Tuesday, July 15, 2014

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

இறைவன் இருக்கிறானா இல்லையா என்று தான் கேட்கிறோமே தவிர இருக்கிறாளா இல்லையா என்று கேட்பது இல்லை. ஆண்டவன், இறைவன், எல்லாம் ஆணைக் குறிப்பதாகவே அமைந்து இருக்கிறது.

காரணம் ஒருவேளை சமய இல்லக்கியயங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதாலோ என்னவோ.

அங்கொரு ஆண்டாள், இங்கொரு காரைக்கால் அம்மையார் என்பதைத் தவிர பெண்கள் பெரும்பாலும் மதங்களுக்குள் வருவது இல்லை.

பெண்களுக்கு மதம் பிடிக்காது போல் இருக்கிறது.

இறைவனை எப்படி அழைப்பது - அவன் என்றா ? அவள் என்றா ? அது என்றா ? அல்லது இவை அனைத்தையும் தாண்டிய ஒன்று என்றா ?

அவன் காண்பவர் மற்றும் காணப் படுபவை இரண்டுக்கும் கண்ணாக இருக்கிறான்.

அவன் எல்லா வற்றிலும் இருக்கிறான், அவனுக்குள் எல்லாம் இருக்கிறது.

அவன் உலகத்தில் இருக்கிறான். இந்த உலகம் முழுவதும் அவனுக்குள் இருக்கிறது.

அவன் ஆண்பாலா, பெண் பாலா , அவற்றைத் தாண்டி அப்பாலா ? எந்த பாலோ தெரியவில்லையே என்று கவந்தன் இராமனைத் துதிக்கிறான்.

பாடல்


“காண்பார்க்கும் காணப்படு பொருட்கும்
    கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால்,
    யாது ஒன்றும் பூணாதாய்!
மாண்பால் உலகை
    வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ?
    அப்பாலோ? எப்பாலோ? ‘‘

பொருள்

“காண்பார்க்கும் = கான்கின்றவர்களுக்கும்

காணப்படு பொருட்கும் = காணப் படுகின்ற பொருள்களுக்கும்

கண் ஆகிப் = கண் ஆகி  நின்றவன்.சாட்சியாக நின்றவன்.

பூண்பாய் போல் நிற்றியால் = பூணுதல் என்றால் சூடிக் கொள்ளுதல், உடுத்திக் கொள்ளுதல், அணிந்து கொள்ளுதல். அவன் எல்லாவற்றையும் சூடிக் கொண்டிருக்கிறான்.

யாது ஒன்றும் பூணாதாய்! = எதிலும் தொடர்பு இன்றி இருக்கிறான்

மாண்பால் = பெருமையால்

உலகை = இந்த உலகம் அனைத்தையும்

வயிற்று ஒளித்து வாங்குதியால் = தன்னுடைய வயிற்றிற்குள் அடக்கி பின் வெளிப் படுத்தி

ஆண்பாலோ?  = அது ஆண்பாலோ

பெண்பாலோ? = பெண் பாலோ ?

அப்பாலோ? = இரண்டையும் தாண்டி அதற்கு அப்பாலோ

எப்பாலோ?  = எந்தப் புறமோ ?

காண்பதும், காணப் படுவதும் வேறு வேறு அல்ல. எல்லாம் இறை தான் என்ற உயரிய  தத்துவத்தை கவந்தன் வாயிலாக கம்பர் நமக்குத்  தருகிறார்.

இரண்டும் ஒன்று என்றால் - ஆசை போகும், கோபம் போகும், பொறாமை போகும்...மனதில் உள்ள துன்பங்கள் போகும்.


No comments:

Post a Comment