மோகம் அவர்களுக்கு இல்லை. 

பதவி பதவி என்று அலைவோர் பாடம் படிக்க வேண்டும். 


இராமாயணம் - மன்னவர் மன்னவா

இராமாயணம் - மன்னவர் மன்னவா 



தயரதன் இறந்ததையும் , இராமன் கானகம் போனதையும் அறிந்த பரதன், அந்த இரண்டுக்கும் காரணம் தன் தாயான கைகேயி தான் என்று அறிந்து அவளை சுடு சொற்களால் ஏசி விட்டு, கோசலையை காணச் செல்கிறான். கோசலையும் "உன் தாயின் செயல் உனக்குத் தெரியாததா" என்று கேட்கிறாள். அதனால் மனம் நொந்து, "என் தாய் கேட்ட வரங்கள் எனக்கும் தெரியும் என்றால், மிகப் பெரிய பாவங்களை செய்தவர்கள் செல்லும் நரகத்துக்கு நான் போவேன் " என்று அந்த பாவங்களை பட்டியல் இட்டு சூளுரைக்கிறான்.

அவனுடைய நல்ல மனதை அறிந்த கோசலை அவனை "மன்னர் மன்னவா" என்று வாழ்த்துகிறாள்.

பாடல்


‘முன்னை நும் குல முதலுேளார்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! ‘என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.


பொருள் 

‘முன்னை = முன்னால்

நும் = உன்னுடைய

குல = குலத்தில் தோன்றிய

முதலுேளார்கள்தாம் = அரசர்களில்

நின்னை யாவரே = உனக்கு யார்

நிகர்க்கும் = சமமாகும்

நீர்மையார் = தன்மை கொண்டவர்கள் ?

மன்னர் மன்னவா! = மன்னர்களின் மன்னவனே

என்று வாழ்த்தினாள் = என்று வாழ்த்தினாள்

உன்ன உன்ன = நினைக்க நினைக்க

நைந்து = இற்றுப் போய்

உருகி விம்முவாள் = உருகி விம்முவாள்

தனக்கு பதில் பரதன் முடி சூட்டப் போகிறான் என்று இராமன் தன்னுடைய தாயான  கோசாலையிடம் கூறிய போது  "நின்னினும் நல்லன் " என்று பரதனை கூறினாள்.

அடுத்து, பரதனை நேரில் கண்டு பேசிய பின் அவனை "மன்னர் மன்னவா" என்று  அவனை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போகிறாள்.

இராமன் மன்னனாகி இருப்பான்.

பரதன் மன்னர்களுக்கு எல்லாம்  மன்னவன் என்று வாழ்த்துகிறாள்.

இது வரை சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்களில் யார் உனக்கு இணையாவார்கள் , யாரும் ஆக மாட்டார்கள் என்று கூறுகிறாள்.

அப்படி என்ன செய்து விட்டான்  பரதன் ?

இரண்டே இரண்டு விஷயம் தான்

ஒன்று, நல்லதே நினைத்தது

இரண்டாவது, மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக பேசியது.

இன்னும் பரதன் எப்படி உயருகிறான் என்று  பார்ப்போம்.


Friday, December 9, 2016

திருக்குறள் - உடம்போடு உயிரிடை நட்பு

திருக்குறள் - உடம்போடு உயிரிடை நட்பு


உடம்புக்கும், உயிருக்கும் இடையேயான உறவு எப்படி பட்டது ?

முதலில் உயிர் என்று ஒன்று இருக்கிறதா என்றே நமக்குச் சந்தேகம் இருக்கிறது. அது தெரிந்தால் அல்லவா அதற்கும் உடலுக்கும் இடையில் உள்ள உறவை பற்றி ஆராய முடியும்.

உயிர் வேறு. உடம்பு வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள உறவு என்ன என்பதை ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

என்ன ஒரு சிந்தனை . என்ன ஒரு  தெளிவு. சிலிர்க்க வைக்கும் அர்த்தம்.

பாடல்

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

பொருள்

குடம்பை = கூட்டினை

தனித்தொழியப் = தனித்து விட்டு

புட்பறந் தற்றே = புள் + பறந்தற்றே = புள் என்றால் பறவை. பறவை பறந்த மாதிரி

யுடம்பொ டு = உடம்போடு

உயிரிடை நட்பு = உயிருக்கு இடையிலான நட்பு

கூட்டை விட்டு பறவை பறந்து செல்வது மாதிரி உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு.

அதுசரி, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய build up னு கேட்கிறீர்களா ?

.சிந்திப்போம்

ஒரு பறவை மரத்தில் கூடு கட்டுகிறது.  கூட்டில் முட்டை இடுகிறது. கூட்டை கேட்டு அது  முட்டை இடுவது இல்லை. முட்டையில் இருந்து குஞ்சு வெளி வருகிறது. வந்தவுடன் அது பறந்து விடுவது இல்லை. கொஞ்ச காலம் இருந்து, இறக்கை முளைத்தவுடன் , பறந்து விடுகிறது.  பறவை பறந்து போன பின் கூடு  வெறுமையாக இருக்கிறது.

உயிர்கள் தாங்கள் சேர்த்து வைத்த வினைகளின் பலனை அனுபவிக்க உடலை எடுக்கின்றன. அனுபவித்து முடிந்தவுடன், உடலை விட்டுப் போய் விடுகின்றன. ஆவி போன பின் அந்த உடல் எனும் கூடு வெறுமனே கிடக்கும் . நாளடைவில் , அந்த கூட்டில் உள்ள குச்சிகள் மழையிலும் காற்றிலும் கீழே விழுந்து மக்கிப் போகும். நம் உடல் புதைக்கப் பட்டோ, எரிக்கப் பட்டோ அழிந்து போவதைப் போல.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்,  குடம்பை என்பதற்கு முட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

அதுவும் ஒரு கூடுதானே.

ஒரு முட்டையை பார்த்தால், அது உயிரற்றது போலத்தான் தெரியும். அதற்குள் உயிர் இருக்கிறது.

ஒரு காலம் வந்தவுடன், முட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே உள்ள பறவை வெளியே வரும். வெளியே பறவை வந்தவுடன், அந்த முட்டை தனித்து விடப்படும். அதை தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். முட்டையின் வேலை முடிந்து விட்டது.

யோசித்துப் பாருங்கள்.

நம் உடல் எதற்கு ? நமக்குள்ளே உள்ள நம்மை அறிய, ஞானம் பெற, அனுவங்களால் அறிவைப் பெருக்க. உடல் என்பது ஒரு கருவி. அது முடிந்தவுடன் , கருவியை தூக்கிப் போட்டுற வேண்டியதுதான்.

நாம் என்ன செய்கிறோம் ?

உடலைப் போற்றி பாதுகாக்கிறோம். அதுக்கு சோப்பு, வாசனை திரவியம், உடை என்று  அதிலேயே நம் கவனம் பூராவும்.  மரணம் வந்தால் கவலைப் படுகிறோம்.

காலத்தில் முட்டை உடைந்தால் தான், உள்ளே உள்ள உயிர் வெளியே வந்து,  வளர  முடியும். முட்டைக்குள்ளேயே இருந்தால், அந்த பறவை இறந்து விடும் அது மட்டும் அல்ல, முட்டையும் அழுகி விடும். முட்டை உடைந்து உள்ளே உள்ள பறவை  வெளியே வருவதுதான் எல்லோருக்கும் நல்லது.

அது போல, இந்த உடலை சரியான வழியில் நாம் உபயோகப் படுத்தி உள்ளே இருக்கும்  உயிர், அல்லது ஆத்மா அல்லது அதன் பெயர் என்னவோ அதை வளர்க்க வேண்டும்.

உடலைப் போற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும். உதாசீனப் படுத்தக் கூடாது.  ஆனால், அது உடலுக்காக வேண்டி அல்ல. உடலுக்கு உள்ளே உள்ள உயிருக்காக.

"உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்பார் திருமூலர்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்பது திருமந்திரம். 

உடல் என்பது முட்டை

உயிர் என்பது அந்த முட்டைக்குள் இருக்கும் பறவை குஞ்சு 

"தனித்தொழியப்" என்றார். 

பறவை குஞ்சு மீண்டும் முட்டைக்குள் போக விரும்பாது. அதை அனுப்பவும் முடியாது. அதே போல, உயிரும் ஒரு முறை உடலை விட்டு வெளியே வந்து விட்டால் மீண்டும் உடலுக்குள் போக விரும்பாது. முட்டை தனித்துத்தான் கிடக்கும். 

இந்த பிறவி என்ற சக்கரத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள். 

இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா என்று உருகினார் பட்டினத்தார் 

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாழாமற் கா’

என்பது பட்டினத்தடிகள் வாக்கு.

முட்டையிலிருந்து எப்படி குஞ்சு வெளி வரும் ? தானாகவே வந்து விடுமா ? இல்லை, அதை அடை காக்க வேண்டும்.

அப்படி அடை காத்து இந்த உடலில் இருந்து உயிரை வெளிவரச் செய்து அது மீண்டும் இன்னொரு  உடலுக்குள் போகாமல் காப்பது குருவின் வேலை, ஆச்சாரியாரின்  வேலை.

என்னுடைய "வித்து மேலும் விளையாமல்" காத்தவனே என்று திருக்கழுக்குன்றில் இருக்கும் சிவனை போற்றுகிறார் மணிவாசகர்.

பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,

கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

என்பது திருவாசகம்.

முட்டைக்குள் இருக்கும் பறவைக் குஞ்சு சிறை பட்டிருக்கும். முட்டை உடைந்து  வெளியே வந்தால் வானம் வசப்படும்.

நீங்கள் முட்டைக்குள் இருந்து துன்பப் பட பிறந்தவர்கள் அல்ல. வெளியே வந்து  வானத்தை வசப்படுத்துங்கள். உடலை வளப்படுத்தி உயிரை வளருங்கள். வளர்ந்த உயிர் வானத்தை அளக்கும். நல்லதைப் படியுங்கள். நல்லவற்றை கேளுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். உடல் உங்களுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எத்தனையோ விதமான உடல்கள் கிடைத்திருக்கலாம். புல்லாக, புழுவாக, மிருகமாக, பறவையாக ,பாம்பாக என்று ஏதோ ஒன்று கிடைத்து இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால்  அந்த உடல்கள் எல்லாம் எடுத்துத் தான் இருந்தீர்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்பார் மணிவாசகர். எத்தனையோ பிறவிகள் எடுத்து , இளைத்து இந்த மனிதப் பிறவியில் உன்னை அடைந்தேன் என்கிறார்.

நல்ல மனிதப் பிறவி கிடைத்தபின்னும் அதை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடக் கூடாது.

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

என்பது அவ்வை வாக்கு. 



அருமையான இந்த உடலைப் பெற்று ஞானம், கல்வி, தானம் , தவம் என்று நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

பின் மீண்டும் வராத வானவர் நாடு வழி திறக்கும்.


Thursday, December 8, 2016

நாலடியார் - நன்மையையும் தீமையும்

நாலடியார் - நன்மையையும் தீமையும் 


மனித உறவுகள் சிக்கல்கள் நிறைந்தது.

அவற்றை வெற்றிகரமாக சமாளித்து கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல.

நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நாம் செயலாற்றும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் முடியலாம்.

அதே போல் அவர்கள் நமக்குச் செய்யும் காரியங்களும் அப்படியே.

இதில் சிக்கல் என்னவென்றால், நல்லவர்கள் அவர்களுக்கு நாம் ஒரு நல்லது செய்திருப்போம். பின்னாளில் ஏதாவது தீமை செய்தால் கூட, முன்னாளில் செய்த நன்மைகளை நினைத்து நம்மால் விளைந்த தீமைகளை பொறுத்து மன்னிப்பார்கள்.

ஆனால் கயவர்களோ, நாம் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், ஒரு தீமை செய்து விட்டால், முன்பு செய்த அத்தனை நல்ல காரியங்களையும் தீயதாகவே பார்ப்பார்கள்.

உதாரணமாக, நண்பர் ஒருவர் தன் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் ஏதும் இருந்தால் சொல்லும்படி நம்மிடம் கேட்டு இருப்பார், நாமும் நமக்குத் தெரிந்த வரன் ஏதும் இருந்தால் சொல்லி இருப்போம். அது திருமணத்திலும் முடிந்து இருக்கும். பின்னாளில், அந்த திருமணத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால், அந்த நண்பர் நல்லவராக இருந்தால் " சரி,ஏதோ அவருக்கு தெரிந்த வரனை சொன்னார், நம் நேரம் சரி இல்லை..." என்று விட்டு விடுவார். அதுவே அந்த நண்பர் நல்லவர் இல்லை என்றால் "...நான் துன்பப் பட வேண்டும் என்றே இந்த மாதிரி  ஒரு மோசமான வரனை எனக்குச் சொல்லி இருக்கிறான்/ள் " என்று நினைப்பதோடு மட்டும் அல்லாமல், நாம் அவருக்கு முன்பு செய்த நன்மைகளையும் தீமையாகவே  கருதுவார்.

பாடல்

ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கு
எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீதுஆயின்,
எழுநூறும் தீதாய்விடும்.

பொருள்

ஒரு நன்றி = ஒரு நல்லது

செய்தவர்க்கு = செய்தவர்களுக்கு

ஒன்றி எழுந்த = பின்னால் வந்த

பிழை நூறும் = நூறு பிழைகள் (தீமைகள்)

சான்றோர் பொறுப்பர்; = சான்றோர் பொறுத்துக் கொள்வார்கள்

கயவர்க்கு = கயவர்களுக்கு

எழுநூறு = 700

நன்றி செய்து = நல்லது செய்த பின்

ஒன்று தீதுஆயின் = ஒரு தீமை செய்து விட்டால்

எழுநூறும் தீதாய்விடும் = முன்பு செய்த எழு நூறையும் தீமை என்றே கருதுவார்கள்.


சரி, கயவர்கள் எப்படியோ போகட்டும். இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம் என்ன ?

முதலாவது பாடம், நாம் கயவர்களா ? நல்லவர்களா ? நல்லவர்கள் என்றால் மற்றவர்கள் நமக்குச்  செய்த தீமைகளை அவர்கள் நமக்குச் செய்த நல்லவற்றை நினைத்து மன்னித்து விடவேண்டும்.

இரண்டாவது பாடம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று ஆராய்ந்து பின் உதவி செய்ய வேண்டும். நாம் நல்லதே நினைத்து  உதவி செய்வோம். ஏதோ ஒரு காரணத்தால் அது சரியாக வர வில்லை என்றால்,  உதவி பெற்றவன் கயவனாக இருந்தால், நாம் இது வரை அவனுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் தீமையாகவே கருதி நமக்கு துன்பம் விளைவிக்க நினைப்பான்.

மூன்றாவது பாடம், மற்றவர்கள் நமக்குச் செய்யும் நன்மைகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர்கள் நமக்கு தீமை செய்தால், முன்பு செய்த நன்மைகளை நினைத்து , தீமைகளை மன்னித்து விட வேண்டும்.

பாவத்திலேயே பெரிய பாவம் என்று வள்ளுவர் எதை கூறுகிறார் தெரியுமா ? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊருக்கு தீ வைத்தல், பொது நீர் நிலையில் நஞ்சைக் கலத்தல் , குரு நிந்தனை என்று இதை எல்லாம் பெரிய பாவமாக  கருதவில்லை. இதை எல்லாம் விட பெரிய பாவம் ஒருவன் நமக்குச் செய்த நன்றியை மறந்து விடுவது ஆகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு 

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறந்து விடுவதைப் போல பெரிய தீமை இல்லை என்கிறார்.

எனவே, மற்றவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மறந்து மன்னித்து வாழப் பழகுவோம்.




Wednesday, December 7, 2016

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை 



சிலர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார்கள். பெரியவர்கள் பேசிய சொற்பொழிவுகளை கேட்பார்கள். அவர்கள் வீட்டுக்குப் போனால் எங்கு பார்த்தாலும் புத்தகமாய் இருக்கும். படித்தத்தில் பல மனப்பாடம் கூட ஆகி இருக்கும். பல புத்தகங்களில் இருந்து மேற் கோள் காட்டுவார்கள்.

ஆனால், நடை முறை வாழ்க்கை என்னவோ ஒன்றும் படிக்காதவன் வாழ்க்கை மாதிரித்தான் இருக்கும். "இவ்வளவு எல்லாம் படிக்கிறீர்களே , நீங்கள் செய்வதற்கும் படித்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே " என்று கேட்டால் "அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சாத்தியம் இல்லை.." என்று படித்ததை எல்லாம் தள்ளி வைத்து விடுவார்கள்.

இந்த தவளை இருக்கிறதே, அது குளத்தில் வாழும். குளத்தில் நல்ல தண்ணீர் தான் இருக்கும். இருந்தும், அதன் முதுகு என்னவோ அழுக்கு ஏறி வழுக்கும் படி இருக்கும். தன் உடம்பில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தெரியாது. அழுக்காக அலையும்.

அது போல, நிறைய படித்தும் கேட்டும் இருந்தும், மன அழுக்கு நீங்காமல் திரிபவர்கள் பலர்.

பாடல்

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்

தேர்கிற்கும் பெற்றி அரிது.


பொருள்

செழும்பெரும் = செழுமையான பெரிய

பொய்கையுள் = குளத்தில்

வாழினும் = வாழ்ந்தாலும்

என்றும் = என்றும்

வழும்பறுக்க = வழும்பு என்றால் அழுக்கு. அழுக்கை போக்கிக் கொள்ளாத

கில்லாவாந் தேரை:= செய்யாதாம் தேரை

வழும்பில்சீர் = குற்றம் அற்ற உயர்ந்த

நூல்கற்றக் கண்ணும் = நூல்களை கற்ற பின்னும்

நுணுக்கமொன் றில்லாதார் = நுணுக்கம் ஒன்று இல்லாதவர்கள்


தேர்கிற்கும் பெற்றி அரிது = தன்னை தேர்ச்சி கொள்ளச் செய்து கொள்ளும் வன்மை இல்லாமல் இருப்பார்கள்

இந்தப் பாடல், கயமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

பல படித்தும் அதை தம் வாழ்வில் கடை பிடிக்காதவர்கள் கயவர்கள்.

இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"நுணுக்கமொன் றில்லாதார்"

நூலை மேலோட்டமாக படித்து விட்டு செல்பவர்கள். நுணுக்கமாக  ஆராயாதவர்கள். நூலில் சொல்லப் பட்ட உண்மைகளை, ஆழ்ந்த கருத்துக்களை  அறியாதவர்கள் தங்கள் குறைகளை போக்கிக் கொள்ள மாட்டார்கள்.

இரண்டாவது அர்த்தம்,  நுணுக்குதல் என்றால் நுண்ணியமாக வேலை செய்தல் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது, படித்தவற்றில் உள்ளவற்றை , நமது  வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அப்படியே எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.

மூன்றாவது,

கற்க கசடு அற , கற்பவை, கற்ற பின், நிற்க அதற்குத் தக 

என்றார் வள்ளுவர். படித்தவற்றை , அப்படியே பின் பற்றக் கூடாது. அது வாழ்க்கைக்கு எப்படி  பயன்படும் என்று அறிந்து பயன்படுத்த வேண்டும்.

நான்காவது, நுணுகுதல் என்றால் கூர்மையாக்குதல் என்று பொருள். படிக்க படிக்க அறிவு கூர்மையாக வேண்டும். மேலோட்டமான அறிவு எல்லோருக்கும் இருக்கும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான அறிவு வளர வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகப் பெருந்தகை 


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

என்பது திருவாசகம்

இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்  கொள்ளுங்கள்.

எது தேவையோ அதை மட்டுமே படிப்பது என்றும், படித்ததில் உள்ளவற்றை ஆராய்ந்து அதன்படி நடப்பது என்றும்.

படித்தபடி நடக்காவிட்டால் , படித்து என்ன பலன் ? எதைக் கேட்டாலும், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி விடுவதென்றால், படித்து நேரத்தை ஏன் விரயமாக்க வேண்டும் ? படிக்காமல் இருந்தால் , அந்த நேரமாவது மிச்சப்படுமே. காலத்தை வீணடிப்பானேன் ? ஏதோ பெரிய புத்தகங்களை எழுதினவர்கள் எல்லாம் நடை முறையில் நடக்கக் கூடியது எது, நடக்க முடியாதது என்று தெரியாதவர்கள் போலவும், நாம் தான் அனைத்தும் அறிந்தவர்கள் போலவும் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.


ஏன் நுணுக்கமாக அறிய வேண்டும் ? புத்தி ஏன் கூர்மையாக இருக்க வேண்டும் ?

புலன்களும் புத்தியும் கூர்மையாக கூர்மையாக அவற்றிற்கு பின்னால் உள்ள உண்மை புலப்படும்.

சப்தம் வருகிறது. சங்கீத ஞானம் உள்ளவனுக்கு அதில் உள்ள இராகம், தாளம், பாவம், லயம், சுருதி எல்லாம் தெரியும். சங்கீத அறிவு இல்லாதவனுக்கு அது ஒரு சப்தம் அவ்வளவுதான். அறிவு கூர்மையாகும் போது சத்தம் சங்கீதமாகும்.

 இரைச்சலான இந்த உலகத்தின் பின்னால் இருக்கும் இனிய சங்கீதம் தெரிய வேண்டும் என்றால் , புத்தியை கூர்மை படுத்த வேண்டும்.

நுணுகி ஆராயுங்கள். உண்மை வெளிப்படும். பிரபஞ்சம் புலப்படும்.


கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா 
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! 
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

என்று பட்டர் சொன்னது போல , உங்கள் அறிவின் அளவுக்குள் இந்த பிரபஞ்சம் வசப்படும்.






Tuesday, December 6, 2016

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 


குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

உடற்பிறப்பால் தோள்வலிபோம் = உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய் விடும்

பொற்றாலி யோடெவையும் போம் = தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது.   தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படை  சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான்.  எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது.  மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின்  சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.

தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"


சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு  செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு  ஒரு மதிப்பு இல்லை. 

மனைவி  என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக,  பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.

மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.  

மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க   வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள். 

மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல   அறிவுரை கூறி,  உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல  வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட  மனைவி போனால், எல்லாம் போய் விடும். 

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....

Sunday, December 4, 2016

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு 


பொருள் கிடைப்பது கடினம்.  கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? அல்லது பெரும்பாலனோர் என்ன செய்கிறார்கள் ? வீடு வாங்குவது, மனை வாங்குவது, நகை நட்டு வாங்குவது, வங்கியில் போட்டு வைப்பது என்று ஏதோ செய்கிறார்கள். தங்கத்தின் விலை கீழே போகும். வட்டி விகிதம் குறையும். சில சமயம் முதலுக்கே மோசம் ஆகும். என்ன செய்யலாம் ?


பாடல்

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பாலிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்பு ரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்.

பொருள்

பொருட்பாலை விரும்புவார்கள்  = பொருள் சேர்ப்பதை விரும்புவார்கள்

காமப்பாலிடை மூழ்கிப் = காமத்தில் மூழ்கி

புறள்வர் = புரளுவார்கள்

கீர்த்தி = புகழ்

யருட்பாலர்= அருள்தரும்

அறப்பாலைக் = அறச் செயல்களை

கனவிலுமே =  கனவில் கூட

விரும்பார்கள் = விரும்ப மாட்டார்கள்

அறிவொன்றில்லார் = அறிவில்லாதவர்கள்

குருப்பாலர்க் = நல்ல குருமார்களிடம்

கடவுளர்பால் = கடவுளிடம்

வேதியர்பால் = வேதியர்களிடம்

புரவலர்பால் = அரசனிடம்

கொடுக்கக் கோரார் = கொடுக்க நினைக்க மாட்டார்கள்

செருப்பாலே யடிப்பவர்க்கு = செருப்பால் அடிப்பவர்க்கு

விருப்பாலே = விருப்பமுடன்

கோடி = கோடி

செம்பொன் = உயர்ந்த  பொன்னை

சேவித்தீவார் = வணங்கி தருவார்கள்


பணம்  இருந்தால் முதலில் அதை வைத்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று  பார்க்க வேண்டும். குருவிடம் தருவது என்றால் , வித்தை கற்றுக் கொள்ள பணத்தை  செலவிட வேண்டும். வித்தை என்றால் ஏதோ பாடம் படிப்பது பட்டும் அல்ல. உடற் பயிற்சி கற்றுக்  கொள்ளுவது, நல்ல உணவு முறைகளை கற்றுக் கொள்ளுவது, ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுவது, நம் ஆளுமையை (personality ) முன்னேற்றக் கற்றுக் கொள்ளுவது, குழந்தை வளர்ப்பு,  என்று பல விதங்களில் நம்மை உயர்த்திக் கொள்ள பணத்தை செலவிட வேண்டும்.

அடுத்து, கடவுளுக்கு தர வேண்டும். கடவுளுக்கு தருவது என்றால் ஏதோ கடவுள் பணம்  இல்லாமல் நம்மிடம் கையேந்தி நிற்கிறார் என்று அர்த்தம் அல்ல. தர்ம காரியங்களுக்கு செலவிட வேண்டும்.

அடுத்து, வேதியற்கு. உயர்ந்த வேதங்கள்,  தேவாரம்,திருவாசகம், பிரபந்தம்  போன்றவை யாரும்  வாசிக்காமல் , பாடாமல் நாளடைவில் தேய்ந்து நலிந்து போகும். அவை வழக்கொழிந்து போனால் மிகப் பெரிய நட்டம் நமக்கும்  நம் வருங்கால சந்ததிக்கும். அவை அப்படி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் , வேதியர்களை போற்றி, அவர்களுக்கு பொருள் கொடுத்து  காக்க வேண்டும்.

அடுத்து, செல்வாக்கு உள்ளவர்களை பரிச்சியம் செய்து கொள்ள பணம் செலவிட  வேண்டும். பெரிய இடத்தில் உள்ளவர்களின் தொடர்பு நமக்கு மிகுந்த நன்மையைத் தரும்.

அடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்த வேண்டும்.

இப்படி எல்லாம் செய்யாமல் , கேளிக்கைகளில், மது, மாது என்று தீய வழிகளில்  பணத்தை செலவிட்டால், பின் தீயவர்கள் சகவாசம் ஏற்பட்டு, அவர்கள்  நம் பணத்தை நம்மிடம் இருந்து நம்மை துன்பப்  படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

யோசித்துப் பாருங்கள், உங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று.

சம்பாதிப்பது மட்டும் அல்ல , சரியான வழியில் செலவழிப்பதும் ஒரு கலை.

அதையும் கற்றுக்  கொள்ளுங்கள்.

விவேக சிந்தாமணி உங்களை அந்த திசையில் சிந்திக்க தூண்டுகிறது.

சிந்தியுங்கள்.


திருக்குறள் - பரத்த நின் மார்பு

திருக்குறள் - பரத்த நின் மார்பு 


புலவி என்றால் பொய் கோபம். ஊடல். புலவி நுணுக்கம் என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். எப்படி மிக நுணுக்கமாக பெண்கள் ஒன்றை கண்டு பிடித்து கணவனோடு சண்டை போடுவார்கள் என்று சொல்ல வருகிறார். காதலில் அதுவும் ஒரு பகுதிதான்.

பாடல்

பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பொருள்

பெண்ணியலா ரெல்லாரும் = பெண் இயல்பு கொண்ட எல்லாரும்

கண்ணிற் = கண்ணால்

பொதுவுண்பர் = பொதுவாக உண்பார்கள், அல்லது இரசிப்பார்கள்

நண்ணேன் = பொருந்த மாட்டேன்

பரத்தநின் = பரத்தன்மை கொண்டவனான உன்

மார்பு = மார்பை

பெண் இயல்பு கொண்ட எல்லோரும் உன் மார்பை இரசிக்கிறார்கள். எனவே நான் உன்னை கட்டி பிடிக்க மாட்டேன் என்கிறாள் தலைவி.

பாடல் என்னவோ அவ்வளவுதான்.

அதில் உள்ள நுணுக்கம் எவ்வளவு தெரியுமா ? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பரத்த = ஒரு பெண் தவறான வழியில் வாழ்க்கை நடத்தினால் அவளை பரத்தை என்று  இந்த சமூகம் கூறுகிறது. அந்த வழியில் செல்லும் ஆணுக்கு ஒரு பெயரும் இல்லையா ?  வள்ளுவர் சொல்கிறார், அப்படி செல்பவனுக்குப் பெயர் "பரத்தன்".  நாலு பெண்களிடம் சென்று வருபவனுக்கு பரத்தன் என்று பெயர் தருகிறார்  வள்ளுவர்.


பெண்ணியலா ரெல்லாரும் = பெண்கள் எல்லாரும் என்று சொல்லவில்லை. பெண் இயல்பு  கொண்ட எல்லாரும். அப்படி என்றால் என்ன அர்த்தம் ?  பெண்களுக்கு  கற்பு, நாணம் போன்ற நல்ல குணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு  பெண் வடிவம், ஆணோடு சேரும் இயல்பு மட்டும் கொண்ட பெண்களை  பெண் இயல்பு கொண்டவர்கள் என்கிறார். பெண்கள் எல்லோரும் என்று  சொல்லி இருந்தால் அது சரியாக இருக்குமா ? இருக்காது.  தன் கணவனை தவிர   வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத பெண்கள் இருப்பார்கள்  அல்லவா ? எனவே, பெண்கள் எல்லாரும் என்று சொல்ல முடியாது.

கண்ணிற் பொதுவுண்பர் = கண்ணால் பொதுவாக இரசிப்பார்கள் . பெண்களுக்கு  அவர்களுடைய கணவன் பெரிய ஆள் என்று மற்றவர்கள் போற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அதே சமயம் , தன் கணவனை தான் மட்டுமே இரசிக்க வேண்டும் என்ற  தன்னுடைமை உணர்வும் இருக்கும். கணவனை இன்னொரு பெண்  நெருங்குவதை எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள். இங்கே , தலைவி சொல்கிறாள், பெண் இயல்பு கொண்ட பெண்கள் கண்களால் பொதுவாக  பார்த்து இரசித்தார்களாம். அருகில் வரவில்லை. தொடவில்லை. கண்களால்  இரசித்தார்கள் . அவ்வளவுதான்.

பொது உண்பர் - ஒரு அழகான பெண் தெருவில் சென்றால் ஆண்கள் அவளை உன்னிப்பாக  கவனிப்பார்கள். அவள் அழகை வைத்த கண் வாங்காமல் ரசிப்பார்கள். பெண்களுக்கும் ஆண்கள் மேல் ஒரு கவர்ச்சி உண்டு. ஆனால், அவர்கள்  கூர்ந்து நோக்குவது இல்லை. அப்படி லேசாக கடை கண்ணால், அல்லது  கண் பார்வையை மேலோட்டமாக பார்ப்பது என்று உண்டு. ஆங்கிலத்தில்  tunnel vission , peripheral vision என்று  சொல்லுவார்கள்.

ஆண்களுக்கு வீட்டில் ஒரு பொருள் அந்த இடத்தில் இல்லை என்றால் தவித்துப் போவார்கள். கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். அது அவர்கள் கண்ணில் படாது. மனைவி வந்து "இங்க தான இருக்கு " என்று எடுத்து கையில் கொடுத்தால் அசடு வழிவார்கள். காரணம், அவர்கள் பார்வை ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே பார்க்கும். அக்கம் பக்கம் பார்க்காது.

ஆனால் பெண்கள் பார்வை அப்படி அல்ல. சுத்து வட்டாரத்தை ஒரு அலசு அலசும். எனவேதான் பெண்கள் வேகமான வாகனங்களை ஓட்ட சற்று சிரமப் படுவார்கள்.  பார்வை நேரே சாலையில் மட்டும் இருப்பது இல்லை. அப்படியே அலசிக் கொண்டிருக்கும்.

இதை அறிந்த வள்ளுவர், "பொதுப் பார்வை" என்றார்.

நண்ணேன் = விரும்ப மாட்டேன், பொருந்த மாட்டேன். கட்டி அணைக்க மாட்டேன் என்கிறாள். அவனை அனைத்துக் கொள்ள ஆசைதான். இருந்தும், கூச்சம். எல்லாரும் பார்த்த மார்பு இது. எப்படியெல்லாம் பார்த்து இருப்பார்கள். சீ,  இப்படி எல்லோரும் பார்த்த மார்பை நான் எப்படி அணைப்பேன் என்று தள்ளி நிற்கிறாள்.

இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,  கணவன் மேல் தவறு இல்லை. மத்த பெண்கள் பார்த்தார்கள். அதற்கு அவன் என்ன செய்வான். அவன்  அழகாக இருக்கிறான் என்ற பெருமை அவளுக்கு. அவனை எல்லோரும் இரசிக்கிறார்கள் என்ற பெருமிதம் அவளுக்கு. இருந்தும், அவன் யாரையும்  பார்க்கவில்லை. என்னை மட்டுமே விரும்புகிறான் என்ற காதல் எண்ணம் அவளுக்கு.

ஆணின் ஆளுமையை படம் பிடிக்கிறார்.

பெண்ணின் காதலை படம் பிடிக்கிறார்.

மற்ற பெண்கள் பார்த்ததற்கே ஊடல் கொள்ளும் உன் மனைவி, நீ நிஜமாகவே அந்த பெண்கள் பின்னால்  போனால் எவ்வளவு வருந்துவாள் என்று சொல்லாமல் சொல்கிறார்.

அப்படி செய்தால் , உன் மனைவியின் உண்மையான காதலை இழப்பாய் என்று  கணவனுக்கு இரகசியமாக சொல்கிறார்.

காமத்துப் பாலிலும் அறம் சொல்லிச் செல்கிறார். 

Wednesday, November 30, 2016

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?


பாடல்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்  
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்  
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற  
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்  
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்  
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்  
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்  
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!

பொருள்

பொய்விளக்கப் புகுகின்றீர் - நமக்கு எது சரி , எது தவறு என்று சரியாகத் தெரிவதில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு , அவற்றை மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று. ஒரு வேளை நாம் மெய் என்று நினைத்துக் கொண்டிருப்பது பொய்யாக இருந்தால் ? வாழ் நாள் எல்லாம் பொய்யை விளக்கிக் கொண்டு இருந்திருப்போம் அல்லவா ? அது சரியா ? நாம் மெய் என்று நம்புவதை மெய் தானா என்று அறிய வேண்டாமா ? யாரோ சொன்னார்கள், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தோம் என்பதற்காக அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா ?


போது கழிக்கின்றீர் = பொழுதை வீணே கழிக்கின்றோம். டிவி, whatsapp , facebook , வார மற்றும் மாத இதழ்கள் , சினிமா , வெட்டி அரட்டை என்று பொழுதை வீணாக கழித்துக் கொண்டு இருக்கிறோம்.

புலைகொலைகள் புரிகின்றீர் = புன்மையான கொலைகள் செய்கின்றோம். நாம் உண்பதற்காக  மற்ற உயிர்களை கொல்கிறோம் . நான் தான் சைவம் ஆயிற்றியே , மாமிசம் சாப்பிடுவது இல்லையே என்று சொல்பவர்கள் கூட , தங்கள் தேவைக்காக  காலணி , கையுறை, belt , suitcase , wallet , purse போன்ற தேவைகளுக்காக  உயிர்க்கொலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காபி டீ குடிப்பதற்காக  நாம் உபயோகப் படுத்தும் பாலுக்காக மாடுகள் எவ்வளவு துன்பப் படுத்தப்  படுகின்றன. உயிர் கொலை இல்லாவிட்டாலும், ஒருவரின் மனதை  எத்தனை விதங்களில் கொலை செய்கிறோம். கடின வார்த்தைகளால், அவர்களை உதாசீனப் படுத்துவதின் மூலம் எவ்வளவோ மனக் கொலைகள் செய்கிறோம்.

கலகல என்கின்றீர் = அர்த்தமில்லாத சிரிப்பு, பேச்சு நாளும் எத்தனை.

கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் = நாமும் சில பல நல்ல புத்தங்களை படித்திருப்போம்; நல்லவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி ஒன்றும் சுத்த  முட்டாளாக நாம் இருப்பது இல்லை. கீதை, குறள்  போன்ற உயர்ந்த நூல்களை  பற்றி கொஞ்சம் அறிந்திருப்போம். இருந்தும், அவை எல்லாம் கேட்க/படிக்க நல்லா இருக்கு. நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி அவற்றை  ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் செல்கிறோம். கையில் விளக்கு இருந்தும்  பாழும் கிணற்றில் விழும் அறிவிலிகளைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கருத்திருந்தும் கருதீர் = அறிவு இருக்கிறது. நல்லது கெட்டது தெரிகிறது. இருந்தும் அவற்றை  கடை பிடிப்பது இல்லை. சின்ன உதாரணம், அதிகமாக  இனிப்பு உண்ணக் கூடாது என்று தெரிகிறது. இருந்தும் சமயம் கிடைக்கும் போது  விடுவது இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் என்று உள்ளே தள்ளி விடுகிறோம். கருத்து இருந்தும் கருதாமல் விட்டு விடுகிறோம்.

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ  = ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம்  நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும்  நாம் நினைத்துக் கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம் வர வேண்டாமா ?

கொடிய முயற்றுலகீர்  = கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும்  உலகத்தீரே

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் = உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன்  வரும்போது

மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே = அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது  நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்

என்கிறார் வள்ளலார்.

பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான் என்று உணர்ந்து செயல்பட்டால்  ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார் வள்ளல் பெருமான்.

சிந்திப்போம்.


Tuesday, November 29, 2016

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப 


ஒரு அரசனிடமோ  அல்லது ஒரு வள்ளலிடமோ பரிசுகள் பெற்ற ஒருவன், எதிர் வரும் மற்றவனை அந்த அரசனிடமோ அல்லது வள்ளலிடமோ வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று அழைக்கப்படும். ஆற்றுப் படுத்துதல் என்றல் வழி காட்டுதல் என்று அர்த்தம்.

முருகனிடம் அருள் பெற்ற நக்கீரர் , மற்ற பக்தர்களை அவனிடம் வழி காட்டுவதாக அமைந்தது திரு முருகாற்றுப்படை என்ற நூல்.

அதில் முதல் பாடல்....

"உலகம் மகிழ்ச்சி அடைய, வானில் வலப்புறம் எழும் , பலர் புகழும் சூரியனை கடலில் இருந்து எழும் போது கண்டவர்களை போல , இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில் சுடர் விடும் ஒளி"

பாடல்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .

பொருள்

உலகம் = உலகம்

உவப்ப = மகிழ

வலன் = வலப்புறமாக

ஏர்பு = எழும்

திரிதரு =  வானில் திரிகின்ற

 பலர்புகழ் = பலரும் புகழும்

ஞாயிறு = சூரியன்

கடல்கண் டாஅங்கு = கடலில் இருந்து எழுவதைப் போல

 ஓஅற = இடைவெளி இல்லாமல் 

இமைக்கும் = இமைக்கும் நேரம்

சேண்விளங்கு = சேண் என்றால் உயரம். உயரே விளங்கும்

அவிர் = பிரகாசமான

ஒளி = ஒளி , வெளிச்சம்


இது என்ன பாடல். கடலில் எழும் சூரியனைப் போல உயரே சுடரும் வெளிச்சம். இது ஒரு பாடலா ? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? இதைப் படித்து  என்ன ஆகப் போகிறது ? என்று கேள்விகள் எழலாம்.

சற்று சிந்திப்போம்.

உலகம் உவப்ப - உலகம் மகிழ.

முதலாவது, எதையும் மங்கலச் சொல்லோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உலகம் என்பது மிக உயர்ந்த மங்கலச் சொல்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று  ஆரம்பித்தார் கம்பர்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

என்று ஆரம்பித்தார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது நிகண்டு.

உலகம் என்றால் உலகில் உள்ளவர்களை குறிக்கும். குறிப்பாக உலகில் உள்ள நல்லவர்களை குறிக்கும்.

இரண்டாவது,  உலகில் உள்ள அனைவரும் மகிழ என்று ஆரம்பிக்கிறார். இந்தியாவில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது இந்து சமயத்தில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது சைவ சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ  என்றோ குறுகிய மனத்தோடு ஆரம்பிக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மக்களும் இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்.

சேரவாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் அழைத்தார் போல.

மூன்றாவது, உலகம் எப்போது மகிழும் ? உலகில் உள்ள எல்லோரும் மகிழ வேண்டும். தினமும் எல்லோரும் மகிழ வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா ? அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறதா ? என்று யோசித்தார்.

இரவில் அனைத்து உயிர்களும்  உறங்குகின்றன. தவறு செய்யாதவன் நிம்மதியாக உறங்குகிறான். கடமையை ஒழுங்காகச் செய்தவன் நமதியாக உறங்குகிறான். எல்லா உயிர்களும் இரவில் உறங்கி காலையில் சூரியன் ஒளி வந்தவுடன்  எழுந்து சுறுசுறுப்பாக தங்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகின்றன. உலகமே விழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீடும், நித்தமும் விழிக்கிறது.

இருள் துன்பத்திற்கு உதாரணம். ஒளி இன்பத்திற்கு உதாரணம். எப்படி சூரியன் வந்தவுடன் உலகம் விழித்து , வேலை செய்து, அதன் பலனைப் பெற்று இன்பமாக இருக்கிறதோ அது போல இன்பம் பெற வேண்டும் என்கிறார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


நான்காவது, சூரியன் தினமும் வரும், போகும். அப்படியானால் இன்பமும் வந்து வந்து   போகுமா.நிரந்தரமான இன்பம் இல்லையா ?  மேலும் சில சமயம் சூரிய ஒளி மோகத்தால் மறைக்கப் படலாம். அல்லது சில இடங்களில் விழாமல் போகலாம். அல்லது சூரியன் ஒரு நாள் தீர்ந்து போகலாம். நிரந்தரமான ஒரு ஒளி உண்டா ? சூரியன் என்பது ஒரு உதாரணம். அதற்கும் மேல் ஒரு ஒளி உண்டு. அந்த ஒளி....

ஐந்தாவது, ஓஅற இமைக்கும், ஒரு நொடி கூட இல்லாமல் இருக்காது. எப்போதும் சுடர் விடும் ஒளி. அது  மட்டும் அல்ல.

ஆறாவது,  சேண்விளங்கு, உயரத்தில் விளங்கும். உயரம் என்றால் எங்கே ? எவ்வளவு உயரத்தில் ?

நமது உடலில் 7 சக்கரங்கள், அல்லது சக்தி இருக்கும் இடங்கள் என்று கூறுகிறார்கள். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்யா, சஹஸ்ரார் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதில் கடைசியாக கூறிய சஹஸ்ரார் என்பது உடலுக்கு வெளியே உள்ள சக்கரம். நம் தலைக்கு மேல் ஒரு அங்குல உயரத்தில் உள்ள ஒரு இடம்.  சஹஸ்ரார் என்றால் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை மலர் என்று அர்த்தம்.  

மூலாதாரம் - தண்டுவடத்தின் அடிப் பகுதி
ஸ்வாதிஸ்தானம் - பிறப்புறுப்பு
மணிப்பூரஹம் - தொப்புள்
அனாஹதம் - இருதயம்
விசுத்தம் - கழுத்து
ஆக்ஞா - புருவ மத்தி
சஹஸ்ரார் - உச்சந்தலைக்கு ஓரங்குலம் மேலே

இறைவனை வணங்கும் போது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்க வேண்டும் என்று கூறியது எதற்கு என்றால் , சஹஸ்ரார் என்ற அந்த இடத்தில் உள்ள அந்த ஒளியை தொட்டு காண்பிக்க.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

என்பார் மணிவாசகர்.

சிரம் குவிப்பவரை ஓங்கி வளரச் செய்வான். கரம் குவித்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவது ஒரு முறை. இரு கையையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்குவது இன்னொரு முறை.

மணிவாசகர் வேலை மெனக்கெட்டு இரண்டு வரியை எதற்காக செலவிடுகிறார் ? இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பலன்களை சொல்கிறார்.

ஏன் ?

இரண்டும் வெவ்வேறானவை என்பதால்.

சேண் விளங்கு என்றால், அந்த உயர்ந்த இடத்தில் என்று பொருள்.

சற்று கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும். உடலுக்கு வெளியே உள்ள ஒரு இடம் , உடலில் உள்ள மற்ற சக்கரங்களோடு தொடர்பு கொண்டது. சக்தியை மூலாதாரத்தில் இருந்து கிளப்பி அங்கே கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். அது போல, அங்கே உள்ள ஒளி உள்ளுக்கும் செல்லும் என்பது சொல்லாமல் சொன்ன கருத்து.

அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது ?


சேண் விளங்கு அவிர் ஒளி

பிரகாசமாக இருக்கும் ஒளி. இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் சுடர் விடும் ஒளி.

சூரியனின் ஒளியை கண்ணை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். வீட்டின்  கதவை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். இந்த சேண் விளங்கு அவிர் ஒளி  உள்ளுக்குள் சுடர் விடும் ஒளி. அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை தரும் ஒளி.

எல்லோரிடமும் ஏதோ ஒரு ஞானம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாம் அறிந்தாரும் இல்லை, ஏதும் அறியாதரும் இல்லை.

ஆனால், நம் ஞானம் ஆணவம், கோபம், காமம் இவற்றால் மறைந்து நிற்கிறது.  இவை நீங்கும் போது , அந்த ஞான ஒளி மேலே    சென்று ஒளி விடும்.

இது முதல்  மூன்று வரிக்கு அர்த்தம்.

முழு  புத்தகத்தையும் படித்துப் பாருங்கள். 

Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



Wednesday, November 23, 2016

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை 


ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது. என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை. கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடி பட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் கொலுசு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில்  , கோவலன் , கண்ணகியை போற்றுகிறான். "நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து  எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ...கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ...நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

பாடல்

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்

பொருள்

குடிமுதற் = குடி முதல், உன் குடும்பம் முதல்

சுற்றமும் = உறவினர்கள்

குற்றிளை யோரும் = குற்று + இளையோரும்.  குற்றேவல் செய்யும் வேலை ஆட்களையும் 

அடியோர் பாங்கும் = வேலை ஆட்களையும்

ஆயமும் நீங்கி = தோழிகளையும் விட்டு வந்தாய் 

நாணமும் = நாணத்தையும்

மடனும் = மடனையும்

நல்லோ ரேத்தும் = நல்லவர்கள் போற்றும்

பேணிய கற்பும் = பெருமையக்குரிய கற்பையும்

பெருந்துணை யாக = பெரிய துணையாகக்

என்னொடு = என்னோடு

போந்து = என்னோடு வந்து

ஈங்கு  = இங்கு

என் = என்னுடைய

துயர் = துன்பத்தை

களைந்த = போக்கிய

பொன்னே = பொன் போன்றவளே

கொடியே = கொடி போன்றவளே

புனைபூங் கோதாய் = பூக்களை புனைந்தவளே )சூடிக் கொண்டவளே )

நாணின் பாவாய் = நாணமே உருவான பெண்ணே

நீணில விளக்கே = நீண்ட இந்த நில உலகிற்கு விளக்கு போன்றவளே

கற்பின் கொழுந்தே = கற்பின் கொழுந்தே

பொற்பின் செல்வி = செல்வம் நிறைந்தவளே

சீறடிச் = உன்னுடைய சிறந்த பாதங்களில் உள்ள

சிலம்பி னொன்று = சிலம்பில் ஒன்று

கொண் டியான்போய் = கொண்டு யான் போய்

மாறி  வருவன் = மாற்றி வருவேன்

மயங்கா தொழிகெனக் = கவலைப் படாதே

பாடலின் உள்ளோடும் சில விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது,  மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால்  ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது. "கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை. ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும்  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு , கடைசியில் தான்  முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின்  விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம் , கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை  இழந்தாள் , பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

உதாரணம், சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம் . இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது. இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது  இராமானுக்குத் தெரியாது. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை. அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும்  என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள்.  கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும் , அவனுக்கு துணை செய்வது  என்று அவள் முடிவு செய்து விட்டாள் . கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.


 மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும்  அமங்கல சொற்களை  சொல்லக் கூடாது. மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே  மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி. இறந்தார் என்று  சொல்லுவது இல்லை. அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான்   சொல்லுவது வழக்கம். 

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும்.  விதி,  அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது. 

 "மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக  என்கிறான்.

அவனுக்குத் தெரியாது  நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச் சொல்  வருகிறது. பாடலை எழுதிய இளங்கோவுக்குத் தெரியும். கோவலன் வாயில் இருந்து அப்படி ஒரு சொல்லை வரும்படி எழுதுகிறார்.

நமக்கு ஒரு பாடம் அது. 

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. 

திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில்  விழுந்து விடக் கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். 

நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள். 

நல்லதே நடக்கட்டும். 

 


Tuesday, November 22, 2016

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?


பிள்ளைகள் எதற்கு என்று கேட்டால், "எனக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டாமா ?" என்று சிலர் கூறுவார்கள்.

அவர்கள் விரும்பியபடியே பிள்ளை பிறக்கும்...கொள்ளி போட ...சில சமயம் உயிரோடு இருக்கும் போதே கூட.

சிலர் , "எனக்குப் பிறகு இந்த சொத்தை எல்லாம் ஆள ஒரு வாரிசு வேண்டாமா ?" என்று பிள்ளை பெறுவதற்கு காரணம் சொல்லுவார்கள். அவனுக்கு வரும் பிள்ளை, அவன் மேல் கோர்ட்டில் கேஸ் கொடுக்கும்...."சொத்தை பிரித்து தா"..என்று.

இன்னும் சிலரோ, "வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பிள்ளை வேண்டாமா " என்று கேட்பார்கள்.

இதெல்லாம் சுயநலத்தில் இருந்து எழும் ஆசைகள்.

திருஞான சம்பந்தரின் தந்தையார் , தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்தார். எதற்காக தெரியுமா ?

பாடல்

மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.


சீர் பிரித்த பின் 

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடி கமல 
நினைவுற முன் பர சமய நிராகரித்து, நீறாக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெற ப் போற்றும் தவம் புரிந்தார்.


பொருள் 

மனை = வீடு

அறத்தில்= அறத்தில்

இன்பம் = இன்பம்

உறு = பெறும் , பெற

மகப் = பிள்ளைகளை

பெறுவான் = பெறுவதற்காக

விரும்புவார் = விரும்பி

அனைய = அந்த

நிலை = நிலையில்

தலை = சிறப்பாக

நின்றே = நின்றே

ஆடிய = ஆடிய

சேவடி = சிவந்த திருவடிகளை

கமல = தாமரை போன்ற

நினைவுற = மனதில் நினைத்து

முன் = முன்பு

பர = மற்ற

சமய = சமயங்களை

நிராகரித்து = நிராகரித்து

நீறாக்கும் = திருநீற்றின் பெருமையை விளங்கும்படி செய்து

புனை = அணியும் (புனைந்து கொள்ளுதல் )

மணிப்பூண் = மணிகள் கொண்ட பூணை

காதலனைப் = காதல் கொண்ட மகனை

பெறப் = பெறுவதற்காக

போற்றும் = போற்றுதலுக்கு உரிய

தவம் புரிந்தார் = தவத்தினை செய்தார்

பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி பேச வந்த வள்ளுவர் கூறுவார்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பெறக் கூடியவற்றில் அறிவான பிள்ளைகளை பெறுவதைத் தவிர சிறந்தது ஒன்றும் இல்லை என்றார். 

அழகான பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை என்று சொல்லவில்லை ... அறிவான பிள்ளை என்றார். 

திருஞான சம்பந்தரின் தந்தையார் பிள்ளை வேண்டி தவம் இருந்தார்...

எதற்காக பிள்ளை வேண்டினார் ?

இல்லறத்தில் இருந்து பெறும் இன்பம் பிள்ளைகள் மூலம் வரும். 

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், அவர் பேசுவதைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பார் வள்ளுவர். 

அந்த இன்பத்தை பெற தவம் செய்தார்.

அது மட்டும் அல்ல. 

"பர சமய நிராகரித்து, நீறாக்கும்"

மற்ற சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்ய பிள்ளை வேண்டும் என்று  தவம் செய்தார். 

பிள்ளைகளை பெறுவது , மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு. 

கொள்ளி வைப்பதற்கோ, சொத்தை அனுபவிப்பதற்கோ அல்ல.

பர சமயங்களை ஏன் நிராகரிக்க வேண்டும் ?

மக்கள் எது உண்மை, எது தவறு என்று அறியாமல் தடுமாறிய சமயம். 

எது அறம் , எது அறம் அல்லாதது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம். 

பலப் பல சமயங்கள். ஆளுக்கு ஒன்றை கூறுகிறார்கள். பாமர மக்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது.  

உண்மை புரியாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த நேரம். 

அந்த நேரத்தில், மற்ற பொய்யான சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமை விளங்க ஒரு புதல்வன் வேண்டும் என்று தவம் செய்தார். 

மக்கள் உய்யும் பொருட்டு பிள்ளை வேண்டினார்.

அது தான் கருத்து. 

நம் பிள்ளைகளும், வீட்டுக்கு மட்டும் இன்றி நாம் வாழும் சமுதாயத்துக்கும், இந்த  நாட்டுக்கும்,மற்றைய உயிர்களுக்கும்  பயன் படும்படி வாழ நாம் கற்றுத் தர வேண்டும். 

தேவர்கள் , சிவனை வேண்டி , தங்கள் துயர் தீர்க்க ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டினர். முருகன் தோன்றினான். 

ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.

என்பது கந்த புராணம். 

தயரதனுக்கு நீண்ட நாள் பிள்ளை இல்லை. அவனுடைய குல குருவான வசிட்டரிடம் சென்று தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கூறினான். பிள்ளை எதற்கு தெரியுமா ? தனக்கு பின்னால் அரசை ஆள  அல்ல.

தனக்குப் பின்னால் , இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள் ? அவரக்ளை காக்க வேண்டுமே என்ற கவலையில் பிள்ளை வேண்டினான். 

‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.

என்பது கம்ப இராமாயணம். 

அறுபதினாயிரம் ஆண்டுகள் , பகைவர்களை ஒடுக்கி, இந்த உலகை நான் காத்து வந்தேன். வேறு ஒரு குறையும் இல்லை. எனக்குப் பின் இந்த வையகம் துன்பப் படுமே என்று ஒரு வருத்தம் இருக்கிறது என்று கூறினான். 

இந்த உலகைக் காக்க ஒரு பிள்ளை வேண்டினான். அப்படியே பெற்றான்.  

பிள்ளைகளைப் பெறுவது, உலக நன்மைக்காக என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. 

பெரிய புராணம் காட்டும் வழியும் அதுவே. 


 

Sunday, November 20, 2016

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.


வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?

திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள், சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள், யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....

அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.

அதில் ஒன்று

பாடல்

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்

இல்லக = இல்லத்தினுள்

விளக்கது = உள்ள விளக்கானது

விருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது

சொல்லக = சொல்லினுள் உள்ள

விளக்கது = விளக்கானது

சோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளது

பல்லக = பலருடைய மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

பலருங் காண்பது = எல்லோரும் காண்பது

நல்லக = நல்லவர்களின் மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

நமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்

என்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும்  நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?

விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.

அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள்.  அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ? போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.

அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு. நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும்.

இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ, அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.

அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?

அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது.

"சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"

அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.

சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும். நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?

அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை.

"பல்லக விளக்கது பலரும் காண்பது"

பலருடைய மனதிலும் உள்ளது.  பலரும் காணும்படி உள்ளது.

அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?

நல்லவர்களின் மனதில் உள்ளது.

நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.

கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?

அதற்கு பாரதியார்  பதில் சொல்கிறார்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.



விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்.





நான்மணிக் கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன

நான்மணிக்  கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன


எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. சிலவற்றை உடனடியாகச் செய்கிறோம். மற்றவற்றை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கிறோம்.

தள்ளி வைத்த காரியங்கள் குவிந்து கொண்டே போகின்றன. நமக்கு நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காலம் இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அந்தக் காலங்கள் அனைத்தும் உருண்டோடி விடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் , கடைசியில் ஒன்றும் இருக்காது.  எனவே தள்ளிப் போடும் காரியங்கள் எவை எவை என்று பாருங்கள்.

முடிந்தவரை தள்ளிப் போடாமல் செய்யப் பாருங்கள்.


பாடல்

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

சீர் பிரித்த பின்


ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

பொருள்


ஊழியும் = ஊழிக் காலமும்

ஆண்டு = ஆண்டுகளால்

எண்ணி = எண்ணிக்கையில்

யாத்தன = செய்யப் பட்டன. யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள்.

யாமமும் = யாமமும்

நாழிகையானே = நாழிகையால்

நடந்தன = நடந்து முடியும்

தாழீயா = காலம் தாழ்த்தாமல்

தெற்றென்றார் கண்ணே  = தெளிந்தவரிடம் சென்று

தெளிந்தனர் = தெளிவு பெற்றனர்

வெட்கென்றார் = அறிவு இல்லாதவர்கள்

வெஞ் சொலால் = பயனில்லாத சொற்களால்

இன்புறுவார் = இன்பம் அடைவார்கள்

ஊழிக் காலம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமாய் தேய்ந்து, பின் அது கொஞ்சம்  யாமங்களாக மாறும். பின் அந்த யாமங்கள் குறைந்து குறைந்து நாழிகையாகி பின்  அதுவும் இல்லை என்று ஆகிவிடும்.

அறிவுள்ளவர்கள் , காலம் நிறைய இருக்கிறது, பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டார்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பின்னால்  செய்ய வேண்டும் என்று மற்ற படித்து தெளிந்தவர்களிடம் சென்று  கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள்.

அறிவில்லாதவர்கள், வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு அதில் இன்பம் காண்பார்கள்.

"தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்" . நாமே எல்லா புத்தகங்களையும் படித்து  தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க  ஒரு ஆயுள் போதாது. அப்படியே படித்து விட்டாலும், தெளிவு பிறக்காது . படிக்க படிக்க குழப்பம் அதிகரிக்கும்.

பின் எப்படி தெளிவு பெறுவது ?

எதைப் படிப்பது, எப்படி படிப்பது, எப்போது படிப்பது , அவற்றின் சாரம் அல்லது அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலம் இருக்கிறதே என்று நல்ல காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. காலம் கரைந்து விடும்.




Friday, November 18, 2016

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை 


பொருள் தேட வேண்டும். பணம் இருந்தால் மற்ற எதைப் பற்றியும் கவலை இல்லை. வேண்டிய அளவு பணம் மட்டும் இருந்து விட்டால் உலகில் மிக சந்தோஷமாக வாழலாம். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம் என்றுதான் எல்லோரும் நம்பி , அந்த பணத்தை சேர்க்க வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்கிறார்கள்.


பணம் இல்லாவிட்டால் வாழ்வில் மற்றவை எது இருந்தும் பயனில்லை. பணம் ஒன்றுதான் குறி என்று உலகம் சென்று கொண்டிருக்கிறது.

நம்மிடம் பணம் இல்லை, செல்வம் இல்லை , எனவே அதை சேர்க்க முயற்சி செய்கிறோம். இதில் தவறென்ன.

பணம் மட்டும் அல்ல, நாம் வேறு சிலவற்றையும் சேர்க்க முயற்சி செய்கிறோம்.

நல்ல ஆரோக்கியம், உறவுகள், நட்பு, புகழ் , செல்வாக்கு, மதிப்பு, என்று இப்படி  பலவற்றை  சேர்க்க ஆசைப் படுகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம்.

அது என்ன ?

அறிவு !

பாடல்

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை 
இன்மையா வையா துலகு.

கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

அறிவு இன்மை , இன்மையுள் இன்மை பிறிது இன்மை 
இன்மையாக  வையாது உலகு 

பொருள் 

அறிவு இன்மை = அறிவு இல்லாமை 

இன்மையுள் = இல்லாதவற்றில் 

இன்மை  = பெரிய இல்லாதது 

பிறிது இன்மை = மற்றவை இல்லை என்றாலும் 
 
இன்மையாக  = இல்லாததாக 

வையாது = கொள்ளாது 

உலகு = உலகம் 

இல்லாதவற்றில் பெரிய இல்லாதது அறிவு இல்லாததே. மற்றயவை இல்லாவிட்டாலும் அதை பெரிதாக நினைக்காது உலகு. 


இது சரிதானா ? வள்ளுவர் சொல்லுவது நடை முறைக்கு சாத்தியமா ? அறிவு மட்டும் போதுமா ? மற்றவை வேண்டாமா ? பொருள் இல்லாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது, நல்ல உடை, இருக்க இடம், வாழ்க்கை வசதிகள், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிற்கு பொருள் வேண்டாமா ? அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

இது கேள்வி. 

சிந்திப்போம். 

முதலாவது, சரி, அறிவு வேண்டாம். பொருள் மட்டும் வேண்டும் என்று செல்வத்தின் பின்னால் சென்றால் என்ன ஆகும் ? எந்த வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது. எப்படியோ பொருள் சேர்த்தால் சரிதான் என்று நினைத்து , தவறான வழியில் பொருள் சேர்த்து பல சிக்கல்களில் மாட்டித் தவிப்பவர்கள் பலர்.  எனவே, பொருள் சேர்க்கவும் அறிவு வேண்டும். 

இரண்டாவது, சரி எப்படியோ நல்ல வழியில் பொருள் சேர்த்தாகி விட்டது. இனி என்ன  சிக்கல் என்றால் ? சேர்த்த பணத்தை என்ன செய்வது ? பல பேருக்கு பணம்  சேர்க்கத் தெரியும். அதை நல்ல வழியில் செல்வழிக்கத் தெரியாது. நல்ல துணிமணி, பெரிய வீடு, ஆரோக்கியமான சூழ்நிலை என்று வாழத் தெரியாமல் எல்லா பணத்தையும் வங்கிகளிலும், நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்து விட்டு , ஒரு சுகமும் அனுபவிக்காமல் இருப்பார்கள். செலவழிக்கவும் அறிவு வேண்டும்.  


மூன்றாவது,  சேர்த்த பணத்தை நல்ல வழியில் முதலீடு செய்து அதை பாதுகாத்து மேலும் அதை அதிகரிக்கத் தெரியாது.  தவறான இடங்களில் முதலீடு செய்து  கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை இழந்து முதுமையில் வறுமையால் வாடுவார்கள். எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்க்கிறோம். சரியான வழியில் முதலீடு செய்யாமல் கைப் பொருளை இழந்து பிச்சைக்காரர்களை விட  கேவலமாக வாழ்பவர்களை பார்க்கிறோம். முதலீடு செய்யவும் அறிவு வேண்டும். 

நான்காவது, சிலர் கையில் நாலு காசு சேர்ந்தவுடன் அதை கண்ணு மண்ணு தெரியாமல் செலவழிப்பார்கள். சூதாட்டம், கள் ,  கெட்ட சகவாசம் என்று செலவழித்து அதனால் பொருளையும் இழந்து, பெருமையையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து துன்பப் படுவார்கள். 

ஐந்தாவது, சரி பணம் மட்டும் தானா, உறவு நட்பு இது எல்லாம் வேண்டாமா ? அறிவு இல்லை என்றால் சிறந்த நண்பர்களை தேர்ந்து எடுப்பது கடினம். கெட்ட நண்பர்கள் நம்மை துன்பத்தில் தள்ளி விடுவார்கள். உறவுகளில் ஆயிரம் சிக்கல் வரும். ஏன் கணவன் மனைவிக்கு நடுவில் கூட சிக்கல்கள் வரலாம். பணம் இல்லாத ஏழைகள் வீட்டில் கணவன் மனைவி அன்போடு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அன்பு செலுத்தி  இன்பமாக இருப்பதைக் காணலாம். பணம் படைத்த வீட்டில் , கணவனும் மனைவியும் அன்பில்லாமல், நாளும் சண்டையிட்டுக் கொண்டு வாழக்கை நரகமாக வாழ்வதையும் காணலாம். தேவை இல்லாத உறவுகளை கொண்டாடுவது, தேவையான உறவுகளை மதிக்காமல் இருப்பது போன்றவை அறிவின்மையால் நிகழும். 

சரி, இதெல்லாம் சரிதான். அதுக்காக எந்நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் போதுமா என்றால் , அறிவு வளர்ந்தால் பணம் சம்பாதிப்பது எப்படி, செலவழிப்பது எப்படி, இதில் முதலீடு செய்யலாம், எப்படி மகிழ்ச்சியாக வாழலாம், உறவுகளில் வரும் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து அதன் படி   செயல் பட முடியும். 

அறிவு இவை அனைத்தையும் கொண்டு வரும். 

எனவே அறிவைப் பெற்றால் அறிவும் கிடைக்கும் மற்றவையும் கிடைக்கும். 

அறிவில்லாத மற்றவற்றாரால் அவ்வளவாக சிறப்பு இல்லை. சில சமயம் அதனால் துன்பம் கூட வரும். 

அது மட்டும் அல்ல, அறிவினால் இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் வேண்டிய  நன்மைகளை தேடிக் கொள்ள முடியும். 

மற்றவை வேண்டாம் என்று சொல்லவில்லை வள்ளுவர். மற்றவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்லவில்லை. தேவையான பொருள் இல்லாவிட்டாலும், நல்ல உறவும் நட்பும் இல்லாவிட்டாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டாலும்  குறை தான். ஆனால், அவற்றை ஒரு பெரிய குறையாக உலகம் கருதாது என்றார் வள்ளுவர். 

அறிவைத் தேடுங்கள். மற்றவை தானே வரும். 



 


Thursday, November 17, 2016

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக 


வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் நிறைந்ததுதான். இன்பம் மட்டுமே வேண்டும். துன்பம் வேண்டவே வேண்டாம் என்று தான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன. ஆனாலும் , துன்பம் அழையா விருந்தாளியாக வந்து வந்து போகத்தான் செய்கிறது.

துன்பம் வந்தால் என்ன செய்வது ?  சிரித்து விடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

பொருள்

இடுக்கண் = துன்பம்

வருங்கால் = வரும்போது

நகுக = சிரிக்க

அதனை = அந்த துன்பத்தை


அடுத்தூர்வது = சென்று போராடுவது

அஃதொப்பது = அதைப்போன்ற ஒன்று

இல் = இல்லை


வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டு போய் விடுவார். துன்பம் வரும் போது சிரியுங்கள் என்று.  அதெல்லாம் நடக்குமா ? நடைமுறைக்கு சாத்தியமா ? கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும் என்று நாம் எப்போதும் போல நினைப்போம்.

வள்ளுவர் சும்மா சொல்ல மாட்டார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.

அது என்னவாக இருக்கும் என்று சிந்திப்போம்.


துன்பம் வேண்டாம் தான் நினைக்கிறோம். ஆனால் நம்மை யார் கேட்கிறார்கள். துன்பம் வந்து விட்டது.

உடல் நிலை குறைவு, பணத் தட்டுப்பாடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம்,  தொழிலில் தொய்வு, அலுவலகத்தில் சிக்கல், உறவுகளில் குழப்பம், விரிசல், நெருங்கியவர்கள் புரிந்து கொள்ளாமை , நினைத்தது நடக்காமை, தேர்வில் குறைந்த மதிப்பெண், என்று ஏதோ ஒரு வகையில் துன்பம் வந்து விடுகிறது.

வந்தவுடன் என்ன செய்யலாம் ?

துவண்டு போய் விடலாம்.

வீட்டுக்குள் முடங்கி விடலாம்.

விதியை நோகலாம்.

நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று எல்லோரையும் நோகலாம்.

தெய்வத்தை பழிக்கலாம்.

விதியை நோகலாம்.

....

ஆனால் இப்படி எல்லாம் செய்வதனால் வந்த துன்பம் நீங்கி விடுமா ? வந்த துன்பத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதை எதிர்த்து போராட வேண்டும்.

என்னால் என்ன முடியும் என்று முடங்கிக் கிடந்தால் எப்படி போராடுவது ?

போராட வேண்டும் என்றால் அதற்கு ஒரு உற்சாகம் வேண்டும், உத்வேகம் வேண்டும், முயற்சி வேண்டும்.

அந்த முயற்சிக்கு ஒரே வழி , "இந்த துன்பத்தை நான் வெற்றிக்கு கொள்வேன் " என்ற  தன்னம்பிக்கை.

இரண்டாவது, துன்பம் வந்தால் யாரிடமாவது உதவி கேட்க வேண்டும். உதவி கேட்கப் போகும் போது முகத்தை வாட்டமாக, தொங்கப் போட்டுக் கொண்டு சென்றால்  உதவி செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட செய்ய மாட்டார்கள். நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு கொஞ்சம் பணம் வேண்டும். சோகமான முகத்துடன், பயந்த விழிகளோடு , தயங்கி தயங்கி கேட்டால் பணம் கிடைக்குமா. தைரியமாக, தன்னம்பிக்கையோடு சிரித்த முகத்தோடு கேட்டால்  கிடைக்குமா ?

பணம் இல்லாதது துன்பம் தான். ஆனால் அதற்காக அழுது வடிந்து கொண்டு இருந்தால் , உதவி செய்ய நினைப்பவர்கள் கூட உதவி செய்ய மாட்டார்கள். மலர்ந்த  முகத்தோடு இருங்கள்.

மூன்றாவது, "அடுத்தூர்வது" என்றார். அது என்ன அடுத்தூர்வது ? அடுத்து + ஊர்வது.

அடுத்தல் என்றால் போராடுதல். அடுகளம் என்றால் போர் களம்.  துன்பத்தை எதிர்த்து போராடுவது என்று அர்த்தம். போராடும் போது ஒரு வலிமை, ஒரு உத்வேகம். இல்லை என்றால் தோல்வி நிச்சயம். பணம் வேண்டுமா, ஒன்றுக்கு பத்து பேரிடம்  கேட்போம் என்று கிளம்ப வேண்டும்.  கட்டாயம் கிடைக்கும் என்று  ஒரு புன்னகையோடு கிளம்ப வேண்டும். "எங்க கிடைக்க போகுது, எவன் தருவான் " என்று சோர்வோடு கிளம்பினால் கட்டாயம் கிடைக்காது.

நோய் வந்து விட்டதா ? அவ்வளவுதான், இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று துவண்டு விடக் கூடாது. மருந்து வேலை செய்யும். மருத்துவர்கள் உதவி செய்வார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இந்த நொடியில் இருந்து விடுபடுவேன் என்று தன்னம்பிக்கையோடு இருந்தால்  நோயிலிருந்து விடுபடலாம். மாறாக, என்ன மருந்து சாப்பிட்டு என்ன பயன் என்று துவண்டு விட்டால் , நோய் குணமாகாது.

நான்காவது, "அஃதொப்பது இல்" என்றார். அப்படி என்றால் என்ன ? துன்பத்தை வெல்ல பல வழிகள் இருக்கலாம். இறைவனை நம்பலாம். கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளலாம். வள்ளுவர் அதை எல்லாம் தவிர்க்கச்  சொல்லவில்லை. துன்பத்தை கண்டு சிரிப்பது உள்ளதிற்குள் சிறந்தது. அதற்கு இணையான ஒன்று இல்லை என்கிறார். அதை விட சிறப்பு குறைந்தவை இருக்கலாம். ஆனால் அதற்கு இணையான ஒன்று இல்லை. சிறந்தது இருக்கும் போது மற்றவற்றை ஏன் நாட வேண்டும் ?

துன்பம் வந்தால், எதிர்த்துப் போராடுங்கள். போராட ஒரு முயற்சி, உற்சாகம், உத்வேகம் வேண்டும்.

அதற்கு ஒரு தன்னம்பிக்கை, ஒரு மலர்ந்த முகம் வேண்டும்.

எனவே, துன்பம் வந்தால் துவண்டு விடாமல், சிரித்த முகத்தோடு போராடுங்கள். அதை விட சிறந்த வழி இல்லை.






Wednesday, November 16, 2016

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் 


சிலர் யாருக்குமே உதவி செய்ய மாட்டார்கள். அது கூட பரவாயில்லை, மற்றவர்கள் உதவி செய்தாலும், உதவி பெறுபவர்களை கண்டு பொறாமை படுவார்கள். அந்த உதவியை தடுக்க நினைப்பார்கள். மற்றவர்களின் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையை அழுக்காறு என்பார்கள்.

அப்படி ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவியை கண்டு பொறுக்க மாட்டாதவன் சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கெட்டுப் போவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்

கொடுப்பது = ஒருவன் மற்றவருக்கு கொடுக்கும் உதைவியை

அழுக்கறுப்பான் = பொறுத்துக் கொள்ள மாட்டாதவன்; அல்லது அதை தடுக்க நினைப்பவன்

சுற்றம் = அவனது சுற்றத்தார்

 உடுப்பதூஉம் = உடுக்க உடையும்

உண்பதூஉம் = உண்பதற்கு உணவும்

இன்றிக் கெடும் = இல்லாமல் கெட்டுப்  போவார்கள் , அல்லது துன்பப் படுவார்கள்.

எளிமையான குறள் தான். இருந்தாலும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது.

முதலாவது, கொடுப்பது கண்டு பொறாமை படுவது என்பது மிக மிக கேவலமான செயல். அப்படி பொறாமை படுபவன் ரொம்ப துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார் வள்ளுவர்.

துன்பத்தில் பெரிய துன்பம் எது ? பசிக்கு உணவு இல்லாததும், மானத்தை காக்க உடை இல்லாததும் தான். உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். உடை இல்லாமால் இருக்க முடியுமா ? உடையும் உணவும் இல்லாவிட்டால் எவ்வளவு துன்பமாக இருக்கும். அவ்வளவு துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார்.

சரி, பொறாமை படுபவன் துன்பப் பட்டால் சரி. எதற்காக அவன் சுற்றத்தார் உணவும் உடையும்  இன்றி துன்பப் பட வேண்டும் ?

இரண்டாவது,  ஒருவன் துன்பத்தில் இருக்கிறான் என்றால், உதவி என்று தன் சுற்றத்தாரிடம் போவான்.  அவர்களே உணவும் உடையும் இல்லாமல் இருந்தால், இவன் எங்கே போவான். சுற்றம் கெடும் என்றால், இவனும் கெடுவான் என்பது சொல்லாமல் சொன்னது. மேலும், தான் கெட்டு , சுற்றமும் கெட்டால் , உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்துப் போவான் என்பது பொருள்.

சிந்தித்துப் பாருங்கள். துன்பம் யாருக்கும் வரும். அப்படி துன்பம் வந்த காலத்து, அதில் இருந்து விடுபட மற்றவர்களின் உதவி வேண்டும். உதவி செய்யவும்  யாரும் இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய துன்பம் ?


மூன்றாவது, சுற்றம் என்றால் ஏதோ தூரத்து சொந்தம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தூரத்து  சொந்தக் காரன் எப்படி போனால் நமக்கு என்ன என்று பல பேர் நினைப்பார்கள். சுற்றம் என்றால் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்று  நெருங்கிய சொந்தம்.  பெற்ற பிள்ளை சாப்பாட்டுக்கும் , துணி மணிக்கும்  வழி இல்லாமல் தவிக்கிறான் அல்லது தவிக்கிறாள்  என்று கேட்டால் அந்த பெற்றோரின் மனம்  எவ்வளவு துன்பப் படும்.  அது மட்டும் அல்ல  பிள்ளைக்கு உதவி செய்யக் கூட முடியவில்லை என்றால் அது இன்னும் எவ்வளவு துன்பம்.


நான்காவது, அப்படி நம்முடைய பிள்ளைகளோ, பெற்றோரோ, உடன் பிறப்புகளோ உணவும் உடையும் இன்றி தவிக்க நாமே காரணம் என்று இருந்தால் அந்த நினைப்பு எவ்வளவு துன்பத்தைத் தரும். நம் பிள்ளைகளின் துன்பத்திற்கு நாமே காரணமாகி விட்டோமே என்று நினைத்தால் ஒரு பெற்றோர் எவ்வளவு  வருந்துவார்கள்.

இவ்வளவு பெரிய துன்பம் தேவையா ? மற்றவர்கள் செய்யும் உதவியைக் கண்டு  பொறாமை கொண்டால் இப்படிப் பட்ட துன்பங்கள் நிகழும் என்கிறார் வள்ளுவர்.

ஐந்தாவது, உணவும் உடையும் இல்லை என்றால் மற்றவைகள் இருக்குமா ? வீடு, நிலைக்கு, நகை, வண்டி , வாகனம் என்று எல்லாம் இருக்குமா ? ஒன்றும் இருக்காது அல்லவா ? எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டும். ஆனால், தெருவில் நின்று பிச்சை கூட கேட்க முடியாது காரணம், உடை இல்லை.  உடை இல்லாமல், தெருவில் சென்று பிச்சை கேட்பது எவ்வளவு அவமானம்.

ஆறாவது, துன்பத்தில் இருக்கும் சுற்றத்தார், "இவன் கொண்ட பொறாமையினால் தான், நமக்கு இந்த துன்பம் வந்தது " என்று எண்ணி இவனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஒண்ட இடம் இன்றி, உடுத்த உடை இன்றி, உண்ண உணவு இன்றி ....எவ்வளவு துன்பம் பாருங்கள்.

ஏழாவது, சரி இவ்வளவுதானா ? தானும், சுற்றமும் உணவும் உடையும் இல்லாமல்  போவோம் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதற்கு மேலும் சொல்கிறார்  "கெடும்" என்று. இதற்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது  ?

இருக்கிறது.

உணவும் உடையும் இல்லாத ஒருவன், தன் பிள்ளைகள் உணவும் உடையும் இல்லாமல் தவிப்பதை பார்க்கும்  ஒருவன் எப்படியாவது அவர்களுக்கு உணவும் உடையும்  பெற்றுத் தர வேண்டும் என்று ஏதாவது தவறான வழியில் முயல்வான். திருடுவான், மற்ற குறுக்கு வழியில் செல்ல நினைப்பான். அதனால் மேலும் பழி  வந்து சேரும்.  சிறைக்குப் போவான். குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டு சிறை செல்ல நேரிடும்.

மீண்டும் தலை எடுக்கவே முடியாத அளவு  தீராத துன்பத்தில் கிடந்து கெடுவான் என்ற பொருள் பட "கெடும்" என்றார் .

எவ்வளவு கோபமும், வெறுப்பும் இருந்தால் வள்ளுவர் இப்படி ஒரு குறளை எழுதி இருப்பார் ?

கொடுப்பதைக் கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது என்பதை இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது.

சரி, யாரோ யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறார்கள். நாம் ஏன் அதை தடுக்கப் போகிறோம். அப்படி எல்லாம் யாரும் செய்வார்களா என்று கேட்டால், சில உதாரணங்கள் காட்டலாம்.

உணவு விடுதியில் , உணவு சாப்பிட்டபின் பில் வரும். நண்பர் , அந்த பில்லோடு சேர்த்து கொஞ்சம் டிப்ஸ் வைப்பார். "எதுக்கு எவ்வளவு டிப்ஸ், கொஞ்சம் குறைத்து வை. இல்லைனா எல்லோரிடமும் இப்படியே எதிர் பார்ப்பார்கள் " என்று நண்பன் கொடுப்பதை குறைப்பவன் , இந்த பட்டியலில் வருவான்.

அலுவலகத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வோ, அல்லது சம்பள உயர்வோ கொடுக்கும் முன், அவனுடைய மேலதிகாரி நம்மிடம் அபிப்பிராயம் கேட்கலாம். "அவனுக்கா, இப்ப எதுக்கு, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் " அவனுக்கு வரும் நன்மையை தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

வீட்டில் மனைவியோ கணவனோ , ஒரு அனாதை ஆசிரமத்துக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்துக்கோ நன்கொடை அளிக்கும் போது , எதுக்கு இவ்வளவு நன்கொடை என்று தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

இப்படி நடை முறையில் எவ்வளவோ விதங்களில் நாம் பிறருக்கு வரும் நன்மைகளை  தடுத்து விடுகிறோம்.

அது தவறு.

கொடுப்பவர்களை வாழ்த்துவோம்.

பெறுபவர்களை , இன்னும் சிறந்து வரட்டும் என்று வாழ்த்துவோம்.



Tuesday, November 15, 2016

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்



உன் தாய் செய்தது உனக்குத் தெரியாதா என்று கோசலை பரதனிடம் கேட்டவுடன், பரதன் கூறுவான் , என் தாய் செய்தது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கீழே சொன்ன பாவங்கள் செய்த நரகத்துக்கு நான் போவேன் என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன் = அறம் கெட முயன்றவன்

அருள் இல் நெஞ்சினன் = அருள் இல்லாத மனமுடையவன்

பிறன் கடை நின்றவன் = மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றவன்

பிறரைச் சீறினோன் = மற்றவர்கள் மேல் சீறி விழுந்தவன்

மறம் கொடு = சண்டையிட்டு

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

கொன்று வாழ்ந்தவன் = கொலை செய்து வாழ்பவன்

துறந்த = பற்றினை துறந்த

மாதவர்க்கு = பெரிய தவம் செய்தவர்களுக்கு

அருந் துயரம் = பெரிய துயரை

சூழ்ந்துேளான்.= செய்பவன்

இவர்கள் எல்லோரும் செல்லும் நரகத்துக்கு செல்வேன்


அறத்தை கெடுக்கக் கூட வேண்டாம்...கெடுக்க நினைத்தாலே நரகம் தானாம். இங்கே அறம்  என்பதற்கு கொடை , தானம் என்றும் கொள்ளலாம் அல்லது தர்மம், நியாயம் என்ற அறக் கோட்டபாடுகளையும் கொள்ளலாம்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

என்பது வள்ளுவம்.

பாவம் என்பது மற்றவர்களுக்குச் ஏதாவது கெடுதல் செய்தால் தான் என்று இல்லை. மனதில் அருள் இல்லாவிட்டாலும் பாவம் தான்.

நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாத உயிர்களிடத்து செலுத்தும் கருணைக்கு  அருள் என்று பெயர் என்பார் பரிமேலழகர். தெருவில் திரியும் நாய், பேருந்து நிலையத்தில் உள்ள  பிச்சைக்காரன், டிவி யில் எங்கோ யுத்தத்தில் அடிபடும் உயிர்களின் மேல் வரும் இரக்கம், இதற்கு அருள் என்று பெயர்.

அந்த கருணை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அந்த மாதிரி  கருணை.

"பிறன் கடை நின்றவன்" ... தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து   அவர்கள் வீட்டு வாசலில் நின்றவன் என்றும் கொள்ளலாம் அல்லது  மற்றவன் மனைவியை கவர நினைத்து அவன் வீட்டு வாசலில் நின்றவன் வேண்டும் கொள்ளலாம். இரண்டும் தவறு தான்.

இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான்.

அதன் முடிவில் ....