Thursday, July 31, 2014

திருபூவல்லி - சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்

திருபூவல்லி - சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் 


வாழ்க்கைக்குத் துணை அவசியம்.

யார் அல்லது எது துணை என்பதில்தான் சிக்கல்.

பிள்ளைகள் துணையா ? அவர்கள் வாழ்க்கை வேறு போக்கில் போய் விடும். அவர்களை நம்பி பயன் இல்லை. கடைசிக் காலத்தில், அவர்களின் வேலையையயும் குடும்பத்தையும் விட்டு விட்டு நம் பக்கம் வந்து  இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மதியீனம்.

அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமன், மச்சான் என்ற உறவுகள் எல்லாம்  பேருக்குத்தான்.

கணவன் மனைவி - முடியலாம். வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் பாரம்தான். ஒருவேளை சகித்துப் போகலாம்.


ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பது பட்டினத்தார் வாக்கு 


மாணிக்க வாசகர் கூறுகிறார்....

இறைவா நீ உன் திருவடிகளை என்   தலை மேல் வைத்த பின் எனக்கு துணை என்று இருந்த சுற்றங்கள் அத்தனையும் துறந்து  விட்டேன். அப்பேற்பட்ட சிவனின்  பெருமைகளைப் பாடி நாம் பூ கொய்வோம்

பாடல்

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பொருள்

இணையார் திருவடி = இணையான இரண்டு திருவடிகளை

என்தலைமேல் = என் தலைமேல்

வைத்தலுமே = வைத்தவுடன்

துணையான சுற்றங்கள் = துணையான சுற்றங்கள்

அத்தனையுந் = அனைத்தையும்

துறந்தொழிந்தேன் = துறந்தேன்

அணையார் = அணையில் உள்ள

புனற்றில்லை = நீர் ஆடும் தில்லை

அம்பலத்தே ஆடுகின்ற = அம்பலத்தே ஆடுகின்ற

புணையாளன் = துணைவன்

சீர்பாடிப் = பெருமைகளைப் பாடி

 பூவல்லி கொய்யாமோ = நாம் பூ கொய்வோம்

இறைவனின் திருவடிகள் என்று நம் மதம் கூறுவது ஒரு குறியீடு. திருவடி என்பது ஞானம்.

ஞானம் வரும்போது பற்றுகள் அகலும்.

திருவடி என்பது ஞானம் என்பது சரியா ?

மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.







Wednesday, July 30, 2014

தேவாரம் - என் வேதனையை விலக்கிடாய்

தேவாரம் - என் வேதனையை விலக்கிடாய் 


மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனின் ஆணவம்.

நான் , எனது என்ற ஆணவமே அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்.

நான் பெரியவன் - இறுமாப்பு

என்னைப் பற்றி தவறாகச் சொன்னால் - கோபம் வருகிறது

எனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வருகிறது

என்னை மதிக்க வில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை

நான் உண்மையில் பெரிய ஆள் இல்லையோ என்ற சந்தேகம்

என் உடமைகளை யாரும் கவர்ந்து கொள்வார்களோ என்ற பயம்

என்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்

அவள் எனக்குத் தான் சொந்தம் என்ற காமம்

அது எனக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற தவிப்பு

நான் செய்த தவறு மற்றவர்களுக்குத் தெரிய வந்தால் என் மதிப்பு என்ன ஆகும் என்ற கவலை

என்று நமக்கு வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் ஆணவம்.

ஆணவ மலம் ஆதி மலம். குழந்தையாக இருக்கும்போதே நம்மோடு வந்து  விடுகிறது.

தேவாரத்தில், அப்பர் ஸ்வாமிகள் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது  பாட்டில்  இராவணனை  குறித்து  பாடுவார்.

இராவணன் ஆணவத்தின் உச்சம். அவனுக்கே அருள் புரிந்தாயே எனக்கும் அருள் புரி என்ற வேண்டுதலாக இருக்கும் அந்த பாடல்கள்.

நாம் ஒன்றும் இராவணனுக்கு குறைந்தவர்கள் அல்ல. அவனுக்கு பலம் இருந்தது, ஆணவமும் இருந்தது.

நாம் பலம் இல்லாமலேயே அவனை விட அதிகம் ஆணவம் கொண்டு அலைகிறோம் .

அவனை விட பெரிய ஆணவக்காரார்கள் நாம்.

அப்பர் குறிப்பிடும் இராவணன் நாம் தான் என்று எண்ணிப் பார்த்தால் பதிகம்  விளங்கும்.


பாடல்

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங்காநட மாடவல்லாய்

ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்

வேர்த்தும்புரண்டும்விழுந் தும்எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார்புனல் சூழ்அதிகைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

சீர்  பிரித்த பின்

போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!

ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்-

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

பொருள்

போர்த்தாய் = போர்த்திக் கொண்டாய். உடுத்திக் கொண்டாய்

அங்கு = அங்கு

ஒர் ஆனையின் = ஒரு யானையின்

ஈர் உரி-தோல்! = உரித்த தோலை

புறங்காடு = புறத்தே இருக்கும் காடு, சுடுகாடு

அரங்கா = அதை அரங்கமாகக் கொண்டவனே

நடம் ஆட வல்லாய் = நன்றாக நடனம் ஆட வல்லாய்

ஆர்த்தான் = ஆரவாரித்தான்

அரக்கன் தனை = இராவணன் தன்னை

மால் வரைக் கீழ் = கயிலை மலையின் கீழ்

அடர்த்திட்டு = நழுக்கி, அழுத்தி

அருள் செய்த  அது கருதாய் = பின் அருள் செய்த அதை நினைக்க மாட்டாய்

வேர்த்தும் = வியர்த்து

புரண்டும் = புரண்டு

விழுந்தும் எழுந்தால் = விழுந்தும் எழுந்தால்

என் வேதனை ஆன விலக்கியிடாய் = என் வேதனைகளை விலக்க மாட்டாய்

ஆர்த்து ஆர் புனல் சூழ் = பொங்கி வரும் நீர் சூழ்ந்து வரும்

அதிகைக் = திருவதிகை என்ற திருத் தலத்தில்

கெடில = கெடில நதிக் கரையில்

வீரட்டானத்து உறை அம்மானே = எட்டு வீரட்டானங்களுள் ஒன்றான அங்கு வாழும் என் அம்மானே

ஆணவம் துன்பத்தைத்  தரும்.

ஆண்டவனிடம் சரண் அடைவது அந்த ஆணவத்தைப்  போக்கும்.

நாம் சரண் அடைவதால் அவனுக்கு ஆகப் போவது என்ன.

நம் ஆணவம் குறையும். அதனால் துன்பம் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் மனபலம் வரும்.

கைலாய மலையைத் தூக்கிய இராவணன் துன்பப் பட்டான் என்றால் நாம் எம்மாத்திரம்.

ஆணவம் மனிதனை அளவுக்கு அதிகமாக ஆட வைக்கிறது. மலையைத் தூக்கினால்  என்ன என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திப்போம்



Monday, July 28, 2014

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை 


ஒருவனுக்கு ஒரு வேலை வரவில்லை என்றால் விட்டு விடவேண்டும். வரதா ஒன்றை செய் செய் என்று அவனை வற்புறுத்தக் கூடாது. அப்படி வற்புறுத்தாமல் இருப்பது இனிமையானது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நினைவோடு வாழ்ந்தால் நல்லதே செய்யத் தோன்றும். எப்போது வேண்டுமானாலும் போய் விடுவோம். இருக்கும் வரை நாலு நல்லது செய்துவிட்டு போவோம். வாழ்வு ஒரு நாள் முடியும். கூற்றுவன் வருவது நிச்சயம் என்று எண்ணி வாழ்வது இனிமை.

இன்பமும், துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வம் வருவதும், போவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும். செல்வம் குறைந்த போது அறம் அல்லாதவற்றை கூறாமல் இருப்பது நலம்.

பாடல்

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.


சீர் பிரித்த பின்

ஆற்றானை ஆற்று என்று அழியாமை முன்இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

பொருள்

ஆற்றானை = ஒரு செயலை செய்ய முடியாதவனை

ஆற்று என்று  = செய் என்று  கூறி

அழியாமை முன்இனிதே = துன்பப்படாமல் இருப்பது இனிது

கூற்றம் = எமன்

வரவு = வருவது

உண்மை = உண்மை என்று

சிந்தித்து வாழ்வினிதே = சிந்தித்து வாழ்வது இனிது

இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி ஒருத்தருக்கும் தீவினை எண்ணாதே என்றார் பட்டினத்தார்

ஆக்கம் அழியினும் = செல்வம் அழிந்தாலும்

அல்லவை கூறாத = நல்லவை அல்லாதவற்றை கூறாமல் இருக்கும் 

தேர்ச்சியின் தேர்வினியது இல்.= தெளிந்த அறிவைப் போன்ற இனிமையானது  வேறு ஒன்றும் இல்லை. 

Sunday, July 27, 2014

திருக்குறள் - கற்க கசடற

திருக்குறள் - கற்க கசடற 


எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் .


கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்கு தக 

கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

நல்ல அர்த்தம் உள்ள குறள்  தான்.

சிந்திக்க சிந்திக்க புதுப் புது அர்த்தங்களை தரும் குறள் .

எதை கற்க வேண்டும் ? கற்பவை கற்க வேண்டும். எது கற்பவை ?

கற்க கசடற = கசடு என்றால் ஒரு திரவத்தை வடி கட்டும் போது, வடி கட்டியில் கொஞ்சம் தங்கி விடும். அதற்கு கசடு என்று பெயர்.  அதே போல் படிக்கும் போது சில விஷயங்கள் புரியாமல் இருக்கும். அந்த மாதிரி புரியாதது ஒன்றும் இல்லாமல், அனைத்தும் புரியும் படி கற்க வேண்டும்.

இன்னொரு பொருள்,

கற்பது, மனதில் உள்ள கசடுகளை போக்க வேண்டும். உயர்ந்த நூல்களை படித்த பின்னும் மன மாசுகள் போக வில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்.

மனம் மட்டும் அல்ல மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் உள்ள கசடுகளை போக்க வேண்டும்.

வாக்கில் இனிமை வேண்டும்.

செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.

மனம் தூயதாக இருக்க வேண்டும்.

நம் மனம், மொழி, மெய்யை கசடு இல்லாமல் ஆக்கும் விஷயங்களை கற்க வேண்டும்.

சரி, யார் கற்க வேண்டும் ?

தன் உயிரையும் பிற உயிரையும் காக்கும் பொறுப்பில் உள்ள அரசன் அல்லது தலைவன் இப்படி கற்க வேண்டும் என்று கூறுவது போல இந்த குரல் அரசியல் அதிகாரத்தில் வருகிறது.





கம்ப இராமாயணம் - பிரிவின் மன நிலை

கம்ப இராமாயணம் - பிரிவின் மன நிலை


மனைவி: ஏங்க இன்னைக்கு சினிமாவுக்கு போலாமா ?

கணவன்: சரி, சாயங்காலம் office முடிஞ்சு நேரா தியேட்டருக்கு வந்திர்றேன். நீயும் வந்திரு...

மனைவி: சரிங்க....

சாயங்கலாம் கணவன் வர கொஞ்ச நேரம் ஆச்சு....

மனைவி: (தனக்குள்ளேயே)....எப்பவுமே இப்படித்தான்...ஒரு நாள் கூட சொன்ன நேரத்துக்கு வர்றது கிடையாது. ஒரு விஷயம் சொன்னா அது படி நடக்கிறது கிடையாது. ஒரு காரியம் உருப்படியா செய்யத் தெரியுதா....எப்படித்தான் இவரை எல்லாம் வச்சு வேலை வாங்குறாங்களோ....

இப்படி கணவன் மேல் எரிந்து விழும் பெண்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். எரிச்சல் வர கொஞ்ச முன்ன பின்ன ஆகலாம் ....ஆனால் கட்டாயம் வரும்.

சரி, அது அப்படியே இருக்கட்டும்.....

அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராமன் வந்து சிறை மீட்பான் என்ற நம்பிக்கையோடு.

சீதை என்ன நினைத்திருக்க வேண்டும்.....இராமன் மேல் கோபித்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் எரிச்சலாவது பட்டிருக்க வேண்டும்....

சீதை நினைக்கிறாள் ...

"அவருக்கு உணவை தானா எடுத்துப் போட்டுச் சாப்பிடத் தெரியாதே..யார் அவருக்கு வேளா வேளைக்கு உணவு தருகிறார்களோ ? அவரைப் பார்க்க யாராவது வந்தால் வந்தவர்களை எப்படி உபசரிப்பார் ? " என்று விம்முகிறாள்.

"எனக்கு வந்த இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா ?" என்று இருந்த இடத்தை விட்டு நகர வில்லையாம். இருந்த இடம் செல் அரித்துப் போனது. இருந்தும் அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.....


பாடல்

அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள்

அருந்தும் = உண்ணும்

மெல் அடகு = மென்மையான காய் கனிகளை

ஆர் இட அருந்தும்? = யார் போட சாப்பிடுவார் ?

என்று அழுங்கும் = என்று மனதுக்குள் அழுந்தினாள்

‘விருந்து கண்டபோது என் உறுமோ?  = விருந்தினர் வந்தால் என்ன பாடு படுவாரோ

என்று விம்மும் = என்று நினைத்து விம்முவாள்

‘மருந்தும் உண்டுகொல் = மருந்து இருக்கிறதா ?

யான்கொண்ட நோய்க்கு? = எனக்கு வந்த இந்த நோய்க்கு

என்று மயங்கும் = என்று மயங்குவாள்

இருந்த மா நிலம் = இருந்த இடத்தில்

 செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் = செல் (கரையான்) அரித்துப் போன பின்பும் அந்த இடத்தை விட்டு எழாமல் அதே இடத்தில் இருந்தாள்

தன்னைப் பற்றி அவள் கவலைப் படவில்லை.

இராமனைப் பற்றி கவலைப் படுகிறாள்.

இதில் சில வாழ்க்கைப் பாடங்கள் நமக்கு கிடைக்கிறது.

உயர்ந்தவர்களின் வாழ்கையே ஒரு பாடம் தானே:

1. மனைவி பரிமாறி கணவன் சாப்பிட வேண்டும் ? ஏன் ? அவருக்கு கை கால் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. மனைவி பரிமாறி கணவன் உண்பதில் சில தாம்பத்திய இரகசியங்கள் இருக்கிறது.....

- கணவனோடு இடைஞ்சல் இல்லாமல் பேசலாம்

- அவன் வேறு எங்காவது சாப்பிட்டு விட்டு வந்தானா என்று தெரியும்

- எனக்காக இவள் விழித்திருந்து உணவு பரிமாறுகிறாள் என்ற எண்ணம் வரும்போது , அவள் மேல் இன்னும் காதல் பிறக்கும்.

- உணவு சரியாக இருக்கிறதா என்று அவன் முகம் பார்த்து அறிய முடியும்

- எங்க ஊர் சுற்றப் போனாலும், கணவன் உண்ணும் நேரம் வீட்டுக்கு வர வேண்டும் என்று தோன்றும். "எல்லாம் டேபிள் மேலதான் இருக்கு...போட்டு சாப்பிடுங்க" என்று sms அனுப்பத் தோன்றாது. ஐயோ, நான் இல்லை என்றால் அவர் பசித்து இருப்பாரே என்ற அன்பு தோன்றும். "அவள் வரட்டும் " என்று கணவன் காத்திருக்க வேண்டும். இது தாம்பத்ய இரகசியம்.

தானாக போட்டு சாப்பிட ஆரம்பித்தால் பலதும் தானாகச் செய்ய தொடங்கி விடுவான்.

கணவனுக்கு மனைவி மேல் ஒரு சார்பு இருக்க வேண்டும். மனைவிக்கும் அப்படித்தான். நீ இல்லாமல் நான் இருக்க முடியும், நான் இல்லாமல் அவள்/வான் சமாளித்துக் கொள்வான்  என்று காண்பிக்கத் தொடங்கிவிட்டால் குடும்பப் பிடிப்பு தளரும்.

சீதை பரிமாறி இருக்கிறாள். நான் பெரிய சக்கரவர்த்தி மகள். நான் ஏன் பரிமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.


2. விருந்தோம்பல் எந்த அளவிற்கு உயர்ந்து இருந்திருக்கிறது. கணவனும் மனைவியும் பிரிந்து துன்பப் படுகிறார்கள். அவர்கள் கவலை விருந்தினரை எப்படி உபசரிப்பது   என்று.  நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள். விருந்தோம்பல் என்று ஒரு அதிகாரத்தை அறத்துப் பாலில் வைத்தவர்கள் நம்மவர்கள். இந்த கால குழந்தைகள் விருந்தினர் வந்தால் "வாங்க " என்று கூட சொல்லுவது இல்லை. பண்பாடுகள் சிதைந்து வருகிறது.

இலக்கியம் படிக்கும் போது சிறிது வாழ்க்கைப் பாடமும் படிப்போமே.

இது வரை எப்படியோ. இதைப் படித்த பின் இன்று முதல் கடை பிடித்துப் பாருங்கள்.

வாழ்க்கையில் இன்னமொரு இனிமை சேரும்.






Saturday, July 26, 2014

ஐந்திணை ஐம்பது - கேட்க நினைத்தது ஒன்று உண்டு

ஐந்திணை ஐம்பது -  கேட்க நினைத்தது  ஒன்று உண்டு 


காதலை சொல்வது ஒன்றும் அத்தனை எளிதான செயலாகத் தெரியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை அது வயிற்றிக்குள் அமிலம் வார்க்கும் சங்கடமாகத்தான் இருந்து வந்து இருக்கிறது.

ஆசை ஒரு புறம், பயம் ஒரு புறம், காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம், சொல்லாமல் இருந்தால் பின் எப்படிதான் சம்மதம் பெறுவது என்ற சந்தேகம் ஒரு புறம்...

பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த அவஸ்தை.

சங்க காலத்தில் ஒரு நிகழ்வு.

அவளும், அவளின் தோழியும் பயிரை பறவைகள் அண்டாமல் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவன் அந்தப் பக்கம் வருகிறான். பார்த்த உடன் காதல். அல்லது பல நாள் பார்த்து வந்திருக்கலாம். இன்று எப்படியாவது பேசி விடுவது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சென்று கேட்டே விடுகிறான்

"மான் இந்தப் பக்கம் வந்ததா" என்று.

சொல்ல நினைத்தது அவன் காதலை.

 கேட்க்க நினைத்தது அவளின் சம்மதத்தை

சொல்லி நின்றது " மான் இந்த இந்தப் பக்கம் வந்ததா " என்று.

தோழிக்கு தெரியாதா என்ன ?

தலைவியிடம் சொல்கிறாள்....அவன் கேட்டதில் இன்னொன்றும் உண்டு என்று. மானை மட்டும் அல்ல....அவன் வேறு ஒன்றையும் கேட்டான் என்று புன்னகயுடன் கூறுகிறாள்...

பாடல்

புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் ! சாரற்
றினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.


சீர் பிரித்த பின்

புனை பூந்தழை அல்குல்  பொன் அன்னாய் ! சாரற்
தினை காத்திருந்தேம் யாமாக - வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவலுற்றது ஒன்று உண்டு 

பொருள்


புனை= புனைந்த , தொடுக்கப் பட்ட

பூ = பூ

தழை  = தழைகள்

அல்குல் = இடுப்பினை உடைய

பொன் அன்னாய்  ! = பொன் போன்றவளே

சாரற் = மாலைச் சாரலில்

தினை காத்திருந்தேம் = தினைப் புனங்களை காத்து இருந்தோம்

யாமாக = தானாக

வினை வாய்த்து = வேலை காரணமாக (என்ன வேலை ?)

மா = மான்

வினவுவார் போல = (இந்தப் பக்கம் வந்ததா என்று ) வினவுவார் போல

வந்தவர் = வந்த தலைவன்

நம்மாட்டுத் = நம்மிடம்

தாம் வினவலுற்றது = அவன்    கேட்க நினைத்தது 

ஒன்று உண்டு =  ஒன்று உண்டு 




Friday, July 25, 2014

ஐந்திணை ஐம்பது - உன்னைத் காற்று வந்து என்னைத் தொட்டது

ஐந்திணை ஐம்பது - உன்னைத்  காற்று வந்து என்னைத் தொட்டது 


காதலர்கள் பிரிந்து இருந்தால் அவர்கள் காதலோ காதலியோ தந்த ஏதோ ஒரு பொருளை கையில் வைத்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது கையில் இருக்கும் போது ஏதோ அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் அருகில் இருப்பது போலவே அவர்களுக்குத்  தோன்றும்.

அவர்கள் தந்த சாக்லேட்-ன் பேப்பர், அவள் தலையில் இருந்த உதிர்ந்த பூவின் இதழ், அவள் எழுதிய கடிதம்  என்று ஏதோ அவளை நினைவூட்டும் ஒன்று அவனுக்கு.

அவளுக்கும் அப்படித்தான்.

இங்கே, ஒரு சங்க காலப் பெண். அவளின் காதலன் கொஞ்ச நாளாகவே அவளைப் பார்க்க  வரவில்லை.அவளின் தோழி "அவ்வளவுதான், அவன் உன்னை மறந்து விட்டான்...இனி மேல் வரமாட்டான் " என்று பயமுறுத்திக் கொடிருக்கிறாள்.

அவள் அதற்கெல்லாம்    பயப் படுபவள் அல்ல.

"அவன் என் தோள்களைச் சேர மாட்டான் என்றா சொல்கிறாய். பரவாயில்லை. அவன் ஊரின் வழியே வரும் ஆறு நம் ஊருக்கும் வருகிறது. அந்த ஆற்றில் நான் நீராடுவேன் என்கிறாள் "

அவனும் அந்த ஆற்றில் நீராடி இருப்பான். அவன் மேல் பட்ட நீர் என் மேலும் படும். அதுவே அவன் என்னை அணைத்த மாதிரி என்கிறாள்.

இந்த ஆறு, அவனின் நீண்ட கைகள் போல என்னை வந்து தீண்டும் என்கிறாள்.

நாங்கள் ஒருவர் இந்த நீர்க் கைகளால் பற்றிக் கொள்வோம் என்கிறாள்.

பாடல்


கானக நாடன் கலவானென் றோளென்று
மானமர் கண்ணாய் ! மயங்கனீ ;- நானங்
கலந்திழியு நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பு மகன் றுநில் லா.


சீர்  பிரித்த பின்

கானக நாடன் கலவான் என் தோள் என்று 
மான் அமர் கண்ணாய் ! மயங்க நீ ; - நானம் 
கலந்து இழியும் நன் மலை மேல் வால் அருவி ஆடப் 
புலம்பும்  அகன்று நில்லா 


பொருள்

கானக நாடன் = காண்க நாட்டின் தலைவன்

கலவான் = கலக்க மாட்டான்

என் தோள் என்று = என்னுடைய தோள்களை என்று

மான் அமர் கண்ணாய் ! = மான் போன்ற கண்களைக் கொண்ட என் தோழியே

 மயங்க நீ ;  = நீ மயங்காதே

நானம் = நறுமணப் பொருள்கள்

கலந்து இழியும் = கலந்து இறங்கி வரும் (அருவி)

 நன் மலை மேல் வால் அருவி = நல்ல மலை மேல் உள்ள அருவி

ஆடப் = நீர் ஆடினால்

புலம்பும்  அகன்று = அவன் வரவில்லையே, அவனைக் காண முடியவில்லையே, அவன் என் தோள்களைச் சேரவில்லையே என்ற புலம்பல் அகன்று

நில்லா = நில்லாமல் ஓடி விடும்

எவ்வளவு மென்மையான காதல். எவ்வளவு நம்பிக்கை. எவ்வளவு குழந்தைத் தனம். எவ்வளவு  தாபம்.

உணர்சிகள் இந்த அளவு மென்மை பட்டு , ஆழமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களின் பண்பாடு எந்த அளவு உயர்ந்து இருக்க வேண்டும் - அந்தக் காலத்தில்

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்து  இருக்கிறார்கள்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்றானே பாரதி அது போல.

யார் கண்டது...அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின் .....பாட்டியாகக்... கூட இருக்கலாம்.

நம் பரம்பரை அப்படி.

நம் பாரம்பரியம் அப்படி.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நீங்கள்.

சற்றே நிமிர்ந்து நடவுங்கள்.



Thursday, July 24, 2014

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள்

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள் 


தோழி: ஏண்டி, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே தனியாக பார்ப்பதும், சிரிப்பதும் இருப்பதும்....உங்க கல்யாணம் பத்தி அவன் கிட்ட பேசுனியா ?

அவள்: ம்ம்ம்...இல்லடி...இனிமே தான் பேசணும்....

தோழி: ஏன் இன்னும் பேசாம இருக்க ?

அவள்: அவனே இந்த பேச்சை எடுப்பான்னு இருக்கேன்....

தோழி: உனக்கு இந்த ஆம்பிளைங்கள தெரியாது...இதை எல்லாம் பத்தி அவங்க யோசிக்கிறது கிடையாது...

அவள்: நானே எப்படிடி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்குறது ?

தோழி: ஐயோடா...இதுக்கு மட்டும் வெக்கமாக்கும்...இங்க பாரு, இன்னிக்கு கட்டாயம் இந்த பேச்சை எடு...காலா காலத்தில கல்யாணம் பண்ற வழியப் பாரு...என்ன சரிதான ? சரி சரின்னு இங்க மண்டைய ஆட்டு ...அங்க போய் ஒண்ணும் சொல்லாத  என்ன....

அவள்: புன்முறுவல் பூத்தாள் .....

பாடல்

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!-
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி, இனிது.

பொருள்

பொன் இணர் = பொன் போன்ற நிறம் கொண்ட

வேங்கை = வேங்கை மரங்கள் நிறைந்த

கவினிய = அழகான

பூம் பொழிலுள் = பூஞ்சோலையில்

நன் மலை நாடன் = மலை நாட்டில் உள்ள அந்த நல்லவன் (தலைவன்)

நலம் புனைய = உன்னுடைய நலன்களை இரசிக்க, பாராட்ட

மென்முலையாய்!- = மென்மையான முலைகளை கொண்டவளே

போயின, சில் நாள் = சில நாட்கள் போய் விட்டன

 புனத்து மறையினால் = புன்னை மரங்களின் மறைவில்

ஏயினர் இன்றி = தடை சொல்பவர் யாரும் இன்றி. யாரும் பார்க்காமல்

இனிது = இனிமையாக.


அதாவது கொஞ்ச நாள் நீங்கள் தனிமையில் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் நாட்கள் இனிமையாகப்  போகின்றன. ஏதாவது தப்பு  தண்டா  நடந்து இருக்கப் போகுது என்று தோழி கவலைப்  படுகிறாள்.

"உன் நலம் புனைந்து" உன் அழகை இரசித்து

"ஏயினர் இன்றி" = தடுப்பவர்கள் யாரும் இன்றி, தடை இன்றி

 "போயின சில் நாள் , இனிது" = சில நாட்கள் இனிமையாகப் போயின

"மென் முலையாய்" = மென்மையான முலைகளை கொண்டவளே

என்று சொல்வதின் மூலம் இலை மறை காயாக சொல்ல வேண்டியதை சொல்லி  விடுகிறாள் தோழி.

அவள் சொல்லாமல் விட்டதுதான் இந்த கவிதையின் சுவையான பகுதி.

எழுதாத கவிதை அது



கம்ப இராமாயணம் - எதுதான் கடவுள் ?

கம்ப இராமாயணம் - எதுதான் கடவுள் ?


கடவுளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்த கம்பர் யுத்த காண்டத்தில் முத்தாய்பாக ஒன்று  சொல்கிறார்.

கடவுள் ஒன்று என்றால் ஒன்று, பல என்றால் பல, தன்மை இல்லாதது என்றால் அப்படித்தான், தன்மை உள்ளது என்றால் அதுவும் சரிதான், இல்லை என்றால் இல்லைதான், உள்ளது என்றால் உள்ளது, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று  முடிக்கிறார்.

கடவுள் இல்லை என்று சொன்னால் கடவுள் இல்லைதான். அப்படி ஒன்று இருந்து விட்டுப்  போகட்டுமே.இல்லாமல் இருப்பது என்ற ஒரு குணம் மட்டும் கடவுளுக்கு இல்லாமல் இருப்பானேன். அந்த குணமும் அவருக்கு உண்டு.

பாடல்

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம்,
    பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
    ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
    உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
    நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!

பொருள் 

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம் = கடவுள் ஒன்று தான் என்று சொன்னால் ஒன்றுதான்.

பல என்று உரைக்கின் பல ஏ ஆம் = ஒன்றல்ல, பல என்று சொன்னால் அது பலவாக இருக்கும்


அன்றே என்னின் அன்றேயாம் = அதற்கு ஒரு குணமும் இல்லை என்று சொன்னால் ஒரு குணமும் இல்லை


ஆமே என்னின் ஆம் ஏ ஆம் = அதற்கு பல குணங்கள் உண்டு என்று சொன்னால் அதற்கு பல குணங்கள் இருக்கும்

இன்றே என்னின் இன்றேயாம் = கடவுள் இல்லை என்று சொன்னால் இல்லை தான்.

உளது என்று உரைக்கில் உளதேயாம் = கடவுள் உண்டு என்று சொன்னால் உண்டு

நன்றே நம்பி குடிவாழ்க்கை! = நல்லது நம் வாழ்க்கை

நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா! = நமக்கு வேறு என்ன பிழைப்பு

இந்த பல குணங்கள் உள்ள கடவுள் நம்மை மிகவும்  குழப்புகிறார்.

ஒவ்வொரு மதமும் ஒன்று சொல்கிறது. மதங்களுக்குள் உள்ள பிரிவுகள் மற்றொன்றைச்  சொல்கின்றன.

இதற்கு நடுவில் நாத்திகர்கள் புகுந்து கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.

பாமர மக்கள் குழம்பிப் போய்  விடுகிறார்கள்.

இதற்கு ஒரு தெளிவு உண்டா ? எதுதான் சரி ? எப்படி அது சரியா  தவறா என்று அறிந்து கொள்வது  ?

நாத்திகம் தவறா ? ஆத்திகம் தவறா ? நம்பிக்கை அறிவீனமா ? இது வரை கடவுள்  பற்றி சொன்ன பெரியவர்கள் அனைவரும் தவறான ஒன்றைச் சொல்லிச் சென்றார்களா ?

இதைப் பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திப்போம்.

  

Wednesday, July 23, 2014

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்


படை வீரர்கள் எதிரிகளை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும், அவர்கள் கை கால்களை வெட்ட வேண்டும் என்று வெறியோடு செயல்படுவார்கள். அவர்களிடம் அன்பையும், நேசத்தையும் எதிர் பார்க்க முடியாது. "ஐயோ, ஒரு உயிரை கொல்கிறோமே, அந்த உயிருக்கு எப்படி வலிக்கும் " என்ற பச்சாதாபம் இருக்காது.

அதிலும் அரக்கர் படை என்றால் எப்படி இருக்கும்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

பொருளுக்காக தங்கள் உடலை விற்கும் விலை மாதர்களின் மனம் போல அன்பும், அருளும், கருணையும் அற்று இருந்தது அந்த படை வீரர்களின் மனம் என்றார்.

விலை மகளிர் தங்கள் மேல் அன்பாக  இருப்பார்கள் என்று நினைப்பவர்களை சிந்திக்க வைக்கிறார் கச்சியப்பர். கொலையில் கொடியாரைப் போன்றது விலைமகளிர் மனம்.

பாடல்


வஞ்சம் நீடி அருள் அற்று மாயமே
எஞ்சல் இன்றி இருள் கெழு வண்ணமாய்
விஞ்சு தம் அல்குல் விற்று உணும் மங்கையர்
நெஞ்சம் ஒத்தனர் நீள் படை வீரரே.

பொருள்

வஞ்சம் நீடி = நீண்ட வஞ்சனையை கொண்டு

அருள் அற்று = அருள் எதுவும் இன்றி

மாயமே = மாயங்களை

எஞ்சல் இன்றி = எதுவும் மிச்சம் இல்லாமல்

இருள் கெழு வண்ணமாய் = எங்கும் இருள் சூழும் வண்ணம்

விஞ்சு = பெருத்த (விஞ்சிய)

தம் = தங்களுடைய

அல்குல் விற்று = உடலை விற்று

உணும் மங்கையர் = உண்ணும், அல்லது பொருள் பெறும்

நெஞ்சம் ஒத்தனர் = மனதை ஒத்து இருந்தனர்

நீள் படை வீரரே = பெரிய படையின் வீரர்கள் (சூரபத்மனின் படை வீரர்கள்)

படை வீரர்கள் இறுதியில் தங்கள் எதிரிகளை கொல்லுவார்கள். விலை மாதரும் அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கச்சியப்பர்.

இலக்கியம் படிப்பதில், மனித மனதின் உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.




Tuesday, July 22, 2014

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே 


முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நீண்ட போர்.

முருகன் தன் விஸ்வரூபத்தை காண்பிக்கிறான்.

அதை கண்டு மகிழ்ந்து, வியந்து அவன் சொல்கிறான் ...

"குற்றம் இல்லாத தேவர்களை நான் சிறை வைத்தது தவறு என்று அனைவரும் கூறினார்கள். அப்படி செய்ததும் நல்லதாய் போய் விட்டது. நான் தேவர்களை சிறை வைத்ததால்தானே இன்று முருகனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது "

பாடல்

ஏதம் இல் அமரர் தம்மை யான் சிறை செய்தது எல்லாம் 
தீது என உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே 
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா 
நாதன் இங்கு அணுகப் பெற்றேன் நன்றதே ஆனது அன்றே.

பொருள்

ஏதம் இல் = குற்றம் இல்லாத

அமரர் தம்மை = தேவர்களை

யான் சிறை செய்தது எல்லாம் = நான் சிறை செய்தது எல்லாம்

தீது என = குற்றம் என்று

உரைத்தார் பல்லோர் = பலர் சொன்னார்கள்

அன்னதன் செயற்கையாலே = அந்த செய்கையாலே

வேதமும் = வேதங்களும்

அயனும் = பிரமனும்

ஏனை விண்ணவர் பலரும் = மற்ற தேவர்கள் எல்லோரும்

காணா = காணாத

நாதன் = நாதனை (முருகனை )

இங்கு அணுகப் பெற்றேன் = இங்கு அருகில்  பெற்றேன்

 நன்றதே ஆனது அன்றே = நல்லது, ரொம்ப நல்லது



Sunday, July 20, 2014

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்  


குடும்பத்தை நல்லபடியாக கொண்டு செல்ல பொருள் வேண்டும்.

அதே சமயம், கணவனும் கூடவே இருக்க வேண்டும்.

எல்லா பெண்களும் அல்லாடும் இரண்டு பிரச்சனைகள் இவை. சங்க காலம் முதல் இன்று வரை இதற்கு ஒரு வழி தோன்றவில்லை.

பொருளும் வேண்டும், கணவனும் கூடவே இருக்க வேண்டும்...என்னதான் செய்வாள் அவள்.

அவர்கள் காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறார்கள். அவளை செல்வ செழிப்போடு சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதற்காக வெளிநாடு சென்று பொருள் திரட்ட நினைக்கிறான்.

அவளுக்கோ, அவன் வெளிநாடு எங்கும் போகாமல், அவள் கூடவே இருக்க வேண்டும் என்று ஆவல்.

தன் தோழியிடம் சொல்கிறாள்.

பாலை நிலத்தில் கானல் நீர் தெரியும். அதை உண்மையான நீர் என்று நினைத்துக் கொண்டு யானைகள் கால் வெடிக்க ஓடி, பின் தளர்ந்து விழும். அது போல,  என் காதலன் பொருள் தேடி சென்று வாழ்வின் உண்மையான இன்பங்களை  இழக்க மாட்டான் என்று கூறுகிறாள்.

பாடல்

கடிதோடும் வெண்டேரை நீராமென் றெண்ணிப்
பிடியோ டொருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானஞ் சேர்வார்கொ னல்லாய் !
தொடியோடி வீழத் துறந்து.

பொருள்

கடிதோடும் = வேகமாக ஓடும்

வெண்டேரை  = கானல் நீரை

நீராமென் றெண்ணிப் = உண்மையான நீர் என்று எண்ணி

பிடியோ டொருங்கோடித் = பிடியோடு ஒருங்கு ஓடி = பெண் யானைகளோடு ஒன்றாக ஓடி

தாள் பிணங்கி வீழும் = கால்கள் (தாள்) தளர்ந்து வீழும்

வெடியோடும் = வெடிப்புகள் நிறைந்த

வெங்கானஞ் = வெம்மையான கானகம் 

சேர்வார்கொ னல்லாய்  ! = சேர்வார் என்று எண்ணாதே

தொடியோடி = தொடி என்றால் வளையல். வளையல் கழன்று ஓடி

வீழத் துறந்து = விழும்படி (என்னைத் ) துறந்து. என்னை விட்டு விட்டு

பொருள் என்பது கானல் நீர் போல. அதைத் தேடி தேடி திரியும்போது வாழ்கை முடிந்து  போகிறது. பொருள் எல்லாம் சேர்த்து வைத்த பின் , அனுபவிக்கலாம் என்றால்  அதற்குள் வயதாகி விடுகிறது. 

காலம் காலமாய் தொடரும் சிக்கல் இது. 

அவன் அவளை விட்டுப் பிரியப் போகிறான் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள்  உடல் மெலிந்து வளையல் கழண்டு கீழே விழுந்து உருண்டு  ஓடி விடுமாம். 

அந்த வளையல் உருண்டோடும் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா ?


Thursday, July 17, 2014

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் எழுதியது திருவரங்க அந்தாதி.

யமகம் என்ற யாப்பில் எழுதப்பட்டது. ஒரே வார்த்தை பல்வேறு பொருள் தாங்கி வரும்படி அமைப்பது.

அதில் இருந்து ஒரு பாடல்

இது என்ன வாழ்க்கை. ஒண்ணும் இல்லாதவனை இந்தரேனே சந்திரனே என்று புகழ் பாடி, விலை மாதரை மயில் என்றும் குயில் என்றும் புகழ்ந்து வாழ் நாளை எல்லாம் வீணாக்கிக் கொண்டு. இருக்கிற நாளில் பக்தர்களுக்கு அருள் வழங்க பலராமனுக்கு பின்னே தோன்றிய கண்ணனை வணங்குங்கள்.

பாடல்

தருக்காவலாவென்றுபுல்லரைப்பாடித்தனவிலைமா
தருக்காவலாய்மயிலேகுயிலேயென்றுதாமதராய்த்
தருக்காவலாநெறிக்கேதிரிவீர்கவிசாற்றுமின்பத்
தருக்காவலாயுதன்பின்றோன்றரங்கர்பொற்றாளிணைக்கே.

சீர் பிரித்த பின்

தரு காவலா என்று புல்லரைப் பாடித் தன விலைமா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்த்
தருக்கு அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றும் இன்பத் 
தருக்காவலாயுதன் பின் தோன்ற அரங்கர் பொற் தாளிணைக்கே.

பொருள்

தரு காவலா  = எனக்கு அதைத் தா , இதைத் தா

என்று = என்று

புல்லரைப் பாடித் = கீழானவர்களைப் பாடி, துதித்து

தன = அழகிய தனங்களைக் கொண்ட 

விலைமாதருக்கு = விலை மாதருக்கு

 ஆவலாய் = ஆவலாய், அவர்கள் மேல் விருப்பு கொண்டு

மயிலே குயிலே என்று = மயிலே குயிலே என்று அவர்களை வர்ணித்து 

தாமதராய்த் = தாமதம் செய்பவர்களாய்

தருக்கு = செருக்கு கொண்டு 

அலா = அல்லாத

நெறிக்கே= வழியில்

திரிவீர் = செல்வீர்கள்

கவி சாற்றும் = பாடுங்கள்

இன்பத் = இன்பம் தர

தருக்கா ஆயுதன் = கலப்பையை ஆயுதமாகக் கொண்ட (பலராமன்)

 பின் தோன்ற = பின் தோன்றிய, தம்பியான கண்ணன்

அரங்கர் பொற் தாளிணைக்கே = திருவரங்கத்தில் எழுந்து அருளியுள்ள அவன் பொன் போன்ற இரண்டு திருவடிகளையே




Tuesday, July 15, 2014

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

இறைவன் இருக்கிறானா இல்லையா என்று தான் கேட்கிறோமே தவிர இருக்கிறாளா இல்லையா என்று கேட்பது இல்லை. ஆண்டவன், இறைவன், எல்லாம் ஆணைக் குறிப்பதாகவே அமைந்து இருக்கிறது.

காரணம் ஒருவேளை சமய இல்லக்கியயங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதாலோ என்னவோ.

அங்கொரு ஆண்டாள், இங்கொரு காரைக்கால் அம்மையார் என்பதைத் தவிர பெண்கள் பெரும்பாலும் மதங்களுக்குள் வருவது இல்லை.

பெண்களுக்கு மதம் பிடிக்காது போல் இருக்கிறது.

இறைவனை எப்படி அழைப்பது - அவன் என்றா ? அவள் என்றா ? அது என்றா ? அல்லது இவை அனைத்தையும் தாண்டிய ஒன்று என்றா ?

அவன் காண்பவர் மற்றும் காணப் படுபவை இரண்டுக்கும் கண்ணாக இருக்கிறான்.

அவன் எல்லா வற்றிலும் இருக்கிறான், அவனுக்குள் எல்லாம் இருக்கிறது.

அவன் உலகத்தில் இருக்கிறான். இந்த உலகம் முழுவதும் அவனுக்குள் இருக்கிறது.

அவன் ஆண்பாலா, பெண் பாலா , அவற்றைத் தாண்டி அப்பாலா ? எந்த பாலோ தெரியவில்லையே என்று கவந்தன் இராமனைத் துதிக்கிறான்.

பாடல்


“காண்பார்க்கும் காணப்படு பொருட்கும்
    கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால்,
    யாது ஒன்றும் பூணாதாய்!
மாண்பால் உலகை
    வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ?
    அப்பாலோ? எப்பாலோ? ‘‘

பொருள்

“காண்பார்க்கும் = கான்கின்றவர்களுக்கும்

காணப்படு பொருட்கும் = காணப் படுகின்ற பொருள்களுக்கும்

கண் ஆகிப் = கண் ஆகி  நின்றவன்.சாட்சியாக நின்றவன்.

பூண்பாய் போல் நிற்றியால் = பூணுதல் என்றால் சூடிக் கொள்ளுதல், உடுத்திக் கொள்ளுதல், அணிந்து கொள்ளுதல். அவன் எல்லாவற்றையும் சூடிக் கொண்டிருக்கிறான்.

யாது ஒன்றும் பூணாதாய்! = எதிலும் தொடர்பு இன்றி இருக்கிறான்

மாண்பால் = பெருமையால்

உலகை = இந்த உலகம் அனைத்தையும்

வயிற்று ஒளித்து வாங்குதியால் = தன்னுடைய வயிற்றிற்குள் அடக்கி பின் வெளிப் படுத்தி

ஆண்பாலோ?  = அது ஆண்பாலோ

பெண்பாலோ? = பெண் பாலோ ?

அப்பாலோ? = இரண்டையும் தாண்டி அதற்கு அப்பாலோ

எப்பாலோ?  = எந்தப் புறமோ ?

காண்பதும், காணப் படுவதும் வேறு வேறு அல்ல. எல்லாம் இறை தான் என்ற உயரிய  தத்துவத்தை கவந்தன் வாயிலாக கம்பர் நமக்குத்  தருகிறார்.

இரண்டும் ஒன்று என்றால் - ஆசை போகும், கோபம் போகும், பொறாமை போகும்...மனதில் உள்ள துன்பங்கள் போகும்.


Monday, July 14, 2014

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை 


இதயத்தில் உள்ள ஒரு வால்வு பழுதாகி விட்டால் அதற்கு பதில் ஒரு செயற்கை வால்வு பொருத்துவார்கள். பல இலட்சங்கள் செலவாகும். அந்த வால்வை நமக்கு இலவசமாகத் தந்த கடவுளுக்கு என கைம்மாறு செய்வது ?

காலை எடுக்க ஒரு இலட்சம் கேட்கிறார்கள்...என்றால் காலைத் தந்தவனுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று முருகன் சந்நிதியில் சென்று விழுந்தார் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

இறைவன் தனக்கு தந்த ஒவ்வொன்றையும் எண்ணி அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இருகை யானையை ஒத்திருந்த என் உள்ளக் 
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே 
வருக என்று பணித்தனை வானுளோர்கு 
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இருகை யானையை ஒத்திருந்து = மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு வசதி யானைக்கு உண்டு...அது தான் அதற்கு அமைந்த கை. அந்தக் கையால் யாருக்கும் ஒன்றும் நல்லது செய்யாது. தனக்கு தனக்கு என்று எடுத்து உண்ணும். அதனால் அதை இருகை யானை என்றார். இருகை என்பது சற்று மரியாதை குறைவான ஒரு தொடர். இருகால் மாடே என்று பயனில்லாத மனிதர்களை குறிப்பிடுவார்கள்.

நமக்கு இரன்டு கைகள் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது தருகிறோமா ? எனக்கு எனக்கு என்று   எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறோம்.

என் உள்ளக்  கருவை யான் கண்டிலேன் = என் உள்ளத்தின் கருவை, ஆணி வேரை நான் கண்டிலேன். எது உள்ளத்தின் ஆதி, அடிப்படை என்று அறியாமல் இருக்கிறேன்.

 கண்டது எவ்வமே = கண்டது எல்லாம் துன்பமே

வருக என்று பணித்தனை  = அப்படி இருக்கும் போது , என்னை வருக என்று நீ பணித்தாய்.

வானுளோர்கு ஒருவனே = வானில் உள்ளவர்களுக்கு ஒருவனே. ஒருவனே என்றால் நிகர் இல்லாதவன் என்று பொருள்


கிற்றிலேன் =  வலிமை இல்லாதவன்

கிற்பன் உண்ணவே. = இருக்கின்றேன் உலக இன்பங்களை அனுபவிக்கவே




திருக்குறள் - காதலர் இல்லாத மாலை

திருக்குறள் - காதலர் இல்லாத மாலை


காதல ரில்வழி மாலை கொலைக்களத் 
தேதிலர் போல வரும்.



 சீர் பிரித்த பின் 

காதலர் இல் வழி மாலை கொலைக் களத்து 
ஏதிலர் போல வரும் 

பொருள் 

காதலர் = காதலர் 

இல் வழி = இல்லதா நேரம் 

மாலை = மாலை நேரமானது 

கொலைக் களத்து = கொலை களத்தில் உள்ள  

ஏதிலர் போல வரும் = அன்பும் அருளும் அற்றவர்கள் போல வரும், ஏதிலார் என்ற சொல்லுக்கு, அருள் அற்றவர், அன்பு அன்றவர், அயலவர் என்று பொருள் .
 
 
காதலர் இல்லாத மாலை கொலைக் களத்தில் உள்ள கொலைஞரைப் போல வரும். 

அவ்வளவுதான் அர்த்தம். 

இருந்தாலும், வள்ளுவர் அப்படி சாதாரணமாக எழுதுபவர் அல்ல. உள்குத்து ஏதாவது இருக்கும். பார்க்கலாம்.


போர்க்களம் - கொலைக் களம்.

போர்க்களம் என்றால் இரண்டு எதிரிகள் இருப்பார்கள். ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவார்கள். இருவரிடமும் ஆயுதங்கள் இருக்கும்.

கொலைக் களம் என்றால் கைதிகளை கொலை செய்யும் இடம். இங்கே கைதி போராட முடியாது. உயிர் போகப் போகிறது என்று தெரியும். இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது.

போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் தாக்கும் போது ஒரு பகைமை இருக்கும்.

கொலைக் களத்தில் அப்படி இருக்காது. இருவரிடமும் பகைமை இல்லை.

போர்க் களத்தில் சண்டையிட முடியவில்லை என்றால் தப்பி ஓடி விடலாம். கொலைக் களத்தில் அது முடியாது.

காதலனைப் பிரிந்த காதலிக்கு மாலை நேரமானது அருள் அற்றவர்கள் இருக்கும்  கொலைக்  களம் போல  .
 
மாலை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் வருகிறது. இன்னும் சொல்லப் போனால், காதலனோடு இருக்கும் போதும் இதே மாலைதான் வந்தது. அப்போது இந்த மாலை இப்படி இரக்கமற்றதாகத் தெரியவில்லை. இப்போது என்னடா என்றால்  உயிரை எடுக்க வரும் கொலையாளி போல இருக்கிறது.


இதில் இன்னொரு சிறப்பு என்ன என்றால், தவறு செய்யாத ஒருவனை அரசன் கொல்லும்படி கட்டளை இடுகிறான். அந்த மனிதன் வெட்டப் படப் போகிறான். ஒரு தவறும் செய்யாதவன். அவன் நிலை எப்படி இருக்கும். தன்னை வெட்டப் போகும் அந்த கொலையாளியைப் பார்க்கிறான். அவன் முகத்தில் ஒரு துளி அருளும் இல்லை. நேற்றுவரை தனக்கு எதிரியாக இல்லாதவன் இன்று தன் உயிரை எடுக்கும் யமனாகி நிற்பதைப் பார்க்கிறான்.

அது போல, நேற்று வரை நட்பாக இருந்த இந்த மாலைப் பொழுது இன்று உயிரை எடுக்கும்  கூற்றாக வந்து நிற்கிறது.

கொலைக் களத்தில் இருக்கும் கொலையாளி.

கொல்லப் படப் போகும் கைதி.

காதலி

மாலை நேரம்

சிந்தித்துப் பாருங்கள்.




Sunday, July 13, 2014

சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு

சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு 


மாதவியோடு சில காலம் தங்கி, பொருளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணகியைத் தேடி வருகிறான் கோவலன்.

தான் செய்த தவறுக்கு  காரணம் சொல்லவில்லை. கண்ணகியை நேருக்கு நேர் பார்த்து

"பொய்யான பெண்ணோடு கூடி, நம் முன்னோர்கள் சேர்த்துத் தந்த பொருள் யாவும் தொலைத்து விட்டேன். இப்போது ஒன்றும் இல்லாமல் வந்து நிற்கிறேன். இது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது "

என்றான்.

வீடு வந்தவுடன் நேரே படுக்கை அறைக்குப் போகிறான். "பாடு அமை சேக்கை " என்கிறார் இளங்கோ. பெருமை வாய்ந்த படுக்கை அறை என்று அதற்கு பெருமை சேர்கிறார் இளங்கோ. அங்கே கண்ணகி வாடி வதங்கி படுத்து இருக்கிறாள். அவளை கண்டு வருந்துகிறான் கோவலன்.

பாடல்

பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன


 சீர் பிரித்த பின்

பாடு அமை சேக்கையுள் புகுந்து தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் 
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி 
குலம் தரும்  வான் பொருள் குற்றைத்  தொலைந்த
இலம் பாடு நானும் தரும் எனக்கு என 

பொருள்

பாடு அமை = பெருமை சேர்ந்த

சேக்கையுள் = படுக்கை அறையுள். ஒன்று சேரும் அறை சேக்கை

புகுந்து = நுழைந்து

தன் = தன்னுடைய

பைந்தொடி = ஆபரணங்களை அணிந்த பெண். ஒரு வேளை அணிந்திருந்த என்ற நோக்கில் கூறி இருப்பாரோ

வாடிய மேனி = வாடிய மேனி

வருத்தம் கண்டு = வருந்தம் கண்டு

யாவும் = அனைத்தையும்

சலம் புணர் கொள்கைச் = வஞ்சகக் கொள்கை கொண்ட

சலதியொடு ஆடி = பொய்யான பெண்ணின் பின்னால் போய்

குலம் தரும்  = என் முன்னோர்கள் சேர்த்து வைத்த

வான் பொருள் குற்றைத் = வானத்தை எட்டும் அளவுக்கு குன்று போல குவித்து இருந்த செல்வத்தை 

தொலைந்த = தொலைத்த

இலம் பாடு = ஒன்றும் இல்லாமல் படும் பாடு , இலம் பாடு

 நாணும் தரும் எனக்கு என = நாணத்தையும் தரும். நாணும் என்பதில் உள்ள "ம்" பலப் பல பொருள்களைத் தருகிறது.  வருமையைத் தரும், இழிவைத் தரும், துன்பத்தைத் தரும் , நாணத்தையும் தரும்.

எனக்குள் ஒரு சந்தேகம்....

அழகான மனைவி - கண்ணகி ஒன்றும் அழகில் குறைந்தவள் அல்ல.

குன்றைப் போல குவித்து வைத்த செல்வம்.

ஏன் கோவலன் கண்ணகியை விட்டு மாதவி பின் போனான் ?

கோவலனைப் போகத் தூண்டியது எது ?

கண்ணகிகள் சிந்திக்க வேண்டிய விஷயம்.



Friday, July 11, 2014

இராமாயணம் - மூலமே இல்லாத முதல்வன்

இராமாயணம் - மூலமே இல்லாத முதல்வன் 


எல்லாவற்றிர்க்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி என்றால் இறைவனுக்கும் ஒரு தொடக்கம் மற்றும் ஒரு முடிவு இருக்க வேண்டும் அல்லவா ?

கவந்தன் சிந்திக்கிறான்.

அவனுக்குள் சில கேள்விகள்.

நீ மூலமே இல்லாத முதல்வன். அனைத்திற்கும் முதல்வன் நீ. இந்த உலகம் நீ பல விதங்களில் முயன்று பார்க்கும் கோலோமோ ? இந்த உலகம் முழுவதும் இறைவனின் பல வித கோலங்கள். அப்படி என்றால் கடவுள் ஏன் இப்படி பல உருவங்கள் எடுத்து முயல வேண்டும்.

கடவுள் ஏன் அவற்றைச் செய்கிறான் என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று.

சரி, இந்த உலகம் தோன்றுவதற்கு முன் தோன்றினான் கடவுள். இந்த உலகம் அழியும் போது அவனும் அழிவானா ? அவன் நிலை என்ன ?

 ஊழிக் காலத்தில் இந்த உலகம் அனைத்தும் நீரால் சூழப் படும்போது, தனித்து நிற்கும் அந்த ஆல மரமோ, அல்லது அந்த மரத்தின் ஒரு இலையோ, இல்லை அதில் துயிலும் பாலகனோ, அந்த கடலே நீதானோ ? என்று இறைவனின் முடிவும் பற்றி  நம்மால் அறிய முடியாது  என்கிறான்.

அவன் மூலம். மூலம் இல்லாத மூலம். அவன் நமக்கு முந்தியவன் என்பதால் அவன் மூலத்தை நாம் அறிய முடியாது.

அடுத்து, அவன் பல விதங்களில் வெளிப்படுகிறான். அவன் எண்ணங்களை நாம் அறிய முடியாது.

ஊழிக் காலத்தில் அவன் என்ன ஆவான் என்று நாம் அறிய முடியாது.

இறைவனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியாது.  அது நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல்  சொல்கிறான்.


பாடல்

'மூலமே இல்லா முதல்வனே! 
     நீ முயலும் 
கோலமோ, யார்க்கும் தெரிவு 
     அரிய கொள்கையவால்; 
ஆலமோ? ஆலின் அடையோ? 
     அடைக் கிடந்த 
பாலனோ? வேலைப் 
     பரப்போ? பகராயே!


பொருள் 

'மூலமே இல்லா முதல்வனே! = மூலம் இல்லாத முதல்வனே 

நீ முயலும் கோலமோ = நீ முயன்று செய்யும் பல்வேறு கோலங்கள் இந்த உலகே

யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் = யாரும் அறிந்து கொள்ள முடியாத கொள்கையால் நீ இவற்றை செய்கிறாய்

ஆலமோ? = ஊழிக் கால கடலோ

ஆலின் அடையோ?  = ஆல மரத்தின் இலையோ

அடைக் கிடந்த பாலனோ? = அதில் கிடைந்த சிறு பாலகன் நீதானோ ?

வேலைப் பரப்போ? = ஒரு வேளை அந்த கடலோ நீ தானோ ?

பகராயே! = நீயே சொல்


கேள்விக் குறிகளாய் போட்டு அடுக்குகிறான். சந்தேகம் சந்தேகம். கந்தர்வனான அவனுக்கே சந்தேகம். 

இறை என்பது அறிய வேண்டிய ஒன்றல்ல போலிருக்கிறது. 

அது அறிய முடியாத ஒன்று. அறிவின் துணை கொண்டு அறிந்தே தீருவேன் என்று முனைவது வியர்த்தம். 



Thursday, July 10, 2014

இராமாயணம் - மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ

இராமாயணம் - மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ 


சாபம் தீரப் பெற்ற கவந்தன் இராமனின் பெருமைகளைச் சொல்கிறான்.

இறை சக்தியின் மூலத்தை பற்றி மிக உயர்ந்த கருத்துகளை கவந்தன் வாயிலாக கம்பர் எடுத்து உரைக்கிறார்.

அனைத்து பொருள்களையும் தோற்றுவித்தவன் நீ தானோ ? எல்லை அற்ற அறத்தின் சான்றாக இருப்பவன் நீ தானோ ? தேவர்கள் செய்த தவத்தின் பயனோ ? மூன்று கிளைகளாக பிரிந்த மூல மரமோ ? என்னுடைய சாபத்தை துடைத்தவன் நீ தானா ?

என்று இராமனை துதிக்கிறான்

பாடல்

“ஈன்றவனோ எப்பொருளும்?
    எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர்
    தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய்
    முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன்
    சாபத் துயர் துடைத்தாய்! ‘‘


பொருள்

“ஈன்றவனோ எப்பொருளும்? = அனைத்து பொருளையும் தோற்றுவித்தவன் நீ தானோ ?


எல்லைதீர் நல் அறத்தின் சான்றவனோ? = எல்லை அற்ற அறத்தின் சான்றாக இருப்பவன் நீ தானோ ? அறத்திற்கு எல்லை இல்லை. எங்கும் நிறைந்து இருப்பது அறம். அனைத்து காலத்திலும் நிரந்தரமாக இருப்பது அறம் . வள்ளுவனும், கம்பனும் பிறப்பதற்கு முன்னும் அறம் என்பது  இருந்தது. இவர்கள் அதை கண்டு சொன்னார்கள்.

நம் தமிழ் இலக்கியம் அறம் அறம் என்று  எப்போதும்  சொல்லிக் கொண்டே  இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் அறம் பற்றி பேசும் நம் இலக்கியம். 


தேவர் தவத்தின் தனிப்பயனோ? = தேவர்கள் செய்த தவத்தின் பயனோ

மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ? = மூன்று கிளையாய் முளைத்து எழுந்த மூலமோ ?  இராமன் என்பவன் திருமாலின் அவதாரம் என்ற நிலை தாண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவர்க்கும் மூலம் அவன் தான் என்கிறார்.   ஆக்குதல், காத்தல்,அழித்தல்  என்ற மூன்றுக்கும் காரணம் அவன்தான்.

அந்த மூலமான இறைவன் - தவத்தின் பயன், அறத்தின் சான்று. சைவம், வைணவம், என்று வேறுப்பாடு இல்லாமல், அனைத்தையும் தாண்டி நிற்பவன் அந்த இறைவன்.  நம் வசதிக்கு நாம் இறைவனுக்கு பல பெயர்களையும், குணங்களையும்   தருகிறோம்.அவன் அனைத்தையும் கடந்தவன்.

இதை சொல்ல வந்த வில்லி புத்துராழ்வார் ,

  
மேவரு ஞானா னந்த வெள்ளமாய் விதித்தோ னாதி
மூவரு மாகி யந்த மூவர்க்குண் முதல்வ னாகி
யாவரும் யாவு மாகி யிறைஞ்சுவாரிறைஞ்சப் பற்ப
றேவரு மாகி நின்ற செங்கண்மா லெங்கள் கோவே

மூவரும் ஆகி, அந்த மூவர்க்கும் முதல்வனாகி என்று குறிப்பிடுகிறார்.



 தோன்றி = அவ்வாறு தோன்றி

அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்!  = வினை கொண்ட என் சாபம் தீர்த்தாய்.

செயலுக்கு பலன் உண்டு.

நல்லது செய்தால் நல்லது வரும். அல்லது செய்தால் துன்பம் வரும். வினைக்கு, பதில் வினை உண்டு என்பது விதி.  

அப்படி வினையின் பலனாக வரும் துன்பங்களை வழிபாடு தீர்க்கும், குறைக்கும் என்பது நம் மதங்கள், இலக்கியங்கள் கண்ட முடிவு.

வினையின் பலனாக வரும் சாபத்தை இறை அருள் போக்கும் என்பது  நம்பிக்கை.

வினை ஓட விடும் கதிர் வேல் என்பார் அருணகிரி.

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

இறை அருள் வினையை ஓட விடும்.  சாபம் தீர்க்கும்.

படித்துப் படித்து சொல்கிறது நம் இலக்கியங்கள்.

ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ ?





Wednesday, July 9, 2014

இராமாயணம் - கண்ணில் நின்றவன் இவன்

இராமாயணம் - கண்ணில் நின்றவன் இவன் 


கவந்தனின் இரண்டு தோள்களையும் இராமனும் இலக்குவனும் போரிட்டு வெட்டினார்கள்.

அவன் சாபம் நீங்கி, அரக்க உடலை விட்டு, கந்தர்வ வடிவம் கொண்டு வானில் ஏறி நின்றான்.

பின், இராமனின் பெருமைகளை கூறுகிறான்....

பாடல்

விண்ணில் நின்றவன், 'விரிஞ்சனே 
     முதலினர் யார்க்கும் 
கண்ணில் நின்றவன் இவன்' 
     எனக் கருத்துற உணர்ந்தான்; 
எண் இல் அன்னவன் குணங்களை, 
     வாய் திறந்து, இசைத்தான்; 
புண்ணியம் பயக்கின்றுழி 
     அரியது எப் பொருளே?

பொருள் 

விண்ணில் நின்றவன் = விண்ணில் ஏறி நின்றவன்

விரிஞ்சனே = பிரமன்

முதலினர் யார்க்கும் = முதலிய தேவர்கள் யாவர்க்கும்

கண்ணில் நின்றவன் இவன் = கண்ணில் நின்றவன் இவன்

எனக் கருத்துற உணர்ந்தான் = என் கருத்து மனதில் படும்படி உணர்ந்தான்

எண் இல் அன்னவன் குணங்களை = கணக்கில் அடங்கா குணங்களை

வாய் திறந்து, இசைத்தான் = வாய் திறந்து கூறத் தொடங்கினான்

புண்ணியம் பயக்கின்றுழி = செய்த புண்ணியங்கள் பயன் தரத் தொடங்கிவிட்டால்

அரியது எப் பொருளே? = எது தான் கடினம் ?

ஒருவன் செய்த புண்ணியங்கள்  பலன் தரத் தொடங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.

புண்ணியம் செய்து கொண்டிருங்கள். அது பலன் தர கொஞ்சம் நாள் ஆகலாம். ஆனால், தரத் தொடங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க  முடியாது.

 இனி வரும் பாடல்களில் இராமனின் பெருமைகளை கூறத் ..தொடங்குகிறான்....மிக அருமையானப் பாடல்கள்.

அவற்றைப் பார்ப்போம். 

இராமாயணம் - பெண்ணின் அன்பின் வலிமை

இராமாயணம் - பெண்ணின் அன்பின் வலிமை 


 மனைவியின் பிரிவு ஒரு கணவனை எவ்வளவு பாதிக்கும் என்று கம்பர் இராமன் வாயிலாக காட்டுகிரார்.

இராமனுக்கும் சீதைக்கும் இடையே உள்ள அந்த பாசப் பிணைப்பை படம் பிடிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி.

இப்படியும் கூட அன்பு செய்ய முடியுமா என்று வியக்க வைக்கும் அன்பு. அப்படி ஒரு அன்பு கிடைக்காதா என்று எங்க வைக்கும் அன்பு.  கணவன் மனைவி என்றால் இப்படி அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தூண்டும் அன்பு.

சீதையை பிரிந்து இராமனும், அவன் கூட இலக்குவனும் சவரி காட்டிய வழியில் ரிஷ்ய முக மலைக்கு செல்கிறார்கள்.

செல்லும் வழியில் கவந்தன் என்ற அரக்கன் வருகிறான். மிக பிரமாண்டமானவன். அவன் கையில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். கை என்றால் ஏதோ நம் மாதிரி அல்ல அவன் கைகள். ஒரு காட்டை அப்படியே கைக்குள்  .கொள்வான்.

அவன் கையில் சிக்கிக் கொண்ட இராமன் சொல்கிறான் இலக்குவனிடம் ..." சீதையை  சென்று கொடுமை செய்யும் இராவணனின் ஊர் இங்குதான் இருக்கிறது போல் இருக்கிறது. விலங்குகள் எல்லாம்  துன்பத்தில் அலறுகின்றன...இராவணனை அழித்து நம் துன்பம் தீர்க்கலாம் "

பாடல்

இளவலை நோக்கினன் 
     இராமன், 'ஏழையை 
உளைவு செய் இராவணன் 
     உறையும் ஊரும், இவ் 
அளவையது ஆகுதல் அறிதி; 
     ஐய! நம் 
கிளர் பெருந் துயரமும் 
     கீண்டது ஆம்' என,

பொருள்


இளவலை நோக்கினன்  = இலக்குவனை நோக்கினான்
இராமன் = இராமன் 
ஏழையை = ஏழையான சீதையை 
உளைவு செய் = துன்பம் செய்யும்
இராவணன்  உறையும் ஊரும் = இராவணன் இருக்கும் இடமும்
இவ்  அளவையது = இதுதான்
ஆகுதல் அறிதி; = ஆகும் என்று அறிந்து கொள்
ஐய! = ஐயனே
நம் = நம்முடைய 
கிளர் பெருந் துயரமும் = கிளர்ந்து எழும் துன்பமும் 
கீண்டது ஆம்' என, = மறைந்தது என்று

போக வேண்டியது ரிஷ்ய முக மலைக்கு. அவர்கள் மலையைப் பார்க்கவே  இல்லை.அதற்குள், இராவணன் இருக்கும் இடம் இதுதான் என்று இராமன்  நினைக்கிறான். அவ்வளவு மனம் குழம்பிக் கிடக்கிறான்.

அது மட்டும் அல்ல

இலக்குவனை - ஐயனே என்று அழைக்கிறான்.

பாவப்பட்ட சீதை என்ற அர்த்தத்தில் "ஏழையை உளைவு செய்"  என்கிறான்.

எதைப் பார்த்தாலும் , சீதை இங்குதான் இருக்கிறாள் என்று நினைக்கிறான்.

பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி உருகியதைப் போல.

அரசு கிடையாது , கானகம் போ என்று சொன்னபோது தடுமாறாமல், அப்போதுதான் மலர்ந்த தாமரையை போல மலர்ந்து இருந்த இராமன், சீதையைப் பிரிந்த  பின் புத்தி தடுமாறுகிறான்.

பெண்ணின் அன்பின் வலிமை அது. வலி அது.

சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமன் சொல்லுவான் "பித்து நின் பிரிவில்  பிறந்த வேதனை எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ " என்று.

இராமன் பித்து பிடித்துவனைப் போல இருந்தான் என்பது அனுமனின்  வாக்குமூலம்.

காதலின் ஆழத்தை பிரிவின் வேதனையின் ஆழத்தை வைத்து  அறியலாம்.

அனுபவித்தவர்களுக்குத் தெரியும். 

Monday, July 7, 2014

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக 


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது கந்த புராணம். அதில் வரும் வாழ்த்துப் பாடல் இது.


மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.

எவ்வளவு ஒரு உயர்ந்த மனம்.

பாடல்


வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் 
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் 
                                       வாழ்க 
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க 
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

பொருள்


வான் முகில் = வானில் உள்ள மேகங்கள்

வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க.

மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு.

மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல்.

நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும்.

மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது.


குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும்.

நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும்.

நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும்

அது என்ன சைவ நீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டும்...எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம்.

இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்.

மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பாருங்கள்.




Saturday, July 5, 2014

திருவாசகம் - இனி எங்கே போவது ?

திருவாசகம் - இனி எங்கே போவது ?



பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

எண்ண எண்ண இனிக்கும் பாடல். அர்த்தங்கள் பொங்கி வரும் பாடல்.


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து

குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நினைந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனினை தந்து, வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே, நான் உன்னை தொடர்ந்து


அது ஒரு கைக் குழந்தை. அதற்குப் பசிக்கிறது. ஆனால், "எனக்குப் பசிக்கிறது, பால் தா" என்று சொல்ல இன்னும் பேச்சு வரவில்லை. அதற்கு தெரிந்ததெல்லாம் அழுகை ஒன்றுதான்.

அழுதால் அம்மா வந்து பால் தருவாள் என்று நினைத்து, அது வாய் திறந்து அழத் தொடங்குமுன் தாய் ஓடி வது பால் தருவாள்.

பிள்ளை அழுத பின் தருவோம் என்று இருக்க மாட்டாள். குழந்தைக்கு இப்போது பசிக்கும் என்று தாய்க்கு தெரியும்.

"பால் நினைந்து ஊட்டும் தாய் ".

இப்போதெல்லாம் , குழந்தை அழுதாலும் தாய் பால் தருவது இல்லை....அழகு குறைந்து விடும் என்று.  மாணிக்க வாசகர் சொல்லும் தாய், வேறு தாய்.

அப்படிப் பட்ட தாயினும்

"சாலப் பரிந்து" . சால என்றால் மிகுதியாக. சால, உறு , தவ, நனி, கூர், கழி என்பன பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல். மிகுதி என்பதை குறிக்கும் பல சொற்கள்.

அது என்ன தாயை விட அன்பு செய்து ? அதெப்படி இறைவன் தாயை விட அன்பு செய்ய முடியும் ?

பின்னால் சொல்கிறார்.

தாய் உடலுக்கு உணவு தருவாள். இறைவன் உடலுக்கு மட்டும் அல்ல, நமக்குள் இருக்கும் உள் ஒளியையும் பெருக்குவான். உயிருக்கு உறுதி செய்வான்.

  பாவியேனுடைய ஊனினை உருக்கி

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று சொன்னவர், அடுத்த வரியில்  ஊனினை உருக்கி என்கிறார். ஊன் எப்போது உருகும் ? சரியாக சாப்பிடாவிட்டால் உடல் மெலியும். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அன்பு என்றால்  நிறைய உண்ணத் தருவது என்று. அல்ல.

மணிவாசகரின் ஊன் உருகியது....அதனால் என்ன ஆனது ?

 உள் ஒளி பெருக்கி

உள்ளே உள்ள ஒளி பெருகியது. ஒளி முதலிலேயே இருக்கிறது. அதை பெருக்குபவன்  இறைவன். உள் ஒளி தந்து என்று சொல்லவில்லை. உள் ஒளி பெருக்கி என்கிறார். எரியும் சுடரை தூண்டி விடுவது போல.

உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து

உலப்பு என்றால் அழிவு, முடிவு, இறுதி. உலப்பு இலா என்றா முடிவு இல்லாதா, அழிவு இல்லாத என்று பொருள். இல்லை இல்லாத ஆனந்தம். கரை காண முடியா  இன்பம்.

புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

இறைவன் எங்கே இருக்கிறான் எங்கே இருக்கிறான் என்று வெளியில் எல்லாம் தேடுகிறோம்.  கோயில் , குளங்கள், புண்ணிய தலங்கள் என்று எல்லா இடத்திலும்  தேடுகிறோம். மணி வாசகரும்  தேடினார்.கடைசியில் இறைவன்  இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார்.  இறைவனைப் பிடித்து விட்டார்.

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்;

நான் உன்னை தொடர்ந்து வந்து இறுக்கி பிடித்துக் கொண்டேன்.

எங்கு எழுந்தருளுவது, இனியே?

இனி வேறு எங்கும் போக முடியாது. இறுதியில் தனக்குள்ளேயே இறைவனை கண்டார். வேறு எங்கும் போக முடியாதபடி இறைவன் அவருக்குள்ளேயே எழுந்தருளினான்.










இராமாயணம் - வலிமை இல்லாத அரசனின் குடிகள் போல...

இராமாயணம் - வலிமை இல்லாத அரசனின் குடிகள் போல...


கவந்தன் என்ற அரக்கன் உள்ள வனத்தை இராமனும் இலக்குவனும் அடைந்தார்கள்.

கவந்தன் இருக்கும் கானகத்தில் உள்ள உயிர்கள் எப்படி வருந்தின என்பதற்கு கம்பர் ஒரு உவமை சொல்கிறார்.

வலிமை இல்லாத ஒரு அரசனின் கீழ் உள்ள குடிகள் எவ்வாறு வருந்துவார்களோ அப்படி அந்த விலங்குகள் வருந்தின என்கிறார்.

வலிமை இல்லாத அரசன் இருந்தால், அந்த நாட்டு மக்களுக்கு பல விதங்களில் இன்னல் விளையும்.....

உள்ளூர் தாதாக்களால் ஒரு புறம் துன்பம், அரசாங்க அதிகாரிகள் தரும் குடைச்சல் மறுபுறம், அயல் நாட்டவர் தரும் துன்பம் இன்னொரு புறம், மழை தண்ணி இல்லாமல் வரும் வறட்சி போன்ற துன்பங்களை சரி வர கவனிக்காமல் அதனால் வரும் துன்பங்கள் என்று பலவிதங்களில் துன்பம் அனுபவிப்பார்கள்.

அது போல அந்த கானகத்து விலங்குகள் தவித்தன என்றார்....

பாடல்

மரபுளி நிறுத்திலன், 
     புரக்கும் மாண்பிலன், 
உரன் இலன் ஒருவன் நாட்டு 
     உயிர்கள் போல்வன; 
வெருவுவ, சிந்துவ, 
     குவிவ, விம்மலோடு 
இரிவன, மயங்குவ, 
     இயல்பு நோக்கினர்.

பொருள்

மரபுளி நிறுத்திலன் = ஒரு அளவில் நிறுத்த இயலாதவனும் 

புரக்கும் மாண்பிலன் = காப்பாற்றும் மாண்பு இல்லாதவனும்

உரன் இலன் = வலிமை இல்லாதவனுமான

ஒருவன் = ஒரு அரசனின்

நாட்டு உயிர்கள் போல்வன = நாட்டில் வாழும் உயிர்கள் போல

வெருவுவ,= பயந்து

சிந்துவ = சிதறி ஓடி

குவிவ = கும்பல் கும்பலாய் சேர்ந்து 

விம்மலோடு இரிவன = துன்பத்தோடு ஓடி

மயங்குவ = மயங்கி

இயல்பு நோக்கினர். = அந்த இயல்பை அடைந்தன

மரபும், அன்பும், வலிமையையும் இல்லாத அரசனின் கீழ் உள்ள குடிகள் எவ்வாறு எல்லாம்  துன்பப்படும் என்று கம்பர் சொல்கிறார். பயந்து  ஓடுவார்கள்,, சிதறிப் போவார்கள், கும்பல் சேர்வார்கள், துன்பப் படுவார்கள் , என்ன செய்வது என்று அறியாமல்   மயங்குவார்கள்....அது போல அந்த கானகத்து  விலங்குகள் துன்பப் பட்டன. 


Friday, July 4, 2014

திருக்குறள் - பிரிவும், ஏக்கமும்

 திருக்குறள் - பிரிவும், ஏக்கமும் 


அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் வாழ்க்கை. விவசாயம் செய்ய முடியும். பயிர் பச்சை  வளரும். கிணற்றில் நீர் சுரக்கும். மழை  வரவில்லை என்றால் வாழ்கையே இல்லை.

இந்த வருடம் ஏனோ மழை இன்னும் வரவில்லை. கோடை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு  இருக்கிறது.

செடிகளும் மரங்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு  இருக்கின்றன.

மக்களும், ஆடு மாடுகளும் நீர் இன்றி தளர்ந்து போகிறார்கள்.

ஒரு சொட்டு மழை விழாதா என்று எல்லோரும் வானம்  பார்த்து காத்து இருக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் மழை வராவிட்டால் நிறைய உயிர்கள் போய்  விடும்.செடி கொடிகள் பட்டுப் போய் விடும். ஆடு மாடுகள் தாகத்தில் உயிர் விடும். மனிதர்கள் இடம் பெயர்ந்து போவார்கள்.

அந்த மழைக்கான ஏக்கம் புரிகிறதா ? அந்த தாகத்தின் ஆழம் புரிகிறதா உங்களுக்கு ?

அந்த தாகத்தை, ஏக்கத்தை காதலனின் பிரிவின் ஏக்கத்திற்கு உவமை சொல்கிறார்   வள்ளுவர்.

பாடல்

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வா ரளிக்கும் மளி.

பொருள்

வாழ்வார்க்கு = மழையை நம்பி வாழ்வார்க்கு

வானம் பயந்தற்றால் = மழை எப்படி பயன் தருமோ அதுபோல

வீழ்வார்க்கு = காதலில் விழுந்தவர்களுக்கு

வீழ்வா ரளிக்கும் மளி = அவர்களின் துணை தரும் பயன்.

அளி என்ற சொல்லுக்கு பல அர்த்தம். அவை - அன்பு, அருள், வரவேற்பு,  குளிர்ச்சி,குழைதல், மிகுந்த அன்பினால் நெகிழ்தல், அறக் கனிதல் (ரொம்பவும் கனிந்து போதல், pining என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல) , கலத்தல் , ஒன்று சேர்த்தல்

மழை வருவதற்கு மக்கள் என்ன செய்ய முடியும் - ஒன்றும் செய்ய  முடியாது.எதிர்  பார்க்கலாம், வேண்டலாம் வேறு ஒன்றும் செய்ய முடியாது.  அது போல  அவளோ அவனோ வருவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. காத்திருக்க   வேண்டியதுதான்.

மழை வேண்டி காத்திருப்பது எவ்வளவு கடினம் - சூடு ஒருபுறம், தாகம் ஒரு புறம். நாக்கு வரளும் . கண் எரியும் . உடல் சோர்ந்து  போகும்.

மழையே வராவிட்டால் - உயிர் போகும்.

மழை வந்து விட்டால் - எவ்வளவு மகிழ்ச்சியாக  இருக்கும்.மண் வாசனை கிளம்பும். செடி கொடிகள் துளிர்க்கும். மொட்டு வரும். மலர் மலரும். சூடு தணியும். காற்று சுகமாக வீசும்.

 இதை விட பிரிவின் தவிப்பை சொல்ல முடியுமா - ஏழே   வார்த்தைகளில்



இராமாயணம் - நிலமகள் பொறுமை இல்லாதவள்

இராமாயணம் - நிலமகள் பொறுமை இல்லாதவள் 


பொறுமை.

பொறுமை என்றால் பொறுத்தல். மற்றவர்கள் செய்யும் பிழைகளை பொறுத்துக் கொள்ளுதல்.

ஏன் பொறுக்க வேண்டும் ? எனக்கு என்ன தலை எழுத்தா அவனவன் செய்கின்ற பிழைகளை பொறுக்க ? அததுக்கு அப்பப்ப குடுத்தா தான் எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள் என்று நாம் எண்ணுவோம்.

அப்படி அல்ல.

பொறுமைக்கு என்று ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார் வள்ளுவர் - அறத்துப் பாலில்.

கணவனோ, மனைவியோ, நண்பர்களோ, பிள்ளைகளோ, உறவினரோ, அலுவகலத்தில் யாருமோ ஏதோ பிழை செய்யல்லாம். பொறுமையாக இருந்தால் அதன் பலன் மிகப் பெரியது என்கிறார் வள்ளுவர்.

நல்ல குணங்களை நல்ல பாத்திரங்களின் மேல் ஏற்று சொல்லுவது இலக்கிய மரபு.

சீதை, பொறுமையின் சிகரம்.

பொறுமைக்கு உதாரணம் என்றால் நிலமகளை சொல்லுவது வழக்கம்.

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொருத்தல் தலை என்பார் வள்ளுவர்.

ஆனால், "இது எல்லாம் ஒரு பொறுமையா ...இதெல்லாம் ஒரு பொறுமையே இல்லை " என்று சொல்லும் அளவுக்கு பொறுமை வாய்ந்தவள் சீதை.  சீதையின் பொறுமையின் முன்னால் நில மகளின் பொறுமை ஒன்றும் இல்லையாம்.


விடிகாலை.

பறைவகள் எல்லாம் கூட்டை விட்டு இரை தேடி கிளம்பி விட்டன.

அவை அங்கும் இங்கும் அலைகின்றன.

அதை பார்த்த இராமனுக்கு, அந்த பறவைகள் சீதையை காணாமல் தான் அங்கும் இங்கும் அலைவதைப் போல தோன்றியதாம்.


பாடல்

நிலம் ‘பொறை இலது ! ‘என நிமிர்ந்த கற்பினாள்
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார்.

பொருள்

நிலம் ‘பொறை இலது ! ‘என = நிலமகள் பொறுமை இல்லாதவள் என்று கூறும் அளவுக்கு பொறுமை உள்ள சீதை

நிமிர்ந்த கற்பினாள் = உயர்ந்த கற்புள்ளவள்

நலம் =நலத்தை தரும்

பொறை கூர்தரு = பொறுமையை கைக் கொண்ட

 மயிலை நாடிய = மயில் போன்ற சீதையைத் தேடி

அலம்புறு = அங்கும் இங்கும் அலையும்

பறவையும் = பறவைகளும்

அழுவவாம் எனப் = அழுதன என்று

புலம்புறு விடியலில் = புலம்பும் விடியலில்

கடிது போயினார். = விரைந்து போனார்கள் (இராமனும் இலக்குவனும் )


Thursday, July 3, 2014

இராமாயணம் - கவந்தன் - ஒரு அறிமுகம்

இராமாயணம் - கவந்தன் - ஒரு அறிமுகம் 


கவந்தன் வதைப் படலம் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

காப்பியத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் ஏதோ ஒன்றை சொல்லி நிற்கின்றன.

பொதுவாகவே அரக்கர்கள் அழிக்கப் படும்போது நிகழ்வது என்ன என்றால், அவர்கள் தங்கள் சாபம் தீர்ந்து, அழித்த அந்த பரம் பொருளை வணங்கி விண்ணுலகு செல்வார்கள்.

என்ன அர்த்தம்?

எல்லா மனிதர்களுக்குள்ளும் அரக்க குணம் நிரம்பிக் கிடக்கிறது. அந்த அரக்க குணம் தலை விரித்து ஆடுகிறது...காமம், குரோதம், மதம், மாச்சரியம், பொறாமை, பேராசை என்ற பல அரக்க குணங்கள், அசுர குணங்கள் தலை விரித்து ஆடுகின்றது.

நான் என்ற அந்த உடல் அழியும் போது அவர்களின் உண்மையான தெய்வ வடிவம்  பெறுகிறார்கள்.

அரக்கர்கள் என்றால் ஏதோ  கருப்பா,குண்டா , பெருசா இருப்பார்கள் என்று நினைக்கக்  கூடாது.

நாம் தான்  அரக்கர்கள்.

நமக்குள் இருப்பதுதான் அரக்க குணம்.

கவந்தன் என்று ஒரு  அரக்கன்.  அவனிடம் உள்ள கெட்ட குணம் அளவுக்கு அதிகமாக உண்பது. அளவுக்கு அதிகமான எதுவும் அரக்க குணம்தான்.

இராவணனுக்கு காமம் தலைக்கு  ஏறியது.

கவந்தனுக்கு உணவு மேல்  ஆசை.பெருந்தீனி  உண்பவன்.

வாயில் போட்டு, அரைத்து உண்டு, அது வயிற்றிற்கு போவது கூட அதிக நேரம் ஆகும் என்று, அவனுக்கு வாய் வயிற்றிலேயே இருக்குமாம்.

வயிற்றிடை வாயன் என்று பெயர்.

உணவை எடுத்து அப்படியே வயிற்றிலேயே போட்டுக் கொள்வான். வாய் தான்  வயிற்றில் இருக்கிறதே.

அதிமான உணவு உண்டதால் உடல் பெருத்து, புத்தி மழுங்கி பலப் பல தீய செயல்களை  செய்கிறான். வரும் நாட்களில் அவனைப் பற்றி அறிவோம்.

காப்பியங்கள் நிகழ்வுகளை கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லும். நிகழ்வுகளுக்கு பின் இருக்கும்  செய்தியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கொட்டிக் கிடக்கிறது புதையல். வேண்டுமட்டும் அள்ளிக் கொள்வோம்.


Wednesday, July 2, 2014

இன்னிலை - அறம் கேட்ட பேய்

இன்னிலை - அறம் கேட்ட பேய் 


பாரதப் போரின் தொடக்கத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தான். அதை அங்கிருந்த பேய் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது. கீதையை கேட்ட பேய் அதனால் பயன் பட்டு உயர் நிலை அடைந்தது என்று ஒரு கதை உண்டு.

கீதை பேய்க்கு சொன்னதில்லை. இருந்தும், யாருக்கோ சொன்ன அற உரைகளை கேட்டு பேய் உயர்வடைந்தைப் போல நீங்களும் அற நூல்களைப் படித்து பயன்  பெறுங்கள்.

பாடல்

அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது
மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.

சீர் பிரித்த பின்

அன்று அமரில் சொன்ன அற  உரை வீழ் தீக்கழுது
மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின்-பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட வறம் பொருள் கேட்டல்லன்
மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு.


பொருள்

அன்று = அன்று, பாரதப் போர் நடந்த அன்று

அமரில் = போரில்

சொன்ன அற  உரை = சொல்லப்பட்ட அற உரைகளை (கீதையை)

வீழ் தீக்கழுது = கேட்ட பேயானது

மன்று உயர்ந்து போந்த வகை = மன்று என்றால் மன்றம். உயர்ந்தவர்கள் வாழும் இடம். சொர்க்கம். பேய் சொர்க்கம் போன வகை.

தேர்மின் = ஆராய்ந்து அறியுங்கள்.

பொன்றா = குறையாத

அறம் அறிந்தோன் = அறத்தினை அறிந்தவன் ( பெரியவர்கள்,)

கண்ட வறம் பொருள் கேட்டல்லன் = கண்டு சொன்ன அறத்தின் பொருளை கேட்டு அறிந்து , துன்பம் நீங்கி

மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு = அறம் அல்லாத (மறம் ) வாழ்கையை ஒறுத்து (வெறுத்து ஒதுக்கி)  வாழும் வகையை கடை பிடிக்க வேண்டும்.


ஒரு பேய் அறம் கேட்டு  உய்யும் என்றால் நாம் எந்த விதத்தில் அந்த பேயைவிட தாழ்ந்து போனோம் ? நாமும் அற நூல்களை படித்து பயன் பெறலாம் - பயன் பெற வேண்டும்.

அறம் அறம் என்று நம் இலக்கியங்கள் அரற்றுகின்றன.

எங்கு சென்றாலும், எந்த  இலக்கியத்தை பிரித்தாலும்  அறத்தின் சாயலை பார்க்கலாம்.

நம் இலக்கியங்கள் அறத்தை மிக வலியுறுத்துகின்றன.

சில தலைமுறைகள் அறம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து  வருகின்றன.

இலக்கியங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் அறத்தினை மனதில் ஏற்றி விட்டால் பின் அது மாறாது.

கொஞ்சம் வளர்ந்த பின் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அதற்கு முன் அறத்தை போதிக்க வேண்டும்  குழந்தைகளுக்கு.

அறம் செய்ய விரும்பு என்று ஆரம்பித்தாள் ஔவை.

இவற்றை எப்படியாவது இந்தத் தலை முறைக்கு சொல்லித் தரவேண்டும்.

ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம்.







Tuesday, July 1, 2014

ஐந்திணை ஐம்பது - கூத்தாடி உண்ணினும் உண்

ஐந்திணை ஐம்பது  - கூத்தாடி உண்ணினும் உண்

சங்கப் பாடல்கள் என்றாலே ஏதோ காதல், பிரிவு, என்று மட்டும் தான் இருக்கும் என்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ஒரு சலிப்பினை, குடும்பத்தில் நடக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது இந்தப் பாடல்.

அவள் நல்ல அழகி தான். அவனும் அவளும் திருமணம் செய்து கொண்டார்கள். வாழ்கை சொர்கமாக இருந்தது.

சிறிது காலம் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளின் உடல் கட்டு தளர்ந்து போனது. அழகு குறைந்தது. அவனுக்கு அவள் மேல் இருந்த ஆர்வம் குறைந்தது. நாளடைவில் மற்ற பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படத்  தொடங்கியது. சுகம் நாடி அந்தப் பெண்களின் பின்னால் போக ஆரம்பித்து விட்டான்.

அது அவளுக்குத் தெரிய வந்தது.

ஒரு நாள் அவனுடைய நண்பன் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தான்.

அவனிடம் வருந்தி , அந்த நண்பன் கூட தலைவனுக்கு நல்லது சொல்லி திருத்தவில்லையே என்ற கோபத்திலும் அவள் சொன்னாள்

"...என் கழுத்தைக் கட்டிக் கொள்ள மகன் பிறந்து விட்டான். அவன் என்னிடம் பால் குடிக்கிறான். எனக்கு வயதாகி விட்டது. நல்ல கட்டு கோப்பாக உள்ள  அந்த மாதிரி பெண்கள் உள்ள இடங்களுக்கு அவன் போய் தண்ணி அடிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடம் போய் சொல். இல்லை என்றால் நீயும் அங்கே போய் கூத்தடி ...இங்கே வராதே "

என்று கதவை தாழிட்டாள்

பாடல்

போத்தில் கழுத்திற் புதல்வ ணுணச்சான்றான்
மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு
ணீத்துநீ ரூனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி யுண்ணினு முண்.

சீர் பிரித்த பின்

போத்தில் கழுத்தில் புதல்வன் உண்ணச் சான்றான் 
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியில் 
நீ நீத்து நீர் ஊன் வாய் பாண ! நீ போய் மொழி 
கூத்தாடி உண்ணினும் உண் 

பொருள்

போத்தில் = பொழுது இல்லை

கழுத்தில் = கழுத்தில்...என்னை கழுத்தோடு கட்டிக் கொள்ள பொழுது இல்லை

புதல்வன் = மகன்

உண்ணச் = முலை உண்ணத்

சான்றான் = தொடங்கி விட்டான்

மூத்தேம் இனி யாம் = வயதாகி விட்டது எனக்கு

வரு முலையார் = வளருகின்ற இளமையான முலையை உடைய பெண்கள் உள்ள

சேரியில் = சேரியில்

நீ = நீ

நீர் = கள் குடித்து

 ஊன் வாய் = ஊன் (மாமிசம் ) உண்டு

பாண ! = பாணனே

நீ போய் மொழி = நீ போய் சொல்லு. இல்லை, உன்னை நம்ப முடியாது . அங்க போனவுடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு, நீயும் அந்த பெண்கள் பின்னால் போய் விடுவாய்


கூத்தாடி உண்ணினும் உண் = சொன்னா சொல்லு, இல்லேன்னா அங்கேயே போய் கூத்தடி

பெண்ணின் இயலாமை ... பிள்ளை பெற்ற பின் இளமை அழிவதனால் வரும் சோகம், கணவன் தன் மேல் அன்போடு இல்லையே என்ற ஏக்கம்....பாணன் மேல் வரும் கோபம், அழகான அந்த மாதிரி பெண்களின் மேல் பொறாமை என்று அனைத்தும் கலந்த உணர்ச்சி குவியலான பாடல்


ஆண்கள் அந்த காலத்திலும் அப்படித்  தான் இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் சகித்திருக்கிரார்கள்




இராமாயணம் - தனிமையின் இனிமை

இராமாயணம் - தனிமையின் இனிமை 


இராம இலக்குவனர்களுக்கு மெய் நெறியைச் சொன்ன பின், சவரி தன் உடலை துறந்து அந்த தனிமையான இனிமையை அடைந்தாள் . நினைத்த நேரத்தில் உடலை துறக்க முடிந்தது. உடலை துறக்க முடியும் என்றால் எது உடலை துறக்கும் ?

இராமனும் இலக்குவனும் இதை எல்லாம் படித்து  இருக்கிறார்கள்.ஆனால் பார்த்தது இல்லை. முதன் முறையாக யோகத்தின் பலத்தால் எப்படி உடலை நினைத்த மாத்திரத்தில் துறக்க முடிகிறது என்று கண்டு அளவில்லா வியப்பு அடைந்தார்கள். அதைக் கண்ட அவர்களின் மனத்திலும் பெரிய மகிழ்ச்சி. ஒரு துள்ளலோடு அவர்கள் சவரி  காட்டிய வழியில் சென்றார்கள்.


பாடல்

பின், அவள் உழந்து பெற்ற 
     யோகத்தின் பெற்றியாலே 
தன் உடல் துறந்து, தான் அத் 
     தனிமையின் இனிது சார்ந்தாள்; 
அன்னது கண்ட வீரர் அதிசயம் 
     அளவின்று எய்தி, 
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப, 
     புகன்ற மா நெறியில் போனார்.

பொருள்

பின், = அதன் பின்

அவள் உழந்து பெற்ற = அவள் முயன்று பெற்ற

யோகத்தின் பெற்றியாலே = யோகத்தின் பலனால்

தன் உடல் துறந்து = தன் உடலை துறந்து

தான் = அவள்

அத் தனிமையின் இனிது சார்ந்தாள் = அந்த தனிமையின் இனிமையை அடைந்தாள்

அன்னது = அதைக்

கண்ட வீரர் = கண்ட இராம இலக்குவனர்கள்

அதிசயம் அளவின்று எய்தி = அளவற்ற அதிசயம் அடைந்தனர்

பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப = பொன் போன்ற அடிகளில் அணிந்த கழல்கள் சப்திக்க

புகன்ற மா நெறியில் போனார் = சொன்ன பெரு வழியில் சென்றனர்


யோகம் செய்தது சவரி.

உடலை துறந்து தனிமையான இனிமை கண்டது சவரி.

அதைக் கண்ட இராமனுக்கும் இலக்குவனுக்கும் பெரிய மகிழ்ச்சி. ஏன் ?

மனிதன் யோகத்தின் உச்சியை தொடும்போது இறைவன் மகிழ்கிறான். 

இறைவன் மகிழ்கிறான் என்றால் உயிர்கள் அனைத்தும் மகிழ்கின்றன என்று பொருள். 

பிறவியின் நோக்கம், யோகத்தின்  பலனை அடைவது. 

சவரி அடைந்தாள் . இராமன் மகிழ்ந்தான். 

இறைவனும், இயற்கையும் மகிழ வேண்டுமானால் யோகத்தின் உச்சம் தொடுங்கள். 

இராமாயணம் - உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்

இராமாயணம் - உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்


சில சமயம் சிறு பிள்ளைகள்  தங்கள் ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ வந்து தாங்கள் புதியதாய் கற்றுக் கொண்ட ஒன்றைப் பற்றி சொல்லுவார்கள்....ஆசிரியரோ பெற்றோரோ .."அப்படியா, அது எப்படி" என்று ஆச்சரியமாக ஒன்றும் தெரியாதவர்கள் போல கேட்பார்கள். பிள்ளைகளுக்கு இன்னும் மகிழ்ச்சி. பிள்ளைகளின் அறிவைக் கண்டு பெரியவர்களுக்கு மகிழ்ச்சி.

அது ஒரு புறம் இருக்கட்டும்

இராமனுக்கு உபசாரம் எல்லாம் செய்த பின், சவரி முக்தி அடையும் வழிகளை இராமனுக்கு எடுத்துச் சொன்னாள். அவள் சொன்னதை எல்லாம் இராமன் கேட்டுக் கொண்டான்.

அப்படி கேட்டுக் கொண்டவன் யார் தெரியுமா ?

கல்வி கேள்விகளில் சிறந்த பெரியவர்கள், அவர்கள் உணர்வில் அனுபவிக்கும் அமிர்தத்தின் சுவை போல இருந்த இராமன்.

அமுதம் என்றால் ஏதோ ஒரு வகை உணவு பதார்த்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதை உண்டால் மரணத்தை வெல்லலாம் என்றும் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால் கம்பன் சொல்கிறான் அமிர்தம் என்பது ஏதோ உண்ணும் பண்டம் அன்று. அது வாயால் உண்ணும் பண்டம் அன்று. உணர்வால் உண்ணும் பண்டம். உணர்ந்து அறிய வேண்டிய ஒன்று.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்பார் மணி வாசகர்

"உலகெலாம் உணர்ந்து ஓதர் கரியவன் "  என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்

 அப்படி உணர்வில் உண்ணும் அமுதின் சுவை போல இருந்தான் இராமன்.

பாடல்


வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி 
     வெளியிற்று ஆகக் 
காட்டுறும் அறிஞர் என்ன, 
     அன்னவள் கழறிற்று எல்லாம் 
கேட்டனன் என்ப மன்னோ - 
     கேள்வியால் செவிகள் முற்றும் 
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் 
     சுவையாய் நின்றான்.


பொருள்

வீட்டினுக்கு = வீடு பேற்றினை அடைவதற்கு

அமைவது ஆன மெய்ந்நெறி = அமைந்த உயர்ந்த வழிகளை

வெளியிற்று ஆகக் = வெளிப்படையாக தெரியும்படி

காட்டுறும் அறிஞர் என்ன = காட்டுகின்ற அறிஞர்களைப் போல

அன்னவள் கழறிற்று எல்லாம் = அவள் கூறியவற்றை எல்லாம்

கேட்டனன் என்ப மன்னோ = கேட்டான்

கேள்வியால் = கேள்விகளால் 

செவிகள் முற்றும் தோட்டவர் = காதுகள் துளைக்கப் பெற்றவர்கள்

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் 
தோட்கப் படாத செவி

என்பது வள்ளுவம். 

(அது என்ன தோட்கப் படாத செவி (துளைக்கப் படாத செவி). ? அது பற்றி பின்னொரு சமயம் சிந்திப்போம்).  

உணர்வின் உண்ணும் அமுதத்தின் = உணர்வில் உண்ணும் அமுதத்தின்

சுவையாய் நின்றான் = சுவை போல நின்ற இராமன்