Showing posts with label Thiru vaasagam. Show all posts
Showing posts with label Thiru vaasagam. Show all posts

Thursday, February 26, 2015

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?


எதற்கும் ஒரு குறிக்கோள், காரணம் இருக்க வேண்டும். காரியம் ஆன பிறகும் காரியம் செய்து கொண்டு இருக்கக் கூடாது.

ஓட்டப் பந்தயம் முடிந்து, எல்லைக் கோட்டை தொட்டு விட்டால், ஓடுவதை நிறுத்த வேண்டும். அப்புறமும் ஓடிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.

சேர வேண்டிய ஊர் வந்து விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டும். அப்புறமும் போய்க் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.

வாழ்வின் அர்த்தம் என்ன ? குறிக்கோள் என்ன ? எதை அடைய இந்த வாழ்க்கை முயல்கிறது ? பணமா ? புகழா ? அறிவா ? உறவா ?  அல்லது இது எல்லாமுமா ? எவ்வளவு வேண்டும் ? எப்போது நிறுத்துவது ?

மாணிக்க வாசகர் சொல்கிறார் .... இறை அருள் பெறுவது தான் இந்த வாழ்வின் நோக்கம். அதை அடைந்து விட்டால் பின் வாழ்வில் அர்த்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்.

சில காதலர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும்...இந்த நொடி நான் அப்படியே செத்துரலாம் போல இருக்கு என்று சந்தோஷமாக சொல்லுவார்கள். மகிழ்வின் உச்சம்.

(முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு...முதல்வன் பாடல்)

இது போதும், இதுக்கு மேல் எதுவும் வேண்டாம். இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது என்ற உன்மத்தம் வந்து விடுகிறது.

அருள் பெற்ற அடிகள்...உன்மத்த நிலையில் இறைவனைப் பற்றி பேசித் திரிகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.  அவரைப் பற்றி தங்கள் மனதுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள்.

அதைப் பற்றியெல்லாம் அடிகள் கவலைப் படவில்லை. "சாவது எந்நாளோ" என்று  கேட்கிறார்.

பாடல்

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?


பொருள்

உத்தமன் = உயர்ந்தவன்

அத்தன் = முதல்வன், தந்தை, ஆதியானவன்

உடையான் = உடையவன்

அடியே நினைந்து உருகி = அவனுடைய திருவடிகளை நினைத்து உருகி

மத்த மனத்தொடு = களிப்பு கொண்ட மனத்தோடு

`மால் இவன்' என்ன = இவன் (மனிவாசாகர் ) மயக்கம் உற்றவன் என்று

மன நினைவில் = மன நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட = என் (மணிவாசகர்) மனதில் தோன்றிய , ஒத்த கருத்துகளை கூறிட

ஊர் ஊர் திரிந்து = ஊர் ஊராகத் திரிந்து

எவரும் = எல்லோரும்

தம் தம் மனத்தன பேச = அவர்கள் மனதில் தோன்றியதைப் பேச

எஞ்ஞான்று கொல் = எப்போது

சாவதுவே? = இறப்பது ?


இறைவனை நினைத்து அவர் மனம் உருகுகிறது. 

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி. 

உருகிய மனத்தில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

அந்த களிப்பில் ஏதேதோ  சொல்லுகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் சொல்கிறார்கள். 

ஒரு புறம் உண்மை கண்ட களிப்பு. மற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் முடியவில்லை. அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் மேல் பற்று சுத்தமாக இல்லை. 

இருந்து என்ன செய்ய ?

எப்போது இறப்பது என்று வினவுகிறார். 

இது போன்ற பாடல்களுக்கு உரை படித்து புரிந்து கொள்ள முடியாது. 

உரையைப் படித்த பின்,  அதை மறந்து விடுங்கள். 

நேரடியாகப் பாடலைப் படியுங்கள்.  

மனதை என்னவோ செய்யும். அதுதான் அந்தப் பாடலின் உண்மையான அர்த்தம். 

 

Monday, July 14, 2014

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை 


இதயத்தில் உள்ள ஒரு வால்வு பழுதாகி விட்டால் அதற்கு பதில் ஒரு செயற்கை வால்வு பொருத்துவார்கள். பல இலட்சங்கள் செலவாகும். அந்த வால்வை நமக்கு இலவசமாகத் தந்த கடவுளுக்கு என கைம்மாறு செய்வது ?

காலை எடுக்க ஒரு இலட்சம் கேட்கிறார்கள்...என்றால் காலைத் தந்தவனுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று முருகன் சந்நிதியில் சென்று விழுந்தார் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

இறைவன் தனக்கு தந்த ஒவ்வொன்றையும் எண்ணி அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இருகை யானையை ஒத்திருந்த என் உள்ளக் 
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே 
வருக என்று பணித்தனை வானுளோர்கு 
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இருகை யானையை ஒத்திருந்து = மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு வசதி யானைக்கு உண்டு...அது தான் அதற்கு அமைந்த கை. அந்தக் கையால் யாருக்கும் ஒன்றும் நல்லது செய்யாது. தனக்கு தனக்கு என்று எடுத்து உண்ணும். அதனால் அதை இருகை யானை என்றார். இருகை என்பது சற்று மரியாதை குறைவான ஒரு தொடர். இருகால் மாடே என்று பயனில்லாத மனிதர்களை குறிப்பிடுவார்கள்.

நமக்கு இரன்டு கைகள் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது தருகிறோமா ? எனக்கு எனக்கு என்று   எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறோம்.

என் உள்ளக்  கருவை யான் கண்டிலேன் = என் உள்ளத்தின் கருவை, ஆணி வேரை நான் கண்டிலேன். எது உள்ளத்தின் ஆதி, அடிப்படை என்று அறியாமல் இருக்கிறேன்.

 கண்டது எவ்வமே = கண்டது எல்லாம் துன்பமே

வருக என்று பணித்தனை  = அப்படி இருக்கும் போது , என்னை வருக என்று நீ பணித்தாய்.

வானுளோர்கு ஒருவனே = வானில் உள்ளவர்களுக்கு ஒருவனே. ஒருவனே என்றால் நிகர் இல்லாதவன் என்று பொருள்


கிற்றிலேன் =  வலிமை இல்லாதவன்

கிற்பன் உண்ணவே. = இருக்கின்றேன் உலக இன்பங்களை அனுபவிக்கவே




Tuesday, March 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்  


நீங்கள் ஒரு பெரிய சம வெளியில் நிற்கிறீர்கள். உங்களைச் சுற்றி தூரத்தில் பெரிய மலைகள் இருக்கின்றன. திடீரென்று அந்த மலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து உங்கள் மேல் சண்டைக்கு வருகின்றன.

ஒரு மலையோடு சண்டை போட்டு வெல்வதே முடியாத காரியம். பல மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் என்ன செய்வீர்கள் ?

ஓடவும் முடியாது. ஓரிடத்தில் நிற்கவும் முடியாது....

அது போல ....நீங்கள் இது வரை சேர்த்து வைத்த வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றன....மலை போல ....

கொஞ்சமாகவா செய்திருக்கிறோம்...

அப்படி மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் எனக்கு பயமாக இருக்கிறது. என்னை "பயப்படாதே" என்று சொல்லி என்னை காப்பாற்று.

அந்த சமயத்தில் என்னை கை விட்டு விடாதே...என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இறைவனை வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு `அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.


Saturday, February 15, 2014

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே 


எதில் எதிலேயோ நமக்கு பயம்.

எதிர் காலம் பற்றி, பிள்ளைகள் பற்றி, கணவன் மனைவி பற்றி, செய்யும் வேலை, நாம் சேமித்து வைத்திருக்கும் செல்வம், அதன் பாதுகாப்பு, நம் ஆரோக்கியம், நம்மைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் என்று ஆயிரம் பயம்.

இப்படி ஆகி விடுமோ, அப்படி ஆகி விடுமோ என்ற பயம்.

சில நிஜமான பயங்கள் , பல கற்பனையில் உள்ள பயங்கள்....

நம் பயத்தை யார் போக்குவார்?...யாரிடம் போனாலும் அவர்கள் தங்கள் பயங்களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் போனால் அவர்கள் தங்கள் பயங்களை நம்மிடம் கொட்டுவார்கள்.

என்ன செய்வது ? யாரிடம் போவது ? பல சமயங்களில் ரொம்பத் தனியாக விடப் பட்டதை போல உணர்வோம் ....

அதைப் போல தவிக்கிறார் மணிவாசகர்...

"பயப்படாதே என்று சொல்ல எனக்கு யாரும் இல்லை. எனக்கு நீ தான் தாயும் தந்தையும். நீ தான் என் பயத்தை நீக்கி எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் " என்று  வேண்டுகிறார்.

பாடல்  

என்னை `அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

பொருள் 


என்னை  = என்னை

`அப்பா, அஞ்சல்,' = பயப்படாதே

என்பவர் இன்றி = என்று சொல்ல யாரும் இன்றி

நின்று = தனித்து நின்று

எய்த்து = தேடி

அலைந்தேன் = அலைந்தேன்

மின்னை ஒப்பாய் = மின்னலை போன்றவனே (ஒளி பொருந்தியவன் )

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

உவமிக்கின், = உனக்கு உவமை சொல்ல வேண்டும் என்றால்

மெய்யே = உண்மையானவனே

உன்னை ஒப்பாய் = உனக்கு நீயே உவமையானவன்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அன்னை ஒப்பாய்; = எனக்கு தாய் போன்றவன் நீ

எனக்கு அத்தன் ஒப்பாய் = எனக்கு தந்தை போன்றவன் நீ

என் அரும் பொருளே! = என்னுடைய சிறந்த பொருளே


பொருள் என்றால் ஏதோ கடையில் வாங்கும் ஒன்று அல்ல. நம் வாழ்வின் முதல் பொருள் அவன்.

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்லுவார்

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்

சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


அபிராமி அந்தாதியில்,  அபிராமி பட்டர் கூறுவார்..உலகில் எல்லா பொருளும் அவள் தான், அந்த பொருள்கள் தரும் இன்பங்களும் அவள் தான்,  

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

Wednesday, January 29, 2014

திருவாசகம் - அமுதம் வேண்டாம்

திருவாசகம் - அமுதம் வேண்டாம்


இறை அருள் எங்கும் பொங்கி வழிகிறது.

மெல்லிய வானத்தில், தலை கலைக்கும் தென்றலில், உயிர் நனைக்கும் மழையில்,  கால் உரசும் கடல் அலையில் புன்னைகைக்கும் பூக்களில், குழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பில், மனைவியின் கள்ளச் சிரிப்பில், உணவில், நீரில், இசையில் எங்கெங்கும் அருள் பிரவாகம் கரை புரண்டு ஓடுகிறது.

நமக்கு தான் நேரம் இல்லை...இதை பார்கவோ, அனுபவிக்கவோ.

பணம், பொருள், புகழ், அதிகாரம், செல்வாக்கு, எதிர்காலம் என்று அலைந்து கொண்டு இருக்கிறோம்.

நல்லனவற்றை விடுத்து அல்லனவற்றின் பின்னால் சாமாறே விரைகின்றோம்.

புலன்களுக்கும், அறிவுக்கும் ஒரு முடிவில்லா போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அறிவு ஒன்றைச் சொல்கிறது. புலன் அதற்கு எதிர் மாறாக வேறொன்றைச் சொல்கிறது. இடையில் கிடந்து அலைகிறோம்.

இந்த போராட்டத்தை மணிவாசகர் படம் பிடிக்கிறார்.


பாடல்

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.

பொருள் 

செழிகின்ற = செழிப்பாக, கொளுந்து விட்டு எரியும்

தீப் புகு விட்டிலின் = தீக்குள் செல்லும் விட்டில் பூச்சியைப் போல. விட்டில் என்னமோ வெளிச்சம் தேடித்தான் போகிறது. சூட்டில் வெந்து சாகிறது. வெளிச்சத்திற்கு கூடவே சூடும் வரும் என்று தெரியாது. புலன் இன்பங்கள் வேண்டும் என்று தான் போகிறோம். சுடும் என்று தெரியாமல்.

ஒவ்வொரு இன்பத்தின் பின்னாலும் ஒரு துன்பம் இருக்கிறது.

இன்பத்தை பார்க்கும் போது, அதன் பின்னால் மறைந்து கிடக்கும் துன்பத்தையும் பார்க்க வேண்டும்.

இல்லை என்றால் விட்டிலுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?


சில் மொழியாரில் = "சில்" (chill ) என்று பேசும்  மொழியார்.சில வார்த்தைகள் மட்டும் பேசும் பெண்கள்.

 பல் நாள் = பல நாட்கள்

விழுகின்ற என்னை = விழுந்து கிடக்கின்ற என்னை. விழுவது என்றால் தெரியாமல் செய்வது. தடுக்கி விழுவது. யாரும் வேண்டும் என்றே விழுவது கிடையாது. அறியாமை.

விடுதி கண்டாய்? = என்னை விட்டு விடுவாயா ? விட மாட்டாய்

வெறி = தேன்

வாய் = வாயில் கொண்ட

அறுகால் = ஆறு காலை கொண்ட வண்டுகள்

உழுகின்ற = ஆழமாக தேடுகின்ற

பூ = பூக்களை கொண்ட

முடி = முடியை உள்ள

உத்தரகோசமங்கைக்கு அரசே = திரு உத்தரகோசமங்கைக்கு அரசே,

வழி நின்று = என் வழியில் நீ வந்து நின்று

 நின் அருள் ஆர் அமுது = உன்னுடைய அமுதத்தினை எனக்கு நீ என் வாயில் ஊட்டிய போதும்

ஊட்ட மறுத்தனனே = நான் வேண்டாம் என்று மறுத்தேனே


சிவனின் தலை மேல் பூ இருக்கிறது. அதில் தேன் இருக்கிறது. 

அந்த தேனிக்கு சிவன் வேண்டாம், அந்த தேன் தான் வேண்டும். 

நாமும் அந்த தேனீ போலத்தானோ ?...தேனைத் தேடுகிறோம்...

ஒன்றை நோக்கிப் போகிறோம் என்றால் , வேறு ஒன்றை விட்டு விலகிப் போகிறோம் என்று அர்த்தம். 

நாம் எதைத் தேடுகிறோம் ? அது முக்கியம் 

எதை விட்டு விலகிப் போகிறோம் ? அது அதை விட முக்கியம். 

Saturday, January 25, 2014

திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய்

திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய் 


இறை அருள் பெற்ற பின்னும் மனிதனின் குணம் மாறுவது இல்லை. அவரா, அப்படிச் செய்தார் என்று நாம் சிலரின் செயல்களை பற்றி ஆச்சரியப் படுகிறோம்.

மனிதன் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் அவன் இயற்கை குணம் மாறுவதே இல்லை.

இறை அருள் பெற்ற பின் ஏதோ புது மனிதர்கள் என்று நினைக்க  வேண்டாம்.அவர்களும் சாதாரண மனிதர்களே. நம்மை போலவே அவர்களுக்கும் ஆசா பாசங்கள்  இருக்கின்றன.

மாணிக்க வாசகர் சொல்கிறார்....

அழகான பெண்களின் மேல் கொண்ட ஆசையை, உன் அருள் பெற்ற பின்னும்,  நான் விடவில்லை. இருந்தும் நீ என்னை விட்டு விடாமல் அருள் செய்கிறாய். என்ன காரணம் ? என்று இறைவனை வினவுகிறார். 

இதையே சற்று மாற்றி யோசித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள்  புலப் படும்....

ஒன்று, பெண்ணாசை என்பது மிக மிக இயற்கையான ஒன்று. இறைவன் இயற்கைக்கு எதிரானவன் அல்ல. பெண்ணாசை கொண்டவர்களை அவன் வெறுத்து ஒதுக்குவது இல்லை.

இரண்டு, இறைவனை அடைய, அறிய, அவன் அருள் பெற பெண்ணாசை ஒன்றும் தடை இல்லை. எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி விட வேண்டும் என்று இல்லை.

பாடல்

கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?

உரை 

அழகான மார்பகங்களை கொண்ட பெண்களின் சிவந்த இதழ்களை விட மாட்டேன்  என்றாலும் என்னை விட்டு விட மாட்டாய், நான் உன் தொண்டில்  இருக்கிறேன், உனக்கு வெளியே இல்லை, உத்திரகோச மங்கைக்கு  அரசனே, நான் ஒரு  கள்வன்,இருந்தும் என்னை ஏன் நீ ஆட்கொண்டாய் ?

பத உரை 

கொள் ஏர் = அழகினை கொண்ட

பிளவு அகலாத் தடம் கொங்கையர் = இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் பிரிவே (பிளவு)  கிடையாது. அப்படி ஒட்டி இருக்கும். பெரிய மார்புகள்.

கொவ்வைச் செவ் வாய் = அப்படிப்பட்ட அழகிய பெண்களின் சிவந்த இதழ்களை

விள்ளேன் எனினும் = விட்டு விட மாட்டேன் என்றாலும்

விடுதி கண்டாய்? = நீ என்னை கை விட்டு வடமாட்டய்

நின் = உன்னுடைய

விழுத் = சிறந்த

தொழும்பின் = பணியில்

உள்ளேன் = இருக்கிறேன்

புறம் அல்லேன் = நான் உனக்கு வெளியன் அல்ல

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

கள்ளேன் = கள்ள மனம் கொண்ட நான்

ஒழியவும் = உன்னை விட்டு விலகி நின்றாலும்

கண்டு கொண்டு = என்னை கண்டு கொண்டு

ஆண்டது எக் காரணமே? = ஆட் கொண்டது என்ன காரணத்தினாலோ

  

Friday, January 24, 2014

திருவாசகம் - தளர்ந்தேன் என்னைத் தாங்கி கொள்ளே

திருவாசகம் - தளர்ந்தேன் என்னைத் தாங்கி கொள்ளே 


என்னால் முடியவில்லை, என்னை தாங்கிப் பிடித்துக் கொள் என்கிறார் மணிவாசகர்.

ஏதோ மணிவாசகர் ஏழ்மையில் துன்பப் படுகிறார், நோயில் வாடுகிறார், வேலை இல்லாமல் அலைகிறார் என்று நினைத்து விடக் கூடாது.

பாண்டியனின் அரசவையில் அமைச்சர் அவர். செல்வத்திற்கு ஒரு குறையும் இல்லை.  அதிகாரம், புகழ், செல்வாக்கு என்று எதிலும் குறைவு இல்லை.

அறிவு  - நாட்டை நிர்வாகம் பண்ணும் அளவுக்கு அறிவு. ஒன்றிலும் குறைவு இல்லை.

அவர் சொல்கிறார் தளர்ந்தேன் என்று.

எதில் தளர்ந்து இருப்பார் ?

இறைவனைத் தேடித்  தேடி தளர்ந்து இருக்கலாம்...

வாழ்வின் அர்த்தத்தை தேடித் தேடி தளர்ந்து இருக்கலாம்...

பிறந்து இறந்து பிறந்து இறந்து தளர்ந்து இருக்கலாம்....

பணம், செல்வம், புகழ், அதிகாரம் என்று அர்த்தம் இல்லாத இவற்றின் பின்னே ஓடி ஓடி தளர்ந்து இருக்கலாம்....

எதைத் தேடுகிறோம் என்று அறியாமல் தேடித் தேடி தளர்ந்து இருக்கலாம்....


நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியில் வரும் ஒரு பாடல். நீத்தல் என்றால் விலக்குதல். என்னை விலக்கி விடாதே என்று இறைவனிடம் வேண்டுகிறார் மணிவாசகர் ...

இதில் மொத்தம் ஐம்பது பாடல்கள் உள்ளன. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். தேனாகத் தித்திக்கும் செந்தமிழ் பாமாலை....

படித்துப் பாருங்கள்...கல் உருகும், புல் உருகும்...உங்கள் உள்ளமும் கூட உருகலாம்....


பாடல்

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

சீர் பிரித்தபின்

கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட 
விடையவனே விட்டுடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் 
உடையவனே மன்னும் உத்தர கோசைக்கு அரசே 
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே 

பொருள்


கடையவனேனை = மிகக் கீழானவனான என்னை

கருணையினால் = உன்னுடைய கருணையினால்

கலந்து = என்னோடு கலந்து. கலத்தல் என்றால் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி இணைதல். நான் வேறு அவன் வேறு என்று இல்லாமல் அவனும் நானும் ஒன்றாகக் கலத்தல். 

ஆண்டு கொண்ட = என்னை ஆட்கொண்ட

விடையவனே = விடை என்றால் எருது. எருதின் மேல் அமர்ந்தவனே

விட்டுடுதி கண்டாய் = என்னை விட்டு விடாதே

விறல் = வீரம் மிக்க

வேங்கையின் தோல் = புலியின் தோல்

உடையவனே = உடுத்தவனே

மன்னும் = நிலைத்து நிற்கும்

உத்தர கோசைக்கு = உத்தர கோசம் என்ற ஊருக்கு

அரசே = அரசனே

சடையவனே = சடை முடி கொண்டவனே

தளர்ந்தேன் = நான் தளர்ந்து விட்டேன்

எம்பிரான் = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

என்னை தாங்கிக் கொள்ளே = என்னை தாங்கிக் கொள்ளேன்


Saturday, January 18, 2014

திருவாசகம் - பொருள் உணர்ந்து சொல்வார்

திருவாசகம் - பொருள் உணர்ந்து சொல்வார் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

பல பாடல்களுக்கு அர்த்தம் தெரியும். ஆனால் அதன் பொருளை "உணர" முடியுமா ? அறிதல் வேறு உணர்தல் வேறு.  ஒரு அகராதி (dictionary ) இருந்தால் யாரும் பொருளை அறிந்து கொள்ள முடியம்.

"கவி உள்ளம் காண்கிலர்" என்பார் பாரதியார்.

திருவாசகம் பற்றி எழுத ஆசை.

எங்கிருந்து தொடங்குவது ?

திருவாசகத்தின் முதல் பகுதி - சிவ புராணம்.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி மேலே உள்ள பாடல்.

பாடலின் பொருளை பார்பதற்கு முன்னால், மணி வாசகர் சொல்லும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.

"பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்கிறார்.

பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்லவில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார் என்கிறார். பொருளை உணர வேண்டும்.

பொருள்

சொல்லற்கு அரியானைச் = சொல்லுவதற்கு அரியவன்.  அவனை முழுவதும் விளக்கிச் சொல்ல முடியாது. கடினம். 

சொல்லி = சொல்லாமலும் இருக்க முடியாது. எனவே "சொல்லி"

திருவடிக் கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் = சொல்ல அரியவனைப் பற்றி சொல்லியாகி விட்டது. எப்படிப் பார்த்தாலும் அது முழுமையக இருக்காது. எவ்வளவு சொன்னாலும் அதை முழுமையாக சொல்லி விட முடியாது. எனவே, சொல்லிய பாட்டின் பொருள் "உணர்து" சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். அப்படி பொருள் உணர்ந்து சொல்பவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் ?

சிவபுரத்தின் = சிவன் இருக்கும் இடம் சிவபுரம். அங்கு செல்வார்கள். 

உள்ளார் = சென்று அங்கு இருப்பார்கள்.

சிவன் அடிக் கீழ் = அவனுடைய திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து = எல்லோரும் பணிந்து புகழும் படி அங்கு இருப்பார்கள்.

முக்கியாமாக வேண்டியது என்ன என்றால் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.

இனி வரும் ப்ளாகுகளில் - முயற்சி செய்வோம்

Monday, October 28, 2013

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. காணதவர்கள் , இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இறைவனை கண்டவர்கள் , கண்டேன் கண்டேன் என்று சொல்கிறார்கள்.

மாணிக்க வாசகர் தான் இறைனை கண்டதாக வாக்கு மூலம் தருகிறார் - கண்ட பத்து என்ற பத்து பாடல்களில்.

நமக்கு வரும் மூன்று பெரிய துன்பங்கள் எவை ?

பிணி, மூப்பு, சாக்காடு - இந்த மூன்றிலும் இருந்து யாரும் தப்ப முடியாது. மூப்பு வந்தே தீரும். சாக்காடும் வந்தே தீரும். இடையில் பிணி வரும் போகும்.

இந்த மூன்றையும் தவிர மனிதனுக்கு துன்பம் தருவது - ஆசை அல்லது பற்று.

உறவுகள் மேல் , பொருள்கள் மேல், அனுபவங்கள் மேல் கொள்ளும் பற்று.

மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த நான்கையும் மாற்றி தனக்கு காட்சி தந்ததாகச் சொல்கிறார்.

பாடல்



பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

பொருள்


Saturday, August 10, 2013

திருவாசகம் - வானாகி மண்ணாகி

திருவாசகம் - வானாகி மண்ணாகி 


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்  வீடு,என்  மனைவி, என்  மக்கள்,என் செல்வம்,   நான் எவ்வளவு  ஆள், எவ்வளவு படித்தவன், எவ்வளவு புத்திசாலி என்று மனிதன் நான் எனது என்று சொந்தம் கொண்டாடுகிறான்.

 எது அவன் சொந்தம் ? எது அவன் உடமை ? மனிதன் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மை என்று அறிந்தான் இல்லை. எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று  நினைக்கிறான்.

அப்படி நினைப்பவர்களையும் ஆட்டுவிப்பவன் அந்த  இறைவன்.

அவனை எப்படி வாழ்த்துவது ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? வாழ்த்துவது என்று முடிவு செய்து விட்டால் என்ன சொல்லி வாழ்த்துவது.

மாணிக்கவாசகர் திகைக்கிறார் ....

சீர்  பிரித்த பின்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


பொருள் 

வானாகி = வானமாகி

மண்ணாகி =  பூமியாகி

வளியாகி = காற்றாகி

ஒளியாகி = வெளிச்சமாகி

ஊனாகி = உடலாகி

உயிராகி = உயிராகி 

உண்மையுமாய்  = உண்மையானவையாகி

இன்மையுமாய் = உண்மை இல்லாதனவாகி

கோனாகி = எல்லாவற்றிற்கும் அரசனாகி

யான் எனது என்றவரை = நான் எனது என்று கூறுபவர்களை

கூத்தாட்டு வானாகி = கூத்தாடுபவனாகி. உயிர்களை எல்லாம் ஆட்டுவிப்பவன் அவன்.

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்பார் நாவுக்கரசர்.

தில்லையுட் கூத்தனே தென் பாண்டி நாட்டானே என்பது மணிவாசகம்

 கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவர் யார் தருவார் அச்சோவே என்பதும் மணிவாசகம்

நின்றாயை = நின்ற தாய் போன்றவனை 

என்சொல்லி வாழ்த்துவனே = என்ன சொல்லி வாழ்த்துவேன் ?

Monday, July 29, 2013

திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ?

திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ? 




தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

நான் என்பது என்ன ? என் உடலா ? அதில் உள்ள ஞாபகங்களா ? என் அறிவா ? என் அறிவீனமா ? 

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் இந்த வாழ்க்கையில்  - எது என்னை செலுத்துகிறது ? எதற்க்காக நான் காரியங்களை செய்கிறேன் ? எந்த விதிகளை நான் கடை பிடிக்கிறேன் ?

எனக்கு சொந்தமானது எவை ? நான் சம்பாதித்த பொருள்களா ? என் மனைவி, மக்களா ? என் நண்பர்களா ? என் உறவினர்களா ? எது எனது ?

இவற்றிற்கு எல்லாம் ஒரு விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

அந்த விடைகளை காலம் மாற்றிப் போடும். உங்களது என்று நீங்கள் நினைத்தவை உங்களதாக இல்லாமல் போகலாம். உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டு அவர்கள் வாழ்க்கையில் போய்  கொண்டிருக்கலாம். 

உங்கள் விடைகள் எல்லாம் ஒரு மாயையே. இன்றிருப்பது நாளை மாறலாம். மாறும். 

இறைவனின் குறிப்பை அறிந்து, அவன் தொண்டரோடு சேர்ந்து , பொய்யானவை எல்லாம் நீங்கி அவன் திருவடி சேரப் பாருங்கள் என்கிறார் மணிவாசகர். 

பொருள் 


தாமே தமக்குச் சுற்றமுந் = நமக்கு நாமே சொந்தக் காரர்கள். வேறு யாரும் நமக்கு கிடையாது

தாமே தமக்கு விதிவகையும் = நம் வாழ்க்கையை செலுத்தும் விதிவகைகளை நிர்ணயிப்பதும் நாம் தான். வேறு யாரும் அல்ல.


யாமார் = யாம் யார் ? நாம யார் ?

எமதார் = என்னுடையது எது ?

பாசமார் = பாசம் என்பது என்ன ?

என்ன மாயம் = இது எல்லாம் என்ன மாயம்

இவைபோகக் = இவை எல்லாம் போக

கோமான் = கோமகன், அரசன்

பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு = அவனுடைய குறிப்பே இலக்காகக் கொண்டு

போமா றமைமின் = போகும்படி அமையுங்கள்

பொய்நீக்கிப் = பொய் நீங்கி

புயங்கன் = பாம்பை தோளில் சுமந்தவன்

ஆள்வான் பொன்னடிக்கே. = எல்லோரையும் ஆள்பவன் பொன் போன்ற பாதங்களுக்கே


அங்க போறத விட்டுட்டு எங்கெங்கேயோ சுத்திக்  கொண்டு இருகிறீர்கள் என்கிறார் மணிவாசகர் 

Sunday, June 30, 2013

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?


திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று

நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

சீர் பிரித்த பின்

நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 

நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு  இதைத்  தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?

மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.

இறைவன் அவரை ஆட்கொண்டான்.

நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?

ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?

நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை

என் உள்ளம் போய் விட்டது.

என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?



பொருள்


Tuesday, May 7, 2013

திருவாசகம் - தேனுந்து செந்தீ


திருவாசகம் - தேனுந்து செந்தீ


தீ நல்லதுதான். உணவு சமைக்க உதவும். மழை பொழிய, பயிர் விளைய, இப்படி பலப் பல நல்ல காரியங்களுக்கு தீ உதவுகிறது. இருந்தும் அதில் ஒரு சங்கடம்...சுடும். தொட்டால் பொசுக்கி விடும். கருக்கி விடும்.

திருப் பெருந்துறையில் ஒரு தீ இருக்கிறது. அதுவும் எரிக்கும். எதை தெரியுமா ? உங்கள் இரு வினைகளை. உங்கள் பாவ புண்ணியம் என்ற இரண்டு வினைகளை எரித்து சாம்பாலாக்கி விடும்.

உங்கள் வினைகளை எரிக்கும் ஆனால் உங்களுக்கு தேன் போல தித்திக்கும். உங்கள் வினைகளை எரிக்கும். உங்கள் உடலை காக்கும்.

தேனைப் பொழியும் செந்தீ அது.

வாழ்க்கையில் பொய் ஆனவற்றை எல்லாம் பொடி பொடியாக்கி விடும். பொய் போன பின் நிற்பது மெய் தானே.

இத்தனையும் நடக்கும், எப்போது என்றால் அந்த திருபெருந்துறையானை மனதால் நினைத்தால்.

அது கூட முடியவில்லையே என்று உருகுகிறார் மாணிக்க வாசகர்.

அவருக்கே அந்த நிலை என்றால்.....

பாடல்


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.


பொருள்


Sunday, May 5, 2013

திருவாசகம் - சிறைபடா நீர் போல்


திருவாசகம் - சிறைபடா நீர்  போல் 


இறை அருளை பெற என்ன செய்ய வேண்டும் ?

ஒன்றும் செய்ய வேண்டாம் !

ஒண்ணும் செய்ய வேண்டாமா ? அப்புறம் இந்த பக்தி, பூஜை, புனஸ்காரம் எல்லாம் எதுக்கு ? அது எல்லாம் வேண்டாமா ?

வேண்டாம்.

இது என்ன புது கதையா இருக்கு. ஒண்ணும் புரியலையே.

சொல்லுவது நான் அல்ல. மாணிக்க வாசகர்.

மலையில் இருந்து கீழே வரும் வெள்ளம். அதை சிறை படுத்தி வைக்க முடியாது. அணை கட்டி வைத்தாலும் ஆவியாகப் போய் விடும். எப்படி தடுத்தாலும் நீர் கசிந்து கசிந்து கீழ் நோக்கி பாய்வதை தடுப்பதை கடினம்.

இறை அருள் என்ற வெள்ளம் உங்கள் மனம் என்ற இடம் நோக்கி பாய்ந்து வரும். நீங்கள் அதை காலியாக வைத்து இருங்கள்.

அந்த வெள்ளம் நம்மிடம் வர முடியாமல், நாம் அதில் குப்பைகளை போட்டு நிரப்பி வைத்திருக்கிறோம். பள்ளம் இருந்தால் தானே அதில் நீர் வந்து பாய முடியும்?

அத்தனை ஆசை, கோபம், காமம், லோபம், வேற்றுமை உணர்வுகள், அச்சம், பொறாமை என்ற குப்பைகள்.

இந்த குப்பைகளை எடுத்து எறிந்து விட்டு, மனதை சுத்தமாய் வைத்திருங்கள். அருள் வெள்ளம் உங்கள் உள்ளத்தை தானே நிரப்பும்

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்றார் திருமூலர்

பாடல்


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
    மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
    திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை யென்னிரக் கேனே.  


பொருள்


Friday, April 19, 2013

திருவாசகம் - கெடுதலிலும் நன்மை


திருவாசகம் - கெடுதலிலும் நன்மை 


ஏதாவது கெட்டுப் போனால் நாம் சந்தோஷப் படுவோமா ?

மாணிக்க வாசகர் சந்தோஷம் மட்டும் அல்ல தோள் கொட்டி ஆடுகிறார்....

இந்த உலகம் ஒரு நாள் மறைந்து போகும்...இந்த சூரியன், விண்மீன்கள் எல்லாம் ஒளி இழந்து, வெப்பம் இழந்து, இருக்கும் இடம் தெரியாமல், வெட்ட வெளியாகப் போகும்.

அந்த வெட்ட வெளி கூட மறைந்து போகும்...எல்லாம் மறைந்தாலும் இறைவன் மறைவது இல்லை....

என் உடல் கெட்டு, உயிர் கெட்டு , உணர்வு கெட்டு , உள்ளமும் போய் , நான் என்ற எண்ணமும் போய் மறையும் ...அந்த மறைவை கொண்டாடுவோம் என்கிறார் வாசகர்.....

என்னுடைய உடல், என்னுடைய உயிர், என் மனம் என்ற அகங்காரம் மறையும்....

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்பார் அருணகிரிநாதர். எல்லாம் இழப்பது நலம்.

பாடல்


வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந்

தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பொருள்

Wednesday, February 6, 2013

திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம்


திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம் 



திருப்பெருந்துறையிலே குருவாய் வந்து மாணிக்க வாசகரை ஆண்டு கொண்டார் சிவ பெருமான்.

திரு கழுக்குன்றிலே கணக்கிலா வடிவங்கள் காட்டினான் என்று அவரே சொல்கிறார்


தமிழ் தாத்தா உ வே சாமிநாதையர் இறக்கும் தருவாயில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை பாடும் படி சொல்லக் கேட்டாராம்..அந்தப் பாடலை கேட்ட பின் அவர் உயிர் பிரிந்தது என்று நான் சொல்லக் கேட்டு  இருக்கிறேன்.

அது இந்தப் பாடல்.....



பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

சீர் பிரித்த பின்

பிணக்கிலாத பெருந்துறை பெருமான் 
உன் நாமங்கள் பேசுவார்க்கு 
இணக்கிலாத ஓர் இன்பமே வரும் 
துன்பமே துடைத்து எம்பிரான் 
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமல் 
என் வினை ஒத்த பின் 
கணக்கிலா திருக்கோலம் நீ வந்து 
காட்டினாய் கழுக்குன்றிலே 






பொருள்




பிணக்கி லாத = பிணக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள். எதனோடும் பிணைப்பு இல்லாத, உயர்ந்தவர், தாழ்ந்தவர் , பணக்காரன், ஏழை என்று யாரையும் பேதம் பார்க்காமல் எல்லோரையும் காக்கும்

பெருந் துறைப் பெருமான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் பெருமான்

உன் நாமங்கள் = உன்னுடைய திரு நாமங்களை


 பேசுவார்க்கு = பேசுபவர்களுக்கு

இணக்கு இல்லாததோர் = இணையே இல்லாத

இன்ப மேவரும் = இன்பமே வரும்

துன்பமே துடைத்து = துன்பத்தை துடைத்து


தெம்பிரான் = எம்பிரான்

உணக்கி லாததோர் = உலராத

வித்து = விதை

மேல்விளையாமல் = மேல் விளையாமல்

என்வினை = என்னுடைய பழைய வினைகள்

ஒத்தபின் = தீர்ந்த பின்

கணக்கி லாத் = கணக்கிலாத , எண்ணற்ற

திருக் கோலம் = திருக்கோலங்களை

 நீ வந்து காட்டி னாய் = நீயே வந்து காட்டினாய்

கழுக்குன்றிலே = திருகழுக்குன்றிலே


ஒரு விதை மீண்டும் முளைக்க வேண்டுமானால் அது முதலில் உலர வேண்டும். உலர்ந்த விதைதான் மீண்டும் முளைக்கும். 

என்னுடைய வினைகள் என்னை மீண்டும் பற்றாமல், நான் மீண்டும் வந்து பிறவாமல் என்னை ஆண்டு கொண்டாய் என்று அன்பால் உருகுகிறார் மாணிக்க வாசகர்.

திருவாசகத்தில் குரு தரிசனம் என்ற பகுதியில் உள்ள பத்து பாடல்களில் இது முதலாவது பாடல் 

அதில் உள்ள சில பாடல்கள் நெஞ்சை உருக்குபவை...பின்னொரு ப்ளாகில் அவற்றை பற்றியும் சிந்திப்போம் 

அவன் அருள் மாணிக்க வாசகரின் வினை மேல் சென்று முளைக்காமல் தடுத்து ஆட்கொண்டது...அந்த திருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் 





Wednesday, January 30, 2013

திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்


திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்  


நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நடப்பதை எல்லாம் ஒரு மூவி கேமராவில் பதிவு செய்து அதை fast forward இல் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு வரும் படி எடிட் பண்ணி போட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? 

ஏதோ பிறந்த குழந்தை கிடு கிடு என்று வளர்ந்து, அங்க இங்க ஓடி கடைசியில் சுடுகாட்டில் குழிக்குள் செல்வது போல இருக்கும். 

இன்னும் கொஞ்சம் fast forward பண்ணினால் பிறந்தவுடன் நேரே ஓடிப் போய் இடு காட்டு குழிக்குள் இறங்குவது போல இருக்கும்.

மாணிக்க வாசகர் இந்த உலக வாழ்க்கையை சற்று தள்ளி நின்று பார்க்கிறார். 

எதுக்கு எந்த ஓட்டம் ? 

இடு காட்டுக்கு போக ஏன் இத்தனை பரபரப்பு ?

கருவறை தொடங்கி கல்லறை வரை ஒரே ஓட்டம் தான். "சாமாறே விரைகின்றேன்" என்றார். சாவதற்காக இவ்வளவு விரைவாக சென்று கொண்டு இருக்கின்றேன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார்.
 
 
இந்த இடைப்பட்ட நேரத்தில் இறைவனை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையை வீணாக்கி கொண்டு இருக்கிறோமே என்று வருத்தப் படுகிறார்...
 
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

 
பொருள் 

Thursday, November 8, 2012

திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு. பசி. தாகம். கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான்.

அது கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால், அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி, அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான், அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும், களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான். 

பிரயாணக் களைப்பு, உண்ட மயக்கம், தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அட டா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான், உடனே ஒரு கட்டில் வந்தது. 

ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்....டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள். 

அசந்து தூங்கினான். திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான்.

என்னடா இது, நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே, ஒரு வேளை இது ஏதாவது பேய் பிசாசு வேலையா இருக்குமோ...அந்த பிசாசு இங்க வந்துட்டால் ? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே. 

ஐயோ, இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ ? என்று நினைத்தான், அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது. 

இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம்.

நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன், ஐயோ, இவளுக்கா ஆசைப் பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.

ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான், கட்டுகிறான்...அக்கம் பக்கம் தொல்லை ... ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது...

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன ... மனம் கிடந்து கவல்கிறது...

இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும் படி ஆகி விடுகிறது...
 

கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று. அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விட்டார் மணி வாசகர்...


பாடல் 

Wednesday, October 24, 2012

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

நீங்கள் பைத்தியம் ஆனால் அதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்வீர்களா ? கிறுக்கு பிடிபதென்ன அவ்வளவு சிறந்த விஷயமா ?

உங்களை யாராவது மூச்சு முட்ட வெள்ளத்திற்குள் அமுக்கினால், நீங்கள் அவர்களுக்கு நன்றி சொல்வீர்களா ?

உங்களின் உறுதியான, தைரியாமான, கல்லை போல் கடினமான உள்ளத்தை யாராவது மாற்றி, மென்மையாகச் செய்தால், நீங்கள் அதற்கு நன்றி சொல்வீர்களா ?


மாணிக்க வாசகர் சொல்கிறார். 

பாடல் 

Sunday, July 8, 2012

திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு


திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு


சிவனுக்குள் சக்தி

சக்திக்குள் சிவம்.

சிவனும் சக்தியும் அடியாரின் மனதுக்குள்

அடியார் தொண்டர் கூட்டத்திற்குள்....

ஒண்ணுக்குள் ஒன்றாய் செல்லும் சைவ சித்தாந்த நெறியை மணி வாசகப் பெருந்தகை விளக்குகிறார்....