Showing posts with label மகர நெடும்குழைக் காதர் பாமாலை. Show all posts
Showing posts with label மகர நெடும்குழைக் காதர் பாமாலை. Show all posts

Friday, May 23, 2014

மகர நெடும்குழைக் காதர் பாமாலை

மகர நெடும்குழைக் காதர் பாமாலை



திருப்பேரை என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாளின் பெயர் மகரப் பூஷணப் பெருமாள். இதைத் தமிழ் படுத்தி மகர நெடும்குழைக் காதர் என்று அழைக்கிறார்கள்.

அவர் மேல் பாடப்பட்ட ஒரு பாமாலையில் இருந்து ஒரு பாடல்

எங்கள் துயர் தீர்த்த தயா நிதியே, நீ அன்று எவ்வளவு பேருக்கு கூற்றுவனாய் இருந்தாய் ...புய வலி கொண்ட வாலிக்கும், உன் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத  கடலுக்கும்,மாய மானாக வந்த மாரீசனுக்கும், மயன் மகள் மண்டோதரியின் தாலிக்கும் எமனாய் நின்றவன் நீ...எங்கள் துன்பம் அவ்வளவு பெரிது ஒன்றும் இல்லை...நீ நினைத்தால் இதை ஒரு நொடியில் போக்கி விடலாம் .....

பாடல்



வேலிக்குள் நின்று விளைபயிர் போல விரும்பும் எங்கள் 
பால் இக்கொடுந் துயர் தீர்த்தளித்தாய், பகை வென்ற புய 
வாலிக்கும் வேலைக்கும் மானுக்கும் மாய மயன் மகள் தன் 
தாலிக்கும் கூற்றுவனானாய்! தென் பேரைத் தயா நிதியே!’ 


பொருள்

வேலிக்குள் நின்று = வேலிக்குள் நின்று

விளைபயிர் போல = விளையும் பயிர் போல எந்த ஆபத்தும் இல்லாமல்

விரும்பும் எங்கள் பால் = உன்னை விரும்பும் எங்கள் மேல் 

இக்கொடுந் துயர் தீர்த்தளித்தாய் = வந்த இந்த கொடுமையான துன்பத்தை தீர்த்தாய்

பகை வென்ற = பகைவர்களை வென்ற

புய வாலிக்கும் = கரங்களைக் கொண்ட வாலிக்கும்

வேலைக்கும் = உன் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காத கடலுக்கும்

மானுக்கும் = மாய மானுக்கும் 

மாய =  இறக்கும்  படி

மயன் மகள் = மாயன் மகள் (மண்டோதரி)

தன் = அவளின்

தாலிக்கும் = தாலிக்கும்

கூற்றுவனானாய்! = எமனானாய்

தென் பேரைத் = தென் பேரை என்ற திருத் தலத்தில் எழுந்து அருளியுள்ள

தயா நிதியே!’ = தயா நிதியே