Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Monday, July 20, 2020

ஒளவையார் பாடல் - தீதே

ஒளவையார் பாடல் -  தீதே 


பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்

மிக எளிய பாடல்.

தீயாரைக் காண்பதுவும் தீதே = தீயவர்களை காண்பதும் தீது

திரு அற்ற = சிறப்புகள் அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே = தீயவர்கள் சொல்வதை கேட்பதும் தீது

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே = தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே

அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. = அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் தீதே


சரியாத்தானே சொல்லி இருக்கிறாள் கிழவி. இதில் என்ன சொல்ல இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

அதுவும் இல்லாமல் நாம எங்க தீயவர்களோடு பழகுகிறோம், பேசுகிறோம், பார்க்கிறோம்.  இதெல்லாம் நமக்கு இல்லை. நாம் பாக்குறது, பேசுறது எல்லாம் நம்ம அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நன்பர்கள், உறவினர்கள் அவ்வளவுதான்.  அவங்க எல்லாம் தீயவர்கள் இல்லை. எனவே, நமக்குச் சொன்ன அறிவுரை இல்லை   என்று எடுத்துக் கொள்ளலாமா?

சற்று யோசியுங்கள்.

நீங்கள் தீயவர்களை  பார்ப்பதே இல்லையா?  அவர்கள் சொல்வதை கேட்பதே இல்லையா?

நீங்கள் தினமும் தீயவர்களை பார்க்கிறீர்கள், அவர்கள் சொல்வதை கேட்கிறீர்கள் , அவர்களோடு இணக்கமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எத்தனை டிவி பார்க்கிறீர்கள்?

அதில் எத்தனை சீரியல்கள், நாடகங்கள், அரசியல் அலசல்கள், "பெரியவர்களின்" பேச்சுகள் - அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

அவர்கள் நல்லதைத்தான் சொல்கிறார்களா? நல்லதைத்தான் செய்கிறீர்களா?

யாரை எப்படி கொல்லுவது , யாரை எப்படி ஏமாற்றுவது, எப்படி வஞ்சகம் செய்வது,  ஆட்களை கடத்துவது, கொலை செய்வது, திருடுவது என்று உலகில்  உள்ள அத்தனை வக்ரங்களும் அவற்றில் இல்லையா?

அவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் மனம் பாதிக்கப் படாதா?

இல்லை பாதிக்காது என்று நீங்கள் சொன்னால், பின் நீங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளை  கேட்பதிலோ, படிப்பதிலோ அர்த்தம் இல்லை.

நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்தும் நம்மை பாதிக்கத்தான் செய்யும்.

சரி. நான் தான் தொலைக்காட்சியே பார்ப்பதே இல்லையே . அப்படியே பார்த்தாலும்  செய்தி, பாடல், நகைச்சுவை என்று மட்டும் தானே பார்ப்பேன்  என்று சொல்லலாம்.

அந்தச் செய்திகளில் தீயவை இல்லையா?  அதை சொல்பவர்கள் நல்லவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?  யார் யாரோ பேசியதை காட்டுகிறார்கள் செய்தியில்.  அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

சார், தொலைக் காட்சியே பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டியே இல்லை என்று சொல்லலாம்.

சினிமா?

செய்தித்தாள் ?

தீமைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அவை தீமை என்று கூடத் தெரியாமல்   வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி பார்த்தால் என்ன? கேட்டால் என்ன? அதில் சொன்ன மாதிரியா செய்கிறோம் . நமக்குன்னு ஒரு அறிவு இருக்குல்ல என்று சொல்லலாம்.

ஒரு நடிகர் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறார். எத்தனை சிறுவர்கள்  அது ஒரு பெரிய  விடயம் என்று அது போல நாமும் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள் ?

தங்கள் தங்கள் ஆதர்ச கதாநாயகர்கள் என்ன செய்கிறார்க்ளோ  அதே போல்  நாமும் செய்ய வேண்டும் விரும்புவது இல்லையா?

அது தான்  இணக்கமாக இருப்பது.

சரி, சினிமாவும் பார்ப்பது இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

Youtube ? வாட்ஸாப்ப்?

இவற்றில் இல்லாத வக்கிரங்களா?

அப்படியெல்லாம் இல்லை. எனக்கு வரும் செய்திகள் அப்படி ஒன்றும் மோசமானவை இல்லை  என்று நாம் நினைக்கலாம்.

சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு.

முதலாவது - பொய் சொல்லுதல்

இரண்டாவது - புறம் கூறுதல்

மூன்றாவது - பயனில சொல்லுதல்

நான்காவது = கடும் சொல் சொல்லுதல்

உங்களுக்கு வரும் செய்திகளில் இவை இல்லை என்று சொல்ல முடியுமா?

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் புறம் சொல்லுபவர்களாக இருக்கலாம். அது ஒரு தீய செயல் தானே? அதைச் செய்பவர்களதீயவர்கள் தானே?

அவர்களை நாம் பார்ப்பது இல்லையா? அவர்களோடு பேசுவது இல்லையா? அவர்களோடு இணக்கமாக இருப்பது இல்லையா?

பேச்சின் மூலம் சாதிச் சண்டையை, மதச் சண்டையை தூண்டுகிறான் ஒருவன்.அவன் சொல்வதை youtube ல் கேட்பது இல்லையா?

ஒளவையார் தீயவர்களை நேரில் சென்று காண்பது தீது, அவர்கள் சொல்வதை நேரே  நின்று கேட்பது தீது என்றெல்லாம் சொல்லவில்லை.

ஒருவன் தவறான எண்ணத்தோடு ஒரு புத்தகம் எழுதுகிறான். அதை வாசித்து,  அவன் சொல்லுவதும் சரியாத்தானே இருக்கிறது என்று நாம் நினைத்தால்,  நாம் அந்த தீயவனோடு இணக்கமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அறியாமலேயே எவ்வளவு தீயவர்களோடு  நீங்கள் தொடர்பு  வைத்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

இது ரொம்ப நாள் நடந்து கொண்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை.

சற்று தள்ளி நின்று யோசித்தால் இதன் விபரீதம் புரியும்.

சரி, அப்படினா என்னதான் செய்றது?

டிவி கூடாது, செய்தித் தாள் கூடாது, whatsapp , youtube கூடாது, அக்கம் பக்கம் அரட்டை அடிக்கக் கூடாது  என்றால் பின் என்னதான் செய்றது?

கிழவி அதற்கும் வழி சொல்லி விட்டுப் போய் இருக்கிறாள்.

அது என்ன தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_20.html

Monday, February 11, 2019

ஒளவையார் - அரியது

ஒளவையார் - அரியது 


அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.

இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.

மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.

பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம்  சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை.  அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது  என்று சொல்கிறாள் ஒளவை.  நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும்  எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது   மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.

ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

"தானமும் தவமும் தான்செயல் அரிது"


படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல்.

இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர்  பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.

தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று  பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.

தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.

சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.

சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.

தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,

ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?

அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து  உங்களுக்காக காத்து நிற்கும்.

ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?

எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html

Wednesday, October 11, 2017

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை 


ஒரு வீட்டில் , சில சமயம் ஒரு நபர் ஏதோ ஒரு வழியில் தவறாகப் போய் விடலாம்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை.

எடுத்தெறிந்து பேசும் மருமகள்.

மரியாதை இல்லாத மருமகன்.

ஒட்டாத சம்பந்தி.

கொடுமைக்கார மாமியார்.

பொறுப்பிலாத கணவன்.

ஊதாரி மனைவி

என்று யாரோ , எங்கேயோ தடம் பிரண்டு போய் விடலாம்.

அவர்களை என்ன செய்வது ? முடிந்தால் திருத்தலாம்.

இல்லை என்றால் ?

கை கழுவி விடலாமா ?

கூடாது என்கிறார் ஒளவையார்.

சகித்துத் தான் போக வேண்டும்.

எத்தனை காலம் என்று கேட்டால், ஆயுள் காலம் முழுவதும் சகிக்கக்தான் வேண்டும்.

வீட்டில் ஒருவர் சரியில்லை என்றால், வெளியில் சொல்லக் கூடாது. தாங்கிக் கொள்ளத்தான்  வேண்டும்.

விடாது தீமை செய்தாலும், அப்படி தீமை செய்பவர்களை கடைசிவரை வெறுக்காமல் காப்பார்கள் ஆன்றோர். தன்னை வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும் மரத்தைப் போல.

பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்


பொருள்

சாந்தனையும் = சாகும் வரை

தீயனவே  = தீமைகளையே

செய்திடினும் = செய்தாலும்

தாம் = பெரியவர்கள்

அவரை = அந்த தீமை செய்பவர்களை

ஆந்தனையும் = ஆகும் வரை, அதாவது முடிந்தவரை ,

காப்பர்  = காவல் செய்வார்கள்

அறிவுடையோர் = அறிவுடையவர்கள்

மாந்தர் = மக்கள்

குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)

தனையும் = செய்தாலும்

குளிர் = குளிர்ச்சியான

நிழலைத் தந்து = நிழலை தந்து

மறைக்குமாம் = வெயிலில் இருந்து மறைக்கும்

கண்டீர் = கண்டு கொள்ளுங்கள்

மரம் = மரம்

துன்பம் செய்தாலும், தவறு செய்தாலும்,  சொன்ன பேச்சு கேட்கா விட்டாலும், ஒத்துப் போக வில்லை என்றாலும்....சகித்து, அவர்களுக்கும் நல்லதே செய்யுங்கள்.

குடும்பம் நன்றாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_56.html



Tuesday, December 6, 2016

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 


குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

உடற்பிறப்பால் தோள்வலிபோம் = உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய் விடும்

பொற்றாலி யோடெவையும் போம் = தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது.   தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படை  சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான்.  எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது.  மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின்  சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.

தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"


சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு  செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு  ஒரு மதிப்பு இல்லை. 

மனைவி  என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக,  பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.

மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.  

மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க   வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள். 

மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல   அறிவுரை கூறி,  உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல  வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட  மனைவி போனால், எல்லாம் போய் விடும். 

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....

Tuesday, October 25, 2016

ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு

ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு

தமிழ் கூறும் நல் உலகம் யாரை இழந்தாலும் ஒளவையை இழந்து விடக்  கூடாது.

ஒளவையின் பாடல்கள் அத்தனை எளிமையானவை, இனிமையானவை, நடைமுறைக்கு, அன்றாட வாழ்க்கைக்கு வழி காட்டுபவை.

கொஞ்சம் படித்து விட்டு ,ஏதோ எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று பேசுபவர்களைக் கண்டு ஒளவை சொல்லுகிறாள்...

"கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு. கலை மகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். சும்மா நான் ரொம்பக் கற்றவனா, நீ ரொம்பக் கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்"

பாடல்

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்

பொருள்

கற்றது = இதுவரை கற்றது

கைம் மண்ணளவு = கையில் உள்ள மண் அளவு

கல்லா து = கல்லாதது

உலகளவென் (று) = உலகம் அளவு பெரியது

உற்ற = உடைய

கலைமடந்தை = கலைமகளான சரஸ்வதியும்

ஓதுகிறாள் = படிக்கின்றாள்

மெத்த = பெரிய

வெறும் = வெறும்

பந்தயம் = நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம்

கூற வேண்டாம் = கட்ட வேண்டாம்

புலவீர் = புலவர்களே

எறும்பும் = சின்ன எறும்பு கூட

தன் = தன்னுடைய

கையால் = கையால்

எண் சாண் = எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்

நமக்கு ஏதோ ஒரு துறையில் ஏதோ கொஞ்சம் தெரியும் - கணிதமோ, அறிவியலோ , வர்தகமோ ஏதோ ஒன்றில் கொஞ்சம் தெரியும். மற்றவனுக்கு  சமையல்  தெரியலாம், சங்கீதம் தெரியலாம், படம் வரையத் தெரியலாம், நன்றாக விளையாடாத் தெரியலாம். நமக்கு அதில் ஒன்றும் தெரியாமல் இருக்கலாம்.

ஒவ்வொருவரும், அவர்கள் துறையில் பெரியவர்கள்தான்.

இதைச் சொல்ல வந்த ஒளவை, மூன்று பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லி விட்டு ப் போகிறாள்.

முதலாவது, இந்த உலகில் கடல் எவ்வளவு பெரியது. அந்த கடலின் கரையிலும், கடலின் அடியிலும் எவ்வளவு மண் இருக்கும். இந்த உலகம் எல்லாமே  மண்ணால் நிறைந்ததுதான். அவ்வளவு மண்ணில், ஒரு பிடி மண் எடுத்தால் எவ்வளவு இருக்கும். இந்த பூமியை மட்டும் ஏன் கொள்ள வேண்டும். இந்த அண்ட சராசரங்களை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வளவு மண் இருக்கும்.  கற்பனை கூட செய்ய முடியாது. அந்த கோடானு கோடி அண்டத்தில், ஒரு பிடி மண்ணை கையில் எடுத்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு நாம் படித்தது. பிடிக்காதது இந்த அண்டத்தில் உள்ள மண்ணின் அளவு.  ஏதாவது தொடர்பு இருக்கிறதா. இதை வைத்துக் கொண்டு நாம் பெரிய ஆள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இரண்டாவது, நமது மதத்தில் ஒரு துறைக்கு ஒரு கடவுள் என்றால் அவர் தான்  அதில் அதிக பட்சம் ஆற்றல் உள்ளவராக இருப்பார். அவருக்கு மேல் ஒன்றும் இல்லை. அவரால் முடியாதது எதுவும் இல்லை. இலக்குமி தான் செல்வத்திற்கு அதிபதி  என்றால், அவளிடம் எல்லாம் இருக்கிறது. அவள் தினமும்  வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியை சொன்ன நம் முன்னவர்கள், அவள்  கூட அனைத்தையும் படித்து முடித்து விடவில்லையாம். இன்னும் படித்துக்  கொண்டுதான் இருக்கிறாளாம். கல்விக் கடவுளே கல்வியை முற்றுமாக அறிந்து கொள்ளவில்லை என்றால் கல்வியின் அகல ஆழத்தை நாம் அறிந்து கொள்ள  வேண்டும்.

கையில் ஏடு உள்ளவள் என்பார் கம்பர்

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே

என்பது சரஸ்வதி அந்தாதி. 

புத்தகம் வித்யார்த்தி இலட்சணம் என்பது வடமொழி வழக்கு.



இந்தக் காலத்தில் பிள்ளைகளிடம் ஏண்டா படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருக்கிறாய் என்று  கேட்டால் "எல்லாம் படிச்சாச்சு" என்கிறார்கள்.

சில பெண்களிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டால், "படித்து முடித்து விட்டு சும்மா இருக்கிறேன்" என்பார்கள். படித்து முடிக்க முடியுமா ?

மூன்றாவது, சரஸ்வதி ஏதோ நேரம் கிடைக்காமல் , கிடைத்த நேரத்தில் படிக்கவில்லை. ஓதுகிறாளாம். ஓதுதல் என்றால் திருப்பி திருப்பி சொல்லுதல். மனனம் செய்தல். புரியும்படி சொல்லுதல்.


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் படித்ததை நாலு பேர் தெரியச் சொன்னால் தானே நமக்குத் பெருமை. இல்லை என்றால் நாம் படித்தது யாருக்குத் தெரியும்  என்று நினைத்து எந்நேரமும், எல்லா விஷயங்களிலும் ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டே இருப்போம். வள்ளுவர் சொல்கிறார், அடக்கமாக இருந்தால்  பெரிய புகழ் வந்து சேரும் என்று.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

என்பது வள்ளுவம். அடக்கம் அளவற்ற பெருமையை தருமாம்.

ஆணவம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து பழகுவோம்.