Showing posts with label nannool. Show all posts
Showing posts with label nannool. Show all posts

Sunday, July 3, 2022

நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது

 நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது 


எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது. படிக்கின்ற பக்குவம் உள்ளவனுக்குத் தான் பாடம் சொல்ல வேண்டும். 


யார் யார்க்கு எல்லாம் பாடம் சொல்லித் தரக் கூடாது, யார் நல்ல மாணவர் ஆக மாட்டார் என்று நன்னூல் ஒரு பட்டியல் தருகிறது. 


பாடல் 


களிமடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்

தடுமா றுளத்தன் தறுகணன் பாவி

படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post.html



(pl click the above link to continue reading)


களி  = கள்ளுண்டு களித்து இருப்பவன். குடிகாரனுக்கு சொல்லித் தரக் கூடாது. 


மடி = சோம்பேறி 


மானி  = தன் மேல் கர்வம் உள்ளவன். 


காமி  = காமுகன் 


கள்வன் = திருடன் 



பிணியன் = நோயாளி 


ஏழை = ஏழை. புத்தகம் வாங்க, ஆசிரியருக்கு , பள்ளிக்கு செலுத்த பணம் இல்லாதவன் 


பிணக்கன் =மாறுபட்ட சிந்தனை உள்ளவன் 


 சினத்தன் = கோபக்காரன் 


துயில்வோன் = தூங்குமூஞ்சி 


மந்தன் = மந்த புத்தி உள்ளவன். என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது 


தொன்னூற்கு அஞ்சித் = பழைய நூல்களை படிப்பதற்கு அஞ்சுபவன் 


தடுமா றுளத்தன் = நிலை இல்லாத உள்ளம் கொண்டவன் 


தறுகணன் = கொடூரமான செயலகளைச் செய்பவன் (எமனுக்கு தறுகணன் என்று ஒரு பெயர் உண்டு) 


பாவி = பாவம் செய்பவன் 


படிறன் = பொய் சொல்பவன் 


இன்னோர்க்குப் பகரார் நூலே = இப்படிப் பட்டவர்களுக்கு நல்ல நூல்களில் உள்ளவற்றை சொல்லித் தர மாட்டார்கள் 


நன்னூல் காலத்தில் தொன்னூல் படிக்க அஞ்சிய ஆட்கள் இருந்து இருக்கிறார்கள் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல்கள் இருந்திருக்க வேண்டும். 


நூல் எழுதும் பழக்கம் இருந்திருந்தால், மக்களின் வாழ்வு, மொழி வளம், இலக்கணம் எல்லாம் எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்? 


எவ்வளவு சிறப்பு வாய்ந்தது நம் பரம்பரை, மொழி, மற்றும்  கலாசாரம். 



Tuesday, March 24, 2020

நன்னூல் - தாலாட்டு

நன்னூல் - தாலாட்டு 

எப்பப் பார்த்தாலும் பக்தி, காதல், அறம் ...இதை விட்டால் தமிழில் வேற ஒன்றும் இல்லையா ?

ஏன் இல்லை?

தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யார்? 

குழந்தைகளை தூங்க வைக்க, தாய்மார்ககள் தாலாட்டுப் பாடுவார்கள். 

தாலாட்டு என்றால் என்ன ?

தால் என்றால் நாக்கு 

ஆட்டு என்றால் ஆட்டுவது. 

நாவை ஆட்டுவது தாலாட்டு. 

தாலாட்டில் பெரும்பாலும் 'ல' அல்லது 'ர' என்று எழுத்துக்களே வரும்.

ஆராரோ, ஆரிரரோ 

ரோ ரோ ரோ ....

லல்லாலா லல்லா லல்லா 

என்று இந்த எழுத்துக்களே பெரும்பாலும் வரும். 

ஏன் ஆடா என்றோ ஆபா என்று சொல்லுவது இல்லை. 

தமிழில் எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழில் ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிப்பது என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.

ஒரு எழுத்தை அப்படித்தான் உச்சரிக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு இலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த ல மற்றும் ர வை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. 

"அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் "

அண்ணம் என்றால் மேல் வாய்.  வாயின் மேல் பகுதியை நாக்கு வருட ர மற்றும்  ழ என்ற எழுத்துப் பிறக்கும். 

நாக்கு எங்கே, எதைத் தொடவேண்டும், எப்படித் தொட வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. 

ல்  மற்றும் ள் எப்படி பிறக்கும் தெரியுமா ?


அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் 

மேல் வாயின், பல்லின் அடிப் பகுதியை நாக்கின் விளிம்பு (அதாவது நாவின் நுனி) அழுத்தமாக தொடவும், வருடவும் லகரம் மற்றும் ளகரம் பிறக்கும்.

ல மற்றும் ர  இந்த இரண்டு எழுத்துக்கும் நாக்கை வருட வேண்டும். 

அப்படி வருடுவதால் அது ஆடுகிறது. 

நா ஆடுவதால் அது தாலாட்டு.

பிள்ளைகளுக்கோ , பேரப் பிள்ளைகளுக்கோ அடுத்த முறை தாலாட்டு பாடும் போது  நன்னூலை நினைத்துக் கொள்ளுங்கள். 


Saturday, January 11, 2020

நன்னூல் - நூலின் அழகு

நன்னூல் - நூலின் அழகு 


எப்படி அழகாக எழுதுவது?  ஒரு சிறந்த நூல் எப்படி இருக்க வேண்டும்? அலுவலகத்தில் கூட, நிறைய "presentation" தர வேண்டி இருக்கும். அவை எப்படி இருக்க வேண்டும். இன்று, "Steve Jobs" presentation உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.  நம்மவர்கள், ஒரு சிறந்த நூலோ, அல்லது presentation ஓ எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள். நாம் இதைப் படிப்பதை விட்டு விட்டு, "ஆ" என்று மேல்நாட்டாரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அழகான எழுத்து, புத்தகம், presentation எப்படி இருக்க வேண்டும்?

பாடல்

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.

பொருள்


சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் = இது முதல் சூத்திரம். எதையும் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.  வள வள என்று எழுதிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருக்கக் கூடாது. அதற்காக, ரொம்பவும் சுருக்கி என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் போகும் படியும் இருக்கக் கூடாது.


நவின்றோர்க் கினிமை = யாருக்கு சொல்கிறோமோ, அவர்களுக்கு அது இனிமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கேட்க மாட்டார்கள்.


நன்மொழி புணர்த்தல் = நல்லவற்றை சொல்ல வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றை சொல்லக் கூடாது.

ஓசை யுடைமை = சந்த நயம் இருக்க வேண்டும். ஒலி அழகு இருக்க வேண்டும்.


யாழமுடைத் தாதல் = ஆழம் உடைத்தாதல். ஆழமான பொருள் இருக்க வேண்டும். சும்மா நுனிப் பபுல் மேயக் கூடாது

முறையின் வைப்பே = சொல்வதை முறைப்படுத்திச் சொல்ல வேண்டும். ஒரு ஒழுங்கு வேண்டும். முன்னுக்கு பின் அலைக்கழிக்கக் கூடாது.  உயர்ந்தவற்றை முதலில் சொல்லி, மற்றவற்றை பின்னால் சொல்ல வேண்டும். ஆசிரியரும் மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும். மாறாக, மாணவர்களும் ஆசிரியரும் வந்தார்கள் என்று சொல்லக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைமையில் மாதாவுக்கு முதல் இடம், தெய்வத்துக்கு நாலாவது இடம். முதல் அமைச்சர் அவருடைய செயலாளரோடு வந்தார் என்று சொல்ல வேண்டும். செயலாளர், முதலமைச்சரோடு வந்தார் என்று சொல்லக் கூடாது.



யுலகமலை யாமை  = உலகம் மலையாமை?  உலகமே மலைக்கும் படி சொல்லக் கூடாது. மலைத்தல் என்றால் , 'இது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று திகைக்க வைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி ஒரு பெரிய பொருளை  விளங்கச் செய்ய வேண்டும்.

விழுமியது பயத்தல்  = சிறப்பானவற்றை சொல்ல வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை சொல்கிறோம் என்றால், இந்த வருடம் என்ன சாதித்தோம் என்று சொல்ல வேண்டும், என்ன புதிதாக செய்தோம் என்று சொலல் வேண்டும்.. ஒரு பொருளை விற்கிறோம் என்றால், அந்தப் பொருளின் சிறப்பு என்ன என்று சொல்ல வேண்டும்.

விளங்குதா ரணத்ததாகுதல்  = விளங்கு உதாரணத்து ஆகுதல். அதாவது, கடினமான ஒன்றை எளிய உதாரணம் மூலம் சொல்லி விளக்க வேண்டும்.

னூலிற் கழகெனும் பத்தே. = நூலினிக்கு அழகெனும் பத்தே. இந்த பத்தும் ஒரு நூலுக்கு அழகு சேர்ப்பவை.

நூல் என்றால் நூலோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. பேச்சு, presentation என்று  அதை நீட்டிக் கொள்ளலாம்.

அடுத்த முறை பேசுவதற்கு முன்போ, ஏதாவது ரிப்போர்ட் அனுப்பும் முன்போ, presentation தருவதற்கு முன்போ, இந்த 10 விதிகளும் கடை பிடிக்கப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒவ்வொரு தடவையும் இவற்றைக் கொண்டு சரி  பார்த்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் அழகாக எழுதுவது என்பது தானே வந்து விடும்.


சொன்னால் மட்டும் போதாது. அழகாகவும் சொல்ல வேண்டும்.

இது நல்லா இருக்கா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_73.html

Tuesday, December 31, 2019

நன்னூல் - எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும்?

நன்னூல் - எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும்?


நீங்கள் இது வரை படித்த புத்தகங்களின் பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். இனி படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கும் பட்டியலையும் தயார் செய்து கொள்ளுங்கள். புத்தகங்கள் என்றால் படிக்கும் எல்லாமே இதில் அடங்கும். ஆடியோ புத்தகங்கள், ப்ளாகுக்குகள், மின் வடிவில் உள்ள புத்தகங்கள் எல்லாம் இதில் அடங்கும்.

எதற்காக ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும். எந்த புத்தகம் என்றாலும் சரி. அதைப் படிப்பதற்கு ஒரு நோக்கம் வேண்டும் அல்லவா?


பொழுது போக்க என்று படிக்கலாம்.

தேர்வு எழுதப் படிக்கலாம்.

என்னதான் இருக்குனு தெரிந்து கொள்ள படிக்கலாம்.

நம்மவர்கள் நான்கே நான்கு நோக்கம் தான் ஒரு புத்தகத்தின் பயன் என்கிறார்கள்.

அதாவது, அறம் , பொருள், இன்பம், வீடு பேறு இந்த நான்கை அடையத்தான் புத்தகம் எழுத வேண்டும் என்று சட்டம் வைத்தார்கள்.

இதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக புத்தகம் எழுதக் கூடாது.

தான் பணம் சம்பாதிக்க, தனக்கு புகழ் வேண்டி, வேறு யாரையாவது துதி செய்ய, அரசியல் செல்வாக்கு பெற என்று புத்தகம் எழுதக் கூடாது. அப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கவும் கூடாது.

ஒரு நல்ல புத்தகம் என்றால் அறத்தை போதிக்க வேண்டும். அற வழியில் பொருள் ஈட்ட சொல்லித்தர வேண்டும். அப்படி ஈட்டிய பொருளை அற வழியில் இன்பம்  துய்க்க வழி செய்ய வேண்டும்.   பின் அந்த இன்பத்தையும் கடந்து வீடு பேறு அடைய  வழி செய்ய வேண்டும்.

பாடல்

அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே. (சூத்திரம் 10)


பொருள்


அறம் = அறம்

பொருள் = பொருள்

இன்பம் = இன்பம்

வீடடைதல் = வீடு அடைதல்

நூற் பயனே = நூலின் பயன் ஆகும்

ஒரு நூலைப் படித்தால் இந்த பயன்கள் விழைய வேண்டும்.

அப்படிப்பட்ட நூல்களை, (ப்ளாகுகளை, மின் நூலகங்களை, ஒலி நூல்களை) கண்டு பிடித்துப் படியுங்கள்.

கண்டவற்றையும் படித்து நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்காதீர்கள்.

பலன் இல்லாமல் ஒரு காரியமும் செய்யக் கூடாது.  வாசிப்பதின் பலன் இந்த அறம் , பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு என்பதாகும்.

எதையும் வாசிக்கத் தொடங்குமுன் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_31.html

Friday, December 20, 2019

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7


நூற்கள் மூன்று வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவது "முதல் நூல்".

முதல் நூல் என்றால் என்ன?

அதற்கு விடை காண்பதற்கு முன்னால், எதற்காக பொதுவாக நூல் எழுதுகிறார்கள் என்று யோசிப்போம்.

தன் அறிவை காட்டிக் கொள்ள, பணம் சம்பாதிக்க, புகழ் அடைய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆசிரியன் நூலை எழுதுகிறான் என்றால் அவன் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவன் படித்த புத்தகங்கள், அவனைப் பாதித்த நிகழ்வுகள் இவற்றால் உந்தப்பட்டு ஒரு நூலை எழுதுகிறான்.

இவை எதனாலும் பாதிக்கப் படாமல், தான் செய்த வினைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அதன் பின் தோன்றிய தெள்ளிய அறிவில் இருந்து எழுதுவது முதல் நூல் எனப்படும்.


பாடல்

அவற்றுள் ,வினையி னீங்கி விளங்கிய வறிவின்முனைவன் கண்டது முதனூ லாகும்


பொருள்


அவற்றுள் , = அந்த மூன்று வகையான நூல்களுள்

வினையி னீங்கி = தான் செய்த வினைகளில் இருந்து நீங்கி, விடுபட்டு

விளங்கிய வறிவின் = விளங்கிய அறிவின்

முனைவன் = முயற்சி உடையவன்

கண்டது முதனூ லாகும் = கண்டது முதல் நூலாகும்

நாம்    விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாம் செய்த வினைகள் நம்மை பற்றி தொடரும்.

அந்த வினைப் பயன்களில் இருந்து விடுபடுவது என்பது எளிய காரியம் அல்ல.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்பார் மணிவாசகப் பெருந்தகை.

வினை ஓய்ந்த பின் பிறக்கும் நூல், முதல் நூல்.

இதற்கு இலக்கணம் செய்த பெரியவர்கள்  சொல்லுகிறார்கள், முதல் நூல் என்பது  இறைவன் , உயிர்களுக்கு அளித்த நூல் என்று.

இறைவனுக்கு ஒப்பானவர்கள் எழுதிய நூல் என்று கொள்ளலாம்.

எனவே தான்,  திருக்குறள் செய்த வள்ளுவரை "தெய்வப் புலவர்" என்கிறார்.

பெரிய புராணம் செய்த சேக்கிழார் பெருமானை "தெய்வச் சேக்கிழார்" என்கிறோம்.

அந்தக் கால நூல்களை பார்த்தால் , அதில் "தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச் செய்த " என்று போட்டிருக்கும்.

அவர்களின் அருள் அந்த நூல் மூலம் வெளிப்பட்டது.

நீங்களும் நானும் எழுதினால் என்ன போடலாம் ?

"...பொருளிச் செய்த " என்று வேண்டுமானால் போடலாம்.

மற்றவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று யார் நூல் எழுதுகிறார்கள்?

திருக்குறள், கீதை, பெரிய புராணம், தேவாரம், பிரபந்தம் போன்றவை முதல் நூல்கள்.

அவை வெளிப்பட்ட நூல்கள்.  எந்த ஒரு காரணம் பற்றியும் வந்தவை அல்ல.

நாம் செய்த புண்ணியம், நம் தாய் மொழியில் பல முதல் நூல்கள் உள்ளன.

இது வரை படிக்க நேரம் இல்லாவிட்டாலும், இனியாவது நேரம் ஒதுக்கிப் படிக்க முயல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2019/12/6_20.html


Wednesday, December 18, 2019

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6



ஒரு உணவு விடுதிக்குப் போகிறோம். அது சைவ விடுதியா, அசைவ விடுதியா, வடநாட்டு உணவகமா/தென் நாட்டு உணவகமா/ சைனீஸ் உணவகமா என்று தெரிந்தால், அங்கே என்ன கிடைக்கும் என்று நமக்குத் தெரியும் அல்லவா? ஒன்றும் தெரியாமல் உள்ளே போய்விட்டு, "ஐயோ, இது அந்த மாதிரி உணவகமா? " என்று திரும்பி வருவதை தவிர்க்கலாம்.

அது போல,

பலவிதமான நூல்கள் உள்ளன. பாடப் புத்தகம், நாவல், தின, வார, மாத இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழி, அறிவியல், புவியியல், கணிதம், விளையாட்டு, மதம் என்று அனைத்து துறைகளிலும் நூல்கள் இருக்கின்றன.

இந்த நூல்களை எப்படி வகைப் படுத்துவது ? ஒரு நூல் எந்த வகை நூல் என்று அறிந்து கொண்டால், அதன் தன்மை நமக்கு புரிபடும்.

நூலின் வகை தெரிந்தால், அதில் என்ன இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள அத்தனை நூல்களையும் மூன்று விதமாக பிரிக்கலாம் அல்லது மூன்று பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்கிறது நன்னூல்.

அவையாவன, "மூல நூல், வழி நூல், சார்பு நூல்" என்பதாகும்


பாடல்

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் . (சூத்திரம் 5)


பொருள்


முதல் = முதல் நூல்

வழி = வழி நூல்

சார் = சார்பு நூல்

பென  = என்று

நூன்மூன் றாகும்  = நூல்கள் மூன்று வகைப்படும்

சரி. அது என்ன முதல், வழி, சார்பு ?

மேலும் பார்க்க இருக்கிறோம்.


(என் குறிப்பு - தமிழ் இலக்கணம் மிக சுவையானது. ஒரு இலக்கியம் படிப்பது போல  படிக்கலாம். இருந்தும், பலருக்கு இது சலிப்பைத் தரலாம். உங்கள் எண்ணம்  என்ன என்று comment பகுதியில் பகிர்ந்து கொண்டால் மேலும் எழுதுவது பற்றி முடிவு எடுக்க  எளிதாக இருக்கும். நன்றி)

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/6.html





Tuesday, December 17, 2019

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பாயிரம் என்றால் என்ன என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அந்த பாயிரம் இரண்டு வகைப்படும்.


"பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே ."

அதாவது, பாயிரம் என்பது பொதுப் பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்று இரண்டு வகைப்படும்.


ஒரு நூலை எழுதும் ஆசிரியன், இந்த இரண்டையும் எழுத வேண்டும். அந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள், பாயிரத்தை மட்டும் படித்தால் போதும், அந்த நூல் தங்களுக்கு ஏற்றதா அல்லது இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும்.

பொதுப் பாயிரம் என்றால் என்ன?

பவணந்தியார்  சொல்கிறார்.

பாடல்

நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் .


பொருள்

நூலே = அந்த புத்தகத்தின் வரலாறு, தன்மை, நோக்கம்

நுவல்வோன் = நூல் எழுதிய ஆசிரியனின் தகுதி, திறமை, அனுபவம் போன்றவை.

நுவலுந் திறனே = ஆசிரியனின் சொல்லும் திறமை.

கொள்வோன் = அந்த நூல் யாருக்கு என்று எழுதப் பட்டது

கோடற் கூற்று = மாணவன் அந்த நூலை எப்படி படிக்க வேண்டும்

ஐந்தும் = இந்த ஐந்தும்

எல்லா நூற்கு மிவை = எல்லா நூலுக்கும் இவை

பொதுப் பாயிரம் . = பொதுவானது

இந்த ஐந்தும் எல்லா நூலுக்கும் இருக்க வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், இவை இருந்தால் இரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு சுலபமாக இருக்கும்.

உதாரணமாக

"இந்த நூல் பொருளாதாரம் பற்றிய ஒரு அறிமுக நூல். இதை எழுதிய ஆசிரியர் பொருளாதாரத்தில் முனைவர் (doctorate) பட்டம் பெற்றவர். பல பல்கலை கழகங்களில் விரிவுரையாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணி புரிந்து வருபவர். இதற்கும் பொருளாதாரம் பற்றி 10 நூல்கள் எழுதி உள்ளார். இந்த நூல் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது....."

இது பாயிரத்தின் ஒரு வகை. இப்படி இருந்தால் ஒரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு எளிதாக இருக்கும்?

நமக்குத் தேவை அல்லாத, அல்லது பொருந்தாத புத்தகத்தை வாங்குவதனால், வீணான பண விரயம் மட்டும் அல்ல, அதை படிப்பதின் மூலம்  நம் நேரமும் விரயம் ஆகும். அதை படிக்கும் நேரத்தில் இன்னொரு நல்ல நூலை படித்து இருக்கலாம். அதுவம் போச்சும்.

மற்றொன்று, இன்று ஒரு நூலை பார்த்து அதை நகல் எடுத்த மாதிரி எழுதும் போக்கு இருக்கிறது.  இன்னொருவரின் கற்பனையை, உழைப்பை தன்னது மாதிரி  எடுத்து எழுதி விடுகிறார்கள். நூல் ஆசிரியனின் தன்மை தெரிந்தால் அதை ஓரளவுக்கு நாம்  தடுக்க முடியும். Plagiarism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

மற்றது, தவறானவற்றை எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள். மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று  வெளிப்படையாக சொல்வது கிடையாது. மலிவான செய்திகளை, மலிவான நோக்கத்தோடு எழுதுபவர்கள் தங்களை ஏன் வெளிக் காட்டிக் கொள்ளப் போகிறார்கள்?

பொதுப் பாயிரம் என்பது ஒரு நூலின் முழுத் தன்மையையும் நமக்கு ஒரு சில பக்கங்களில்  தந்து விடும்.

ஒரு நூலுக்கு இலக்கணம் வகுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல் அந்த மொழியில் வந்திருக்க வேண்டும்?    அதில்  நல்ல நூல் எது, அல்லாதது எது   இனம் கண்டு, ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் என்றால்  இந்த மொழியின் தொன்மை, ஆழம்,வீச்சு  பற்றி   நாம் எவ்வளவு பெருமை படலாம்.

நம் பெருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/5.html


Friday, December 13, 2019

நன்னூல் - பாயிரம் - பாகம் 3

நன்னூல் - பாயிரம் - பாகம் 3


ஒரு நல்ல நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் சொல்கிறது. ஒரு நல்ல நூலின் கூறுகள், அல்லது பகுதிகள் என்ன என்ன என்று பட்டியல் தருகிறது. அவற்றின் மூலம், அந்த புத்தகம் நமக்குத் தேவையா இல்லையா, யார் இதைப் படிக்கலாம் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்த கூறுகள் அடங்கிய பாடலை முதலில் பார்த்தோம். அது கீழே உள்ளது.


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

அதில் உள்ள முதல் வரி 

"நூலின் இயல்பே நுவலின் இரு பாயிரம் தோற்றி"

அது என்ன இரு பாயிரம் ?

பாயிரம் என்பது ஒரு நூலுக்கு முன்னுரை போல. அப்படிச் சொன்னால் போதுமா ? சரியான விளக்கம் வேண்டும் அல்லவா.

பாயிரம் என்றால் என்ன என்று சொல்லுகிறார் பவணந்தியார் 

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பது பாயிரம். 

இது என்னடா, வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், அதை விட கடினமான வார்த்தைகளில் அர்த்தம் சொன்னால் என்ன செய்வது என்று திகைக்க வேண்டாம். 

எளிமைப் படுத்துவோம்.

பாடல் 

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் .

பொருள் 


முகவுரை = நூலின் முன் பகுதி. முதலில் நூலை நமக்கு அறிமுகப் படுத்தும் பகுதி. அதை நூல்முகம் என்றும் கூறுவார்கள். 

பதிக = ஒரு நூலில் பொதுவான மற்றும் சிறப்பான பகுதிகள்  என்னென்ன என்று எடுத்துக் கூறுவது 

மணிந்துரை = அணிந்துரை = நூலின் சிறப்பை பற்றிக் கூறுவது 

நூன்முகம் =அல்லது முகவுரை. இதை புனைந்துரை என்றும் கூறுவர்.


புறவுரை = நூல் எதைப் பற்றி சொல்லாது என்று சொல்வது. அதாவது, இந்த நூல் எந்த எல்லை வரை போகும் என்று கூறுவது. 

தந்துரை = நூலில் இல்லாத சிலவற்றை பொருள் விளங்க வேண்டி, அவற்றை விளக்கிக் கூறுவது. உதாரணமாக, ஒரு இயற்பியல் (physics ) புத்தகத்தில் சில வேதியல் (chemistry ) பற்றி கூறுவது. அது இயற்பியலுக்கு சம்பந்தம் இருப்பதால். 

புனைந்துரை = நூல் முகம் 

பாயிரம்  = இவையே பாயிரம் எனப்படும். 


அதாவது நூலின் நோக்கம், அதன் சிறப்பு, அதன் எல்லை, அது எதை பற்றி எழுதப் பட்டது, என்று முதலில் கூறுவது பாயிரம்.

பாயிரத்தைப் படித்தாலே, அந்த நூலைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் தோன்றும்.

இது நமக்கு ஏற்ற நூல் தானா, இதை நாம் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.

முழு நூலையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதாக தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வ்ளவு நேரம் மிச்சமாகும் என்று நினைத்துப் பாருங்கள்?

ஒரு நூலின், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து தந்து இருக்கிறார்கள்.

அடுத்த முறை ஏதாவது ஒரு புத்தகம் வாங்க வேண்டும் நினைத்தால், அதன் முன்பகுதியைப் படியுங்கள்.  இதில் சொன்ன எல்லாம் அதில் இல்லாமல் போகலாம். ஆனால், நமக்கு ஒரு பிடி கிடைக்கும்.

ஆங்கிலத்தில் Foreward கூறுவார்களே அது.

சரி, பாயிரம் என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "இரு பாயிரம்" ?

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_13.html

Tuesday, December 10, 2019

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு - பாகம் 2

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு  - பாகம் 2


ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் என்ன? ஒரு நூல் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வழி வகுத்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

இரண்டு கண், ஒரு மூக்கு, இரண்டு காது, ஒரு வாய், அதில் 32 பற்கள் என்று ஒரு வரை முறை இருக்கிறது அல்லவா?

அது போல ஒரு நூலின் வரை முறை என்ன என்று சொல்கிறார் பவணந்தியார்.

பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பொருள்

நூலி னியல்பே = நூலின் இயல்பு, அதாவது தன்மை

நுவலின்= கூறுவது என்றால்

ஓரிரு = ஒன்று அல்லது இரண்டு

பாயிரந் தோற்றி = பாயிரம் கூறி

மும்மையி னொன்றாய் = மூன்று வகை நூல்களில் ஒன்றாக

நாற்பொருட் பயத்தோடு = நான்கு  பயன்களைத் தந்து

எழுமதந் தழுவி = ஏழு மதங்களை தழுவி

ஐயிரு குற்றமு மகற்றி = பத்து விதமான குற்றங்களை நீக்கி

அம் மாட்சியோடு  = அந்த பாங்கோடு

என் நான்கு உத்தியின் =  32 (8 x 4) உத்திகளோடு

ஓத்துப் படலம் = ஓத்துப் படலம்

என்னு முறுப்பினிற் = என்ற இரு உறுப்புகளைக் ஒண்டு

சூத்திரங் = சூத்திரம்

காண்டிகை = காண்டிகை

விருத்தி யாகும் = விருத்தியாகும்

விகற்ப = விகற்பம்

நடை பெறுமே . = பெற்று நடை தொடரும்

ஒரு நூல் என்றால் இத்தனையும் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் நமக்கு ஒன்றும் புரியவில்லை.

இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லையே.

நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர், ஒவ்வொரு வரியையும் பின்னால் விளக்குகிறார்.

அனைத்தையும் படிக்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வரிக்கும் ஒரு சூத்திரம் எழுதி இருக்கிறார்.

எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார்கள்.

தமிழ் படிப்பதை விடுங்கள், அதில் ஒரு நூலை படித்து முடிக்கவே ஒரு ஆயுள் காலம் போதாது.  இதில் மற்றவற்றை படிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/2.html


Sunday, December 8, 2019

நன்னூல் - ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

நன்னூல்  -  ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

இப்போதெல்லாம் கோடிக் கணக்கில் புத்தகங்கள் வருகின்றன. நாள் இதழ், வார இதழ், மாத இதழ், நாவல்கள்,கவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள், அறிவியல், வரலாறு, விளையாட்டு, கணிதம், சமையல் என்று எல்லா துறைகளிலும் நூல்கள் வருகின்றன. 

எதைப் படிப்பது, எதை விடுவது? 

இருக்கும் நாட்களோ கொஞ்சம். அதில் ஆயிரம் வேலை இருக்கிறது. இதில், படிப்பதற்கு என்று உள்ள நேரம் மிக மிகக் குறைவு. அந்த நேரத்தில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் தேர்ந்து எடுக்கும் நூல்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?

சிறந்த நூல் என்றால் என்ன? அதன் இலக்கணம் என்ன? எப்படி சிறந்த நூலை தேர்ந்து எடுப்பது?

ஒரு புத்தகத்தை எடுத்தால் இது நமக்கு உதவுமா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது? நாம் கண்டு பிடிக்க அந்த நூல் ஆசிரியர், அந்த நூலை பதிப்பித்தவர் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? 

இதை எல்லாம் யோசித்து அதற்கு முறை செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 

நன்னூல் என்ற இலக்கண நூலில் இருக்கிறது.

படிக்கும் ஆர்வம் உண்டு என்றால், இந்த blog இந்த comment பகுதியில் "yes" அல்லது  "ஆமாம்" என்று  type செய்து "post it " பட்டனை அழுத்தவும்.

உங்கள் பேரைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால், you can post as Annonymous.

எத்தனை பேருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஒரு சின்ன  முயற்சி இது. அவ்வளவுதான். 

Wednesday, December 4, 2019

கவிதையின் இலக்கணம் - நன்னூல்

கவிதையின் இலக்கணம் - நன்னூல் 


கவிதை  என்றால் எப்படி இருக்க வேண்டும்? எது  கவிதை?

இன்று புதுக்கவிதை, மரபுக் கவிதை என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். வார்த்தைகளை மடக்கிப் போட்டு, இது தான் கவிதை என்கிறார்கள்.

யாப்பு இலக்கணத்தில் அமைந்து விட்டால் மட்டும் கவிதை என்று சொல்ல முடியுமா?

நன்னூல் சொல்கிறது கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று.

"சில சொற்களில், பலவிதமான பொருள்களை, சிறப்பான ஒரு கண்ணாடியில், துல்லியமாக காட்டுவது போல திடமாக, நுட்பமாக சிறப்பாக சொல்வது கவிதை"

பாடல்

சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்

பொருள்

சில்வகை எழுத்தில் = சில எழுத்துகளில் (சொல் கூட இல்லை, எழுத்தில்)

பல்வகைப் பொருளைச் = பல விதமான பொருளை

செவ்வன் = சிறப்பான

ஆடியிற் = கண்ணாடியில்

செறித்தினிது = நுணுக்கமாக அழகாக

விளக்கித் = விளக்கித்

திட்ப = திடமாக

நுட்பஞ் = நுட்பமாக

சிறந்தன = சிறந்த வழியில் சொல்வது

சூத்திரம் = சூத்திரம் அல்லது கவிதை


அது என்ன கண்ணாடி?

ஒரு பெரிய மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை சற்று தூரத்தில் நின்று ஒரு சின்ன கண்ணாடியில் முழுவதும் பார்க்க முடியும். அந்தக் கண்ணாடி தெளிவாக இருந்தால், மரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் காண முடியும். கண்ணாடி என்னவோ சின்னதுதான். ஆனால், பெரிய மரத்தை அது தன்னுள் அடக்கிக் காட்டுகிறது.

சுருக்கி மட்டும் அல்ல, நுணுக்கங்களையும் தெளிவாக காட்டும்.

அது போல, கவிதை பெரிய விஷயங்களை சில சொற்களில் தெளிவாக சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல, கவிதை எதைச் சொல்ல வருகிறதோ, அதை உறுதியாக சொல்ல வேண்டும் . குழப்பக் கூடாது.

நுட்பமாகச் சொல்ல வேண்டும். உணர்வுகளை, அறத்தை நுட்பமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வளவும் இருந்தால் மட்டும் போதாது, கேட்கவும் இனிமையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, அது சிறப்பாக இருக்க வேண்டும்.

கவிதை என்றால் அப்படி இருக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_4.html

Wednesday, August 7, 2019

நன்னூல் - எப்படி பேச மற்றும் எழுத வேண்டும்

நன்னூல்  - எப்படி பேச மற்றும் எழுத வேண்டும் 



எப்படி பேச வேண்டும் தெரியுமா?

அட, இது தெரியாமலா இத்தனை வருடம் பேசிக் கொண்டிருக்கிறோம். நல்லா தெரியுமே, விட்டா நாள் கணக்கா பேசுவேனே என்று பலர் நினைக்கலாம்.

பேசுவது, எழுதுவது, உணர்ச்சிகளை, செய்திகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை.

நமக்கு வரும் பல சிக்கல்களுக்கு காரணம் நமக்கு எப்படி பேசுவது என்று தெரியாமல் இருப்பதுதான்.

நன்னூல்  நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.

நாம், நம் மனதில் உள்ளவற்றை வெளிப் படுத்தும் போது, அதில் உள்ள குறைகள் என்ன என்று பட்டியல் போட்டு அவற்றை விலக்க வேண்டும் என்று கூறுகிறது.

நன்னூல் கூறியது என்னவோ எழுத்தில் வரும் குற்றம் பற்றித்தான் என்றாலும், அதை நாம் நீட்டித்து பேச்சில் வரும் குற்றத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை அறிந்த பின், அடுத்த முறை நீங்கள் டிவி பார்க்கும் போது கவனியுங்கள், அதில் எவ்வளவு குற்றம் இருக்கிறது என்று தெரியும்.

பத்துவிதமான குற்றங்களை நன்னூல் பட்டியல் போடுகிறது.

பத்துதானா என்று கேட்டால், இல்லை. அதற்கு மேலேயும் இருக்கும். பெரிய குற்றங்களை  அது எடுத்துச் சொல்கிறது. இவற்றை நீக்கினாலே பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும். மற்றவற்றை நாமே சரி செய்து கொள்ளலாம்.

இன்று நம்மில் பலர் அலுவலக விஷயமாக பல presentation (ppt) செய்ய வேண்டி வரும், பல விதமான ரிப்போர்ட் கள் அனுப்ப வேண்டி இருக்கலாம், பல விதமான கடிதங்கள் எழுத வேண்டி இருக்கலாம், இப்படி எழுத்து என்று எங்கு வந்துவிட்டாலும், நன்னூல் சொல்லும் குற்றங்களை களைந்து எழுதப் பழகிவிட்டால் அது நன்றாக இருக்கும்.


அது என்ன பத்து குற்றங்கள்?

பாடல்

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொ்ற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே


பொருள்


குன்றக் கூறல் = குறைத்துக் கூறுவது. எதையும் முழுவதுமாக சொல்லுவது இல்லை. அரைகுறையாக சொல்லுவது. இது முதல் குற்றம். சொல்லுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ முன் சிந்திக்க வேண்டும். என்ன சொல்லப் போகிறோம், என்று சிந்தித்தது. கேட்பவர்களுக்கு முழுமையாக புரிய வேண்டும்.

மிகைபடக் கூறல் = வள வள என்று தேவைக்கு அதிகமாக கூறுவது. பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டியதை அரை மணி நேரம் இழுப்பது. நேரம் மட்டும் அல்ல, விளைவுகளை மிகைப் படுத்திக் கூறுவது. அந்த ஷேர் இல் போட்டால்  30  percent வருமானம் கிடைக்கும் என்று மிகைப் பட கூறுவது. நாலு நாள்  ஆகும் என்றால், "ஒரே நாளில் செய்து விடுவேன்" என்று மிகையாகக் கூறுவது.



கூறியது கூறல் = சொன்னதையே திருப்பி திருப்பி கூறுவது. ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு புதிய செய்தி இருக்க வேண்டும்.


மாறுகொளக் கூறல் = முன்னுக்கு பின் முரணாக கூறுவது.  "அந்தப் பொண்ணை உன் மகனுக்குப் பார்க்கலாம். நல்ல பொண்ணு தான். ஆனா, அக்கம் பக்கத்தில ஒரு மாதிரி பேசிக்கிறாங்க". இப்படி சொன்னால் என்ன அர்த்தம். பொண்ணு நல்ல பொண்ணா இல்லையானு குழப்பம் வரும் இல்லையா.



வழூஉச்சொ்ற் புணர்த்தல் = தவறான சொற்களை சேர்த்துச் சொல்லுவது. சிறந்த சொற்களை தேர்ந்து எடுத்து பேச/எழுத வேண்டும். சில சமயம் சொற்கள் நல்லவையாக இருக்கும் ஆனால், உபயோகப் படுத்திய விதம் தவறாக இருக்கும்.  எந்த சூழ்நிலையில் , எந்த சொல்லை சொல்ல வேண்டும் என்று யோசித்து சொல்ல வேண்டும்.



மயங்க வைத்தல் = கேட்பவர்களை குழம்ப வைப்பது. தெளிவு பிறக்கும் படி பேச வேண்டும். "நல்லாத்தான் சொன்னாரு, ஆனா என்ன சொன்னாருனே விளங்கல" அப்படினு மத்தவங்க சொல்லக் கூடாது.

வெற்றெனத் தொடுத்தல் = சொல்ல வந்த செய்திக்குப் பொருந்தாத வெற்று , ஆடம்பர சொற்களை பயன் படுத்துதல். சில அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டிருக்கலாம். ஆடம்பரமாக இருக்கும் அவர்கள் பேசுவது. ஆனா, சொல்ல வேண்டிய விஷயம்  இருக்காது அந்தப் பேச்சில்.

மற்றொன்று விரித்தல் = சொல்லவந்ததை விட்டு விட்டு மற்றொன்றைப் பற்றி சொல்லுவது. சொல்ல வந்ததை விட்டு விலகக் கூடாது.


சென்றுதேய்ந் திறுதல் = சிலர் ஆரம்பத்தில் நல்லா ஆரம்பிப்பார்கள். ஆனா, போக போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிப்பார்கள். சொல்ல வந்ததில் முழு கவனம் இருக்க வேண்டும். கேட்பவர்கள் கொட்டாவி விடக் கூடாது. சுவாரசியம் குன்றாமல் சொல்ல வேண்டும்.

 நின்றுபயன் இன்மை = பயன் இல்லாத சொற்களை பேசக்  கூடாது. கேட்பவரின், வாசிப்பவரின் நேரம் பொன் போன்றது. அதை வீணடிக்கக் கூடாது.

என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே = என்ற இவை பத்து (இரண்டு ஐந்து) குற்றம் நூலுக்கே

அலுவலகத்தில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு ஈமெயில், ரிப்போர்ட், பவர்பாயிண்ட் presentation எல்லாம் இந்த குற்றம் இல்லாம ல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு checklist மாதிரி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எழுதி முடித்தபின், இந்த குற்றங்கள் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.  இருந்தால் அவற்றை களையுங்கள் .

முக்கியமாக, பிள்ளைகளுக்கு சொல்லித் தாருங்கள்.

எந்தப் பள்ளியில் நன்னூல் சொல்லித் தரப் போகிறார்கள் ? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தான்   சொல்லித் தர வேண்டும்.

அவர்களுக்கு நன்னூலில் ஆர்வம் உண்டாக்குங்கள்.

நன்னூலில் இப்படி பல நல்ல கருத்துள்ள பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப்  படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_7.html

Sunday, September 1, 2013

நன்னூல் - பாடம் பயிலும் முறை

நன்னூல் - பாடம் பயிலும் முறை 


எப்படி பாடம்  படிக்க வேண்டும் ?

பாடம் பயிலும் முறையை சொல்கிறது நன்னூல்


பாடல்

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்

பொருள்


Sunday, August 25, 2013

நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை

நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை 




ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப .

கல்வியை எப்படி கற்றுத் தர வேண்டும் என்று சொல்கிறார் பவணந்தியார்.

கல்வி கற்றுத் தரும் ஆசிரியனின் தகுதி, சொல்லிக் கொடுக்கும் இடம், மாணவனின் அறிவுத் திறம் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது கல்வி கற்றுத் தரும் முறை.

முதலில் சீர் பிரிப்போம்.


ஈதல் இயல்பு இயம்பும் காலை 
காலமும் இடமும் வால் இதனை நோக்கி 
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி 
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைந்து 
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து 
கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள 
கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப 

பொருள்


ஈதல் = கல்வி கற்றுத் தருதல்  என்பது தானம் தருவது போன்றது. அது வியாபாரம்  அல்ல. வேண்டுபவர்களுக்கு தானமாகக் கொடுப்பது ஈதல் எனப்படும்.

இயல்பு = அது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாக இருக்க வேண்டும்.

இயம்பும் காலை  = எப்படி என்று சொல்லுவது என்றால்


காலமும் = கல்வி கற்க சிறந்த காலத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.

இடமும் = படிக்கும் இடம் நன்றாக இருக்க வேண்டும்

வால் இதனை நோக்கி = இவற்றை நோக்கி

சிறந்துழி இருந்து = இதில் சிறந்தவற்றை தேர்ந்து எடுத்து

தன் தெய்வம் வாழ்த்தி = (ஆசிரியனின்) குல தெய்வத்தை வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் = எதை சொல்லிக் கொடுக்கப் போகிறோமோ அதன் பொருளை

உள்ளத்து அமைந்து = மனதில் அமைத்து....புத்தகத்தை பார்த்து சும்மா வாசிக்கக் கூடாது. ஆசிரியனின் மனதில் அந்த பாடமும், அதன் பொருளும் இருக்க வேண்டும். புத்தகம் , நோட்ஸ் இல்லாமல் பாடம் நடத்த வேண்டும்.

 
விரையான் = அவசரப் படக் கூடாது

வெகுளான் = மாணவனுக்கு புரியவில்லை என்றால், கோபிக்கக் கூடாது. மாணவன் தவறாக புரிந்து கொண்டாலோ, தவறு செய்தாலோ, அவன் மேல் கோபம் கொள்ளக் கூடாது

விரும்பி = விருப்பத்துடன் சொல்லித் தர வேண்டும். ஏதோ வாங்கின சம்பளத்திற்கு வேலை என்று இருக்கக் கூடாது

முகமலர்ந்து = மலர்ந்த முகத்துடன்

கொள்வான் கொள் வகை அறிந்து = மாணவனின் அறியும் திறம் அறிந்து

அவன் உள்ளம் கொள்ள = அவன் உள்ளத்தில் பாடம் ஏறும் வண்ணம்

கோட்டம் இல் மனதில் = கோட்டம் என்றால் வளைவு. குற்றம் இல்லாத மனத்தோடு

 நூல் கொடுத்தல் என்ப = நூலை சொல்லிக் கொடுத்தல் முறை

இன்றைய காலக் கட்டத்தில் இது எல்லாம் முழுவதுமாக முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை முயற்சிக்கலாம்.

எல்லா ஆசிரியருக்கும் இதை முதலில் சொல்லித் தர வேண்டும்.


எப்படி இருந்த இனம், இந்தத் தமிழ் இனம். எவ்வளவு சிந்தித்திருக்கிறார்கள்.



Tuesday, August 20, 2013

நன்னூல் - மாணாக்கன் தன்மை

நன்னூல் - மாணாக்கன் தன்மை 


நன்னூல்  ஒரு தமிழ் இலக்கண  நூல்.எழுதியவர் பவணந்தி  முனிவர்.

தமிழ் இலக்கணத்தை  எளிய முறையில் பாடல் வடிவில் தொகுத்து  .தரும் நூல்.

 அதில்,மாணாக்கர்களை தரம் பிரிக்கிறார் பவணந்தியார்.

முதல் இடை கடை என்று கடை என்று மூன்று நிலையாக மாணவர்களைப் பிரிக்கிறார்.


பாடல்

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.


பொருள்