Thursday, July 2, 2015

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?


யார் உறவினர் ?

பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள் எல்லாம் உறவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு உண்மையான உறவு யார் தெரியுமா ?

நல்ல அறம் - தந்தை
நிறைந்த அறிவு - தாய்
நன்கு உணரும் கல்வி = தோழன்
துணிவு - தம்பி

இவை இல்லாத மற்றைய உறவுகள் பொய் உறவுகளே என்கிறது அறநெறிச்சாரம்.

பாடல்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

சீர் பிரித்த பின்

நல்ல அறம் என் தந்தை நிறை என் அம்மை நன்கு உணரும்  
கல்வி என் தோழன் துணிவு என் தம்பி -அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

பொருள்

நல்ல அறம் என் தந்தை = நல்ல அறம் எனக்குத் தந்தை

நிறை என் அம்மை = நிறைவு, திருப்தி, அமைதி - என் தாய் 

நன்கு உணரும்  கல்வி என் தோழன் = கல்வியே எனக்குத் தோழன்

துணிவு என் தம்பி = என்னுடைய துணிவே எனக்குத் தம்பி

 அல்லாத = இவை அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  = பொய்யான சுற்றத்தாரும் ஒரு பொருளா ? (இல்லை).

பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு = உண்மையான பொருளான இந்தத் சுற்றத்தாரில் எனக்கு
.

நமக்கு உறவு நாம் தான். அறம்தான் நம்மை வழி நடத்தும் தந்தை. நிறைவான , அமைதியான, திருப்தியான மனமே நமக்குத் தாய். நம் கல்வியே நமக்குத் தோழன். நம் துணிவே நமக்குத் தம்பி (உடன் பிறப்பு)

இதை விட்டு வெளியே சொந்தங்களைத் தேடுவது துன்பத்தைத் தான் தரும்.

நமக்கு நாமே உறவு.







1 comment:

  1. அருமையான பாடல்! இதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete