Showing posts with label aindhinai aimbadhu. Show all posts
Showing posts with label aindhinai aimbadhu. Show all posts

Saturday, July 26, 2014

ஐந்திணை ஐம்பது - கேட்க நினைத்தது ஒன்று உண்டு

ஐந்திணை ஐம்பது -  கேட்க நினைத்தது  ஒன்று உண்டு 


காதலை சொல்வது ஒன்றும் அத்தனை எளிதான செயலாகத் தெரியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை அது வயிற்றிக்குள் அமிலம் வார்க்கும் சங்கடமாகத்தான் இருந்து வந்து இருக்கிறது.

ஆசை ஒரு புறம், பயம் ஒரு புறம், காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம், சொல்லாமல் இருந்தால் பின் எப்படிதான் சம்மதம் பெறுவது என்ற சந்தேகம் ஒரு புறம்...

பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த அவஸ்தை.

சங்க காலத்தில் ஒரு நிகழ்வு.

அவளும், அவளின் தோழியும் பயிரை பறவைகள் அண்டாமல் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவன் அந்தப் பக்கம் வருகிறான். பார்த்த உடன் காதல். அல்லது பல நாள் பார்த்து வந்திருக்கலாம். இன்று எப்படியாவது பேசி விடுவது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சென்று கேட்டே விடுகிறான்

"மான் இந்தப் பக்கம் வந்ததா" என்று.

சொல்ல நினைத்தது அவன் காதலை.

 கேட்க்க நினைத்தது அவளின் சம்மதத்தை

சொல்லி நின்றது " மான் இந்த இந்தப் பக்கம் வந்ததா " என்று.

தோழிக்கு தெரியாதா என்ன ?

தலைவியிடம் சொல்கிறாள்....அவன் கேட்டதில் இன்னொன்றும் உண்டு என்று. மானை மட்டும் அல்ல....அவன் வேறு ஒன்றையும் கேட்டான் என்று புன்னகயுடன் கூறுகிறாள்...

பாடல்

புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் ! சாரற்
றினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.


சீர் பிரித்த பின்

புனை பூந்தழை அல்குல்  பொன் அன்னாய் ! சாரற்
தினை காத்திருந்தேம் யாமாக - வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவலுற்றது ஒன்று உண்டு 

பொருள்


புனை= புனைந்த , தொடுக்கப் பட்ட

பூ = பூ

தழை  = தழைகள்

அல்குல் = இடுப்பினை உடைய

பொன் அன்னாய்  ! = பொன் போன்றவளே

சாரற் = மாலைச் சாரலில்

தினை காத்திருந்தேம் = தினைப் புனங்களை காத்து இருந்தோம்

யாமாக = தானாக

வினை வாய்த்து = வேலை காரணமாக (என்ன வேலை ?)

மா = மான்

வினவுவார் போல = (இந்தப் பக்கம் வந்ததா என்று ) வினவுவார் போல

வந்தவர் = வந்த தலைவன்

நம்மாட்டுத் = நம்மிடம்

தாம் வினவலுற்றது = அவன்    கேட்க நினைத்தது 

ஒன்று உண்டு =  ஒன்று உண்டு 




Friday, July 25, 2014

ஐந்திணை ஐம்பது - உன்னைத் காற்று வந்து என்னைத் தொட்டது

ஐந்திணை ஐம்பது - உன்னைத்  காற்று வந்து என்னைத் தொட்டது 


காதலர்கள் பிரிந்து இருந்தால் அவர்கள் காதலோ காதலியோ தந்த ஏதோ ஒரு பொருளை கையில் வைத்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது கையில் இருக்கும் போது ஏதோ அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் அருகில் இருப்பது போலவே அவர்களுக்குத்  தோன்றும்.

அவர்கள் தந்த சாக்லேட்-ன் பேப்பர், அவள் தலையில் இருந்த உதிர்ந்த பூவின் இதழ், அவள் எழுதிய கடிதம்  என்று ஏதோ அவளை நினைவூட்டும் ஒன்று அவனுக்கு.

அவளுக்கும் அப்படித்தான்.

இங்கே, ஒரு சங்க காலப் பெண். அவளின் காதலன் கொஞ்ச நாளாகவே அவளைப் பார்க்க  வரவில்லை.அவளின் தோழி "அவ்வளவுதான், அவன் உன்னை மறந்து விட்டான்...இனி மேல் வரமாட்டான் " என்று பயமுறுத்திக் கொடிருக்கிறாள்.

அவள் அதற்கெல்லாம்    பயப் படுபவள் அல்ல.

"அவன் என் தோள்களைச் சேர மாட்டான் என்றா சொல்கிறாய். பரவாயில்லை. அவன் ஊரின் வழியே வரும் ஆறு நம் ஊருக்கும் வருகிறது. அந்த ஆற்றில் நான் நீராடுவேன் என்கிறாள் "

அவனும் அந்த ஆற்றில் நீராடி இருப்பான். அவன் மேல் பட்ட நீர் என் மேலும் படும். அதுவே அவன் என்னை அணைத்த மாதிரி என்கிறாள்.

இந்த ஆறு, அவனின் நீண்ட கைகள் போல என்னை வந்து தீண்டும் என்கிறாள்.

நாங்கள் ஒருவர் இந்த நீர்க் கைகளால் பற்றிக் கொள்வோம் என்கிறாள்.

பாடல்


கானக நாடன் கலவானென் றோளென்று
மானமர் கண்ணாய் ! மயங்கனீ ;- நானங்
கலந்திழியு நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பு மகன் றுநில் லா.


சீர்  பிரித்த பின்

கானக நாடன் கலவான் என் தோள் என்று 
மான் அமர் கண்ணாய் ! மயங்க நீ ; - நானம் 
கலந்து இழியும் நன் மலை மேல் வால் அருவி ஆடப் 
புலம்பும்  அகன்று நில்லா 


பொருள்

கானக நாடன் = காண்க நாட்டின் தலைவன்

கலவான் = கலக்க மாட்டான்

என் தோள் என்று = என்னுடைய தோள்களை என்று

மான் அமர் கண்ணாய் ! = மான் போன்ற கண்களைக் கொண்ட என் தோழியே

 மயங்க நீ ;  = நீ மயங்காதே

நானம் = நறுமணப் பொருள்கள்

கலந்து இழியும் = கலந்து இறங்கி வரும் (அருவி)

 நன் மலை மேல் வால் அருவி = நல்ல மலை மேல் உள்ள அருவி

ஆடப் = நீர் ஆடினால்

புலம்பும்  அகன்று = அவன் வரவில்லையே, அவனைக் காண முடியவில்லையே, அவன் என் தோள்களைச் சேரவில்லையே என்ற புலம்பல் அகன்று

நில்லா = நில்லாமல் ஓடி விடும்

எவ்வளவு மென்மையான காதல். எவ்வளவு நம்பிக்கை. எவ்வளவு குழந்தைத் தனம். எவ்வளவு  தாபம்.

உணர்சிகள் இந்த அளவு மென்மை பட்டு , ஆழமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களின் பண்பாடு எந்த அளவு உயர்ந்து இருக்க வேண்டும் - அந்தக் காலத்தில்

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்து  இருக்கிறார்கள்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்றானே பாரதி அது போல.

யார் கண்டது...அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின் .....பாட்டியாகக்... கூட இருக்கலாம்.

நம் பரம்பரை அப்படி.

நம் பாரம்பரியம் அப்படி.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நீங்கள்.

சற்றே நிமிர்ந்து நடவுங்கள்.



Thursday, July 24, 2014

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள்

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள் 


தோழி: ஏண்டி, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே தனியாக பார்ப்பதும், சிரிப்பதும் இருப்பதும்....உங்க கல்யாணம் பத்தி அவன் கிட்ட பேசுனியா ?

அவள்: ம்ம்ம்...இல்லடி...இனிமே தான் பேசணும்....

தோழி: ஏன் இன்னும் பேசாம இருக்க ?

அவள்: அவனே இந்த பேச்சை எடுப்பான்னு இருக்கேன்....

தோழி: உனக்கு இந்த ஆம்பிளைங்கள தெரியாது...இதை எல்லாம் பத்தி அவங்க யோசிக்கிறது கிடையாது...

அவள்: நானே எப்படிடி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்குறது ?

தோழி: ஐயோடா...இதுக்கு மட்டும் வெக்கமாக்கும்...இங்க பாரு, இன்னிக்கு கட்டாயம் இந்த பேச்சை எடு...காலா காலத்தில கல்யாணம் பண்ற வழியப் பாரு...என்ன சரிதான ? சரி சரின்னு இங்க மண்டைய ஆட்டு ...அங்க போய் ஒண்ணும் சொல்லாத  என்ன....

அவள்: புன்முறுவல் பூத்தாள் .....

பாடல்

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!-
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி, இனிது.

பொருள்

பொன் இணர் = பொன் போன்ற நிறம் கொண்ட

வேங்கை = வேங்கை மரங்கள் நிறைந்த

கவினிய = அழகான

பூம் பொழிலுள் = பூஞ்சோலையில்

நன் மலை நாடன் = மலை நாட்டில் உள்ள அந்த நல்லவன் (தலைவன்)

நலம் புனைய = உன்னுடைய நலன்களை இரசிக்க, பாராட்ட

மென்முலையாய்!- = மென்மையான முலைகளை கொண்டவளே

போயின, சில் நாள் = சில நாட்கள் போய் விட்டன

 புனத்து மறையினால் = புன்னை மரங்களின் மறைவில்

ஏயினர் இன்றி = தடை சொல்பவர் யாரும் இன்றி. யாரும் பார்க்காமல்

இனிது = இனிமையாக.


அதாவது கொஞ்ச நாள் நீங்கள் தனிமையில் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் நாட்கள் இனிமையாகப்  போகின்றன. ஏதாவது தப்பு  தண்டா  நடந்து இருக்கப் போகுது என்று தோழி கவலைப்  படுகிறாள்.

"உன் நலம் புனைந்து" உன் அழகை இரசித்து

"ஏயினர் இன்றி" = தடுப்பவர்கள் யாரும் இன்றி, தடை இன்றி

 "போயின சில் நாள் , இனிது" = சில நாட்கள் இனிமையாகப் போயின

"மென் முலையாய்" = மென்மையான முலைகளை கொண்டவளே

என்று சொல்வதின் மூலம் இலை மறை காயாக சொல்ல வேண்டியதை சொல்லி  விடுகிறாள் தோழி.

அவள் சொல்லாமல் விட்டதுதான் இந்த கவிதையின் சுவையான பகுதி.

எழுதாத கவிதை அது



Sunday, July 20, 2014

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்  


குடும்பத்தை நல்லபடியாக கொண்டு செல்ல பொருள் வேண்டும்.

அதே சமயம், கணவனும் கூடவே இருக்க வேண்டும்.

எல்லா பெண்களும் அல்லாடும் இரண்டு பிரச்சனைகள் இவை. சங்க காலம் முதல் இன்று வரை இதற்கு ஒரு வழி தோன்றவில்லை.

பொருளும் வேண்டும், கணவனும் கூடவே இருக்க வேண்டும்...என்னதான் செய்வாள் அவள்.

அவர்கள் காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறார்கள். அவளை செல்வ செழிப்போடு சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதற்காக வெளிநாடு சென்று பொருள் திரட்ட நினைக்கிறான்.

அவளுக்கோ, அவன் வெளிநாடு எங்கும் போகாமல், அவள் கூடவே இருக்க வேண்டும் என்று ஆவல்.

தன் தோழியிடம் சொல்கிறாள்.

பாலை நிலத்தில் கானல் நீர் தெரியும். அதை உண்மையான நீர் என்று நினைத்துக் கொண்டு யானைகள் கால் வெடிக்க ஓடி, பின் தளர்ந்து விழும். அது போல,  என் காதலன் பொருள் தேடி சென்று வாழ்வின் உண்மையான இன்பங்களை  இழக்க மாட்டான் என்று கூறுகிறாள்.

பாடல்

கடிதோடும் வெண்டேரை நீராமென் றெண்ணிப்
பிடியோ டொருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானஞ் சேர்வார்கொ னல்லாய் !
தொடியோடி வீழத் துறந்து.

பொருள்

கடிதோடும் = வேகமாக ஓடும்

வெண்டேரை  = கானல் நீரை

நீராமென் றெண்ணிப் = உண்மையான நீர் என்று எண்ணி

பிடியோ டொருங்கோடித் = பிடியோடு ஒருங்கு ஓடி = பெண் யானைகளோடு ஒன்றாக ஓடி

தாள் பிணங்கி வீழும் = கால்கள் (தாள்) தளர்ந்து வீழும்

வெடியோடும் = வெடிப்புகள் நிறைந்த

வெங்கானஞ் = வெம்மையான கானகம் 

சேர்வார்கொ னல்லாய்  ! = சேர்வார் என்று எண்ணாதே

தொடியோடி = தொடி என்றால் வளையல். வளையல் கழன்று ஓடி

வீழத் துறந்து = விழும்படி (என்னைத் ) துறந்து. என்னை விட்டு விட்டு

பொருள் என்பது கானல் நீர் போல. அதைத் தேடி தேடி திரியும்போது வாழ்கை முடிந்து  போகிறது. பொருள் எல்லாம் சேர்த்து வைத்த பின் , அனுபவிக்கலாம் என்றால்  அதற்குள் வயதாகி விடுகிறது. 

காலம் காலமாய் தொடரும் சிக்கல் இது. 

அவன் அவளை விட்டுப் பிரியப் போகிறான் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள்  உடல் மெலிந்து வளையல் கழண்டு கீழே விழுந்து உருண்டு  ஓடி விடுமாம். 

அந்த வளையல் உருண்டோடும் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா ?


Tuesday, July 1, 2014

ஐந்திணை ஐம்பது - கூத்தாடி உண்ணினும் உண்

ஐந்திணை ஐம்பது  - கூத்தாடி உண்ணினும் உண்

சங்கப் பாடல்கள் என்றாலே ஏதோ காதல், பிரிவு, என்று மட்டும் தான் இருக்கும் என்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ஒரு சலிப்பினை, குடும்பத்தில் நடக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது இந்தப் பாடல்.

அவள் நல்ல அழகி தான். அவனும் அவளும் திருமணம் செய்து கொண்டார்கள். வாழ்கை சொர்கமாக இருந்தது.

சிறிது காலம் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளின் உடல் கட்டு தளர்ந்து போனது. அழகு குறைந்தது. அவனுக்கு அவள் மேல் இருந்த ஆர்வம் குறைந்தது. நாளடைவில் மற்ற பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படத்  தொடங்கியது. சுகம் நாடி அந்தப் பெண்களின் பின்னால் போக ஆரம்பித்து விட்டான்.

அது அவளுக்குத் தெரிய வந்தது.

ஒரு நாள் அவனுடைய நண்பன் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தான்.

அவனிடம் வருந்தி , அந்த நண்பன் கூட தலைவனுக்கு நல்லது சொல்லி திருத்தவில்லையே என்ற கோபத்திலும் அவள் சொன்னாள்

"...என் கழுத்தைக் கட்டிக் கொள்ள மகன் பிறந்து விட்டான். அவன் என்னிடம் பால் குடிக்கிறான். எனக்கு வயதாகி விட்டது. நல்ல கட்டு கோப்பாக உள்ள  அந்த மாதிரி பெண்கள் உள்ள இடங்களுக்கு அவன் போய் தண்ணி அடிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடம் போய் சொல். இல்லை என்றால் நீயும் அங்கே போய் கூத்தடி ...இங்கே வராதே "

என்று கதவை தாழிட்டாள்

பாடல்

போத்தில் கழுத்திற் புதல்வ ணுணச்சான்றான்
மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு
ணீத்துநீ ரூனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி யுண்ணினு முண்.

சீர் பிரித்த பின்

போத்தில் கழுத்தில் புதல்வன் உண்ணச் சான்றான் 
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியில் 
நீ நீத்து நீர் ஊன் வாய் பாண ! நீ போய் மொழி 
கூத்தாடி உண்ணினும் உண் 

பொருள்

போத்தில் = பொழுது இல்லை

கழுத்தில் = கழுத்தில்...என்னை கழுத்தோடு கட்டிக் கொள்ள பொழுது இல்லை

புதல்வன் = மகன்

உண்ணச் = முலை உண்ணத்

சான்றான் = தொடங்கி விட்டான்

மூத்தேம் இனி யாம் = வயதாகி விட்டது எனக்கு

வரு முலையார் = வளருகின்ற இளமையான முலையை உடைய பெண்கள் உள்ள

சேரியில் = சேரியில்

நீ = நீ

நீர் = கள் குடித்து

 ஊன் வாய் = ஊன் (மாமிசம் ) உண்டு

பாண ! = பாணனே

நீ போய் மொழி = நீ போய் சொல்லு. இல்லை, உன்னை நம்ப முடியாது . அங்க போனவுடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு, நீயும் அந்த பெண்கள் பின்னால் போய் விடுவாய்


கூத்தாடி உண்ணினும் உண் = சொன்னா சொல்லு, இல்லேன்னா அங்கேயே போய் கூத்தடி

பெண்ணின் இயலாமை ... பிள்ளை பெற்ற பின் இளமை அழிவதனால் வரும் சோகம், கணவன் தன் மேல் அன்போடு இல்லையே என்ற ஏக்கம்....பாணன் மேல் வரும் கோபம், அழகான அந்த மாதிரி பெண்களின் மேல் பொறாமை என்று அனைத்தும் கலந்த உணர்ச்சி குவியலான பாடல்


ஆண்கள் அந்த காலத்திலும் அப்படித்  தான் இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் சகித்திருக்கிரார்கள்




Thursday, June 5, 2014

ஐந்திணை ஐம்பது - புலி நகம் போன்ற பூக்கள்

ஐந்திணை ஐம்பது - புலி நகம் போன்ற பூக்கள் 


பூ எவ்வளவு மென்மையானது.

இரத்தம் தோய்ந்த புலியின் நகம் எவ்வளவு கொடூரமானது.

அந்த நகத்தை முருக்கம் மரத்தின் பூவுக்கு உதாரணம் சொல்லி நம்மை அதிர வைக்கிறாள் தலைவி.

தலைவனை பிரிந்த பின் அவளுக்கு எல்லாமே துன்பம் தருவனவாக இருக்கிறது. பூ கூட புலி நகம் போல இருக்கிறது.

அதை விடுத்து வானத்தைப் பார்க்கிறாள் - ஒரு மேகம் கூட. குளிர் தரும் மேகம் ஒன்று கூட இல்லாமல் வானம் வறண்டு கிடக்கிறது.

சரி அதையும் விடுவோம்...இந்த இளவேனில் காலமாவது அவளுக்கு கொஞ்சம் இதம் தருகிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த இனிமையான இள வேனில் காலமும் அவளை வருத்துகிறது.

தலைவனின் பிரிவு அவளை அவ்வளவு வாட்டுகிறது.

அந்த பிரிவின்  சோகத்தை,துன்பத்தை சொல்லும் பாடல் .....

பாடல்

உதிரங் துவரிய வேங்கை யுகிர்போ
லெதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந்
துன்பங் கலந்தழிவு நெஞ்சு.


பொருள்

உதிரங் துவரிய = உதிரம் துவரிய = இரத்தம் தோய்ந்த 

வேங்கை = புலியின்

யுகிர் = உகிர் = நகம்

போல் = போல

எதிரி = பருவத்தோடு ஒன்றிய  

முருக்கரும்ப = முருக்க மலர்கள் அரும்ப

ஈர் = ஈரமான

தண் = குளிர்ந்த

கார் = கார்மேகம். கரிய மேகல

 நீங்க = நீங்கிப் போக

எதிருநர்க் = காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் எதிரில் இருந்து

கின்பம் = இன்பம்

பயந்த = தந்த

விளவேனில் = இள வேனில்

காண்டொறுந் = பார்க்கும் போது  எல்லாம்

துன்பங் கலந்தழிவு நெஞ்சு = துன்பம் கலந்து அழிகின்றது என் மனம்.

அவளின் பிரிவுத் துயரம் நம்மை ஏதோ செய்கிற மாதிரி இல்ல ?


Wednesday, May 28, 2014

ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே

ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே 


அது ஒரு கடற்கரை கிராமம்.

தலை வருடும் காற்று, செவி வருடும் அலை ஓசை. பரந்து பட்ட மணல் வெளி.

அவளை விட்டு அவன் பிரிந்து சென்று விட்டான். அவன் போன வழி பார்த்து அவள் காத்து இருக்கிறாள். அவன் ஞாபகமாக அவன் ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. ஒரு கடிதம், ஒரு சாக்லேட் பேப்பர், ஒரு பேனா என்று ஒன்றும் தந்து விட்டுச் செல்லவில்லை.

அவன் நினைவாக அவளிடம் இருப்பது ஒன்றே ஒன்று தான்....அவன் தேர் சென்ற வழித் தடம். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் நினவு அவளை வாட்டும்.

அந்த வழித் தடத்திருக்கும் வந்தது ஆபத்து.

அவள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வழிகளில் உள்ள நண்டுகள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலையும் போது , தலைவன் சென்ற அந்த வழித் தடத்தின் மேலும் நடக்கின்றன.


அவள் பதறுகிறாள் .

நண்டிடம் சொல்லுகிறாள், நண்டு தயவுசெய்து அந்த தேர் தடத்தின் மேல் நடந்து அதை அழித்து விடாதே என்று அந்த நண்டிடம் வேண்டுகிறாள்.


பாடல்


கொடுந்தா ளலவ ! குறையா மிரப்பே
மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப - னெடுந்தேர்
கடந்த வழியையெங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ.

பொருள்


கொடுந்தா ளலவ ! = வளைந்த கால்களை உள்ள நண்டே 

குறையா மிரப்பே = என்னுடைய குறையை உன்னிடம் கூறி வேண்டுகிறேன்

மொடுங்கா வொலி = ஒடுங்கா ஒலி. நிற்காமல் வரும் அலை ஓசை

கடற் சேர்ப்ப = கடற்கரையின் தலைவன்

னெடுந்தேர் = நெடுந்தேர். நீண்ட தூரம் சென்ற தேர். அவளை விட்டு விலகி நீண்ட தூரம் சென்று விட்டான்.

கடந்த வழியை = சென்ற வழியை

யெங் கண்ணாரக் காண = என் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ = அவற்றின் மேல் நடந்து சிதைக்காதே நீ

மலரினும் மெல்லியது காமம் என்றார்  வள்ளுவர்.அந்த மென்மையான காதலை  இங்கே காணலாம்.