Thursday, January 2, 2020

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல்

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல் 


இலக்கியங்கள் படிக்க மிகக் கடினமாக இருந்தால், அது ரொம்பக் கடினம் என்று விட்டு விடுகிறோம்.

மிக எளிமையாக இருந்தால், அதில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

ஓடி விளையாடு பாப்பா என்று பாப்பாவுக்கு பாடல் சொன்னான் பாரதி. பள்ளிக் கூடத்தில் படித்தது. அதில் என்ன இருக்கிறது என்று மேலே போய் விடுகிறோம்.

அந்தப் பாடலில் எத்தனை அடிகள் இருக்கிறது, எத்தனை பகுதி இருக்கிறது என்று கூட பலருக்குத் தெரியாது. அதில் கடைசிப் பகுதியில் பாரதி வாழ்க்கை முறை பற்றிச் சொல்கிறான் சொல்கிறான்....


பாடல்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் ...அப்பா, அம்மா, கணவன் மனைவி, பிள்ளைகள் என்று இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வேண்டும் என்றான். உயிர் என்றால் இங்கே மனிதர்கள் மட்டும் அல்ல....விலங்குகளும், தாவரங்களும் அடங்கும். தெரு நாய், மின்சார கம்பி மேல் அமர்ந்து இருக்கும்புறா, சிட்டுக் குருவி, சாலை அமைக்கிறோம் என்று வெட்ட நினைக்கிறார்களே அந்த மரம்  இவற்றின் மேல் எல்லாம் அன்பு வேண்டும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்

என்றாரே வள்ளலார், அந்த அன்பு வேண்டும்.

கணவன் மனைவி இடம் அன்பு இல்லை, பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு இல்லை,  உடன் பிறப்புகள் நீதி மன்ற படிக்கட்டுகளில், தவித்த வாய்க்கு தண்ணீர்  தர மறுக்கும் அயல் மாநிலம், என்று எங்கும் அன்புப் பஞ்சமாய் இருக்கிறது.

அன்பை கொடுக்கவும் ஆள் இல்லை. கொடுத்தால் பெற்றுக் கொள்ளவும் ஆள் இல்லை.

குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை கொடுத்த அன்பு ...

கொம்பு இல்லாமல் ஆடிய கொடிக்கு தேர் கொடுத்த அன்பு ...

புறாவைக் காக்க தன் சதையை அரிந்து கொடுத்த அன்பு ...

இவை எல்லாம் இருந்தது இந்த நாட்டில், ஒரு காலத்தில்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். யாரையும் கடிந்து பேசாதீர்கள். பிறர் மனம் வருந்தும் காரியங்களை செய்யாதீர்கள். பிற உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுங்கள்.

அன்பே சிவம் என்பார் திருமூலர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவப் பேராசான்.

அடுத்தது,

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்"

தெய்வம் உண்மை என்று நீங்களே அறிய வேண்டும். யாரோ சொன்னார்கள் என்று சொல்லக் கூடாது. மாணிக்க வாசகர் சொன்னார், சேக்கிழார் சொன்னார், அதில் அப்படி போட்டு இருக்கிறது, இதில் இப்படி போட்டு இருக்கிறது என்று சொல்லக் கூடாது. "தான் அறிதல்" வேண்டும்.   நீங்களே அறிய வேண்டும். அவர்கள் அறிந்தார்கள். அது அவர்களுக்கு. நீங்கள் அறிந்தீர்களா?  அவர் என்ன பொய்யா சொல்லப் போகிறார் என்று  மற்றவர்கள் சொல்வதற்கு தலை ஆட்டிக் கொண்டு இருக்காதீர்க்கள்.

மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம் என்றால்

"தெய்வம் உண்மை என்று அறிதல் வேணும்" 

என்று சொல்லி இருப்பான் பாரதி.

"தானறிதல் வேணும்" என்று சொல்கிறான். வேலை மெனக்கெட்டு "தான்" என்ற ஒரு வார்த்தையைப் போடுகிறான். 

வேதம் சொல்கிறது, கீதை சொல்கிறது, என்று சொல்லாதீர்கள். நீங்கள் அறிந்தது என்ன?


"வயிர முடைய நெஞ்சு வேணும்" -

சிலருக்கு எதிலும் எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் ஒரு உறுதி கிடையாது. மனதில் வைரம் போல உறுதி வேண்டும். எது சரி, எது தவறு என்பதில்  உறுதி வேண்டும். எப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது.


 இது வாழும் முறைமையடி பாப்பா!

இது தான் வாழும் முறை என்கிறான் பாரதி.

இந்த மூன்று மட்டும் அல்ல. இந்தப் பாட்டில் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறான் பாரதி.   பாடலைத்  தேடி கண்டு பிடித்து மீண்டும் ஒரு முறை படியுங்கள். எளிய பாடல் என்று உதாசீனம் செய்து விடாதீர்கள்.

அது பாப்பாவுக்கு மட்டும் சொன்னது  அல்ல. நமக்கும் சேர்த்துத்தான்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால், சொல்லிக் கொடுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post.html

1 comment: