Showing posts with label thevaaram. Show all posts
Showing posts with label thevaaram. Show all posts

Thursday, January 18, 2024

தேவாரம் - சொல்லுகேன் கேள்

 தேவாரம் -  சொல்லுகேன் கேள்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_18.html

நமக்கு என்னவெல்லாம் தேவை ?  


நிறைய செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, புகழ், பெருமை, சுற்றம், நட்பு..என்று பட்டியல் போடலாம். 


நாவுக்கரசர் சொல்கிறார், இதெல்லாம் பெரிய விடயம் அல்ல. அடைய வேண்டிய பெரிய விடயங்கள் என்னென்ன தெரியுமா?


நாம் செய்த பாவங்கள் நம்மை பற்றி நிற்கின்றன. அவை நம்மை விட்டு விலக வேண்டும். இல்லை என்றால் பாவத்தின் பலனாக துன்பம் வரும், பிறவி வரும்.


வீடு பேறு அடைய வேண்டும். திரும்பி திரும்பி பிறந்து இறந்து பிறந்து இறந்து ...இந்த சுழலில் இருந்து விடுபட வேண்டும். 


பழைய வினைகள் விட்டால் மட்டும் போதாது. புது வினைகள் எதுவும் வராமலும் இருக்க வேண்டும்.


இவை எல்லாம் முக்கியமா இல்லையா?


முக்கியம் என்றால், இவற்றை எப்படி அடைவது? அதையும் அவரே சொல்கிறார். 


"சிவனே..நீ தான் எனக்குத் துணை, உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை நான் நினைக்க மாட்டேன், புனிதமானவனே, ஆரூரா" 


 என்று போற்றுங்கள். மேற்சொன்ன எல்லாம் கிடைக்கும் என்கிறார். 


பாடல் 


பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,

         பரகதிக்குச் செல்வதுஒரு பரிசு வேண்டில்,

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்,

         சொல்லுகேன் கேள்,நெஞ்சே, துஞ்சா வண்ணம்,

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்,

         உன்னைஅல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்,

புற்றுஅரவக் கச்சுஆர்த்த புனிதா என்றும்,

         பொழில்ஆரூ ராஎன்றே போற்றா நில்லே.


பொருள் 


பற்றிநின்ற பாவங்கள் = நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கும் பாவங்கள் 


பாற்ற வேண்டில் = பாற்றுதல் என்றால் விலகுதல். அந்தப் பாவங்கள் விலக வேண்டுமானால். 


பரகதிக்குச் = பரம் என்றால் மேலான, உயர்ந்த. பரம்பரை. பரசிவம். பரமாத்மா. கதி என்றால் வழி. பரகதி, உயர்ந்த வழி. 


செல்வதுஒரு பரிசு வேண்டில் = உயர்ந்த வழியில் செல்லும் வாய்ப்பு வேண்டும் என்றால் 


சுற்றிநின்ற சூழ்வினைகள் = நம்மைச் சுற்றி நிற்கும் வினைகள், எப்போது நம்மை பற்றலாம் என்று காத்துக் கிடக்கும் வினைகள் 

 


வீழ்க்க வேண்டில் = நம்மைப் பற்றாமல் இருக்க வேண்டும் என்றால் 


சொல்லுகேன் கேள் நெஞ்சே = என் மனமே, நான் சொல்வதைக் கேள் 


துஞ்சா வண்ணம் = துஞ்சுதல் என்றால் உறங்குதல். இங்கே மறக்காமல், ஒருபோதும் விடாமால் என்று பொருள் கொள்ளலாம். 


உற்றவரும் = நமக்கு வேண்டியவர்களும், துணையானவர்களும் 


உறுதுணையும் = சிறந்த துணையும் 


நீயே என்றும் = நீதான் என்றும் 


உன்னைஅல்லால் = உன்னைத் தவிர 


ஒருதெய்வம் = மற்றொரு தெய்வம் 


உள்கேன் = உள்ளத்தால் நினைக்க மாட்டேன் 


என்றும் = என்றும் 


புற்று = புற்றில் வாழும் 


அரவக் = பாம்பை 


கச்சு ஆர்த்த = இடுப்பில் அணிந்து இருக்கும் 


புனிதா என்றும் = புனிதமானவனே என்றும் 


பொழில் = சோலைகள் சூழ்ந்த 


ஆரூரா = திருவாரூர் என்ற திருத்தலத்தில் உறைபவனே 


என்றே = என்று 


போற்றா நில்லே = போற்றி நிற்பாயாக 


நாவுக்கு அரசர் என்று இறைவனால் பட்டம் வழங்கப்பட்டவர் அப்பரடிகள்.  ஊனை உருக்கும், உயிரை உருக்கும் பாடல்கள் அவர் பாடிய தேவாரம். 


நிறைய இருக்கிறது. 


நேரம் இருப்பின், மூலத்தை தேடிப் படியுங்கள் 



Friday, December 1, 2023

தேவாரம் - பார்த்தா சிரிப்பா வருது

 தேவாரம் - பார்த்தா  சிரிப்பா வருது 


பக்தி என்பது ஏதோ எந்நேரம் பார்த்தாலும் பஜனை, பூஜை, புனஸ்காரம் செய்து கொண்டு, வாழ்கையை முழுவதுமாக நிராகரிப்பது அல்ல. வாழ்க்கையை இரசிப்பதும், அனுபவிப்பதும் பக்தியோடு சேருமா?


ஐயையோ, புலன் இன்பமா? அபச்சாரம், அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதுதானா பக்தி. 


வாழ்வின் ஒவ்வொரு இன்பத்தையும் மறுதலித்துக் கொண்டே போனால், எப்படி இருக்கும்? புலன்கள் ஒரு புறம் இழுக்கும். மறு புறம் போகாதே என்று பக்தி தடுக்கும். இந்தச் சண்டையில் யார் வென்றாலும் தோற்பது நீங்கள்தான். 


பக்தி வென்று, புலன் இன்பங்களை எல்லாம் துறந்தால், அத்தனையும் இழந்து விட்டோமே என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். 


மாறாக, புலன் இன்பங்கள் வென்று, பக்தி தோற்றால், இப்படி சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டு, பேரின்பத்தை இழந்துவிட்டேனே என்று தோன்றும். 


நம் பக்தி இயற்கையை, வாழ்வை, ஆன்மீகப் பாதையில் இருந்து பிரித்து வைப்பது இல்லை. இயற்கையை மீறி, இயற்கைக்கு எதிராக செல்வது அல்ல நம் ஆன்மிகம். இயற்கையோடு ஒன்றிப் போவது. 


அது ஒரு குளம். அந்த குளத்தின் அருகில் முடத்தாழை மரம் இருக்கிறது. அந்த மரத்தின் கிளை அந்தக் குளம் நோக்கி தாழ்ந்து இருக்கிறது. அந்தக் கிளையில் உள்ள மலரின் நிழல் குளத்தில் விழுகிறது. அந்த நிழலை குருகு என்று எண்ணி அந்தக் குளத்தில் இல்ல மீன்கள் பயந்து, தாமரை இலையின் பின்னே ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்த, அருகில் இருந்த கடலில் இருந்த முத்துக்கள் சிரித்ததாம். 


அது சரி, இந்தப் பாடலுக்கும், இதற்கு முன் சொன்ன முகவுரைக்கும் என்ன சம்பந்தம் ?


இந்த அர்த்தம் தொனிக்கும் கவிதையை எழுதியவர் திருஞான சம்பந்தர். சிவ பெருமான் மேல் எழுதிய கவிதை. 


 பாடல் 


விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்  தண்புறவில்,

மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,

தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post.html


(Please click the above link to continue reading)


விடம் = விஷம் 


உண்ட = சாப்பிட்ட 


மிடற்று = கழுத்தை, தொண்டையை உடைய 


அண்ணல் = பெரியவன் 


வெண்காட்டின் = திரு வெண்காடு என்ற தலத்தில் 


 தண்புறவில் = குளிர்ந்த வெளியில் 


மடல் = பூவிதழ் 


விண்ட  = விரித்த 


முடத்தாழை = முடத்தாழை என்ற மரத்தின் 


மலர் = மலரின் 

 


 நிழலைக் = நீரில் விழுந்த நிழலை 


குருகு என்று = குருகு என்ற சிறு பறவை என்று எண்ணி 

,

தடம் = குளத்தில் உள்ள 


மண்டு = வாழும் 


துறைக் கெண்டை = கெண்டை மீன் 


தாமரையின்பூ மறைய = தாமரை பூ கொடியின் இலையின் கீழே சென்று மறைய 


கடல் விண்ட = கடலில் வாழும் 


கதிர் முத்தம் = ஒளிக் கதிர் வீசும் முத்துக்கள் 


நகை காட்டும் = அதைப் பார்த்து சிரிக்கும் 


காட்சியதே = காட்சியதே 


சமயக் குரவர்களில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர், குளத்தில் வாழும் மீன் நீந்திப் போவதைப் பார்த்து , இரசித்து, அது மலரின் நிழலுக்கு பயந்து இலையின் அடியில் சென்று ஒளிந்து கொள்வதாக கற்பனை பண்ணி, அதை கண்டு முத்து சிரிப்பதாக கவிதை வரைகிறார். 


இதில் பக்தி எங்கே வந்தது? 


அது தான் பக்தி, இயற்கையோடு ஒன்றிப் போவது, உலகை உள்ளபடி இரசிப்பது, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போவது...அதுதான் பக்தி. 


ஒவ்வொரு படைப்பும், ஆகச் சிறந்த ஒன்றுதான். உலகம் ஆனந்த மயமானது. அதை இரசிப்பது, அந்த ஆனந்தத்தோடு ஒன்றுவது பக்தி. 


வாழ்கையை இரசியுங்கள். எப்போது பார்த்தாலும் இல்லாத ஒன்றை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்காமல், உண்மையில் இருப்பதை கண்டு மகிழுங்கள். 


இந்த ஒரு நொடி மாத்திரமே உண்மை. நேற்றும், நாளையும் பொய்த் தோற்றங்கள். 


மரம், குளம், மீன், குருகு, தாமரை இலை...இதுதான் உண்மை. இதில் மனதை வையுங்கள். நாளைய பற்றிய கனவையும், நேற்றைய பற்றிய கவலைகளையும் விட்டு ஒழியுங்கள்.


அது என்ன விடம் உண்ட கண்டர்?


விஷத்தை எதற்கு உண்டார்? அது விஷம் என்று சிவனுக்குத் தெரியும்தானே. பின் அதை ஏன் உண்ண வேண்டும்? பின் அதை தொண்டைக் குழியிலேயே நிறுத்த வேண்டும்? 


மேலும் சிந்திப்போம்....


Saturday, November 5, 2022

தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

 தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்


ஒரு மனிதனுக்கு வரும் மிகப் பெரிய ஏமாற்றம் எது என்று கேட்டால் வயதான காலத்தில் யாரும் துணைக்கு இல்லாமல் இருப்பது. 


பிள்ளைகள், கணவன், மனைவி, சுற்றம், நட்பு எல்லாம் ஏதோ கொஞ்ச நாள் வரும் போகும். எந்நேரமும் நம் கூடவே இருக்க முடியுமா. 


காது சரியா கேட்காது, கண் பார்வை மங்கும், ஞாபகம் தப்பும், உடல் வலி குன்றும், உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாது. மிக மிக தனிமையாக உணர்வோம் 


அப்படி எல்லாம், என் பிள்ளை என் கூடவே இருப்பான், என் மனைவி என்னை அன்போடு பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், சுத்தி  முத்தி பார்க்க வேண்டும். எது எதார்த்தம் என்று புரியும். 


திருநாவுக்கரசர் சொல்கிறார்: 


"தாய், தந்தை, சுற்றம், செல்வம் இதில் எது நமக்கு நல்லது செய்யும்? நாம் இறந்த பின் நமக்கு யார் உதவுவார்கள்?  ஒருவரும் இல்லை. இடுகாட்டில் நம் உடலை தீ மூட்டி விட்டு, அது முழுவதும் எரிந்து முடிவதற்கு முன்பே வீட்டுக்குப் போய் விடுவார்கள். திரு ஆனைக்காவில் உள்ள சிவ பெருமானே,  உன் திருவடிகளைப் பற்றினால், நான் துன்பம் அற்ற நிலையை அடைவேன்" 


என்கிறார். 


பாடல் 


எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்


செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்


சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

திருவானைக் காவுடைய செல்வா என்றன்


அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



எத்தாயர் = எப்படிப்பட்ட உயர்ந்த தாயார் 


எத்தந்தை = எப்பேற்பட்ட தந்தை 


எச்சுற்றத்தார்  = எவ்வளவு உயர்ந்த சுற்றத்தார் 


எம்மாடு = எத்தனை செல்வங்கள் 


சும்மாடாம் = இவை எல்லாம் நம்மைத் தாங்குமா ?


எல்லாம்  ஏவர் நல்லார் = எதில் யாரெல்லாம் நல்லவர்கள் 


செத்தால் = நாம் இறந்தால் 


வந்து உதவுவார் ஒருவ ரில்லை  = வந்து உதவி செய்பவர் ஒருவரும் இல்லை 


சிறுவிறகால்= சிறு சிறு விறகுகளால் 


தீமூட்டிச் = நம் உடலுக்கு தீ மூட்டி 


செல்லா நிற்பர் = சென்று விடுவர் 




சித்தாய வேடத்தாய் = ஞானமே வடிவானவனே 


நீடு பொன்னித் = நீண்ட பொன்னி நதிக் கரையில் உள்ள 


திருவானைக் காவுடைய  = திரு ஆனைக்கா என்ற தலத்தில் உறைபவனே 


செல்வா = செல்வா 


என்றன் = என் 


அத்தா = தலைவனே 


உன் = உன் 


பொற்பாதம் அடையப் பெற்றால்  = திருவடிகளை அடையப் பெற்றால் 


அல்லகண்டங் கொண்ட = அல்லல் (துன்பம்) தரும் அந்த நிலையினை விட்டு அகல 


அடியேன் என்செய் கேனே. = நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்ய மாட்டேன்.


யார் இருந்து, என்ன இருந்து என்ன பயன். இறைவா உன் திருவடிகள் ஒன்றே துணை என்கிறார். 


"சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர்"  என்ற வரி விளங்க கொஞ்சம் இலக்கணம் வேண்டும். 


செல்லா நிற்பர் என்றால் செல்லாமல் நிற்பார்கள் என்று அர்த்தம் தோன்றும். சிதைக்கு நெருப்பு மூட்டிவிட்டு வீட்டுக்குப் போகாமல் அங்கேயே நிற்பார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிறது. அப்படி ஒன்றும் நடப்பது இல்லை. 


"செல்லா" என்பது செய்யா எனும் வாய்பாடு. 


வாய்பாடு என்றால் template 


சொற்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 


பெயர்ச் சொல், வினைச் சொல் என்று. 


வினைச் சொல் என்றால் செயலை குறிக்கும் சொல். 


ஒரு வினைச் சொல்லுக்கு மூன்று பெரும் பகுதிகள் உண்டு. 


பகுதி + இடை நிலை + விகுதி என்பன அவை. 


முதலில் வருவது பகுதி. இது எந்த செயல் என்று காட்டும். 


நடுவில் வரும் இடை நிலை அந்த செயல் நிகழ்ந்த காலத்தைக் காட்டும் 


இறுதியில் வரும் விகுதி யார் அந்த செயலை செய்தார்கள் என்று சொல்லும். 


உதாரணமாக:


வந்தான் என்ற வினைச் சொல்லை 


வா + த் + ஆன் 

என்று பிரிக்கலாம். 


வா என்பது வருகின்ற செயலை குறிக்கும். அது வ என குறுகியது விகாரம். 


த் இறந்த காலம் காட்டும் இடைநிலை 


ஆன் = ஆண் பால், படர்கை, விகுதி 


தமிழில் சிறப்பு என்ன என்றால் இந்த மூன்று பகுதிகளையும் தனித் தனியாக நாம் மாற்றலாம். 


உதாரணமாக

வா + த் + ஆள் என்று விகுதியை மட்டும் மாற்றினால் அது வந்தாள் என்று பெண் பாலாகிவிடும் 


வா + த் + ஆர் = என்று விகுதியை மீண்டும் மாற்றினால் அது வந்தார் என்று பலர் பாலாகிவிடும். 


வா + த் + அது = வந்தது என்றால் ஒன்றன் பாலாகிவிடும்.


இங்கே நாம் கவனிக்க வேண்டியது காலம் காட்டும் இடை நிலை. 


நிகழ் காலத்தை காட்டுவதற்கு மூன்று இடை நிலைகள் உள்ளது. 


கிறு 

கின்று 

ஆநின்று 


அது என்ன கிறு, கின்று 


வருகிறான் = வா + கிரு + ஆன் எனப் பிரியும். நடுவில் உள்ள கிரு நிகழ் காலத்தை குறிக்கும். 


வருகின்றான் = வா + கின்று + ஆன் 


இந்த இரண்டு இடை நிலைகளையும் நாம் இப்போதும் பயன் படுத்துகிறோம். 


அந்த "ஆநின்று" என்ற ஒரு இடை நிலை இருக்கிறது. 


அதை நாம் இப்போது பயன் படுத்துவது இல்லை. 


முன்பு பயன் படுத்தினார்கள். 


வருகிறான் 

வருகின்றான் 

வாராநின்றான்  = வா + ஆநின்று + ஆன் 


வராநின்றான் என்றால் வராமல் நின்றான் என்று பொருள் அல்ல. வருகிறான் என்றுதான் பொருள். கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் அதை நாம் இப்போது தவிர்த்து வருகிறோம். 


சிறுவிறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் 


என்பதில் உள்ள செல்லா என்ற சொல் செல்வர் என்று குறிக்கும். 


உடல் முழுவதும் எரியும் வரை கூட இருக்க மாட்டார்களாம். அவரவர் வேலையை பார்க்க போய் விடுவார்கள். 


அவ்வளவுதான் சொந்தம். பாசம். எல்லாம். 


இதற்கா இந்தப் பாடு. ஓடி ஓடி உழைத்து, இரவு பகல் கண் விழித்து...யோசிக்க வேண்டும். 


 




Saturday, June 18, 2022

தேவாரம் - பிறவா நாளே

தேவாரம் - பிறவா நாளே  


காலையில் எழுந்தவுடன் "இன்னிக்கு அந்த வேலையை செய்து முடிக்கணும்" அப்படின்னு நினைகிறீங்க. அதுக்கு முன்னாடி வேற என்னென்னவோ வேலைகள் வந்து சேர்கிறது. அதையெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நீங்க நினைச்ச வேலையை எடுக்கலாம்னு நினைக்கும் போது, ரொம்பவும் சோர்வாக உணர்கிறீர்கள். சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்போம் என்று நினைகிறீர்கள்.


அப்படியே youtube, whatsapp என்று பார்கிறீர்கள். நேரம் போய் விடுகிறது. கடைசியில் "சே, நாள் பூராவும் வீணா பொழுது போயிருச்சு...ஒண்ணும் உருப்படியா செய்யல" என்று அலுத்துக் கொள்வீர்கள் அல்லவா?


அதே போல், முழு வாழ்நாளையும் நினைத்துப் பாருங்கள். எதுக்காக வந்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம், முடியும் போது நம் மன நிலை எப்படி இருக்கும்? உருப்படியா ஏதாவது செய்தோம் என்று மன நிறைவு இருக்குமா, அல்லது வெட்டி வேலை நிறைய செய்து பொழுதை எல்லாம் வீணடித்து விட்டோம் என்று நினைப்போமா?


திருநாவுக்கரசர் சொல்கிறார்,


"இறைவனை நினையாத நாள் எல்லாம் பிறவா நாளே" 

என்று.


பிறந்தும் ஒரு பலனும் இல்லை என்றால், பிறந்து என்ன பிறக்காமல் இருந்து என்ன ? எல்லாம் ஒன்று தானே? 


காலையில் எழுந்து காப்பி குடித்து, செய்தி வாசித்து, வேலைக்குப் போய், சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, தொலைக் காட்சி பார்த்து ....இப்படி ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் அந்த நாட்களால் என்ன பலன்?


பாடல் 


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

        அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

        திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

        கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

        பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரியானை = அறிவாலும், பொருளாலும் அடைய அரிதானவனை 


அந்தணர்தம் சிந்தை யானை = அந்தணர்களின் சிந்தனயில் என்றும் இருப்பவனை 


அருமறையின் = உயர்ந்த மறைகளின் 


அகத்தானை = உட்பொருளாக அமைந்தவனை 


அணுவை  = அணுவை 


யார்க்கும் = ஒருவருக்கும் 


தெரியாத தத்துவனைத் = தெரியாமல் வைத்த உண்மை வடிவானனவை 


தேனைப் = தேன் போன்றவனை 


பாலைத் = பால் போன்றவனை 


திகழொளியைத் = ஒளி போருந்தியவனை 


தேவர்கள்தங் கோனை  = தேவர்களின் தலைவனை 


மற்றைக் கரியானை  = கரிய நிறம் கொண்ட திருமால் 


நான்முகனைக் = நான்கு முகம் கொண்ட பிரமன் 


கனலைக் = தீயை 


காற்றைக் = காற்றை 


கனைகடலைக் = ஒலி உடைய கடலை 


குலவரையைக் = பெரிய மலையை 


கலந்து நின்ற =இவை எல்லாவற்றிலும் கலந்து நின்ற 


பெரியானைப்  = பெரியவனை 


பெரும்பற்றப் புலியூ ரானைப் = புலியூர் என்ற ஊரில் இருப்பவனை 


பேசாத நாளெல்லாம் பிறவா நாளே = பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


அப்படி எல்லாம் கணக்கு போட்டால் நம் வயது எவ்வளவு இருக்கும் ? ஐந்து அல்லது பத்து நாள் தான் இருக்கும். 


எவ்வளவோ நாட்கள் வீணாகப் போகின்றன. 


அந்தக் கவலை எப்போதும் இருக்க வேண்டும். 


ஒவ்வொரு நாளும் சிறப்பாக கழிய வேண்டும். 




Monday, May 9, 2022

தேவாரம் - சிறு விறகால் தீமூட்டி

தேவாரம் - சிறு விறகால் தீமூட்டி 


ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் இந்த வாழ்க்கை நமக்குப் பிடித்துத்தான் இருக்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, எதற்கு இந்த வாழக்கை என்று யார் நினைக்கிறார்கள். 


அப்படி என்ன பிடிப்பு இந்த வாழ்வில்?


நெருங்கிய உறவுகள் - அப்பா, அம்மா, கணவன், ,மனைவி, பிள்ளைகள். ஐயோ, இவர்களை விட்டு விட்டு எங்கே போவது. அவர்கள் தான் எனக்கு உயிர். பிள்ளையை விட உலகில் உயர்ந்த ஒன்று உண்டா? பத்து மாதம் சுமந்து பெற்று, மார் மேலும், தோள் மேலும் போட்டு வளர்த்த பிள்ளை அல்லவா? அதை பிரிய மனம் வருமா? 


நாவுக்கரசர் சொல்கிறார்....அப்படித்தானே பாசம் வைக்கிறாய். நாளை நீ இறந்த பின், நீ உயிருக்கு உயிராய் நினைத்த அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள். அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு என்று எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்கிறாய்?


சரி, உறவு இல்லாவிட்டால் போகிறது. சேர்த்த செல்வம் இருக்கிறதே? பெரிய வீடு, தோட்டம், குளிர் சாதன வசதி, பெரிய கார், பெரிய தொலைக் காட்சி, நினைத்த போது எங்கும் செல்ல விமான வசதி, அதில் பயணச் சீட்டு வாங்க வசதி, வீட்டு வேலைக்கு ஆள்...இந்த சுகத்தை எல்லாம் விட்டு விட்டு எப்படி போவது?


நாவுக்கரசர் சொல்கிறார், "நீ எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள். நீ தளர்ந்த போது ஒரு செல்வமும் உன்னை தாங்கிப் பிடிக்காது. ஒரு செல்வமும் உன் கூனை நேராக்காது. ஒரு செல்வமும் உன் தலை முடி உதிர்வதை தடுத்து நிறுத்தாது. படுக்கையில் கிடக்கும் போது, மருத்துவர் சொல்லி விடுவார் "சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி விடுங்கள்" என்று. கட்டு கட்டாக பணம் இருந்து என்ன செய்ய. ஒரு மருந்தும் நம்மைக் காக்காது. இப்படி உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு உதவி செய்யாத பணத்தின் மேலா இவ்வளவு பிடிப்பு ? என்று கேட்கிறார். .


பாடல்  


எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்  எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_75.html


( pl click the above link to continue reading)


எத்தாயர் = எத்தனை தாயார் 


எத்தந்தை = எத்தனை தந்தைமார் 


எச்சுற்றத்தார் = எவ்வளவு சுற்றத்தார்கள் 


எம்மாடு = மாடு என்றால் செல்வம் என்று பொருள். எவ்வளவு செல்வம். 


சும்மாடாம் = சுமை தூக்கும்? எந்தச் செல்வம் உன்னைத் தாங்கும். 


ஏவர் நல்லார் = இதில் யார் நல்லவர்கள்?


செத்தால் = இறந்து போனால் 


வந்துதவுவார் ஒருவ ரில்லை  = உதவிக்கு ஒருவரும் வர மாட்டார்கள் 


சிறுவிறகால் தீமூட்டிச் = சிறு விறகால் தீமூட்டி 


செல்லா நிற்பர் = சென்று கொண்டே இருப்பார்கள். 


சித்தாய = சித்து, சித்தம், அறிவு 


வேடத்தாய் = உருவாய். ஞானமே உருவாக நின்றவனே என்று பொருள் 


நீடு பொன்னித் = சிறந்த பொன்னி நதிக்கரையில் உள்ள 


திருவானைக் காவுடைய செல்வா = திருவானைக்காவல் என்ற திருத் தலத்தில் எழுந்து அருளி இருப்பவனே 


என்றன் அத்தாவுன்  = எந்தன் தலைவனே,உன் 


பொற்பாதம் அடையப் பெற்றால் = பொன் போன்ற திருவடிகளை அடையப் பெற்றால் 


அல்லல் = துன்பம் 


கண்டங் = கண்டு அங்கு 


கொண்டடியேன் = கொண்டு அடியேன் 


என்செய் கேனே. = என்ன செய்வேன் 


அதாவது, உன் திருவடிகளை சரண் அடைந்தால்  துன்பமான வாழ்வை நான் அடைவேனா? அடைய மாட்டேன் என்பது பொருள் 


இங்கே, 'செல்லா நிற்பர்' என்றால் செல்வர் என்று பொருள். 


நிகழ் கால இடை நிலையாக் மூன்று சொற்கள் வரும். 


கிரு, கின்று, ஆநின்று.


இந்த மூன்றும் நிகழ் கால வினையை குறிப்பவை. 


இதில் நம் முதல் இரண்டை பழக்கத்தில் வைத்து இருக்கிறோம். .மூன்றாவதை விட்டு விட்டோம். 


உதாரணமாக, 


வருகிறான் (கிரு)


வருகின்றான் (கின்று)


வாராநின்றான் (ஆநின்று)


அதே போல் இங்கே

சிறு விறகால் தீ மூட்டி 


- செல்கிறார் (கிரு)

- செல்கின்றார் (கின்று)

- செல்லா நின்றார் (ஆநின்று)


அது இடையில் கொஞ்சம்   இலக்கணம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


'சிறு விறகால்'.   பெரிய விறகுகளை வைத்தால் அது பற்றி எரிய நேரம் ஆகும். சின்ன சின்ன விறகுகளை வைத்தால் சீக்கிரம் முடிந்து விடும். 


'செல்லா நிற்பர்'. அந்த சின்ன விறகு கூட முழுவதும் எரிந்து முடியும் வரை கூட நிற்க மாட்டார்களாம். அது பாட்டுக்கு எரியட்டும் , நாம கிளம்புவோம் என்று கிளம்பி விடுவார்கள் என்று உலக இயற்கையை சொல்கிறார் நாவுக்கரசர். 


இது தான் உலகம். 


அன்பு வைக்க வேண்டியதுதான். பாசம் வேண்டியதுதான். ஆனால், அதெல்லாம் அப்படியே உண்மை என்று நம்பி விடக் கூடாது. 


இந்த உலகில் யாருக்கும், யார் மேலும் பெரிய அன்பு கிடையாது. 


நம்புவது கடினம் தான். அதெல்லாம் இல்லை, என் பிள்ளை என் மேல் உயிரையே வைத்து இருக்கிறான் என்று நினைத்தால் ஒரு முறை மயானம் சென்று பார்க்க வேண்டும். 


இந்த உண்மை தெரிந்தால், உலகப் பற்று விடும். மனம் வேறு ஒன்றைப் பற்றும். 


பற்றட்டும். 



Thursday, March 18, 2021

தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை

 தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை 


எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது செய்து இருந்தால் துன்பம் வரும். இதில் நம் கையில் என்ன இருக்கிறது. விதியை நம்மால் மீற முடியுமா? 


ஊழிற் பெருந்தக்க யாவுள என்பார் வள்ளுவர்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த விதியின் பிழை என்பார் கம்பர். 


அப்படி என்றால் நம் கையில் ஒன்றும் இல்லையா. நாம் சும்மா இருக்க வேண்டியது தானா. ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமா? 


திருஞான சம்பந்தர் சொல்கிறார். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வினையை மாற்றலாம்" என்று கூறுவதோடு நில்லாமல், அதற்கு வழியும் காட்டுகிறார். 


"முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப இப்போது நமக்கு இன்ப துன்பமாகிய வினைகள் வருகிறது என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே. இது உங்களுக்கு ஒரு ஊனம் இல்லையா. இறைவனை வழிபடுங்கள். அப்படி செய்தால் நாம் முன் செய்த வினைகள் நம்மை தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை" என்று சத்தியமிட்டு கூறுகிறார். 


பாடல் 


அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!


பொருள் 



click the above link to continue reading

அவ்வினைக்கு = முன்பு செய்த வினைகளுக்கு 


இவ்வினை ஆம் = இப்போது நடக்கும் வினைகள் (இன்ப துன்பங்கள்) 


என்று சொல்லும் அஃது அறிவீர்! = என்று சொல்லக் கேட்டு இருகிறீர்கள் 


உய்வினை = இதில் இருந்து தப்பிக்கும் வழியினை 


நாடாது இருப்பதும் = கண்டு பிடிக்காமல் இருப்பதும் 


உம்தமக்கு = உங்களுக்கு 


 ஊனம் அன்றே? = ஒரு குறை இல்லையா ?


கைவினை செய்து = கைகளால் தொழுது 


எம்பிரான் = எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் 


கழல் போற்றுதும் = திருவடிகளை போற்றுங்கள் 


நாம் அடியோம் = நாம் இறை அடியவர்கள் 


செய்வினை = செய்த வினை 


வந்து = நம்மிடம் வந்து 


எமைத் தீண்டப்பெறா = நம்மை தீண்டாது 


திருநீலகண்டம்.! = திருநீலகண்டத்தின் மேல் ஆணை 


திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்டு ஞானம் பெற்றவர். இறைவன் மேல் ஆணையிட்டு சொல்கிறார். 


பழைய வினைகள் தீர வேண்டும் என்ன்றால் என்ன செய்ய வேண்டும் என்று. 


(இப்படி பத்துப் பாடல்கள் இருக்கின்றன. விரைந்து அவை அனைத்தையும் படித்து விடுங்கள்) 

இதையே மணிவாசகரும் "பழ வினைகள் பாறும் வண்ணம்" என்பார். பழைய வினைகள் அற்றுப் போகும் படி அவன் எனக்கு அருளினான் என்கிறார். 


முத்திநெறி அறியாத

    மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

    பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச்

    சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக் கருளியவா

    றார்பெறுவார் அச்சோவே


எனவே, விதி என்று சோர்ந்து இருந்து விடாதீர்கள். 


பழைய வினைகளை சுட்டெரிக்க ஞான சம்பந்தரும், மணி வாசகரும் வழி சொல்லித் தந்து இருக்கிறார்கள். 


Sunday, November 15, 2020

தேவாரம் - பறி நரி கீறுவது அறியீர்

 தேவாரம் - பறி நரி கீறுவது அறியீர் 


எப்ப வெளியே போனாலும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கிலோ மூட்டையை தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? கல்யாண வீட்டுக்குப் போனாலும், காய் கறி வாங்கப் போனாலும், அலுவலகம் போனாலும், கோவிலுக்குப் போனாலும் அந்த மூட்டையை சுமந்து கொண்டுதான் போக வேண்டும். 


முடியுமா?


ஆனால் , செய்கிறோமே. இந்த உடம்பை தூக்கிக் கொண்ண்டுதானே போகிறோம். எங்கு போனாலும், இந்த உடம்பை தூக்கிக் கொண்டு தான் போக வேண்டி இருக்கிறது. விட்டு விட்டுப் போக முடியுமா? 


நம்ம உடம்பு நமக்கு பாரமா? என்று கேட்கலாம். 


நாம் வெகு தூரம் நடப்பது இல்லை. எனவே தெரிவது இல்லை. பத்து கிலோ மீட்டர் நடந்து பாருங்கள் தெரியும், இந்த உடம்பு பாரமா இல்லையா என்று. பத்து மாடி ஏறிப் பாருங்கள் தெரியும். இந்த உடம்பை தூக்கிக் கொண்டு ஏற முடியாது என்று. மூச்சு வாங்கும். நின்று விடுவோம். 


இந்த உடம்பு ஒரு நாள் படுத்து விடும். இதை வைத்து எதாவது நல்லது செய்யலாம். நல்லவற்றை அறிந்து கொள்ளலாம். அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நாலு நல்ல வார்த்தை பேசலாம். ஏதாவது உருப்படியாக செய்யலாம். அதை விடுத்து சும்மா இந்த உடம்பை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம். 


ஒரு நாள், இந்த உடம்பை தீ கொள்ளும், அல்லது நிலம் கொள்ளும். 


சுந்தரர் சொல்கிறார் 


"இந்த உடம்பை சுமந்து கொண்டு திரிந்து துன்பப் படுகிறீர்கள். ஒரு நாள், இந்த உடம்பை புதைத்து விடுவார்கள். புதைத்த உடம்பை நரி தோண்டி எடுத்து கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள் வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை செய்திருந்தால் வரும் பலன் கிட்டாமல் போய் விடும். இருக்கிற போதே, வாழ் நாளின் குறைவை எண்ணி நல்லதை செய்யுங்கள். பசித்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்ல நீரோடு, உணவு அளித்து, அவர்கள் மனம் மகிழும் படி பேசி இருப்பவர்கள் வணங்கும் கேதாரம் என்ற திருத் தலத்தில் உள்ள ஈசனை வழி படுங்கள் "


பாடல் 


பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்

குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு

கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_15.html

(pl click the above link to continue reading)



பறியேசுமந் துழல்வீர் = பறி என்றால் உடம்பு. உடம்பை சுமந்து கொண்டு துன்பப் படுவீர்கள் 


பறி = இந்த உடம்பை 

நரிகீறுவ தறியீர் = நரி தனது கூரிய நகங்களால் கீறுவதை அரிய மாட்டீர்கள் 

குறி = குறித்த நாளில் 

கூவிய = கூவிக் கொண்டு வந்து 

கூற்றங்கொளு நாளால் = கூற்றுவன் உங்கள் உயிரை கொண்டும் செல்லும் நாளில் 


அறம் உளவே = அறம் உங்களுக்கு உளவாகுமா ? ஆகாது. செய்தால் தானே பலன் கிட்டும்.

அறிவானிலும் அறிவான்  = அறிந்து கொள்ளக் கூடியவர்களில் ஒருவராக 


நல நறுநீரொடு  சோறு = நல்ல நறுமணம் மிக்க நீரோடு, சோறும் தந்து 

கிறிபேசி  = அவர்கள் மனம் மகிழும் படி பேசி 

நின் றிடுவார்  = இருப்பவர்கள் 


தொழு = தொழும் , வணங்கும் 

கேதாரமெ னீரே = கேதாரம் என்று சொல்லுங்கள். 


திருவாசகத்தில், திரு அம்மாணையில் , மணிவாசகர் பாடுவார் 


கேட்டாயோ தோழி "கிறி" செய்த வாறொருவன்

தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி

தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி

நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த

ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் 


கிறி செய்தவாறு  ஒருவன் = மனதை மயக்கும் படி பேசி ஒருவன். சிற்றின்பத்தின் உச்சம் தொட்டுக் காட்டிய பாடல் இது. ஒரு பெண் முதன் முதலாக ஒரு ஆடவனின் அருகாமை உணரும் பாடல். 


மாவலியிடம், அவன் மனம் மயங்கும் படி பேசி மூன்றடி நிலம் பெற்ற அந்தத் திருமாலை அல்லால் என் மனம் வேறு ஒன்றையும் போற்றாதே என்கிறது பிரபந்தம். 


சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்

ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு

இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற

பெருங்"கிறி" யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே


இதில் உள்ள இறுதி இரண்டு சொற்கள் "நெஞ்சம் பேணலதே" . நெஞ்சம் பேணாது. நெஞ்சம் போற்றாது என்று பொருள். 


பேணுதல், போற்றுதல். 


தந்தை தாய் பேண். தாய் தந்தையரை போற்று. 


பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. 


போற்றப் படுபவள், போற்றப்  பட வேண்டியவள் என்ற அர்த்தத்தில். 

Thursday, August 27, 2020

தேவாரம் - சுருதி சிர உரையினால்

தேவாரம் - சுருதி சிர உரையினால் 


திரு ஞான சம்பந்தர் பாடிய தேவாரம். சீர்காழி என்ற தலத்தில் பாடியது.

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

(click the following link to continue reading) 

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_27.html

படிக்க கொஞ்ச கடினம் தான். சீர் பிரித்தால் எளிதில் விளங்கும்.

சீர் பிரித்த பின்

சுரர் உலகு  நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய  அரண் மதில்
முப்புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய  பரமன் இடமாம்
வரம் அருள  வரன் முறையில் நிறை கொள் வரு சுருதி சிர உரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே.


பொருள்


சுரர் = தேவர்கள். தேவர்கள் அல்லாதவர்கள் அ -சுரர்

உலகு = (வாழும்) உலகு. தேவ லோகம்

நரர்கள் = மனிதர்கள்

பயில் = வாழும்

தரணி தலம் = உலகம் முழுவதும்

முரண் = வலிமை

அழிய = அழிய

அரண் = கோட்டை

மதில்  = சுவர்

முப்புரம் எரிய = மூன்று புரங்களும் எரிய

விரவு = விரைவாக

வகை = வழி செய்த

சர = அம்பு விட்ட

விசை கொள்= செய்யும்

கரம் உடைய = திருக்கரத்தை உடைய

பரமன் இடமாம்  = பரமன் இடத்தில்

வரம் அருள = வரம் வேண்டி

வரன் முறையில் = வரை முறையில்

நிறை கொள் = நிறைந்த

வரு சுருதி = வேதங்கள்

சிர = அதன் உச்சியில், வேதத்தின் அந்தம், வேதாந்தம்

உரையினால்  = உரையினால்

பிரமன் உயர் = உயர்ந்த பிரம்மன்

அரன்  = சிவன்

எழில் கொள் = அழகிய

சரண இணை = சரணம் அடையும் இரண்டு திருப் பாதங்கள்

பரவ = போற்ற

வளர் பிரமபுரமே. = எப்போதும் வளரும் பிரம புரமே (சீர்காழியே )

பிரம்மன் துதித்தால் அது ப்ரம்ம புரம் என்றும்   அழைக்கப்படும்.

சின்ன பாலகன். ஞான சம்பந்தர் பாடியது. நம்மால் வாசிக்கக் கூட முடியவில்லை.





Saturday, June 27, 2020

தேவாரம் - சொல்லாய் கழிகின்றது

தேவாரம் - சொல்லாய் கழிகின்றது 



பெரும்பாலானோர் வாழ்க்கை என்பது என்ன ?

பிறந்தார் - வளர்ந்தார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்

என்ற இந்த நான்கு செயல்களில் அடங்கி விடுகிறது. கல்யாணம் கட்டி, பிள்ளைகள் பெற்று, வேலை பார்த்து, சம்பளம் பெற்று என்று கொஞ்சம் நீட்டிக்கலாம். அவ்வளவுதான்.

பிறந்தார் - படித்தார் - வேலை பார்த்தார் - மணந்தார் - பிள்ளைகள் பெற்றார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்.

அவ்வளவுதான். 7 சொற்கள். வாழ்க்கை முடிந்து விட்டது.

வேறு ஏதாவது நடக்கிறதா?

நம் வாழ்க்கை எல்லாம் இந்த சொற்களாய் போய் விட்டது. வேறு ஒன்றும் இல்லை.

இப்படி என் வாழ்வும் போய் விடக் கூடாது. நான் இந்த சூழலில் இருந்து தப்பிக்க வழி சொல் என்று இறைவனை வேண்டுகிறார் சுந்தரர்.

"மலையில் இருந்து அகிலும், ஒளி வீசும் மணிகளையும் கலந்து வரும் ஆற்றின் கரையில் இருக்கும் நெல் வாய் என்ற ஊரில் உறைபவனே, இந்த பிறவியில் பிறந்து, வளர்ந்து, மூப்பு அடைந்து, இறந்து போகும் இந்த சூழலில் இருந்து நான் உய்ய வழி சொல்வாய்"

என்கிறார்.

பாடல்


கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
  கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
  நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
  நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
  தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.  

பொருள்


கல்வாய் = மலை

அகிலுங்  = அகில் (மணம் வீசும் மரம்)

கதிர்மா மணியுங் = கதிர் ஒளி வீசும் மணிகளை

கலந்துந் தி = கலந்து + உந்தி = கலந்து வேகமாக

வருந் = வரும்

நிவவின்  = நிவா நதியின்

கரைமேல் = கரையில்

நெல்வா யில் = நெல் வாய் என்ற திருத்தலத்தில்

அரத் துறை = அரத்துறையில்

நீ டுறையும் =நீடு + உறையும் = நீண்ட நாள் இருக்கும்

நிலவெண் மதிசூ டிய = வெண்மையான நிலவை சூடிய

நின் மலனே = நிர்மலமானவனே

நல்வாயில் = நல்ல வீட்டினை

செய்தார் = கட்டினார்

நடந்தார் = நடந்தார்

உடுத்தார் = உடுத்தார்

நரைத்தார் = நரைத்தார்

இறந்தா ரென்று = இறந்தார் என்று

நா னிலத்திற் = இந்த உலகில்

சொல்லாய்க் = வெறும் சொல்லாய்

கழிகின் றதறிந் = கழிகின்றது அறிந்து

தடியேன் = அடியேன்

தொடர்ந்தே = தொடர்ந்து

னுய் யப் = உய்ய

போவ தோர் = போவது ஓர்

சூழல் சொல்லே.   = வழி சொல்லேன்



இதற்கு கி வா ஜா உரை சொல்லுவார்

ஒருவன் ரொம்ப கஷ்டப் பட்டு ஒரு வீடு கட்டினான். சிறுக சிறுக சேர்த்து கட்டிய வீடு.  பார்த்து பார்த்து கட்டினான்.

வீடு அருமையாக வந்து விட்டது. அவனுக்கு பெருமை தாளவில்லை. தன் வீட்டைப் பார்த்து  பார்த்து பெருமிதம் கொள்கிறான்.

காலையிலும் மாலையிலும் வீட்டின் முன் புறம் நடப்பான். வருகிற போகிற ஆட்களை பார்ப்பான். முற்றத்தில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பான்.

நல்ல உடை உடுத்திக் கொண்டு  வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பான்.


கொஞ்ச நாள் கழித்து வயதாகிப் போனது. அடிக்கடி வெளியே வர முடியவில்லை. படுத்த படுக்கையாகி விட்டான்.

அப்புறம் சில வருடங்களில் இறந்தும் போனான்.

இப்போது தேவாரத்தைப் படியுங்கள்.

"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
  நரைத்தார் இறந்தா ரென்று"

வீட்டைக் கட்டி - வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து - உடை உடுத்தி - நரை பருவம் எய்தி  - இறந்து போனான்.

வீடு என்பது இங்கே ஒரு உபமானம்.

வீடுதான் நம் உடம்பு. வீட்டைக் கட்டி,

நடத்தல் - படித்தல், வேலையை செய்தல் போன்றவை

உடுத்தார் - அனுபவித்தல்,மனைவி, மக்கள், சுற்றம், செல்வம் என்று கொஞ்ச நாள் அனுபவித்து

நரைத்தல் - வயதாகிப் போதல்

இறத்தல் - முடிவு

இப்படியா நம் வாழ்க்கையும் செக்கு மாடு  போல இந்த வட்டத்துக்குள்  சுத்தி சுத்தி வர வேண்டும்.

இதைத் தானே எல்லோரும் செய்கிறார்கள்.

பத்தோடு பதினொன்றாக நாமும் அப்படியே போக வேண்டியதுதானா .

பிறந்தான், வளர்ந்தான், இறந்தான் என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல், பயனின்றி  இந்த வாழ்க்கை முடிய வேண்டுமா?

நான் உய்ய வழி சொல் என்று சுந்தரர் வேண்டுகிறார்.

நாம எப்படி?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_27.html

Thursday, May 14, 2020

தேவாரம் - குரங்கு கை பூமாலை

தேவாரம் - குரங்கு கை பூமாலை 


பள்ளிக் கூடத்தில் முதலாவது வகுப்பில் படித்த பாடம்.

ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். அவன் ஊர் ஊராக சென்று தொப்பி விற்று வந்தான். அப்படி செல்லும் வழியில், ஒரு நாள் அவனுக்கு மிகுந்த களைப்பாக இருக்கவே, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சற்று இளைப்பாறினான்.

நடந்த களைப்பு, மர நிழல், சுகமான காற்று..அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான்.

சற்று நேரம் கழித்து விழித்துப் பார்த்தால், கூடையில் ஒரு தொப்பி கூட இல்லை. எங்கடா போச்சு என்று சுத்தி முத்தி பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது மரத்தின் மேல் ஏதோ சப்த்தம் கேட்கவே அண்ணாந்து பார்த்தான்.

பார்த்தால், மரத்தில் பல குரங்குகள், இவனுடைய தொப்பியை தலையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தன.

அந்த குரங்குகளிடம் இருந்து தொப்பியை எப்படி வாங்குவதும் என்று சிந்தித்த அந்த வியாபாரி, தன் தலையில் இருந்த தொப்பியை தூக்கி தரையில் எறிந்தான். அவன் செய்வதைப் பார்த்த குரங்குகள், தங்கள் தலையில் இருந்த தொப்பியை கழற்றி தரையில் எறிந்தன. வியாபாரி எல்லா தொப்பியையும் எடுத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினான்.

குரங்கு புத்தி.  பார்த்ததை அப்படியே செய்யும்.

திருமுதுகுன்றம் என்ற இடத்துக்கு திருஞானசம்பந்தர் போகிறார்.

அந்த ஊரில் உள்ள கோவிலில், அர்ச்சகர் சென்று நடையை திறப்பதற்கு முன், சாமிக்கு பூவால் அர்ச்சனை செய்த மாதிரி அவர் மேல் ஒரே பூ.

அங்கு வரும் பக்தர்கள்  பூ போட்டு வணங்குவதை கண்ட அந்த ஊர் குரங்குகள், எல்லோரும் போன பின், ஸ்வாமி மேல் உள்ள மாலையை எடுத்து, அதில் உள்ள பூக்களை பிய்த்து, ஸ்வாமி மேல போட்டன. பக்தி எல்லாம் இல்லை. சும்மா, எல்லோரும் போடுகிறார்களே என்று அவையும் போட்டன.

இராத்திரி எல்லாம் இதுதான் வேலை. மரத்தில் உள்ள பூவை எல்லாம் பறித்து, சுவாமி மேல போட வேண்டியது...அது ஒரு விளையாட்டு .....

பாடல்


எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் 
சித்தை யுள்ளே  கோயிலாகத் திகழ்வானே 
மந்தி ஏறி இனமா  மலர்கள் பல கொண்டு 
முந்தித்  தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

பொருள்


எந்தை = என்னுடைய தந்தை

இவன் என்று  = இவன் என்று

இரவி = சூரியன்

முதலா = முதலான தேவர்கள்

இறைஞ்சுவார்  = வணங்குவர்

சித்தை யுள்ளே = அவர்களின் சிந்தையில் உள்ள அவன்

 கோயிலாகத் திகழ்வானே  = இங்கு கோவில் கொண்டு திகழ்கிறான்

மந்தி ஏறி = குரங்குகள் ஏறி

இனமா  மலர்கள் பல கொண்டு  = ஒத்த மலர்கள் பலவற்றைக் கொண்டு

முந்தித் = முன்னாடியே

தொழுது வணங்கும் = தொழுது வணங்கும்

கோயில் முதுகுன்றே. = முதுகுன்றில் உள்ள கோவில்.

நாமும் குரங்கில் இருந்து வந்தவர்கள்தானே.

அந்த குரங்கின் புத்தி நமக்கும் இருக்கும் தானே?

நல்லவர்களோடு சேர்ந்தால், அவர்கள் செய்வதை நாமும் செய்யத் தலைப்படுவோம்.

மற்றவர்களோடு சேர்ந்தாலும் அப்படியே.

நமது மூளையில் mirror neuron என்று ஒன்று உண்டு. மற்றவர்கள் செய்வதை நம்மை அறியாமலேயே  நாம் செய்வோம்.

சிறு குழந்தை, ஒருவாரம், இரண்டு வாரம் ஆன குழந்தை முன்னால் நாம் சென்று   சிரித்தால், அதுவும் சிரிக்கும். நாம் அழுவது போல பாவனை செய்தால், அதுவும் அழும்.

காரணம் தெரியாது.

சினிமா, டிவி பார்க்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் அழுவோம், சிரிப்போம், நம் தசைகள் முறுக்கு ஏறும், தளரும்...காரணம் அங்கே திரையில் நடப்பதைப் பார்த்து  நம் mirror neurons அப்படியே இங்கே செய்யும்.

நேரம் இருந்தால், இது பற்றி google செய்து பார்க்கவும். சுவாரசியமான ஒன்று.

பாடலுக்கு வருவோம்.

நாம் யாரோடு சேர்கிறோமா, அவர்கள் செய்வதை, அவர்கள் பேசுவதை போலவே நாமும் பேசத் தலைப்படுவோம்.

யாருடன் பழகுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

நான் யாரோட பழகினாலும், நான் உறுதியாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள். இவை நிகழ்வது உங்கள் செயல்பாட்டில் இல்லை. உங்களையும் அறியாமல் அவர்கள் வழியில் சென்று விடுவீர்கள்.

அடியார்  கூட்டம் அடியார் கூட்டம் என்று மீண்டும் மீண்டும் சொல்லக் காரணம், ஒரு காலத்தில் அடியார்கள் நல்லவர்களாக இருந்தார்கள்.

அதை விட்டு விடுவோம்.

நல்லவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களோடு பழகுங்கள்.

மற்றவர்கள் சகவாசத்தை விடுங்கள்.

இரவி முதலாய தேவர்களுக்கு முன்னே சென்று குரங்குகள் வழிபட்டன. குரங்குகளே அவ்வாறு  நல்ல காரியம் செய்ய முடியும் என்றால், நம்மால் எவ்வளவு செய்ய முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_54.html

Monday, May 11, 2020

தேவாரம் - மிகு கொடை வடிவினர்

தேவாரம்  -  மிகு கொடை வடிவினர் 


ஒவ்வொரு துறையிலும் மிக மிக திறமை வாய்ந்தவர்களை பார்த்தால் தெரியும், அந்தத் திறமையே ஒரு அழகாகத் தெரியும்.

சில பாடகர்களை பார்த்தால்,  சராசரி ஆளை விட அழகு கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால், அவர்களுக்கு பின்னால் இருக்கும் திறமை, அதுவே ஒரு அழகைக் கொடுக்கும்.

பெரிய பெரிய அறிவியல் அறிஞர்களை பார்க்கிறோம். தலையெல்லாம் கலைந்து, சவரம் செய்யாமல் தாடி மீசையோடு இருப்பார்கள். அனால், அவர்கள் கண்டு பிடித்த உண்மைகளை நாம் அறியும் போது அவர்களின் வசீகரம் கூடியது போல இருக்கும்.

தானம் கொடுப்பதே ஒரு அழகாம். பிறருக்கு உதவுவது ஒரு அழகைத் தரும் என்கிறார் சேக்கிழார் பெருமான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பிள்ளையார் எப்படி வந்தார் என்பதற்கு பல கதைகள் இருக்கின்றன. பார்வதி மஞ்சள் தூளை பிடித்து வைத்து, அதற்கு உயிர் கொடுத்து, சிவன் அந்த பிள்ளையை வெட்ட, பின் யானையின் தலையை கொண்டு வந்து பொருத்தி என்றெல்லாம் கதை போகும்.

திருஞான சம்பந்தர் சொல்கிறார்....

ஒரு முறை சிவனும், பார்வதியும், யானை வடிவம் கொண்டு இன்பம் அனுபவித்தார்களாம். அதில் பிறந்தவர் தான் கணபதி என்கிறார்.

பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


பொருள்

பிடியத னுரு = பிடி அதன் உரு = பிடி என்றால் பெண் யானை. அதன் உருவத்தை

வுமை கொள = உமை கொள்ள. உமா தேவி கொள்ள.

மிகு = பெரிய

கரியது =கரி + அது = கரி என்றால் ஆண் யானை.

வடிகொடு = வடிவம் கொண்டு

தனதடி = தனது அடியார்

 வழிபடு = வழிபட

மவரிடர் = அவர் இடர். அவர்களின் துன்பங்களை

கடி = கடிய, மாற்ற

கண பதிவர = கணபதி வர (பிறக்க)

வருளினன் = அருளினன். அருள் செய்தான்

 மிகுகொடை = சிறந்த கொடை

வடிவினர் = அதனால் அழகிய வடிவம் கொண்டவர்கள்

பயில் = வாழும்

வலி வல = வலிவலம் என்ற ஊரில்

முறை யிறையே = உறையும் இறையே. வாழும் இறைவனே

பிறருக்கு உதவி செய்தால், அதனால் ஒரு அழகு வரும் என்பது ஒரு செய்தி.

அது மட்டும் அல்ல, கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்களில் குறில் எழுத்து, நெடில் எழுத்து என்று உண்டு.

குறுகிய ஓசை கொண்டது குறில் எழுத்து. ஒரு மாத்திரை அளவு என்பார்கள். மாத்திரை என்பது  கண் சிமிட்டும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம்.  அ, இ, உ, எ, ஒ என்பவை குறில் எழுத்துக்கள்.

நெடிய ஓசை கொண்டது நெடில் எழுத்து. இரண்டு மாத்திரை அளவு உள்ளது.  ஆ, ஈ, ஊ, ஏ , ஐ, ஓ  ...இவை நெடில் எழுத்துக்கள்.

மேலே உள்ள பாடலைப் பாருங்கள்.

குறில் எழுத்து மட்டும் தான் இருக்கும். நெடில் எழுத்தே கிடையாது.

நம்மால் இப்படி ஒரு வாக்கியம் எழுத முடியுமா என்பது சந்தேகம். முழு பாடல் அதிலும் ஒரு கதை, ஒரு கருத்து என்று.

ஞான சம்பந்தர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_11.html

Friday, March 6, 2020

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன்

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன் 


யாரைக் கேட்டாலும், "நேரமே இல்லை" என்பதே பதிலாக இருக்கிறது.

எதுக்குமே நேரம் இல்லை. ஆனால்,எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் அறிவியல் , நேரத்தை சேமிக்க புது புது சாதனங்களை தந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம், மனிதன் நேரம் இல்லை என்று தவித்துக் கொண்டு இருக்கிறான்.

இருக்கிற அதே நேரத்தில் பில் கேட்ஸ், இளைய இராஜா, என்று சிலர் மிகப் பெரிய பேரும் புகழும் படைக்கிறார்கள். நமக்கும் அதே அளவு நேரம் தான் இருக்கிறது. ஏன், நம்மால்  அந்த அளவு பெரிய சாதனைகள் செய்ய முடியவில்லை?

திருநாவுக்கரசர் சொல்கிறார்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை.  என்ன செய்யப் போகிறோம், என்ன சாதிக்கப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லாத வாழ்க்கை. இன்று இப்படி, நாளை எப்படியோ என்று வாழ்க்கையை  ஒவ்வொரு நாளாக கழிப்பது. எப்படி, எதையும் அடைய முடியும் ?


நமக்கு இருக்கும் சொற்ப வாழ்நாளில்,கொஞ்சம் சிறு பிள்ளை வயதில், ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. பின்னாளில் வயதாகி, கண் தெரியாமல், காது கேட்காமல் வயோதிகத்தில் கொஞ்சம் போய் விடுகிறது. நடுவில் நாட்களில் காதல், கல்யாணம், பிள்ளை வளர்ப்பு என்று பெரும் பகுதி போய் விடுகிறது.  இதையெல்லாம் விடுத்து, இருக்கிற நேரத்தில் நல்ல குறிக்கோள் இல்லாமல்  ஏனோ தானோ என்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போவது சரிதானா?

பாடல்

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.


பொருள்

பாலனாய்க் கழிந்த நாளும் = சிறு பிள்ளையாய் கழிந்த நாட்களும்


பனிமலர்க் கோதை மார்தம் = குளிர்ந்த மலர் போன்ற பெண்கள் தம்

மேலனாய்க் கழிந்த நாளும் = அவர்கள் பின் சென்றும், திருமணம் முடித்து அவர்களோடு செலவழித்த நாட்களும்

மெலிவொடு மூப்பு வந்து = மெலிந்து, மூப்பு வந்து வயதாகி

கோலனாய்க் கழிந்தநாளுங் = கோல் ஊன்றி கழித்த நாட்களும்

குறிக்கோளி லாதுகெட்டேன் = எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் கெட்டேன்

சேலுலாம் = மீன்கள் உலாவும்

பழனவேலித் = நீர் நிறைந்த நிலங்களை வேலியாகக் கொண்ட

திருக்கொண்டீச் சரத்துளானே. = திரு கொண்டீச்சரம் என்ற தலத்தில் உள்ளவனே

வாழ்வில் ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டும். அதை நோக்கி தினம் நகர வேண்டும்.

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் என்று வாழ்வது ஒரு வாழ்க்கையா?

திருமணம் முடிக்காமல், பிள்ளை குட்டிகள் இல்லாத, திருநாவுக்கரசர் சொல்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால், நாம் எல்லாம் .... என்ன சொல்ல?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_15.html

Tuesday, November 5, 2019

தேவாரம் - நடக்கும் நடக்குமே

தேவாரம் - நடக்கும் நடக்குமே 


இரவும் பகலும், எந்நேரமும் ஏதோ ஒன்றின் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம்.  பணம், புகழ், ஆசை,பொறாமை, காமம், பதவி என்று ஐந்து புலன்களும் நம்மை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றன. ஒரு நிமிடம் நிற்க விடுவது இல்லை.

என்னதான் செய்வது?  எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றால் அதுவும் முடிவது இல்லை. வைத்துக் கொண்டு அல்லாடாவும் முடியவில்லை. ஒரு சில சமயம் இன்பமாக இருப்பது போல இருந்தாலும், துன்பமே மிகுதியாக இருக்கிறது.

இப்படி கிடந்து  உழல்வதுதான் நமக்கு விதித்த விதியா ? இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு என்னதான் முடிவு.

நாவுக்கரசர் சொல்கிறார்

"இரவும் பகலும் ஐந்து புலன்கள் நம்மை அரித்துத் தின்ன, இந்த துன்பத்தில் இருந்து எப்படி விடுபடுவோம் என்று நினைத்து ஏங்கும் மனமே உனக்கு ஒன்று சொல்வேன் கேள். "திருச்சிராப்பள்ளி" என்று சொல். நீ செய்த தீவினை எல்லாம், உன்னை விட்டு முன்னே நடந்து போய் விடும்"

என்று.

பாடல்

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 


சீர் பிரித்த பின்

அரித்து இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு 
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி  என்றலும்  தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே. 

பொருள்

அரித்து = அரித்து

 இராப் பகல் = இரவும் பகலும்

ஐவரால் = ஐந்து புலன்களால்

ஆட்டுண்டு  = ஆட்டப்பட்டு

சுரிச்சிராது = துக்கப்படாமல்

நெஞ்சே  = நெஞ்சே

ஒன்று சொல்லக்கேள் = ஒன்று சொல்வேன் கேள்

திருச்சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

 என்றலும் = என்று சொன்னால்

  தீவினை = செய்த தீய வினைகள் எல்லாம்

நரிச்சு இராது = கூடவே இருக்காமல்

நடக்கும் நடக்குமே.  = மெல்ல மெல்ல நடந்து  சென்று விடும் , (உன்னை விட்டு)

"திருச்சி" அப்படினு சொன்னா போதுமா ? ஏன் திருச்சி, வேற ஊர் பேர் சொல்லக் கூடாதா ?

பெயர் அல்ல முக்கியம்.

எப்போதும் புலன்கள் பின்னால் அலைவதை விடுத்து மனதை நல்ல வழிகளில்  திசை திருப்பச் சொல்கிறார். புலன் இன்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல.  அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை அரித்து விடும்.துன்பத்தையே தரும்.  அதை அறிந்து கொண்டு, மனதை திசை திருப்பச் சொல்கிறார்.

பெரியவர்கள் சொல்லும் போது, ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்,  கடவுள் பெயர், ஊர் பெயர், என்று ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள் என்பார்கள்.

நம்மவர்கள் உடனே, ஏன் அந்த சாமிப் பெயர், எதுக்கு அந்த ஊர், அதில் இன்னார் பெரிய  உயர்வு என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏதாவது ஒரு ஊர் பெயரைச் சொல் என்றால், எந்த ஊர் என்ற கேள்வி வரும்.

இப்படி மனம் கிடந்து அலைந்து திரியும்.  காரியம் நடக்காது.

எனவேதான், ஒன்றை பிடித்துக் கொள் என்கிறார்கள். அது உயர்ந்தது என்பதற்காக அல்ல. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டால், எதை எடுப்பது, எதை விடுவது என்று   நாம் குழம்பிப் போவோம் என்பதற்காக.

உங்கள் மனதில் எது படுகிறதோ, எது இலயிக்கிறதோ அதைச் சொல்லுங்கள்.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்"

தான் உள்ளே இருக்கும்படி இந்த உலகைச் செய்தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்கிறபடியால், எதை வேண்டுமானாலும் நினைக்கலாம்.

எளிமையான பாடல்கள் என்பதால், நாம் சிலவற்றை கடந்து போய் விடுகிறோம்.

எல்லாவற்றிலும் பொருள் உண்டு.

"முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே"



https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_5.html

Wednesday, September 25, 2019

தேவாரம் - வழி வைத்தார்

தேவாரம் - வழி வைத்தார்


உங்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

உங்களுக்கு கர்ம வினைகளின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

நம் தமிழ் இலக்கியம் கர்மவினையை வெகுவாக நம்பியது என்றே நினைக்கிறேன்.

மனிதர்கள் மட்டும் அல்ல, தெய்வங்களும் இந்த கர்ம வினைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது அதன் முடிவு.

சிறு வயதில், கோபிகள் குளிக்கும் போது, அவர்களின் ஆடையை திருடி அவர்களை தவிக்க விட்டான் கண்ணன். அவன் ஆற்றில் குளிக்கும் போது அவன் கட்டியிருந்த கீழாடை நீரோடு போய் விட்டது.

அது அவன் செய்த வினை.

வெளியே வர முடியாமல் நின்ற போது பாஞ்சாலி தன் சேலையின் முந்தானையில் ஒரு நீண்ட பாகத்தை கிழித்து அவனிடம் தூக்கி எறிந்தாள்.
பின் ஒரு காலத்தில், பாஞ்சாலிக்கு கோடிக்கணக்கான புடவைகளை கண்ணன் தந்து அவள் மானம் காத்தான்.

அது அவள் செய்த வினைப் பயன்.

ஒரு முறை, பிரமன் ஏதோ தவறு செய்ய, அவனின் ஒரு  தலையை சிவன் கிள்ளி எடுத்து விட்டார்.  அந்தத் தலை சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டது. என்ன செய்தும் கையில் இருந்து அந்த மண்டை ஓடு நீங்கவில்லை.  சிவன் செய்த வினைக்கு பரிகாரம், அவர் அந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து  உண்டால் தான் போகும் என்பது.

வினை யாரையும் விடாது.

கடவுள்கள் பாடே அப்படி என்றால்....

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அந்த ஊருக்குப் போகும் வழிப் படம் (map ) வேண்டும் அல்லவா. எப்படி போவது, எங்கே திரும்புவது, [போகிற வழியில் என்ன என்ன ஊர்கள் வரும் என்றெல்லாம் தெரிந்து இருப்பது நல்லது அல்லவா?

சொர்கத்துக்கு எப்படி போவது? வழிப் படம் இருக்கிறதா ? முன்ன பின்ன போனதும் கிடையாது. போய் வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால் அப்படி யாரும் இருப்பதாய் தெரியவில்லை.

பின் எப்படி போவது?

வழிப்படம் இருக்கிறது என்கிறார் திருநாவுக்கரசர். அந்த மேப்பை வைத்துக் கொண்டு  அதே வழியில் நாம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்



ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
    வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
    தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே


பொருள்

ஊனுடுத்தி  = ஆடை உடுத்துவோம். அது போல, இந்த உடம்பு சதையை உடுத்தி இருக்கிறதாம்.

யொன்பது வாசல் வைத்து = ஒன்பது வாசல் வைத்து

வொள்ளெலும்பு தூணா  = வெள்ளை எலும்புகளை தூண் போல வைத்து

வுரோமம் மேய்ந்து = அதற்கு மேல் கூரையாக முடியை வைத்து

தாமெடுத்த  கூரை = அவர் தாமே எடுத்த கூரை வீடு

தவிரப் = நீங்கும்படி ஆகும் சமயத்தில்

போவார் =  தானே வலிந்து போவார்

தயக்கம் பலபடைத்தார் = மயங்கும் படி பல வடிவில் வருவார்

தாமரையினார் = தாவுகின்ற மானை (தா+ மரை ) கையில் கொண்டவர் (சிவன்)


கானெடுத்து = கானகத்தில்

மாமயில்கள் = பெரிய மயில்கள்

ஆலுஞ் சோலைக்  = ஆடும் சோலை

கழிப்பாலை = கழிப்பாலை என்ற ஊரில்

மேய = உள்ள

கபாலப்பனார் = கையில் கபலாத்தைக் கொண்டவர் (மேலே உள்ள கதையைப் படிக்கவும்)

வானிடத்தை = வான் இடத்தில்

ஊடறுத்து = ஊடே அறுத்து

வல்லைச் செல்லும் = விரைந்து செல்லும்

வழிவைத்தார்க் = வழி வைத்தார்

கவ்வழியே போதும் நாமே = அந்த வழியாக நாம் போவோம்



அவன் இருக்கும் இடத்துக்கு செல்லும் வழியை அவன் அமைத்துக் கொடுத்து இருக்கிறான். அந்த வழியில் போனால், சீக்கிரத்தில் அவனை அடையலாம்.

அந்த வழி பற்றி திருப்பாலை தலத்து இறைவன் மேல் நாவுக்கரசர் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

வேறென்ன சொல்லப் போகிறேன், முடிந்தால், மூலத்தை தேடிப் படியுங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும் பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_25.html

Wednesday, July 24, 2019

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி 


கோபம் மற்றும் காமம்.

இவை பற்றி நமது இலக்கியங்கள் மிக மிக ஆழமாக பேசி இருக்கின்றன.

கோபமும் காமமும் உயிர்க் குணங்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் மற்றைய குணங்கள் வெளியில் இருந்து உள்ளே வந்து நம்மைத் தூண்டுபவை. காமமும், கோபமும் நமக்குள்ளேயே இருந்து உள்ளிருந்து வெளியே செல்வன என்கிறார்கள்.

இராமாயணத்தில், விஸ்வாமித்ரன் , தயரதனிடம் தன்னுடைய வேள்வியை காக்க இராம இலக்குவனர்களை துணையாக அனுப்பு என்று கேட்கிறான். வேள்வியை யாரிடம் இருந்து காக்க வேண்டும் என்று கேட்கிறான் தெரியுமா ?

"அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்"

வெகுளி என்றால் கோபம். காமம் மற்றும் வெகுளி என்ற அரக்கர்களிடம் இருந்து என் வேள்வியை காப்பாற்ற இராம இலக்குவனர்களை தா என்று வேண்டுகிறான்.

வேள்விக்கு இடையூறு செய்பவர்கள் ஏதோ கருப்பா, குண்டா, கோரை பற்களோடு வரும் அரக்கர்கள் அல்ல. அது எல்லாம் ஒரு உவமை. உண்மையான இடையூறு எது தெரியுமா , நமக்குள் இருக்கும் காமமும் கோபமும் தான்.

“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்



எனக்கு காமம் பற்றி புரிகிறது. கோபம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக  புரிய ஆரம்பித்து இருக்கிறது.

கோபம் என்றால் ஏதோ கத்துவது, சாமான்களை தூக்கி எறிவது , சுடு சொல் கூறுவது , பிறர் மனம் புண் படும்படி பேசுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கோபம் என்பது மிக ஆழமான ஒன்று என்று அறியத் தொடங்கி இருக்கிறேன்.

கோபம் பிறர் மேல் மட்டும் வருவது அல்ல. நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம்.

நான் அழகாக இல்லை, நிறைய படிக்கவில்லை, நிறைய சம்பாதிக்க வில்லை, பேரும் புகழும் சேர்க்கவில்லை , நான் எல்லாம் எதுக்கு இலாயக்கு என்று  நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம். அந்த கோபம் மன அழுத்தம் (anxiety  ), மன பதட்டம் (nevousness ),  மனச் சோர்வு (depression ) என்று கொண்டு விடலாம்.

இவை நமக்கு எளிதில் புரிவதில்லை.


திருநாவுக்கரசர் சொல்கிறார் ....

"நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ   நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம்  மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு  சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த  சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு  செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக  கவிழ்ந்து விடுகிறது. அந்த சமயத்தில், நடு கடலில், இருட்டில், எலும்பு  உறையும் குளிர்ந்த நீரில், உடைத்த படகோடு தத்தளிக்கும் போது, இறைவா, உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய் , ஒற்றியூர் உடைய கோவே "


பாடல்




மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

பொருள்

மனமெனும் தோணி பற்றி  = மனம் என்ற படகைப் பற்றிக் கொண்டு

மதியெனுங் கோலை ஊன்றிச் = அறிவு என்ற துடுப்பை ஊன்றி

சினமெனும் சரக்கை யேற்றிச் = சினம் என்ற சரக்கை ஏற்றி கொண்டு

செறிகட லோடும் போது = அடர்ந்த கடலில் போகும் போது  (பிறவிப் பெருங்கடல்)

மனனெனும் பாறை தாக்கி  = மன்மதன், காமம் என்ற பாறை தாக்கி

மறியும்போது = தலைகீழாக கவிழும் போது

அறிய  வொண்ணா = அறிந்து கொள்ள முடியாத

துனையுனு முணர்வை நல்கா = உனை உன்னும் உணர்வை நல்காய்

யொற்றியூ ருடைய கோவே. = ஒற்றியூர் உடைய கோவே

இறைவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன்.

அவனை அறிய முடியாது. உணர முடியும்.

"அறிய முடியாத உன்னை, உணர்வைத் தருவாய்" என்று வேண்டுகிறார்.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் , செல்வர் சிவ புரம் " என்பார் மணிவாசகர்.

"உலகெல்லாம் உணர்ந்து, ஓதற்கு அறியவன் " என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.


நாம் அறிவைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சிகளை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.

உணர்ச்சிகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது.

எதையும், அறிவுக் கண் கொண்டு பார்க்கத் தோன்றுகிறது.

உணர்வுகளை கண்டு நாம் பயப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

உளவியல் அறிஞர்கள் "emotional intelligence" பற்றி நிறைய பேசுகிறார்கள்.

நாவுக்கரசர் சொல்கிறார், அறிவின் துணையோடு செல்லும் போது காமம் என்ற  பாறையில் முட்டிக் கொள்கிறோம் என்று.

அறிவு ஏன் அந்த விபத்தை தடுக்கவில்லை?

அந்த சமயத்தில் கூட 'உனை அறியும் அறிவை நல்காய்" என்று அவர் கேட்கவில்லை.

"உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று வேண்டுகிறார்.

காமம் என்ற உணர்வால் தான், மனம் என்ற தோணி முட்டி உடைந்தது. பின் எதற்கு  "உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று மீண்டும் உணர்ச்சியை தா  என்று  கேட்கிறார்?

விளக்கம் கேட்கலாம் என்றால், அவர் இல்லை.

நாம் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

தேவாரத்தில், ஒரு பாடலுக்குள் இவ்வளவு இருக்கும் என்றால், முழுவதிலும் எவ்வளவு இருக்கும்?

நேரம் கிடைக்கும் போது, மூல நூலை படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_24.html

Wednesday, November 21, 2018

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார்

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார் 


நாளும் அலைந்து திரிகிறோம். கடுமையாக உழைக்கிறோம். அதைச் செய், இதைச் செய் என்று ஆலாய் பறக்கிறோம்.

கடைசியில் கண்டது என்ன?

வீட்டு மனைப் பத்திரங்களும் , பங்கு சந்தை certificate களும், வாங்கிக் கணக்குமே. வாழ் நாள் எல்லாம் இதற்கே போய் விட்டது. இதனால் ஏதாவது பலன் உண்டா என்றால் இல்லை. எப்போவாது அனுபவித்துக் கொள்ளலாம் என்று இருந்தோம்...அந்த நாள் வரவே இல்லை.

பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்தோம்...அவர்களோ, "இதெல்லாம் ஒரு பெரிய சொத்தா..." என்று எள்ளி நகையாடுகிறார்கள். என்ன செய்வது?


இவ்வளவு முயற்சியும் வீணே போய் விட்டதா ? "நமக்கு" ஒரு பலனும் இல்லையா ?

சுந்தரர் திகைக்கிறார். பணம் எல்லாம் சேர்த்து வைத்து விட்டு வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் என்று இருந்தேனே...இப்போது ஒன்றுக்கும் இல்லாமல் தனித்து நிற்கிறேனே என்று திகைக்கிறார்.

நல்ல நிலத்தில் நீர் பாய்ச்சினால் அதனால் பலன் கிடைக்கும். பாலைவனத்தில் நீர் பாய்ச்சினால்?


"இறைவன் மேல், உண்மையின் மேல் பற்று இல்லாமல் வாழ்ந்து, பாழ் நிலத்துக்கே நீர் பாய்ச்சினேன். பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பட்டால் தான் அறிவு வரும் கயவர்களுக்கு என்று சொல்லுவது போல நான் இருக்கிறேன். இப்படி இருக்கிறேன். என் செய்வேன்? உலக வாழ்க்கைச் சிக்கலில் சிக்கி ஞானம் தரும் நூல் ஒன்றையும் கற்கவிலை. இந்தப் பிறவி என்ற பந்தத்தில் இருந்து விடுபட ஒரு வழியும் தெரியவில்லையே " என்று திகைக்கிறார்....

பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.

பொருள்


பற்றிலா = பற்று இல்லா (இறைவன் மேல் பற்று இல்லாத)

வாழ்க்கை வாழ்ந்து  = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பாழ் நிலத்துக்கே

நீரி றைத்தேன் = நீர் இறைத்தேன்

உற்றலாற் = உற்று + அல்லால் = பட்டால் ஒழிய

கயவர் = கெட்டவர்கள்

தேறா ரென்னுங்  = தேறார் எனும். தேற மாட்டார்கள் என்னும்

கட் டுரையோ டொத்தேன் = கட்டுரையோடு ஒத்தேன். பழமொழிக்கு பொருள் ஆனேன்

எற்றுளேன் = எதற்காக இருக்கிறேன்

என் செய்கேன் நான்  = என்ன செய்வேன்  நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானமேதும் = ஞானம் எதுவும்

கற்றிலேன் = கற்றுக் கொள்ள வில்லை

களைகண்காணேன் =  இந்த   சிக்கலில் இருந்து  விடுபடும் வழியும் அரிய மாட்டேன்

கடவூர்வீ ரட்டனீரே. = திருக்கடவூரில் உள்ள வீரட்டனாரே

பட்டுத் தெளிவதை விட, கற்றுத் தெரிவது நல்லது.

செய்யும் செயல்களின் விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். சும்மா  கண்ணை மூடிக் கொண்டு குருட்டுத் தனமாக எதையாவது செய்யக் கூடாது.

இருக்கும் நாள் குறைவு. அதை சிறப்பாக செலவழிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_53.html


Tuesday, October 30, 2018

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன்

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன் 


தெரு நாய் பார்த்து இருக்கிறீர்களா? யாரவது காரில் போனால், அந்த காரை துரத்தும். குலைக்கும். எங்கோ வேறு ஒரு தெருவில் ஒரு நாய் குரைத்தால், இந்த நாயும் குரைக்கும். காரணம் இல்லாமல் மற்ற நாய்களோடு சண்டை போடும். இங்கிருந்து அங்கு ஓடும். பின் அங்கிருந்து இங்கு ஓடி வரும். நாள் பூராவும் ஏதோ சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்.

இரவில் களைத்துப் போய் விடும்.

சரி, உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் தெரியாது. ஓடினேன், வந்தேன், குறைத்தேன், கார்களை துரத்தினேன் என்று சொல்லும்.


அந்த நாய்க்கு அவ்வளவுதான் அறிவு.

நமக்கு ?

இத்தனை வயது வரை என்ன செய்தோம்?

25 வயது வரை ஏதேதோ படித்தோம். படித்ததில் ஏதாவது நினைவில் இருக்கிறதா ? அது வாழ்க்கைக்கு எங்காவது உதவுகிறதா ?

சரி, வேலைக்குப் போனோம். சாதித்தது என்ன?  யாருக்கோ பணம் போனது. யாருக்கோ நன்மை கிடைத்தது. நாம் சாதித்தது என்ன.

திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்றோம். அதனால் கிடைத்த பலன் என்ன?

 இப்படி ஒரு குறிக்கோள் இல்லாமல் அந்தத் தெரு நாய் போல அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நாய் போலத்தான் பேயும். ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்.

சுந்தரர் சொல்கிறார் ...

"நாய் போன்ற நான் ஒரு குறிக்கோள் இன்றி பேய் போலத் திரிந்தேன். எப்படியோ பெற  முடியாத உன் அருளைப் பெற்றேன். இனி உனக்கு அடிமை ஆகிவிட்டேன். இனி, நான் என்று ஒன்று இல்லை "

பாடல்

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட் டுறையுள் 
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே.

பொருள்

நாயேன் = நாய் போன்றவனான நான்

பல நாளும் = பல நாட்கள்

நினைப் பின்றி = என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்ற நினவு இல்லாமல்

மனத் துன்னைப் = மனதில் உன்னை

பேயாய்த்திரிந் தெய்த்தேன் = பேய் போல திரிந்தும் உன்னை அடையவில்லை

பெறலாகாவருள் பெற்றேன் =  பெற முடியாத அருளைப் பெற்றேன்

வேயார் = மூங்கில் காடுகள் நிறைந்த

பெண்ணைத் = பெண்ணை ஆற்றின் கரையில்

தென்பால் = தெற்கு பக்கம் உள்ள

வெண்ணெய் = திருவெண்ணெய்

நல்லூரருட் டுறையுள் = நல்லூர் என்ற அருள் தலத்தில்

ஆயா = தலைவனே

உனக் காளாய் = உனக்கு எற்றவனானேன்

இனி அல்லேன் என லாமே. = இனி நான் என்று ஒன்றும் இல்லை என்று ஆகி விட்டேன்

வாழ்வின் குறிக்கோள் என்ன என்று அறிந்து பின் செல்லுங்கள். அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்பார் பட்டினத்து அடிகள்.

இனிமையான பாடல்.

இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_30.html



Wednesday, June 6, 2018

தேவாரம் - அஞ்சினேன்

தேவாரம் - அஞ்சினேன் 


எவ்வளவு துன்பம் இருந்தாலும், வாழ்க்கையை வேண்டாம் என்று யாரும் சொல்லுவது இல்லை. பொறுக்க முடியாத துன்பம் என்று சொன்னாலும், பொறுத்துக் கொண்டு வாழத்தான் ஆசைப்படுவோமே தவிர, வாழ்வை யாரும் முடித்துக் கொள்ள விரும்புவதில்லை.

அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்க்கை வாழத்தானே.

ஆனால், இந்த உடல் மேலும்,  இந்த உலக வாழ்க்கை மேலும் கொண்ட பற்றினால், இதை விட உயர்ந்தவற்றை மறந்து போய் விடுகிறோம்.  உணவு, உறக்கம், உறவுகள் என்று வாழ்க்கை போய் விடுகிறது. இந்த அர்த்தமில்லாத வாழ்வை கண்டு அஞ்சினேன் என்கிறார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.

பாடல்


இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, 
பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, 
திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, 
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

பொருள்

இறைகளோடு = பட்டம் பதவிகளோடு

இசைந்த இன்பம் = பொருந்திய இன்பம்

இன்பத்தோடு = அந்த இன்பத்துக்கு

இசைந்த வாழ்வு = ஏற்ப ஒன்றிய வாழ்வு

பறை கிழித்தனைய = பறை என்ற தோல் இசைக் கருவி கிழிந்ததைப் போல

போர்வை = போர்வை போர்த்திய இந்த உடலை

பற்றி யான் = பற்றிக் கொண்டு நான்

நோக்கினேற்கு = பார்த்தால்

திறை கொணர்ந்து = கப்பம் கொண்டு வந்து தந்து

ஈண்டி = அருகில் வந்து

தேவர் = தேவர்கள்

செம்பொனும் = சிறந்த பொன்னும்

மணியும் = மணியும்

தூவி = தூவி

அறை கழல் = ஒலி எழுப்பும் கழல்களை

இறைஞ்சும் = போற்றும்

ஆரூர் = திருவாரூரில்

அப்பனே! = உள்ள என் தந்தை போன்றவனே

அஞ்சினேனே = நான் அஞ்சினேன்

வாழ்க்கையை கண்டு அஞ்சவில்லை.  வாழ்க்கை வீணாகப் போவதைக் கண்டு அஞ்சுகிறார்.  வாழ்க்கையை அர்த்தம் இல்லாமல் கழிப்பதை கண்டு அஞ்சுகிறார்.

பறை என்பது ஒரு தோல் இசைக் கருவி. மத்தளம் போன்றது. அதன் மேல் உள்ள தோலில் அடித்தால் சப்தம் வரும். அந்த தோல் கிழிந்து போனால் அது எதற்கும் உதவாது.

நமது உடலும் தோலினால் போர்த்திய ஒன்று தான். ஒரே ஒரு வித்தியாசம், இது கிழிந்திருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற வேண்டும் அல்லவா ?

பறை கிழிந்தனைய உடல். அந்த உடல் வேண்டும் சுகத்துக்கு இவ்வளவு அலைச்சல். வாழ் நாள் எல்லாம் இந்த உடல் வேண்டும் சுகத்துக்காக செலவிடுகிறோம். எவ்வளவு பெரிய வீண் வேலை.

அரிதினும் அரிதான இந்த வாழ்க்கையை பெற்று, பின் அதை அர்த்தம் இல்லாமல்  கழிப்பதை கண்டு அவர் அச்சப் படுகிறார்.

அவர் அச்சம் சரிதானே?

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_6.html



Thursday, May 17, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன் 


முன்னுரையாக கீழே உள்ள பதிவைப் படித்து விடுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

நீங்கள் ஆண் என்றால், உங்களுக்குள் இருக்கும்  பெண்ணையும்,
நீங்கள் பெண் என்றால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும்

அடையாளம் கண்டு சேர்வதே உண்மையான இறை தரிசனம் ஆகும்.

மேல் சொன்னப் பாடலில் , ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக வருவதைக் கூறினார்.

இங்கே, சேவலும் , பெண் கோழியும் கூடி குளிர்ந்து வருவதைக் கண்டதாகவும், அதுவே இறை தரிசனம் என்றும் கூறுகிறார்


பாடல்

போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!


உரை
 

போழ் இளங்கண்ணியினானைப் = இளமையான பிறைச் சந்திரனை தலையில் அணிந்தவனை

 பூந்துகிலாளொடும் = பூக்கள் போன்ற மென்மையான ஆடை அணிந்த உமா தேவியோடும்


 பாடி = பாடி

“வாழியம், போற்றி! என்று ஏத்தி, = வாழ்க, சிறக்க என்று உயர்த்திப் பாடி

வட்டம் இட்டு ஆடா வருவேன் = சுற்றி சுற்றி ஆடி வருவேன்


ஆழிவலவன் = திருமால்

நின்று = நின்று

ஏத்தும் = போற்றும்

ஐயாறு அடைகின்றபோது, = திருவையாறு அடைகின்ற போது

கோழி =  சேவல்

பெடையொடும் = பெண் கோழியோடு

கூடிக்  = கூடி

குளிர்ந்து = உள்ளமும் உடலும் குளிர்ந்து

 வருவன கண்டேன் = வருவதைப் பார்த்தேன்

கண்டேன் = கண்டேன்

அவர் திருப்பாதம் = அந்தக் காட்சியில் நான் இறைவனின் பாதங்களைக் கண்டேன்

கண்டு = கண்ட போது

அறியாதன கண்டேன்! = இதுவரை காணாத காட்சியினை கண்டேன்

கூடிய பின் , குளிர்தல்.

அந்தக் குளிர்ச்சியில் இறைவனை காணலாம்.

நாவுக்கரசர் சொல்கிறார்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_17.html

Wednesday, May 16, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்


ஒவ்வொரு குழந்தையும் தாய் மற்றும் தந்தையின் கலப்பில் உருவாவதுதான். அப்படி பிறக்கும் குழந்தைகள் தாய் மற்றும் தந்தையின் குணங்களை கொண்டுதான் பிறக்கின்றன.

அதாவது, அது ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி அதனிடம் ஆண் மற்றும் பெண் குணம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

ஆண்  குழந்தை என்றால் அதனிடம் ஆண் குணம் மட்டுமே இருக்கும் என்றில்லை. பெண் குழந்தைக்கும் அதே விதிதான்.

வளரும் போது என்ன ஆகிறது என்றால், இந்த சமுதாயம் ஆண் குழந்தையிடம் சில குணங்களையும், பெண் குழந்தையிடம் வேறு சில குணங்களையும் வளர விடாமல் தடுக்கிறது.

ஆண் பிள்ளை என்றால் அழக் கூடாது. பொம்மை வைத்து விளையாடக் கூடாது. வீட்டுக்குளேயே இருக்கக் கூடாது என்றும்

பெண் குழந்தை என்றால் அழலாம், மென்மையாக இருக்க  வேண்டும், அதிராமல் நடக்க வேண்டும், விளக்கு வைத்தால் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்றும் சில விதிகளை வரையறுக்கிறது.

எனவே ஆண் சில குணங்களை வலுக் கட்டாயமாக அழுத்தி வைக்கிறான் . (Suppress). பெண்ணும் அப்படித்தான்.

இப்படி சில குணங்கள் அழுத்தி மழுங்கடிக்கப் பட்டதால் ஒவ்வொருவரும் குறை மனிதர்களாவே இருக்கிறோம்.

இந்தக் குறையை நிரப்ப ஒரு ஆண் , வேறொரு பெண்ணையும், ஒரு பெண் வேறொரு ஆணையும் தேடுகிறார்கள். கிடைத்தால் நல்லது. பெரும்பாலான சமயம் கிடைப்பதில்லை. குறை நீடிக்கிறது.

ஒவ்வொரு ஆணுக்குளும் ஒரு பெண் உறங்கிக் கிடக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உறங்கிக் கிடக்கிறான்.

நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுக்குள் இருக்கும் பெண்ணை இனம் கண்டு ஒன்றாக இணைவதுதான் உச்ச கட்ட இன்பம் (orgasm). உங்களுக்குள் இருக்கும் பெண்ணை வெளியில் தேடாதீர்கள். உள்ளே தேடுங்கள்.

பெண்ணுக்கும் அப்படியே.

உண்மையான திருமணம் என்பது உங்களுக்குள் இருக்கும் ஆணுடனோ பெண்ணுடனோ நடப்பதுதான்.

அப்படி சக்தியும் சிவனும் ஒன்று சேரும் போது, அதி உயர் இன்பம் பிறக்கும். அதுவே இறை தரிசனம். நீங்கள் முழு மனிதராய் மாறுவது அப்போதுதான்.

மனிதன் இறைவனாய் மாறுவதும் அப்போதுதான்.

சரி, இதற்கும் தேவாரத்துக்கும் என்ன சம்பந்தம் ?

திரு நாவுக்கரசர் சொல்கிறார்


"காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்"

 காதல் கொண்ட பெண் யானையும், ஆண் யானையும் ஒன்றாக வருவதைக் கண்டேன். அதைக் கண்டவுடன் இறைவனின் திருவடியை கண்டேன். இது வரை கண்டு அறியாத ஒன்றைக் கண்டு கொண்டேன்  என்று.

ஆண் யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவது என்னே பெரிய விஷயமா. யானைகள் ஒன்றாக வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

ஆணும் பெண்ணும் இணைவது, ஒரு சக்தியாக மாறுவது இறைக் காட்சி என்கிறார்.

சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழி வகுக்கும்.  சிற்றின்பத்தை அறியாமல், அதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை அறியாமல், அதைக் கடக்காமல் பேரின்பத்தை அடையவே முடியாது.

என்பது வயதில் நாவுக்கரசர் சொல்கிறார். அனுபவ அறிவு.

பாடல்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html