Tuesday, December 10, 2019

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு - பாகம் 2

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு  - பாகம் 2


ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் என்ன? ஒரு நூல் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வழி வகுத்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

இரண்டு கண், ஒரு மூக்கு, இரண்டு காது, ஒரு வாய், அதில் 32 பற்கள் என்று ஒரு வரை முறை இருக்கிறது அல்லவா?

அது போல ஒரு நூலின் வரை முறை என்ன என்று சொல்கிறார் பவணந்தியார்.

பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பொருள்

நூலி னியல்பே = நூலின் இயல்பு, அதாவது தன்மை

நுவலின்= கூறுவது என்றால்

ஓரிரு = ஒன்று அல்லது இரண்டு

பாயிரந் தோற்றி = பாயிரம் கூறி

மும்மையி னொன்றாய் = மூன்று வகை நூல்களில் ஒன்றாக

நாற்பொருட் பயத்தோடு = நான்கு  பயன்களைத் தந்து

எழுமதந் தழுவி = ஏழு மதங்களை தழுவி

ஐயிரு குற்றமு மகற்றி = பத்து விதமான குற்றங்களை நீக்கி

அம் மாட்சியோடு  = அந்த பாங்கோடு

என் நான்கு உத்தியின் =  32 (8 x 4) உத்திகளோடு

ஓத்துப் படலம் = ஓத்துப் படலம்

என்னு முறுப்பினிற் = என்ற இரு உறுப்புகளைக் ஒண்டு

சூத்திரங் = சூத்திரம்

காண்டிகை = காண்டிகை

விருத்தி யாகும் = விருத்தியாகும்

விகற்ப = விகற்பம்

நடை பெறுமே . = பெற்று நடை தொடரும்

ஒரு நூல் என்றால் இத்தனையும் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் நமக்கு ஒன்றும் புரியவில்லை.

இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லையே.

நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர், ஒவ்வொரு வரியையும் பின்னால் விளக்குகிறார்.

அனைத்தையும் படிக்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வரிக்கும் ஒரு சூத்திரம் எழுதி இருக்கிறார்.

எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார்கள்.

தமிழ் படிப்பதை விடுங்கள், அதில் ஒரு நூலை படித்து முடிக்கவே ஒரு ஆயுள் காலம் போதாது.  இதில் மற்றவற்றை படிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/2.html


2 comments:

  1. பவணந்தியார் பாடலில் ஒண்ணுமே புரியலையே.எதற்கு இப்படி புரியாதவண்ணம் எழுதுகிறார்கள் தமிழ் புலவர்கள்,திருவள்ளுவர்,. திருமூலர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்பட? அந்த கால தமிழா அல்லது வேறு காரணமா? உங்கள் உதவி இல்லாமல் ஓரளவும் புரியாது

    ReplyDelete
  2. பழங்கால தமிழ் இலக்கிய வடிவம் தோன்றியதன் காரணம், தற்போது உள்ளதுபோல் காகிதம் அன்று இல்லை, ஆகையால் மக்கள் அறிய வேண்டிய அறநெறிகள், இனிய சொற்சுவை உடைய கதைகளை உரைநடை வடிவில் எழுதினால் மக்களிடம் கொண்டு சேர்க்க இயலாது. அவற்றை சுருக்கி பாடல் வடிவில் மாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் வேறு வேறு முறைகளில் கருத்தை சுருக்கி பாடலாக்கியதால் அவற்றை புரிந்து கொள்ள இயலவில்லை. ஆகையால் இலக்கணம் என்ற ஒன்றை உருவாக்கி, பொதுவான வரைமுறைகளை சேர்த்தனர். காலம் மாற மாற மொழியை சுருக்கி பாடல் இயற்றுவதில் மாற்றம் ஏற்பட்டது, அதற்கேற்ப புதிய புதிய இலக்கண நூல்களும் தோன்றின, சங்க இலக்கியம் பின் சிற்றிலக்கியங்கள் பின் மரபுக்கவிதை அதன்பின் புதுக்கவிதை தற்போது நவீன கவிதை (ஹேக்கூ).....

    ReplyDelete