Showing posts with label Bhaaradhiyar. Show all posts
Showing posts with label Bhaaradhiyar. Show all posts

Wednesday, February 12, 2020

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


"கொடுங் கூற்றுக்கு இரையாகி மாள்வேன் என்று நினைத்தாயோ" என்று இடுப்பில் கை வைத்து காளியிடம் பார்தி கேள்வி கேட்கிறான் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

காளி கேட்டிருப்பாள்..."உனக்கு எப்படித் தெரியும் நீயும் அப்படி ஒரு வேடிக்கை மனிதராய் மாறமாட்டாய் " என்று?

பாரதி: எனக்குத் தெரியும் ஏன் என்றால், நான் உன்னிடம் சில வரங்கள் கேட்பேன். அவற்றை நீ எனக்குத் தருவாய். அதன் மூலம் நான் மற்ற மனிதர்களை போல ஆக மாட்டேன்

காளி : அப்படி என்ன வரங்கள் கேட்கப் போகிறாய்?

பாடல்

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

எளிய பாடல். எனவே அருஞ்சொற் பொருள் எழுதவில்லை.

இந்து மதம் மூன்று விதமான கர்மங்களைப் பற்றி பேசுகிறது.


முன் பிறவியில் செய்து, அப்போது தீர்க்காமல் தொடர்ந்து வருவது.  இதை சஞ்சித கர்மம் என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிறவியில் செயல்படத் தொடங்கும் வினைகள். இதற்கு பிராரப்த கர்மம் என்று பெயர்.

இந்த இரண்டும் சேர்ந்து, இந்தப் பிறவியில் கழிக்காமல் அடுத்த பிறவிக்கு கொண்டு செல்வது. இதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர்.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான்" என்பார் மணிவாசகர்.


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி 

என்பது சிவபுராணம்.




இந்தப் பிறவியில் கர்மம் செய்யாமல் இருந்து விடலாம். முன்பு செய்த பழிக்கு என்ன செய்வது?

"முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோள்களும்" என்பார் அருணகிரி.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே



நமக்கு தெரியக் கூடத் தெரியாது.

எனவே பாரதி முதலில் அதை வேண்டுகிறான்


"என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -"

இனியும் அது தொடர கூடாது என்று.



"இனி என்னைப் புதிய உயிராக்கி "


எப்போதும் பழமையிலேயே கிடந்து உழல்கிறோம். பழைய பஞ்சாங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். வேதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது,  புராணத்தில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பாரதி சொல்கிறான்,  "என்னை உயிராக ஆக்கி" என்று.

அடுத்தது,

" எனக்கேதுங் கவலையறச் செய்து -"


கவலை அறவே இல்லாமல் செய்து விடு என்கிறான்.

கவலை இல்லாமல் எப்படி இருப்பது?


"மதிதன்னை மிகத் தெளிவு செய்து -"

அறிவு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் அனைத்து கவலைகளுக்கும் காரணம். குழப்பமே எல்லா கவலைகளுக்கும் காரணம். மதி தெளிவாகிவிட்டால்  கவலை தீர்ந்து விடும்.


என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

கவலை போனால் மட்டும் போதாது. அதோடு சேர்ந்து சந்தோஷமும் போய் விட்டால்  என்ன செய்வது? 

என்னவே, கவலை போகட்டும், சந்தோஷம் இருக்கட்டும் என்று வேண்டுகிறான். 

ஆண்டவனிடம் இப்படி அதிகாரமாக கேட்கலாமா?  ஒரு பணிவு வேண்டாம்? 
பக்தி வேண்டாம்?

பாரதியைப் போல ஆண்டவனிடம் அதட்டிக் கேட்டது யாராவது உண்டா ? 

நாளை சிந்திப்போம் அது பற்றி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_12.html

Tuesday, February 11, 2020

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள்

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள் 


நாம் பல பாடல்களை முதல் சில வரிகளை படித்து இருப்போம். அதுவே முழுப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அல்ல. முழுப் பாடலும் படிக்கும் போது ' அட ! இந்தப் பாடலுக்குப் பின் இவ்வளவு இருக்கிறதா' என்று ஆச்சரியம் வரும்.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ள பாடல்.

பாடல்

தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

தனித்த்தனியே பொருள் சொல்லத் தேவை இல்லை. மிக எளிதான பாடல்தான்.

இது ஒரு பக்திப் பாடல் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

'நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?' என்று யாரிடம் சவால் விடுகிறான் பாரதி தெரியுமா?

காளியிடம்.

மற்ற மனிதர்களை போல  நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ  என்று காளியிடம் கேள்வி  கேட்க்கிறான் பாரதி.

இந்தப் பாடலின் பிற் பகுதியைப் படித்தால் அது புரியும். அது நாளை வரும்.

வேடிக்கை மனிதர்கள் என்று பாரதி சொல்வது யாரை?

ஒரு வேளை நம்மைத்தானோ?

என்ன செய்தோம் இதுவரை ?

தினம் உணவு உண்டோம்.

"தேடிச் சோறுநிதந் தின்று -"

அந்த சோறு தின்பதற்காக, ஒரு இருப்பது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் படித்தோம். வேலைக்குப் போனோம். சம்பாதித்து உணவு உண்கிறோம். அது தானே முதல். வீடு, கார் எல்லாம் அப்புறம் தானே. சோறு திங்க வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கிறோம்.

சரி.

அப்புறம் என்ன சாதித்தோம்?

"பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -"

பெரிதாக ஏதாவது சிந்திக்கிறோமா?  உலகை மாற்றும் படி, பெரிய கண்டு பிடிப்பு ஏதாவது செய்ய சிந்திக்கிறோமா? Whatsapp , faceboook , என்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் இந்த வெட்டிக் கதைப் பேசுவதில் போக்குகிறோம்.

சரி நல்லா சாப்பிட்டாச்சு, வாட்சப்பில் foward பண்ணுவதும், வந்த forward களை படிப்பதுமாக   நாள் ஓடுகிறது.

அப்புறம் என்ன செய்கிறோம்?

" மனம் வாடித் துன்பமிக உழன்று -"

நிச்சயம் செய்கிறோம். கவலைப் படாத நாள் உண்டா? துன்பம் இல்லாத நாள் உண்டா ? ஒன்றும் இல்லாவிட்டாலும், எதையாவது நினைத்து கவலைப் படுவதே இயல்பாகப் போய் விட்டது. கவலை இல்லாதா நாள் ஒரு நாளே இல்லை என்று ஆகி விட்டது.

சரி, சாப்பாடு, அரட்டை, துன்பம் ஆச்சு. அப்புறம் வேற ஏதாவது செய்கிறோமா?

" பிறர் வாடப் பலசெயல்கள் செய்து "


நாம் கவலைப் பட்டால் போதாது என்று, மற்றவர்களையும் கவலைப் படுத்துகிறோம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மற்றவர்களை கவலைப் பட வைக்கிறோம்.


" நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -"

வாழ்க்கை இப்படியே போய் விடுகிறது. நரை கூடி, கிழப் பருவம் வந்து சேர்கிறது.


" கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -"

கூற்றுவன் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான் ஒரு நாள்.


" பல வேடிக்கை மனிதரைப் போலே -"

Funny Fellows என்று பாரதி நம்மைச் சொல்வது போலவே இருக்கிறது.

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நானும் அப்படி ஆவேனோ என்று காளியிடம் எதிர்த்துக் கேட்கிறான்.

அதற்கு காளி என்ன சொன்னாள் ?

நாளை பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_11.html

Thursday, January 2, 2020

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல்

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல் 


இலக்கியங்கள் படிக்க மிகக் கடினமாக இருந்தால், அது ரொம்பக் கடினம் என்று விட்டு விடுகிறோம்.

மிக எளிமையாக இருந்தால், அதில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

ஓடி விளையாடு பாப்பா என்று பாப்பாவுக்கு பாடல் சொன்னான் பாரதி. பள்ளிக் கூடத்தில் படித்தது. அதில் என்ன இருக்கிறது என்று மேலே போய் விடுகிறோம்.

அந்தப் பாடலில் எத்தனை அடிகள் இருக்கிறது, எத்தனை பகுதி இருக்கிறது என்று கூட பலருக்குத் தெரியாது. அதில் கடைசிப் பகுதியில் பாரதி வாழ்க்கை முறை பற்றிச் சொல்கிறான் சொல்கிறான்....


பாடல்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் ...அப்பா, அம்மா, கணவன் மனைவி, பிள்ளைகள் என்று இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வேண்டும் என்றான். உயிர் என்றால் இங்கே மனிதர்கள் மட்டும் அல்ல....விலங்குகளும், தாவரங்களும் அடங்கும். தெரு நாய், மின்சார கம்பி மேல் அமர்ந்து இருக்கும்புறா, சிட்டுக் குருவி, சாலை அமைக்கிறோம் என்று வெட்ட நினைக்கிறார்களே அந்த மரம்  இவற்றின் மேல் எல்லாம் அன்பு வேண்டும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்

என்றாரே வள்ளலார், அந்த அன்பு வேண்டும்.

கணவன் மனைவி இடம் அன்பு இல்லை, பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு இல்லை,  உடன் பிறப்புகள் நீதி மன்ற படிக்கட்டுகளில், தவித்த வாய்க்கு தண்ணீர்  தர மறுக்கும் அயல் மாநிலம், என்று எங்கும் அன்புப் பஞ்சமாய் இருக்கிறது.

அன்பை கொடுக்கவும் ஆள் இல்லை. கொடுத்தால் பெற்றுக் கொள்ளவும் ஆள் இல்லை.

குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை கொடுத்த அன்பு ...

கொம்பு இல்லாமல் ஆடிய கொடிக்கு தேர் கொடுத்த அன்பு ...

புறாவைக் காக்க தன் சதையை அரிந்து கொடுத்த அன்பு ...

இவை எல்லாம் இருந்தது இந்த நாட்டில், ஒரு காலத்தில்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். யாரையும் கடிந்து பேசாதீர்கள். பிறர் மனம் வருந்தும் காரியங்களை செய்யாதீர்கள். பிற உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுங்கள்.

அன்பே சிவம் என்பார் திருமூலர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவப் பேராசான்.

அடுத்தது,

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்"

தெய்வம் உண்மை என்று நீங்களே அறிய வேண்டும். யாரோ சொன்னார்கள் என்று சொல்லக் கூடாது. மாணிக்க வாசகர் சொன்னார், சேக்கிழார் சொன்னார், அதில் அப்படி போட்டு இருக்கிறது, இதில் இப்படி போட்டு இருக்கிறது என்று சொல்லக் கூடாது. "தான் அறிதல்" வேண்டும்.   நீங்களே அறிய வேண்டும். அவர்கள் அறிந்தார்கள். அது அவர்களுக்கு. நீங்கள் அறிந்தீர்களா?  அவர் என்ன பொய்யா சொல்லப் போகிறார் என்று  மற்றவர்கள் சொல்வதற்கு தலை ஆட்டிக் கொண்டு இருக்காதீர்க்கள்.

மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம் என்றால்

"தெய்வம் உண்மை என்று அறிதல் வேணும்" 

என்று சொல்லி இருப்பான் பாரதி.

"தானறிதல் வேணும்" என்று சொல்கிறான். வேலை மெனக்கெட்டு "தான்" என்ற ஒரு வார்த்தையைப் போடுகிறான். 

வேதம் சொல்கிறது, கீதை சொல்கிறது, என்று சொல்லாதீர்கள். நீங்கள் அறிந்தது என்ன?


"வயிர முடைய நெஞ்சு வேணும்" -

சிலருக்கு எதிலும் எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் ஒரு உறுதி கிடையாது. மனதில் வைரம் போல உறுதி வேண்டும். எது சரி, எது தவறு என்பதில்  உறுதி வேண்டும். எப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது.


 இது வாழும் முறைமையடி பாப்பா!

இது தான் வாழும் முறை என்கிறான் பாரதி.

இந்த மூன்று மட்டும் அல்ல. இந்தப் பாட்டில் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறான் பாரதி.   பாடலைத்  தேடி கண்டு பிடித்து மீண்டும் ஒரு முறை படியுங்கள். எளிய பாடல் என்று உதாசீனம் செய்து விடாதீர்கள்.

அது பாப்பாவுக்கு மட்டும் சொன்னது  அல்ல. நமக்கும் சேர்த்துத்தான்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால், சொல்லிக் கொடுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post.html

Thursday, September 29, 2016

பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா

பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா 


கவிஞர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது கவிதையாக வெளிப் படுகிறது. உண்மையான கவிஞர்களின் கவிதைகள் காலம் கடந்து நிற்கின்றன. இன்றும் எத்தனையோ கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். பெரிய பெரிய ஆட்களைக் கொண்டு அணிந்துரை எழுதச் செய்து, பெரிய விளம்பரங்கள் செய்து, அழகான விலை உயர்ந்த காகிதத்தில் அச்சடித்து விற்கிறார்கள். சில ஆண்டுகள் கூட நிற்பதில்லை. காணாமல் போய் விடுகின்றன.

பனை ஓலையில், இரும்பு கம்பி கொண்டு எழுதிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நிற்கின்றன.

திருக்குறளும், தேவாரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் எப்படியோ காரியங்களுக்கும், தீக்கும் , வெள்ளத்திற்கும் தப்பி காலத்தை வென்று நிற்கின்றன.

எப்படி ?

உண்மை, சத்தியத்தின் சக்தியாக இருக்குமோ ?

பாரதியின் பாப்பா பாட்டு.

அவன் என்ன நினைத்து எழுதினானோ தெரியாது. இன்றும் நமது வாழ்க்கையில்  அது மிக மிக அர்த்தம்  உள்ளதாக இருக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சொல்லுவதைப் போல சொல்லி இருக்கிறான் அந்த மகா கவி.

இன்று செல் போன் , லேப்டாப் கம்ப்யூட்டர், டிவி என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன. பிள்ளைகள் வெளியே சென்று விளையாடுவது என்பது மிக மிக குறைந்து  விட்டது. வெளியில் சென்று விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் ?

முதலாவது, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட படிக்கலாம். Social skills வளரும்.

 இரண்டாவது,  அப்படிச் இப்படிச் செய் என்று சொல்லுவதிலும், அப்படி மற்ற குழந்தைகள் சொல்வதை கேட்பதிலும் ஒரு தலைமை பண்பு வளர வழி இருக்கிறது.

 மூன்றாவது, வெளியில் விளையாடும் போது வெயில் பட்டு, வைட்டமின் டி கிடைக்க வழி  பிறக்கும்.

 நான்காவது, ஓடி விளையாடினால் தசைகள் வலுப் பெறும்.

ஐந்தாவது, ஓடி விளையாடும் போது மூச்சு  வாங்கும். அதிகமான பிராண வாயு உள்ளே செல்லும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படும். அது மட்டும் அல்ல உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு  அதிகமாக கிடைத்து அவை நல்ல நிலையில் செயல்  படும்.

வீட்டுக்குளே இருந்து கொண்டு செல் போன், டிவி, லேப்டாப்  என்று அடைந்து  கிடந்தால், இது ஒன்றிற்கும் வழி  இல்லை.

 எனவே தான் அவன் சொன்னான்

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு

ஓடி விளையாடு என்றால் தான் மட்டும் ஓடிக் கொண்டிருப்பது இல்லை. மற்ற பிள்ளைகளையும் சேர்த்து விளையாடு என்றான்.

அப்படி மற்ற குழந்தைகளோடு விளையாடும் போது , சண்டை சச்சரவு  வரலாம். அதற்காக ஒருவரையும் திட்டாதே என்றான்

குழந்தையை வையாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,


குருவி போல அங்கும் இங்கும் பறந்து  திரி.ஒரு இடத்தில் இருக்காதே என்றான்.


வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.


இயற்கையை இரசிக்கப்  பழகு. மனதில் பறவைகள் மேல் மகிழ்ச்சி வந்தால் அவற்றை கொல்ல வேண்டும் என்ற எண்ணம்  வராது. அவை குடி இருக்கும்  மரத்தை வெட்ட மனம் வராது.


கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,

பிள்ளைகளை மட்டும் அல்ல, மற்ற உயிர்கள் மேலும் அன்பு செலுத்து. கோழியையும் கூட்டி வைத்து விளையாடு.  இப்போதெல்லாம் கோழி எங்கே இருக்கிறது ? கடையில்தான் தொங்குகிறது.


எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

சமுதாயத்தில் பசித்தவர்கள்  இருப்பார்கள்.பசிக்காக திருடிவிட்டால் அவர்களை  வெறுக்காதே. அவர்கள் மேல் இரக்கம் கொள்.  திருடும் காக்கை மேல் இரக்கம் கொள் என்றான். அதை அடித்து விரட்டாதே என்று சொல்லிக்  கொடுத்தான்.


பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.


 பசுவையும்,நாயையும் நேசிக்கக் கற்று கொடுத்தான்.


வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

வீட்ட்டில் வேலைக்கு இருப்பவர்களை சில எஜமானி அம்மாக்கள் அடிமைகளை போல  நடத்துவார்கள்.ஒரு மரியாதை இல்லாமல்  பேசுவார்கள். தினம் ஒரு வசவு தான். அவர்களும் மனிதர்கள் தான். நமக்கு கீழே வேலை செய்பவர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான்.  குதிரையும்,மாட்டையும், ஆட்டையும் ஆதரித்துப் பழகி விட்டால் பின்னாளில் தனக்கு கீழே வேலை செய்பவரகளின் உழைப்பை மதிக்கும் மனம் வளரும்.


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு


படிப்பு முக்கியம். அதற்காக எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருந்தால்  மனம் மரத்துப் போய் விடும்.  மனம் பண் பட வேண்டும் என்றால்  பாட்டு, நாடகம், இசை என்று இரசிக்கப் பழக வேண்டும்.   மனம் மென்மையாகும்.


மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

படிப்பு, பாட்டு, உடல் உழைப்பு என்று இருக்க வேண்டும்.  அறிவும், மனமும் மட்டும் வேலை செய்தால் போதாது. உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேண்டாத நோய் எல்லாம் வந்து சேரும்.  உடலுக்கும் வேலை கொடுத்தான் பாரதி.


பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

பொய்யும், புறஞ் சொல்லுதலும் கூடாது என்றான்.



தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே. மற்றவர்கள் மேல் பழி சொல்லி நீ தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே.

உண்மை சொல். பொறுப்பை ஏற்றுக் கொள். துன்பம் வரலாம். தீங்கு வராது. உண்மை சொல்லி வாழ்ந்தால் தெய்வம் உனக்கு துணையாக இருக்கும். பயப்படாதே என்று தைரியம் சொல்லித் தருகிறான்.

பெண்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். எதற்கு எடுத்தாலும் ஒரு ஆணின் துணியை நாடுபவர்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் பயந்து ஒதுங்காதே. சண்டை போடு அவனிடம். அவனை அவமரியாதை செய். அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது. துணிந்து நில் என்று தைரியத்தை விதைக்கிறான்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

வாழ்வில் எப்போதும் இன்பமே இருக்காது. எப்போதாவது துன்பம் வரும். துன்பம் வரும் போது துவண்டு விடாதே. சோர்ந்து விடாதே. நமக்கு அன்பான தெய்வம் துணை  உண்டு.துவண்டு விடாதே என்று ஆறுதல் சொல்லுகிறான்.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

வாழ்வில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், அதை போக்க ஒரே வழி சோம்பல் இல்லாமல் உழைப்பதுதான். சோம்பலில்லாமல் உழைக்க வேண்டும் என்றான்.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - 

தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தாயார் சொன்னதை அப்படி கேள் என்றான். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காதே. அம்மா சொன்னால் அப்படியே கேள் என்றான்.



தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


உடல் ஊனம் கண்டு வருந்தாதே. போராடு. வெற்றி அடைவாய் என்று சொல்லித்தருகிறான்.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,

தாய் நமக்கு பால் தந்து, உணவு தந்து நம்மை பாதுகாக்கிறாள். அதே போல் நாம் பிறந்த மண்ணும் நமக்கு உணவும், இருக்க இடமும் தருகிறது. அதை தாய் என்று கும்பிடச் சொன்னான். தாய் நாட்டின் மேல் பற்று இருந்தால், அதை குப்பையாகச் சொல்லாது, அதன் பெயருக்கு களங்கம் வரும் படி எதுவும் செய்யத் தூண்டாது. அதன் வளங்களை சுரண்டச் சொல்லாது.


அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

நம் முன்னோர்கள் தேசம் அமிழ்தை விட இனியது.



சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;

மொழியின் மேல் மதிப்பு வேண்டும். நாட்டையும், மொழியையும் மதிக்காதவன் வேறு எதைத்தான் மதிப்பான்.

தமிழில் நமக்கு நூல்களை தந்தவர்கள் மகான்கள். வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும், ஆழவார்களும், நாயன்மார்களும் நாம் உய்ய வேண்டும் என்று தாங்கள் தேடிக் கண்ட உண்மைகளை பாட்டாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். நன்றி வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக , தமிழை தொழுது படித்திடச் சொன்னான்.


செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

இந்த நாடு செலவச் செழிப்பான நாடு. இங்கு என்ன இல்லை என்று மற்ற நாடுகளுக்கு போகிறார்கள். நீ எங்கும் போகாதே. இங்கேயே இரு என்கிறான்.


வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

இந்த பொருள் வளம் குறைந்து இருக்கலாம். வாழ்க்கை வசதிகள் குறைவாக இருக்கலாம். வேதம் உடையது இந்த நாடு. இதை விட வேறு என்ன வேண்டும்.  நீதிக்காக போராடும் உள்ளம் கொண்ட வீரர்கள்  உள்ள நாடு. இதை தெய்வம் என்று கும்பிடச் சொன்னான்.


சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

சாதிகள் இல்லையடி பாப்பா. உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் என்று சொல்லுவதே கூட பாவம் என்றான். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று நினைக்கச் சொன்னான்.



நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

படிப்பறிவு, கல்வி , என்று இருந்து விட்டால் மட்டும் போதாது. அன்பு நிறைய  இருக்க வேண்டும்.  அவர்கள்தான் மேலோர். அன்பு இல்லாதோர் எல்லாம்  கீழோரே.  படைத்தவனை மேலோர் என்று நினைக்காதே.  உள்ளத்தில் அன்பு இல்லாதவன் எவ்வளவு உயர்ந்தவனாக  இருந்தாலும் பெரியவன் இல்லை.



உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;

உயிர்களிடம் அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று அறிதல் வேண்டும்.

அன்பாக இருப்பவர்கள். தெய்வ பக்தி கொண்டவர்கள் ஏதோ கோழைகள் அல்ல.


வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.


வைரம் போன்ற உறுதியான மனம் வேண்டும்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்றான்.

சொல்லித் தருவோம் - அடுத்த தலைமுறைக்கு, அதற்கடுத்த தலைமுறைக்கும்.

Sunday, March 8, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள் 


கர்மாக் கொள்கை என்று ஒன்று வைத்து இருக்கிறோம்.

 அதன் மூலம், விதி என்ற ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறோம்.

நாம் முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு நல்லதும் தீயதும் இந்தப் பிறவியில் நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அது தான் நம் விதி என்று ஏற்றுக் கொள்கிறோம்.

 எனவே,நாம் செய்ய வேண்டியது ஒன்றும்  இல்லை. சும்மா இருந்தால் போதும். செய்த வினைகளுக்கு ஏற்ப ஏதோ ஒன்று நடக்கும்.

வாழ்க்கையில் முயற்சியின் பங்கு என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

பாரதி சொல்கிறான்.


சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,

குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.

பொருள்

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; = பழைய வினைகளின் பயன்கள் என்னை தீண்டாது.

“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ? = நானே ஸ்ரீதரன், நானே சிவ குமாரன்

நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன், = நன்றாக இந்த கணத்தில் பிறந்து விட்டேன்

நான்புதியன், = நான் புதியன்

நான்கடவுள் = நான் கடவுள்

நலிவி லாதோன் = எந்தக் குறையும் இல்லாதவன்

என்றிந்த வுலகின்மிசை = என்று இந்த உலகில் வானோர் போலே

இயன்றிடுவார் சித்தரென்பார்; = இயங்கிடுவார், சித்தரென்பார்

பரம தர்மக் குன்றின்மிசை = தர்மம் என்ற குன்றின் மேல்


யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து = ஒரே பாய்ச்சலாக பாய்ந்து


குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார் = குறிப்பு (நோக்கம் ) இல்லாமல், கேடு இல்லாமல், குலைதல் இல்லாமல் இருப்பார்
.

Saturday, March 7, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?


இன்று புதியதாய் பிறந்தோம், சென்றது இனி மீளாது என்று பாரதி சொன்னான். (பார்க்க முந்தைய ப்ளாக்).

அப்படி என்றால் நாம் காலம் காலமாக கர்மா என்று சொல்லிக் கொண்டு வருகிறோமே அது என்ன ஆகும் ?

மறு ஜென்மம், பாவம்  புண்ணியம், இருவினை, எழு பிறப்பு, சொர்க்கம் , நரகம் என்றெல்லாம் சொல்லக்  இருக்கிறோமே அது எல்லாம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழும் அல்லவா ?

பாரதி சொல்கிறான்....



மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே, மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.


பொருள்

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, .... மேலும் மேலும் நடந்தையே நினைத்து அழ வேண்டாம். தவறு செய்து  விட்டேன்,பாவம் செய்து விட்டேன், இதனால் என்ன ஆகுமோ என்று நினைத்து அழாதீர்கள்.



அந்தோ! .... ஐயோ

மேதையில்லா மானுடரே = அறிவு இல்லாத மானிடரே


மேலும் மேலும் = மேலும் மேலும்

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியகாற் றெம்முள் வந்து = புதிய காற்று எம்முள் வந்து

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியவுயிர் விளைத்தல் கண்டீர் = புதிய உயிர் விளைதல் கண்டீர்

ஆன்மாவென்றே = ஆன்மா என்றே

கருமத் தொடர்பை யெண்ணி = கருமத் தொடர்பை எண்ணி. அதாவது நல்லது செய்தால் நல்லது  நடக்கும்,தீமை செய்தால் தீமை நடக்கும், என்ற கருமத் தொடர்பை எண்ணி

அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே! = அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி = மான் போன்ற விழியுடைய சக்தி தேவி

வசப்பட்டுத் = அவள் வசப் பட்டு

தனைமறந்து வாழ்தல் வேண்டும். = தன்னை மறந்து வாழ வேண்டும்

ஆன்மா , கருமம் என்று மயக்கம் கொள்ளாதீர்கள் என்று  சொல்கிறார்.

நம்மால் ஒத்துக் கொள்ள முடியுமா ? எத்தனை வருடத்திய பழக்கம், படிப்பு.

அத்தனையும் வீண் என்று ஒத்துக் கொள்ள ஒரு தைரியம் வேண்டும். நம்மிடம் இருக்கிறதா  ? பாரதியார் அப்படித்தான்  சொல்லுவார்.நாம நம்ம வேலையப்  பார்ப்போம்  என்று கிளம்பி விடாமல் சற்று  சிந்திப்போம்.

ஒரு வேளை நாம் நம்பியவை தவறாக இருந்தால்...இன்றே மாற்றிக் கொள்ளலாமே ?





Friday, March 6, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம் 


ஏன் குப்பை மூட்டையை தூக்கித் திரிகிரீர் என்று பாரதி, குள்ளச் சாமியை பார்த்து கேட்டான்.

அதற்கு, அந்த குள்ளச் சாமி, நானாவது வெளியே குப்பை மூட்டையை தூக்கித் திரிகிறேன். நீயோ, மனதுக்குள் எத்தனை குப்பை மூட்டைகளை தூக்கிக் கொண்டு திரிகிறாய் என்று திருப்பிக் கேட்டார்.

கேட்டது பாரதியிடம் அல்ல...நம்மிடம்.

மேலும் பாரதி சொல்லுகிறார்....

முட்டாள்களே, சென்றது இனி மீண்டு வராது. நீங்கள் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து வருந்துகிறீர்கள். சென்றதைப் பற்றி மறந்து விடுங்கள்.

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் உறுதியாக கொண்டு, தின்று, விளையாடி இன்பமாக  வாழ்வீர்.

பாடல்

சென்றதினி மீளாது; மூடரே நீர்
எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;


பொருள்

படிக்காமல் விட்ட பாடங்கள், வாங்காமல் விட்ட சொத்துகள், செய்த தவறுகள்,  பட்ட அவமானங்கள், அனுபவித்த துன்பங்கள், என்றோ எப்போதோ நடந்துவிட்ட தவறுகள்  என்று பழசை நினைத்தே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்.

இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள்  என்று அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்

சொல்லிக் கொடுத்தவை, படித்தவை, நாமாக நமக்குச் சொல்லிக் கொண்ட அனுபவப் பாடங்கள் நமக்கும் உண்மைக்கும் நடுவே நிற்கின்றன.


நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது.

இறந்த காலத்தை முற்றுமாக மறந்து விடுங்கள். இன்று புதியதாய் பிறந்தோம்  என்று எண்ணிக்  கொள்ளுங்கள்.

வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என்று எண்ணி ஆரம்பியுங்கள்....ஒவ்வொரு நாளும்.

பழைய குப்பைகளை தூக்கிப்  போடுங்கள்.

பிறந்த குழந்தைக்கு எதிர் காலம் மட்டும் தான் உண்டு....அதற்கு இறந்த காலம் என்பது இல்லை.

குழந்தைக்கு எல்லாமே புதிது....இந்த உலகமே புதிது....மனிதர்கள், உறவுகள், பொருள்கள, சப்தங்கள், காட்சிகள் என்று எல்லாமே புதிது....

அது போல, புத்துணர்வு கொண்டு உண்டு, விளையாடி, இன்பமாக இருங்கள்.

இதை விட உயர்ந்த  உபதேசம் கிடைத்து விடுமா என்ன ?

 


Thursday, March 5, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை 


பாரதியார் திண்ணையில் அமர்ந்து இருக்கும் போது , அந்தப் பக்கம் குள்ளச் சாமி ஒரு பழங் கந்தை மூட்டையை சுமந்து  வந்தான்.

பாரதியார் கேட்டார் "என்னய்யா இது, இப்படி குப்பை மூட்டையை தூக்கிக் கொண்டு திரிகிரிறே "

அதற்கு அந்த குள்ளச் சாமி சிரித்துக் கொண்டே சொன்னான்,

"நானாவது பரவாயில்லை, அழுக்கு மூட்டையை வெளியே சுமந்து கொண்டு செல்கிறேன் ...நீயோ குப்பைகளை உள்ளே சுமந்து கொண்டு திரிகிறாயே "

யோசித்து பாப்போம்....

நமக்குள் தான் எவ்வளவு குப்பை மூட்டைகள்...அதுவும் மிக மிக பழைய குப்பைகள். மக்கிப் போனவை. துர் நாற்றம் அடிப்பவை.

ஒவ்வொருவனும் ஒரு ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு  அலைகிறான்....நான் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி வாழ்கிறேன் என்கிறான்.

அந்தப் புத்தகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பெருமை கொள்கிறான்.

என் புத்தகம் 1000 ஆண்டுகள் பழமையானது என்று ஒருவன் பெருமை கொள்கிறான். இன்னொருவன், தன்னுடைய புத்தகம் 2000 ஆண்டு பழமையானது என்று பெருமை கொள்கிறான்.

பழங் குப்பைகளை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்.

இவற்றை விட்டு விட்டு வாருங்கள் என்கிறார் பாரதி.

இந்தப் புத்தகங்கள் உங்களை சிறைப்  படுத்துகின்றன.உங்கள் சிந்தனைகளை தடைப் படுத்துக்கின்றன. உங்களை மூளைச் சலவை  செய்கின்றன.இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கிறார் பாரதியார்.

பாடல்

புன்னகைபூத்தாரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்தவனுமேகிவிட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தரெல்லாம மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்


பொருள் 

புன்னகை பூத்து ஆரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்து அவனும் ஏகி  விட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

உங்கள் பழம் நம்பிக்கைகளை, பொய்களை, விட்டு விடுதலை  பெறுங்கள்.

அது எப்படி பழசை எல்லாம் விட முடியும்  ? நம் முன்னவர்கள் என்ன முட்டாள்களா  ? அவர்கள் சொன்னதில் ஏதோ அர்த்தம் இருக்கும் ? அர்த்தம் இல்லாமலா  சொல்லி இருப்பார்கள் ? இத்தனை வருடம் அவற்றை நம்பி காரியங்கள்  செய்து வந்து இருக்கிறோம் ...

பாரதியார் அவற்றிற்கும் விடை தருகிறார்....


Tuesday, March 3, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - மூட்டை சுமந்திடுவதென்னே?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் -  மூட்டை சுமந்திடுவதென்னே?


 இன்னொரு நாள், அந்தக் குள்ளச் சாமி பழைய கந்தைகள் கொண்ட ஒரு அழுக்கு மூட்டையை சுமந்து பாரதியின் முன்னால் வந்தான்.

அவனைக் கண்டு நகைத்து, பாரதி கேட்டான்,


பாடல்


பொய்யறியா ஞானகுரு சிதம்பரேசன்
 பூமிவிநாயகன்குள்ளச்சாமியங்கே
மற்றொருநாள் பழங்கந்தையழுக்கு மூட்டை
 வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
 கற்றவர்கள் பணிந்தேத்துங்கமலபாதக்கருணைமுனி
சுமந்துகொண்டென்னெதிரே வந்தான்
 சற்றுநகை புரிந்தவன்பால் கேட்கலானேன்
தம்பிரானே இந்தத் தகைமையென்னே?
 முற்றுமிது பித்தருடைச் செய்கையன்றொ?
 மூட்டை சுமந்திடுவதென்னே?

மொழிவாய் என்றேன்


பொருள்


பொய் அறியாத ஞான குரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச் சாமி அங்கே மற்றொரு நாள்  பழங்கந்தை அழுக்கு மூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின்  மீது கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாதம் கருணை முனி சுமந்து கொண்டு  என் எதிரே வந்தான்.

சற்று நகை புரிந்து அவன் பால் கேட்காலானேன், தம்பிரானே இந்தத் தகைமை  என்னே ? முற்றுமிது பித்தருடைய செய்கை அன்றோ ? மூட்டை சுமந்திடுவது என்னே ? மொழிவாய் என்றேன் ...


 அதற்கு   அந்த குள்ளச் சாமி சொன்னான் ....


Sunday, March 1, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி 



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;



குள்ளச்சாமி சொன்னது எல்லாம் சரிதானா ? அவை உண்மைதானா ?

மூச்சை கட்டுப் படுத்தி, யோகம் பயின்றால், அழியாத (மணல் போல) உண்மையை அறிய முடியுமா ?

பாரதி சொல்கிறான் , கையில் (வேத) நூல் ஏதும் இருந்தால், அதைப் பிரித்து அதில் அந்த குள்ளச் சாமி சொன்ன உபதேசம் எங்கே  இருக்கிறது என்று காட்டச் சொல்வேன். அவனும் அதைக் காட்டி இருப்பான்.

அதாவது, குள்ளச் சாமி சொன்னது எல்லாம் நம் வேத புத்தகத்தில் உள்ளதுதான் என்கிறார்.

மேலும்....


வானைக் காட்டி, மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,


வானத்தைக் காட்டி, அந்த வானத்து இருளை கண்ணின் மையாகக் கொண்ட அவளின் காதல் ஒன்றே இந்த உலகில் வாழும் வழி என்று காட்டி.

அவள் யார் ?

தாயா  ? காதலியா ? மனைவியா ?

தெரியவில்லை. ஆனால், அவளின் காதல் மட்டும்தான் வையகத்தில் வாழும் நெறி என்கிறார் பாரதியார்.

அவள், உங்களுக்கு யாரோ, அவள் தான் பாரதி சொன்ன அவள்.

அது மட்டும் அல்ல,

குள்ளச்சாமி எனக்கு பல குறிப்புகளை காட்டி, ஞானத்தைத் தந்தான் என்கிறார்.


ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,


அந்த குள்ளச் சாமி பொய் என்பதை அறியாதவன். சிதம்பரேசன், பூமியில் விநாயகன் அவனே (விநாயகன் = நாயகன் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் விநாயகன் )

பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.


அடுத்த நாள் பாரதி குள்ளச்சாமியை மீண்டும் சந்திக்கிறார் .....


Saturday, February 28, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை 


குள்ளச்சாமி மூன்று பொருள்களை பாரதிக்கு காட்டினான்.

குட்டிச் சுவர்
சூரியன்
கிணற்றில் சூரியனின் நிழல்
அவ்வளவுதான் உபதேசம். புரிந்ததா என்று  கேட்டார்,பாரதியும் புரிந்தது என்றார். குள்ளச் சாமி சந்தோஷமாக போய்  விட்டார்.

நாம் தான் மண்டை காய்கிறோம்.

நம் நிலை தெரிந்து பாரதி அதை  விளக்குகிறார்.

குரு சொன்னதை மற்றவர்களுக்குச் சொல்லக்  கூடாது என்று ஒரு விதி உண்டு. காரணம், சீடனின் தகுதி பார்த்து உபதேசம் செய்ய வேண்டும்.

தகுதி இல்லாதவனுக்கு உபதேசம் செய்தால் அவன் உபதேசத்தை கீழ்மை படுத்துவான்.

ஒரு ஆரம்ப பள்ளி மாணவனுக்கு இயற்பியலின் உயர் விதிகளை சொல்லிக் கொடுத்தால் அவன் அதைக் கேட்டுச் சிரிப்பான். தன் நண்பர்களிடம் சொல்லி சொல்லி அதை ஏளனம் செய்வான். அவனுக்குப் புரியவில்லை என்பது அவனுக்குப் புரியாது. ஏதோ நகைச்சுவை என்று நினைத்து ஏளனம் செய்வான்.

எனவேதான், தகுதி இல்லாதவர்களுக்கு உயர்ந்த விஷயங்களை  சொல்லித் கூடாது என்று வைத்தார்கள்.

இந்த நாட்டில் கம்ப இராமயணத்தை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. அதன் உயர்வு புரியாதவர்கள் நினைத்த தவறு அது.


முதன் முதலில் இராமானுஜர் அந்த விதியை  உடைத்தார்.தான் அறிந்த உண்மையை எல்லோரும் அடைய வேண்டும் என்று கோவில் கோபுரத்தில் ஏறி ஊருக்கே உபதேசம்  செய்தார்.   சீடன் யார் என்றே தெரியாமல் உபதேசம் செய்தார்.

அடுத்து பாரதியார், தான் பெற்ற உபதேசத்தை ஊருக்கே சொல்லிச்  செல்கிறார்.



தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;


தேசிகன் காட்டி எனக்கு உரைத்த செய்தியை செந்தமிழில் உலகத்தார் உணரும் படி சொல்கின்றேன்.

ஏன் சொல்ல வேண்டும் ? தனக்கு கிடைத்ததை தான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது தானே ? அதுதான் அவரின் பெரிய உள்ளம்.



“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;

அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி ?  வாசி என்றால் சுவாசம்.

நாம் உயிர் வாழ்வது, சிந்தனை செய்வது, செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. மூச்சு நின்றால் எல்லாம் அடங்கி விடும்.

இந்த மூச்சு மூன்று விதமாக  வெளிப்படும்.

இடது நாசியின்  வழியே ஓடும் மூச் சந்திரக் கலை எனப்படும்.
வலது நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் கலை எனப்படும்
இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை எனப்படும்.

சுவாசம் இடது நாடியில் ஓடும் போது என்ன செய்ய வேண்டும், வலது நாடியில் ஓடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள். இரண்டு நாடியிலும் ஓடும் போது செய்யக் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

குள்ளச் சாமி சொன்ன செய்தி "சுவாசத்தை கட்டுப் படுத்தி, மண் போல சுவர் போல வாழ வேண்டும்"

அது என்ன மண் போல சுவர் போல வாழ வேண்டும்.

மண்  இயற்கையானது. மண்ணைச் சேர்த்து குழைத்துக் கட்டியது சுவர். சுவர் செயற்கையானது.  மண் என்றும் இருக்கும். சுவர் இன்று இருக்கும், நாளை போகும். சுவரை இடித்தாலும் மண் அப்படியே தான் இருக்கும்.

மண்ணிற்கு என்ன இயல்பு - பரவுவது. குவித்து வைத்தாலும் நாளடைவில் தானே பரவி விடும்.

என்றும் , எப்போதும் சாஸ்வதமாக உள்ள ஒன்றைப் பிடி  என்கிறார்.

உலகில் உள்ள பொருள்கள்,  இன்பங்கள், உறவுகள் எல்லாம் மறையும் இயல்பு  உடையன. மண் எது சுவர் எது என்று கண்டு வாழ் என்பது இரண்டாவது உபதேசம். (மூச்சுப் பழக்கம் முதல் உபதேசம் )



தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;

இது மூன்றாவது உபதேசம். ஒளி உடைய சூரியனை கிணற்றுக்குள்ளே பார்ப்பது போல உனக்குள்ளே சிவனை காண்பாய்.

இறைவன் மிகப் பெரியவன். அவன் எப்படி எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க முடியும். இந்த உயிர்கள் நேற்று  தோன்றி,இன்று இருந்து, நாளை போபவை. இதற்குள்  எப்படி அனாதியான இறை சக்தி இருக்க முடியும் ?

அதை விளக்குகிறார் குள்ளச் சாமி.

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோ இருப்பது. கிட்ட போக முடியாது. ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும்.

கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

எந்த கிணற்றில் ? சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம்  தெரியும்.பாழடைந்த வீட்டின் கொல்லையில் உள்ள கிணற்றில் சலனம் இல்லை. அதில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

அது போல, நம் உள்ளம் சலனம் இல்லாமல்  இருந்தால், நம் உள்ளத்திலும் சிவன்  தெரியும். ஆசை, கோபம், காமம் என்று பலப் பல சலனங்கள். எங்கே சிவனைக் காண்பது.

சரி இதை எல்லாம் ஏன் குள்ளச் சாமி தெளிவாக சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் நமக்கு சந்தேகம் வராது இல்லையா ?

அதைத்தான் அடுத்த வரியில் சொல்கிறார் பாரதியார் ...


பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

பேசுவதில் பயனில்லை. 

பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சு நிற்க வேண்டும். 

கேள்விகள் நிற்க வேண்டும். 

மௌனம் வர வேண்டும்.

மௌனம் ஞான வரம்பு என்பார்  ஒளவையார். மௌனம் ஞானத்தின் எல்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றால்  மணிவாசகர்.

"சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார். 

படிப்பது,  கேட்பதும், பேசுவதும், கேட்பதும் நின்று ...அனுபவத்தால் அறிய வேண்டும். 

அதுவே ஞானம் என்கிறார் பாரதி. 

உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ?

உண்மையை நேரடியாக உணருங்கள். 



Friday, February 27, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் 


குள்ளச் சாமியை துரத்திக் கொண்டு வந்த பாரதி அவரை அருகில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தில் மடக்கிப் பிடித்தார்.

சரி இவன் நம்மை விடமாட்டான் போல் இருக்கிறது என்று அறிந்த கொண்ட அந்த குள்ளச் சாமி, இவன் ஒரு நல்ல சீடன்...இவனுக்கு உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்று உபதேசம்  செய்கிறார்.

அருகில் இருந்த குட்டிச் சுவரைக் காட்டினார், பின் சூரியனைக் காட்டினார், அப்புறம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து அந்த சூரியனின் நிழலைக் காட்டினார்...இந்த மூன்றையும் காட்டி விட்டு "என்ன புரிந்ததா?" என்று கேட்டார்.

"புரிந்தது " என்றார் பாரதி.

குள்ளச்சாமியும் மகிழ்வுடன் சென்று விட்டார்.

வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் என்கிறார் பாரதி.

பாடல்

குள்ளச் சாமியும் சந்தோஷமாக 
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

சரி, இது என்ன உபதேசம் ?

குட்டிச் சுவர், சூரியன், பழைய கிணறு...இந்த மூன்றையும் காட்டி  என்ன புரிந்ததா  என்று கேட்டார், பாரதியும் புரிந்தது என்றார். மொத்தம் அவ்வளவுதான் உபதேசம்.

நமக்கு ஏதாவது புரிகிறதா.

தலை சுற்றுகிறது அல்லவா ?

பாரதி இந்த மூன்றின் விளக்கம் தருகிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விளக்கம்.

பாரதியின் அறிவின் வீச்சை நாம் அறிந்து கொள்ள உதவும் பாடல்.

எவ்வளவு பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

நாம் வாழும் காலத்திற்கு மிக அருகில் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் பெருமை அறியாமல் இருக்கிறோம்.

பாரதியின் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.