Thursday, December 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108 



கோவிலுக்குப் போவது, இறைவனை தொழுவது, அப்படி தொழுதால் நமக்கு வேண்டியது கிடைக்கும் என்பதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத ஒன்று.

யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நான் எழுதிய பரீட்சையில் எனக்கு நிறைய மதிப்பெண் பெற்றுத் தருவார், எனக்கு வேலை வாய்ப்பை கொண்டு தருவார், என் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய ஏற்பாடு செய்வார் என்று நினைப்பதெல்லாம் ஒரு நம்பிக்கை, ஒரு மன அமைதிக்காக இருக்கலாமே அன்றி அது முழுக்க முழுக்க உண்மை என்று அதை நம்புபவர்களே கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படியே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே. நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா? எதுக்கு அனாவசியமா போய் வேண்ட வேண்டும். பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று தாய்க்குத் தெரியாதா? அம்மா என் பசிக்கு உணவு தா என்று எந்த பிள்ளையும் தாயிடம் சென்று வேண்டுவது இல்லையே.

பின் எதற்காக கோவில், இறை வணக்கம் எல்லாம்?

நம்  மனதில் சில பல அழுக்குகள் இருக்கின்றனதானே ? அழுக்கே இல்லாத மனம் யாருக்கு இருக்கிறது? கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொருந்தா காமம்,  அந்தப் பக்கம் பொறாமை, இந்தப் பக்கம் வஞ்சம், என்று ஆயிரம் மன அழுக்குகள் இருக்கின்றதானே?

அவற்றைப் போக்கும் படி இறைவனை வேண்ட வேண்டும் என்கிறார் திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில்.

இறைவனே இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத போது , நம் மன அழுக்கை நீக்க அவனை ஏன் நாட வேண்டும்?

வேண்டாம்தான். அவன் செய்கிறானோ இல்லையோ, என்னிடம் இந்த இனித்த அழுக்குகள்  இருக்கின்றன, அதை மாற்றித்தா என்று வேண்டும் போது, நமக்குள் ஒரு விழிப்புணர்வு (awareness ) ஏற்படுகிறது.

நம்மிடம் உள்ள குற்றத்தை , அழுக்கை நாம் அறிந்து கொள்ளும் போது, அதை வெளிப்படையாக  ஏற்றுக் கொள்ளும் போது,  அடுத்த கட்டம் அது தானே மாறி விடும்.

ஆங்கிலத்தில் "Awareness brings its own change" என்று சொல்லுவார்கள்.

எப்போது நமக்கு நம் குறைகள் தெரியத் தொடங்குகிறதோ, அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம்  வருகிறதோ, அப்போதே நாம் அந்த குறைகளில் இருந்து மெல்ல மெல்ல  வெளியே வரத் தொடங்குவோம்.

அதற்காகவேணும் , இறைவனைத்  தொழலாம்.அது ஒரு குறியீடு. அவ்வளவுதான்.


பாடல்

கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.



பொருள்

கள்ளம் மனம் = கள்ளம் நிறைந்த மனம். குற்றம், அழுக்குகள்  நிறைந்த மனம்.

விள்ளும் வகை  = அதில் இருந்து விடுபடும் வகை

கருதிக் = நினைத்து

கழல் தொழுவீர் = அவன் திருவடிகளைத் தொழுவீர்

வெள்ளம் = நீர், அதிகமான நீர் நிறைந்த

முது பரவைத் = பழைய கடல்

 திரை விரிய = அலை அடிக்க

கரை யெங்கும் = கரை எல்லாம்

தெள்ளும் மணி திகழும் = கொழித்துக் கிடக்கும் மணிகள் நிறைந்த

சிறு புலியூர்ச் = சிறு புலியூர்

சல சயனத் துள்ளும் = சல (நீர்) சயனத்திலும் (தூக்கத்தில்)

என துள்ளத்துளும்  = எனது உள்ளத்தின் உள்ளும்

முறைவாரை = உறைவாரை , இருப்பவரை

யுள் ளீரே. = நீங்கள் நினையுங்கள்

சிறுபுலியூர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று. 11 - ஆவது தேசம்.

நாக பட்டினத்துக்கும், மாயவரத்துக்கும் நடுவில் உள்ளது. மாயவரம் (மயிலாடுதுறை)  போனால், அங்கிருந்து ஒரு வாடகை காரில் போய் விட்டு வந்து விடலாம். சின்ன கிராமம். அழகான கோவில்.

பெருமாள் பால சயனத்தில் இருக்கும் கோலம்.

தெற்கு நோக்கிய சயனம் (இது ஒன்று, ஸ்ரீ ரங்கம் மற்றது).

திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம். பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். தேன் சொட்டும் பிரபந்தங்கள். மற்றவற்றைப் படித்துப் பாருங்கள்.

கள்ள மனம் மாறும்.

ஒரு முறை கருடனுக்கும், ஆதி சேஷனுக்கும் சண்டை வந்ததாம். பெருமாளுக்கு  சேவை செய்வதில் யார் சிறந்தவர் என்று. அந்த சண்டையை பெருமாள் இந்த த் திருத்தலத்தில் வைத்து சமரசம் செய்து வைத்தாராம்.

இங்கே ஆதி சேஷனுக்கு நில மட்டத்துக்கு அடியில் சன்னிதானம் இருக்கிறது.

ஒரு சனி ஞாயிற்றுக் கிழமை , ஒரு எட்டு போயிட்டு வரலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/108.html

1 comment: