Monday, February 27, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும்

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சொல்லா? செயலா ? எதற்கு வலிமை அதிகம்?


நம்மைக் கேட்டால் பெரும்பாலானோர் சொல்லுவது செயல் தான் வலிமை மிக்கது என்று. 



உங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தர எனக்கு விருப்பம் என்று சொல்லுவதை விட, ஆயிரம் ரூபாய் கொடுக்கும் செயல் உயர்ந்ததுதானே. 


எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை வெட்டிப் போட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்சொல்லை விட, உண்மையாகவே வெட்டிப் போடுவது வலிமை மிக்கது அல்லவா?



நல்லது என்றாலும், கெடுதல் எது என்றாலும் சொல்லை விட செயலே ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. 



ஆனால், சில சமயம் செயலை விட சொல் வலிமை மிக்கதாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 




அது எப்போது?


பயனற்ற சொற்களை படித்தவர் முன் சொல்வது, நமக்கு வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பத் தகாத செயல்களை செய்வதை விட மோசமானது என்கிறார். 



பாடல் 



பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல


நட்டார்கண் செய்தலின் தீது



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html



(please click the above link to continue reading)



பயன்இல = பயன் இல்லாத சொற்களை 



பல்லார்முன்  = அறிஞர்கள் முன் 



சொல்லல் = சொல்லுவது 



நயன்இல = நன்மை பயக்காத, விருப்பம் இல்லாத 



நட்டார்கண் = நெருங்கியவர்களுக்கு 



செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது 



அது ஏன் தீமையானது என்று வள்ளுவரும் சொல்லவில்லை. பரிமேலழகரும் சொல்லவில்லை. 



நாம் தான் சிந்திக்க வேண்டும். 



நமக்கு வேண்டியவர்கள், சொந்த, பந்தம் உள்ளவர்கள் முன் நாம் ஒரு வேண்டாத செயலைச் செய்தால் அவர்கள் முகம் சுளிப்பார்கள். நம்மை பற்றி கீழான அபிப்பிராயம் கொள்வார்கள். நம்மை வெறுப்பார்கள். 



அது ஒரு சின்ன வட்டம். 



ஆனால், கற்று அறிந்த பெரியோர் முன் பயனில சொன்னால், அவர்கள் மட்டும் அல்ல, அந்த சொல்லால் எல்லோரும் இகழத் தலைப்படுவார்கள். 


அது ஒரு பெரிய  வட்டம். 




இரண்டாவது,  சுற்றத்தார் இகழ்வது அந்த நேரத்தில் நடக்கும், அல்லது கொஞ்ச நாளைக்கு நடக்கும். ஆனால்,  அறிவுடைய பெரியாரால் இகழப் பட்டால்   அது கால காலத்துக்கும் நிற்கும். 



நெருங்கியோர் ஒருவனை விட்டு விலகிப் போனால் அதனால் வரும் நட்டம் அதிகம் இல்லை. 



அறிவுடையோர் ஒருவனை விட்டு விலகிப் போனால், அதனால் அவன் அடையும் நட்டத்துக்கு அளவில்லை. 



அவர்களிடம் இருந்து அவன் இம்மைக்கும், மறுமைக்கும் பெற்றுக் பயன் பெற வேண்டியவை அனைத்தையும் இழப்பான். 



மேலும், நெருங்கியவர்கள் ஒரு வேளை நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் கூடும். கணவனோ, மனைவியோ தவறு செய்தால் மற்றவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளக் கூடும். பிள்ளை தவறு செய்தால் பெற்றோர் வெறுத்து ஒதுக்கி விட மாட்டார்கள். 



ஆனால், அறிவுடையார், பயனில சொல் சொல்பவனை விட்டு விலகிப் போய் விடுவார்கள். 




எனவே, அந்தச் சொல், நெருங்கியவர்களுக்கு செய்யும் நன்மை தராத செயலை விட தீமையானது என்கிறார். 



இன்றைய சூழ்நிலையில், யார் அறிந்தோர் என்று நமக்குத் தெரியாது. எந்தக் கூட்டத்தில் எந்த அறிஞன் இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும்?




எனவே, எப்போதும் பயனுள்ள சொற்களையே பேசிப் பழக வேண்டும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html





கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி 


வாழக்கை என்பது பெரிய போராட்டம். கருவறை தொடங்கி கல்லறை வரை இது ஒரு முடிவில்லா போராட்டம். 


இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற என்ன வேண்டும்?


நிறைய செல்வம் வேண்டும். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். 


அப்புறம் ஆட்கள் துணை வேண்டும். கணவன், மனைவி, மக்கள், சுற்றம், நட்பு.


அப்புறம், அறிவு, படிப்பு, திறமை 


அப்புறம், கொஞ்சம் நல்ல நேரம் அமைய வேண்டும். 


இப்படித்தான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். 



கம்பன் மட்டும் அல்ல, நம் தமிழ் இலக்கியம் முழுவதும் இதை மறுதலிக்கிறது. 



இது பற்றி கம்பன் சொல்கிறான்



என்ன சொல்கிறான் என்பதைவிட எங்கு சொல்கிறான் என்பது வியப்பளிக்கும் விடயம். 



இராவணன் தேர் இழந்து,  ஆயுதங்கள் எல்லாம் இழந்து, மணி மகுடங்களை இழந்து, தனியே போர்க்களத்தில் நிற்கிறான். 



அந்த இடத்தில் இராமன் வாயிலாக கம்பன் ஒரு அறவுரை கூறுகிறான். 



இராவணனிடம் என்ன இல்லை?



பணம் - குபேரன் அவன் அரண்மனையில் வேலை செய்கிறான். அதற்கு மேல் என்ன வேண்டும்?


வீரம்?


தவம் ?


புகழ்?


பெருமை?


ஆட்கள்?


எல்லாம் அவனிடம் தேவைக்கு அதிகமாக இருந்தது.



இருந்தும், நிராயுதபாணியாக நிற்கிறான். இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் அவன் உயிரை வாங்கி இருக்க முடியும். 



அவ்வளவு அனாதையாக நிற்கிறான். 



என்ன ஆயிற்று அவன் செல்வம், பணம், புகழ், எல்லாம்?



ஒன்றும் துணைக்கு வரவில்லை. 


இராமன் சொல்கிறான் 



"அறத்தின் துணை அன்றி மறத்தினால் பெரிய போர்களை வெல்ல முடியாது. இதை மனதில் கொள். தனித்து நிராயுதபாணியாக நிற்கும் உன்னை கொல்ல மனம் வரவில்லை. உன் சுற்றத்தோடு போய் இரு" என்று அனுப்பி வைக்கிறான். 


பாடல் 




 அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்


மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;


பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!


இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_27.html


(pl click the above link to continue reading)


அறத்தினால் அன்றி, = அறவழியில் செல்வது இல்லாமல் 



அமரர்க்கும் = தேவர்களுக்கும் 



அருஞ் சமம் = அரும் சமர் = பெரிய போர்களை 



கடத்தல் = கடந்து செல்லுதல் 



மறத்தினால் அரிது = அறம் அல்லாத மற வழியில் அரிது (வெற்றி காண்பது அரிது) 



என்பது = என்பதனை 



மனத்திடை வலித்தி = மனதில் ஆழ பதிவு செய்து கொள் 



பறத்தி = பறந்து செல். இங்கு நிற்காதே 



நின் = உன்னுடைய  



நெடும் = பெரிய 



பதி = வீடு, இல்லம், அரண்மனை 



புகக் = சென்று 



கிளையொடும் = உறவினர்களோடு 



பாவி! = பாவம் செய்தவனே 



இறத்தி = இருப்பாயாக 



யான் = நான் 



அது நினைக்கிலென் = அது என்பது உன்னைக் கொல்வதை நினைக்கவில்லை 



தனிமை கண்டு இரங்கி = உன் தனிமை கண்டு இரக்கப்பட்டு 



இராமாயணம் கதையோ, உண்மையோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



சமீப காலத்தில் ஊடங்களில் ஒரு பெரிய நிறுவனம் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து சரிந்து கீழே வந்தது என்று.




பணம், அரசியல் செல்வாக்கு,  ஆள் பலம் எல்லாம் இருக்கலாம். 



அற வழியில் செல்லாவிட்டால் அழிவு நிச்சயம். 



மறம், இராவணனை நிராயுதபாணியாக்கி போர்க்களத்தில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்தது. 



ஒரு சின்ன சறுக்கம்.  சீதை மேல் கொண்ட காமம். அவனை எங்கு கொண்டு நிறுத்தியது.


இதைச் சொல்வதற்காகவே காத்து இருந்ததைப் போல, கம்பன் சரியான இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்தப் பாடலை பொறுத்தி இருக்கிறான். 



Saturday, February 25, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - எல்லாரும் எள்ளப் படும்

 

திருக்குறள் - பயனில சொல்லாமை - எல்லாரும் எள்ளப் படும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


நாம் பேசுவதை நாலு பேர் கேட்கிறார்கள். நாம் whatsapp போன்ற சமூக ஊடகங்களில் அனுப்பும் செய்திகளை பலர் படிக்கிறார்கள். 


படிப்பது மட்டும் அல்ல, நன்றாக இருக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றால் ஒரு புன்சிரிப்பு காட்டும் படங்களைப் (emoji ) போட்டு அங்கீகரிக்கிறார்கள். நமக்கு அதில் ஒரு இன்பம். அட, நாம் சொல்வதைக் கேட்டு அதை பாராட்டவும் ஆள் இருக்கிறதே என்று நாம் மகிழ்ந்து மேலும் அவற்றைச் செய்கிறோம். 


ஒவ்வொரு குழுவிலும் இப்படி சிலர் இருப்பார்கள். 


முன்பெல்லாம் மேடைப் பேச்சு என்று இருந்தது இப்போது வலை தளங்களுக்கு மாறி விட்டது. 


பாராட்டுகிறார்களே. கேட்கிறார்களே. சொன்னால் என்ன தவறு. இரசிக்க நாலு பேர் இருந்தால், சொல்லலாமே என்று நாம் நினைக்கலாம். 


அதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?


பாடல் 


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


(please click the above link to continue reading)



பல்லார் = பலர், பல பேர் 


முனியப்  = கோபப் படும்படி, வெறுக்கும் படி 


பயனில சொல்லுவான் = பயனிலாத சொற்களை சொல்லுபவன் 


எல்லாரும் = அனைவராலும் 


எள்ளப் படும் = தூற்றப் படுவான் 


நாம் பொருள் சொன்னால் இப்படித்தான் சொல்லுவோம். 


பரிமேலழகர் மிக நுணுக்கமாக பொருள் சொல்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இப்படி சிந்திக்கக் கூட முடியுமா என்பது சந்தேகமே. 


இங்கே பல்லார், எல்லார் என்று இரண்டு சொற்கள் வருகின்றன. பல பேர், எல்லோரும் என்பது ஏறக்குறைய ஒரே பொருள் மாதிரித்தான் தெரிகிறது. 


பரிமேலழகர் சொல்கிறார். 


பல்லார் என்று முதலில் வருவது அறிவு உடையவர்கள், அறிஞர்கள் என்று. 


ஏன் அப்படிச் சொல்கிறார்?  பல்லார் என்பதற்கு அறிஞர் என்று எப்படி பொருள் சொல்ல முடியும்?


அதற்கு அடுத்த வார்த்தை "முனிய" என்று வருகிறது. 


யார் ஒரு சொல்லைக் கேட்டு வெறுப்பும், கோபமும் அடைவார்கள்? யார் சொல்லின் பலனை அறிந்தவர்களோ, யார் சொல்லின் தன்மை அறிந்தவர்களோ அவர்கள்தான் தவறான, பலன் இல்லாத சொற்களை கேட்கும் போது வெறுப்பு அடைவார்கள். 


அப்படிப்பட்டவர்கள் யார் என்றால் அறிவு உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் பயனுள்ள சொற்களுக்கும், பயன் இல்லாத சொற்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். 


அறிவு இல்லாதாவர்கள், எதையும் கேட்டு பாராட்டுவார்கள். whatsapp குழுவில் வரும் குப்பைகளை பாராட்டுவது போல. 


பின்னால் வரும் "எல்லார்" என்பது எல்லோரையும் குறிக்கும். ஏன்? இங்கே மட்டும் எல்லோரையும் குறிக்கிறார்? 


அறிவு உள்ளவர்கள் வெறுத்தால், அதைக் கண்டு எல்லோரும் வெறுப்பார்கள் என்கிறார். 


காரணம் என்ன?


அறிவு உள்ளவன் ஏதோ ஒரு காரணம் பற்றி ஒரு பயனில்லாத சொல்லை வெறுக்கிறான் என்றால் அவனுக்குத் தெரிந்து இருக்கிறது. எனவே வெறுக்கிறான். அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நினைத்து மற்றவர்களும் வெறுப்பார்கள் என்கிறார். 


எனவே, நாம் சொல்வதை அறிவு உள்ளவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் பாராட்ட வேண்டும். நல்லவர்களிடம், உயர்ந்தவர்களிடம் பாராட்டு வாங்க வேண்டும். 


அவர்கள் வெறுக்கும்படி பேசினால், நாளடைவில் உலகம் நம்மை வெறுக்கும் என்கிறார். 


எவ்வளவு நுட்பமான உரை. 


அது மட்டும் அல்ல, நல்லவர்கள் யாரை பாராட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படி பாராட்டப் படுபவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும். அது நமக்கு பயனுள்ள சொல்லாக அமையும். 


அவர்கள் பாராட்டாவிட்டால், அதை நாம் கேட்க்க வேண்டியது இல்லை. அவற்றால் நமக்கு ஒரு பயனும் விளையாது. 


அறிஞர்கள் பாராட்ட வேண்டும் என்றால் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும். படிக்க வேண்டும். அறிவை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். சொற்களை தேர்ந்து எடுத்துப் பேச வேண்டும். 


அப்படி உழைக்கும் நேரத்தில், நாம் பேசுவது குறையும். படிக்க படிக்க நம் அறியாமை விளங்கும். நல்லவேளை இதெல்லாம் தெரியாமல் பேச இருந்தேனே என்று நம் மீதே நமக்கு ஒரு எண்ணம் பிறக்கும். 


இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்ற மலைப்பு வரும். 


அறிவை ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணியதாகவும் செய்து கொண்டு பின் பேசினால், நம் பேச்சை அறிவுலகம் மதிக்கும். அறிவுலகம் மதித்தால் உலகம் மதிக்கும். 


இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறார்.


அடுத்தமுறை பூஜை செய்யும் போது வள்ளுவருக்கு ஒரு பூ. பரிமேலழகருக்கு ஒரு பூ.







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html





Thursday, February 23, 2023

கந்தரனுபூதி - கருதா மறவா

                      

 கந்தரனுபூதி - கருதா மறவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாம் வாழ்வை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது இல்லை. 


வாழ்வின் பெரும் பகுதியை நாம் வேண்டாம் என்று விலக்கி விடுகிறோம். நமது இன்னல்களுக்கு அதுதான் காரணம். 


இனிப்பு பிடிக்கும். நிறைய வேண்டும். கசப்பு பிடிக்காது. வேண்டவே வேண்டாம். 


இன்பம் வேண்டும். துன்பம் வேண்டாம். 


இப்படி வாழ்வை கூறு போட்டு, அது வேண்டும், அது விரும்பத் தக்கது, அது வேண்டாம், அது வெறுக்கத் தக்கது என்று நாம் விலக்கி வைக்கிறோம். 

இதனால் என்ன ஆகிறது?


விரும்பியது வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஒன்று கிடைத்தால் அதை விட மேலே வேண்டும் ஆசை நிரந்தரமாக நம்மை தள்ளிக் கொண்டே இருக்கிறது. 


விரும்பியதை அடைய முடியாதோ என்ற பயம் வருகிறது. யாரும் தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் வருகிறது. விரும்பியது கிடைத்தாலும் அதை பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது. 

அது ஒரு புறம் இருக்க, 


விரும்பாதது வந்து விடுமோ என்ற கவலை. வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். அதில் இருந்து எப்படி தப்புவது என்ற தவிப்பு. 


இப்படி வாழ்வை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டு நாம் அன்றாடம் அல்லாடுகிறோம். 


சரி, அதுக்காக இன்பமும், துன்பமும் ஒன்றாக முடியுமா? பண வரவும், பணம் தொலைந்து போவதும் ஒன்றாக முடியுமா? என்று கேட்டால்....முடியாது. கடினம்தான். 


இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த சம நோக்கு வராது. 


இதை "இருவினை ஒப்பு" என்பார்கள். 


அருணகிரிநாதருக்கு தெரிகிறது. இந்த இரு நிலை தான் துன்பத்துக்குக் காரணம் என்று. ஆனாலும், விட முடியவில்லை. தவிக்கிறார். 


முருகா, எனக்கு அருள் செய்ய மாட்டாயா? இந்த இரு வித நோக்கங்கள் போய், ஒன்றாகக் காணும் காட்சியை எனக்கு எப்போது அருள்வாய் என்று கேட்கிறார். 


பாடல் 


கருதா மறவா நெறிகாண வெனக் 

கிருதாள் வனசந்தர வென் றிசைவாய் 

வரதா முருகா மயில் வாகனனே 

விரதா சுரசூர விபாடணனே . 


பொருள் 




(pl click the above link to continue reading)



கருதா  = நினைப்பது 


மறவா  = மறப்பது 


நெறிகாண = இப்படி நினைப்பு, மறுப்பு என்ற இரு நிலை இல்லாத வழியை நான் காண 


வெனக்  = எனக்கு 


கிருதாள் = உன்னுடைய இரண்டு திருவடிகளை 


வனசந்தர வென் றிசைவாய்  = வனசம் தர என்று இசைவாய்? வனசம் என்றால் தாமரை மலர் என்று பொருள். உன் திருவடித் தாமரைகளை தர என்று இசைவாய்?


வரதா = வரம் தருபவனே, அல்லது வரை இல்லாமல் கொடுப்பவனே 


முருகா = முருகா 


மயில் வாகனனே  = மயிலை வாகனமாகக் கொண்டவனே 


விரதா = விரதங்களினால் அடையப் படுபவனே 

சுர = தேவர்களின் அதிபதி (சுர எதிர்மறை அசுர) 


சூர = சூரபத்மனின் 


 விபாடணனே . = பாடாணம் என்றால் கல், பாறை. ஆதியில் உயிர் பாடாண நிலையில் இருந்தது என்று சொல்லுவார்கள். அதாவது, கல் போலக் கிடந்தது என்று பொருள்.  பாறை போல் உறுதியான, ஈரம் இல்லாத சூர பத்மனை அழித்தவனே 


இன்ப துன்பங்களை ஒன்றாக ஏற்றுக் கொள்வது என்பது நீண்ட பயிற்சிக்குப் பின் வருவது. 


முதல் படியாக, துன்பமே வேண்டாம், துன்பம் வரவே கூடாது, வலியே கூடாது என்று விறைப்பாக இல்லாமல், வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் கலந்ததுதான். வரட்டும் பார்ப்போம் என்று இருக்க வேண்டும். சரி, இன்று இந்தத் துன்பம் வந்து விட்டது. சரி, இதை ஏற்றுக் கொள்வோம் என்று பக்குவப் பட வேண்டும். அதற்காக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக் கூடாது. 


வரட்டுமே, வந்தால் என்ன. சமாளிப்போம் என்று இருக்க பழக வேண்டும். துன்பம் கட்டாயம் வரும். நாம் எவ்வளவுதான் வேண்டி விரும்பினாலும், அது நம்மை விடாது. எனவே, அதைக் கண்டு ஓடுவது ஒரு பயனும் தராது. 



துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் வந்து விட்டால், வாழ்க்கை சமனப்படும். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Wednesday, February 22, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - ஒரு முன்னுரை

திருக்குறள் - பயனில சொல்லாமை - ஒரு முன்னுரை 


திருக்குறளின் நோக்கம் நம்மை வீடு பேறு அடையச் செய்வது.  அதற்கு வழி அறம், பொருள், இன்பம் என்பவை.

அதில் அறம்தான் நம்மை வீடு பேறு நோக்கி அழைத்துச் செல்லும்.


அந்த அறத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார்கள். 


இல்லறம், துறவறம் என்று. 


இல்லறத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி துறவு நோக்கிப் போக வேண்டும். துறவு, வீடு பேற்றை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். 


சரி, இந்த அறம் அறம் என்றால் என்ன?



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


(please click the above link to continue reading)


பரிமேலழகர் அதை ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார். 


"விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும்" என்று. 


எது நமது அற நூல்களில் சொல்லப் பட்டு இருக்கிறதோ அதை செய்ய வேண்டும். விதித்தன செய்தல் என்றால் அது. 


எதெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறதோ, அவற்றைச் செய்யக் கூடாது. அது விலக்கியன ஒழித்தல். 


இல்லறம் செய்ய பொருள் வேண்டும். எனவே அதற்கு துணை செய்ய பொருள் அதிகாரத்தை கூறினார். வெறும் பொருளும் அறமும் என்று இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. எனவே, இன்பம் என்ற அதிகாரத்தை வைத்தார். 



கணவன், மனைவி, பிள்ளைகள், உறவு, நட்பு, சமுதாயம் என்று அன்பு விரிந்து கொண்டே போய், அது அருளாக மாறும். அன்பு அருளாகும்போது அது துறவு நிலைக்கு நம்மை கொண்டு செல்லும். 


இல்லறத்தில் இருக்கும் ஒருவன் செய்ய வேண்டியன சில உண்டு. விலக்க வேண்டியன சில உண்டு. 


அதில் விலக்க வேண்டியவை மனம், மொழி, மெய்யால் செய்யும் குற்றங்களை விலக்க வேண்டும். 


சொல்லால் ஏற்படும் குற்றங்கள் நான்கு வகைப்படும்.


பொய், குறளை, கடும் சொல், பயனில சொல்லாமை. 


இதில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் அற்புதமானது. 


இல்லறத்தில் பொய் பற்றிச் சொல்லவில்லை. காரணம், இல்லறத்தில் இருப்பவன் முழுவதுமாக பொய்யை விலக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பொய் சொல்லத்தான் வேண்டியிருக்கும்.  துறவிக்கு பொய் தவிர்க்க வேண்டிய ஒன்று. 


எனவே இல்லறத்தில் பொய் பற்றி சொல்லவில்லை என்கிறார். 


இதில், கடும் சொல் பற்றி இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் கூறினார். 


குறளை என்றால் புறம் சொல்லுதல். அது பற்றிய முந்தைய அதிகாரத்தில் கூறினார். 



எனவே மிஞ்சி இருக்கும் பயனில சொல்லாமை பற்றி இங்கே கூறுகிறார். 


நன்றாக யோசித்துப் பாருங்கள். இல்லறத்துக்குள் உள்ளது பயனில சொல்லாமை என்ற அதிகாரம். அப்படி என்றால் பயனில சொல்லாமையும் ஒரு அறம். 


தேவை இல்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு அறமாகக் கொண்டு இருந்தார்கள். எவ்வளவு பெரிய பாரம்பரியத்தில் இருந்து நாம் வந்து இருக்கிறோம். நம் கலாசார உயர்வு என்பது எவ்வளவு சிறந்தது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். 


பயனில சொல்லுதல் என்றால் என்ன என்று பரிமேலழகர் விளக்குகிறார். 


ஒரு சொல் சொன்னால் அது தனக்கோ அல்லது பிறருக்கோ அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் ஏதாவது ஒரு பயனையாவது தர வேண்டும். இல்லை என்றால் அது பயனில சொல் என்கிறார். 


யாருக்கும் ஒரு பயனும் இல்லை என்றால், எதற்குப்  பேச வேண்டும்?


Sunday, February 19, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - மன்னும் உயிர்க்கு

         

 திருக்குறள் - புறங்கூறாமை -  மன்னும் உயிர்க்கு



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


இந்த அத்யாயத்தின் இறுதிக் குறள். 


புறம் கூறுவது தவறு, பெரிய பாவம், அதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். 


சரி, அதை எப்படி விடுவது என்ற கேள்விக்கு இறுதியில் பதில் தருகிறார். 


ஒருவன் புறம் கூறுகிறான் என்றால், எதைப் பற்றி புறம் கூறுவான்?  மற்றவர்கள் செய்யும் தவறுகளை, குற்றங்களைத்தானே புறம் சொல்லுவான். மற்றவர்கள் செய்யும் நல்லவற்றை புறம் கூற மாட்டான் அல்லவா?


அப்படி புறம் கூறுபவன், தான் செய்யும் குற்றத்தை நினைத்தால் புறம் கூறுவானா?


தான் புறம் கூறுதலாகிய குற்றத்தை செய்கிறோம், மற்றவர்கள் நம்மைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள் என்ற எண்ணம் வந்தால், புறம் கூறுதலாகிய தவற்றினைச் செய்ய மாட்டான் என்கிறார். 



"அய்யோ..அவனா..வாய் தொறந்தா யாரையாவது பத்தி எதாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவான் ..."  என்று தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள் என்ற அறிவு இருந்தால் அவன் புறம் பேச மாட்டான் என்கிறார். 


பாடல் 



ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_19.html


(pl click the above link to continue reading)


ஏதிலார் = மற்றவர்கள் 


குற்றம்போல் = (செய்யும்) குற்றங்களைப் போல 


தம்குற்றம் = தான் செய்யும் குற்றதையும் 


காண்கிற்பின் = கண்ட பின்னால் 


தீதுண்டோ = தீமை உண்டா ?


மன்னும் உயிர்க்கு = நிலை பெற்ற உயிர்க்கு 



இந்தக் குறள் நமக்குத் தெரிந்த குறள்தான். அர்த்தமும் தெரியும். 


இருந்தும், பரிமேலழகர் கூறும் நுண்ணிய உரையை காண்போம். 


"காண்கிற்பின்" - கண்டால். மற்றவர்கள் குற்றத்தைக் காண்பது எளிது. நம் குற்றத்தை நாமே காண்பது மிகக் கடினம். எனவே "கண்டால்' என்று கூறினார். அதாவது, காண முடிந்தால் என்ற பொருளில். 


வாரத்துக்கு நூறு மணி நேரம் உழைத்தால் வெற்றி காணலாம் என்றால் என்ன அர்த்தம்? அப்படி உழைப்பது மிகக் கடினம் என்று அர்த்தம். 


"மன்னும் உயிர்க்கு". மன்னுதல் என்றால் நிலைத்து நிற்றல். மன்னும் உடலுக்கு என்று சொல்லி இருக்கலாம். உயிர்க்கு என்று ஏன் கூறினார்?  புறம் கூறுதல் என்ற பாவம் பின் வரும் பிறவிகளிலும் தொடரும். அங்கே தொடர்வது உயிர்தானே அன்றி உடல் அல்ல. எனவே, புறம் கூறுதலை விட்டால் இனி வரும் பிறவிகளில் ஒரு துன்பமும் வராது என்ற பொருள் பட "மன்னும் உயிர்க்கு" என்றார். 


புறம் கூறுபவன், சொல்லும் போது இன்பமாக இருக்கும். ஆனால், அந்தக் தீய செயல், பாவமாக மாறி, பின் வரும் பிறவிகளில் துன்பத்தைத் தரும் என்கிறார். 


இந்தப் பிறவியில் மட்டும் அல்ல. இனி வரும் பிறவிகளிலும் நாம் துன்பப்படாமல் இருக்க வழி சொல்லித் தருகிறார். 


துன்பப்படும் யாரையாவது பார்த்தால்,  முற்பிறவிகளில் என்னென்ன புறம் சொன்னானோ, இந்தப் பிறவியில் இப்படி துன்பப்படுகிறான் என்ற எண்ணம் வர வேண்டும். 


நாமும் புறம் சொன்னால், இப்படித்தான் வரும் பிறவிகளில் துன்பப்படுவோம் என்ற பயம் வர வேண்டும். 



அந்தப் பயம், புறம் செய்யும் குற்றத்தில் இருந்து நம்மைக் காக்கும். 


அரசாங்கம் போடும் சட்டங்களில் இருந்து நாம் தப்பிவிடலாம். இது அறம் போட்ட சட்டம். தப்பவே முடியாது. யாரும் விதிவிலக்கல்ல. 


போகிற போக்கில் ஒரு மிரட்டு மிரட்டி விட்டுப் போகிறார்.  


இனி புறம் சொல்லத் தோன்றுமா?





(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


தூற்றும் மரபினார்



Saturday, February 18, 2023

கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா

                     

 கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சமயப் பெரியவர்கள் இறைவன் பற்றியும், வாழ்க்கை, வினை என்பன பற்றியும் பல கருத்துகளை கூறுகிறார்கள். அதெல்லாம் சரியா? அவற்றை எப்படி ஏற்றுக் கொள்வது? அதற்கு என்ன அடிப்படை? சும்மா நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதுமா?  


அதுமட்டும் அல்ல, அந்த உண்மைகள் எல்லாம் என்றோ சொல்லப்பட்டவை. அவை இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? அவற்றை கடைபிடிக்க முடியுமா என்றெல்லாம் கேள்விகள் எழும். 


உண்மையை அறிந்து கொள்ள முக்கியமான மூன்று வழிகளை சொல்கிறார்கள்.


அவற்றிக்கு பிரமாணங்கள் என்று பெயர்.


அவை,  காட்சிப் பிரமாணம், அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம் என்பன. 


காட்சிப் பிரமாணம் என்றால் காண்பது மட்டும் அல்ல, கேட்பது, உணர்வர்து, முகர்வது, எல்லாம் அடங்கும். அதாவது புலன்கள் வழியே அனுபவ பூர்வமாக அறிவது. 


நேற்று நான் ஒரு வெள்ளை யானை பறந்து போவதைப் பார்த்தேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?  ஏன் நம்ப மாட்டார்கள்?  ஒரு நம்பிக்கைதான் என்று சொல்லி நம்பவேண்டியது தானே? 


இல்லை. எனக்குக் காட்டு. நான் பார்த்தால் நம்புகிறேன் என்று சொல்லுவார்கள். 


இது ஒருவிதத்தில் உண்மையை அறிய உதவும் ஒரு கருவி. எதையும் பார்த்து, அறிந்து கொள்வது. 


அடுத்தது, அனுமானம். சிந்தித்து அறிவது. காலையில் எழுந்து வெளியே பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. இரவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானிக்கிறோம். நாம் பார்க்கவில்லை. இருந்தும், இதுதான் நடந்திருக்கும் என்று அனுமானிக்கிறோம் அல்லவா. 


அது, உண்மையை அறியும் இரண்டாவது வழி. 


மூன்றாவவது, சற்று சிக்கலான வழி. ஆகமப் பிரமாணம். அதாவது, பெரியவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் பிழையாக சொல்ல மாட்டார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வது. 


அது எப்படி முடியும் என்று கேட்டால், உடம்பு சரியில்லை என்று மருதுவரிட்ம் செல்கிறோம். அவர் ஒரு மருந்து எழுதித் தருகிறார். அதை வாங்கி உண்கிறோம். அதெல்லாம் முடியாது, இந்த மருந்து என்னை குணப்படுத்தும் என்று நிரூபி என்று யாரும் மருத்துவரிடம் வாதம் செய்வது இல்லை. மருத்துவம் படித்து இருக்கிறார். அவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்புகிறோம். 


அது ஆகமப் பிரமாணம். 


இதில், ஒரு மருத்துவர் ஒன்று சொல்கிறார், மற்றொரு மருத்துவர் வேறொன்றைச் சொல்கிறார். எதை நம்புவது என்ற குழப்பம் வரலாம். 


உள்ளதுக்குள் மிகவும் அறிவும், அனுபவமும் உள்ள ஒரு மருத்துவர் சொல்வதை கேட்பதுதானே சரியான ஒன்றாக இருக்க முடியும்?


நம் பெரியவர்கள், இறைவனிடம் இருந்து அவர்கள் பெற்றதை நமக்குச் சொல்கிறார்கள். அதைவிட பெரிய ஆள் யார் இருக்கிறார். எனவே, அவர்கள் சொல்வது, இறைவன் சொல்வது மாதிரித்தான்.


அருணகிரிநாதர் சொல்கிறார், 


"யாராலும் எளிதாக அறிய முடியாத உண்மைப் பொருளை எனக்கு நீ உபதேசம் செய்தாய்" என்று. 


அருணகிரிநாதர் முருகனிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றார். பின் பெற்ற உபதேசத்தை நமக்குச் சொல்கிறார். அதில் தவறு இருக்குமா?


பாடல்  




அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 

உரிதா வுபதேச முணர்த்தியவா 

விரிதாரண விக்ரம வேளியையோர் 

புரிதாரக நாக புரந்தரனே 





பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரிதாகிய = யாராலும் எளிதில் அறிய முடியாத 


மெய்ப்பொருளுக்கு = உண்மையான பொருளை, ஞானத்தை 


அடியேன் = அடியவனான எனக்கு 

 

உரிதா = உரிதானது, பெற்றுக் கொள்ள தகுதியானவன் என்று 


வுபதேச = உபதேசம் செய்து 


முணர்த்தியவா  = என்னை உணரச் செய்தவனே 


விரிதாரண = தாரணை என்றால் விடாமல் மேலிருந்து கீழே வருவது. எண்ணை தாரை என்பார்கள். விரிந்த உன் அருளை சமமாக் எல்லோருக்கும் விடாமல் அருள்பவனே 


விக்ரம = பலம் பொருந்தியவனே 


வேள்   = வேள் என்றால் மன்மதன். மன்மதனைப் போல் அழகானவனே 


இமையோர் = கண் இமைக்காமல் இருக்கும் தேவர்களின் 


புரிதாரக நாக = அதாரமானவனே 


புரந்தரனே = காப்பவனே 


எனக்கு முருகன் நேரடியாகச் சொன்னார் என்கிறார். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Friday, February 17, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறன்நோக்கி ஆற்றுங்கொல்

        

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறன்நோக்கி ஆற்றுங்கொல் 



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சில சமயம் நமக்கு பிடிக்காத வேலைகளைக் கூட நாம் "எல்லாம் என் தலை எழுத்து" என்று நொந்துகொண்டே செய்வோம். 


மனதுக்கு பிடிக்காத வேலையாக இருக்கும். வேறு வழியில்லாமல் செய்வோம். ஏதோ முன் பிறவி வினை என்று நினைத்துக் கொண்டு செய்வோம் அல்லவா?


அது போல, 


இந்த பூமியும், புறம் சொல்லுவாரை தாங்குகிறதாம். செய்ய வேண்டியது என்ன என்றால், நிலம் பிளந்து அவர்களை அப்படியே விழுங்கி விட வேண்டும். அப்படிச் செய்யாமல், புறம் கூறுபவர்களை நிலம் தாங்கிக் கொண்டு இருக்கக் காரணம், அது தனக்கு விதித்த அறம்  என்று நிலம் நினைபதால் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_4.html


(pl click the above link to continue reading)


அறன்நோக்கி = அறம் என்று கருதி 


ஆற்றுங்கொல் = பொறுத்துக் கொண்டு இருக்கிறதோ ?


வையம் = இந்த பூமி 


புறன்நோக்கிப் = மற்றவர்கள் சென்ற பின் அவர்கள் பின்னால் (புறத்தே) 


புன்சொ லுரைப்பான் = தீய சொற்களை சொல்லுபவனின் 


பொறை = சுமை 


அதாவது, அப்படிப்பட்டவர்கள் இந்த உலகிலேயே இருக்கக் கூடாது என்கிறார். இருக்கிறார்களே என்றால், பூ மகள் அறம் நோக்கி அவர்களை தாங்கி நிற்பதால் என்கிறார். அது மட்டும் இல்லை என்றால் இந்த புறம் சொல்பவர்களை நிலம் என்றோ விழுங்கி இருக்கும் என்கிறார். 


அந்த அளவுக்கு புறம் சொல்லுவது குற்றம் என்று சொல்கிறார். 


பலர் அது ஏதோ ஒரு பொழுது போக்கு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 


படிக்க வேண்டும். 


படித்தபின் மாற வேண்டும். 






(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


தூற்றும் மரபினார்



கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்

 கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்


மாலை பாம்பு போலத் தெரியும் உதாரணம் பலவிதங்களில், பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. எல்லோரும் அறிந்ததுதான். அந்த உதாரணத்தை கம்பர் காட்டும் விதம் பிரமிப்பு ஊட்டும்.


நாம் உலகில் பலவற்றை காண்கிறோம். 


பொருள்கள், உறவுகள், நட்பு,  இன்பம், சுகம், பகை, துன்பம், செல்வம், வறுமை என்று காண்கிறோம். 


அவை எல்லாம் உண்மையா? எது உண்மை? எது பொய் ?


செல்வம் இருந்தால் நம் துன்பங்கள் நீங்கிவிடும்.


வயதான காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்துக் கொள்வார்கள். 


இப்படி பல "உண்மைகளை" நாம் கொண்டிருக்கிறோம். 


கம்பர் விளக்குகிறார். 


வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் மாலையா பாம்பா என்று தெரியவில்லை. 


கொஞ்சம் வெளிச்சம் வந்தவுடன், ஓ...இது மாலை, பாம்பு இல்லை என்று அறிந்து பெருமூச்சு விடுகிறோம். 


சற்றுப் பொறுங்கள். 


அது மாலையா? 


இல்லை, பூ, நார், நூல், ஜரிகை சேர்ந்த கலவை.  மாலை என்று பெயர் தந்திருக்கிறோம் அவ்வளவுதான். 


சரி,  நூல் என்றால் பஞ்சு. நார் பூ என்பது செடி கொடியில் இருந்து வருவது.  செடி கொடி என்பது விதை, நீர், சூரிய ஒளி, மண் சத்து இவற்றின் கலவை. 


இது இப்படி போய்க் கொண்டே இருக்கும். எங்கு போய் இது முடியும்? எது உண்மை? 


எந்த அளவில் நாம் நிறுத்துவது? 


இந்த உலகம் என்பது பஞ்ச பூதங்களின் கலவை. அடிப்படையில் பஞ்ச பூதங்கள். அவ்வளவுதான்.  


ஆனால், அது நமக்குத் தெரியுமா? மனைவி, கணவன், பிள்ளைகள், என்றால் உணர்ச்சிகள், ஞாபகங்கள் எல்லாம் சேர்ந்து வருகிறது. பஞ்ச பூதங்களின் கலவை என்று நினைக்க முடியுமா? 


முடியும். 


எப்போது என்றால் இறைவன் முன். இறை உணர்வோடு நாம் ஒன்று படும்போது இந்த வேறுபாடுகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற எண்ணம் வரும். 



பாடல் 


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை  அரவு என, பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப்பாட்டின்  வேறுபாடு உற்ற வீக்கம்

கலங்குவது எவரைக் கண்டால் ?  அவர், என்பர்- கைவில் ஏந்தி,

இலங்கையில் பொருதார்; அன்றே,  மறைகளுக்கு இறுதி யாவார்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_17.html


(Please click the above link to continue reading)


அலங்கலில் = மாலையில் 


தோன்றும்  = தோன்றும் 


பொய்ம்மை = பொய்மை 


அரவு என = பாம்பு என்று 


பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும் 


விலங்கிய விகாரப்பாட்டின்  = ஒன்றோடு ஒன்று சேர்ந்தும், விலகியும் தோன்றும் 


வேறுபாடு = வேறு வேறாக  தோன்றும் 


உற்ற வீக்கம் = பெரிதாகத் தோன்றும் 


கலங்குவது = மறைவது 


 எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து என்றால் 


அவர், = அவர் 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி 


இலங்கையில் = இலங்கையில் 


பொருதார் = சண்டையிட்டார் 


அன்றே = அப்போதே 


மறைகளுக்கு = வேதங்களுக்கு 


இறுதி யாவார்! = முடிவில் உள்ளார் 


இறைவன் முன் இந்த வேறுபாடுகள் எல்லாம் மறையும்.  உயர்ந்தவன், தாழ்ந்தவன், இன்பம், துன்பம், செல்வம், வறுமை என்ற வேறுபாடுகள் எல்லாம் இறைவன் முன் மறையும்


யார் அந்த இறைவன் என்றால், அது இராமன்தான் என்கிறார் கம்பர். 




Sunday, February 12, 2023

கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி

                    

 கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மதம் என்பது ஒரு ஆடம்பரம் என்பார்கள் (religion is a luxury).  அடுத்த வேளைக்கு உணவு இல்லாதவன் ஆத்மா, வீடு பேறு, பிரம்மம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டான். அவன் கவலை எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கும். உணவுக்கு என்ன செய்வது என்பது பற்றித்தான் அவன் கவலை எல்லாம் இருக்கும். அவனிடம் போய் அத்வைதம், துவைதம் என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். 


இறைவனை நாடிச் செல்வது என்றாலும், பொருள் வேண்டும். 


உணவு, உடை, வீடு, எதிர்காலம் பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தேவாரம், திருவாசகம் எல்லாம் படிக்க மனம் ஓடும். 


வறுமை வந்து விட்டால் படித்த படிப்பு, குலம், அழகு, குடிப்பிறப்பு எல்லாம் போய் விடும். 


எல்லாம் துறந்தால் தான் இறைவனை அடைய முடியும் என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. எங்கே,இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பாருங்கள். பசி அழைக்கிறதா, பக்தி அழைக்கிறதா என்று தெரியும். 


இரண்டு நாள் முடியும் என்றால், இருப்பது நாள் இருந்து பாருங்கள். 


கடன்காரன் வருவான், வீட்டை காலி பண்ணச் சொல்லுவான், பிள்ளைகளோடு தெருவில் நிற்க வேண்டி வரும் என்ற பயம் இருந்தால், பக்தி வருமா?


சொல்லுவது அருணகிரிநாதர். 


பாடல் 


வடிவுந் தனமு மன முங் குணமுங் 

குடியுங் குலமுங் குடி போகியவா 

அடியந் தமிலா வயில் வேலரசே 

மிடியென் றொரு பாவி வெளிப்படி னே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


(pl click the above link to continue reading)



வடிவுந் = அழகான வடிவமும் 


தனமும் = செல்வங்களும் 


மனமுங் = மன வலிமையையும் 


குணமுங்  = நல்ல குணங்களும் 


குடியுங் = குடிப்பிறப்பும் 


குலமுங் = குலமும் 


குடி போகியவா  = முழுவதும் போய் விடும் 


அடி = தொடக்கம் 


அந் தமிலா = முடிவு இல்லாத 


வயில் வேலரசே  = கூறிய வேலை உடைய என் தலைவனே 


மிடி = வறுமை 


யென் றொரு பாவி = என்ற ஒரு பாவி 


வெளிப்படி னே  = நம்மைப் பிடித்துக் கொண்டால் 


வறுமை வந்துவிட்டால் எல்லாம் போய் விடும். 


பசி இருக்கும் இடத்தில் பக்தி இருக்காது. 


எனவேதான் வள்ளலார் அணையா அடுப்பு ஏற்றி பசி என்று வந்தவர்களுக்கு எல்லாம் உணவு அளித்தார். 


சரி, அருணகிரிநாதர் சொல்லிவிட்டார் என்பதற்காக பொருள் சம்பாதிப்பதே குறி என்று இருக்கக் கூடாது. 


அவர், செல்வத்தை சேர்க்கச் சொல்லவில்லை. 


வறுமை இல்லாமல் பார்த்துக் கொள் என்கிறார். 


இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.


துறவிக்கும் உணவு வேண்டும். 


எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போ என்று சொல்லவில்லை. அதற்காக வாழ்நாள் முழுவதும் பணம் சேர்த்துக் கொண்டே இரு என்றும் சொல்லவில்லை. 


பக்திப் பாடல்களுக்கு நடுவே இப்படி ஒரு ஆச்சரியமான பாடல். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Friday, February 10, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - தூற்றும் மரபினார்

       

 திருக்குறள் - புறங்கூறாமை -  தூற்றும் மரபினார்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


நமது சுற்றத்திலோ, உறவிலோ சிலர் புறம் சொல்லுவதையே ஒரு பொழுது போக்காக கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு யாரையாவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. 


அப்படிப் பட்டவர்களிடம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


"உறவுகளுக்குள் புறம் சொல்லுபவன் மற்றவர்களிடம் வேறு என்ன செய்ய மாட்டான் " என்கிறார். 


பாடல் 



துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_10.html


(pl click the above link to continue reading)


துன்னியார் = நெருங்கிய சுற்றத்தார் 


குற்றமும் = செய்த குற்றங்களை 


 தூற்றும்  = அவர் இல்லாதபோது அதை மற்றவர்களிடம் சொல்லும் 


மரபினார் = பழக்கம் உள்ளவர்கள் 


என்னைகொல் = வேறு என்ன செய்ய மாட்டார்கள் 


ஏதிலார்  மாட்டு = மற்றவர்களிடம் 


மிக எளிமையான குறள். 


இதில் நாம் ஆழ்ந்து சிந்திக்க சில கருத்துக்கள் இருக்கின்றன. 


முதலாவது, சொந்ததுக்குள் புறம் சொல்லுபவன், நம்மைப் பற்றியும் பிறரிடம் இப்படித்தான் கூறுவான். அவனுக்கு அதுதான் பழக்கம் . அவன் மற்றவர்களைப் பற்றி சொல்லும் போது நாம் அதை கேட்க்கக் கூடாது. காரணம், அவன் நம்மைப் பற்றி பிறரிடம புறம் சொல்லுவான் என்பது மட்டும் அல்ல, நாம் சொல்லாததையும் சொன்னதாக பிறரிடம் சொல்லி விடுவான். ஏதோ அவன் சொல்வது எல்லாம் நமக்கு உடன்பாடு போலச் சொல்லி விடுவான். அனாவசியமாக நம் பேர் கெடும். 


இரண்டாவது, உடன் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றி இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்பவன், பெரிய கல் நெஞ்சக் காரனாக இருப்பான். இரக்கம் இல்லாத அவன், உறவு இல்லாத மற்றவர்களிடம் என்னென்ன செய்ய மாட்டான்.  செய்வான். பெரிய குற்றங்களைச் செய்பவன் தொடர்பு நமக்கு இருந்தால் அது ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நம்மை ஏதாவது ஒற்று சிக்கலில் கொண்டு சேர்த்து விடும். எனவே, அவனை விட்டு விலகி நிற்பது நல்லது. 


மூன்றாவது,  புறம் சொல்லுவது என்பது பெரிய தீய செயல் என்று அறியாமலேயே சிலர் ஏதோ அது ஒரு பொழுது போக்கு என்று நினைத்துச் செய்வார்கள். அது தவறு என்றே அவர்களுக்குத் தெரியாது .அப்படி தவறு செய்வதே இயல்பாகப் போய்விடுகிறது. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். 


நான்காவது,  இதை ஏன் அவன் செய்வான் என்று சொல்ல வேண்டும்? நாமே கூட செய்து கொண்டிருக்கலாம். நம்மையும் அறியாமால் நாமே கூட புறம் சொல்லித் திரியலாம். அது மிகப் பெரிய தவறு. அந்தத் தவறு நம்மை பிற பெரிய தவறுகளுக்கு இட்டுச் செல்லும். எனவே, இந்தத் தவறு நம்மிடம் இருந்தால், அதை விட்டு விட வேண்டும். 




(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html




Monday, February 6, 2023

கந்தரனுபூதி - உதியா மரியா

                   

 கந்தரனுபூதி - உதியா மரியா




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கடவுள் என்றால் என்ன?  


அது ஆணா, பெண்ணா, அலியா,உருவம் உள்ளதா, அருவமானதா? 


ஒன்றும் தெரியாது. இருந்தும் உருவ வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


இப்படி சிந்தித்தால் என்ன?


உருவம் என்பதை விட்டு விட்டு,, தன்மை, குணம் என்று நினைத்தால் என்ன?


அப்படி நினைத்தால், எல்லா கடவுளுக்கும் உள்ள குணங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும். 


சிவன், திருமால், முருகன், விநாயாகர் என்று பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும், குணம் என்று பார்க்கும் போது அது ஒன்றாகவே இருக்கும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 


பாடல் 



உதியா மரியா உணரா மறவா 

விதிமா லறியா விமலன் புதல்வா ! 

அதிகா ! அநகா ! அபயா ! அமரா 

பதிகாவல ! சூர பயங்கரனே ! 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


(pl click the above link to continue reading)


உதியா = உதிக்காமல் இருப்பவன். அதாவது இறைவனுக்கு தோற்றம் என்று ஒன்று கிடையாது. அது ஒரு குணம். 


மரியா  = மரித்தல் என்றால் இறத்தல். இறைவனுக்கு இறப்பு கிடையாது. முடிவு கிடையாது. பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. 


உணரா =  உணர்தல் என்றால் நினைத்தல் 


மறவா  = மறவா என்றால் மறத்தல். நினைப்பும் இல்லை, மறப்பும் இல்லை. 


விதி = விதி, தலை எழுத்தை எழுதும் பிரமன் 


மால்  = மால் என்றால் திருமால் 


அறியா = அறியாதவன் 


விமலன் புதல்வா ! = வி என்றால் இல்லை. நாயகன் என்றால் தலைவன். வி-நாயகன் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன். மலம் (குற்றம்) உள்ளவன் மலன். குற்றமே இல்லாதவன் வி-மலன். குற்றமே இல்லாத சிவனின் புதல்வன். 



அதிகா ! = உயர்ந்தவன் 


அநகா  = பாவம் இல்லாதவன் 


அபயா ! = அபயம் அளிப்பவன் 


அமரா  = என்றும் இருப்பவன் 


பதிகாவல ! = தேவர் உலகை காப்பவன் 


சூர பயங்கரனே !  = சூரர்களுக்கு பயங்கரமானவன் 


இப்படி இறைவனின் குணங்களை மட்டும் அடுக்கிக் கொண்டே போகிறார். 


உருவம் இல்லாத ஒன்றை சிந்திக்க சிந்திக்க, இறை என்பது ஒன்றுதான் என்ற தெளிவு பிறக்கும். 


என் கடவுள் உயர்ந்தவர்.உன் கடவுள் தாழ்ந்தவர். என் மதம் சிறந்தது.உன் மதம் கீழானது என்ற பாகுபாடுகள் மறையும். 


பாகுபாடு மறைந்தால், மனதில் உள்ள விருப்பு வெறுப்பு குறையும். மனம் சலனப்படாது. 


சலனமற்ற மனதில் தான் உண்மை தெளிவு பிறக்கும். 


அடுத்த முறை உதயா மரியா என்று இந்தப் பாடலை பாடும் போது உருவம் அற்ற, குணங்கள் நிறைந்த அந்த ஒன்றை எண்ணிப் பாருங்கள். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]