Wednesday, November 30, 2016

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?


பாடல்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்  
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்  
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற  
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்  
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்  
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்  
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்  
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!

பொருள்

பொய்விளக்கப் புகுகின்றீர் - நமக்கு எது சரி , எது தவறு என்று சரியாகத் தெரிவதில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு , அவற்றை மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று. ஒரு வேளை நாம் மெய் என்று நினைத்துக் கொண்டிருப்பது பொய்யாக இருந்தால் ? வாழ் நாள் எல்லாம் பொய்யை விளக்கிக் கொண்டு இருந்திருப்போம் அல்லவா ? அது சரியா ? நாம் மெய் என்று நம்புவதை மெய் தானா என்று அறிய வேண்டாமா ? யாரோ சொன்னார்கள், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தோம் என்பதற்காக அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா ?


போது கழிக்கின்றீர் = பொழுதை வீணே கழிக்கின்றோம். டிவி, whatsapp , facebook , வார மற்றும் மாத இதழ்கள் , சினிமா , வெட்டி அரட்டை என்று பொழுதை வீணாக கழித்துக் கொண்டு இருக்கிறோம்.

புலைகொலைகள் புரிகின்றீர் = புன்மையான கொலைகள் செய்கின்றோம். நாம் உண்பதற்காக  மற்ற உயிர்களை கொல்கிறோம் . நான் தான் சைவம் ஆயிற்றியே , மாமிசம் சாப்பிடுவது இல்லையே என்று சொல்பவர்கள் கூட , தங்கள் தேவைக்காக  காலணி , கையுறை, belt , suitcase , wallet , purse போன்ற தேவைகளுக்காக  உயிர்க்கொலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காபி டீ குடிப்பதற்காக  நாம் உபயோகப் படுத்தும் பாலுக்காக மாடுகள் எவ்வளவு துன்பப் படுத்தப்  படுகின்றன. உயிர் கொலை இல்லாவிட்டாலும், ஒருவரின் மனதை  எத்தனை விதங்களில் கொலை செய்கிறோம். கடின வார்த்தைகளால், அவர்களை உதாசீனப் படுத்துவதின் மூலம் எவ்வளவோ மனக் கொலைகள் செய்கிறோம்.

கலகல என்கின்றீர் = அர்த்தமில்லாத சிரிப்பு, பேச்சு நாளும் எத்தனை.

கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் = நாமும் சில பல நல்ல புத்தங்களை படித்திருப்போம்; நல்லவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி ஒன்றும் சுத்த  முட்டாளாக நாம் இருப்பது இல்லை. கீதை, குறள்  போன்ற உயர்ந்த நூல்களை  பற்றி கொஞ்சம் அறிந்திருப்போம். இருந்தும், அவை எல்லாம் கேட்க/படிக்க நல்லா இருக்கு. நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி அவற்றை  ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் செல்கிறோம். கையில் விளக்கு இருந்தும்  பாழும் கிணற்றில் விழும் அறிவிலிகளைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கருத்திருந்தும் கருதீர் = அறிவு இருக்கிறது. நல்லது கெட்டது தெரிகிறது. இருந்தும் அவற்றை  கடை பிடிப்பது இல்லை. சின்ன உதாரணம், அதிகமாக  இனிப்பு உண்ணக் கூடாது என்று தெரிகிறது. இருந்தும் சமயம் கிடைக்கும் போது  விடுவது இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் என்று உள்ளே தள்ளி விடுகிறோம். கருத்து இருந்தும் கருதாமல் விட்டு விடுகிறோம்.

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ  = ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம்  நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும்  நாம் நினைத்துக் கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம் வர வேண்டாமா ?

கொடிய முயற்றுலகீர்  = கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும்  உலகத்தீரே

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் = உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன்  வரும்போது

மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே = அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது  நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்

என்கிறார் வள்ளலார்.

பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான் என்று உணர்ந்து செயல்பட்டால்  ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார் வள்ளல் பெருமான்.

சிந்திப்போம்.


Tuesday, November 29, 2016

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப 


ஒரு அரசனிடமோ  அல்லது ஒரு வள்ளலிடமோ பரிசுகள் பெற்ற ஒருவன், எதிர் வரும் மற்றவனை அந்த அரசனிடமோ அல்லது வள்ளலிடமோ வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று அழைக்கப்படும். ஆற்றுப் படுத்துதல் என்றல் வழி காட்டுதல் என்று அர்த்தம்.

முருகனிடம் அருள் பெற்ற நக்கீரர் , மற்ற பக்தர்களை அவனிடம் வழி காட்டுவதாக அமைந்தது திரு முருகாற்றுப்படை என்ற நூல்.

அதில் முதல் பாடல்....

"உலகம் மகிழ்ச்சி அடைய, வானில் வலப்புறம் எழும் , பலர் புகழும் சூரியனை கடலில் இருந்து எழும் போது கண்டவர்களை போல , இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில் சுடர் விடும் ஒளி"

பாடல்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .

பொருள்

உலகம் = உலகம்

உவப்ப = மகிழ

வலன் = வலப்புறமாக

ஏர்பு = எழும்

திரிதரு =  வானில் திரிகின்ற

 பலர்புகழ் = பலரும் புகழும்

ஞாயிறு = சூரியன்

கடல்கண் டாஅங்கு = கடலில் இருந்து எழுவதைப் போல

 ஓஅற = இடைவெளி இல்லாமல் 

இமைக்கும் = இமைக்கும் நேரம்

சேண்விளங்கு = சேண் என்றால் உயரம். உயரே விளங்கும்

அவிர் = பிரகாசமான

ஒளி = ஒளி , வெளிச்சம்


இது என்ன பாடல். கடலில் எழும் சூரியனைப் போல உயரே சுடரும் வெளிச்சம். இது ஒரு பாடலா ? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? இதைப் படித்து  என்ன ஆகப் போகிறது ? என்று கேள்விகள் எழலாம்.

சற்று சிந்திப்போம்.

உலகம் உவப்ப - உலகம் மகிழ.

முதலாவது, எதையும் மங்கலச் சொல்லோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உலகம் என்பது மிக உயர்ந்த மங்கலச் சொல்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று  ஆரம்பித்தார் கம்பர்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

என்று ஆரம்பித்தார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது நிகண்டு.

உலகம் என்றால் உலகில் உள்ளவர்களை குறிக்கும். குறிப்பாக உலகில் உள்ள நல்லவர்களை குறிக்கும்.

இரண்டாவது,  உலகில் உள்ள அனைவரும் மகிழ என்று ஆரம்பிக்கிறார். இந்தியாவில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது இந்து சமயத்தில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது சைவ சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ  என்றோ குறுகிய மனத்தோடு ஆரம்பிக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மக்களும் இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்.

சேரவாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் அழைத்தார் போல.

மூன்றாவது, உலகம் எப்போது மகிழும் ? உலகில் உள்ள எல்லோரும் மகிழ வேண்டும். தினமும் எல்லோரும் மகிழ வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா ? அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறதா ? என்று யோசித்தார்.

இரவில் அனைத்து உயிர்களும்  உறங்குகின்றன. தவறு செய்யாதவன் நிம்மதியாக உறங்குகிறான். கடமையை ஒழுங்காகச் செய்தவன் நமதியாக உறங்குகிறான். எல்லா உயிர்களும் இரவில் உறங்கி காலையில் சூரியன் ஒளி வந்தவுடன்  எழுந்து சுறுசுறுப்பாக தங்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகின்றன. உலகமே விழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீடும், நித்தமும் விழிக்கிறது.

இருள் துன்பத்திற்கு உதாரணம். ஒளி இன்பத்திற்கு உதாரணம். எப்படி சூரியன் வந்தவுடன் உலகம் விழித்து , வேலை செய்து, அதன் பலனைப் பெற்று இன்பமாக இருக்கிறதோ அது போல இன்பம் பெற வேண்டும் என்கிறார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


நான்காவது, சூரியன் தினமும் வரும், போகும். அப்படியானால் இன்பமும் வந்து வந்து   போகுமா.நிரந்தரமான இன்பம் இல்லையா ?  மேலும் சில சமயம் சூரிய ஒளி மோகத்தால் மறைக்கப் படலாம். அல்லது சில இடங்களில் விழாமல் போகலாம். அல்லது சூரியன் ஒரு நாள் தீர்ந்து போகலாம். நிரந்தரமான ஒரு ஒளி உண்டா ? சூரியன் என்பது ஒரு உதாரணம். அதற்கும் மேல் ஒரு ஒளி உண்டு. அந்த ஒளி....

ஐந்தாவது, ஓஅற இமைக்கும், ஒரு நொடி கூட இல்லாமல் இருக்காது. எப்போதும் சுடர் விடும் ஒளி. அது  மட்டும் அல்ல.

ஆறாவது,  சேண்விளங்கு, உயரத்தில் விளங்கும். உயரம் என்றால் எங்கே ? எவ்வளவு உயரத்தில் ?

நமது உடலில் 7 சக்கரங்கள், அல்லது சக்தி இருக்கும் இடங்கள் என்று கூறுகிறார்கள். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்யா, சஹஸ்ரார் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதில் கடைசியாக கூறிய சஹஸ்ரார் என்பது உடலுக்கு வெளியே உள்ள சக்கரம். நம் தலைக்கு மேல் ஒரு அங்குல உயரத்தில் உள்ள ஒரு இடம்.  சஹஸ்ரார் என்றால் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை மலர் என்று அர்த்தம்.  

மூலாதாரம் - தண்டுவடத்தின் அடிப் பகுதி
ஸ்வாதிஸ்தானம் - பிறப்புறுப்பு
மணிப்பூரஹம் - தொப்புள்
அனாஹதம் - இருதயம்
விசுத்தம் - கழுத்து
ஆக்ஞா - புருவ மத்தி
சஹஸ்ரார் - உச்சந்தலைக்கு ஓரங்குலம் மேலே

இறைவனை வணங்கும் போது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்க வேண்டும் என்று கூறியது எதற்கு என்றால் , சஹஸ்ரார் என்ற அந்த இடத்தில் உள்ள அந்த ஒளியை தொட்டு காண்பிக்க.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

என்பார் மணிவாசகர்.

சிரம் குவிப்பவரை ஓங்கி வளரச் செய்வான். கரம் குவித்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவது ஒரு முறை. இரு கையையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்குவது இன்னொரு முறை.

மணிவாசகர் வேலை மெனக்கெட்டு இரண்டு வரியை எதற்காக செலவிடுகிறார் ? இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பலன்களை சொல்கிறார்.

ஏன் ?

இரண்டும் வெவ்வேறானவை என்பதால்.

சேண் விளங்கு என்றால், அந்த உயர்ந்த இடத்தில் என்று பொருள்.

சற்று கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும். உடலுக்கு வெளியே உள்ள ஒரு இடம் , உடலில் உள்ள மற்ற சக்கரங்களோடு தொடர்பு கொண்டது. சக்தியை மூலாதாரத்தில் இருந்து கிளப்பி அங்கே கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். அது போல, அங்கே உள்ள ஒளி உள்ளுக்கும் செல்லும் என்பது சொல்லாமல் சொன்ன கருத்து.

அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது ?


சேண் விளங்கு அவிர் ஒளி

பிரகாசமாக இருக்கும் ஒளி. இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் சுடர் விடும் ஒளி.

சூரியனின் ஒளியை கண்ணை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். வீட்டின்  கதவை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். இந்த சேண் விளங்கு அவிர் ஒளி  உள்ளுக்குள் சுடர் விடும் ஒளி. அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை தரும் ஒளி.

எல்லோரிடமும் ஏதோ ஒரு ஞானம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாம் அறிந்தாரும் இல்லை, ஏதும் அறியாதரும் இல்லை.

ஆனால், நம் ஞானம் ஆணவம், கோபம், காமம் இவற்றால் மறைந்து நிற்கிறது.  இவை நீங்கும் போது , அந்த ஞான ஒளி மேலே    சென்று ஒளி விடும்.

இது முதல்  மூன்று வரிக்கு அர்த்தம்.

முழு  புத்தகத்தையும் படித்துப் பாருங்கள். 

Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



Wednesday, November 23, 2016

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை 


ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது. என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை. கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடி பட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் கொலுசு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில்  , கோவலன் , கண்ணகியை போற்றுகிறான். "நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து  எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ...கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ...நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

பாடல்

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்

பொருள்

குடிமுதற் = குடி முதல், உன் குடும்பம் முதல்

சுற்றமும் = உறவினர்கள்

குற்றிளை யோரும் = குற்று + இளையோரும்.  குற்றேவல் செய்யும் வேலை ஆட்களையும் 

அடியோர் பாங்கும் = வேலை ஆட்களையும்

ஆயமும் நீங்கி = தோழிகளையும் விட்டு வந்தாய் 

நாணமும் = நாணத்தையும்

மடனும் = மடனையும்

நல்லோ ரேத்தும் = நல்லவர்கள் போற்றும்

பேணிய கற்பும் = பெருமையக்குரிய கற்பையும்

பெருந்துணை யாக = பெரிய துணையாகக்

என்னொடு = என்னோடு

போந்து = என்னோடு வந்து

ஈங்கு  = இங்கு

என் = என்னுடைய

துயர் = துன்பத்தை

களைந்த = போக்கிய

பொன்னே = பொன் போன்றவளே

கொடியே = கொடி போன்றவளே

புனைபூங் கோதாய் = பூக்களை புனைந்தவளே )சூடிக் கொண்டவளே )

நாணின் பாவாய் = நாணமே உருவான பெண்ணே

நீணில விளக்கே = நீண்ட இந்த நில உலகிற்கு விளக்கு போன்றவளே

கற்பின் கொழுந்தே = கற்பின் கொழுந்தே

பொற்பின் செல்வி = செல்வம் நிறைந்தவளே

சீறடிச் = உன்னுடைய சிறந்த பாதங்களில் உள்ள

சிலம்பி னொன்று = சிலம்பில் ஒன்று

கொண் டியான்போய் = கொண்டு யான் போய்

மாறி  வருவன் = மாற்றி வருவேன்

மயங்கா தொழிகெனக் = கவலைப் படாதே

பாடலின் உள்ளோடும் சில விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது,  மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால்  ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது. "கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை. ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும்  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு , கடைசியில் தான்  முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின்  விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம் , கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை  இழந்தாள் , பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

உதாரணம், சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம் . இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது. இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது  இராமானுக்குத் தெரியாது. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை. அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும்  என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள்.  கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும் , அவனுக்கு துணை செய்வது  என்று அவள் முடிவு செய்து விட்டாள் . கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.


 மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும்  அமங்கல சொற்களை  சொல்லக் கூடாது. மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே  மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி. இறந்தார் என்று  சொல்லுவது இல்லை. அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான்   சொல்லுவது வழக்கம். 

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும்.  விதி,  அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது. 

 "மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக  என்கிறான்.

அவனுக்குத் தெரியாது  நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச் சொல்  வருகிறது. பாடலை எழுதிய இளங்கோவுக்குத் தெரியும். கோவலன் வாயில் இருந்து அப்படி ஒரு சொல்லை வரும்படி எழுதுகிறார்.

நமக்கு ஒரு பாடம் அது. 

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. 

திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில்  விழுந்து விடக் கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். 

நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள். 

நல்லதே நடக்கட்டும். 

 


Tuesday, November 22, 2016

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?


பிள்ளைகள் எதற்கு என்று கேட்டால், "எனக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டாமா ?" என்று சிலர் கூறுவார்கள்.

அவர்கள் விரும்பியபடியே பிள்ளை பிறக்கும்...கொள்ளி போட ...சில சமயம் உயிரோடு இருக்கும் போதே கூட.

சிலர் , "எனக்குப் பிறகு இந்த சொத்தை எல்லாம் ஆள ஒரு வாரிசு வேண்டாமா ?" என்று பிள்ளை பெறுவதற்கு காரணம் சொல்லுவார்கள். அவனுக்கு வரும் பிள்ளை, அவன் மேல் கோர்ட்டில் கேஸ் கொடுக்கும்...."சொத்தை பிரித்து தா"..என்று.

இன்னும் சிலரோ, "வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பிள்ளை வேண்டாமா " என்று கேட்பார்கள்.

இதெல்லாம் சுயநலத்தில் இருந்து எழும் ஆசைகள்.

திருஞான சம்பந்தரின் தந்தையார் , தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்தார். எதற்காக தெரியுமா ?

பாடல்

மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.


சீர் பிரித்த பின் 

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடி கமல 
நினைவுற முன் பர சமய நிராகரித்து, நீறாக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெற ப் போற்றும் தவம் புரிந்தார்.


பொருள் 

மனை = வீடு

அறத்தில்= அறத்தில்

இன்பம் = இன்பம்

உறு = பெறும் , பெற

மகப் = பிள்ளைகளை

பெறுவான் = பெறுவதற்காக

விரும்புவார் = விரும்பி

அனைய = அந்த

நிலை = நிலையில்

தலை = சிறப்பாக

நின்றே = நின்றே

ஆடிய = ஆடிய

சேவடி = சிவந்த திருவடிகளை

கமல = தாமரை போன்ற

நினைவுற = மனதில் நினைத்து

முன் = முன்பு

பர = மற்ற

சமய = சமயங்களை

நிராகரித்து = நிராகரித்து

நீறாக்கும் = திருநீற்றின் பெருமையை விளங்கும்படி செய்து

புனை = அணியும் (புனைந்து கொள்ளுதல் )

மணிப்பூண் = மணிகள் கொண்ட பூணை

காதலனைப் = காதல் கொண்ட மகனை

பெறப் = பெறுவதற்காக

போற்றும் = போற்றுதலுக்கு உரிய

தவம் புரிந்தார் = தவத்தினை செய்தார்

பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி பேச வந்த வள்ளுவர் கூறுவார்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பெறக் கூடியவற்றில் அறிவான பிள்ளைகளை பெறுவதைத் தவிர சிறந்தது ஒன்றும் இல்லை என்றார். 

அழகான பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை என்று சொல்லவில்லை ... அறிவான பிள்ளை என்றார். 

திருஞான சம்பந்தரின் தந்தையார் பிள்ளை வேண்டி தவம் இருந்தார்...

எதற்காக பிள்ளை வேண்டினார் ?

இல்லறத்தில் இருந்து பெறும் இன்பம் பிள்ளைகள் மூலம் வரும். 

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், அவர் பேசுவதைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பார் வள்ளுவர். 

அந்த இன்பத்தை பெற தவம் செய்தார்.

அது மட்டும் அல்ல. 

"பர சமய நிராகரித்து, நீறாக்கும்"

மற்ற சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்ய பிள்ளை வேண்டும் என்று  தவம் செய்தார். 

பிள்ளைகளை பெறுவது , மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு. 

கொள்ளி வைப்பதற்கோ, சொத்தை அனுபவிப்பதற்கோ அல்ல.

பர சமயங்களை ஏன் நிராகரிக்க வேண்டும் ?

மக்கள் எது உண்மை, எது தவறு என்று அறியாமல் தடுமாறிய சமயம். 

எது அறம் , எது அறம் அல்லாதது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம். 

பலப் பல சமயங்கள். ஆளுக்கு ஒன்றை கூறுகிறார்கள். பாமர மக்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது.  

உண்மை புரியாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த நேரம். 

அந்த நேரத்தில், மற்ற பொய்யான சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமை விளங்க ஒரு புதல்வன் வேண்டும் என்று தவம் செய்தார். 

மக்கள் உய்யும் பொருட்டு பிள்ளை வேண்டினார்.

அது தான் கருத்து. 

நம் பிள்ளைகளும், வீட்டுக்கு மட்டும் இன்றி நாம் வாழும் சமுதாயத்துக்கும், இந்த  நாட்டுக்கும்,மற்றைய உயிர்களுக்கும்  பயன் படும்படி வாழ நாம் கற்றுத் தர வேண்டும். 

தேவர்கள் , சிவனை வேண்டி , தங்கள் துயர் தீர்க்க ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டினர். முருகன் தோன்றினான். 

ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.

என்பது கந்த புராணம். 

தயரதனுக்கு நீண்ட நாள் பிள்ளை இல்லை. அவனுடைய குல குருவான வசிட்டரிடம் சென்று தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கூறினான். பிள்ளை எதற்கு தெரியுமா ? தனக்கு பின்னால் அரசை ஆள  அல்ல.

தனக்குப் பின்னால் , இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள் ? அவரக்ளை காக்க வேண்டுமே என்ற கவலையில் பிள்ளை வேண்டினான். 

‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.

என்பது கம்ப இராமாயணம். 

அறுபதினாயிரம் ஆண்டுகள் , பகைவர்களை ஒடுக்கி, இந்த உலகை நான் காத்து வந்தேன். வேறு ஒரு குறையும் இல்லை. எனக்குப் பின் இந்த வையகம் துன்பப் படுமே என்று ஒரு வருத்தம் இருக்கிறது என்று கூறினான். 

இந்த உலகைக் காக்க ஒரு பிள்ளை வேண்டினான். அப்படியே பெற்றான்.  

பிள்ளைகளைப் பெறுவது, உலக நன்மைக்காக என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. 

பெரிய புராணம் காட்டும் வழியும் அதுவே. 


 

Sunday, November 20, 2016

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.


வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?

திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள், சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள், யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....

அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.

அதில் ஒன்று

பாடல்

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்

இல்லக = இல்லத்தினுள்

விளக்கது = உள்ள விளக்கானது

விருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது

சொல்லக = சொல்லினுள் உள்ள

விளக்கது = விளக்கானது

சோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளது

பல்லக = பலருடைய மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

பலருங் காண்பது = எல்லோரும் காண்பது

நல்லக = நல்லவர்களின் மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

நமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்

என்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும்  நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?

விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.

அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள்.  அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ? போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.

அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு. நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும்.

இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ, அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.

அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?

அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது.

"சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"

அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.

சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும். நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?

அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை.

"பல்லக விளக்கது பலரும் காண்பது"

பலருடைய மனதிலும் உள்ளது.  பலரும் காணும்படி உள்ளது.

அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?

நல்லவர்களின் மனதில் உள்ளது.

நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.

கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?

அதற்கு பாரதியார்  பதில் சொல்கிறார்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.



விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்.





நான்மணிக் கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன

நான்மணிக்  கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன


எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. சிலவற்றை உடனடியாகச் செய்கிறோம். மற்றவற்றை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கிறோம்.

தள்ளி வைத்த காரியங்கள் குவிந்து கொண்டே போகின்றன. நமக்கு நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காலம் இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அந்தக் காலங்கள் அனைத்தும் உருண்டோடி விடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் , கடைசியில் ஒன்றும் இருக்காது.  எனவே தள்ளிப் போடும் காரியங்கள் எவை எவை என்று பாருங்கள்.

முடிந்தவரை தள்ளிப் போடாமல் செய்யப் பாருங்கள்.


பாடல்

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

சீர் பிரித்த பின்


ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

பொருள்


ஊழியும் = ஊழிக் காலமும்

ஆண்டு = ஆண்டுகளால்

எண்ணி = எண்ணிக்கையில்

யாத்தன = செய்யப் பட்டன. யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள்.

யாமமும் = யாமமும்

நாழிகையானே = நாழிகையால்

நடந்தன = நடந்து முடியும்

தாழீயா = காலம் தாழ்த்தாமல்

தெற்றென்றார் கண்ணே  = தெளிந்தவரிடம் சென்று

தெளிந்தனர் = தெளிவு பெற்றனர்

வெட்கென்றார் = அறிவு இல்லாதவர்கள்

வெஞ் சொலால் = பயனில்லாத சொற்களால்

இன்புறுவார் = இன்பம் அடைவார்கள்

ஊழிக் காலம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமாய் தேய்ந்து, பின் அது கொஞ்சம்  யாமங்களாக மாறும். பின் அந்த யாமங்கள் குறைந்து குறைந்து நாழிகையாகி பின்  அதுவும் இல்லை என்று ஆகிவிடும்.

அறிவுள்ளவர்கள் , காலம் நிறைய இருக்கிறது, பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டார்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பின்னால்  செய்ய வேண்டும் என்று மற்ற படித்து தெளிந்தவர்களிடம் சென்று  கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள்.

அறிவில்லாதவர்கள், வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு அதில் இன்பம் காண்பார்கள்.

"தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்" . நாமே எல்லா புத்தகங்களையும் படித்து  தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க  ஒரு ஆயுள் போதாது. அப்படியே படித்து விட்டாலும், தெளிவு பிறக்காது . படிக்க படிக்க குழப்பம் அதிகரிக்கும்.

பின் எப்படி தெளிவு பெறுவது ?

எதைப் படிப்பது, எப்படி படிப்பது, எப்போது படிப்பது , அவற்றின் சாரம் அல்லது அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலம் இருக்கிறதே என்று நல்ல காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. காலம் கரைந்து விடும்.




Friday, November 18, 2016

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை 


பொருள் தேட வேண்டும். பணம் இருந்தால் மற்ற எதைப் பற்றியும் கவலை இல்லை. வேண்டிய அளவு பணம் மட்டும் இருந்து விட்டால் உலகில் மிக சந்தோஷமாக வாழலாம். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம் என்றுதான் எல்லோரும் நம்பி , அந்த பணத்தை சேர்க்க வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்கிறார்கள்.


பணம் இல்லாவிட்டால் வாழ்வில் மற்றவை எது இருந்தும் பயனில்லை. பணம் ஒன்றுதான் குறி என்று உலகம் சென்று கொண்டிருக்கிறது.

நம்மிடம் பணம் இல்லை, செல்வம் இல்லை , எனவே அதை சேர்க்க முயற்சி செய்கிறோம். இதில் தவறென்ன.

பணம் மட்டும் அல்ல, நாம் வேறு சிலவற்றையும் சேர்க்க முயற்சி செய்கிறோம்.

நல்ல ஆரோக்கியம், உறவுகள், நட்பு, புகழ் , செல்வாக்கு, மதிப்பு, என்று இப்படி  பலவற்றை  சேர்க்க ஆசைப் படுகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம்.

அது என்ன ?

அறிவு !

பாடல்

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை 
இன்மையா வையா துலகு.

கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

அறிவு இன்மை , இன்மையுள் இன்மை பிறிது இன்மை 
இன்மையாக  வையாது உலகு 

பொருள் 

அறிவு இன்மை = அறிவு இல்லாமை 

இன்மையுள் = இல்லாதவற்றில் 

இன்மை  = பெரிய இல்லாதது 

பிறிது இன்மை = மற்றவை இல்லை என்றாலும் 
 
இன்மையாக  = இல்லாததாக 

வையாது = கொள்ளாது 

உலகு = உலகம் 

இல்லாதவற்றில் பெரிய இல்லாதது அறிவு இல்லாததே. மற்றயவை இல்லாவிட்டாலும் அதை பெரிதாக நினைக்காது உலகு. 


இது சரிதானா ? வள்ளுவர் சொல்லுவது நடை முறைக்கு சாத்தியமா ? அறிவு மட்டும் போதுமா ? மற்றவை வேண்டாமா ? பொருள் இல்லாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது, நல்ல உடை, இருக்க இடம், வாழ்க்கை வசதிகள், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிற்கு பொருள் வேண்டாமா ? அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

இது கேள்வி. 

சிந்திப்போம். 

முதலாவது, சரி, அறிவு வேண்டாம். பொருள் மட்டும் வேண்டும் என்று செல்வத்தின் பின்னால் சென்றால் என்ன ஆகும் ? எந்த வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது. எப்படியோ பொருள் சேர்த்தால் சரிதான் என்று நினைத்து , தவறான வழியில் பொருள் சேர்த்து பல சிக்கல்களில் மாட்டித் தவிப்பவர்கள் பலர்.  எனவே, பொருள் சேர்க்கவும் அறிவு வேண்டும். 

இரண்டாவது, சரி எப்படியோ நல்ல வழியில் பொருள் சேர்த்தாகி விட்டது. இனி என்ன  சிக்கல் என்றால் ? சேர்த்த பணத்தை என்ன செய்வது ? பல பேருக்கு பணம்  சேர்க்கத் தெரியும். அதை நல்ல வழியில் செல்வழிக்கத் தெரியாது. நல்ல துணிமணி, பெரிய வீடு, ஆரோக்கியமான சூழ்நிலை என்று வாழத் தெரியாமல் எல்லா பணத்தையும் வங்கிகளிலும், நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்து விட்டு , ஒரு சுகமும் அனுபவிக்காமல் இருப்பார்கள். செலவழிக்கவும் அறிவு வேண்டும்.  


மூன்றாவது,  சேர்த்த பணத்தை நல்ல வழியில் முதலீடு செய்து அதை பாதுகாத்து மேலும் அதை அதிகரிக்கத் தெரியாது.  தவறான இடங்களில் முதலீடு செய்து  கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை இழந்து முதுமையில் வறுமையால் வாடுவார்கள். எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்க்கிறோம். சரியான வழியில் முதலீடு செய்யாமல் கைப் பொருளை இழந்து பிச்சைக்காரர்களை விட  கேவலமாக வாழ்பவர்களை பார்க்கிறோம். முதலீடு செய்யவும் அறிவு வேண்டும். 

நான்காவது, சிலர் கையில் நாலு காசு சேர்ந்தவுடன் அதை கண்ணு மண்ணு தெரியாமல் செலவழிப்பார்கள். சூதாட்டம், கள் ,  கெட்ட சகவாசம் என்று செலவழித்து அதனால் பொருளையும் இழந்து, பெருமையையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து துன்பப் படுவார்கள். 

ஐந்தாவது, சரி பணம் மட்டும் தானா, உறவு நட்பு இது எல்லாம் வேண்டாமா ? அறிவு இல்லை என்றால் சிறந்த நண்பர்களை தேர்ந்து எடுப்பது கடினம். கெட்ட நண்பர்கள் நம்மை துன்பத்தில் தள்ளி விடுவார்கள். உறவுகளில் ஆயிரம் சிக்கல் வரும். ஏன் கணவன் மனைவிக்கு நடுவில் கூட சிக்கல்கள் வரலாம். பணம் இல்லாத ஏழைகள் வீட்டில் கணவன் மனைவி அன்போடு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அன்பு செலுத்தி  இன்பமாக இருப்பதைக் காணலாம். பணம் படைத்த வீட்டில் , கணவனும் மனைவியும் அன்பில்லாமல், நாளும் சண்டையிட்டுக் கொண்டு வாழக்கை நரகமாக வாழ்வதையும் காணலாம். தேவை இல்லாத உறவுகளை கொண்டாடுவது, தேவையான உறவுகளை மதிக்காமல் இருப்பது போன்றவை அறிவின்மையால் நிகழும். 

சரி, இதெல்லாம் சரிதான். அதுக்காக எந்நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் போதுமா என்றால் , அறிவு வளர்ந்தால் பணம் சம்பாதிப்பது எப்படி, செலவழிப்பது எப்படி, இதில் முதலீடு செய்யலாம், எப்படி மகிழ்ச்சியாக வாழலாம், உறவுகளில் வரும் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து அதன் படி   செயல் பட முடியும். 

அறிவு இவை அனைத்தையும் கொண்டு வரும். 

எனவே அறிவைப் பெற்றால் அறிவும் கிடைக்கும் மற்றவையும் கிடைக்கும். 

அறிவில்லாத மற்றவற்றாரால் அவ்வளவாக சிறப்பு இல்லை. சில சமயம் அதனால் துன்பம் கூட வரும். 

அது மட்டும் அல்ல, அறிவினால் இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் வேண்டிய  நன்மைகளை தேடிக் கொள்ள முடியும். 

மற்றவை வேண்டாம் என்று சொல்லவில்லை வள்ளுவர். மற்றவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்லவில்லை. தேவையான பொருள் இல்லாவிட்டாலும், நல்ல உறவும் நட்பும் இல்லாவிட்டாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டாலும்  குறை தான். ஆனால், அவற்றை ஒரு பெரிய குறையாக உலகம் கருதாது என்றார் வள்ளுவர். 

அறிவைத் தேடுங்கள். மற்றவை தானே வரும். 



 


Thursday, November 17, 2016

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக 


வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் நிறைந்ததுதான். இன்பம் மட்டுமே வேண்டும். துன்பம் வேண்டவே வேண்டாம் என்று தான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன. ஆனாலும் , துன்பம் அழையா விருந்தாளியாக வந்து வந்து போகத்தான் செய்கிறது.

துன்பம் வந்தால் என்ன செய்வது ?  சிரித்து விடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

பொருள்

இடுக்கண் = துன்பம்

வருங்கால் = வரும்போது

நகுக = சிரிக்க

அதனை = அந்த துன்பத்தை


அடுத்தூர்வது = சென்று போராடுவது

அஃதொப்பது = அதைப்போன்ற ஒன்று

இல் = இல்லை


வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டு போய் விடுவார். துன்பம் வரும் போது சிரியுங்கள் என்று.  அதெல்லாம் நடக்குமா ? நடைமுறைக்கு சாத்தியமா ? கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும் என்று நாம் எப்போதும் போல நினைப்போம்.

வள்ளுவர் சும்மா சொல்ல மாட்டார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.

அது என்னவாக இருக்கும் என்று சிந்திப்போம்.


துன்பம் வேண்டாம் தான் நினைக்கிறோம். ஆனால் நம்மை யார் கேட்கிறார்கள். துன்பம் வந்து விட்டது.

உடல் நிலை குறைவு, பணத் தட்டுப்பாடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம்,  தொழிலில் தொய்வு, அலுவலகத்தில் சிக்கல், உறவுகளில் குழப்பம், விரிசல், நெருங்கியவர்கள் புரிந்து கொள்ளாமை , நினைத்தது நடக்காமை, தேர்வில் குறைந்த மதிப்பெண், என்று ஏதோ ஒரு வகையில் துன்பம் வந்து விடுகிறது.

வந்தவுடன் என்ன செய்யலாம் ?

துவண்டு போய் விடலாம்.

வீட்டுக்குள் முடங்கி விடலாம்.

விதியை நோகலாம்.

நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று எல்லோரையும் நோகலாம்.

தெய்வத்தை பழிக்கலாம்.

விதியை நோகலாம்.

....

ஆனால் இப்படி எல்லாம் செய்வதனால் வந்த துன்பம் நீங்கி விடுமா ? வந்த துன்பத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதை எதிர்த்து போராட வேண்டும்.

என்னால் என்ன முடியும் என்று முடங்கிக் கிடந்தால் எப்படி போராடுவது ?

போராட வேண்டும் என்றால் அதற்கு ஒரு உற்சாகம் வேண்டும், உத்வேகம் வேண்டும், முயற்சி வேண்டும்.

அந்த முயற்சிக்கு ஒரே வழி , "இந்த துன்பத்தை நான் வெற்றிக்கு கொள்வேன் " என்ற  தன்னம்பிக்கை.

இரண்டாவது, துன்பம் வந்தால் யாரிடமாவது உதவி கேட்க வேண்டும். உதவி கேட்கப் போகும் போது முகத்தை வாட்டமாக, தொங்கப் போட்டுக் கொண்டு சென்றால்  உதவி செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட செய்ய மாட்டார்கள். நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு கொஞ்சம் பணம் வேண்டும். சோகமான முகத்துடன், பயந்த விழிகளோடு , தயங்கி தயங்கி கேட்டால் பணம் கிடைக்குமா. தைரியமாக, தன்னம்பிக்கையோடு சிரித்த முகத்தோடு கேட்டால்  கிடைக்குமா ?

பணம் இல்லாதது துன்பம் தான். ஆனால் அதற்காக அழுது வடிந்து கொண்டு இருந்தால் , உதவி செய்ய நினைப்பவர்கள் கூட உதவி செய்ய மாட்டார்கள். மலர்ந்த  முகத்தோடு இருங்கள்.

மூன்றாவது, "அடுத்தூர்வது" என்றார். அது என்ன அடுத்தூர்வது ? அடுத்து + ஊர்வது.

அடுத்தல் என்றால் போராடுதல். அடுகளம் என்றால் போர் களம்.  துன்பத்தை எதிர்த்து போராடுவது என்று அர்த்தம். போராடும் போது ஒரு வலிமை, ஒரு உத்வேகம். இல்லை என்றால் தோல்வி நிச்சயம். பணம் வேண்டுமா, ஒன்றுக்கு பத்து பேரிடம்  கேட்போம் என்று கிளம்ப வேண்டும்.  கட்டாயம் கிடைக்கும் என்று  ஒரு புன்னகையோடு கிளம்ப வேண்டும். "எங்க கிடைக்க போகுது, எவன் தருவான் " என்று சோர்வோடு கிளம்பினால் கட்டாயம் கிடைக்காது.

நோய் வந்து விட்டதா ? அவ்வளவுதான், இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று துவண்டு விடக் கூடாது. மருந்து வேலை செய்யும். மருத்துவர்கள் உதவி செய்வார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இந்த நொடியில் இருந்து விடுபடுவேன் என்று தன்னம்பிக்கையோடு இருந்தால்  நோயிலிருந்து விடுபடலாம். மாறாக, என்ன மருந்து சாப்பிட்டு என்ன பயன் என்று துவண்டு விட்டால் , நோய் குணமாகாது.

நான்காவது, "அஃதொப்பது இல்" என்றார். அப்படி என்றால் என்ன ? துன்பத்தை வெல்ல பல வழிகள் இருக்கலாம். இறைவனை நம்பலாம். கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளலாம். வள்ளுவர் அதை எல்லாம் தவிர்க்கச்  சொல்லவில்லை. துன்பத்தை கண்டு சிரிப்பது உள்ளதிற்குள் சிறந்தது. அதற்கு இணையான ஒன்று இல்லை என்கிறார். அதை விட சிறப்பு குறைந்தவை இருக்கலாம். ஆனால் அதற்கு இணையான ஒன்று இல்லை. சிறந்தது இருக்கும் போது மற்றவற்றை ஏன் நாட வேண்டும் ?

துன்பம் வந்தால், எதிர்த்துப் போராடுங்கள். போராட ஒரு முயற்சி, உற்சாகம், உத்வேகம் வேண்டும்.

அதற்கு ஒரு தன்னம்பிக்கை, ஒரு மலர்ந்த முகம் வேண்டும்.

எனவே, துன்பம் வந்தால் துவண்டு விடாமல், சிரித்த முகத்தோடு போராடுங்கள். அதை விட சிறந்த வழி இல்லை.






Wednesday, November 16, 2016

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் 


சிலர் யாருக்குமே உதவி செய்ய மாட்டார்கள். அது கூட பரவாயில்லை, மற்றவர்கள் உதவி செய்தாலும், உதவி பெறுபவர்களை கண்டு பொறாமை படுவார்கள். அந்த உதவியை தடுக்க நினைப்பார்கள். மற்றவர்களின் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையை அழுக்காறு என்பார்கள்.

அப்படி ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவியை கண்டு பொறுக்க மாட்டாதவன் சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கெட்டுப் போவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்

கொடுப்பது = ஒருவன் மற்றவருக்கு கொடுக்கும் உதைவியை

அழுக்கறுப்பான் = பொறுத்துக் கொள்ள மாட்டாதவன்; அல்லது அதை தடுக்க நினைப்பவன்

சுற்றம் = அவனது சுற்றத்தார்

 உடுப்பதூஉம் = உடுக்க உடையும்

உண்பதூஉம் = உண்பதற்கு உணவும்

இன்றிக் கெடும் = இல்லாமல் கெட்டுப்  போவார்கள் , அல்லது துன்பப் படுவார்கள்.

எளிமையான குறள் தான். இருந்தாலும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது.

முதலாவது, கொடுப்பது கண்டு பொறாமை படுவது என்பது மிக மிக கேவலமான செயல். அப்படி பொறாமை படுபவன் ரொம்ப துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார் வள்ளுவர்.

துன்பத்தில் பெரிய துன்பம் எது ? பசிக்கு உணவு இல்லாததும், மானத்தை காக்க உடை இல்லாததும் தான். உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். உடை இல்லாமால் இருக்க முடியுமா ? உடையும் உணவும் இல்லாவிட்டால் எவ்வளவு துன்பமாக இருக்கும். அவ்வளவு துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார்.

சரி, பொறாமை படுபவன் துன்பப் பட்டால் சரி. எதற்காக அவன் சுற்றத்தார் உணவும் உடையும்  இன்றி துன்பப் பட வேண்டும் ?

இரண்டாவது,  ஒருவன் துன்பத்தில் இருக்கிறான் என்றால், உதவி என்று தன் சுற்றத்தாரிடம் போவான்.  அவர்களே உணவும் உடையும் இல்லாமல் இருந்தால், இவன் எங்கே போவான். சுற்றம் கெடும் என்றால், இவனும் கெடுவான் என்பது சொல்லாமல் சொன்னது. மேலும், தான் கெட்டு , சுற்றமும் கெட்டால் , உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்துப் போவான் என்பது பொருள்.

சிந்தித்துப் பாருங்கள். துன்பம் யாருக்கும் வரும். அப்படி துன்பம் வந்த காலத்து, அதில் இருந்து விடுபட மற்றவர்களின் உதவி வேண்டும். உதவி செய்யவும்  யாரும் இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய துன்பம் ?


மூன்றாவது, சுற்றம் என்றால் ஏதோ தூரத்து சொந்தம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தூரத்து  சொந்தக் காரன் எப்படி போனால் நமக்கு என்ன என்று பல பேர் நினைப்பார்கள். சுற்றம் என்றால் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்று  நெருங்கிய சொந்தம்.  பெற்ற பிள்ளை சாப்பாட்டுக்கும் , துணி மணிக்கும்  வழி இல்லாமல் தவிக்கிறான் அல்லது தவிக்கிறாள்  என்று கேட்டால் அந்த பெற்றோரின் மனம்  எவ்வளவு துன்பப் படும்.  அது மட்டும் அல்ல  பிள்ளைக்கு உதவி செய்யக் கூட முடியவில்லை என்றால் அது இன்னும் எவ்வளவு துன்பம்.


நான்காவது, அப்படி நம்முடைய பிள்ளைகளோ, பெற்றோரோ, உடன் பிறப்புகளோ உணவும் உடையும் இன்றி தவிக்க நாமே காரணம் என்று இருந்தால் அந்த நினைப்பு எவ்வளவு துன்பத்தைத் தரும். நம் பிள்ளைகளின் துன்பத்திற்கு நாமே காரணமாகி விட்டோமே என்று நினைத்தால் ஒரு பெற்றோர் எவ்வளவு  வருந்துவார்கள்.

இவ்வளவு பெரிய துன்பம் தேவையா ? மற்றவர்கள் செய்யும் உதவியைக் கண்டு  பொறாமை கொண்டால் இப்படிப் பட்ட துன்பங்கள் நிகழும் என்கிறார் வள்ளுவர்.

ஐந்தாவது, உணவும் உடையும் இல்லை என்றால் மற்றவைகள் இருக்குமா ? வீடு, நிலைக்கு, நகை, வண்டி , வாகனம் என்று எல்லாம் இருக்குமா ? ஒன்றும் இருக்காது அல்லவா ? எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டும். ஆனால், தெருவில் நின்று பிச்சை கூட கேட்க முடியாது காரணம், உடை இல்லை.  உடை இல்லாமல், தெருவில் சென்று பிச்சை கேட்பது எவ்வளவு அவமானம்.

ஆறாவது, துன்பத்தில் இருக்கும் சுற்றத்தார், "இவன் கொண்ட பொறாமையினால் தான், நமக்கு இந்த துன்பம் வந்தது " என்று எண்ணி இவனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஒண்ட இடம் இன்றி, உடுத்த உடை இன்றி, உண்ண உணவு இன்றி ....எவ்வளவு துன்பம் பாருங்கள்.

ஏழாவது, சரி இவ்வளவுதானா ? தானும், சுற்றமும் உணவும் உடையும் இல்லாமல்  போவோம் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதற்கு மேலும் சொல்கிறார்  "கெடும்" என்று. இதற்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது  ?

இருக்கிறது.

உணவும் உடையும் இல்லாத ஒருவன், தன் பிள்ளைகள் உணவும் உடையும் இல்லாமல் தவிப்பதை பார்க்கும்  ஒருவன் எப்படியாவது அவர்களுக்கு உணவும் உடையும்  பெற்றுத் தர வேண்டும் என்று ஏதாவது தவறான வழியில் முயல்வான். திருடுவான், மற்ற குறுக்கு வழியில் செல்ல நினைப்பான். அதனால் மேலும் பழி  வந்து சேரும்.  சிறைக்குப் போவான். குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டு சிறை செல்ல நேரிடும்.

மீண்டும் தலை எடுக்கவே முடியாத அளவு  தீராத துன்பத்தில் கிடந்து கெடுவான் என்ற பொருள் பட "கெடும்" என்றார் .

எவ்வளவு கோபமும், வெறுப்பும் இருந்தால் வள்ளுவர் இப்படி ஒரு குறளை எழுதி இருப்பார் ?

கொடுப்பதைக் கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது என்பதை இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது.

சரி, யாரோ யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறார்கள். நாம் ஏன் அதை தடுக்கப் போகிறோம். அப்படி எல்லாம் யாரும் செய்வார்களா என்று கேட்டால், சில உதாரணங்கள் காட்டலாம்.

உணவு விடுதியில் , உணவு சாப்பிட்டபின் பில் வரும். நண்பர் , அந்த பில்லோடு சேர்த்து கொஞ்சம் டிப்ஸ் வைப்பார். "எதுக்கு எவ்வளவு டிப்ஸ், கொஞ்சம் குறைத்து வை. இல்லைனா எல்லோரிடமும் இப்படியே எதிர் பார்ப்பார்கள் " என்று நண்பன் கொடுப்பதை குறைப்பவன் , இந்த பட்டியலில் வருவான்.

அலுவலகத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வோ, அல்லது சம்பள உயர்வோ கொடுக்கும் முன், அவனுடைய மேலதிகாரி நம்மிடம் அபிப்பிராயம் கேட்கலாம். "அவனுக்கா, இப்ப எதுக்கு, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் " அவனுக்கு வரும் நன்மையை தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

வீட்டில் மனைவியோ கணவனோ , ஒரு அனாதை ஆசிரமத்துக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்துக்கோ நன்கொடை அளிக்கும் போது , எதுக்கு இவ்வளவு நன்கொடை என்று தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

இப்படி நடை முறையில் எவ்வளவோ விதங்களில் நாம் பிறருக்கு வரும் நன்மைகளை  தடுத்து விடுகிறோம்.

அது தவறு.

கொடுப்பவர்களை வாழ்த்துவோம்.

பெறுபவர்களை , இன்னும் சிறந்து வரட்டும் என்று வாழ்த்துவோம்.



Tuesday, November 15, 2016

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்



உன் தாய் செய்தது உனக்குத் தெரியாதா என்று கோசலை பரதனிடம் கேட்டவுடன், பரதன் கூறுவான் , என் தாய் செய்தது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கீழே சொன்ன பாவங்கள் செய்த நரகத்துக்கு நான் போவேன் என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன் = அறம் கெட முயன்றவன்

அருள் இல் நெஞ்சினன் = அருள் இல்லாத மனமுடையவன்

பிறன் கடை நின்றவன் = மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றவன்

பிறரைச் சீறினோன் = மற்றவர்கள் மேல் சீறி விழுந்தவன்

மறம் கொடு = சண்டையிட்டு

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

கொன்று வாழ்ந்தவன் = கொலை செய்து வாழ்பவன்

துறந்த = பற்றினை துறந்த

மாதவர்க்கு = பெரிய தவம் செய்தவர்களுக்கு

அருந் துயரம் = பெரிய துயரை

சூழ்ந்துேளான்.= செய்பவன்

இவர்கள் எல்லோரும் செல்லும் நரகத்துக்கு செல்வேன்


அறத்தை கெடுக்கக் கூட வேண்டாம்...கெடுக்க நினைத்தாலே நரகம் தானாம். இங்கே அறம்  என்பதற்கு கொடை , தானம் என்றும் கொள்ளலாம் அல்லது தர்மம், நியாயம் என்ற அறக் கோட்டபாடுகளையும் கொள்ளலாம்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

என்பது வள்ளுவம்.

பாவம் என்பது மற்றவர்களுக்குச் ஏதாவது கெடுதல் செய்தால் தான் என்று இல்லை. மனதில் அருள் இல்லாவிட்டாலும் பாவம் தான்.

நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாத உயிர்களிடத்து செலுத்தும் கருணைக்கு  அருள் என்று பெயர் என்பார் பரிமேலழகர். தெருவில் திரியும் நாய், பேருந்து நிலையத்தில் உள்ள  பிச்சைக்காரன், டிவி யில் எங்கோ யுத்தத்தில் அடிபடும் உயிர்களின் மேல் வரும் இரக்கம், இதற்கு அருள் என்று பெயர்.

அந்த கருணை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அந்த மாதிரி  கருணை.

"பிறன் கடை நின்றவன்" ... தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து   அவர்கள் வீட்டு வாசலில் நின்றவன் என்றும் கொள்ளலாம் அல்லது  மற்றவன் மனைவியை கவர நினைத்து அவன் வீட்டு வாசலில் நின்றவன் வேண்டும் கொள்ளலாம். இரண்டும் தவறு தான்.

இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான்.

அதன் முடிவில் ....



Sunday, November 13, 2016

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?


தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிழைக்க தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

பின், கோசலையை பார்க்கச் செல்கிறான்.

இங்கே, கொஞ்சம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து  கொண்டு,கைகேயியை தூண்டி விட்டு அரசை பெற்றுக் கொண்டான் என்று சிலர் அவன் மீது பழி சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால், அவன் கைகேயியை பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, அது கூட ஒரு நாடகம் என்று வைத்துக் கொண்டால், அவன் கோசலையை பார்க்க போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்ற உணர்வு இருந்தால் , அவன் கோசலையை பார்க்க நினைத்திருப்பானா ?

பார்க்கப் போனான்.

கீழானவர்கள் எப்போதும் தங்களது கீழ்மையை மற்றவற்றின் மேல் ஏற்றிக் கூறுவார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அந்த நூல்கள் நம்மை மேலேற்றும் படி நாம் பார்த்துக் கொள்ள  வேண்டும்.நம் சிந்தனைகள், எண்ணங்கள் மேலே போக வேண்டும். மாறாக, அந்த நூலை, அதில் சொல்லப் பட்ட உயர்ந்த கருத்துகளை, நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.  நாம் மேலே போக வேண்டுமே அல்லால்  நம்மை விட உயர்ந்தவற்றை நம் நிலைக்கு கீழே கொண்டு வரக் கூடாது.

பாடல்

மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.

பொருள்

மை = கருமை, தீய எண்ணங்கள்

அறு = அறுந்த , இல்லாத

மனத்து  = மனதை கொண்டவன் (பரதன்)

ஒரு மாசு = ஒரு குற்றம் கூட

உளான் அலன் = இருப்பவன் அல்லன்

செய்யனே = செம்மையானவன். நேர்மையானவன்

என்பது = என்பதை

தேரும் = தேர்ந்து, ஆராய்ந்து அறிந்த

சிந்தையாள் = மனத்தைக் கொண்டவள் (கோசலை)

‘கைகயர் கோமகள் = கேகேய அரச குமாரி

இழைத்த = செய்த

கைதவம் = வஞ்சனை



ஐய! = ஐயனே 

 நீ = நீ 

அறிந்திலை = அறியவில்லை 

போலுமால்? = போலிருக்கிறது 

‘என்றாள் = என்றாள் 

பரதா , உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள்.  அதில்  மறைந்து நிற்கும் தொனி , உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே.

பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று  அவள் அறிவாள் .

இருந்தும் "உனக்குத் தெரியாதா " என்று ஏன் கேட்டாள் ?

அப்படி கேட்க்காமல் இருந்திருந்தால், பரதனுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கும்  வாய்ப்பு இல்லாமலேயே போய் இருக்கும்.   ,கோசலை   ஒன்றும் கேட்கவில்லை, ஒரு வேளை அவளுக்கும் பரதன் மேல் வருத்தம் இருந்திருக்குமோ என்று   நினைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அதை சரி செய்கிறான் கம்பன். 


அவள் அப்படி கேட்டவுடன், பரதன் துடித்துப் போகிறான். 

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள்   போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று பாவங்களின் பட்டியல் தருகிறான். 

எதெல்லாம் செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகிறான் கம்பன் , பரதன் வாயிலாக.

அவை என்னென்ன என்று பார்ப்போம். 


Wednesday, November 9, 2016

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், ஆசிரியன் என்பது எல்லாம் ஒருவரை சேர்ந்தது அல்ல. அது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. 

பிள்ளையை பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது. தாய் என்பது, பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதில் இருக்கிறது. 

தந்தையான இறைவன் தாயும் ஆனான். தாயுமானவன் என்று அவன்  பெயர்.

தந்தை என்ற பெயரில் ஒரு தந்தை செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம். 

ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தகாத செயல்கள் செய்பவர்களை பற்றியும் படிக்கிறோம். 

எனவே, இவை செய்யும் செயலைப் பொறுத்து அமைவது. 

தாய்மை மனதில் இருந்தால் , ஒரு ஆணும் தாயாக முடியும். அன்பு மனதில் இல்லை என்றல், ஒரு பிள்ளை பெற்ற பெண்ணும் தாயாக முடியாது. 


தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் நிற்கிறான் இராமன். அவனைப் பார்த்து கௌசிகன் சொல்வான், "இந்த கொடியவளை பெண் என்று நீ நினைக்கிறாயா" என்று. பெண் போல வடிவம் இருந்தால் பெண்ணாக முடியாது. பெண் என்றால் அந்த பெண்மைக்குரிய குணங்கள் இருக்க வேண்டும். 

‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘

என்பான் கம்பன்.

தான் பெற்ற இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கும், தயரதனை வானுக்கும் அனுப்பினேன் என்றாள் கைகேயி பரதனிடம்.

அதைக் கேட்டு கொதித்துப் போய் பரதன் சொல்கிறான்

"நீ இன்னுமும் உயிரோடு இருக்கிறாய். நானும் இருக்கிறேன். உன்னை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் நீ தாய் என்பதால் அல்ல, இராமன் கோபப் படுவானே என்பதால் " என்கிறான்.

பாடல்

நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


பொருள்

நீ = நீ, கைகேயி

இனம் = இன்னும்

இருந்தனை; = உயிரோடு இருக்கிறாய்

யானும் = நானும் (பரதன்)

நின்றனென் = ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருக்கிறேன்

“ஏ”  = ஏ

எனும் = என்று

மாத்திரத்து = சொல்லும் நேரத்திற்குள்

எற்றுகிற்றிலென் = உன்னை தண்டிக்காமல் இருக்கிறேன்

ஆயவன் = தாய் போன்ற இராமன்

முனியும் = கோபம் கொள்வான்

என்று = என்று

அஞ்சினேன் = அச்சம் கொண்டேன். பயம் கொண்டேன்

அலால் = இல்லை என்றால்

“தாய்” எனும் = தாய் என்ற

பெயர் = பெயர்

எனைத்  = என்னை

தடுக்கற் பாலதோ? = தடுக்கும் சக்தி வாய்ந்ததா ? இல்லை.

 குழந்தையை பெற்று விட்டால் மட்டும் தாயாக முடியாது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் என்பார் மணிவாசகர். பால் கொடுத்தால் அழகு குறைந்து  விடும் என்று நினைக்கும் ஒரு பெண் தாயாக முடியுமா ?

கைகேயி பரதனைப் பெற்றவள்தான். அதனால் அவளை தாய் என்று கருதவில்லை பரதன். கணவனை கொண்டு, இன்னொரு பிள்ளையை கானகம் அனுப்பிய ஒரு  பெண் எப்படி தாயக இருக்க முடியும் என்பது பரதனின் எண்ணம்.

தவறு செய்த தாய் ஒருபுறம்.

தவறிப் போன அரச நீதி மறுபுறம்.

தாயின் மேல் அன்பு கொண்ட இராமன் இன்னொரு புறம்.

தண்டித்தாலும் தவறு. தண்டிக்காவிட்டாலும் தவறு.

தவிக்கிறான் பரதன். 

சோதனைகள் மனிதனின் உண்மையான  குணத்தை வெளியில் காட்டும். 

பரதன் என்ன செய்தான் என்று பார்ப்போம். 

Tuesday, November 8, 2016

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்




நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது. இலஞ்சம், அராஜகம் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது. நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது என்று பல பேர் நொந்து கொள்வார்கள். சரி, இதை சரி செய்ய நீ என்ன செய்தாய் என்றால் "நான் என்ன செய்ய முடியும்..தனி ஒரு ஆள் இந்த நாட்டை திருத்த முடியுமா " என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.


ஒரு அநீதி நடக்கிறது என்றால் , அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான் . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் , அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.


எனக்கு உன் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி, உனக்கு நாட்டைப் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி கூறியதைக் கேட்ட பரதன் தவித்துப் போகிறான்.


அவன் கைகேயி தண்டிக்க முடியவில்லை ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று தெரியும் பரதனுக்கு. சரி, கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல்

‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

பொருள்

‘மாண்டனன் = இறந்தான்

எந்தை = என் தந்தையாகிய தயரதன்

என் = என்னுடைய

தம்முன் = முன் பிறந்த இராமன்

மா தவம் = பெரிய தவம்

பூண்டனன் = மேற்கொண்டான்

நின் = உன்னுடைய

கொடும் = கொடிய

புணர்ப்பினால் = சூழ்ச்சியால்

என்றால் = என்றால்

கீண்டிலென் வாய் = உன் வாயை கிழிக்கவில்லை

அது கேட்டும் = இவற்றை எல்லாம் கேட்ட பின்னும்

நின்ற யான் = இருக்கும் நான்

ஆண்டனெனே = ஆண்டேன்

அன்றோ  =  இல்லையா

அரசை ஆசையால்? = அரசை ஆசையால்

இப்படிப் பட்ட வரம் கேட்ட உன் வாயைக் கிழிக்கவில்லை. நானும் இறக்காமல் இருக்கிறேன். இது , நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு  ஒப்பாகும் என்றான்.

ஒரு தலைவன் , அவனுக்கு கீழே உள்ளவர்கள் தவறு செய்தால் , ஒன்று அவர்களை  தண்டிக்க வேண்டும். அல்லது, தண்டிக்க முடியவில்லை என்றால் அந்த தலைவர் பதவியை விடவேண்டும்.

இல்லை என்றால், அந்த தவறில் தலைவனுக்கும் பங்கு உண்டு. நான் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.

இது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல, ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், ஒரு குடும்பத்தின் தலைவருக்கும் பொருந்தும்.

பிள்ளைகள் தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும்.

பரதனின் சோகத்திலும் ஓங்கி நிற்பது  அறச் சிந்தனையே

Monday, November 7, 2016

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என் ?

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்  ?


 இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு  பெரும்பாலும் அது நாயக நாயகி பாவமாகவே இருந்திருக்கிறது. 

சுந்தரர் ஒருவர் தான் அதை மாற்றினார். இறைவனை தோழனாக பாவித்தார்.

நட்பு அனைத்து உறவுகளிலும் உயர்ந்தது.

நட்பு என்றால் ஏதோ பெயரளவில் அல்ல.

சிவ பெருமானிடம் love லெட்டர் கொடுத்து அனுப்பியவர் சுந்தரர்...அதுவும் முதல் மனைவி இருக்கும் போதே , இரண்டாவது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து அனுப்பினார். சிவ பெருமானும் கொண்டு போனார்.

நட்பு என்றால் கிண்டல், கேலி எல்லாம் இருக்கும் அல்லவா.

சுந்தரர் சிவனைப் பார்த்து கேட்கிறார்

"இங்க பாரு, உன் பக்தர்கள் உன் அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என்று காத்து கிடக்கிறார்கள். நீயோ காலம் தாழ்த்திக் கொண்டே போகிறாய். நீ அருள் செய்வதற்கு முன் அவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வாய் ? அப்புறம் யாருக்கு அருள் செய்வாய் ? அது மட்டும் அல்ல, உனக்கு இருக்கும் அருளுக்கு , இந்த பக்தர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடும்...போ சீக்கிரம் அருள் செய் " கட்டளை இருக்கிறார்.

பாடல்

நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் 
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! 
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! 
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

பொருள்


நஞ்சி, = விரும்பி

“இடை இன்று நாளை” = இன்று வரும் , நாளை வரும்

என்று = என்று

 உம்மை  = உன்னை

நச்சுவார் = உள்ளன்போடு விரும்புவார் 


துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

பின்னைச் = அப்புறம்  பின்னால்

செய்வது என்? = என்ன செய்வது ?

அடிகேள், = அடிகளே கேள்

சொலீர் = ஆரவாரம் எழுப்பும் கழல்கள் அணிந்த திருவடிகளை உடையவரே

பஞ்சி = பஞ்சு

இடப் புட்டில் = இட்டு வைத்தால்

கீறுமோ? = உடைந்து விடுமோ

பணியீர், = சொல்வீர்

அருள்! = உம்முடைய அருள்

முஞ்சி இடைச் =  புல்லின் மேல்

சங்கம் = சங்கு

ஆர்க்கும் = சப்தம் எழுப்பும்

சீர் முதுகுன்றரே! = சிறந்த முது குன்று என்ற ஊரில் உள்ளவரே


நச்சி என்றால் விரும்பி , உள்ளன்போடு விரும்பி என்று பொருள். விரும்பப் படாதவன் செல்வம் ஊர் நடுவில் ஒரு நச்சு மரம் பழுத்தது போன்றது என்பார் வள்ளுவர்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

யாரிடமும் அனுப்பு செலுத்தாதவன். அவனிடம் யாரும் போக மாட்டார்கள். அவனுக்கு செல்வம்  வந்தால் அது நச்சு மரம் பழுத்தது போலத்தான் என்கிறார்.

மானிட வாழ்வு கொஞ்சம் காலம்தான். சிவனே, உன் அடியார்கள் இறப்பதற்குள் போய் அருள் செய் என்று இறைவனையே பணிக்கிறார்.

துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

துஞ்சுதல் என்றால் தூங்குதல் என்று பொருள். 

தமிழிலே மங்கள வழக்கு என்று ஒன்று உண்டு. 

எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும் என்பது தமிழ் மரபு. 

அதிலும் குறிப்பாக மங்கல சொற்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று  விதி செய்து வைத்து இருந்தார்கள். 

சொற்களுக்காக பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் திணறி இருக்கிறார்கள். 

கடைசியில் இறைவனிடமே சென்று , நீயே ஒரு சொல் எடுத்துக் கொடு என்று வேண்டி , வாங்கியும் இருக்கிறார்கள். 

சேக்கிழாருக்கு , அருணகிரி நாதருக்கு, கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு இறைவனே  அடி எடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. 

இலக்கியம் படிக்கும் போது இடையிடையே  இலக்கணமும் சற்று படிப்போமே 

இறைவனிடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையும் இல்லை. 

உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள். 

தமிழில் அன்று வைதாரையும் வாழ வைத்தோன் என்பார் அருணகிரி நாதர். 

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

என்பது கந்தரலங்காரம் 


சுந்தரர் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர். தேவாரம் என்பது திருநாவுக்கரசர்  பாடிய பாடல்களை மட்டுமே குறிக்கும். எளிதாக அடையாளம் காண  தேவாரம் என்று தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

திருபாட்டை  தேடிப் படியுங்கள் . அத்தனையும் தேன் .


இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும்

இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும் 


"உன் தந்தை இறந்து விட்டார். இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு சீதையும், இலக்குவனும் போய் விட்டார்கள்" என்று கைகேயி பரதனிடம் கூறினாள் .


“குற்றம் ஒன்று இல்லையேல்,
    கொதித்து வேறு உேளார்
செற்றதும் இல்லையேல்
    தயெ்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே
    பிள்ளை கான் புக
உற்றது என்? பின் அவன்

இராமன் குற்றம் எதுவும் செய்யவில்லையென்றால், வேறு ஒருவர் செய்ய வில்லையென்றால், தெய்வத்தால் ஆனது இல்லை என்றால், பெற்றவன் இருக்க இராமன் ஏன் கானகம் போனான் என்று பரதன் கேட்கிறான்.

உன் தந்தை எனக்கு தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பினேன், தயரதன் அது கேட்டு மாண்டு போனான் என்றாள்.

பரதனால் தாங்க முடியவில்லை.

இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் நிலையில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்.

அரசு கையில் வந்து விட்டது. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். தயரதனும் இறந்து விட்டான். இனி என்ன வேண்டும் ? அரசை மகிழ்ச்சியாக ஆளலாம் என்று நினைக்கலாம். சந்தோஷப் படலாம்.

அல்லது, இது சரி இல்லை. நமக்கு எதுக்கு இந்த பழிச் சொல். பேசாமல் இராமனிடமே இந்த அரசை கொடுத்து விடலாம் என்று நினைக்கலாம். என்று பழிக்கு அஞ்சி இருக்கலாம்.

அல்லது, இந்த அரசு என்பது பெரும் பாரம். இதை யார் கட்டி இழுப்பார். இராமனே இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க நினைக்கலாம்.

பரதன் இது எதுவும் செய்யவில்லை.

கோபத்தில் கொந்தளிக்கிறான்.

கைகேயியை கொல்லப் பார்க்கிறான். இப்படி ஒரு பாதகத்தை செய்த அவளை தண்டிக்க நினைக்கிறான்.

ஆனால், அப்படி செய்தால் இராமன் கோபப் படுவான்  என்று நினைத்து கைகேயியை ஒன்றும்  செய்யாமல் விடுகிறான்.

பாடல்

கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;

பொருள்

கொடிய = கொடுமையான

வெங் = வெம்மையான

கோபத்தால் = கோபத்தால்

கொதித்த = கொதித்த

கோளரி = சிங்கம் போன்ற பரதன்

கடியவள் = கடுமையானவள்

தாய் எனக் = தாய் என்று

கருதுகின்றிலன் = நினைக்கவில்லை

‘நெடியவன் முனியும்’ = பெரியவன் கோபிப்பான்

என்று = என்று

அஞ்சி = பயந்து

நின்றனன் = நின்றான்

இடிஉரும் = இடி இடிப்பது

அனைய = போன்ற

வெம் மொழி = சூடான சொற்களை

 இயம்புவான் = சொல்லுவான்

ஒரு பக்கம் தாய். என்னதான் அவள் தவறு செய்திருந்தாலும் , தாயின் மேல் உள்ள அன்பு  இல்லாமல் இருக்காது. கைகேயி பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவனுக்கு ஒரு பெரிய இராஜ்யத்தை பெற்றுத் தந்திருக்கிறான். சொல்லப் போனால் பரதன் அவளுக்கு நன்றி சொல்லலாம். இல்லை என்றால்  சும்மா இருக்கலாம். அவள் மேல் கோபம் கொள்ள ஒரு காரணமும் இல்லை - அறம் பிழைத்த ஒன்றைத் தவிர.

இன்னோரு பக்கம், இராமன். அவன் மேல் கொண்ட பக்தி. காதல்.

இன்னொரு பக்கம், அரச நீதி. தர்மம். அறம் .

தாயே ஆனாலும், தனக்கு ஒரு பெரிய அரசையே பெற்றுத் தந்தாலும், அது  அறம் அல்லாத  வழியில் வந்தது என்று அறிந்து கொதித்துப் போகிறான். அப்படி செய்த  கைகேயியை கொன்று விடலாமா  என்று கூட நினைக்கிறான்.

ஆனால், அப்படி செய்தால் இராமன் சினம் கொள்வான். கைகேயியை கொன்றால்  இராமானுக்குப் பிடிக்காது என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் நின்றான்.

அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம்  என்று நினைக்கிறான்.

இராம பக்தி.

பின்னால் பார்க்கப் போகிறோம். இராமனே சொன்னால் கூட , அறம் என்று அவன் நினைத்ததை , பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும்  விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

அதுதான் பரதன்.


Sunday, November 6, 2016

திருக்குறள் - உற்றநோய் நீக்கி

திருக்குறள் -  உற்றநோய் நீக்கி


சில பேரிடம் உதவி என்று கேட்டுப் போனால், "நீ அப்படி செஞ்சிருக்கக் கூடாது. இப்படி செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சதால தான் இப்ப இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்ட " என்று நடந்து முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஒழுங்கா படிக்க வேண்டிய நேரத்தில பிடிச்சிருந்தா நல்ல மார்க்கு கிடைச்சிருக்கும், இப்ப அழுது என்ன புண்ணியம் என்று கையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் பழங்கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.

கண்டதையும் சாப்பிட வேண்டியது, அப்புறம் acidity , வயிற்று வலின்னு தவிக்க வேண்டியது என்று ஏற்கனவே வலியில் துடிக்கும் ஒருவனுக்கு மேலும் வலிக்கும் படி ஏதாவது சொல்லுவது.

பெரியவர்கள் என்றால், முதலில் இருக்கின்ற பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும். பின் , அந்த மாதிரி பிரச்சனை இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும். அப்படிப் பட்ட பெரியவர்களை , அவர்களைப் போற்றி அவர்கள் உறவை கொள்ள வேண்டும்.

பாடல்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பொருள்

உற்றநோய் = வந்த துன்பத்தை

நீக்கி = நீக்கி

உறாஅமை = மீண்டும் அவை வராமல்

முற்காக்கும் = முன்பே காத்துக்  கொள்ளும் வழி சொல்லும்

பெற்றியார்ப் = தன்மை உடையவரை

பேணிக் = போற்றி

கொளல் = அவர்கள் உறவை ன், நட்பை கொள்ள வேண்டும்.


நோய் என்றால் துன்பம்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

என்பது குறள் . தனக்கு துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு துன்பம்  வேண்டும் என்று நினைக்கக் கூடாது.


அது என்ன உற்ற நோய் ? உற்ற நோய் என்றால் வந்த துன்பம்.  

துன்பம் இரண்டு வழியில் வரும். 

தெய்வத்தால் வருவது. மக்களால் வருவது. 

தெய்வத்தால் வருவது என்பது (an act of God ) வெள்ளம் , நில நடுக்கம், தீ, பெருங்காற்று, பெரிய நோய்  போன்றவை. 

மக்களால் வருவது என்பது பகை, திருட்டு, கொள்ளை, பழி சொல்லுதல் போன்றவை. 

பெரியோர் என்பவர் இவற்றில் இருந்து நம்மை காப்பார்கள். 

தெய்வத்தால் வருவதில் இருந்து எப்படி காப்பார்கள் என்றால், இயற்கையை நன்றாக ஊன்றி கவனித்து,  அதன் தன்மை புரிந்து, இந்த இந்த நிலை இருந்தால், இன்னின்ன நிகழும் என்று கணித்து கூறுவார்கள்.  இப்படி வெயில் அடித்தால் , இந்த வருடம் அதிகம் மழை பொழிவு இருக்கும். எனவே, ஏரிகளை தூர் வாரி, சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று வருவது உரைப்பார்கள். 

அறிவில் சிறந்த அமைச்சர்கள், பண்டிதர்கள் இவர்களை ஒரு அரசன் துணையாக  வைத்துக் கொள்ள வேண்டும்.

அது போல இன்றைய தினத்தில்  ஒரு நிறுவனத்தின் முதலாளி, CEO  தனக்கு வரும் துன்பங்களில் இருந்து  தன்னை காக்கும் வழி சொல்லும் நல்லவர்களை  துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இல்லறத்தில் இருப்பவனுக்கு மனைவியே நல்ல துணை. ஒருவனுக்கு வரப் போகும் மற்றும்  வந்த துன்பங்களில் இருந்து ஒருவனை காப்பவள் அவன் வாழ்க்கை துணை நலமான மனைவியே. 

மக்களால் வரும் துன்பங்களை சாம, தான, பேத , தண்டம் என்ற வழிகளில் சென்று  அந்தத் துன்பங்களில் இருந்து அரசனை காக்க வேண்டும். 


"பேணிக் கொளல்"

பேணுதல் என்றால் போற்றுதல். 

தந்தை தாய் பேண் என்பது அவ்வை வாக்கு. (ஒண்ணாங் கிளாசில் படிச்ச ஆத்திச் சூடி நினைவுக்கு வருகிறதா ?)

கப்பிய கரி முகன் அடி பேணி என்பது அருணகிரியார் வாக்கு. 


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
   கப்பிய கரிமுக                      னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை                கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
   மற்பொரு திரள்புய                    மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
   மட்டவிழ் மலர்கொடு                  பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய                     முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
   அச்சது பொடிசெய்த                  அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை                   இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
   அக்கண மணமருள்                  பெருமாளே.
 

என்பது திருப்புகழ். 

முப்பது முவர்கத்து அமரரும் அடி பேண  என்பதும் அவர் வாக்கே 

முத்தைத்தரு பத்தித் திருநகை
                அத்திக்கிறை சத்திச் சரவண
                 முத்திக்கொரு வித்துக் குருபர                  எனவோதும்
  முக்கட்பர மற்குச் சுருதியின்
                முற்பட்டது கற்பித் திருவரும்
                முப்பத்துமு வர்க்கத் தமரரும்                  அடிபேணப்
 பத்துத்தலை தத்தக் கணைதொடு
                ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                 பட்டப்பகல் வட்டத் திகிரியில்                  இரவாகப்
 பத்தற்கிர தத்தைக் கடவிய
                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                பட்சத்தொடு ரட்சித் தருள்வது                   மொருநாளே
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
                நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாட
 திக்குப்பரி அட்டப் பயிரவர்
               தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
               சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக                             எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
               குக்குக்குகு குக்குக் குகுகுகு                      
                குத்திப்புதை புக்குப் பிடியென                    முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
               வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
               குத்துப்பட ஒத்துப் பொரவல                         பெருமாளே

பேணுதல் என்றால் போற்றுதல்.

பேண் என்ற சொல்லடியாக வந்தது தான் பெண் என்ற சொல். 

போற்றுதலுக்கு உரியவள் என்று பொருள் 

ஏதோ பணம் கொடுத்து நல்லவர்களை, பெரியவர்களை துணையாகக் கொள்ளக் கூடாது. அவர்கள் மனம் விரும்பும்படி, அவர்களைப் போற்றி அவர்களின் உறவைப் பெற வேண்டும். 

அவர்கள் , நமக்கு வந்த துன்பத்தை போக்குவது மட்டும் அல்ல, இனி அந்த மாதிரி  துன்பங்கள் வரமால் இருக்கவும் வழி சொல்லித் தருவார்கள். 

அப்படி எத்தனை பெரியவர்களை உங்களுக்குத் தெரியும் ?

அப்படி ஒரு பெரியவராக நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?

சிந்தியுங்கள்.


Saturday, November 5, 2016

இராமாயணம் - பரதன் 11 - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம்  - பரதன் 11  - தீயன இராமனே செய்யுமேல்


இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.

உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். "இந்த துக்கத்தை மாற்ற இராமனின் திருவடிகளை பற்றினால் தான் சரி வரும் " என்று எண்ணி, இராமன் எங்கே என்று கேட்கிறான் பரதன்.

இராமன் கானகம் போய் விட்டான் என்று சொல்கிறாள் கைகேயி.

ஆடிப் போய் விடுகிறான் பரதன். இராமன் ஏன் கானகம் போனான் ? அவனை யார் போகச் சொன்னது ? அவன் என்ன தவறு செய்தான் ? அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போலல்லவா எண்ண வேண்டும் . இராமன் தயரதன் இறக்கும் முன் போனானா ? அல்லது இறந்த பின் போனானா என்று கேட்கிறான்.

பாடல்

தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

தீயன = தீமையான செயல்களை

இராமனே = இராமனே

செய்யுமேல் = செய்து இருந்தாலும்

அவை = அந்தச் செயல்கள்

தாய் = ஒரு தாய்

செயல் =செய்த செயல்

அல்லவோ = அல்லவோ ?

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது = இராமன் போனது

தாதை = தந்தை

விண் = வானம்

புக்க = புகுந்த

பின்னரோ? = பின்னாலா ?

ஆயதன் = அல்லது

முன்னரோ? = அதற்கு முன்னாலா ?

அருளுவீர்’  = தயவு செய்து சொல்லுங்கள்

என்றான் = என்றான்

இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே செய்து இருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு  மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறான் பரதன்.

அது என்ன தாய் செய்த தவறு ?

சில சமயம் குழந்தை பால் குடிக்காமல் அடம் பிடிக்கும். ஒரு தாய் அந்த குழந்தையை  இறுக்கிப் பிடித்து கட்டாயமாக பால் புகட்டுவாள். பார்ப்பதற்கு ஏதோ  அசுர வைத்தியம் போல இருக்கும்.

குழந்தை நோய் வாய்ப்பட்டால் , மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கசக்கும் என்று  குழந்தை குடிக்காது. தாய், தன்னுடைய இரண்டு கால்களுக்கு இடையில் குழந்தையை இறுக பிடித்துக் கொண்டு, வலு கட்டாயாமாக வாயைத் திறந்து  மருந்தை புகட்டி விடுவாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன இவள்  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இப்படி செய்கிறாளே என்று தோன்றும்.

அவள் அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும், அது அந்த குழந்தையின் நல்லதுக்கே.

அது போல, ஒரு வேளை இராமன் தவறே செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த  தவறு போல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.

பல பேர் ஒரு சின்ன துன்பம் வந்தால் கூட இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா ? அவனை வணங்குவது சரி தானா ? நாம் எவ்வளவு எல்லாம் பூஜை பண்ணினோம்,  நமக்கே இந்த துன்பங்கள் வருகிறதே என்று இறைவனை சந்தேகப் படுவார்கள், அல்லது

கடவுளே உனக்கு கண் இல்லையா, உனக்கு கருணை இல்லையா என்று கடவுளை ஏச தலைப்படுவார்கள்.

பரதன் சொல்கிறான், இராமன் துன்பமே தந்தாலும், அது தாயின் அன்பில் விளைந்த துன்பம் , அது நல்லதுக்கே என்று கொள்ள வேண்டும் என்கிறான்.

நன்றே செய்வாய். பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர்.

அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

என்பது திருவாசகம்.

நல்லது எது கெட்டது எது என்று அவளுக்குத் தெரியும். எனக்கு என்ன தெரியும். நீ தீமை செய்தால் கூட அது என் நன்மைக்கே. என்னுடையது என்று இருந்த அனைத்தையும் உன்னிடம் கொடுத்து விட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று உருகுகிறார் பட்டர்.



நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது 
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம் 
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக் 
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.


சரணாகதி  தத்துவத்தின் சாரம்.

கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுவது. 

இறைவன் எதைத் தந்தாலும்  அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. 

அது எப்படி  துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக பார்க்க முடியும். கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும். நடை முறைக்கு ஒத்து வருமா என்ற கேள்வி  வரும்.

துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்றால், அந்த துன்பத்தை நாம் வெறுக்க மாட்டோம் அல்லவா ?

வள்ளுவர் சொல்கிறார்.  துன்பத்திலும் ஒரு நண்மை உண்டு. அந்தத் துன்பம்  நமக்கு  உரியவர்கள் யார். நமக்கு நல்லது செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள உதவும் அளவு கோல்  என்கிறார். 

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

சிந்தித்துப் பாருங்கள்.