Wednesday, October 11, 2017

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை 


ஒரு வீட்டில் , சில சமயம் ஒரு நபர் ஏதோ ஒரு வழியில் தவறாகப் போய் விடலாம்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை.

எடுத்தெறிந்து பேசும் மருமகள்.

மரியாதை இல்லாத மருமகன்.

ஒட்டாத சம்பந்தி.

கொடுமைக்கார மாமியார்.

பொறுப்பிலாத கணவன்.

ஊதாரி மனைவி

என்று யாரோ , எங்கேயோ தடம் பிரண்டு போய் விடலாம்.

அவர்களை என்ன செய்வது ? முடிந்தால் திருத்தலாம்.

இல்லை என்றால் ?

கை கழுவி விடலாமா ?

கூடாது என்கிறார் ஒளவையார்.

சகித்துத் தான் போக வேண்டும்.

எத்தனை காலம் என்று கேட்டால், ஆயுள் காலம் முழுவதும் சகிக்கக்தான் வேண்டும்.

வீட்டில் ஒருவர் சரியில்லை என்றால், வெளியில் சொல்லக் கூடாது. தாங்கிக் கொள்ளத்தான்  வேண்டும்.

விடாது தீமை செய்தாலும், அப்படி தீமை செய்பவர்களை கடைசிவரை வெறுக்காமல் காப்பார்கள் ஆன்றோர். தன்னை வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும் மரத்தைப் போல.

பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்


பொருள்

சாந்தனையும் = சாகும் வரை

தீயனவே  = தீமைகளையே

செய்திடினும் = செய்தாலும்

தாம் = பெரியவர்கள்

அவரை = அந்த தீமை செய்பவர்களை

ஆந்தனையும் = ஆகும் வரை, அதாவது முடிந்தவரை ,

காப்பர்  = காவல் செய்வார்கள்

அறிவுடையோர் = அறிவுடையவர்கள்

மாந்தர் = மக்கள்

குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)

தனையும் = செய்தாலும்

குளிர் = குளிர்ச்சியான

நிழலைத் தந்து = நிழலை தந்து

மறைக்குமாம் = வெயிலில் இருந்து மறைக்கும்

கண்டீர் = கண்டு கொள்ளுங்கள்

மரம் = மரம்

துன்பம் செய்தாலும், தவறு செய்தாலும்,  சொன்ன பேச்சு கேட்கா விட்டாலும், ஒத்துப் போக வில்லை என்றாலும்....சகித்து, அவர்களுக்கும் நல்லதே செய்யுங்கள்.

குடும்பம் நன்றாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_56.html



2 comments:

  1. மன்னிக்கவும், ஆனால் இது சும்மா அர்த்தம் இல்லாத பேச்சு.
    அவ்வையார் சொன்னது எல்லாம் சரி என்று கொள்ள முடியாது.

    ReplyDelete
  2. I agree with the explanations.We cannot allow the wrong behavior of others change us. To rise above others weakness and remain who we are is what nobleness of character is about.

    ReplyDelete