Showing posts with label ஆசாரக் கோவை. Show all posts
Showing posts with label ஆசாரக் கோவை. Show all posts

Sunday, February 7, 2021

ஆசாரக் கோவை - உடை உடுத்தல்

 ஆசாரக் கோவை - உடை உடுத்தல் 


நமது அகமும் புறமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.  அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். 

எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன. இதைப் படித்து விட்டு, இதோடு நின்று விடக் கூடாது. அகத் தூய்மை பற்றி சிந்திக்க வேண்டும். 


உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. 

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பண்பாடு, கலாசாரம். 


Bed coffee அவர்கள் கலாசாரம். எழுந்து பல் கூட விளக்காமல் காப்பி குடிப்பது 

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பாரம்பரியம். நல்ல துணியை கிழித்து, அழுக்காகி, துவைக்காமல் நாள் கணக்கில், மாதக் கணக்கில் உடுப்பது அவர்கள் பாரம்பரியம். ஜீன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கங்கே கிழிந்து இருக்கும், இதில் துப்பாகியால் சுட்டு ஓட்டை விழுந்த ஜீன்ஸ் என்றால் மதிப்பு கூட. 


எது சரி, எது தவறு என்பதல்ல நோக்கம். நாம் எதை விட்டு விட்டு எதை நோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம். 


நம் பண்பாட்டினை அவர்களுக்கு சொல்லித் தருவதை விட்டு விட்டு, அவர்கள் செய்வதை பெருமையாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம். 


எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. 


"ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்" 


பாடல் 

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_7.html


(click the above link to continue reading)


உடுத்தலால் = உடை உடுக்காமல் 

நீராடார் = குளிக்க மாட்டார்கள் 

ஒன்றுடுத் துண்ணார் = ஒரு துணியை உடுத்தி உண்ண மாட்டார்கள். அதாவது குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உண்பார்கள். 

உடுத்தாடை = உடுத்த ஆடையை 

நீருட் பிழியார் = நீரில் பிழிய மாட்டார்கள் 

விழுத்தக்கார் = பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள் 

ஒன்றுடுத் தென்றும் = ஒற்றை ஆடையி உடுத்து என்றும் 

அவைபுகா ரென்பதே = எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர்கள் கண்ட முறை 


சில ஆசாரங்களுக்கு காரணம் தெரியவில்லை. அதற்காக அதை விட்டு விடுவதா அல்லது அவற்றை பின்பற்றிக் கொண்டே அதற்கான காரணத்தை தேடுவதா? 


யோசிப்போம். 



Saturday, January 23, 2021

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு 


நம் மனம் கால நிலை வேறுபாட்டால் மாறும் இயல்பு உடையது. நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். காலையில் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, மதியம் எப்படி இருக்கிறது, மாலை மற்றும் இரவில் எப்படி இருக்கிறது என்று. நேரம் மாற மாற மனம் மாறும். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் நாம் அந்த மாற்றத்தை உணர்வது இல்லை. 


சில காரியங்களை,சில நேரத்தில் தான் செய்ய முடியும். மாற்றிச் செய்தால் என்ன என்று கேட்கலாம். செய்யலாம். அவ்வளவு சிறப்பாக இருக்காது. 


நீங்கள் இதை சோதித்துப் பார்க்கலாம். ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , குளித்து, நல்ல உடை உடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று. இன்னொரு நாள் காலை பத்து பதினொரு மணிவரை தூங்கி விட்டு எழுந்து, குளிக்காமல் உணவு உண்டு, இருந்து பாருங்கள். உங்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று. வித்தியாசம் தெரியும். 


சரி, இப்படி காலத்தோடு சேர்ந்து மனம் மாறுகிறது என்றால், அது சட்டென்று மாறாது. ௮ மணிக்கு மேல் இந்த மன நிலை என்று மாறாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குப் போகும். 


அப்படி போகும் போது, இந்த இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் குழப்பம் வரும்.  அந்த இடைப்பட்ட நேரங்களை சந்தி நேரம் என்பார்கள். இரண்டு கால நேரங்கள் சந்திக்கும் இடம். அந்த நேரத்தில் மனதில் சற்று குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை போக்க, இறை வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


சந்தி நேரத்தில் செய்யும் வழிபாட்டுக்கு "சந்தியா வந்தனம்" என்று பெயர். 


மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு அதை மென்மையாக கொண்டு செல்லும் வழி. 


இருள் விலகி பகல் வரும் ஒரு சந்தி - அதிகாலை. 

பகல் விலகி இருள் வரும் நேரம் - மாலைச் சந்தி 

இந்த இரண்டு நேரங்களும் சற்று அழுத்தம் வாய்ந்தவை. எனவே இந்த நேரங்களில் வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


பாடல் 


நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_23.html


(pl click the above link to continue reading)


நாளந்தி = நாள் அந்தி = அதி காலையில் 

கோறின்று = கோல் தின்று  என்றால் குச்சியால் பல் துலக்கி 

கண்கழீஇத் = முகம் கழுவி 

தெய்வத்தைத் = தெய்வத்தை 

தானறியு மாற்றாற் றொழுதெழுக = தான் அறியும் ஆற்றான் தொழுது எழுக. இது மிக முக்கியமானது. உனக்கு தெரிந்த மாதிரி தெய்வத்தை தொழு. அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று செய்யாமல். உன் மனதுக்கு பிடித்த மாதிரி, உன் அறிவுக்கு எட்டிய வரை தெய்வத்தைத் தொழு. 


 அல்கந்தி = மாலையில் 

நின்று தொழுதல் பழி. = நின்று தொழக் கூடாது. அமர்ந்து இறை வழிபாடு செய்ய வேண்டும். நாள் எல்லாம் வேலை செய்த பின் உடல் களைத்துப் போய் இருக்கும். நின்று செய்தால், மேலும் சோர்வு வரும். மனம் சலிக்கும். எப்படா இந்த வழிபாடு முடியும் என்று. எனவே, நன்றாக அமர்ந்து, நிதானமாக வழிபாடு செய்ய வேண்டும். 


உள் உணர்வை கூர்மையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்று அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி உள் உணர்வு கூர்மையானால், வழிபாடு செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று தெரியும். இல்லை என்றால், ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று வாய் ஏதோ முணுமுணுக்கும், கை ஒரு வேலை செய்யும், கண் ஒரு பக்கம் போகும், காது வேறு எதையோ கேட்டுக் கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு. 


வழிபாட்டுக்கு முன்னும் பின்னும் உள்ள மன நிலையின் வேறுபாடு தெரியாவிட்டால், பின் எதற்கு வழிபாடு செய்வது? செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாவிட்டாலும் அதே தான் என்றால், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும்? 


கூர்ந்து கவனியுங்கள். 


உணவு உண்ட பின் உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். 


காப்பி குடித்தவுடன் மனம் மாறும். 


எண்ணையில் பொறித்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் மனம் மாறும். 


பழைய சோற்றில் எருமை தயிர் விட்டு சாப்பிட்டால் மனம் மாறும். 


அந்த மாற்றத்தை கவனிக்கத் தெரிய வேண்டும். 


தெரிந்தால், இந்த ஆசாரங்களின் தேவை மற்றும் அர்த்தம் புரியும். இல்லை என்றால்....என்ன சொல்ல..ஏதோ ஒரு பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். 



Thursday, January 21, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை 


ஏன் ஆசாரம் வேண்டும் என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம். இனி, என்னவெல்லாம் ஆசாரம் இருக்கிறது, அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று சிந்திப்போம். 

பாடலை படிக்கும் முன், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் நம் கலாச்சாரம் இரண்டையும் தெரிந்து கொள்வோம். 


தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். 


சிறு பொழுது, பெரும் பொழுது. 


ஒரு நாளின் வேறு வேறு பகுதிக்கு சிறு பொழுது என்று பெயர்.


ஒரு ஆண்டின் வேறு வேறு பகுதிக்கு பெரும் பொழுது என்று பெயர். 


6  - 10  -  காலை 

10 - 2 - நண்பகல் 

2 - 6 - ஏற்பாடு 

6 - 10 - மாலை 

10 - 2 - யாமம் 

2 - 6 - வைகறை 


இந்த அதிகாலை 2 முதல் 6 மணிவரை உள்ள நேரம் இருக்கிறதே, இதை ப்ரம்ம முகூர்த்தம்  என்று சொல்லுவார்கள். 

படிக்க, பாராயணம் செய்ய, நல்ல காரியங்கள் தொடங்க சிறந்த நேரம் என்று சொல்லுவார்கள். 

சாத்வீக குணம் உச்சம் பெற்று இருக்கும் நேரம். 


ஆசாரக் கோவை சொல்கிறது - வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும். 

எழுந்த உடன், அன்று செய்ய வேண்டிய நல்ல வேலைகளை பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். மனதில் சிந்திக்க வேண்டும்.  அந்த ரிப்போர்ட் அனுப்பனும், இதில் முதலீடு செய்ய வேண்டும், இன்னாரை பார்க்க வேண்டும், அந்த பதிலை இன்று போட்டு விட வேண்டும், என்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை சிந்தித்து மனதில் குறித்துக் கொள்ள வேண்டும். 

பின் தந்தையையும், தாயையும் தொழ வேண்டும். 


பாடல் 

 வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்

நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_21.html


click the above link to continue reading


வைகறை யாமம் துயில் எழுந்து = யாமம் தாண்டி, வைகறையில் துயில் எழுந்து. வைகறை ஆறு மணி வரை இருக்கிறதே என்று அதுவரை தூங்கக் கூடாது. யாமம் தாண்டிய வைகறையில் எழ வேண்டும். 

தான் செய்யும் = நாம் செய்ய வேண்டிய 

நல் அறமும்  = நல்ல அறச் செயல்களையும் 

ஒண் பொருளும் = சிறந்த பொருள்களையும் 

சிந்தித்து = மனதில் சிந்தித்து 

வாய்வதின் = வாய்த்த, 

தந்தையும்  = தந்தையையும் 

தாயும் தொழுது எழுக!’ = தாயையையும் தொழுது எழுக 

என்பதே- = எனபதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர் கண்டா நல்ல வழி 


இது ஆசாரக் கோவை சொல்வது அல்ல. இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அது   சொல்கிறது. 


5 am club என்று ஒரு ஆங்கில நூல் எழுதினால், காசு போட்டு வாங்கி படித்து விட்டு, பிரமாதம் என்று சொல்கிறார்ககள். 

அதற்கு ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே இதையெல்லாம் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள். 


அதி காலை எழுந்து பாருங்கள். அதன் சுகம் தெரியும். 

நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்வீர்கள். 


இப்படி, பல பாடல்கள் இருக்கின்றன.


மூல நூலை தேடிப் பிடித்து படித்து பயன் அடையுங்கள். 





Tuesday, January 19, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

 ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை


ஆசாரம் என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் என்றால் நம்மை விட உயர்ந்தவர்கள் செய்தவற்றை நாம் இடைவிடாமல் செய்வது. 

உயர்ந்தவர்கள் என்றால் அறிவில், அனுபவத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.  இன்று என்ன ஆகி விட்டது என்றால் யார் சொல்வதை கேட்பது, யார் செய்வதை பின்பற்றுவது என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லவன் என்று சினிமா மற்றும் பிற ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் குழம்ப ஆரம்பித்து விட்டார்கள். எது சரி, எது தவறு என்பதில் தடுமாற்றம் வருகிறது. 


யாரிடம் கேட்பது?


வக்கிரங்கள் எல்லாம் நடை முறையாகிக் கொண்டு வருகிறது. 


இந்த மாதிரி தருணங்களில், நமக்கு வழிகாட்ட ஆசாரக் கோவை போன்ற நூல்கள் உதவுகின்றன.


எதற்கு ஆசாரத்தை  கடை பிடிக்க வேண்டும்?


அது எல்லாம் அந்தக் காலத்தில் செய்தார்கள். இது கம்ப்யூட்டர் காலம். இப்ப வந்து ஆசாரம்   என்று பேசிக் கொண்டு என்று கேலி பேசுகிறார்கள். 


ஆசாரத்தை கடை பிடிப்பவர்கள் கூட அதைஏன் செய்கிறாய் என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிக்கிறார்கள். முன்னோர்கள் செய்தார்கள். நானும் செய்கிறேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். 


ஆசாரம் என்றால் என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு கடைபிடிப்போம். 


மனித வாழ்க்கை அகம் புறம் என இரண்டாக இருக்கிறது. இரண்டாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. 


மனதை செம்மை செய்தால், வாழ்வு உயரும். மனதில் உள்ள அழுக்கை நீக்கினால், வாழ்வு சுகப்படும். 


பொறாமை, கோபம், வன்மம், துவேஷம்,  பொருந்தா காமம், பேராசை, கயமை போன்ற  கீழான எண்ணங்களை நீக்கினால், வாழ்வு எவ்வளவு சுகமாக இருக்கும். 


ஆனால், எப்படி நீக்குவது? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_19.html


click the above link to continue reading


மனதை வெளியே எடுத்து, சுத்தம் செய்து திருப்பி உள்ளே வைக்க முடியுமா? 


முடியாது. மனதை நம்மால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. 


ஆனால், மனமும், உடலும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. உடலை மாற்றினால் மனம் மாறும். 


நாலு நாள் குளிக்காமல் இருந்து பாருங்கள். உடல் அழுக்காக இருக்கும். ஆனால், மனமும் சோர்ந்து, குறுகி விடும். 


நல்ல வெந்நீர் வைத்தது குளித்து, புது ஆடை அணிந்து, கொஞ்சம் வாசனை திரவங்களை தெளித்தால், உடம்பு புத்துணர்ச்சி அடைவது மட்டும் அல்ல, மனமும்  துள்ளிக் கொண்டு நிற்கும். 


உடலை சரி செய்தால், மனம் சரியாகும்.  


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


ஆசாரம் என்பது உடலின் மூலம் மனதை சரி செய்யும் வித்தை. 


வெறும் ஆசாரத்தோடு நின்று விடக் கூடாது. 


காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து விட்டுத்தான் அடுப்பே பத்த வைப்பேன் என்று பெருமையாக சொல்வார்கள். 


ஏன்? குளிக்காமல் பத்த வைத்ததால் என்ன ஆகும் என்று கேட்டால் தெரியாது. 


காலையில் குளிக்கும் போது மனம் எப்படி சிலிர்க்கிறது என்று பார்க்க வேண்டும். இரவின் சோம்பல் எல்லாம் போய், உடம்பு புத்துணர்ச்சி பெறும் போது உள்ளமும் மகிழும். சுறுசுறுப்பாக இருக்கும். புத்தி நன்றாக வேலை செய்யும். 


குளிப்பதற்கு அல்ல ஆசாரம். மனதையும், புத்தியையும் தெளிவு படுத்த. 


எனவே, உடலை எப்படி ஒரு ஒழுக்க நிலையில் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல வருகிறது  ஆசாரக் கோவை. 


நமக்குத் தெரியுமா எப்படி உடம்பை, நாளை, மூளையை நெறி படுத்துவது என்று? தெரிந்தால் பின் ஆசாரக் கோவை படிக்க வேண்டாம். 


தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாரக் கோவை நமக்கு வழி காட்டும். 


என்ன தான் சொல்கிறது என்று பார்ப்போமே.....கடை பிடிக்கறோமோ இல்லையோ, தெரிந்து கொள்வோமே...


தெரிந்து கொள்வோமா?

Sunday, March 29, 2015

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது 


இன்று பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்கின்றன. இதற்கு யார் காரணம் என்று சர்ச்சைகள் எழுகின்ற போது , பெண்களும் காரணம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.  பெண்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றக் கூடாது, என்றெலாம் சொல்கிறார்கள்.

அந்த விவாதங்கள் ஒரு புறம்  இருக்கட்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட ஆசாரக் கோவை ஆணிடம் சொல்கிறது...ஒரு பெண்ணோடு தனித்து இருக்காதே என்று. அதுவும் எந்தெந்த பெண்களோடு தெரியுமா ...சொன்னால் நம்மால் அதை ஜீரணிக்கக் கூட முடியாது..

பெற்ற தாய்,  மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு கூட தனித்து இருக்காதே...ஏன் என்றால் ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்கிறது.

இவர்களோடு தனித்து இருக்காதே என்று சொன்னது ஆணுக்குத்தான் என்றாலும், ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்று சொன்னது இருவருக்கும்  பொருந்தும்.

புலன்கள் கட்டவிழ்த்து கொண்டால் அது தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பார்க்காது. கணவனுக்கும் தகப்பனுக்கும் வேற்றுமை தெரியாது.

சிந்தக்க கொஞ்சம் விரசமாகத்தான் இருக்கும். இருந்தும், புலன்களின் வேகத்தை  அறிந்து, எதற்கு வம்பு, தனியாக இருக்காதே என்று அறிவுறுத்துகிறது  ஆசாரக் கோவை.

இன்றும் கூட பல வீடுகளில் வயதுக்கு வந்த அண்ணன் தங்கை, அக்கா தம்பி இவர்களை தனியே விட்டு விட்டு பெற்றோர் செல்ல மாட்டார்கள். வயதின் தாக்கம், இளமையின் வேகம், வரம்பு மீறச் செய்யலாம் என்ற பயம்.

 தாய், மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு தனித்து இருக்கக் கூடாது என்றால் முன் பின் அறியாத வேறு எந்த பெண்ணுடன்   தனித்து இருக்கலாமா ?  கூடாது.

அறிவுக்குத் தெரியும் இது தாய், மகள், தமக்கை என்று. புலன்களுக்குத் தெரியாது.

அலுவலகம் ஆனாலும் சரி, மற்ற இடமானாலும் சரி, வேற்று ஒரு பெண்ணோடு தனித்து இருப்பதை தவிர்ப்பது நலம்.

குரான் சொல்கிறது , மனைவி இல்லாத மாற்று பெண்ணோடு தனித்து இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் சாத்தான் அமர்ந்து இருப்பான் என்று.

பாடல்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந்
தாங்கற் கரிதாக லான்.

பொருள்

ஈன்றாள் = தாய்

மகள் = மகள்

தம் உடன்பிறந்தாள் = உடன் பிறந்த அக்கா தங்கை

ஆயினும் = ஆனாலும்

சான்றார் = பெரியவர்கள், படித்தவர்கள், நல்லவர்கள்

தமித்தா உறையற்க = தனித்து இருக்கக் கூடாது

ஐம்புலனுந் = ஐந்து புலன்களும்

தாங்கற் கரிதாக லான் = கட்டுப் படுத்துவதற்கு கடினமானவை என்பதால்

மற்ற பெண்களோடு தனித்து இருப்பதை தவிருங்கள்

அந்த மாதிரி சந்தர்பங்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தராதீர்கள்


இந்த மாதிரி பாடல்களை பள்ளியில் , இளமைக் காலத்தில் சொல்லித் தந்து விட்டால், பின்னர் அது தானாகவே வந்து விடும். பின்னாளில், ஆணும் பெண்ணும் தனித்து இருக்கும் சந்தர்பங்களில்  இது சரியில்லை என்ற எண்ணம்  அவர்களுக்கு தானாகவே வந்து விடும். 

தவறு செய்ய சந்தர்ப்பம் வராது.

நாம் சொல்லித் தருவது இல்லை.

சிக்கல்களை சந்திக்கிறோம்.  

Thursday, March 26, 2015

ஆசாரக் கோவை - தூங்கும் முறை

ஆசாரக் கோவை - தூங்கும் முறை 


படுக்கப் போகும் முன் எதை நினைத்துக் கொண்டு படுக்கிறோமோ  அதுவே கனவில் வரும்....

இறைவனை கனவிலும் காண வேண்டும்.

ஆண்டாள் அப்படி கண்டாள் ...திருமாலை "கனா கண்டேன் தோழி நான்" என்று பாடினாள். அவனையே நினைத்துக் கொண்டு இருந்தாள், கனவிலும் அவன் வந்தான்.

இன்றோ, பெரியவர்களும் சிறியவர்களும் படுக்கப் போகு முன் தொலைக் காட்சியில் வரும் நிகழ்சிகளைப் பார்க்கிறார்கள். சினிமா, செய்தி என்று பார்த்து விட்டு படுத்தால் அது தான் கனவில் வரும்.

ஆசாரக் கோவை சொல்கிறது,

படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல்மேல் போர்த்தி உறங்குவது நல்லது என்று.

பாடல்


கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

பொருள்

கிடக்குங்காற் = படுக்கும் போது

கைகூப்பித் = கைகளை கூப்பி

தெய்வந் தொழுது = தெய்வத்தை தொழுது

வடக்கொடு = வட திசை மற்றும்

கோணந் = கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு)

தலைசெய்யார் = தலை வைக்காமல்

மீக்கோள் = போர்வை

உடற்கொடுத்துச் = உடலுக்குக் கொடுத்து

சேர்தல் வழி = தூங்குதல் நல்ல வழி

ஒரு நாள் செய்து பாருங்கள். நல்லா இருந்தால் பின் பற்றுங்கள்.


ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது

ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது 


சாப்பிட்டு முடிந்த பின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்பதற்கு ஒரு பாடல். 

இதில் என்ன இருக்கிறது, தண்ணிய வாயில் ஊத்த வேண்டும், கொப்பளிக்க வேண்டும்...இதில் என்னய்யா பெரிய வழி முறை என்று கேட்கிறீர்களா...

Finger Bowl ல், மேஜையில் அமர்ந்து கை கழுவி, வாய் கொப்பளிக்காமல் இருக்க அல்லவா நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்திருக்கிறோம். 

உணவு உட்கொண்டபின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை...

வாயில் ஊற்றிய தண்ணீர் உடலுக்கு உள்ளே போகக் கூடாது. 

தொண்டை வரை நீர் சென்று சுத்தம் செய்ய வேண்டும்

மூன்று முறை நீர் கொப்பளிக்க வேண்டும் 

நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதுவும் எப்படி என்றால் கண், காது , மற்றும் மூக்கு போன்ற அவயங்களை அழுத்தி கழுவ வேண்டும்.


பாடல் 

இழியாமை நன்குமிழ்ந் தெச்சி லறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

சீர் பிரித்த பின் 

இழியாமை நன்கு உமிழ்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்து உறுப்பு 
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

பொருள் 

இழியாமை = இழிதல் என்றால் இறங்குதல். வாயில் விட்ட நீர் உடலுக்கு உள்ளே இறங்கக் கூடாது 

நன்கு உமிழ்து = நல்லா துப்பி 

எச்சில் அறவாய் = வாயில் எச்சில் இல்லாமல் துப்பி 

அடியோடு நன்கு துடைத்து = அடி நாக்கு வரை நன்கு துடைத்து (நீரால் கொப்பளித்து)

வடிவு உடைத்தா = அளவோடு 

முக்காற் = மூன்று முறை 

குடித்துத் துடைத்து = நீரை உண்டு வாய் கழுவி 
 
முகத்து உறுப்பு = முகத்தில் உள்ள உறுப்புகள் (கண், காது , மூக்கு போன்றவை) 
 
ஒத்த வகையால் = அதற்கு பொருந்தும் வகையில் 

விரல் உறுத்தி = விரலால் அழுத்தி 

வாய் பூசல் = வாய் கழுவுதல் 

மிக்கவர் கண்ட நெறி = பெரியவர்கள் கண்ட வழி 

செய்து  பார்ப்போம்.  அப்படி ஒன்றும் பெரிய வேலையாகத் தெரியவில்லை. 

நல்லதை முயன்று பார்த்தால் என்ன ?





Tuesday, March 24, 2015

ஆசாரக் கோவை - எதை எப்போது உண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை - எதை எப்போது உண்ண வேண்டும் ?


பசி என்றால் என்ன ? எப்போது பசி வருகிறது ? உணவு உண்டவுடன் பசி போய் விடுகிறதே எப்படி ?

நமது இரத்தத்தில் சர்கரையின் அளவு குறைந்தால், பசி  எடுக்கும். நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களும் வேலை செய்ய ஆதாரமாய் இருப்பது சர்க்கரை (glucose ). இந்த சர்க்கரையை உடம்பில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் கொண்டு செல்வது இரத்தம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், சர்க்கரை கொண்டுவா சர்க்கரை கொண்டுவா என்று சத்தம் போடும். அந்த சத்தம் தான் பசி.

நாம் உணவு உண்ண ஆரம்பித்தவுடன் சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் சேர்கிறது. சர்க்கரையின் அளவு அதிக பட்ச்சத்தை அடைந்தவுடன் பசி உணர்வு நின்று போகிறது.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது , கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையின் அளவு இரத்தத்தில் கூடும். அது முழுவதும் சேர்வதற்குள் நாம் தேவைக்கு  அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.

நவீன அறிவியல் , சாப்பிட்டு முடிந்து 20 நிமிடம் கழித்துதான் அந்த திருப்தி உணர்வு வருகிறது என்கிறது.

நாம் என்ன செய்கிறோம், அந்த 20 நிமிட இடை வேளையில் இனிப்பு, ஐஸ் கிரீம் என்று மேலும் இனிப்பை உள்ளே தள்ளுகிறோம்.

இரத்தத்தில் ஏற்கனவே உச்ச பச்ச இனிப்பு இருக்கும் போது மேலும் இனிப்பு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேரும்.

எனவே, முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பு, இடையில் மற்ற சுவைகளை சேர்க்க வேண்டும்.


ஆசாரக் கோவை சொல்கிறது,

முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பானவற்றை உண்ண வேண்டும். மற்றவற்றை இவை இரண்டுக்கும் இடையில் உண்ண வேண்டும் ?


பாடல்

கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
துய்க்க முறைவகையா லூண்.

பொருள்

கைப்பன = கசப்பது

வெல்லாங்  = எல்லாம்

கடை = கடைசியில்

தலை =  முதலில்

தித்திப்ப = இனிப்பு

மெச்சும் வகையா = புகழும் படியாக

ஒழிந்த = மற்றவைகள்

விடையாகத் = இடையில் 

துய்க்க  = உண்க

முறைவகையா லூண் = இது முறையாக உண்ணும் முறை

eat the desert first


ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள்

ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள் 


மேஜை நாகரிகம் (Table Manners அல்லது table etiquette ) என்பது என்னவோ மேற்கிந்திய நாடுகளில் உள்ள ஒன்று. அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள  வேண்டும் என்று இன்றைய இளைய தலை முறை நினைக்கலாம்.

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உடன் இருந்து உண்பதின் வழி முறைகளை, நாகரிகத்தை சொன்னது நம் தமிழ் பண்பாடு.

நாம் சாப்பிடும்போது நம் கூட பெரியவர்கள் யாராவது சேர்ந்து உண்டால், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பின்னரே நாம் உண்ணத் தொடங்க வேண்டும். அவர்கள் சாப்பிட்டு எழுந்த பின் தான் நாம் எழ வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், திருமணம் மற்றும் சடங்கு  வீடுகளில் நீ முந்தி நான் முந்தி பந்திக்கு முந்துகிறார்கள். யார் முதல் பந்தியில் இருப்பது என்பதில் போட்டி.

பெரியவர்கள் போட்டி போட்டிக் கொண்டு செல்ல முடியாது. அவர்கள் பின் தங்கி விடுகிறார்கள். அவர்கள் பசியோடு இருப்பார்கள்.

இவை எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

முதலில் வயதில் பெரியவர்களை பந்தியில்  அமரச் செய்து பின் இடம் இருந்தால் மற்றவர்களை அமரச் செய்யலாம்.

இரண்டாவது, விருந்து என்று வந்து விட்டால், சற்று அளவு இல்லாமல் உண்பது என்பது நடக்கிறது. ஒரு நாளைக்குத் தானே, தினமுமா இப்படி ஒரு விருந்து கிடைக்கிறது என்று கண் மண் தெரியாமல் உண்டு உடலை பெருக்க வைக்க வேண்டியது, பின் அல்லல் பட வேண்டியது.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. உண்பதில் நாகரீகம் வேண்டும். 

பாடல்

முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண்
என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

சீர் பிரித்த பின்

முன் துவ்வார் , முன் எழார் மிக்கு உறார் ஊணின் கண் 
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மிற் 
பெரியார் தம் பாலிருந்தக் கால் 

பொருள்

முன் துவ்வார் = (பெரியவர்களுக்கு) முன் உண்ண ஆரம்பிக்க மாட்டார்கள்

முன் எழார் = அவர்கள் எழுவதற்கு முன் எழ மாட்டார்கள்

மிக்கு உறார் = அவர்களுக்கு மிக அருகில் போய் அமர மாட்டார்கள்

ஊணின் கண் = உணவு உண்ணும் இடத்தில் (பந்தியில் )

என் பெறினும் = என்னதான் கிடைத்தாலும்

ஆற்ற வலம் இரார் = வலப் புறம் இருக்க மாட்டார்கள்

தம்மிற் = தம்மை விட

பெரியார் தம் = பெரியவர்கள்

பாலிருந்தக் கால் = உடன் இருக்கும் பொழுது


சொல்லித் தருவோம் மற்றவர்களுக்கும். கொஞ்ச கொஞ்சமாக நாம் நல்லவற்றைப்  பரப்புவோம். நல்லது வளர்கிறதோ இல்லையோ, தீயவை வளராமலாவது  இருக்கும். 


Monday, March 23, 2015

ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன்

ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன் 


சில பேர் சாப்பாட்டுக்கு முன்னால் உட்கார்ந்தால் , அவன் பாட்டுக்கு சாப்பிடுவான், போவான். மத்தவங்க சாப்பிட்டாங்களா, யார் இன்னும் சாப்பிடனும், அதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பான்.

அப்படி இருக்கக் கூடாது. தனக்கு முன்னால் யார் யார் எல்லாம் உணவு உண்டார்கள் என்று கேட்க  வேண்டும். அதற்கு ஒரு பட்டியல் தருகிறது ஆசாரக் கோவை. அந்த பட்டியலில் உள்ளவர்கள் முதலில் உண்ண வேண்டும். அப்புறம் தான் நாம் சாப்பிட வேண்டும்.

முதலில் விருந்தினர் உண்ண வேண்டும். மனைவி மக்கள் கூட இல்லை. முதல் இடம் விருந்தினருக்கு. அமிழ்தாயினும் விருந்து புறத்து இருக்க உண்ணாத பண்பாடு நமது பண்பாடு.

அடுத்தது, வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு உணவு தர வேண்டும்.

அடுத்தது, வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்கள்....பசு, கிளி போன்றவற்றிற்கு உணவு தர வேண்டும்.

இவர்களுக்கு உணவு தந்த பின்னரே வீட்டில் உள்ள மற்றவர்கள் உண்ண வேண்டும்.

பாடல்

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

பொருள்

விருந்தினர் = விருந்தினர்

மூத்தோர் = வயதில் மூத்தோர்

பசு = பசு

சிறை பிள்ளை = கிளிப் பிள்ளை

இவர்க்கூண்  = இவர்கு ஊண் (உணவு )

கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும் = கொடுத்து + அல்லால் + உண்ணாரே + என்றும்

ஒழுக்கம் பிழையா தவர் = ஒழுக்கம் தவறாதவர்கள்

இன்று வாழ்க்கை நெருக்கடி. அலுவகலம் போக வேண்டும், பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டும் என்று முதலில் அவர்களுக்கு உணவு தந்து பின் வீட்டில் உள்ள  பெரியவர்களை கவனிக்க வேண்டி இருக்கிறது.

இருந்தும், பண்பாட்டின் உச்சம் தொட்டு வாழ்ந்த இனம் இந்த தமிழ் இனம்.

நம் கலாசாரத்தை கடை பிடிக்க முடியாவிட்டாலும் அறிந்தாவது கொள்வோமே.

மனதின் ஓரம் கிடக்கட்டும். என்றாவது இதில் கொஞ்சமாவது செய்ய முடிந்தால்  கூட நல்லதுதான்.



Sunday, March 22, 2015

ஆசாரக் கோவை - உண்ணும் முறை

ஆசாரக் கோவை - உண்ணும் முறை 


நமக்கு கிடைத்த மாதிரி முன்னோர்கள் யாருக்குக் கிடைப்பார்கள் ?

எப்படி உணவு உண்ண  வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள் நம் முன்னவர்கள்.

உணவினால் இன்று எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது...

அதிகமாக உண்டு அளவுக்கு அதிகமாக எடை போட்டு அவதிப் படுகிறோம், சர்க்கரை அதிகம் உண்டு சக்கரை நோயால் துன்பப் படுகிறோம், கொழுப்பு கூடி கொலஸ்ட்ரால் வந்து சங்கடப் படுகிறோம், acidity , நெஞ்சு எரிச்சல் என்று எத்தனையோ சிக்கல்கள்....

ஏன் என்றால் எதை உண்பது, எப்படி உண்பது என்று தெரியாததனால்.

எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஆசாரக் கோவை நமக்கு சொல்லிழ்த் தருகிறது.

இன்று பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் உணவு உண்ணும் போது தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டோ அல்லது  ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டோ , கணனியில் மெயில் அல்லது ஏதோ ஒரு வெப் சைட்டை பார்த்துக் கொண்டோ உணவு உண்கிறார்கள். கிரிகெட் மேட்ச் என்றால் அதை பார்த்துக் கொண்டே உண்கிறார்கள். பெரிய பெரிய உணவு விடுதிகளில் பெரிய தொலைக் காட்சி பெட்டி வைத்து அதில் ஏதோ செய்தி ஓடிக் கொண்டிருக்கும், அதைப் பார்த்துக் கொண்டே உணவு உண்கிறார்கள்.

அதே போல, உணவு உண்ணும்போது, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் மதிப்பெண், போன்றவற்றை விவாதம் செய்வது...

அல்லது, வேறு குடும்ப விவகாரங்களை பேசுவது, செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி  பேசுவது என்று  போகிறது.

வேறு சில குடும்பங்களில் பிரச்சனைகளை பேசுவதே சாப்பாட்டு மேஜையில் தான்.

இது அனைத்துமே தவறு என்கிறது ஆசாரக் கோவை.

உணவு உண்ணும் போது வேறு எதையும் பார்க்கக் கூடாது. உணவை மட்டுமே பார்த்து உண்ண வேண்டும்.

நாளை முதல் சாப்பிடும் போது டிவி யை அணைத்து விடுங்கள். புத்தகமோ, புத்தகமோ இருக்கக் கூடாது.

படித்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது.

எதையும் பேசக் கூடாது. நல்லதும் சரி, கெட்டதும் சரி, ஒன்றையும் பேசக் கூடாது.

குறிப்பாக பெண்கள் வீட்டுப் பிரச்சனைகளை சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பது நல்லது.

உணவை தொழுது உண்ண வேண்டும். உணவு உயிர் தரும் பொருள். உயிர் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு உயர்ந்தது உணவு.

மடியில் ஒரு டப்பாவில் பாப் கார்ன் அல்லது பஜ்ஜி அல்லது பிஸ்கட் என்று எதையோ வைத்துக் கொண்டு டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டோ, சினிமா பார்த்துக் கொண்டோ உண்பது கூடாது.

உணவுக்கு மரியாதை தர வேண்டும்.

தெய்வம் போல நினைத்து தொழுது உண்ண வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை.


இப்போது துரித உணவு விடுதிகள் (fast food ) வந்து விட்டன. நின்று கொண்டே சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள். கூடாது. அமர்ந்து தான் உண்ண வேண்டும்.

மேற்கிந்திய காலாசாரம் வந்த பின், bed  காபி என்று வந்து விட்டது. பல் விளக்காமல், படுத்துக் கொண்டே , செய்தித் தாள் வாசித்துக் கொண்டே காபி குடிப்பது என்று வந்து விட்டது. நல்லவற்றை தெரியாமல் விட்டு விட்டோம். கெட்டவற்றை முனைந்து அறிந்து செய்கிறோம்.


உண்ணும்போது கிழக்கு திசையைப் பார்த்து அமர்ந்து உண்ண வேண்டும். உண்ணும் போது தளர்ந்து, தூங்கி விழுந்து கொண்டு இருக்கக் கூடாது. உணவைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. உணவை சிந்தாமல், வீணாக்காமல் உண்ண வேண்டும்.  


பாடல்

உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண்
டுண்க உகாஅமை நன்கு.

சீர் பிரித்த பின்

உண்ணுங் கால்  நோக்கும் திசை கிழக்குக் கண் அமர்ந்து 
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிது யாதும்  நோக்கான்  உரையான்  தொழுது கொண்டு 
உண்க உகாமை  நன்கு.


பொருள்

உண்ணுங் கால் = உண்ணும் போது

நோக்கும் திசை  = பார்க்கும் திசை

கிழக்குக் கண் அமர்ந்து = கிழக்காக அமர்ந்து

தூங்கான் = தூங்காமல். அதாவது உணவில் மனம் செலுத்தாமல்

துளங்காமை = அசையாமல்

நன்கிரீஇ - நன்றாக அமர்ந்து

யாண்டும் = எப்போதும்

பிறிது யாதும்  நோக்கான் = வேறு ஒன்றையும் பார்க்காமல்

உரையான் = வேறு ஒன்றையும் பேசாமல்

தொழுது கொண்டு உண்க = உணவை தொழுது கொண்டு உண்க

உகாஅமை நன்கு.= சிந்தாமல், வீணாக்காமல் உண்பது நல்லது.

குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். முடிந்த வரை வீட்டில் இதை நடைமுறை  படுத்த முயலுங்கள். 

நல்லது நடக்கட்டும்.


Tuesday, March 3, 2015

ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?



எப்படி உணவு உண்ண வேண்டும் என்று ஆசாரக் கோவை மிக விரிவாகச் சொல்கிறது.

அதில் முதல் பாடல்

பாடல்

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து.

பொருள்

நீராடிக் = குளித்து

கால்கழுவி = கால் கழுவி

வாய்பூசி = வாய் கொப்பளித்து

மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையா  சுற்றிலும் நீர் வலம் செய்து

உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப் படுபவர்


அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்

உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல

வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவி செல்வார்கள்

அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து

கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து  (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )

ஏன் இப்படி செய்ய வேண்டும் ?

நீராடி = புரிகிறது. உடலில் உள்ள அழுக்கு போன பின், புத்துணர்வோடு உண்பது ஒரு சுகம்.

கால் கழுவி = ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்னால் நீராட முடியாது. குறைந்த பட்சம் கால் கழுவ வேண்டும். கண்ட இடத்திலும் நடப்பதால், காலில் அசுத்தங்கள் ஒட்டி இருக்கலாம். அவை உணவோடு சேர்ந்து உள்ளே போகாமல்  இருக்க கால் கழுவி.

வாய் பூசி = உண்பதற்கு முன்னால் வேறு எதையாவது குடித்திருப்போம் (காப்பி, டீ ). அது நாவில் ஒட்டி இருக்கும். உணவின் சுவையை அறிய விடாது. வாய் கழவி விட்டால் , உணவின் சுவை நன்றாகத் தெரியும்.

நீர் வலம் செய்து = நீர் சுற்றிலும் இருந்தால் எறும்பு போன்ற ஜந்துக்கள் உணவை நாடி வராது. அதை விட முக்கியமானது, பசி அவசரத்தில் பக்கத்தில் நீர்  எடுத்து வைக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால், திடீரென்று விக்கல் வந்தால்  நீர் இல்லாமல் சிரமப் படுவோம். முதலிலேயே நீர் வலம் செய்தால், அந்த நீர் இருக்கும் அல்லவா.

அப்படி எல்லாம் செய்ய வில்லை என்றால் அரக்கன் வந்து உங்கள் உணவை கொண்டு போய் விடுவான்  என்று சும்மா பயமுருதுரதுதான்....:)





Wednesday, February 18, 2015

ஆசாரக் கோவை - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை  - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?


நீங்கள் நன்றாக உன்னித்து கவனித்துப் பார்த்தால் தெரியும், உங்கள் மனம் எப்போதும் ஒரு நிலையில் இல்லை என்று.

இன்னும் ஆழமாக கவனித்தால் இன்னொன்றும் புரியும்....உங்கள் மன நிலை ஒரு சக்கரம் போல மாறி மாறி சில எண்ணங்களில், குணங்களில் சுழல்வது புரியும்.

இந்த மன நிலையை நம் முன்னவர்கள் மூன்றாகப்  பிரித்தார்கள்.

- சாத்வீகம்
- ராஜசம்
- தாமசம்

நம்முடைய அனைத்து மன நிலைகளையும் இந்த மூன்றுக்குள் அடக்கி விடலாம்.

 சரி,இந்த மூன்று மன நிலைகளும் எப்படி வருகின்றன ? எது இவற்றை மாற்றுகிறது ?

நம் உணவு
நாம் விடும் மூச்சு
கால நிலை

கால நிலை நம் மனதை பாதிக்கிறது என்று நம் முன்னவர்கள்  .கண்டு  அறிந்தார்கள்.

சில எண்ணங்கள்  மாலையிலும்,இரவிலும்  வரும்.

சில எண்ணங்கள் காலையில் வரும். சில  மதியம்.

சிந்தித்துப்  பாருங்கள்.

மதியம், மண்டையைப்  பிளக்கும் வெயிலில் காதலிக்கு முத்தம் தந்தால் எப்படி   இருக்கும் என்று. அப்படி ஒரு எண்ணமே  வராது.

சரி....காலம் நம் மன நிலையை மாற்றுகிறது என்றே வைத்துக்  .கொள்வோம் அதனால் என்ன இப்ப ?

 .வருகிறேன் ....

காலம் நம் மன நிலையை மாற்றும் என்றால், அது ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்கு மாறும் போது ஒரு குழப்பமான மன நிலை  தோன்றும்.

இரவு முடிந்து பகல் தோன்றும் போது , பகல் முடிந்து இரவு தோன்றும் போது ஒரு குழப்பமான மன நிலை தோன்றும்.

ஒன்றிலிருந்து மற்றதுக்குப் போகும்போது சில சலனங்கள் இருக்கும்.

மாலை கொஞ்சம்  மயக்கும்.ஏன் ?

அது போலத்தான் காலையும்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் நேரத்தை  சந்தி நேரம் என்றார்கள்.

இந்த நேரத்தில் வந்தனம் பண்ணுவது சந்தியா வந்தனம் என்று  பெயர்.

பல சந்திகள் இருந்தாலும், இரண்டு சந்திகள்  முக்கியமானவை ...ஒன்று காலைச் சந்தி, மற்றது மாலைச் சந்தி.

இந்த இரண்டு சந்தி வேளையிலும் மனம் மிக அதிகமான அளவில் சலனத்துக்கு உள்ளாகும்.

அந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர , நம் முன்னவர்கள், அந்த நேரத்தில் வழிபாடு பண்ணச்  சொன்னார்கள்.

சிந்தனையை ஒரு கட்டுக்குள்  வைக்கச் சொன்னார்கள்.

குழப்பமான நேரத்தில் மனம் போன வழியில் போனால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். அதை தடுத்து, மனதை நிலைப் படுத்த ஏற்பட்டது தான் சந்தியா வந்தனங்களும் , காலை , மாலை  வழிபாடுகளும்.

இஸ்லாமியர்கள் ஐந்து முறை  .தொழுகிறார்கள். ஐந்து சந்தி உண்டு.

ஆசாரக் கோவை இந்த வழிபாட்டைப் பற்றிச்  சொல்கிறது.

பாடல்

 நாள் அந்தி, கோல் தின்று, கண் கழீஇ, தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.

பொருள்  -  சுருக்கம்

காலையில் பல் துலக்கி, முகம் கழுவி தெய்வத்தை தான் அறிந்தவாறு தொழுது எழுக. மாலையில் நின்று தொழுவது சரி  அல்ல.  பழி.

பொருள்

நாள் அந்தி = அதிகாலையில்

கோல் தின்று = ஆலம்  குச்சி,அரசம் குச்சி இவற்றால் பல் துலக்கி

கண் கழீஇ = கண் கழுவி (முகம் கழுவி )

தெய்வத்தைத் = தெய்வத்தை

தான் அறியுமாற்றால் = நீங்கள் அறிந்த படி (மற்றவர்கள் சொன்ன படி அல்ல)

தொழுது எழுக! = தொழுது எழுக

அல்கு அந்தி = அல்கு என்றால் இரவு. அல்கு அந்தி என்றால்  மாலையில்

நின்று தொழுதல் பழி = நின்றபடி இறைவனை தொழக் கூடாது. அமர்ந்துதான் தொழ வேண்டும்.

நல்லது நிறைய  சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.

செய்கிறோமோ இல்லையோ, தெரிந்தாவது கொள்வோம்.












Thursday, February 12, 2015

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை 


ஆசாரக் கோவை என்பது பெரியவர்கள், அறிஞர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட நல்ல வாழ்கை முறைகளின் தொகுப்பு.

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டும். நமக்கும் உதவும்.

அதிலிருந்து சில பாடல்கள்.

ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறது கீழே வரும் பாடல்.

காலையில் எழ வேண்டும். காலை என்றால் ஏதோ ஆறு அல்லது ஏழு மணி அல்ல. நாலு அல்லது ஐந்து மணிக்கு எழ வேண்டும். வைகறையில் எழ வேண்டும்.

எழுந்தவுடன், அன்று செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். யாருக்கு உதவி செய்யலாம், என்ன தர்மம் செய்யலாம், என்ன படிக்கலாம் என்று நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல காரியம் செய்கிறோமோ இல்லையோ, மனம் கெட்ட வழியில் போகாது.

அடுத்தது, பொருள் தேடும் வழி பற்றி சிந்திக்க வேண்டும். இன்று அலுவலகத்தில், வேலையில் , பள்ளியில், கல்லூரியில் , தொழிலில், கடையில் என்ன செய்தால் நமக்கு பொருள் வரவு கூடும், உத்தியோக உயர்வு கூடும், நல்ல rating கிடைக்கும், இலாபம் பெருகும், அதிக மதிப்பெண் வரும், என்று சிந்தித்து அதற்கான வழிகளை காண வேண்டும்.

அடுத்து, பெற்றோரை தொழ வேண்டும்.

பாடல்

வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள்

வைகறை யாமந் துயிலெழுந்து = நள்ளிரவு தாண்டி வரும் அதிகாலையில் தூக்கத்தை விட்டு எழுந்து


தான்செய்யும் = தான் செய்ய வேண்டிய

நல்லறமு = நல்ல அறங்களையும்

மொண்பொருளுஞ் = ஒள்  பொருளும் = ஒளி பொருந்திய பொருள். அதாவது வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் பொருள்கள். வாழ்வை பிரகாசமாக்கும் பொருள்கள். கல்வி, செல்வம், போன்றவை.

சிந்தித்து = எப்படி பெறுவது என்று சிந்தித்து.  அதை எப்படி அடைவது என்று திட்டமிட்டு

வாய்வதில் = வாய்புடைய

தந்தையுந் தாயுந்  = தந்தையையும் தாயையும்

தொழுதெழுக = தொழுது எழுக

என்பதே = என்பதே

முந்தையோர் கண்ட முறை = நம் முன்னவர்கள் கண்ட முறை.

இதைவிடவும் வாழ்வில் வெற்றி பெற இன்னுமொரு வழி இருக்குமா  என்ன ?

புதையலின் மேல் அமர்ந்து வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்த பிச்சைக் காரனைப் போல  நமக்கு வாய்த்த செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு மேலை  நாடுகளில் இருந்து பாடம் பயில முயல்கிறோம்.

நம் பெருமை அறிவோம்




Monday, July 9, 2012

ஆசாரக் கோவை - இறைவனை தொழுவது எப்படி ?


ஆசாரக் கோவை - இறைவனை தொழுவது எப்படி ?


அதி காலையில் பல் விளக்கி, முகம் கழுவி தெய்வத்தை அவரவர் சமய முறைப்படி தொழ வேண்டும்.

மாலையில் இறைவனை தொழும் போது, நின்று கொண்டே தொழக் கூடாது. தரையில் அமர்ந்து தொழ வேண்டும்.

பாடல்



Saturday, June 23, 2012

ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


நம் உடல் நலம், தன் மனைவி, நம்மிடம் பொறுப்பாக பிறர் கொடுத்த பொருள், நம் வாழ்கைக்கு நாம் சேமித்து வைத்த செல்வம் இந்த நான்கையும் பொன் போல பாதுகாக்க வேண்டும்.

Thursday, June 21, 2012

ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது


ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது

சில சமயம் வயது வந்த ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் தனியே வீட்டில் விட்டுவிட்டு போக பெற்றோர்களுக்குத் தயக்கமாய் இருக்கும்.

சின்ன பசங்க, ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கும்.

ஆசாரக் கோவை ஒரு படி மேலே போகிறது.

Tuesday, June 19, 2012

ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது


ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது


எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....:)

Monday, June 18, 2012

ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை


ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை


உணவு பற்றி ஆசாரக் கோவை நிறையவே சொல்கிறது. அதில் முதல் பாடல் 

ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


உடை உடுத்தலை பற்றி ஆசாரக் கோவை சில வழி முறைகளை கூறுகிறது.

ஒரு ஆடை கூட உடுத்தாமல் நீராடக் கூடாது (இது பொது இடங்களில், ஆறு, குளம் போன்ற இடங்களை குறிக்கும் என்று நினைக்கிறேன்),

ஒரு ஆடை மட்டும் உடுத்து உணவு உண்ணக் கூடாது, குறைந்த பட்சம்

இரண்டு ஆடையாவது உடுத்தி இருக்க வேண்டும்,

உடுத்திய ஆடையை நீரினுள் பிழியக் கூடாது,

ஒரு ஆடை மட்டும் உடுத்து பொது சபையில் நுழையக் கூடாது