Showing posts with label நளவெண்பா. Show all posts
Showing posts with label நளவெண்பா. Show all posts

Monday, June 13, 2022

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவுநளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு


எப்பப் பார்த்தாலும் அறம், பக்தி, துறவு, நிலையாமை என்று படிக்காமல் இடையிடையே கொஞ்சம் ஜொள்ளு பாடல்களையும் அறிவோம். 


தமிழ் இலக்கியத்தில் ஜொள்ளுக்கு ஒரு குறைவில்லை. ஒரு எல்லை தாண்டாமல் மிக நளினமாக காதலை, அதன் நெருக்கத்தை, பிரிவை, சோகத்தை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். 


நள மன்னனுக்கும் தமயந்திக்கும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல். அன்னம் எல்லாம் தூதுவிட்டு முடிந்து விட்டது. நளன், தமயந்தி இருக்கும் மாளிகைக்கு வருகிறான். அது பெரிய கதை. அதை பின்னர் காண்போம். 


முதன் முதலாக இருவரும் சந்திக்கிறார்கள். 


அந்த இடத்தில ஒரு பாட்டு வைக்கணும் என்று புகழேந்தி நினைக்கிறார். 


முதன் முதலாக காதலர்கள் சந்திக்கிறார்கள். என்னென்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றையும் இலக்கியத்தில் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. சொல்லாவிட்டாலும் சுவை இருக்காது. கத்தி மேல் நடப்பது போன்ற இடம். கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடும் அபாயம். 


மிக அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார் புகழேந்தி. 


நள மன்னனை பார்த்ததும் அவள் இது நாள் வரை கட்டுப் படுத்தி, அடக்கி வைத்து இருந்த கற்பின் கதவு தாழ் திறந்தது என்கிறார். 


அவ்வளவுதான். மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறார். 


பாடல் 


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று

தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்

அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்

கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_13.html


(Pl click the above link to continue reading)




நீண்ட கமலத்தை  = நீண்ட தாமரை போன்ற முகம் கொண்ட நளனை 


நீலக் கடைசென்று = நீலோற்பலம் போன்ற கண்களை உடைய தமயந்தியின் கண்கள் 


தீண்டும் அளவில் = தீண்டிய அந்த நேரத்தில் 


திறந்ததே = திறந்து கொண்டதே  


பூண்டதோர் = பூட்டி வைக்கப்பட்ட 


அற்பின்தாழ = அன்பு மிக 


கூந்தலாள் = கூந்தலை உடைய தமயந்தியின் 


வேட்கை =  ஆசையை 


அகத்தடக்கிக் = உள்ளத்துள் அடக்கி 


கற்பின்தாழ் = கற்பு என்ற தாழ்பாள் 


வீழ்த்த கதவு. = வீழ, திறந்து கொண்ட கதவு 


என்ன ஒரு உவமை. 


அவளுடைய மனம் என்ற அறையில், அவளுடைய நிறை தன்மை என்ற கதவுக்கு, கற்பு என்ற தாழ்பாள் போட்டு வைத்து இருந்தாள். நளனை கண்டவுடன், அவன் மேல் கொண்ட காதலால் அந்த கற்பு என்ற தாழ்பாள் விலகி கதவு திறந்து கொண்டது என்கிறார்.


கவிதை ஓட்டத்தில் படித்தால் அதன் சுவை தெரியும். 


சுகமான, ஒரு தென்றல் தலை கலைத்து விட்டுப் போவது போன்ற ஒரு சுகம். 




Tuesday, March 29, 2022

நளவெண்பா - கடவுளை எங்கே காணலாம் ?

நளவெண்பா -  கடவுளை எங்கே காணலாம் ?


முந்தைய ப்ளாகில் திருமாலை எங்கு காணலாம் என்று புகழேந்திப் புலவர் கூறினார். 


அதாவது,


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பழமையான வேதங்களுக்கு முன்னேயும் காணலாம். ஆநிரைகளுக்கு பின்னேயும் காணலாம், யாரைக் காணலாம் என்றால், "ஆதி மூலமே" என்று அலறிய யானைக்கு அன்று அருளிய திருவடிகளை என்றார். 


சரி, திருமாலை அங்கு காணலாம், சிவ பெருமானை எங்கு காணலாம் ?


அடுத்து சொல்கிறார், 


"நெறிகளின் உறைவிடமாக உள்ள, கையில் மானை ஏந்திய சிவனை எங்கு காணலாம் என்றால், திருநீறு அணிந்த அடியவர்களின் உள்ளத்தில்"


என்கிறார். 


பாடல் 


போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை

ஓதுவார் உள்ளம் எனஉரைப்பார் - நீதியார்

பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை

அம்மான்நின் றாடும் அரங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_29.html


(Pl click the above link to continue reading)



போதுவார் = எந்நேரமும் 


நீறணிந்து = திருநீற்றை தரித்து 


பொய்யாத ஐந்தெழுத்தை = பொய் இல்லாத 'நமச்சிவாய' என்ற ஐந்து எழுத்தை 


ஓதுவார் = தினம் பாராயணம் செய்வார் 


உள்ளம் எனஉரைப்பார்  = உள்ளத்தில் என்று சொல்லுவார்கள் 


நீதியார் = நெறிமுறைகள் நிறைந்த 


பெம்மான் = பெம்மான் 


அமரர் பெருமான் = தேவர்களின் தலைவன் 


ஒருமான்கை = ஒரு மானைக் கையில் கொண்ட 


அம்மான் = அந்த சிவன் 


நின் றாடும் அரங்கு. = நின்று ஆடும் அரங்கு 


கோவிலுக்கு எல்லாம் போக வேண்டாம். திருமாலும், சிவனும் கோவிலில் இல்லை என்கிறார். 


நாம் எங்கே கேட்கப் போகிறோம். அவர் பாட்டுக்கு சொல்லிவிட்டுப் போகட்டும். 




Tuesday, February 22, 2022

நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்?

 நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்? 


வைகுந்தத்தில் காணலாம். சரி, வைகுந்ததுக்கு எப்படி போவது? யாருக்குத் தெரியும் அந்த வழி? 


அதைவிட எளிய வழி சொல்கிறார் புகழேந்தி, நளவெண்பாவில். 


"வேதங்களின் முகப்பில், முன்னால் காணலாம். அல்லது, ஆநிரைகளின் (பசுக் கூட்டத்தின்) பின்னால் காணலாம்" என்கிறார். யாரைக் காணலாம் என்றால் "ஆதி மூலமே என்று அழைத்த யானைக்கு முந்தி வந்து அருள் புரிந்த அந்த செந்தாமரை போன்ற திருவடி உடையவனை" என்கிறார். 


அற்புதமான பாடல் 


பாடல் 


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_22.html


(please click the above link to continue reading)



மூலப் = அனைத்துக்கும் மூலமான 


பழ = பழமையான 


மறைக்கு = வேதங்களுக்கு 


முன்னேயும் காணலாம் = முன்பும் காணலாம் 


காலிக்குப் = கால்நடைகளான பசுக் கூட்டத்தின் 


 பின்னேயும் காணலாம் = பின்னாலும் காணலாம் 


மால்யானை = அன்பு கொண்ட யானை (கசேந்திரன்) 


முந்தருளும் = முந்தி வந்து அருள் புரியும் 


வேத முதலே எனஅழைப்ப = வேதத்தின் முதலே (ஆதி மூலமே) என்று அழைக்க 


வந்தருளும்  = வந்து அருள் செய்யும் 


செந்தா மரை. = சிவந்த தாமரை போன்ற திருவடிகளை 


யானைக்கு இறைவன் பெயர் தெரியாது. யாருக்குத் தான் தெரியும்? இறைவனுக்கு யார் பெயர் சூட்டுவது?  அந்த யானை "ஆதி மூலமே" என்று அழைத்தது. 


கூப்பிட வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், கூப்பிடுவதற்குள் ஓடி வந்து உதவி செய்வானாம். "முந்தருள்" முந்திக் கொண்டு வந்து அருள் செய்வாராம். 


பால் நினைந்து ஊட்டும் தாய் போல. குழந்தை பசித்து அழ வேண்டாம். அதுக்கு பசிக்குமே, பசி வேளை வந்து விட்டதே என்று நினைத்து பால் தரும் தாயைப் போன்றவன் இறைவன். 


"ஐயோ, அந்த உயிருக்கு ஒரு துன்பம் வந்து விட்டதே...அது என்னை அழைக்கப் போகிறதே...என்று அது அழைக்கும் முன்  ஓடிச் சென்று உதவுவானாம் "


அறிவு கொண்டு காண வேண்டுமா ? வேதத்தைப் படித்து, அது என்ன சொல்ல வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். ஞான யோகம் 


முடியவில்லையா? 


ஆடு மாடு மேய்பது போன்ற காரியங்களின் பின்னாலும் அவன் இருக்கிறான்.  கர்ம யோகம். 


அதுவும் முடியவில்லையா?  படிக்கவும் முடியாது, வேலை செய்யவும் தெம்பு இல்லையா? 


உயிர்களின் மேல் அன்பு கொண்டு, அவற்றிற்கு உதவும் அந்த கருணை புரியுமா? பக்தி யோகம். 


தேடல் தான் முக்கியம். தாகம்தான் முக்கியம். 


எங்கும் இருக்கும் அந்த அன்பின் வெளிப்பாடு...எப்படியும் கண்டு கொள்ளலாம். 




Tuesday, January 5, 2021

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும்

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும் 


அன்றில்  என்று ஒரு பறவை இருந்ததாம். இப்போது இல்லை. அந்தப் பறவை, தன் இணையை விட்டு பிரியவே பிரியாதாம். அவ்வளவு காதல். இரவு தூங்கும் போது கூட, இரண்டும் ஒன்றை ஒன்று கழுத்தை பின்னிக் கொண்டுதான் தூங்குமாம். 


அது மட்டும் அல்ல,

ஒரு கண் தூங்குமாம், இன்னொரு கண்ணால் தன் இணையை பார்த்துக் கொண்டே உறங்குமாம். தூக்கத்தில் கூட பிரிந்து இருக்க முடியாது அவைகளால். அப்படி ஒரு காதல். 


ஒரு நாள், ஒரு பெண் அன்றில் பறவை அழும் குரல் தமயந்திக்கு கேட்டதாம். 


ஏன்?


ஒரு வேளை ஆண் பறவை இரண்டு கண்ணையும் மூடி தூங்கி இருக்குமோ? அப்படிப்பட்ட  இரவு. எப்போதுமே முழுவதும் தூங்காத அன்றில் பறவை கூட அன்று தூங்கி விட்டதாம். 


அன்றில் தூங்கிய போதும், தமயந்தி தூங்கவில்லை. நளன் நினைப்பு அவளை தூங்க விடாமல்  பண்ணுகிறது. 


புகழேந்தியின் கற்பனை. 


பாடல் 


அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால்

இன்துணைமேல் வைத்துறங்கும் என்னுஞ்சொல் - இன்று

தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_5.html


click the above link to continue reading


அன்றில் = அன்றில் பறவை 

ஒருகண் = ஒரு கண் 

துயின்றொருகண்  = துயின்று (தூங்கி) இன்னொரு கண் 

ஆர்வத்தால் = ஆர்வத்தால் 

இன்துணைமேல் = இனிய துணை மேல் 

வைத்துறங்கும் = வைத்து உறங்கும் 

என்னுஞ்சொல் = என்ற சொல் 

இன்று = இன்று 

தவிர்ந்ததே = தவறாகிப் போனதே 

போலரற்றிச் = என்பது போல் அரற்றி 

சாம்புகின்ற போதே = வருந்துகின்ற போதே 

அவிழ்ந்ததே = அவிழ்ந்ததே 

கண்ணீர் = கண்ணீர் 

அவட்கு. = அவளுக்கு 


கூந்தல் அவிழ்ந்தது என்று கூறுவது போல, கண்ணீர் அவிழ்ந்ததாம். துளி துளியாக வரவில்லை. மொத்தமாக அப்படியே வந்ததாம் தமயந்திக்கு. 


கொஞ்சும் தமிழ்.  இனிமையான கற்பனை.  



Tuesday, July 14, 2020

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2


(இதன் முதல் பகுதி கீழே உள்ளது. மீண்டும் ஒரு முறை அதை படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)

வேதம் என்பது எழுதா மறை, எழுதா கிளவி என்று பார்த்தோம்.

ஏன் என்றால், ஒலி வடிவம்தான் உயர்ந்தது. அதை அப்படியே வரி வடிவத்துக்கு மாற்ற முடியாது. வேதம் ஒலி வடிவம் ஆனது. அதை எழுதி வைத்தாலும்,  அதை ஒரு  குருவின் மூலம் தான் படிக்க வேண்டும் என்று விதி செய்து வைத்தார்கள். வரி வடிவத்தில் உள்ளதை படித்தால் தவறு நிகழ்ந்து விடலாம் என்பதால். 

சரி, வேதம் உயர்ந்தது. ஏற்றுக் கொள்வோம்.  

அந்த வேதம் எதைச் சொல்கிறது. அது சொல்லும் பாடம் என்ன? அதில் நமக்கு அறிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

புகழேந்தி புலவர் கூறுகிறார் 

திருமாலின் திருவடிதான் மறை நூல்களின் முடிபு என்கிறார். 

அந்தத் திருவடி எப்படிப்பட்ட திருவடி திருவடி தெரியுமா?

"மறை நூல்களுக்கெல்லாம் முடிவானது, நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் அர்த்தம் அதுதான். அந்தத் திருவடி, ஆதிமூலமே என்று அலறிய யானைக்கு உதவவும், அன்று ஆயர் பெண்களின் குரலுக்கும் கூப்பிடுவதற்கு முன்னே செல்வதற்கு தயாராக இருந்த அடி " என்கிறார். 

பாடல் 


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள்

முந்தை = பழமையான

மறைநூல் = வேதங்களின்

முடியெனலாம்  = முடிந்த முடிபு எனலாம்

தண் = குளிர்ச்சியான

குருகூர்ச் = குருகூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த

செந்தமிழ் = செந்தமிழ் நூலான திருவாய் மொழி என்ற

வேத = வேதத்தின்

சிரமெனலாம்  = தலை என்று கூறலாம்

நந்தும் = வருந்திய

புழைக்கைக்கும்  = யானைக்கும்

நேயப் = நேசம் கொண்ட

பொதுவர் மகளிர்க்கும் = ஆயர் குல பெண்களுக்கும்

அழைக்கைக்கு = அழைப்பதற்கு

முன்செல் அடி. = முன்பே சென்ற திருவடிகள்

அவனை அழைக்கக் கூட வேண்டாமாம். அழைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே ஓடி வந்து விடுவானாம்.

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று மணிவாசகர் கூறியது போல.

குழந்தை பசித்து அழுவதற்கு முன்பே, அதற்கு இப்போது பசிக்கும் என்று அறிந்து ஓடி வந்து  அமுது அளிக்கும் தாயைப் போல,

நினைத்தால் போதும் அவன் திருவடிகள் நம் முன் வந்து தோன்றும் என்கிறார்.

வேதத்தின் தலையிலும், நம்மாழ்வார் பாடல்களின் முடியிலும்,  உள்ள அந்த திருவடி, யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் உதவி என்று சொல்லும் முன்னே ஓடி வந்த திருவடி.

உரையை விட்டு விடுங்கள். அர்த்தம் பிடி பட்டு விட்டது அல்லவா, இனி உரை தேவை இல்லை.  நேரடியாக பாடலைப் படித்துப் பாருங்கள்.

சுவை தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/2.html

------------- பாகம் ஒன்று கீழே ---------------------------------------------------------------------



செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 

என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html

Friday, July 10, 2020

நளவெண்பா - திருமால் துதி

நளவெண்பா - திருமால் துதி 


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 


என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html

Tuesday, November 13, 2018

நளவெண்பா - கல்லாதனவும் கரவு

நளவெண்பா - கல்லாதனவும் கரவு 


ஒரு செய்தியை சொல்வதென்றால் அதை சுவை பட கூற வேண்டும். அழகாக, எளிமையாக, இரசிக்கும் படி சொல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் presentation skills என்று சொல்லுவார்கள்.

எவ்வளவுதான் படித்து, அனுபவம் இருந்தாலும் சரியாக பேச, சொல்ல வரவில்லை என்றால் வாழ்வில் முன்னுக்கு வருவது மிகக் கடினம்.

நன்றாக பேசத் தெரிய வேண்டும். தனக்குத் தெரிந்ததை அழகாக வெளிப் படுத்தத் தெரிய வேண்டும்.

அதற்கு இலக்கியம் மிகவும் துணை செய்யும்.

இலக்கியம் படிக்க படிக்க நம் சொல்லிலும் பேச்சிலும் ஒரு அழகு ஏறும். கற்பனை விரியும். வார்த்தைகள் வசப்படும்.

உதாரணமாக, ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?

அங்கே நல்ல விளைச்சல் இருக்கிறது, அங்கே குற்றங்கள் குறைவாக இருக்கிறது, நல்ல வருமானம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லலாம்.

அதில் ஒரு அழகு இருக்கிறதா ?

புகழேந்தி சொல்கிறார் பாருங்கள்.

"அந்த ஊரில் மக்களுக்குத் தெரிந்தது எல்லாம் நல்ல நூல்களே. அவர்களுக்கு தெரியாததும் உண்டு. அது என்ன தெரியுமா, பெண்களின் இடை. அது இருக்கிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. அந்த ஊரில் இல்லாதது அப்படினு சொன்னா அது பிச்சை எடுப்பதுதான். பிச்சைக்காரர்களே கிடையாது.  அந்த ஊர் மக்கள் பிடிக்காது என்று ஒன்று உண்டு என்றால் அது வஞ்சக செயல்களே"

பாடல்

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.

பொருள்

தெரிவனநூல் = மக்கள் தெரிந்து கொள்வது நல்ல நூல்களை

என்றும் = எப்போதும்

தெரியா தனவும் = தெரியாமல் இருப்பது

வரிவளையார் = வளையல்களை அணிந்த பெண்கள்

தங்கள் மருங்கே = அவர்களின் இடையே

 ஒருபொழுதும் = ஒரு பொழுதும்

இல்லா தனவும் இரவே = இல்லாமல் இருப்பது பிச்சை எடுப்பதே

இகழ்ந்தெவரும் = சிறுமை என்று கருதி

கல்லா தனவும் கரவு = மக்கள் படிக்காமல் இருந்தது வஞ்சக செயல்களே

மக்கள் எல்லோரும் மிகப் படித்தவர்கள். பெண்கள் எல்லோரும் மிக அழகானவர்கள். எல்லோரிடமும் மிகுந்த செல்வம் இருக்கிறது. எனவே பிச்சி எடுப்பவர் என்று யாருமே இல்லை. மக்கள் எல்லோரும் நல்லவர்கள். வஞ்சக செயல் என்றால் என்ன என்றே அவர்கள் அறிந்து இருக்கவில்லை.

என்ன ஒரு நயம். என்ன ஒரு அழகு. சொல் நேர்த்தி.

இனிமையாக ,அழகாக பேசி, எழுதிப் பழகுவோம். அதற்கு பயிற்சி பெற நல்ல இலக்கியங்களை புரட்டுவோம்.

அது வாழ்க்கையை இனிமையாக்கும். நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_13.html





Sunday, November 4, 2018

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?


நாம் நினைக்கிறோம், நமக்கு வந்த துன்பங்கள்தான் உலகிலேயே பெரிய துன்பம் என்று. வேறு யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தது இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல. நம்மை விட பலப் பல மடங்கு துன்பப் பட்டவர்கள், படுகிறவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகில். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் , நம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்று நமக்கு விளங்கும்.

அப்படி மற்றவர்கள் துன்பத்தை அறியும் போது, "வாழ்வில் துன்பம் என்பது ஒரு பகுதி. இது எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் வரத்தான் செய்கிறது" என்ற எண்ணமும் , அதனால் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவமும் வந்து சேரும்.

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய துன்பம் என்று தருமன் , வேத வியாசரை கேட்டான்.

அதற்கு வியாசர் "நீ நினைக்கிறாய் ஏதோ உனக்குத்தான் பெரிய துன்பம் வந்து விட்டது என்று. உன்னை விட அதிகம் துன்பப் பட்டவர்கள் இருக்கிறார்கள். நள மன்னன் என்று ஒருவன் இருந்தான். அவன் கதையை சொல்கிறேன் கேள்" என்று நள மன்னனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்

சேமவேல் மன்னனுக்கச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை.


பொருள்

சேம = சேமம், நல்லது , இதம்

வேல் = வேல். மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஏந்திய வேல்

மன்னனுக்கச் = மன்னனுக்கு (தருமனுக்கு)

செப்புவான் = சொல்லுவான்

செந்தனிக்கோல் = செம்மையான, தனிச் சிறப்பு வாய்ந்த

நாமவேல் = நாமத்தைக் கொண்ட

காளை = காளை போல பலம் கொண்ட

நளனென்பான் = நளன் என்ற ஒருவன்

யாமத் = நள்ளிரவிலும்

தொலி = ஒலி எழுப்பும்

யாழி = கடல் சூழ்ந்த

வையம் = உலகம்

ஒருங்கிழப்பப் = ஒன்றாக இழந்து

பண்டு = முன்பு

கலியான் = சனி பகவானால்

விளைந்த கதை = நிகழ்ந்த கதை

உலகம் அனைத்தையும், கடல் சூழ்ந்த இந்த உலகம் அனைத்தையும் , அதோடு கூடிய மற்றைய செல்வங்களையும் (அதிகாரம், புகழ் ) ஒரே சமயத்தில் இழந்தான் நளன்.

நளன் கதையை கேட்டால் நமக்கே கண்ணீர் வரும்.

நளனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_85.html

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?


நமக்கு ஒரு சின்ன துன்பம் வந்து விட்டால் கூட, "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ...அந்த கடவுளுக்கு கண் இல்லையா .." என்று புலம்புவோம்.


நமக்கு வந்தது அவ்வளவு பெரிய கவலையா ?


பல இலக்கியங்களைப் படிக்கும் போது, அந்தக் கதைகளில் வரும் மாந்தர்களை விட நமக்கு ஒன்றும் பெரிய கவலை இல்லை என்று தோன்றும். அந்த எண்ணமே கவலையை குறைக்கும்.


இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு பலன் - மன ஆறுதல்.


நளவெண்பாவில், தருமன் சூதாடி நாடிழந்து , காட்டில் வந்து தனித்து இருக்கிறான். அர்ஜுனன் , தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்றுவர புறப்பட்டுப் போய்விட்டான். தனித்து இருந்த தருமன் கவலைப் படுகிறான்.


அப்போது அங்கு வந்த வியாசர், "தருமா ஏன் கவலையாக இருக்கிறாய் " என்று கேட்கிறார்.


அதற்கு தர்மன் சொல்கிறான் "கண் மூடித்தனமாக சூதாடி, நாட்டை இழந்து, காட்டை அடைந்து இப்படி துன்பப் படுகிறேன். இந்த உலகில் என்னைப் போல துன்பப் படுபவர்கள் யார் இருக்கிறார்கள் " என்று புலம்புகிறான்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்மூடித் தனமாக


மாயக் கவறாடிக் = வஞ்சகமான சூதாட்டத்தில் விளையாடி


காவலர்தாம் = காவல் காக்க வேண்டிய


மண்ணிழந்து = நாட்டை இழந்து


போந்து =போய்


வனம்நண்ணி = காட்டை அடைந்து


விண்ணிழந்த = விண்ணை விட்டு மண் நோக்கி வரும்


மின்போலும் = மின்னலைப் போல உள்ள


நூல்மார்ப = நூலை அணிந்த மார்பை உடையவனே (வியாசனே)


மேதினியில் = இந்த உலகில்


வேறுண்டோ = வேறு எவரும் உண்டோ


என்போல் = என்னைப் போல



உழந்தார் இடர் = துன்பத்தில் வருந்துபவர்கள்


சரி தானே. தர்மனின் நிலையை நினைத்துப் பார்போம். ஒரே நாளில் பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து, காட்டில் வந்து தனித்து இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். நம்மால் முடியுமா ? ஒரு நாள் வீட்டை விட்டு காட்டில் போய் இரு என்றால் முடியுமா ? ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே விட்டு விட்டு ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல பன்னிரண்டு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.


நம் துன்பம் அதை விட பெரிய துன்பமா ?


இப்படி ஒரு பெரிய துன்பத்தில் இருக்கும் தருமனுக்கு வியாசர் என்ன தான் ஆறுதல் சொல்லி விட முடியும் ?


நாளை அது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_4.html

Friday, June 16, 2017

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம்

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் 


இலக்கியங்களை எதற்கு படிக்க வேண்டும் ?

படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது - அறிவியல், தொழில் நுட்பம், வணிகம், கணிதம், நிர்வாகம், என்று எவ்வளவோ முக்கியமான துறைகள் இருக்கும் போது , அவற்றை எல்லாம் விட்டு விட்டு , எப்பவோ எழுதிய கதைகளை ஏன் படிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ?

இளையவர்கள் மத்தியில் மட்டும் அல்ல, பெரியவர்கள் மத்தியிலும் இந்த கேள்வி இருக்கிறது.

இலக்கியம் படிக்க பல காரணங்கள் சொல்ல முடியும். அதில் ஒன்று, மன ஆறுதல் பெற.

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி போய்க் கொண்டு இருக்காது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும் போது மகிழும் நாம் , துன்பத்தில் துவண்டு போகிறோம்.

துன்பத்தில் தவிக்கும் போது , ஒரு தாயின் மடியாய், மனைவியின் இனிய தோளாய், நண்பனின் ஆதரவான கரமாய் இலக்கியம் இருக்கிறது.

காலங்கள் தாண்டி , தன் கற்பனை விரல்களால் நம் கண்ணீரை துடைத்து விடும் இந்த இலக்கியங்கள்.

மனதுக்கு மருந்து தடவி , சுகம் அளிப்பவை.

நமக்கு துன்பம் வரும் போது , எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சோர்ந்து போகிறோம்.

அந்த சமயத்தில் இலக்கியங்களை புரட்டுங்கள். நம்மை விட ஆயிரம் மடங்கு துன்பப பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் கவலை, துயரம் இவற்றை பார்க்கும் போது , நம் துன்பம் ஒன்றும் பெரியதில்லை என்று ஒரு ஆறுதல் பிறக்கும். அவர்களே மீண்டு வந்து விட்டார்கள் , நம்மால் முடியாதா என்று ஒரு தைரியம் பிறக்கும்.  நம்பிக்கை துளிர்விட்டால் , போதும், அது தானே வளரும்.

இலக்கியங்கள் கை கொடுத்து தூக்கி விடும் அந்தக் காரியத்தை செய்கின்றன.

தர்மன், சூதில், நாடு நகரம் எல்லாம் இழந்து, தம்பிகளோடு காட்டில் இருக்கிறான்.

நினைத்துப் பார்க்கிறான். எப்படி இருந்த நான் , இப்படி ஆகி விட்டேனே என்று  மனம் வருந்துகிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

சக்கரவர்த்தி, ஆள், அம்பு, சேனை, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று இருந்த தர்மன் அனைத்தையும் இழந்து, காட்டில் தனியாக தவிக்கிறான். அவன் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரிய துன்பம் ?


அப்போது , அங்கு வந்த முனிவரிடம் கேட்கிறன், அறிவை இழந்து, சூது ஆடி, மண்ணை இழந்து,  கானகம் வந்து ,இப்படி துன்பப் படும் என்னை போல வேறு யாராவது உண்டா என்று கேட்கிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறான்.

அதை கேட்ட அந்த முனிவர், "தர்மா கவலைப் படாதே, துன்பம் வருவது இயல்பு. உன்னை விடவும் உயர்ந்த நிலையில் இருந்து , உன்னை விடவும் துன்பப் பட்ட நள மகாராஜாவின் கதையை சொல்கிறேன் கேள் " என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்ணை இழந்து

மாயக் கவறாடிக் = மாயமான சசூது ஆதி

காவலர்தம் மண்ணிழந்து = காவல் செய்யும் (அரசு செய்யும்) மண்ணை இழந்து

போந்து = போய்

வனம்நண்ணி = காட்டினை அடைந்து

விண்ணிழந்த = விண்ணில் இருந்து வந்த

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூன்மார்பா  = நூல் +  மார்ப = பூணூலை அணிந்தவனே

மேதினியில்  = உலகில்

வேறுண்டோ = வேறு ஒருவர் உண்டா?

என்போ லுழந்தா ரிடர். = என் + போல் + உழந்தார் + இடர் = துன்பத்தில் சிக்கித் தவிப்பவர்

கண் இழந்து என்றால் இரண்டு கண்ணையும் இழந்து குருடாகி என்று அர்த்தம் அல்ல.

அதே போல் மண் இழந்து என்றால் ஏதோ கட்டிடம் கட்ட வாங்கி வைத்து இருந்த  இரண்டு வண்டி மணலை இழந்த மாதிரி என்று கொள்ளக் கூடாது. பின் என்ன ?

பின் என்ன அர்த்தம் என்று கேட்டால்,  கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

நிமிர்ந்து உட்காருங்கள்.

ஒரு நீண்ட மூச்சை இழுத்து விடுங்கள்.

விட்டாச்சா ? இப்ப படிப்போம்.

ஆகு பெயர், ஆகு பெயர் என்று ஒன்று உண்டு தமிழ் இலக்கணத்தில்.


ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது , ஆகு பெயர்.

உதாரணமாக,

ஊரே தூங்கிருச்சு என்றால் ஊர் தூங்குவது அல்ல. ஊரில் உள்ள மக்கள் தூங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.


ஊர் என்ற இடம், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது.

அரிசி எவ்வளவு  என்று கடை காரரிடம் கேட்கிறோம். அவர் படி அம்பது ரூபாய் என்கிறார். அரிசி என்ன விலை என்று கேட்டல் படிக்கு விலை சொல்கிறாரே என்று  நினைப்பது இல்லை. படி அம்பது ரூபாய் என்றால் ஒரு படி அரிசியின் விலை அம்பது ரூபாய் என்று அர்த்தம்.

படி இங்கே அரிசிக்கு ஆகி வந்தது.

நல்ல தமிழ் படிக்க வேண்டுமா , கம்பனை  வாசி என்று சொல்கிறோம். கம்பன்  என்ற ஒரு கவிஞனின் பெயர் அவர் எழுதிய கவிதைகளுக்கு ஆகி வந்தது.

புரிகிறது அல்லவா.

இந்த ஆகு பெயர்  18 வகைப்படும் என்று சொல்கிறது நன்னூல்

பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
         கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
         ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
         தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"

அவையாவன


  1. பொருளாகு பெயர் = சந்தனம் போல மணம் = சந்தன மரக் கட்டைக்கு பதிலாக சந்தனம் என்ற பொருள் வந்தது
  2. சினையாகு பெயர் = கூட்டத்துக்கு வருவது என்றால் , தலைக்கு நூறு ரூபாய், ஒரு பிரியாணி பொட்டலம் தர வேண்டும் என்றால் தலைக்கு தருவது அல்ல. தலை உள்ள ஆளுக்கு தருவது (தலை , சினை )
  3. காலவாகு பெயர் = கோடை வாட்டுகிறது. கோடை காலத்தில் உள்ள வெப்பம் வாட்டுகிறது
  4. இடவாகு பெயர் = இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது. இந்தியா என்ற இடத்தில் இருந்து சென்ற அணி வென்றது
  5. பண்பாகு பெயர் = என்ன மாதிரி துண்டு வேண்டும் ? அந்த சிவப்புல ஒண்ணு , பச்சையில ஒண்ணு குடு 
  6. தொழிலாகு பெயர் = அந்த பணத்தை அப்பவே நம்ம கணக்கு கிட்ட குடுத்து அனுப்பி விட்டேனே (கணக்கு = கணக்க பிள்ளை) 
  7. எண்ணலளவையாகு பெயர் = இரண்டு போட்டா எல்லாம் சரியா போகும் 
  8. எடுத்தலளவையாகு பெயர் = கத்தரிக்காய் எவ்வளவு வாங்கட்டும். மூணு கிலோ வாங்கிட்டு வா 
  9. முகத்தலளவையாகு பெயர் = இரண்டு லிட்டர் வாங்கிட்டு வா, ஒரு குவாட்டர் போட்டா சரியாயிரும் 
  10. நீட்டலளவையாகு பெயர் = ஒரு மீட்டர் போடு 
  11. சொல்லாகு பெயர் = அபிராமி அந்தாதி எனக்கு மனப்பாடம். அதில் உள்ள பாடல்கள் எனக்கு மனப்பாடம் என்பதற்கு ஆகி வந்தது 
  12. காரியவாகு பெயர் = நான் நல்லா type அடிப்பேன் (எனக்கு type writer என்ற இயந்திரத்தை நன்றாக இயக்க வரும் )
  13. கருத்தாவாகு பெயர் = அவரு கம்பன்ல பெரிய ஆளு. (கம்ப இராமாயணம் நன்றாக கற்றவர் )
  14. உவமையாகு பெயர் = மயில் வந்தாள் 
  15. அடை அடுத்த ஆகுபெயர் = மா நட்டான்.
  16. தானியாகுபெயர் = தானி என்றால் இடம். விளக்கு முறிந்தது என்றால் , விளக்கின் தண்டு முறிந்தது என்று பொருள். 
  17. இருபடியாகு பெயர் =  முகில் வந்தது என்றால் மேகத்தை தாண்டி அதற்கு பின் உள்ள மழையை குறிப்பது. 
  18. மும்மடியாகு பெயர் = கார் வந்தது என்றால், கருமையான நிறத்தைத் தாண்டி, அதை உள்ள மேகத்தைத் தாண்டி, மழை வந்தது என்பதை குறிப்பது. 

இங்கே கண்ணிழந்து , மண்ணிழந்து என்றால் எப்படி கண் எது எப்படி என்று காட்டுமோ அதுபோல் காட்டும் அறிவை இழந்து என்று பொருள். 

மண் என்பது அதில் வாழும் மக்களை குறிப்பது. இடவாகு பெயர் 


இன்னும் கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம். இன்று இவ்வளவு போதும். 

மேலும் நாளை சிந்திப்போம் 

சரியா ?







Wednesday, January 18, 2017

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே 


தமயந்தி தனித்து இருக்கிறாள் நளனை நினைத்தபடி. இரவு அவளுக்கு துன்பம் தருகிறது. இரவு முடிகிற பாடாக இல்லை. நீண்டு கொண்டே இருக்கிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். நிலவு மட்டும்தான் இருக்கிறது.

அதனிடம் பேசுகிறாள்.

"ஏய் குளிர்ந்த நிலவே. இளைய நிலவே ! என் குழலின் மேல் விடமால் ஏன் உன் குளிர்ந்த ஒளியை விடாமல் செலுத்துகிறாய் ? இந்த மன்மதன் என் மேல் போர் தொடுக்க உனக்கு இந்த விடியாத இரவை ஆயுதமாக கொடுத்து அன்பினானா " என்று கேட்கிறாள்.

பாடல்


ஈர மதியே ! இளநிலவே ! இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று.


பொருள்

ஈர மதியே ! = குளிர்ந்த நிலவே

இளநிலவே ! = இளமையான நிலவே

இங்ஙனே = இப்படி

சோர்குழலின் = அவிழ்த்து விடப்பட்ட குழலின்

மீதே = மீது

சொரிவதெவன் = பொழிவது ஏன் ?

மாரன் = மன்மதன்

பொரவளித்தான் = போர் அளித்தான். போருக்கு அனுப்பினான்

கண்ணி உனக்குப் = கன்னியாகிய உனக்கு

புலரா = விடியாத

இரவளித்தான்  = இரவை அளித்தான்

அல்லனோ = அல்லவா

இன்று = இன்று

நிலவே நீ  குளிர்ந்த கதிரை பாய்ச்ச வேண்டியவள். என் மேல் மட்டும் ஏன் தீயை  அள்ளி தெளிக்கிறாய் , அப்படிச் செய்யாதே. எனக்கும் குளிர்ச்சியைத் தா  என்று சொல்ல "குளிர்ந்த நிலவே" என்கிறாள்.

நீயும் என்னைப் போல இளமையானவள் தானே. காதலின் பிரிவு என்ன என்று உனக்கும்  தெரியும்தானே. பின் ஏன் என்னை துன்பப் படுத்துகிறாய். போய் விடு என்று சொல்லுவதைப் போல , இளைய நிலவே என்று சொல்லுகிறாள்.


போருக்கு என்னென்னெவோ ஆயுதங்கள் உண்டு. கத்தி, வில், அம்பு என்று. இங்கே மன்மதன் , நிலவை போருக்கு அனுப்புகிறான், இரவு என்ற ஆயுதத்தை  கொடுத்து.

என்ன ஒரு கற்பனை !!

Tuesday, June 30, 2015

நளவெண்பா - மாறியவை

நளவெண்பா - மாறியவை 


நிடத நாட்டில் இது சிறப்பாக இருக்கிறது, அது சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனால் அந்த பட்டியல் எப்போது முடியும். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும், பட்டியலும் நீளமாக போகக் கூடாது...எப்படி சொல்லுவது...?

புகழேந்தி சொல்கிறார்....

அந்த நாட்டில் வளைந்து இருப்பது வில் மட்டும்தான்...தளர்ந்து இருப்பது பெண்களின் கூந்தல் மட்டுமே...வாய் விட்டு அரற்றுவன பெண்களின் சிலம்பில் உள்ள மணிகள் மட்டும் தான், கலங்குவது நீர் மட்டும்தான், நல்ல நெறியை விட்டு விலகுவன பெண்களின் கண்கள் மட்டுமே...

பாடல்

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

பொருள்

வெஞ்சிலையே = கொடிய வில் மட்டும்

கோடுவன = வளைந்து இருப்பன. அப்படி என்றால் அரசனின் செங்கோலும், நீதி தேவதையின் துலாக் கோலும் வளையாமல் நிமிர்ந்து நின்றன.

மென்குழலே  = மென்மையான (பெண்களின் )  தலை முடியே

சோருவன = தளர்ந்து இருப்பன . மக்களிடம் சோர்வு இல்லை. அலை அலையாக பறக்கும் பெண்களின் கூந்தல் மட்டும் தான் தளர்ந்து இருக்கும்.

அஞ்சிலம்பே = கொலுசுகள் மட்டும் தான்

வாய்விட் டரற்றுவன = சத்தம் போட்டு அரற்றுவன. சிலம்பு ஏன் வாய் விட்டு அரற்றும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். வாய் விட்டு புலம்புபவர்கள் யாரும் இல்லை அந்த ஊரில் இல்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

கஞ்கம் கலங்குவன = கலங்குவது நீர் மட்டும் தான்

மாளிகைமேல்  = மாளிகையின் மேல்

காரிகையார் = பெண்களின்

கண்ணே = கண்கள் மட்டும்தான்

விலங்குவன = விலகிச் செல்வன

மெய்ந் நெறியை விட்டு = உண்மையான நெறியை விட்டு

மெய் நெறி என்பது வீடு பேறு அடையும் வழி. பெண்களின் கண்கள் இந்த உலக இன்பங்களை  அனுபவிக்க நம்மை இழுக்கும். அந்தக் கண்கள், பற்றற்ற துறவற நிலைக்கு  நம்மை அழைத்துச் செல்லாது என்று சொல்ல வருகிறார்.

எதிர் மறையிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது.



Sunday, September 28, 2014

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை 


தமயந்தியின் இடை மிக மிகச் சிறியது என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று யோசிக்கிறார் புகழேந்தியார்.

அவள் கூந்தலில் மலர் சூடி இருக்கிறாள். அப்போதுதான் பறித்த மலர்கள். அந்த மலர்களில் இருந்து தேனை உண்ண வண்டுகள் வருகின்றன.

அந்த வண்டுகள் தங்கள் சிறகுகளை அடிக்கின்றன. அந்த சிறகில் இருந்து காற்று வருகிறது. அந்த காற்று தமயந்தியின் தலை மேல்  உள்ள பூவின் மேல் மோதுகிறது. அதனால் அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது, வளைகிறது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து அவள் இடை நாளடைவில் தேய்ந்தே போயிற்றாம்.

பாடல்

என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.


பொருள்


என்றும் = எப்போதும்

நுடங்கும் = காற்றில் பட படத்தல்

இடைஎன்ப = எடை என்று சொல்லப் படுவது

ஏழுலகும் = ஏழு உலகிலும்

நின்ற = நிலைத்து நிற்கும்

கவிகை = குடையின்  (வெண்கொற்றக் குடை )

நிழல்வேந்தே = நிழலில் கொண்ட அரசனே

ஒன்றி = ஒன்றுபட்டு

அறுகால் = ஆறு கால்களைக் கொண்ட

சிறுபறவை = சிறு பறவை (வண்டு)

அஞ்சிறகால் = அசையும் சிறகால்

வீசம் = வீச

சிறுகாற்றுக் = வரும் சிறிய காற்றுக்கு

காற்றாது = ஆற்றாது , தாங்க முடியாமல்

தேய்ந்து = தேய்ந்து (விடும்)


Thursday, August 8, 2013

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க 


தமயந்தியைப் பார்த்த பின் நளன் பிரிந்து சென்று  விட்டான்.

தமயந்தி  வாடுகிறாள்.

அவள் உள்ளம் அவன் பின்னே போய்  விட்டது.அதனால் அவள் நாணமும் சென்று விட்டது.  பேச்சில்லை.கண்ணில் நீர் வற்றி விட்டது.  தளிர் போன்ற அவள் உடல்  வேகிறது. மன்மதன் பூவால் செய்த கணைகளை அவள் மேல்   விடுகிறான்.அது அவளின் உள்ளத்தை  அரிக்கிறது. அவள் உயிரும்  சோர்கிறது.

பாடல்

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல்-பிள்ளைமீன்
புள்ளரிக்கு நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்.


பொருள்

உள்ளம்போய் = அவள் உள்ளம் அவன் பின்னே போய் விட்டது

நாண்போய் = அதனால் நாணமும் போனது

உரைபோய் =  மனமும்,நாணமும் போனதால் திகைத்து அவள் பேச்சு மூச்சு அற்றுப் போய் விட்டாள்

வரிநெடுங்கண் = நீண்ட நெடுங்கண்

வெள்ளம்போய் = கண்ணீர் வற்றிப் போய்

வேகின்ற மென்தளிர்போல் = வெயிலில்   மென்மையான தளிரைப் போல்

பிள்ளைமீன் = மீன் குஞ்சுகளை

புள்ளரிக்கு = கொக்கு உண்ணும்

நாடன் திருமடந்தை= நாட்டைச் சேர்ந்த அரசனின் (வீமன்) மகளான தமயந்தி

பூவாளி = பூவால் செய்யப்பட்ட அம்பு

உள்ளரிக்கச் = உள்ளத்தை அரிக்க

 சோர்ந்தாள் உயிர் = உயிர் சோர்ந்தாள்

Tuesday, June 25, 2013

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?


நளனின் காதலை தமயந்தியிடம் அன்னப் பறவை  சொன்னது. நளன்  உன் மேல்  எப்படி எல்லாம் காதல் கொண்டிருக்கிறான் என்று கூறியது.

அதை கேட்ட தமயந்தி உருகுகிறாள். ஐயோ , என் மேல் இத்தனை அன்பா, இத்தனை காதலா என்று அவள் மனம் கரைகிறது. ஏற்கனவே அவனை திருமணம் முடித்து, அவனை கட்டி அணைத்தார்ப் போல இருக்கிறது அவளுக்கு. அந்த அபரிமிதமான காதலால், மகிழ்ச்சியில் அவள்  மார்புகள் விம்முகின்றன. அதை அவள் பார்க்கிறாள். மயங்குகிறாள்.

பாவம் பெண், வேறு என்ன செய்ய முடியும் ?

பாடல்

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று.

பொருள்



Saturday, June 22, 2013

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு 


தமயந்தி, நளனை காண்கிறாள்.

ஒரு புறம் காதல். மறு புறம் ஆசை. இரண்டுக்கும் நடுவில் நாணமும் கற்பும்.

பெண் பாவம்தான். எவ்வளவு சிக்கல்.

தாமரை போன்ற தமயந்தியின் முகம். நீலோற்பலம் போன்ற நளனின் கண்கள் சென்று தீண்டியதுதான் தாமதம் ... ஆசையை மனத்தில் அடக்கி, கற்பு என்ற தாழ் போட்டு பூட்டி வைத்திருந்த கதவு, அவள் கொண்ட அன்பின்/காதலின் வேகத்தால் திறந்து கொண்டது.

ஆசை மனதில் இருக்கிறது. ஆனால், அந்த ஆசை அல்ல மனம் திறக்க காரணம்.

அவன் மேல் கொண்ட அன்பினால் அந்த கதவு திறந்து கொண்டது.

பாடல்  


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள்


Wednesday, April 24, 2013

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும்

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும் 



நான் சில பல  ஊர்களில் கடைத் தெருவில் பார்த்திருக்கிறேன்...ஏதேதோ கடைகள் இருக்கும்...ஒரு நல்ல புத்தக கடை இருக்காது....இருந்தாலும் ஏதோ பேருக்கு சில புத்தகங்கள் இருக்கும்.

என்ன அர்த்தம்...ஊரில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.


நள சக்கரவர்த்தி ஆளும் ஊரை வர்ணிக்கிறார் புகழேந்தி.


அந்த ஊரில் தெரிவது எல்லாம் புத்தகங்களும், படிப்பவர்களும் தான். எங்கு பார்த்தாலும் ஒரே புத்தகங்கள்.

தெரியாதது ஒன்று இருக்கிறது அந்த ஊரில்...அது பெண்களின் இடையாம்.....தேடினாலும் கிடைக்காது....அவ்வளவு சின்ன இடை.

அந்த ஊரில் இல்லாதாது ஒன்று உண்டு - பிச்சைகாரர்கள். பிச்சைக்காரர்களே கிடையாது.

அந்த ஊர் மக்கள்  ஒன்றே ஒன்று மட்டும் கற்றுக் கொள்ளவில்லை - அது தான் வஞ்சம்.

பாடல்  



தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.



பொருள்


Tuesday, January 29, 2013

நளவெண்பா - மை புகுந்த கண்ணீர்


நளவெண்பா - மை புகுந்த கண்ணீர் 


நளனும் தமயந்தியும் காட்டு வழி செல்கின்றார்கள். நாடிழந்து, செல்வம் எல்லாம் இழந்து செல்கின்றார்கள். 

இரவு வந்து விட்டது. இருவரும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தூங்குகிறார்கள். 

தூக்கம் வரவில்லை. முதலில் நளன் எழுந்திரிக்கிறான். தமயந்தி உறங்குவது போல் பாவனை செய்கிறாள். நளன் அவளைப் பார்த்து வருத்தம் அடைகிறான். பின் அவன் படுத்துக் கொள்கிறான். தமயந்தி எழுதிரிக்கிறாள். நளன் உறங்குவததைப் பார்க்கிறாள். 

எவ்வளவு பெரிய சக்ரவர்த்தி. எப்படி அம்ச துளிகா மஞ்சத்தில் படுத்து உறங்க வேண்டியவர்...இப்படி வெறும் தரையில் படுத்து உறங்குகிறாரே என்று வருந்துகிறாள். ...அவர் தலைக்கு வைத்து படுக்க என் முந்தானை கூட இல்லை என்று கவலை பட்டு தன் கையையை அவனின் தலைக்கு  கீழே வைக்கிறாள்...கொஞ்ச நேரத்தில் அதுவும் அவனுக்கு சுகமாய் இல்லை என்று உணர்ந்து அவன் தலையயை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறாள்...அவனின் துன்பத்தைப் பார்த்து அவள் கண்ணில் நீர் வழிகிறது....

தன் துன்பத்தைக் கூட பார்க்காமல், அவனின் துன்பத்தை கண்டு அவள் கவலைப் படுகிறாள்....

மனதை உருக்கும் புகழேந்தியின் பாடல் ....

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

பொருள் 

Sunday, July 1, 2012

நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளன் ஆண்ட நகரை சிறப்பித்து கூற வருகிறார் புகழேந்தி.

பொதுவாக கவிஞர்கள் அது நன்றாக இருந்தது, இது நன்றாக இருந்தது என்று வர்ணித்து கூறுவார்கள்.

புகழேந்தி சற்று வித்தியாசமாய் சிந்திக்கிறார்.

இந்த நாட்டில் சில விஷயங்கள் கொஞ்சம் கோணலாய் இருக்கின்றன, சில சோர்ந்து போய் இருக்கின்றன, சில வாய் விட்டு அரட்டுகின்றன, சில கலங்குகின்றன, சில நேர் வழி விட்டு செல்கின்றன என்று சொல்கிறார்.
படிக்கும் நமக்கு, "அட, அப்படி என்ன இருக்கு...அதில் என்ன சிறப்பு" என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா ?