ஐந்திணை ஐம்பது - காதல் தாகம்
ஐந்திணை ஐம்பது
இந்த நூல் தமிழர்களின் அக வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.
எழுதியவர் மாறன் பொறையனார்.
நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்.
1700 வருடம் தாண்டி விட்டது.
கால நதியில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது.
மாறன் பொறையனார் நினைத்தாவது பார்த்திருப்பாரா, அவரின் பாடல்கள் இன்டர்நெட்-இல் உலாவும் என்று !
சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.
அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், காதல் இவற்றை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் பாடல்கள்.
அதிலிருந்து ஒரு பாடல்....
அதுவோ பாலை நிலம்.
சுட்டெரிக்கும் வெயில்.
நா வரளும் அனல் காற்று.
தப்பி வந்த இரண்டு மான்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டு இருந்தன.
கடைசியில் ஒரு சின்ன சுனை கண்ணில் பட்டது.
அதில் இருந்ததோ கொஞ்சம் போல் தண்ணீர்.
இரண்டு மானுக்கும் பத்தாது.
ஒன்றை ஒன்று பார்த்து கொண்டன.
பெண் மான் சொன்னது, "நீ முதலில் குடி, பின் நான் குடிக்கிறேன்" என்று.
ஆண் மானும் அதையே சொன்னது.
யார் முதலில் குடிப்பது என்று அவர்களுக்குள் அன்புச் சண்டை.
கடைசியில் ஆண் மான் "சரி, நானே குடிக்கிறேன்" என்று நீரில் வாய் வைத்து "சர்" என்று உறிஞ்சியது.
ஆனால் உண்மையில் குடிக்கவில்லை. சப்த்தம் மட்டும் தான் செய்தது.
ஆண் மான் நீர் பருகி விட்டதாக எண்ணி, பெண் மானும் குடித்தது.
முதலில் ஆண் மானுக்கு கொடுத்ததால், பெண் மானுக்கு ஒரு சந்தோஷம்.
தான் குடிக்காமல், பெண் மானுக்கு கொடுத்ததில், ஆண் மானுக்கு சந்தோஷம்.
அந்தப் பாடலை படிப்பதில் நமக்கு சந்தோஷம்.