Showing posts with label Ara Neri Charam. Show all posts
Showing posts with label Ara Neri Charam. Show all posts

Saturday, February 10, 2024

அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை

 அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_10.html

எவ்வளவோ புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் எதைப் படிப்பது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கும். ஒரு நல்ல புத்தகத்தை எப்படி தேர்ந்து எடுப்பது? 


ஒரு நல்ல அற நூல் எதைச் சொல்லும் என்று பட்டியல் இடுகிறது அறநெறிச்சாரம். 


பாடல்  


மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்

செம்மை ஒன்று இன்மை துறவுடைமை - நன்மை

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன

அறம் பத்தும் ஆன்ற குணம்


பொருள் 


மெய்மை = உண்மையைப் பற்றி சொல்ல வேண்டும் 


பொறையுடைமை = பொறுமை பற்றி போதிக்க வேண்டும் 


மேன்மை =  பெருமை, புகழ் இவற்றைத் தருவதாக இருக்க வேண்டும் 


தவம் = தவத்திற்கு துணை செய்ய வேண்டும் 


அடக்கம் = புலன் அடக்கம் பற்றி சொல்ல வேண்டும் 


செம்மை = சிறப்பான வாழ்க்கை பற்றி போதிக்க வேண்டும் 


ஒன்று இன்மை = தன்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதின் பெருமை பேச வேண்டும் 


துறவுடைமை  = துறவின் நன்மைகளைச் சொல்ல வேண்டும் 


நன்மை = நல்லது செய்வதைப் பற்றிச் சொல்ல வேண்டும் 


திறம்பா விரதம் தரித்தலோடு = மாறுபாடு இல்லாத, தவறாத விரதம் மேற் கொள்வதைப் பற்றி விளக்க வேண்டும் 


இன்ன அறம் பத்தும் ஆன்ற குணம் = இந்த பத்து குணங்களும் நல்ல அறத்துக்கு எடுத்துக் காட்டு. 


ஒரு நல்ல புத்தகம் என்றால் இவற்றைப் பற்றி பேச வேண்டும், எடுத்துச் சொல்ல வேண்டும். 


இருக்கின்ற கொஞ்ச நாளை நல்ல புத்தகங்களை வாசிப்பதில் செலவு செய்வோம். 




Thursday, February 1, 2024

அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து

 அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து 


மிக வயதானவர்களைப் பார்த்தால் தெரியும். படுக்கையில் இருந்து எழுவது கூட அவர்களுக்கு பெரிய வேலையாகத் தெரியும். எழுந்து நாலடி எடுத்து வைப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். மற்றவர்கள் சொல்வது எதுவும் காதில் விழாது. படிப்பு என்பது சுத்தமாக இருக்காது.யார் என்ன சொன்னாலும் மிகச் சீக்கிரம் மறந்து விடும்....பார்க்கவே பரிதாபமாக இருக்கும். 


அந்த நேரத்தில் தேவாரம் படி, திருவாசகம் படி என்றால் நாக்கு குழறும், மனம் நிற்காது, உடல் எல்லாம் சோர்ந்து போய் இருக்கும். 


எப்படா போய்ச் சேருவோம் என்று இருக்கும். 



நமக்கும் அப்படி ஒரு நாள் கட்டாயம் வரும். அதில் இருந்து தப்ப முடியாது. 


நல்ல காரியங்களை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால், இதுதான் நிகழும். செய்யலாம் என்று நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


நாடி, நரம்பு எல்லாம் தளர்ந்த பின், அதை எடுத்து ஒட்டவைத்து ஓடவைத்து விடலாம் என்றால் நடக்காது. 


எனவே, உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்ல காரியங்களை செய்து விட வேண்டும். 


பாடல் 



அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்

உறங்குதல் காரணம் என்னை - மறந்து ஒருவன்

ஆட்டு விடக்கு ஊர்தி அச்சு இறும் காலத்துக்

கூட்டும் திறம் இன்மையால்


பொருள் 

அறம் புரிந்து  = அறச் செயல்களைச் செய்து 


ஆற்றுவ = செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஒழுங்கான முறையில் 


செய்யாது = செய்யாமல் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 


உறங்குதல் = தள்ளிப் போட்டுக் கொண்டே போவதன் 


காரணம் என்னை  = காரணம் என்ன?


மறந்து  = செய்ய வேண்டிய செயல்களை மறந்து 


ஒருவன் = பிரமன்  


நாட்டு =  படைத்த 


விடக்கு = இறைச்சியால் செய்யப்பட்ட 


ஊர்தி = வண்டி 


அச்சு இறும் காலத்துக் = அச்சு முறிந்து போன காலத்தில் 


கூட்டும் = அதை மீண்டும் சரி செய்யும் 


திறம் இன்மையால் = திறமை இல்லாது இருத்தல் 


வயதாகி உடல் தளர்ந்து விட்டால், பின் என்ன செய்தாலும் அது சரியாகாது. 


நல்ல விடயங்களை இளமையில் படித்தால், அதன் படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நன்மை வரும். 


பின்னால் படித்து, தெரிந்து, அதன் படி நடக்கலாம் என்றால் ஒன்றும் நடவாது. 


முதுமை கண்டு அச்சம் வேண்டும். 




Wednesday, January 31, 2024

அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார்

அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார் 



அறத்தின் சாரத்தை பிழிந்து தரும் நூல் அறநெறிச்சாரம். 


அற நூல்களை படிக்க எங்கே நேரம் இருக்கிறது. நம் நேரத்தை நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ள பல முனைகளில் போட்டி நடக்கிறது. தொலைகாட்சி, செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், முகநூல் என்று நேரம் போவதே தெரிவதில்லை. 


இது இன்று நடப்பது அல்ல. அன்றும் இதே நிலைதான். 


"அறம் அல்லதாவற்றைப் பற்றி பேசும் நூல்களும், காமம், ஆசை இவற்றை தூண்டி விடும் நூல்களும் நிறைந்து இருக்கும் இந்த உலகில், அறவுரையை கேட்கும் மனம் உள்ளவர்களே இந்த பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவார்கள்"


பாடல் 


மறவுரையும் காமத் துறையும் மயங்கிப்

பிறவுரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் கருத்துடை யோரே பிறவியை

நீக்கும் திருவுடை யார்


பொருள் 




மறவுரையும் = அறம் அல்லாதவற்றை சொல்லும் நூல்களும் 


காமத் துறையும் = காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் நூல்களும் 


மயங்கிப் = மயக்கம் கொள்ளச் செய்யும், அறிவை மழுங்கச் செய்யும் 


பிறவுரையும்  = மற்ற பிற நூல்களும் 


மல்கிய = பெருகிக் கிடக்கும் இந்த 


ஞாலத்து = உலகில் 


அறவுரை கேட்கும் = அற உரைகளை கேட்கும் 


கருத்துடை யோரே = அறிவு உள்ளவர்களே 


பிறவியை = பிறவிப் பிணியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடை யார் = பெருமை உடையவர்கள் 



பிறவிப் பிணியில் இருந்து விடுபட வேண்டுமா?  கண்டதையும் படிக்காமல் அற நூல்களை தேடிச் சென்று படியுங்கள் என்கிறது இந்தப் பாடல். 



Saturday, January 13, 2024

அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின்

 அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின் 



வேண்டாத விடயங்களை படிப்பது என்றால் நிறைய பேருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். நல்ல விடயங்களை படிப்பது என்றால் "அது ஒண்ணும் புரியாது, அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி விடுவார்கள். 


இது ஏதோ இன்று நேற்று நடப்பது அல்ல. காலம் காலாமாய் நடக்கும் சங்கதி. 


"தேவை இல்லாதவற்றைப் பற்றி கூறினால், ஆர்வமுடன் கேட்பார்கள்.  தேவையான, பயனுள்ள விடயங்களை கேட்க மாட்டார்கள். அது ஏதோ மெலிந்த உடம்பின் மேல் குளிர் காற்று வீசினார்ப் போல நடுங்குவார்கள், துன்பப் படுவார்கள். நல்ல விடயங்களை கேளுங்கள். படியுங்கள். அதன்படி நடங்கள். படித்து, அடக்கமுடன் நடந்து கொள்ளுங்கள்"


என்கிறது அறநெறிச்சாரம் 


பாடல் 


வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்

கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா

ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்

கூதற்குக் கூதி ரனைத்து.


பொருள் 


வேட்டவாய்க் = வேட்டு + அவாய் = வேட்கையுடன், ஆர்வத்துடன் 


கேட்பர் = கேட்பார்கள் 


விரைந்தோடி = விரைந்து ஒட்டி வந்து 


ஞாலத்தார் = ஞாலம் என்றால் உலகம். உலகில் உள்ளவர்கள் 


கேட்டைக் = கேடுதரும், பலன் இல்லாத 


கிழத்தியைப் = பெண்ணைப் பற்றி 


பாடுங்கால் = பாடும் பொழுது 


கோட்டில்லா = கோட்டம் என்றால் வளைவு. குற்றம். கோட்டில்லா என்றால் குற்றம் இல்லாத நூல்களைப்  


ஓதுமின் = மீண்டும் மீண்டும் படியுங்கள் 


அடங்குமின் = படித்த பின், புலன் அடக்கம் கொள்ள வேண்டும் 


என்னுஞ்சொல் = என்று கூறினால் 


கூதற்குக் = குளிர் காற்றில் 


கூதி ரனைத்து = நடுங்கிய உடல் மேல் 


அதாவது, நல்லதைப் படியுங்கள், அதன் படி நடவுங்கள் என்று சொன்னால், குளிர் காற்று அடித்தால் எப்படி உடல் வருத்தம் அடையுமோ, அது போல வருந்துவார்கள். 


ஏதோ ஒரு நடிகை பற்றிய கிசு கிசு என்றால் அதை ஆர்வமாகப் படிப்பார்கள். 


ஓதுதல் என்றால் திரும்ப திரும்பச் சொல்லுதல். ஓதுவார் என்றால் தினமும் கோவில்களில் பாடல்களைப் படிப்பவர். 


நல்ல புத்தகங்களை ஒரு முறை வாசித்துவிட்டு, படித்துவிட்டேன் என்று சொல்லக் கூடாது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். எனவே "ஓதுமின்" என்றார். 





Thursday, December 7, 2023

அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு 


எந்த ஒன்றையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எதனால் ஆக்கப்பட்டது என்று அறிய வேண்டும். ஒரு பொருள் என்றால் அது பல சிறிய பொருள்களின் தொகுப்பு. அந்த சிறிய பொருள்கள் அதனினும் சிறிய பொருள்களின் தொகுப்பு. இப்படி பகுத்துக் கொண்டே போனால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் அடிப்படையில் சில மிக நுண்ணிய துகள்களின் தொகுப்பு என்று அறிய முடியும். அந்தத் துகள்களின் தொகுப்புதான் உலகம். 


பிரித்தால்தான் ஆராய முடியும். 


தமிழர்கள் எதையும் சரியான படி பிரித்து, அந்தப் பிரிவுகளின் தன்மைகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். 


வாழ்வின் நோக்கம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளை உடையது. 


தமிழ் - இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகளை உடையது. 


வாழ்க்கை - அகம், புறம் 


அறம் - இல்லறம், துறவறம் 


சுவை - ஆறு சுவை


இசை - ஏழு ஸ்வரங்கள் 


நிலம் - ஐந்து பிரிவு 



இப்படி சரியான படி பிரித்தால், எதையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் 


அறத்தின் பிரிவுகள் என்ன ?


அறத்திற்கு நான்கு கூறுகள் என்கிறது அறநெறிச்சாரம். 


அறத்தை சொல்பவன், அதைக் கேட்பவன், சொல்லப்படும் உரை, அதனால் வரும் பயன். 


இந்த நான்கும் அறத்தின் கூறுகள். 


இந்த நான்கிலும், நல்லது, கெட்டது இருக்கும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தள்ளிவிட வேண்டும். 


பாடல் 



உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ

  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி

  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்

  வான்மையின் மிக்கார் வழக்கு.


பொருள் 




(please click the above link to continue reading)


உரைப்பவன் = அறத்தை போதிப்பவன் 


கேட்பான் = அதைக் கேட்கும் மாணவன் 


உரைக்கப் படுவது = சொல்லப்பட்ட அறம் 

 

உரைத்தனா லாய பயனும் = அந்த அறத்தினால் உண்டாகும் பயன் 


புரைப்பின்றி = குற்றம் இன்றி 


நான்மையும் = இந்த நான்கிலும் 


போலியை நீக்கி = நல்லன அல்லாதவற்றை நீக்கி 


அவைநாட்டல் = நல்லதை நிலை நிறுத்துதல் 


வான்மையின் மிக்கார் வழக்கு = ஒழுக்கத்தில் சிறந்தோரது இயல்பு 


அறம் என்பது பயன் நோக்கியது என்று புரிந்து கொள்ள வேண்டும். பலன் இல்லாமல் அறம் செய்வதில் அர்த்தம் இல்லை. 


அறம் சில சமயம் காலத்தோடு ஒன்றாமல் போகலாம். என்றோ சொன்ன அறத்தை காலகாலத்துக்கும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை. 


சொல்பவன், கேட்பவன், சொல்லப்படும் அறம், பலன்  - இந்த நான்கிலும் குற்றம் வரலாம் என்கிறது. 


அறத்தில் எப்படி குற்றம் வர முடியும் ?


குறை என்றால், காலத்தோடு ஒவ்வாத அறங்கள். பெண்ணைக் கொல்வது என்பது அறம் அற்ற செயல். இராமன், தாடகை என்ற பெண்ணைக் கொன்றான். அது அறம் வழுவிய செயலா?  தாடகை என்பவள் பெண் உருவில் இருந்தாளே அன்றி பெண்ணின் குணங்கள் இல்லாதவள். அங்கே அறத்தை கொஞ்சம் விரித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. 


குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்றவை ஒரு காலத்தில் அறம் எனக் கருதப்பட்டது. அதை இப்போது கடைபிடித்தால் அது குற்றம். காலத்தோடு மாற வேண்டும். 


இந்த சொல்பவன், கேட்பவன் இவற்றில் என்ன குற்றம் வந்து விடும்?


பின்னால் அவற்றை விளக்குகிறது இந்த நூல். 


மேலும் சிந்திப்போம். 


 


Tuesday, December 5, 2023

அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்

 அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் 


இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம் போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்கிறீர்களே, யார் செய்த புண்ணியமோ. 


அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், யார் சொல்லக் கூடாது, யாருக்குச் சொல்லக் கூடாது, அறத்தின் பயன் என்ன, அதை எப்போது செய்ய வேண்டும் என்று அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப்  பிரித்துத் தருகிறது. 


அறம் என்றால் என்ன, அதை நம்மவர்கள் எப்படி கடைப் பிடித்தார்கள், நமது கலாச்சாரம் என்ன, என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். 


முழு நூலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. 


முதலாவதாக, 


"இந்த உலகில் பாவத்தை எடுத்து உரைக்கும் நூல்கள் பல இருக்கின்றன. காமம், ஆசை இவற்றைத் தூண்டும் நூல்கள் பல இருக்கின்றன. அது போல இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத நூல்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நூலை படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களே, நீங்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்தான்" 


என்று கூறுகிறது. 


பாடல் 


மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 

பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்.



பொருள் 




(please click the above link to continue reading)


மறவுரையும் = அறம் அல்லாத உரைகளையும் (பாவத்தைத் தூண்டும்) 


காமத் துரையும் = காமத்து உரையும் = காமம், ஆசை பற்றி பேசும் நூல்களும் 


மயங்கிய = குழப்பம் தரும் 

 

பிறவுரையும் = பிற நூல்களும் 


மல்கிய = நிறைந்த 


ஞாலத்-= இந்த உலகில் 


தறவுரை = அறவுரையை 


கேட்கும் = கேட்கப் பிரியப் பட்டு வந்துள்ள நீங்கள் 


 திருவுடை யாரே = புண்ணியம் செய்தவர்களே 


பிறவியை = இந்தப் பிறவியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடையார் = புண்ணியம் உள்ளவர்கள் 


அறவுரையை கேட்பவர்கள் புண்ணியம் பண்ணியவர்கள். அவர்களே இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபடும் பேறு பெற்றவர்கள். 


அரவுரையைக் கேட்டாலே போதும். அது உள்ளே போகும். மனதில் படியும். சொல்லில், செயலில் கட்டாயம் வெளிப்படும். தவறு செய்வதை மனசாட்சியாக நின்று தடுக்கும். 


வீட பேற்றுக்கு வழி செய்யும். 


aஅந்தக் காலத்திலேயே குப்பைப் புத்தகங்கள் இருந்து இருக்கு. நல்ல புத்தகங்கள், குப்பை புத்தகங்கள் என்று இருக்க வேண்டும் என்றால் மொழியும், மொழி வழி எண்ணங்களை புத்தக வடிவில் பகிர்ந்து கொள்ளும் முறையும் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும் !


புத்தகம் என்று சொல்லவில்லை...உரை என்று சொல்கிறது. ஓலைச் சுவடிகளோ, அல்லது வேறு எந்த விதத்திலோ இவை எல்லாம் இருந்திருக்கின்றன. 


சிறந்த புத்தகங்களை தேடிப் பிடித்து படிப்பது என்பது ஒரு கலை. 


முதலில் புத்தகங்களை கண்டு பிடிக்க வேண்டும். பின் படிக்க வேண்டும். பின், அவை புரிய வேண்டும். பின் அதன் படி நடக்க வேண்டும்....







 

Wednesday, February 10, 2021

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு


சிலர் எவ்வளவோ படிப்பார்கள். கேட்பார்கள். இருந்தாலும் வாழ்வில் ஒரு மாற்றமும் இருக்காது. கேட்டால், " அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்பார்கள்". நடைமுறையில் ஒத்து வருமா வராதா என்பது நடைமுறையில் கடை பிடித்தால்தானே தெரியும். ஆரம்பிக்கும் முன்னாலேயே அது சரி வராது என்றால் எப்படி?  


எதுவுமே நடைமுறையில் கடினம்தான். ஆனால், அதை செயல்படுத்தத் தொடங்கினால் அதில் ஒரு பற்றும் பிடிப்பும் வந்து விடும்.  பின் அதை விடுவது கடினமாகி விடும். 


ஆனால், சிலர் எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும் ஒன்றும் நடக்காது. தண்ணீரில் ஒரு கல் எவ்வ்ளவு நாள் மூழ்கிக் கிடந்தாலும், அது மென்மையாகாது. பாசி பிடிக்கும். ஆனால் மென்மையாகாது. எவ்வளவு படித்தாலும், கீழ் மக்கள் மனம் மாறவே மாறாது. 


மணிவாசகர் தன்னை நாய் என்று குறிப்பிட்டுக் கொள்வார். காரணம், நாயை எவ்வளவுதான்  குளிப்பாட்டி, சாம்பிராணி போட்டு, அழகு படுத்தி வைத்தாலும், அதன் மனம் என்னவோ வேறு இடத்தில்தான். 


பாடல் 

 வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு

மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்

வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்

கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_10.html


click to contitnue

 வைகலு  = ஒவ்வொவரு நாளும் 

நீருட் கிடப்பினும் = நீரின் உள் கிடப்பினும் 

கல்லிற்கு = பாறாங் கல்லுக்கு 

மெல்லென்றல் = மென்மையாக மாறுவது 

சால அரிதாகும் = மிகவும் கடினமான செயல் 

அஃதேபோல் = அதே போல 

வைகலும் = தினமும் 

நல்லறம் = நல்ல அறங்களை 

கேட்பினுங் = கேட்டாலும் 

கீழ்கட்குக் = கீழ் மக்களுக்கு 

கல்லினும் = கல்லை விட 

வல்லென்னும் நெஞ்சு. = வன்மையானது மனது 


யார் கீழ்மக்கள் என்றால், நல்ல அறங்களை படித்தும் கேட்டும், அதன் படி நடக்காமல்  இருப்பவர்கள். 




Thursday, July 23, 2015

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் 


படிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

எங்க நேரம் இருக்கு ? காலைல எந்துரிச்சா இராத்திரி படுக்க போற வரை நேரம் சரியா இருக்கு. இதுல நல்ல நூல்களை எங்க படிக்க நேரம் இருக்கு. எல்லாம் retire ஆனப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.

யாருக்குத் தெரியும், கூற்றுவன் எப்போது ஓலை கொண்டு வருவான் என்று.

இப்பவே ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே ரொம்ப லேட்டு. இன்னும் காலம் தாழ்த்தாமல் , இன்றே தொடங்கிவிடுங்கள்.

பாடல்

மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.

சீர் பிரித்த பின்

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து 
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத் 
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் 
அணித்தாய் வருந்தலும் உண்டு 

பொருள்

மின்னும் = மின்னலைப் போன்ற

இளமை = இளமை

உளதாம் = எப்போதும் உள்ளது

என மகிழ்ந்து = என்று மகிழ்ந்து

பின்னை அறிவன் என்றால் = பின்னால் அறிந்து கொள்ளலாம் என்றால்

பேதைமை = அது முட்டாள்தனம்

தன்னைத் = தன்னையே

துணித்தானும் = வெட்டினாலும். இங்கே, வருத்தினாலும் என்று பொருள் கொள்வது சரியாக  இருக்கும்.

தூங்காது அறம் செய்க = காலம் தாழ்த்தாமல் அறம் என்பது என்ன என்று அறிந்து அதன் வழி நிற்க

கூற்றம் = எமன்

அணித்தாய் = இளமை பருவத்திலும்

 வருந்தலும் உண்டு  = வருவது உண்டு. வயதான பின் தான் மரணம் வர வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை.  எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


மின்னும் இளமை....மின்னல் மிகப் பிரகாசமாக இருக்கும். கண் கூசும். மிக பலம் வாய்ந்தது. இருந்தாலும், மிக சொற்ப நேரமே இருக்கும். இளமையும் அப்படித்தான். ஆரவாரமாய் இருக்கும். சட்டென்று முடிந்து விடும். 

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை 
தளர்விளராகில் சார்வது சதிரே.  என்பார் நம்மாழ்வார். 

கிளர்ந்து எழும் இளமை. எதுனாலும் நான் செய்கிறேன் என்று முன்னால் வந்து நிற்கும் இளமை. அது முடிவதற்குள் , தளர்ந்து போவதன் முன்னம் திருமாலிருஞ்சோலைக்கு வாருங்கள் என்கிறார். இளமை போன பின், முட்டு வலிக்கும், முதுகு வலிக்கும், மலை ஏற முடியாது. உடம்பு நம் சொற்படி கேட்கும்போதே  திருத் தலங்களுக்கு சென்று வந்து விடுங்கள். அப்புறம் ஒரு வேளை முடியாமல்  போனாலும் போகலாம். 

இளமையிலேயே நல்லவற்றை செய்து விடுங்கள். 


Wednesday, July 8, 2015

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம்

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம் 


வாழ் நாள் எல்லாம் எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

செல்வம், உறவு, அனுபவம் என்று எதையாவது சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு வீடு இருந்தால் இன்னொன்று. கொஞ்சம் பணம் இருந்தால் இன்னும் கொஞ்சம். இன்னும் கொஞ்சம் அனுபவம்...

மேலும் மேலும் சேர்ப்பது இன்பமா ?

 சரி,இன்பமாகவே  இருந்து விட்டுப் போகட்டும்.

இன்னொரு விதமான இன்பம் இருக்கிறது தெரியுமா ? அது இருப்பதை குறைப்பது. இது வேண்டாம், அது வேண்டாம் என்று இருப்பதை துறப்பதும் ஒரு இன்பம் என்கிறது அறநெறிச்சாரம்.

நமக்குத் தெரியாது அந்த இன்பம் எப்படி இருக்கும் என்று. முயன்று பார்க்கலாம்.

முதலில் நமக்கு தீமை தருபவைகளை .துறக்கலாம்...புகை பிடித்தல், மது, இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் என்று துறக்கலாம். இவற்றை கொள்வது சுகம்தான்  என்றாலும் துறத்தல் அதைவிட இன்பம்  பயக்கும்.

பாடல்

நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் 
இன்பத் தியல்பறி யாதார்.

சீர்  பிரித்த பின்

நீக்க அருநோய், மூப்பு, தலைப்பிரிவு, நல்குரவு,
சாக்காடு என்று ஐந்து  களிறு உழக்கப்--போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர்  துறந்து எய்தும்  
இன்பத்து இயல்பு அறியாதவர்.


பொருள் 

நீக்க அருநோய் = நீக்க முடியாத கடுமையான நோய்

மூப்பு = மூப்பு

தலைப்பிரிவு = நெருங்கிய உறவின் பிரிவு (மனைவி, கணவன், பிள்ளைகள்)

நல்குரவு = வறுமை

சாக்காடு = இறப்பு

என்று ஐந்து = என்ற ஐந்து

களிறு உழக்கப் = யானைகள் மிதித்து நசுக்க 

போக்க அரிய = வெளியேற முடியாத

துன்பத்துள் துன்பம் உழப்பர் = துன்பத்தில் கிடந்து வருந்துவர்

துறந்து எய்தும் = துறவினால் அடையும்
 
இன்பத்து இயல்பு அறியாதவர் =இன்பத்தின் இயல்பை அறியாதவர்கள்.

எதை எதை விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றினால் நமக்கு துன்பம் இல்லை. 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். (இந்தக் குறளில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன என்றால், இந்தக் குறளை படிக்கும் போது உதடு ஒட்டாது. நீங்குதல் என்று வந்தபின் உதடு மட்டும் ஒட்டுவானேன் என்று வள்ளுவர் அப்படி ஒரு குறளை எழுதி இருக்கிறார் )

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், எந்தத் துன்பமும் இல்லை. 

எல்லாவற்றையும் விட முடியுமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சிப்போம். எவ்வளவு விடுகிறோமோ அவ்வளவு சுகம். 


Thursday, July 2, 2015

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?


யார் உறவினர் ?

பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள் எல்லாம் உறவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு உண்மையான உறவு யார் தெரியுமா ?

நல்ல அறம் - தந்தை
நிறைந்த அறிவு - தாய்
நன்கு உணரும் கல்வி = தோழன்
துணிவு - தம்பி

இவை இல்லாத மற்றைய உறவுகள் பொய் உறவுகளே என்கிறது அறநெறிச்சாரம்.

பாடல்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

சீர் பிரித்த பின்

நல்ல அறம் என் தந்தை நிறை என் அம்மை நன்கு உணரும்  
கல்வி என் தோழன் துணிவு என் தம்பி -அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

பொருள்

நல்ல அறம் என் தந்தை = நல்ல அறம் எனக்குத் தந்தை

நிறை என் அம்மை = நிறைவு, திருப்தி, அமைதி - என் தாய் 

நன்கு உணரும்  கல்வி என் தோழன் = கல்வியே எனக்குத் தோழன்

துணிவு என் தம்பி = என்னுடைய துணிவே எனக்குத் தம்பி

 அல்லாத = இவை அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  = பொய்யான சுற்றத்தாரும் ஒரு பொருளா ? (இல்லை).

பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு = உண்மையான பொருளான இந்தத் சுற்றத்தாரில் எனக்கு
.

நமக்கு உறவு நாம் தான். அறம்தான் நம்மை வழி நடத்தும் தந்தை. நிறைவான , அமைதியான, திருப்தியான மனமே நமக்குத் தாய். நம் கல்வியே நமக்குத் தோழன். நம் துணிவே நமக்குத் தம்பி (உடன் பிறப்பு)

இதை விட்டு வெளியே சொந்தங்களைத் தேடுவது துன்பத்தைத் தான் தரும்.

நமக்கு நாமே உறவு.







Tuesday, June 30, 2015

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?


உங்களின் நல்ல நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் தருவீர்கள்.

நல்ல நண்பன் என்றால் யார் ?

ஆபத்துக்கு உதவுபவன், நம்ம வீட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் கூட இருந்து உதவி செய்பவன், நம் அந்தரங்கங்கள் தெரிந்தவன், நமக்கு சமயத்தில் புத்தி சொல்லுபவன் என்று ஒரு கணக்கு வைத்திருப்போம்.

இதுதான் சரியான கணக்கா ?

நல்ல நண்பன் என்றால் யார் என்று அறநெறிச்சாரம் சொல்கிறது....

"இந்தப் பிறவியில் நம் புலன் அடக்கத்திற்கு உதவி செய்து, நாம் புகழ் அடைய துணை செய்து, மறுமையில் உயர்த கதிக்கு உயர்த்த பாடு படும் நல்ல குணம் உள்ளவரே நண்பர் என்று சொல்லப் படுவார்கள் "

பாடல்

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.

சீர் பிரித்த பின்

இம்மை அடக்கத்தைச் செய்து  புகழ் ஆக்கி 
உம்மை உயர் கதிக்கு உய்தலால் -மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும்  பண்புடையாளரே
நாட்டார் எனப் படுவார்.

பொருள்

இம்மை  - இந்தப் பிறவியில்

அடக்கத்தைச் செய்து = புலன் அடக்கத்திற்கு வழி செய்து

புகழ் ஆக்கி = நமக்கு புகழ் உண்டாகும் படி செய்து

உம்மை = மறு பிறப்பில்

உயர் கதிக்கு  = வீடு பேற்றை அடைய

உய்தலால் = வழி செய்து

மெய்ம்மையே = உண்மையிலேயே

பட்டாங்கு = உலகில்

அறம் உரைக்கும் = அறத்தை கூறும்

பண்புடையாளரே = நல்ல பண்பு உள்ளவர்களே

நாட்டார் எனப் படுவார் = நண்பர்கள் என்று கூறப் படுவார்கள்.

எனவே நண்பன் என்று சொல்லுவதற்கு என்னென்ன குணம் வேண்டும் ?

- புலன் அடக்கத்திற்கு வழி செய்ய வேண்டும்.  "வாடா , தண்ணி அடிக்கப் போகலாம், தம் அடிக்கப் போகலாம்" என்று கூட்டிக் கொண்டு போகக் கூடாது.

- புகழ் அடைய வழி செய்ய வேண்டும் - புகழ் எப்படி வரும் ? கடின உழைப்பு, புத்திசாலித் தனம் போன்றவை இருந்தால் புகழ் வரும். தவறு செய்யாமல் இருந்தால் புகழ் வரும்.  வாய்மையை கடை பிடித்தால் புகழ் வரும். நல்ல ஒழுக்கம் இருந்தால் புகழ் வரும்.



- மறு பிறப்பில் உயர் கதி அடைய வழி காட்ட வேண்டும்

- நல்ல அறங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்

- நல்ல பண்பு உள்ளவனாக இருக்க வேண்டும்.

உங்கள் நண்பர்களை விடுங்கள்.

நீங்கள் எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட நல்ல நண்பனாக , நண்பியாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று வரை இல்லாவிட்டால் என்ன, நாளை முதல் இப்படி இருக்கப் பாருங்கள்....




Tuesday, June 23, 2015

அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?

அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?


ஒரு புத்தகத்தை படித்து முடிக்க மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம். ஒரு வருடத்தில் பத்து அல்லது பன்னிரண்டு புத்தகங்கள் வாசித்து முடிக்கலாம்.

ஒரு அம்பது வருடம் தொடர்ந்து வாசித்து வந்தால் 500 முதல் 600 புத்தகங்கள் அதிக பட்சம் வாசிக்கலாம்.

இருக்கின்ற புத்தககளோ கோடிக்கணக்கில்.

இனி வரப் போகும் புத்தகங்களோ கணக்கில் அடங்காதவை.

இவற்றில், எதைப் படிப்பது, எதை விடுவது  என்று மலைப்பாக இருக்கும்.

இருக்கின்ற கொஞ்ச நாளில் மிக மிக சிறந்த நூல்களை வாசிக்க வேண்டும்.

எது சிறந்த நூல், அதை எப்படி தேர்ந்து எடுப்பது என்று அறநெறிச்சாரம் சொல்கிறது.

ஒரு புத்தகத்துக்கு நீங்கள் இரண்டு விலை கொடுக்கிறீர்கள்.

ஒன்று, அந்த புத்தகம் வாங்க கடைகாரனுக்கு தரும் விலை. இது மிக மிக சிறய விலை.

இரண்டாவது, அந்த புத்தகத்தை நீங்கள் படிக்க செலவழிக்கும் உங்களின் மதிப்பு மிக்க நேரம். இது, மிக மிக அதிகமான விலை.

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வினாடி நேரம் கூட நம்மால் அதிகமாக சம்பாதிக்க முடியாது.

எனவே, மிக மிக விலை கொடுத்து ஒரு புத்தகத்தை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிகமான விலை கொடுத்துதங்கத்தை வாங்குபவன் எப்படி வாங்குவான் ?

அதை நிறுத்து, அதை வெட்டிப் பார்த்து, நெருப்பில் சுட்டு, கல்லில் உரைத்து தங்கத்தை வாங்குவதைப் போல, நல்ல நூல்களை தரம் பார்த்து வாங்க வேண்டும்.

தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் இப்படி வாங்க வேண்டும்.

புத்தகங்களில் தங்கம் போல உயர்ந்தவை எது ?

 இந்த பிறவி என்ற பந்தத்தை அறுக்கும் நூல்களே தங்கம் போல உயர்ந்த நூல்கள். அந்த மாதிரி நூல்களை தேடிப்  பிடித்து படிக்க வேண்டும்.

பாடல்


நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.


பொருள்

நிறுத்தறுத்துச் = நிறுத்து , அறுத்து

சுட்டுரைத்துப் = சுட்டு (தீயில்) , உரைத்து (கல்லில்)

பொன் கொள்வான் போல = பொன்னை (தங்கத்தை) வாங்குபவன் போல

அறத்தினும் = அற நூல்களையும்

ஆராய்ந்து புக்கால் = ஆராய்ந்து பார்த்தால்

பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும்

மெய்ந்நூல் = உண்மையை உரைக்கும் நூல்கள்

தலைப்பட லாகும் = கிடைக்கும்

மற் றாகாதே = மற்று ஆகாதே

கண்ணோடிக் கண்டதே கண்டு = கண்ணால் கண்ட நூல்களை எல்லாம் வாங்கக் கூடாது.


அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அழித்து பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர் 

என்பார் அருணகிரி.

பிறக்காமல் இருக்க உதவும் நூல்களை படியுங்கள் , தவறு இல்லாமால் அன்போடு படியுங்கள்  என்கிறார்.

இதையே வள்ளுவரும்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

குறள் விளக்கம்

நல்ல நூல்களை கற்று அதன் உண்மையான பொருள்களை அறிந்தவர் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியை அறிவார்கள் என்கிறார்.

அடுத்த முறை வார பத்தரிகைகள், மாத நாவல்கள்,  சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், மர்ம நாவல்கள், என்று வாங்குமுன் சற்று சிந்தியுங்கள்.

அவை பிறப்பறுக்கும் நூல்களா என்று ?

Sunday, June 21, 2015

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும்

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும் 


துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த இடத்தை தந்திருக்கிறது.

நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர்.

அப்படி என்ன துறவிகளுக்குப் பெருமை ?

மனித மனம் மயக்கமுறும் தன்மை கொண்டது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாமல் தடுமாறும் இயல்பு கொண்டது. எது சரி, எது தவறு என்று தெரியாமல் மயங்கும்போது யாரிடம் போய் கேட்பது ? யார் நமக்கு சரியான வழியை காட்டுவார்கள் ?

தனி மனிதன் மட்டும் அல்ல, சில சமயம் சமுதாயமே குழம்பி தவிக்கும் ?

இன்றும் கூட சமுதாயம் அப்படி பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

உதாரணமாக ஒரே இனத்தில் உள்ளவர்கள்  (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ) திருமணம் செய்து கொள்ளலாமா ? துப்பாக்கி வைத்துக் கொள்ளலாமா ? விவாகரத்து சரியான தீர்வா ? என்று பல சிக்கல்களில் கிடந்து உலகம் உழல்கிறது.

யாரை கேட்டு உலகம் தெளிவு பெற முடியும் ?

துறவிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகு பாடு கிடையாது...ஆசை கிடையாது , நாம்  செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இலாபமும் இல்லை , நட்டமும் இல்லை.

எனவே, அறிவுரை பெற சமுதாயமும், தனி மனிதர்களும் அவர்களிடம் போய் நின்றார்கள்.

அப்படி அறிவுரை சொல்லத் தக்கவர்கள் யார் என்று அறநெறிச்சாரம் கூறுகிறது.


பாடல்

அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.

சீர் பிரித்த பின்

அறம் கேட்டு அருள் புரிந்து  ஐம்புலன்கள் மாட்டும்
 இறங்காது  இருசார் பொருளும்-துறந்து அடக்கி 
 மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேல் 
 பன்னுதற்குப் பாற் பட்டவன்.

பொருள்

அறம் கேட்டு = பல அற நூல்களை  கேட்டு அறிந்து

அருள் புரிந்து = அருள் புரியும் நோக்கத்தோடு

 ஐம்புலன்கள் மாட்டும் = ஐந்து புலன்களின் பால்

 இறங்காது = சாராமல்

 இருசார் பொருளும் =   அகப்பற்றையும் புறப் பற்றியும்

துறந்து = துறந்து

அடக்கி = புலன்களை அடக்கி

மன்னுயிர்க்கு  = உயிர்களுக்கு

உய்ந்து போம் = பிறவிப் பிணியில் இருந்து விட்டு வீடு பெற

வாயில் = வழியை

உரைப்பானேல் = உரைப்பவனே

பன்னுதற்குப் = அற உரைகளை சொல்லப்

பாற் பட்டவன் = நல்லவன்


அறவுரை சொல்வதற்கு இத்தனை தகுதிகள் வேண்டும் என்கிறது அறநெறிச் சாரம். 

முதலில் , தெளிந்த அறிவு 

இரண்டாவது, புலனடக்கம் 

மூன்றாவது, உயிர்கள் மேல் அருள் 

நான்காவது , உயிர்கள் வீடு பேறு பெற வேண்டும் என்ற சிந்தனை 

இவை நிறைந்தவனே அறவுரை சொல்லச் சிறந்தவன்.

பிறர் சொல்லும் அறிவுரையை கேட்பதன் முன்னம்,  அவர்களுக்கு இந்த தகுதி இருக்கிறதா  என்று பாருங்கள்.




Tuesday, June 16, 2015

அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு 


யாரைப் பார்த்தாலும் அறிவுரை வழங்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுவும் கொஞ்சம் வயசு ஆகிவிட்டால் , அதுவே ஒரு தகுதி போல அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

யார் சொல்வதை  கேட்பது ? எதை கேட்பது ? எதை விடுவது ? என்ற குழப்பம் நமக்கு வரும்.

அவர்கள் சொல்வது சரிதானா என்று எப்படி அறிந்து கொள்வது ? இல்லை என்றால் பெரியவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?

அறநெறிச்சாரம் சொல்கிறது.

அற உரைக்கு நான்கு முக்கியமான தேவகைள் இருக்கின்றன.

முதலாவது - சொல்பவன்

இரண்டாவது -   கேட்பவன்


மூன்றாவது - சொல்லப்படுவது

நாலாவது - சொன்னதால் விளையும் பயன்
   
இந்த நான்கிலும் உள்ள குறைகளை நீக்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாடல்

 உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.

பொருள்

உரைப்பவன் = சொல்பவன். கண்ட சாமியார் சொல்வதையும் கேட்கக் கூடாது. 

கேட்பான்  = கேட்பவன்

உரைக்கப்படுவது = சொல்லப் படுவது

உரைத்தனா லாய பயனும் = சொன்னதால் ஆன பயனும்

புரைப்பின்றி = குற்றம் இன்றி

நான்மையும் = இந்த நான்கிலும்

போலியை நீக்கி = குறைகளை நீக்கி

அவைநாட்டல் = அவற்றை எடுத்துக் கொள்ளுதல்

வான்மையின் மிக்கார் வழக்கு = அற நெறியில் நின்றவர்களின் வழி


யாரோ சொன்னார்கள் என்பதற்காக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

இப்படி ஒரு நூல் யாருக்குக் கிடைக்கும் ? நான் சொல்கிறேன் என்பதற்காக  நீ இவற்றை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீயே ஆராய்ந்து பார்த்து  சரி என்றால் ஏற்றுக் கொள் என்று சொல்லும் துணிவும் நம்பிக்கையும் உள்ள புத்தகம் அறநெறிச்சாரம்.

அதைப் படிக்க வேண்டுமா இல்லையா ?


Sunday, June 14, 2015

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்


நம் முன்னால் எத்தனை விதமான நூல்கள் இருக்கின்றன.

ஒரு புத்தகக் கடைக்குப் போனால் என்னென்ன வகை புத்தகங்கள் இருக்கின்றன ?

மர்ம நாவல்கள், சண்டை நாவல்கள், thrillers , என்று ஒரு வகை.

ஆசையை தூண்டும், காமத்தை தூண்டும், வகையான நூல்கள் இன்னொரு வகை.

இது போக மக்களை குழப்பும் ஏனைய நூல்கள். வாரப் பத்திரிகைகள், மாத நாவல்கள், என்று பலவிதமான நூல்கள்.

"மக்களை நல் வழிப் படுத்த, மக்களின் நிலையை உயர்த்த, மக்களுக்கு நல்லது கெட்டதை சொல்ல உள்ள புத்தகங்கள் மிக மிக குறைவு. அவற்றை தேடி கண்டு பிடித்து படிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவர்களே பிறவி என்ற துன்பத்தை கடந்து போகும் பேறு பெற்றவர்கள்."


பாடல்

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

சீர் பிரித்த பின்

மற உரையும்  காமத்து உரையும் மயங்கிய 
பிற உரையும் மல்கிய ஞாலத்து அற உரை 
கேட்கும் திரு உடையோரே பிறவியை
நீக்கும் திரு உடையோர் .

பொருள்

மற உரையும் = சண்டை, சச்சரவு, அடி தடி என்று உரைக்கும் நூல்கள்

காமத்து உரையும் = காமம் மற்றும் ஆசையைத் தூண்டும் நூல்களும்

மயங்கிய = அறிவை மயக்கும்

பிற உரையும் = மற்ற பிற நூல்களும்

மல்கிய = நிறைந்து கிடக்கும்

ஞாலத்து = இந்த உலகில்

அற உரை = அறத்தை சொல்லும் நூல்களை

கேட்கும் = படித்தும் , கேட்டு அறியும்

திரு உடையோரே = புண்ணியம் உடையவர்களே

பிறவியை நீக்கும் = பிறவியை நீக்கும்

திரு உடையோர் = புண்ணியம் உடையவர்கள்

குப்பைகளை தள்ளி விட்டு, நல்லதை தேடி, கண்டு பிடித்து, படியுங்கள்.

பிறவி பிணியை போக்கும் அரு மருந்து அதுவே ஆகும்.