Showing posts with label திருப் புகழ். Show all posts
Showing posts with label திருப் புகழ். Show all posts

Saturday, September 19, 2015

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே


Saturday, January 25, 2014

திருப் புகழ் - காகம் முற அருள்

திருப் புகழ் - காகம் முற அருள் 


மனைவியை மற்றவன் பார்த்தால் எவ்வளவு கோபம் வரும் ?

அதிலும், காம இச்சையோடு பார்த்தால் ?

அதிலும், அவளை தீண்டினால் ?

அதிலும், அவளை அவள் மார்பில் தீண்டினால் ? 

எவ்வளவு கோபம் வரும் ?

இராமாயணத்தில்,  இராமனும் சீதையும் சித்ர கூட மலைக்கு அருகில் மந்தாகினி நதிக் கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சீதையின் மடியில் இராமன் தலை வைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே வந்த இந்திரனின் மகன் சயந்தன் சீதை மேல் காமம் கொண்டான். 

தந்தை எவ்வழி , மகன் அவ்வழி. 

சீதையை எப்படியாவது தீண்டி விட வேண்டும் என்று நினைத்தான். 

ஒரு காகத்தின் வடிவை எடுத்து பறந்து வந்து அவள் மார்பை கொத்தினான். 

சீதையின் மார்பில் இருந்து இரத்தம் வந்தது. அசைந்தாலோ, சப்தம் எழுப்பினாலோ இராமனின் தூக்கத்திற்கு இடையுறாக இருக்கும் என்று எண்ணி அவள் அமைதியாக அந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டாள் . 

கண் விழித்துப் பார்த்த இராமன், சீதையின் மார்பில் இருந்து வழிந்த இரத்தத்தை கண்டு பதறி   காரணம் வினவினான். சீதை காகத்தை காண்பித்து, அந்த காகம் கொத்தியது என்றாள் . 

இராமன் புரிந்து கொண்டான். 

அருகில் இருந்த புல்லை எடுத்து மந்திரம் சொல்லி விடுத்தான். அது இராம பானமாக மாறி சயந்தனை மூவுலகும் துரத்தியது. அவனை காப்பார் யாரும் இல்லை. அவன் இராமனிடமே வந்து அடைக் கலம் புகுந்தான். 

சரண் என்று அடைந்தவனை அவன் எதிரியாக இருந்தால் கூட அவனை மன்னித்து  ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டவன் இராமன். 

சயந்தனுக்கு உயிர் பிச்சை அளித்து, "நான் மன்னிப்பேன், என் பாணம் மன்னிக்காது" என்று சொல்லி அந்த பானத்திற்கு சயந்தனின் ஒரு கண்ணை இலக்காக்கி அவனை காப்பாற்றினான்  இராமன்.

அந்த கதையை இரண்டு வரியில் சொல்கிறார் அருணகிரி.....


பாடல் 

காது மொருவிழி காக முற அருள்
                      மாய னரிதிரு                             மருகோனே

பொருள் 

காது =கொல்லென்று விடுத்த 

ஒரு விழி காகம் உற = ஒரு விழியை மட்டும் எடுத்து 
  
அருள் = அவனுக்கு உயிர் பிச்சை தந்து அருள் புரிந்த 

மாயன் = மாயங்கள் செய்ய வல்ல 


அரி = பாவங்களை போக்குபவன் 

திரு = உயர்ந்த, சிறந்த 

மருகோனே = மருமகனே 


இதையே பெரியாழ்வாரும் 

சித்திரகூ டத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகுந் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபய மென்றழைப்ப
அத்திரமே யதன்கண்ணை யறுத்ததுமோரடையாளம் 


விருந்தினர்களை உபசரிப்பது ஒரு பண்பு என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களை  காப்பதும் ஒரு பண்பு தான். ஏனோ அந்த பண்பு வழக்கொழிந்து போய் விட்டது. பழிக்குப் பழி என்று உலகம் புறப்பட்டு விட்டது. 

எவ்வளவு சண்டை. எவ்வளவு சிந்திய இரத்தங்கள். 

மன்னிக்கும் குணம் குறைந்து கொண்டே வருகிறது. 

இராமாயணம் படிப்பது அதன் இலக்கியம் நயம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல. .....


Saturday, December 21, 2013

திருப் புகழ் - வந்தித்து அணைவோனே

திருப் புகழ் - வந்தித்து அணைவோனே 


அவன்: உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா ?

அவள்: ம்ம்..என்ன கேட்கப் போற ?

அவன்: சரின்னு சொல்லணும் ...மாட்டேன்னு  சொல்லக் கூடாது...

அவள்: ஆத்தாடி, அது எல்லாம் முடியாது...நீ பாட்டுக்கு ஏதாவது எசகு பிசகா கேட்டேனா ?

அவன்: அப்படி எல்லாம் கேப்பனா ? கேக்க மாட்டேன்...சரின்னு சொல்லு...

அவள்: ரொம்ப பயமா இருக்கு...

அவன்: சரின்னு சொல்லேன்...என் மேல நம்பிக்கை இல்லையா ? ப்ளீஸ்...என் செல்ல குட்டில, என் கண்ணு குட்டில...சரின்னு சொல்லு

அவள்: ம்ம்ம்...சரி...என்னனு சொல்லு

அவன்: ஒரே ஒரு தடவை உன்னை கட்டி பிடிக்கணும் போல இருக்கு...கட்டிக்கவா ?

அவள்: ம்ம்ம்ம்....

-------------------------------------------------------------------------------------------------

என்னடா ஏதோ திருப்புகழ்னு தலைப்பை போட்டுட்டு ஏதேதோ எழுதிக் கொண்டு போறானே  என்று நினைக்கிறீர்களா "

இல்லை....அருணகிரி நாதர் சொல்கிறார்....

வள்ளியை வணங்கி, பின் அவளை அணைத்துக் கொண்டானாம் முருகன்.

முருகன், வள்ளியை வணங்கினான் என்கிறார் அருணகிரி. வணங்கிய பின் அணைத்துக் கொண்டானாம். எதற்கு வணங்கி இருப்பான் ?

பாடல்

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே 

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே 

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே 

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே

     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சீர் பிரித்த பின் 

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி 
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே 

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி 
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே 

மயில் தகர் கல் இடையர் அந்தத் திணை காவல் 
வனச குற மகளை வந்தித்து அணைவோனே 

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே 
கரி முகனுக்கு இளைய கந்தப் பெருமாளே 


பொருள் 

இயல் இசையில் = அழகான பேச்சிலும், இனிமையான இசையிலும். இசை என்று சொன்னால் நான் குரல் என்று கொள்வேன். பெண்களின் குரலுக்கே ஒரு இனிமை உண்டு. அவர்கள் பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும். 

உசித = சிறந்து விளங்கும் 

வஞ்சிக்கு = பெண்களிடம் 

அயர்வாகி = சோர்ந்து 
 
இரவு பகல் = இரவும் பகலும், அவர்களையே நினைத்து மனம் சோர்ந்து போய் . 

மனது சிந்தித்து = எந்நேரமும் அவர்கள் நினைவாகவே இருந்து  

உழலாதே = உழலாமல் 

உயர் கருணை  புரியும் = உயர்ந்த கருணையை புரியும் 

இன்பக் கடல் மூழ்கி = இன்பமாகிய கடலில் மூழ்கி 
 
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே = இறைவன்  என்பவன் வெளியில் இருப்பவன் அல்ல. நமக்குள்ளேயே இருக்கிறான். நாம் அறிவது இல்லை. அந்த அறிவைத் தருவாயே என்று  வேண்டுகிறார்.இறைவனின் அருள் வேண்டாமாம். அன்பு வேண்டுமாம்.  

மயில் = மயில்கள் ஆடும் மலை 

தகர் = ஆடுகள் இருக்கும் மலை 

கல் இடையர் = கல் என்றால் மலை. மயில்களும் ஆடுகளும் இவற்றிற்கு இடையே வாழும் வேடுவர்கள்  

அந்தத் திணை காவல் = அந்தத் திணைக்கு காவல் இருக்கும் 
 
வனச குற மகளை= திருமகள் போல அழகு கொண்ட வள்ளியை 

வந்தித்து  = கும்பிட்டு, வணங்கி 

அணைவோனே = அனைத்துக் கொள்பவனே 

கயிலை மலை அனைய = கயிலை மலை போன்ற 

செந்தில் பதி வாழ்வே = திரு செந்தூரில் வாழும் முருகனே 

கரி = யானை 

முகனுக்கு = முகத்தை உடைய விநாயகருக்கு 

இளைய = தம்பியான 

கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே 

இது எனக்குத் தோன்றிய பொருள். 

இந்த பாடலுக்கு உரை எழுதிய பல பெரியவர்கள், பரமாத்மா கருணை கொண்டு ஜீவாத்மாவை ஏற்றுக் கொண்டது என்று "வனச குற மகளை வந்தித்து அணைவோனே" என்ற வரிக்கு பொருள் தந்திருக்கிறார்கள். 

மகான்களின் பாடல்களுக்கு சிந்தித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். 

உங்கள் சிந்தனைக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். 
 

Wednesday, May 2, 2012

திருப் புகழ் - அரை நிமிட தியானம்

திருப் புகழ் - அரை நிமிட தியானம்


காற்றில் ஆடும் தீபம் போல மனம் எங்கே ஒரு நொடி அமைதியாய் இருக்கிறது.

மனதை கட்டுப் படுத்த மகான்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கிறார்கள்.

அருணகிரிக்கு முருகன் உபதேசித்தது எல்லாம் இரண்டே வார்த்தை தான்

"சும்மா இரு". அந்த இரண்டு வார்த்தைக்கு பொருள் தெரியாமல் தவிக்கிறார்.


"சும்மா இரு சொல் அர என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே"

எனப்பார் அவர் கந்தர் அனுபூதியில்.

மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை மனதில் நினைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எங்க முடியுது ?


கண்ணை மூடினால் அலுவலகம், மனைவி, கணவன், பிள்ளைகள், மாமியார், நாத்தினார், கடன் என்று ஆயிரம் எண்ணங்கள் வருகிறது.


கடவுளை எங்க நினைக்க முடிகிறது ? இந்த பிரச்சனை இல்லறத்தில் இருக்கும் நமக்கு மட்டும் அல்ல, துறவியான அருணகிரிக்கும் இருந்து இருக்கிறது.


Saturday, April 28, 2012

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....

Monday, April 23, 2012

திருப் புகழ் - முதுமையின் சோகம்

திருப் புகழ் - முதுமையின் சோகம்


இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.


திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.


கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....