Thursday, November 29, 2018

பெரிய புராணம் - பித்தனோ?

பெரிய புராணம் - பித்தனோ?



இதை படிக்கத் தொடங்கும் முன், முந்திய பிளாக்கை படித்து விடுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html

இறைவனை எப்படி வழி படலாம்?

பூக்கள் இட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, பட்டாடை சாத்தி, பன்னீர், நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, துதிப் பாடல்களைப் பாடி வழி படலாம் என்று சொல்லுவீர்கள்.

இறைவனை எப்படியும் வழி படலாம் என்று சொல்ல வந்ததுதான் பெரிய புராணம். எனவே தான் அதற்கு பெரிய புராணம் என்று பெயர்.

இறைவனை இப்படித்தான் வழி பட வேண்டும் என்று அல்ல.

சுந்தரர் , இறைவனை பைத்தியக்காரன் என்று திட்டுகிறார். யோசித்துப் பாருங்கள், வேறு எந்த மதத்திலாவது, அந்த மதத்தின் மூலக் கடவுளை பைத்தியம் என்று சொல்ல முடியுமா ? சொன்னால் விட்டு விடுவார்களா?

சைவ சமயம் ஒன்றுதான் அந்த சுதந்திரத்தைத் தருகிறது.

நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒன்றும் தெரியாத கடவுளை எப்படி வழிபடுவது? எனவே தான் சைவம் நம் அறியாமையை ஏற்றுக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் வழி படு என்று சுதந்திரம் தருகிறது.

நேரில் வந்த சிவ பெருமானை, சுந்தரர் "நீ என்னை உன் அடிமை என்கிறாய். எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா. இப்படிச் சொல்கிறாயே நீ என்ன பைத்தியமா " என்று கேட்டார்.

பாடல்


மாசு இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி யால் சிரிப்பு நீங்கி
‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?” என்றார்.


பொருள்

மாசு இலா = குற்றம் இல்லாத

மரபில் வந்த = வழியில் வந்த

வள்ளல் = வள்ளல் குணம் கொண்ட சுந்தரர்

வேதியனை நோக்கி = அங்கு வந்த வயதான வேதியனை நோக்கி

நேசம் முன் கிடந்த = முன்பு இருந்த நேசம் நீங்கி

சிந்தை நெகிழ்ச்சி யால்  = சிந்தை நெகிழ்ந்து

சிரிப்பு நீங்கி = முகத்தில் இருந்த சிரிப்பு நீங்கி

‘ஆசு இல் = குற்றம் அற்ற

அந்தணர்கள் = அந்தணர்கள்

வேறு ஓர் அந்தணர்க்கு = வேறு ஒரு அந்தணர்க்கு

அடிமை ஆதல் = அடிமை ஆவது

பேச = பேசும்படி

இன்று உன்னைக் கேட்டோம் = இன்று நீ சொல்லக் கேட்டோம்

பித்தனோ = நீ என்ன பித்தனா ?

மறையோய்?” = மறை ஓதியவனே

என்றார். = என்று கூறினார்.

இறைவன் நேரில் வந்திருக்கிறான். அடையாளம் தெரியவில்லை. நீ என்ன பைத்தியமா  என்று கேட்டார் சுந்தரர். கேட்டது போகட்டும், அப்படி சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவனை பித்தன் என்று இகழ்ந்து கூறிய சுந்தரரை நாயன்மார்களில் சிறந்த நால்வரில் ஒருவராக சைவ சமயம் போற்றுகிறது.

தோத்திரம் தந்த நால்வரில் சுந்தரர் ஒருவர்.

என்னடா இது, நாம் பெரிதாக நினைத்து வழிபடும் கடவுளை திட்டுகிறானே என்று அவரை ஒதுக்கி வைக்கவில்லை. தலையில் வைத்து கொண்டாடுகிறது சைவ சமயம்.


சைவ சமயத்தின் நீளமும் ஆழமும் புரிகிறதா?

சரி, நாம் கொண்டாடுவது இருக்கட்டும். தன்னை நிந்தனை செய்த சுந்தரரை சிவன் என்ன செய்தார் தெரியுமா ?

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_29.html

Saturday, November 24, 2018

பெரிய புராணம் - என் அடியான்

பெரிய புராணம் - என் அடியான் 


பக்தி செலுத்துபவர்களைக் கேட்டால் "இறைவனை வாழ் நாள் எல்லாம் தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள்" என்பார்கள். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பார்கள்.

இறைவனை எப்படித் தேடுவது?

விலாசம் இருந்தால் தேடி கண்டு பிடிக்கலாம். இறைவன் இருக்கும் இடத்தின் விலாசம் தெரியுமா ?

புகைப் படம் இருந்தால் விசாரித்து அறியலாம்? புகைப் படம் இருக்கிறதா ?

ஆள் இப்படி இருப்பார் என்று தெரிந்தலாவது, அக்கம் பக்கம் கேட்டு அறியலாம். இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தெரியுமா ?

எதை வைத்துக் கொண்டு தேடுவது?

சரி, எப்படியோ அவன்/அவள்/அது இருக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். ஆளையும் நேரில் பார்த்தாகி விட்டது. அவர்தான் இறைவன் என்று எப்படி அறிந்து கொள்வது. ஒரு வேளை நாலு கை, நெற்றியில் ஒரு கண், நாலு தலை என்று ஏதாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வேறு மாதிரி இருந்தால்?


இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது என்கிறார் திரு நாவுக்கரசர்.

"இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒண்ணாதே "

என்கிறார்.




மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே



இறைவனே நேரில் வந்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. இந்த இலட்சணத்தில் தேடுவது என்பது எவ்வளவு நகைப்பு உரிய ஒரு செயல் என்று புரிகிறது அல்லவா ?

இறைவன் நேரில் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களாலும் என்னாலும் மட்டும் அல்ல, சுந்தரராலும், மாணிக்கவாசகராலும் நேரில் வந்த இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நம்மால் முடியுமா?

இறைவனே நேரில் வந்து அவனை அறியும் அறிவை நமக்குத் தந்தால் தான் உண்டு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.

நீங்களும் நானும் தேடுவது வியர்த்தம்.


சுந்தரரின் flashback.

சுந்தரர், கைலாயத்தில், சிவ பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். சிவனுக்கு மிக மிக அருகில் இருந்து தொண்டு செய்தவர். ஒரு நாள் அங்கிருந்த இரண்டு பெண்களின் மேல் ஒரு கணம் புத்தி தடுமாறினார். அதை அறிந்த சிவன், "நீ பூ லோகத்தில் போய் பிறந்து, அந்த இரண்டு பெண்களையும் மணந்து, இல்லறத்தில் இருந்து பின் எம்மை அடைவாய் " என்று சபித்து விட்டார்.

பதறிப் போனார் சுந்தரர். "ஐயனே, பூலோகத்தில் பிறப்பது இருக்கட்டும். நீ தான் வந்து என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.

இறைவனும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது கதைக்கு வருவோம்.

சுந்தரர் பிறந்து விட்டார். திருமணம் ஆகப் போகிறது. சொல்லியபடி சிவன் அங்கே வந்து, திருமணத்தை நிறுத்தும்படி  கூறினார். அந்தகிருந்த   மக்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். "யார்ரா இந்த கிழவன்...இப்படி நடுவில் புகுந்து திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறானே " என்று நினைத்தார்கள்.

"ஏன் இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த முதியவர் "இந்த சுந்தரன் எனக்கு அடிமை" என்று கூறினார்.


பாடல்

‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான்.

பொருள்

‘ஆவது இது = நடக்கப் போவது இது

கேண் மின் =கேளுங்கள்

மறையோர்! = மறையவர்களே

என் அடியான் = என்னுடைய அடிமை

இந் நாவல் நகர் ஊரன்; = இந்த நாவல் நகர் ஊரில் பிறந்த இவன்


இது நான் மொழிவது’  = இது நான் சொல்வது

என்றான் = என்றான்

தேவரையும் = தேவர்களையும்

மால் = திருமால்

அயன் = பிரம்மா

முதல் = முதலிய

திருவின் மிக்கோர் = சிறப்பு மிகுந்த

யாவரையும் = அனைவரையும்

வேறு அடிமை யா = வேறு விதங்களில் அடிமையாக

உடைய எம்மான். = உடைய எம் பெருமான்



தன்னை தடுத்து ஆட் கொள்ளும்படி சுந்தரர்தான் வேண்டினார். இறைவன் நேரில்  வந்திருக்கிறான். அவரால் அடையாளம் காண முடியவில்லை.

மாறாக என்ன செய்தார் தெரியுமா ?

அடுத்த ப்ளாகில் பார்ப்போமா ....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html


Wednesday, November 21, 2018

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார்

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார் 


நாளும் அலைந்து திரிகிறோம். கடுமையாக உழைக்கிறோம். அதைச் செய், இதைச் செய் என்று ஆலாய் பறக்கிறோம்.

கடைசியில் கண்டது என்ன?

வீட்டு மனைப் பத்திரங்களும் , பங்கு சந்தை certificate களும், வாங்கிக் கணக்குமே. வாழ் நாள் எல்லாம் இதற்கே போய் விட்டது. இதனால் ஏதாவது பலன் உண்டா என்றால் இல்லை. எப்போவாது அனுபவித்துக் கொள்ளலாம் என்று இருந்தோம்...அந்த நாள் வரவே இல்லை.

பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்தோம்...அவர்களோ, "இதெல்லாம் ஒரு பெரிய சொத்தா..." என்று எள்ளி நகையாடுகிறார்கள். என்ன செய்வது?


இவ்வளவு முயற்சியும் வீணே போய் விட்டதா ? "நமக்கு" ஒரு பலனும் இல்லையா ?

சுந்தரர் திகைக்கிறார். பணம் எல்லாம் சேர்த்து வைத்து விட்டு வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் என்று இருந்தேனே...இப்போது ஒன்றுக்கும் இல்லாமல் தனித்து நிற்கிறேனே என்று திகைக்கிறார்.

நல்ல நிலத்தில் நீர் பாய்ச்சினால் அதனால் பலன் கிடைக்கும். பாலைவனத்தில் நீர் பாய்ச்சினால்?


"இறைவன் மேல், உண்மையின் மேல் பற்று இல்லாமல் வாழ்ந்து, பாழ் நிலத்துக்கே நீர் பாய்ச்சினேன். பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பட்டால் தான் அறிவு வரும் கயவர்களுக்கு என்று சொல்லுவது போல நான் இருக்கிறேன். இப்படி இருக்கிறேன். என் செய்வேன்? உலக வாழ்க்கைச் சிக்கலில் சிக்கி ஞானம் தரும் நூல் ஒன்றையும் கற்கவிலை. இந்தப் பிறவி என்ற பந்தத்தில் இருந்து விடுபட ஒரு வழியும் தெரியவில்லையே " என்று திகைக்கிறார்....

பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.

பொருள்


பற்றிலா = பற்று இல்லா (இறைவன் மேல் பற்று இல்லாத)

வாழ்க்கை வாழ்ந்து  = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பாழ் நிலத்துக்கே

நீரி றைத்தேன் = நீர் இறைத்தேன்

உற்றலாற் = உற்று + அல்லால் = பட்டால் ஒழிய

கயவர் = கெட்டவர்கள்

தேறா ரென்னுங்  = தேறார் எனும். தேற மாட்டார்கள் என்னும்

கட் டுரையோ டொத்தேன் = கட்டுரையோடு ஒத்தேன். பழமொழிக்கு பொருள் ஆனேன்

எற்றுளேன் = எதற்காக இருக்கிறேன்

என் செய்கேன் நான்  = என்ன செய்வேன்  நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானமேதும் = ஞானம் எதுவும்

கற்றிலேன் = கற்றுக் கொள்ள வில்லை

களைகண்காணேன் =  இந்த   சிக்கலில் இருந்து  விடுபடும் வழியும் அரிய மாட்டேன்

கடவூர்வீ ரட்டனீரே. = திருக்கடவூரில் உள்ள வீரட்டனாரே

பட்டுத் தெளிவதை விட, கற்றுத் தெரிவது நல்லது.

செய்யும் செயல்களின் விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். சும்மா  கண்ணை மூடிக் கொண்டு குருட்டுத் தனமாக எதையாவது செய்யக் கூடாது.

இருக்கும் நாள் குறைவு. அதை சிறப்பாக செலவழிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_53.html


கம்ப இராமாயணம் - ஒத்தது

கம்ப இராமாயணம் - ஒத்தது


வெற்றி பெற்று விட்டால், "என்னைப் போல் யார் உண்டு. நான் எவ்வளவு திறமைசாலி தெரியுமா " என்று நினைப்பதும், தோல்வி அடைந்து விட்டால் ஏதோ இந்த உலகமே தனக்கு எதிராக சதி செய்வது போலவும் நினைப்பது மனித இயல்பு.

வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் ஒருவர் மட்டுமே காரணம் ஆகி விட முடியாது. வெற்றியோ தோல்வியோ அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். சரியான நேரத்தில் அல்லது பிழையான நேரத்தில் எடுத்த முடிவுகள், ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் நாம் செய்யும் ஆராய்ச்சி, துணை, நட்பு, இப்படி பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து நம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

எப்படி வெற்றிக்கு நாம் முழு காரணம் இல்லையோ, தோல்விக்கும் நாம் முழு காரணம் இல்லை.

ஆனால் இது வெற்றி வரும் போது புரிவது இல்லை. வெற்றி வரும் போது தலை கால் தெரியாமல் ஆடுவது. அப்படி என்றால் தோல்வி வரும் போது துவண்டு போவது என்பது கட்டாயம்.

முதல் நாள் போரில் இராவணன் தோல்வி அடைந்து அரண்மனைக்கு வருகிறான்.

அவன் எப்பேர்பட்டவன் ? நமது வாழ்க்கையை கோள்கள் தீர்மானிக்கின்றன. கோள்களின் வாழ்க்கையை தீர்மானம் செய்தவன் இராவணன். ஒன்பது கோள்களையும் பிடித்து வந்து தனது அரியணை படியில் படுக்க வைத்து அவற்றின் மேல் ஏறி நடந்து செல்வான் அவன். அவ்வளவு ஆற்றல்.

அந்த வெற்றிக்குக் காரணம் யார் ?

அவன் செய்த தவத்தால் கொற்றவை என்ற ஒரு பெண் தெய்வம் அவனை நோக்கிக் கொண்டே இருந்தாள். அவள் பார்வை அவன் மேல் படும் வரை அவனுக்கு வெற்றி வந்து கொண்டு இருந்தது. அவள் பார்வையை திருப்பினாள். அவன் வெற்றி போய் விட்டது.

துவண்டு போய் வருகிறான். வருகிற வழியில் அழகான பெண்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வை எல்லாம் கூரிய வாளைப் போல இருக்கிறது. பிள்ளைகள் பேசுவது கூட இராமனின் அம்பு போல குத்துகிறது. வாடுகிறான்.


பாடல்


நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம

வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;--

கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்

தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை.


பொருள்

நாள் ஒத்த = நாளில் மலர்ந்த தாமரை மலரைப் போன்ற

நளினம் அன்ன = அழகான

முகத்தியர் = முகத்தைக் கொண்ட பெண்களின்

நயனம் எல்லாம் = கண்கள் எல்லாம்


வாள் ஒத்த; = கூர்மையான வாளைப் போல இருந்தன (இராவணனுக்கு)

மைந்தர் வார்த்தை = பிள்ளைகளின் பேச்சு

இராகவன் வாளி ஒத்த = இராமனின் அம்பை போல துன்பம் செய்தன

கோள் ஒத்த = ஒன்பது கோள்களையும்

சிறை வைத்து = சிறை வைத்த்து

ஆண்ட = ஆட்சி செய்த

கொற்றவற்கு = மன்னனுக்கு

அற்றைநாள் = அந்த நாள்

தன் = தன்னுடைய

தோள் ஒத்த = தோள்களை போல (மதர்த்து நின்ற)

துணை = துணையான இரண்டு

மென் = மென்மையான

கொங்கை = மார்பகங்களைக் கொண்ட (கொற்றவையின்)

நோக்கு = பார்வை

அங்குத் தொடர்கிலாமை = அங்கு தொடர்ந்து வராமையால்

சில பாடங்கள்

முதலாவது, வாழ்வில் வெற்றி தோல்வி வரும் போகும். கிரகங்களை கட்டி ஆண்ட  இராவணனுக்கு தோல்வி வரும் என்றால் நாம் எம்மாத்திரம். ஏதோ நாம் தான் உலகிலேயே பெரிய பலசாலி, புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டாவது, வெற்றியில் ஆடினால், தோல்வியில் மனைவியின் அன்பு பார்வை கூட  சுட்டெரிப்பது போல  இருக்கும்.பிள்ளைகளின் மழலை கூட துன்பம் தரும். நிதானம் வேண்டும்.

மூன்றாவது, வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை. அதிர்ஷட தேவதையின் பார்வை திரும்பினால் ஆனானப் பட்டவனும் தோல்வியை ருசிக்கத்தான் வேண்டி இருக்கும்.

நான்காவது, நாம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நமது மற்றும் அவர்களின் வெற்றி தோல்வியை வைத்ததே எடை போடுகிறோம். பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க வேண்டும், கணவன் நிறைய சம்பாதிக்க வேண்டும்,  மனைவி சினிமாவில் வரும் நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்...இதில் எதுவும் குறைந்தால் நமக்கு வருத்தம் வருகிறது. பிள்ளைகள், மார்க் குறைந்தால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று கவலைப் படுகிறார்கள்.  வேலை போய் விட்டால் மனைவி நம்மை மதிப்பாளோ மாட்டாளோ என்று கணவன்  பயப்படுகிறான். வேலையில் சம்பள உயர்வு வரவில்லை என்றால் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். இது மாற வேண்டும். வெற்றியோ தோல்வியோ, மனிதர்களை மனிதர்களாக மதிக்க, நேசிக்க கற்க வேண்டும். முதலில் நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி எது வந்தாலும் நீங்கள் நல்லவர், அன்பானவர், இனிமையானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இல்லை என்றால் , தோல்வி வந்தால் மனைவி முகமும் கத்தி போல அறுக்கும், பிள்ளைகள் குரலும் அம்பு போல குத்தும்.  அது

அது அரக்க குணம். நாம் அரக்கர்கள் இல்லையே. அந்த குணம் நமக்கு எதுக்கு.

வெற்றி தோல்விகளை தள்ளி வைத்து விட்டு வாழ்வை நேசிக்க கற்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_21.html






Tuesday, November 20, 2018

திருக்குறள் - சொல்லும் வலிக்கும்

திருக்குறள் - சொல்லும் வலிக்கும் 


ஒரு சொல் இதம் தரும்.

ஒரு சொல் வலி தரும்.

தெரியும்தானே?

சிலர் பேசுவது மென்மையாக, அழகாக, இதமாக இருக்கும். சிலர் எப்போது வாயைத் திறந்தாலும் சுருக் சுருக் என்று குத்துவார்கள். ஏதாவது மனம் சங்கடப் படும் படி பேசுவார்கள். அபசகுனமாக ஏதாவது சொல்லி வைப்பார்கள். அது நம் மனதில் கிடந்து நம்மை குழப்பிக் கொண்டே இருக்கும்.

சொற்களை , யோசித்து, அவற்றின் அர்த்தம் தெரிந்து , தெளிவாக பேச வேண்டும்.

அவனுடைய காதலி மிக மிக மென்மையானவள். அவள் குரல், அவள் பேசும் விதம் எல்லாமே மென்மையாக இருக்கும். இவ்வளவு மென்மையாக பேசுபவள் உடலும் மென்மையாகத்தான் இருக்கும் என்று கருதுகிறான் அவன். மென்மை என்றால் எவ்வளவு மென்மை ? அதை எப்படிச் சொல்வது?

அனிச்ச மலரும், அன்னத்தின் சிறக்கும் அவளுடைய பிஞ்சு பாதங்களுக்கு நெருஞ்சி முள் போல குத்துமாம். அப்படி என்றால் அவளுடைய பாதங்கள் எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும் ?


பாடல்


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்

பொருள்

அனிச்சமும் = அனிச்ச மலரும்

அன்னத்தின் தூவியும் = அன்னத்தின் சிறக்கும்

மாதர் = அவளின்

அடிக்கு = பாதங்களுக்கு

நெருஞ்சிப் பழம் = நெருஞ்சிப் பழம்

பாடல் என்னவோ ஏழு வார்த்தைதான். அதில் வள்ளுவர் வைக்கும் நுட்பம் இருக்கிறதே..அடடா ....

நெருஞ்சி என்பது ஒரு சின்ன முள் செடி. அதில் பூ பூத்து, காய் காய்க்கும். அந்த  காயில் முள் இருக்கும். அந்த முள் கூராக இருக்காது. வளையும். நாளடைவில் அந்த காய்  முற்றி கனியாக மாறும். அந்த முள்ளும் கெட்டிப் படும். அந்த சமயத்தில் அந்த முள் நன்றாக குத்தும். வலிக்கும்.

வள்ளுவர் என்ன சொல்லி இருக்க வேண்டும் ?

மாதர் அடிக்கு நெருஞ்சி முள்

என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொல்லவில்லை. நெருஞ்சிப் பழம்  என்கிறார்.

ஏன்?

முள் என்றால், அந்த சொல் கூட குத்துமாம். அவளுக்கு வலிக்குமாம். எனவே  நெருஞ்சிப் பழம்  என்கிறார். பழம் என்றால் மென்மை என்று சொல்லமாலே தெரியும் அல்லவா.

சொல் கூட குத்தி விடக் கூடாது என்று கவனமாக இருக்கிறார் வள்ளுவர்.

பெண் என்பவள் மென்மையானவள்.  இன்னொருத்தர் வீட்டுக்குப் போகிறவள்.  நம் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெண்ணை  பூ போல பெற்றோர்கள் வளர்ப்பார்கள். அந்த மென்மை அவளிடம் தங்கி விடும்.

அப்படி மென்மையாக இருக்கும் அந்தப் கணவனுக்காக, காதலனுக்காக  எவ்வளவோ  துன்பங்களையும் வலிகளையும் பொறுத்துக் கொள்கிறாள்.

நமக்காக எவ்வளவு துன்பங்களை அவள் தாங்கிக் கொள்கிறாள் என்று நினைக்கும் போது, அவள் மேல் இன்னும் அன்பு பிறக்கிறது.

பெண்ணின் மென்மையை போற்றாத இலக்கியம் இல்லை.

நாளெல்லாம் வேலை செய்கிறாள். நின்று நின்று பாவம் கால் கடுக்குமே என்று  வள்ளியின் பாதங்களை முருகன் வருடினானாம்.

"பாகு கனி மொழி மாது குற மகள்  பாதம் வருடிய மணவாளா "

என்பார் அருணகிரி நாதர்.

செல்வத்தையெல்லாம் இழந்து விட்டு வந்து நிற்கிறான் கோவலன். காலில் ஒரு சிலம்பு மட்டும் இருக்கிறது கண்ணகியிடம். சரி அதை வைத்து தொழில் தொடங்கலாம்  என்று இருவரும் மதுரை நோக்கி புறப்படுகிறார்கள்.

கோவலன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது. பாவம் இந்தப் பெண். என்னால் தானே அவளுக்கு இவ்வளவு சிரமம் என்று வருந்துகிறான்.


வீட்டை விட்டு வெளியே போனதே இல்லை. பாவம் இப்போது காடு மேடெல்லாம் நடக்கிறாள்.

அவள் பாதம் எவ்வளவு சிரமப் படும் என்று நினைத்து வருந்துகிறான். இந்த பூமிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. அவள் பாதங்களை இவ்வளவு குத்தி வருந்த வைக்கிறதே என்று கல்லும் முள்ளும் நிறைந்த பூமியை பார்த்து நினைக்கிறான்.

"வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திலள்"

மண் மகள் இதற்கு முன்பு இது போன்ற மென்மையான பாதங்களை அவள் பார்த்தது இல்லை. அதனால் தான் இப்படி குத்தி வருத்தம் தருகிறாள் போலும் என்று நினைக்கிறான்.

மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருகிறேன்.

சொற்களை தேர்ந்து எடுங்கள். நல்ல சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகுங்கள். கடிய சொற்களை, மற்றவர்களை காயப் படுத்தும் சொற்களை, உங்கள் அகராதியில் இருந்து எடுத்து தூர வீசிவிடுங்கள்.

அது மற்றவர்களை மட்டும் அல்ல, உங்களையும் இன்பத்தில் ஆழ்த்தும்.

சரிதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_20.html


Monday, November 19, 2018

கம்ப இராமாயணம் - நாய் என தகுதும்

கம்ப இராமாயணம் - நாய் என தகுதும் 


இராமனை எவ்வளவோ கம்பர் தூக்கிப் பிடிக்கிறார். இராமனை நினைத்து நினைத்து நெகிழ்கிறார். அது பக்தியா, பாசமா என்று தெரியாத அளவுக்கு உருகுகிறார்.

இருந்தும், அவர் இராவணனின் கம்பீரத்தை சொல்வதில் ஒரு குறையும் வைக்கவில்லை.  என்னைக் கேட்டால், கம்பர் , இராவணனை ஒரு படி மேலேயே காட்டி இருக்கிறார் என்றே சொல்வேன்.

போர் மூண்டு விட்டது. இராமனின் போர் செய்யும் ஆற்றலை இராவணன் நேரில் காண்கிறான்.

தன் மந்திரியிடம் கூறுகிறான்.

"இனி மேல் ஆகப் போவது என்ன ? இந்த பூமாதேவியை போல பொறுமை கொண்ட சீதையின், மூங்கில் போன்ற தோள்களை கொண்ட அந்த சீதையின் நாயகன் இராமனின் போர் செய்யும் அழகை சீதை நேரில் இதுவரை கண்டதில்லை. ஒரு வேளை அவள் அதை பார்க்க நேர்ந்தால், என்னையும், இந்த மன்மதனையும் நாய் என்று கேவலமாக நினைப்பாள்"

என்கிறான்.

பாடல்


'போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்,
நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம்.


பொருள்

'போய் இனித் தெரிவது என்னே? = இனி மேல் போய் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது

பொறையினால் = பொறுமையால்

உலகம் போலும் = இந்த பூமாதேவியைப் போல

வேய் எனத் தகைய = வேய் என்றால் மூங்கில் . மூங்கில் என்று சொல்லத் தக்க

தோளி = தோள்களை உடைய அவள் (சீதை)

இராகவன் மேனி நோக்கி, = இராகவனின் மேனியை நோக்கி


தீ எனக் கொடிய  = தீ போல கொடிய

வீரச் = வீரமான

சேவகச் = போர் செய்யும்

செய்கை கண்டால், = ஆற்றலைக் கண்டால்

நாய் எனத் தகுதும் அன்றே = நாய் என்று கருதுவாள்

காமனும் = மன்மதனும்

நாமும் = நம்மையும்

எல்லாம் = நம் அனைவரையும்


இராமன் எதிரிதான். இருந்தாலும், அவன் ஆற்றலை மனம் விட்டுப் பாராட்டுகிறான். 

சீதை அவனுடைய ஆசைக்கு இணங்கவில்லை. உண்மையில் அவள் மேல் கோபம் வர வேண்டும். இருந்தும் அவளை பாராட்டுகிறான். 

"உலகம் [போலும் " என்று பாராட்டுகிறான். 

இந்த நிலம் இருக்கிறதே, தன்னை கடப்பாறை, வெடி என்று வைத்து தகர்ப்பவர்களையும் தாங்கும் பொறுமை உடையது. 

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என்பார் வள்ளுவப் பேராசான். 

தனக்குத் துன்பம் செய்யும் இராவணனிடமும் அவள் பொறுமையோடு இருந்தாள் என்று இராவணனே கூறுகிறான். 

அவள் நல்ல குணத்தை மட்டும் அல்ல, அவள் அழகையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறான் இராவணன்.  

"வேய் எனத் தகைய தோளி". மூங்கில் போன்ற தோள்களை உடைய சீதை என்று அவள் அழகு அவன் மனதில் ஆழமாய் நிற்கிறது. 

இராகவனின் போர் செய்யும் அழகை மட்டும் சீதை பார்த்து விட்டால் பின் என்னையும்  மன்மதனையும் நாய் என்று கேவலமாக நினைப்பாள் என்கிறான். 

இவனை நினைப்பது சரி.  எதற்கு மன்மதனை இங்கே இழுக்கிறான். 

உலகிலேயே மிக அழகானவன் மன்மதன்.  அவனையும் நாய் என்று நினைப்பாளாம். இராகவனின் அழகு அவ்வளவு உயர்ந்தது.

அது மட்டும் அல்ல, அந்த மன்மதன் தானே இராவணனை இந்த பாடு படுத்துகிறான்.  அதனால், அவனையும் இழுக்கிறான் என்று நயம் சொல்லுவார்கள். 

இவ்வளவு அழகான இராகவனை விட்டு விட்டு , இந்த சீதை எங்கே நம்மை விரும்பப் போகிறாள் என்று இராவணன் ஆதங்கப் படுகிறான். 


எப்படியோ, இங்கே யார் உயர்ந்து நிற்கிறார்கள்?

பொறுமையும் அழகும் கொண்ட  சீதையா,  எதிரியே பாராட்டும் இராமனா, அல்லது  தன் எதிரியை உயர்த்திப் பிடிக்கும் இராவணனின் கம்பீரமா ?

அதுதான் கம்பன்.

எவ்வளவு நுண்ணிய மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறான் கம்பன். 

நமக்கு வாழ்வில் பல சிக்கல்களுக்குக் காரணம், நம் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பதுதான். 

மனைவி, அம்மா செய்த உணவு நன்றாக இருந்தால் கூட, வாய் விட்டு பாராட்டுவது இல்லை. 

கணவன் எவ்வளவோ கஷ்டங்களுக்கு நடுவில் காரியம் செய்தாலும், அவனை ஒரு வரி  பாராட்டுவது கிடையாது. 

கணவன் மனைவிக்கு நடுவில் சிக்கல் வந்தால் அதை மென்மையாக , அழகாக வெளிப்படுத்தத் தெரிவதில்லை.  சண்டை ஒன்று தான் நமக்குத் தெரிந்தது. இல்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது. பேசாமல் இருப்பது. 

அது கொஞ்சம் முரட்டுத் தனமான உணர்ச்சி வெளிப்பாடு. 

மென்மையாக, அழகாக, உணர்வுகளை வெளிப்படுத்தப் பழக வேண்டும். 

இலக்கியங்களை படிப்பதன் மூலம் அந்த பயிற்சி நிகழும். 

சும்மா பாடலை படித்துவிட்டுப் போகக் கூடாது. அதில் உள்ள கருத்தை தேடித் பிடித்து  கடை பிடிக்க வேண்டும். 

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_19.html

Wednesday, November 14, 2018

கந்த புராணம் - வேதமும் கடந்து நின்ற

கந்த புராணம் - வேதமும் கடந்து நின்ற 


இன்று சூர சம்ஹார தினம். எனவே கந்த புராணத்தில் இருந்து ஒரு பாடலை சிந்திப்போம்.

சூரன் என்ற அரக்கன் சம்காரம் செய்யப்பட்டது எதனால் ?

பல காரணங்கள் சொல்லலாம்.

முதல் காரணம் - நன்றி மறந்தது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு

என்பார் வள்ளுவப் பேராசான்.

சூரனுக்கு அளவற்ற வரங்களை தந்தது யார் - சிவன்.

முருகன் போர் செய்ய வந்த போது முருகனை பாலன் என்று இகழ்ந்தான் சூரன்.

இராமனை , மானிடன் என்று எண்ணிக் கெட்டான் இராவணன்.

கண்ணனை, இடையன் என்று எண்ணிக் கெட்டான் துரியோதனன்

முருகனை, பாலன் என்று எண்ணிக் கெட்டான் சூரன்.

முருகன் வேறு, சிவன் வேறு அல்ல என்ற உண்மை தெரியாமல், வரம் தந்த சிவனோடு போரிட்டு, நன்றி கொன்று கெட்டான் சூரன்.

அது என்ன முருகன் வேறு சிவன் வேறு அல்ல என்ற புதுக் கதை ? முருகனும் சிவனும் வேறு வேறு தானே. அப்படித்தானே படித்து இருக்கிறோம்...

இல்லை. அந்தத் தவற்றை செய்தவன் சூரன். நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரன், தேவர்களை ஆட்டிப் படைக்கிறான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்படியே ஒரு வேண்டுகோளும் வைக்கிறார்கள்.

சைவ சித்தாந்ததின் சாரம் இந்தப் பாடல். இந்த ஒரு பாடலைப் புரிந்து கொண்டால் சைவ சித்தாந்தம் முழுவதும் புரிபடும்.

கச்சியப்ப சிவாசாரியாரின் தேனொழுகும் இனிய பாடல்...

பாடல்

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் 
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி 
வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை 
நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்.



பொருள்


ஆதியும் = ஆரம்பமும்

நடுவும் = நடுவும்

ஈறும் = இறுதியும்

அருவமும் = உருவம் இல்லாததும்

உருவும் = உருவம் உள்ளதும்

ஒப்பும் = ஒப்பிட்டு சொல்ல முடியாததும்

ஏதுவும் = வேறு எதுவும்

வரவும் = வருவதும்

போக்கும் = போவதும்

இன்பமும் = இன்பமும்

துன்பும் = துன்பமும்

இன்றி = இவை எல்லாம் இல்லாமல்

வேதமும் = வேதமும்

கடந்து நின்ற = அப்பால் நின்ற

விமல = மலம் என்றால் குற்றம். வி+மலம் = குற்றமற்ற

ஓர் குமரன் தன்னை = ஒரு பிள்ளையை

நீ தரல் வேண்டும் = நீ எங்களுக்குத் தர வேண்டும்

நின்பால் = உன்னிடம் இருந்து

நின்னையே நிகர்க்க = உன்னைப் போலவே

என்றார் = என்று வேண்டினார்கள்

உலகில் பெண் தானே பிள்ளை பெற்றுத் தர வேண்டும். ஆண் பிள்ளை பெற்றதாக எங்காவது கேள்விப் பட்டு இருக்கிறோமா ? இல்லையே?

தேவர்கள் , சிவனிடம் "உமா தேவியிடம் இருந்து எங்களுக்கு ஒரு குமாரனை பெற்றுத் தர வேண்டும் " என்று கேட்கவில்லை.

"நீ தரல் வேண்டும்" என்று சிவனிடம் வேண்டினார்கள்.

அது மட்டும் அல்ல, அந்தக் குழந்தை உன்னிடம் இருந்து வர வேண்டும்

"நின் பால்"

அது மட்டும் அல்ல , அது உனக்கு இணையாக இருக்க வேண்டும்

"நின்னையே நிகர்க்க" என்றார்.

சிவனிடம் இருந்து வர வேண்டும். சிவன் மட்டுமே தர வேண்டும். அது சிவனுக்கு இணையாக இருக்க வேண்டும்.

இதுதான் வேண்டுகோள்.

சிவனுக்கு இணையாக என்றால் சிவனும் , முருகனும் ஒன்று என்று ஆகிறது அல்லவா. சிவன் என்னவெல்லாம் செய்வானோ, முருகனும் அதை எல்லாம் செய்வான் என்று அர்த்தம்.

சிவன் வேறு , முருகன் வேறு அல்ல.

இந்த ஒற்றுமை தெரியாமல் மாண்டான் சூரன்.

தங்கள் குறை தீர்க்க ஒரு குமாரனைத் தரவேண்டும் என்று வேண்டும் பொழுது சிவனின் தன்மை பற்றி கூறுகிறார் கச்சியப்பர்.

ஆதி - நடு - அந்தம் இந்த மூன்றும் இல்லை.

போக்கும் வரவும் புணர்வும் இல்லா புண்ணியனே என்று மணிவாசகர் சொன்ன மாதிரி , போக்கும் வரவும் இல்லாதவனே என்கிறார்.

இன்பமும் துன்பமும் உள்ளானே இல்லானே என்று திருவாசகம் சொன்ன மாதிரி "இன்பமும் துன்பும் இன்றி " என்றார்.

இறைவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது. இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

என்பார் வள்ளுவப் பெருந்தகை.

அம்மையே அப்பா  ஒப்பிலா மணியே என்பார் வள்ளலார்

எல்லாம் ஒன்றையே குறித்து நிற்கிறது.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக மிக எளிமையான பாடல். ஆழ்ந்த அர்த்தமும் கவிதைச் சுவையும் நிறைந்த பாடல்.

கந்த புராணம் 10345 பாடல்களைக் கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். அத்தனையும் கற்கண்டு.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_14.html

Tuesday, November 13, 2018

நளவெண்பா - கல்லாதனவும் கரவு

நளவெண்பா - கல்லாதனவும் கரவு 


ஒரு செய்தியை சொல்வதென்றால் அதை சுவை பட கூற வேண்டும். அழகாக, எளிமையாக, இரசிக்கும் படி சொல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் presentation skills என்று சொல்லுவார்கள்.

எவ்வளவுதான் படித்து, அனுபவம் இருந்தாலும் சரியாக பேச, சொல்ல வரவில்லை என்றால் வாழ்வில் முன்னுக்கு வருவது மிகக் கடினம்.

நன்றாக பேசத் தெரிய வேண்டும். தனக்குத் தெரிந்ததை அழகாக வெளிப் படுத்தத் தெரிய வேண்டும்.

அதற்கு இலக்கியம் மிகவும் துணை செய்யும்.

இலக்கியம் படிக்க படிக்க நம் சொல்லிலும் பேச்சிலும் ஒரு அழகு ஏறும். கற்பனை விரியும். வார்த்தைகள் வசப்படும்.

உதாரணமாக, ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?

அங்கே நல்ல விளைச்சல் இருக்கிறது, அங்கே குற்றங்கள் குறைவாக இருக்கிறது, நல்ல வருமானம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லலாம்.

அதில் ஒரு அழகு இருக்கிறதா ?

புகழேந்தி சொல்கிறார் பாருங்கள்.

"அந்த ஊரில் மக்களுக்குத் தெரிந்தது எல்லாம் நல்ல நூல்களே. அவர்களுக்கு தெரியாததும் உண்டு. அது என்ன தெரியுமா, பெண்களின் இடை. அது இருக்கிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. அந்த ஊரில் இல்லாதது அப்படினு சொன்னா அது பிச்சை எடுப்பதுதான். பிச்சைக்காரர்களே கிடையாது.  அந்த ஊர் மக்கள் பிடிக்காது என்று ஒன்று உண்டு என்றால் அது வஞ்சக செயல்களே"

பாடல்

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.

பொருள்

தெரிவனநூல் = மக்கள் தெரிந்து கொள்வது நல்ல நூல்களை

என்றும் = எப்போதும்

தெரியா தனவும் = தெரியாமல் இருப்பது

வரிவளையார் = வளையல்களை அணிந்த பெண்கள்

தங்கள் மருங்கே = அவர்களின் இடையே

 ஒருபொழுதும் = ஒரு பொழுதும்

இல்லா தனவும் இரவே = இல்லாமல் இருப்பது பிச்சை எடுப்பதே

இகழ்ந்தெவரும் = சிறுமை என்று கருதி

கல்லா தனவும் கரவு = மக்கள் படிக்காமல் இருந்தது வஞ்சக செயல்களே

மக்கள் எல்லோரும் மிகப் படித்தவர்கள். பெண்கள் எல்லோரும் மிக அழகானவர்கள். எல்லோரிடமும் மிகுந்த செல்வம் இருக்கிறது. எனவே பிச்சி எடுப்பவர் என்று யாருமே இல்லை. மக்கள் எல்லோரும் நல்லவர்கள். வஞ்சக செயல் என்றால் என்ன என்றே அவர்கள் அறிந்து இருக்கவில்லை.

என்ன ஒரு நயம். என்ன ஒரு அழகு. சொல் நேர்த்தி.

இனிமையாக ,அழகாக பேசி, எழுதிப் பழகுவோம். அதற்கு பயிற்சி பெற நல்ல இலக்கியங்களை புரட்டுவோம்.

அது வாழ்க்கையை இனிமையாக்கும். நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_13.html





Monday, November 12, 2018

காரைக்கால் அம்மையார் பாடல் - அறவா

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்  - அறவா 


இறைவன் என்பது யார்? அவர் ஒரு ஆளா? ஆணா ? பெண்ணா ? அலியா ? உயரமா? குள்ளமா ? கறுப்பா ? சிவப்பா?


முதலில் இறைவன் என்பது ஒரு "ஆள்" என்ற எண்ணத்தை விட வேண்டும். இறைவன் என்றால் ஏதோ நம்மைப் போல இரண்டு கை , இரண்டு கால், கண், மூக்கு என்று இருப்பார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனிதர்கள் படைத்த இறைவன் மனிதர்கள் போல இருக்கிறான். சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இறைவனை கற்பனை செய்தால் அது மிகப் பெரிய வலிமையான சிங்க ரூபத்தில் இருக்கும். எனவே, இறைவன் மனித ரூபத்தில் இருப்பான் என்று எண்ணிக் கொள்வது நமது ஆணவம் அன்றி வேறில்லை.


சரி, இறைவன் மனித வடிவில் இல்லை என்றால் பின் எப்படி இருப்பான் ?


இறைவன் எந்த வடிவிலும் இல்லை. அவனுக்கு ஒரு வடிவம் கிடையாது.


பின் இறைவன் என்றால் என்ன ? வடிவம் இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?


அறம் தான் இறைவன். இயற்கை தான் இறைவன்.


அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார் 

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?



பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுகிறார்


பிறவாமை வேண்டும்  =  பிறவாமல் இருக்க வேண்டும்


மீண்டும்  பிறப்புண்டேல்  = ஒரு வேளை மறுபடியும் பிறந்து விட்டால்


உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்


இன்னும் வேண்டும் = இன்னும் என்ன வேண்டும் என்றால்


நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி


அறவா = அறவா , அறமே வடிவானவனே


நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது உன்


அடியின்கீழ் இருக்க என்றார் = உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார்.


இறைவன் அறமே உருவானவன் என்பது ஒரு செய்தி.

நம்மில் பல பேர் பக்தி என்றால் ஏதோ பெரிய இராணுவ பயிற்சி போல குளித்து முழுகி, முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, பய உணர்வு ஒரு பக்கம், பக்தி ஒரு பக்கம்,  என்று பக்தி செலுத்துவார்கள்.

கற்பூர ஆரத்தி காட்டுவதும், பூ அள்ளிப் போடுவதும் ஏதோ அறிவியல் செயல் கூடத்தில்  (laboratory) ஏதோ அறிவியல் கோட்பாட்டை சரி பார்க்கும் முயற்சி போல இருக்கும்.


வேண்டவே வேண்டாம்.


முதலில் சந்தோஷமாக இருக்கும் வேண்டும்.  இன்ப அன்பு வேண்டும்.


அடுத்து, மகிழ்ந்து பாடி என்கிறார். சந்தோஷமாக வாய் விட்டு பாடுங்கள்.


மூன்றாவதாக, இறைவனே ஆடிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு லீலை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருங்கள். பக்தி என்றால் ஏதோ surgical strike  மாதிரி இருக்கக் கூடாது.


"விளையாட்டு உடையார் அவர் , தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பார்  கம்பர். எந்த கடவுள் விளையாட்டாக இருக்கிறாரோ, அவர் தான் எங்கள்  தலைவர் என்கிறார் கம்பர்.



வாழ்க்கையை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டாக  எடுங்கள்.


ஆடுங்கள். பாடுங்கள். அன்பு செய்யுங்கள்.


அவ்வளவுதான் வாழ்க்கை. அவ்வளவுதான் இறைவன்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_12.html



Sunday, November 4, 2018

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?


நாம் நினைக்கிறோம், நமக்கு வந்த துன்பங்கள்தான் உலகிலேயே பெரிய துன்பம் என்று. வேறு யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தது இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல. நம்மை விட பலப் பல மடங்கு துன்பப் பட்டவர்கள், படுகிறவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகில். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் , நம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்று நமக்கு விளங்கும்.

அப்படி மற்றவர்கள் துன்பத்தை அறியும் போது, "வாழ்வில் துன்பம் என்பது ஒரு பகுதி. இது எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் வரத்தான் செய்கிறது" என்ற எண்ணமும் , அதனால் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவமும் வந்து சேரும்.

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய துன்பம் என்று தருமன் , வேத வியாசரை கேட்டான்.

அதற்கு வியாசர் "நீ நினைக்கிறாய் ஏதோ உனக்குத்தான் பெரிய துன்பம் வந்து விட்டது என்று. உன்னை விட அதிகம் துன்பப் பட்டவர்கள் இருக்கிறார்கள். நள மன்னன் என்று ஒருவன் இருந்தான். அவன் கதையை சொல்கிறேன் கேள்" என்று நள மன்னனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்

சேமவேல் மன்னனுக்கச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை.


பொருள்

சேம = சேமம், நல்லது , இதம்

வேல் = வேல். மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஏந்திய வேல்

மன்னனுக்கச் = மன்னனுக்கு (தருமனுக்கு)

செப்புவான் = சொல்லுவான்

செந்தனிக்கோல் = செம்மையான, தனிச் சிறப்பு வாய்ந்த

நாமவேல் = நாமத்தைக் கொண்ட

காளை = காளை போல பலம் கொண்ட

நளனென்பான் = நளன் என்ற ஒருவன்

யாமத் = நள்ளிரவிலும்

தொலி = ஒலி எழுப்பும்

யாழி = கடல் சூழ்ந்த

வையம் = உலகம்

ஒருங்கிழப்பப் = ஒன்றாக இழந்து

பண்டு = முன்பு

கலியான் = சனி பகவானால்

விளைந்த கதை = நிகழ்ந்த கதை

உலகம் அனைத்தையும், கடல் சூழ்ந்த இந்த உலகம் அனைத்தையும் , அதோடு கூடிய மற்றைய செல்வங்களையும் (அதிகாரம், புகழ் ) ஒரே சமயத்தில் இழந்தான் நளன்.

நளன் கதையை கேட்டால் நமக்கே கண்ணீர் வரும்.

நளனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_85.html

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?


நமக்கு ஒரு சின்ன துன்பம் வந்து விட்டால் கூட, "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ...அந்த கடவுளுக்கு கண் இல்லையா .." என்று புலம்புவோம்.


நமக்கு வந்தது அவ்வளவு பெரிய கவலையா ?


பல இலக்கியங்களைப் படிக்கும் போது, அந்தக் கதைகளில் வரும் மாந்தர்களை விட நமக்கு ஒன்றும் பெரிய கவலை இல்லை என்று தோன்றும். அந்த எண்ணமே கவலையை குறைக்கும்.


இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு பலன் - மன ஆறுதல்.


நளவெண்பாவில், தருமன் சூதாடி நாடிழந்து , காட்டில் வந்து தனித்து இருக்கிறான். அர்ஜுனன் , தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்றுவர புறப்பட்டுப் போய்விட்டான். தனித்து இருந்த தருமன் கவலைப் படுகிறான்.


அப்போது அங்கு வந்த வியாசர், "தருமா ஏன் கவலையாக இருக்கிறாய் " என்று கேட்கிறார்.


அதற்கு தர்மன் சொல்கிறான் "கண் மூடித்தனமாக சூதாடி, நாட்டை இழந்து, காட்டை அடைந்து இப்படி துன்பப் படுகிறேன். இந்த உலகில் என்னைப் போல துன்பப் படுபவர்கள் யார் இருக்கிறார்கள் " என்று புலம்புகிறான்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்மூடித் தனமாக


மாயக் கவறாடிக் = வஞ்சகமான சூதாட்டத்தில் விளையாடி


காவலர்தாம் = காவல் காக்க வேண்டிய


மண்ணிழந்து = நாட்டை இழந்து


போந்து =போய்


வனம்நண்ணி = காட்டை அடைந்து


விண்ணிழந்த = விண்ணை விட்டு மண் நோக்கி வரும்


மின்போலும் = மின்னலைப் போல உள்ள


நூல்மார்ப = நூலை அணிந்த மார்பை உடையவனே (வியாசனே)


மேதினியில் = இந்த உலகில்


வேறுண்டோ = வேறு எவரும் உண்டோ


என்போல் = என்னைப் போல



உழந்தார் இடர் = துன்பத்தில் வருந்துபவர்கள்


சரி தானே. தர்மனின் நிலையை நினைத்துப் பார்போம். ஒரே நாளில் பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து, காட்டில் வந்து தனித்து இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். நம்மால் முடியுமா ? ஒரு நாள் வீட்டை விட்டு காட்டில் போய் இரு என்றால் முடியுமா ? ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே விட்டு விட்டு ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல பன்னிரண்டு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.


நம் துன்பம் அதை விட பெரிய துன்பமா ?


இப்படி ஒரு பெரிய துன்பத்தில் இருக்கும் தருமனுக்கு வியாசர் என்ன தான் ஆறுதல் சொல்லி விட முடியும் ?


நாளை அது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_4.html

Thursday, November 1, 2018

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள்

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள் 


படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களை செய்வது மூன்று மூர்த்திகள் என்று நாம் அறிவோம். பிரமன்,  திருமால்,அரன் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.

இந்த மூன்று பேருக்கும் மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம் இலக்கியங்கள் பேசுகின்றன.

யார் அது ?

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்வார் ,

"மூவரும் அறிகிலர் யாவர் மாற்று அறிவார்"

அந்த பரம்பொருளை அந்த மும்மூர்த்திகளும் அறிய மாட்டார்கள் என்றால் பின் வேறு யார் தான் அறிவார்கள் என்கிறார்.

மும்மூர்த்திகளுக்கும் எட்டாத ஒருவன் அவன்.

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

வில்லி புத்தூர் ஆழ்வார் சொல்கிறார்


"பிரமன் படைக்கிறான், திருமால் காக்கிறான், அரன் அழிக்கிறான். அப்படி அழித்த பின், மீண்டும் அனைத்தையும் எவன் உண்டாக்குகிறானோ அவன் பொன்னடி போற்றி" என்கிறார்.

அதாவது, இந்த மூவர் அல்லாத இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார். அவன் தான் முதல்வன் என்கிறார்.

பாடல்


ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம்
வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப்
பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.

சீர் பிரித்த பின்

ஆக்குமாறு அயன் முதல் ஆக்கிய உலகம் 
காக்குமாறு செங் கண் நிறை கருணை அம் கடலாம் 
வீக்குமாறு அரன் அவை வீந்த நாள் மீளப் 
பூக்குமா(று ) முதல்வன் எவன் பொன்னடி போற்றி 



பொருள்


ஆக்குமாறு அயன் = படைத்தல் செய்பவன் பிரமன்

முதல் = முதலில்

ஆக்கிய உலகம்  = படைத்த உலகத்தை

காக்குமாறு = காக்கும் தொழிலை செய்பவன்

செங் கண் = சிவந்த கண்களை உடைய

நிறை கருணை = கருணை நிறைந்த

அம் கடலாம் = கடல் போன்ற  (கடல் போன்ற கருணை நிறைந்த)

வீக்குமாறு = வீழுமாறு

அரன் = அரன்

அவை வீந்த நாள் = அவை அவ்வாறு வீழ்ந்த இந்த

மீளப் = மீண்டும்

பூக்குமா(று ) = தோன்றும்படி

முதல்வன் = செய்யும் முதல்வன்

எவன் = யார் ?

பொன்னடி போற்றி  = அவன் பொன்னடி போற்றி

இவைகளை கடந்து செல்ல வேண்டும். உருவம், அந்த உருவங்கள் செய்யும் தொழில் , இதில் யார் பெரியவர் என்ற சண்டைகள் என்று இவற்றை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post.html