Showing posts with label Nandhi Kalambagam. Show all posts
Showing posts with label Nandhi Kalambagam. Show all posts

Saturday, August 28, 2021

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்


நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும் இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது. 


தலைவனைப் பிரிந்த தலைவி தனிமையில் வருந்துகிறாள்.


எப்படியோ, இரவு போய் விட்டது. பகல் வந்து விட்டது. எல்லோரும் விழித்து விடுவார்கள். வேலை தொடங்கி விடும். தலைவனின் பிரிவை கொஞ்சம் மறந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த இரவும் நிலவும் மீண்டும் வேகமாக் வந்து விட்டது. 


இப்ப தான் விடிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள திரும்பியும் நிலவு வந்து அவளை வருத்தத் தொடங்கி விட்டது. 


நிலவு வேகமாக வந்ததற்கு ஒரு உதாரணம் கூறுகிறாள் தலைவி. 


ஒரு ஊரில் பெண்களே இல்லை என்றால் அந்த ஊர் எப்படி இருக்கும்? 


அந்த ஊரில் அன்பு இருக்காது. கருணை இருக்காது. அரவணைப்பு இருக்காது. ஈரம் இருக்காது. அருள் இருக்காது. 


அம்மா இல்லை, அக்காள் தங்கை இல்லை, மகள் இல்லை, காதலி இல்லை, மனைவி இல்லை...அது என்ன ஊர்? 


அங்குள்ள மக்கள் ஈவு இரக்கம் அற்று கொடியவர்களாக இருப்பார்கள் அல்லவா?


அப்படிப் பட்ட கொடியவர்களைப் போல நீ வேகம் வேகமாக வந்து என்னைத் துன்பப் படுத்துகிறாய் என்கிறாள். 



பாடல் 


 மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்

 தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்

பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_28.html


(Please click the above link to continue reading)


மண்ணெலாம் = இந்த மண் உலகம் எல்லாம் 


உய்ய = பிழைக்க 


மழைபோல் = மழையைப் போல 


வழங்குகரத் = வழங்கும் கைகளைக் கொண்ட 


தண்ணுலாமாலைத் = குளிர்ச்சி நிலவும் மாலையை அணிந்த 


தமிழ் நந்தி நன்னாட்டில் = நந்திவர்மன் உள்ள இந்தத் தமிழ் நாட்டில் 


பெண்ணிலா = பெண்களே இல்லாத 


ஊரில் = ஊரில் 


பிறந்தாரைப் போலவரும் = பிறந்தாரைப் போல வரும் 


வெண்ணிலாவே = வெண்ணிலாவே 


இந்த வேகம் உனக்காகாதே. = இத்தனை வேகம் உனக்கு ஆகாதே 


என்ன ஒரு கவிதை!


சமயம் இருப்பின் மூல நூலை தேடித் பிடித்து படியுங்கள். அத்தனையும் தேன்.


Wednesday, September 16, 2015

நந்திக் கலம்பகம் - என்னதே

நந்திக் கலம்பகம் - என்னதே 


காதலையும், காமத்தையும் நேரடியாகச் சொல்வதை விட மறைமுகமாக சொல்வதில் சுவை அதிகம்.

நந்திக் கலம்பகத்தில் ஒரு பாடல்.

தலைவி சொல்கிறாள்....நான் அணிந்திருக்கும் இந்த உடையும் , வளையலும் என்னுடையதே...நந்திவர்மன் என்னோடு இல்லாத போது.

அவ்வளவுதான் பாடல் வரியின் அர்த்தம்.

நந்தி வர்மன் வந்து விட்டால், இந்த ஆடைகளையும், வளையலையும் அவன் எடுத்துக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்கிறாள்.


சொல்லாமல் விட்டதை புரிந்து கொள்ளும் போது, அந்த பெண்ணின் நாணம், தவிப்பு, வெட்கம், பிரிவின் வேதனை, அவன் மேல் அவள் கொண்டிருக்கும் ஆசை அனைத்தும் தெரியும்.

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது

பொருள்

எனதே கலை = கலை என்றால் உடை. என் உடை என்னுடையதுதான்

வளையும் என்னதே = வளையலும் என்னுடையதுதான்

மன்னர் = மன்னவனாகிய

சின = சினம் கொண்ட

ஏறு = எருதினைப் போன்ற

செந்தனிக்கோல்= செம்மையானா, செங்கோல் செலுத்தும்

நந்தி = நந்திவர்மன்

இனவேழம் = யானை போல

கோமறுகில் = வீதியில்

சீறிக் = கோபம் கொண்டு

குருக்கோட்டை வென்றாடும் பூமறுகில் = குருக் கோட்டை என்ற இடத்தில் வெற்றி பெற்று வீதி வழியே

போகாப் பொழுது = செல்லும்  போது

(போகா என்பதை செய்யா என்ற வாய்பாடகாகக் கொண்டால் செல்லும் போது என்று பொருள் தரும். கொய்யாப் பழம் என்று சொல்கிறோம். ஆனால் கொய்து தானே இருக்கிறது. அது போல. கொய்யாப் பழம் என்றால் கொய்த பழம். போகாப் பொழுது என்றால் போன பொழுது.)

இதை இன்னொரு விதமாக யோசித்துப் பார்ப்போம்.

அவன் இருக்கும் போது இந்த உடைகளையும், வளையல்களையும்  அவன் எடுத்துக் கொள்வான் , மற்ற நேரத்தில் அது என்னுடையது தான் என்பது ஒரு பொருள்.

இன்னொரு பொருள், அவன் என்னை விட்டு நீங்கினால், நான் மெலிந்து இந்த வளையலும், உடையும் நழுவி விழுந்து விடும். அவை என்னோடு இருக்காது. அவன் என்னோடு  இருந்தால், அந்த மகிழ்ச்சியில் நான் பூரித்து, இந்த வளையலும், உடையும் என்னோடு ஒட்டி இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

உங்களுக்கு எப்படி சௌகரியமோ , அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.



Saturday, January 17, 2015

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை 


இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை இப்படி தெருவில் நடமாட விட்டிருக்கிறார்களே இது எவ்வளவு பெரிய ஆபத்து. 

இவளுடைய பெற்றோருக்கு ஆண்கள் மேல் என்ன பகையோ. இவள் இப்படி தெருவில் திரிந்தால் ஆண் பிள்ளைகளின் மனம் என்ன பாடு படும். இவளை அடைய எல்லோரும் முயல்வார்கள். எல்லோருக்குமா அவள் கிடைத்து விடுவாள் ? கிடைக்காதவர்கள் என்ன ஆவார்கள்....

சரி, பெற்றோர் தான் போகட்டும்...இந்த நந்தி வர்மன் இருக்கிறானே....குடிகளை காக்க வேண்டியது அவன் கடமை அல்லவா ? இவள் இப்படி ஊரில் திரிந்தால் ஆண்கள் பாதிக்கப் படுவார்களே. அவர்களை காக்கவேண்டியது மன்னனாகிய நந்தியின் கடமை அல்லவா ? இப்படி கடமை தவறிய மன்னனாக இருக்கிறானே என்று அந்த பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மனதை பறிகொடுத்த கவிஞன் பாடுகிறான் 

பாடல் 


அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
 புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
 நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்

 உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ?

பொருள் 

அரிபயில் = அறிவு முற்றாத (இளைஞர்கள்) மத்தியில் 

நெடுநாட்டத் தஞ்சனம் = நீண்ட கண்களில் மையை 

முழுதூட்டிப் = முழுவதுமாக தீட்டி 

புரிகுழல் = முடியை சரி செய்து 

மடமானைப் = பேதை போன்ற இந்தப் பெண்ணை 

போதர விட்டாரால் = வெளியில் விட்டதால் 

நரபதி எனும் = மக்களின் தலைவன் என்ற 

நந்தி = நந்தி வர்மனின் 

நன்மயி லாபுரியில் = நல்ல நாட்டில் 


உருவுடை= அழகான 

இவள் தாயர்க் = இவளின் தாயார் 

குலகொடு பகை உண்டோ? = ஆண் குலத்தோடு பகை கொண்டவளோ ?



Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



Thursday, August 21, 2014

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே 


தலைவி சொல்கிறாள்.

இந்த உடையும், இந்த வளையல்களும் என்னுடையதாகத்தான் இருக்கும்..எப்போது என்றால் நந்தி வர்மன் எதிரிகளின் மேல் படை எடுத்துப் சென்றிருக்கும் பொழுது.

அப்படி அவன்  சண்டைக்குச் செல்ல வில்லை என்றால், என் அருகில் இருப்பான். அப்போது இந்த உடையும், இந்த வளையலும் என்னிடம் இருக்காது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

நந்தியின் வீரத்துக்கும் காதலுக்கும் கட்டியம் கூறும் பாடல்....

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது  

பொருள்

எனதே = என்னுடையதே

கலை = துகில், ஆடை

வளையும் = வளையலும்

என்னதே = என்னுடையதே

மன்னர் = மன்னனான

சினஏறு = சினம் கொண்ட காளை  அல்லது சிங்கம்

செந்தனிக்கோல் நந்தி = சிறப்பான செங்கோல் செலுத்தும் நந்தி

இனவேழம் = யானை போல

கோமறுகில்= கோபம் கொண்டு

சீறிக் = சீறி

குருக்கோட்டை = குருக்கோட்டை என்ற ஊரின் மேல்

வென்றாடும் = வெற்றிக் கொள்ள படை எடுத்துச் செல்ல

பூமறுகில் = பூமறுகில் (இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை )

போகாப் பொழுது = போன போது (செய்யா என்ற வாய்பாட்டு வினை. பெய்யா கொடுக்கும் மழை போல, கொய்யா பழம் போல )



Sunday, June 8, 2014

நந்திக் கலம்பகம் - குனிந்து பார்

நந்திக் கலம்பகம் - குனிந்து பார் 


அவள் மிக மிக அழகான இளம் பெண்.

பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் அழகு கொண்டவள்.

அவள் தகப்பனோ வயதானவன். வலிமை குன்றியவன். ஏழ்மையில் இருக்கிறான். 

அந்தப் பெண்ணை மணமுடிக்க வேண்டி பெண் கேட்டு அண்டை நாட்டு மன்னன் தூது அனுப்பி இருக்கிறான்.

கிழவன் தானே, என்ன செய்து விட முடியும் என்ற நினைப்பில்.

அந்த கிழவன் சொல்கிறான்....

"என்னிடம் இருப்பது ஒரு அம்புதான், வில்லும் ஒடிந்து போய் இருக்கிறது, அந்த ஒடிந்த வில்லிலும் நாண் அறுந்து போய் இருக்கிறது, நானோ வயதான கிழவன் என்று எண்ணியா உன் மன்னன் என் மகளை பெண் கேட்டு உன்னை தூதாக அனுப்பி இருக்கிறான் ? நந்தி மன்னன் இருக்கும் இந்த நாட்டில், என் வீட்டை கொஞ்சம் குனிந்து பார் ....என் குடிசையை சுற்றி வேலி போட்டு இருப்பது யானை தந்தங்கள் "

அப்பேற்பட்ட வீர  குடும்பம்என்பதை சொல்லாமல் சொல்கிறான்.


பாடல்

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

பொருள்


அம்பொன்று = ஒரே ஒரு அம்புதான் இருக்கிறது

வில்லொடிதல்= வில்லோ ஒடிந்து போய் இருக்கிறது

நாணறுதல் = நாண் அறுந்து போய் இருக்கிறது

நான்கிழவன் = நானோ கிழவன்

அசைந்தேன் = அசைய முடியாமல் இருக்கிறேன்

என்றோ = என்றா

வம்பொன்று குழலாளை  = பொன் போன்ற குழலை உடைய என் பெண்ணை

மணம்பேசி = திருமணம் பேசி

வரவிடுத்தார் = வரும்படி உன்னை அனுப்பி இருக்கிறார்

 மன்னர் தூதா! = மன்னனின் தூதனே

செம்பொன்செய் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

மணிமாடத் = மணி மாடங்களை கொண்ட

தெள்ளாற்றின் = தெள்ளிய ஆற்றின் கரையில் உள்ள

நந்திபதம் சேரார் = நந்தி அரசாளும் இடத்திற்கு வரமாட்டார்

ஆனைக் கொம்(பு) = யானையின் தந்தம்

ஒன்றோ = ஒன்றா, (இல்லை பல இருக்கிறது )

நம்குடிலின் = எங்கள் குடிசையின்

குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே. = குறுக்கும் நெடுக்கும் இருக்கிறது...நீ சற்று குனிந்து பார்



Thursday, March 7, 2013

நந்திக் கலம்பகம் - குடமும் இடையும்


நந்திக் கலம்பகம் - குடமும் இடையும் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

உங்கள் வயது பதினெட்டுக் கீழே இருந்தால், உடனடியாக இந்த ப்ளாகை படிப்பதை நிறுத்தவும்.

அவள் இடை முறிந்து விழுந்து விட்டாள்.

முரியாதா பின்னே ... கையில் இரண்டு குடம், தலையில் ஒரு குடம், பத்தாதற்கு இந்த குடம் வேறு...இத்தனையும் கொண்டு சென்றால் ஈரக் காற்றுக்குத் தாங்காத இடை எப்படி தாங்கும்...முறிஞ்சு போச்சு....

பாடல்


கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும்
இக்குடமும் கொண்டாள் முறியாதே? - மிக்க புகழ்
வெய்க் காற்றினால் விளங்கும் வீருநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?”


பொருள்



Friday, July 27, 2012

நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....

அந்த இனிய பாடல், உங்களுக்காக...

Thursday, July 26, 2012

நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


அவன் போர் முடிந்து அவன் காதலியை தேடி வருகிறான்.

அவன் உயிர் எல்லாம், மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே சென்று அடைந்து விட்டது.

அவன் தேர் எவ்வளவு வேகமாக சென்றாலும், அவனுக்கு என்னவோ அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மாதிரியே தெரிகிறது.

அவ்வளவு அவசரம்.

மேலே பார்க்கிறான். மேகங்கள் வேகமாக செல்வது போல் தெரிகிறது.

நமக்கு முன்னால் இந்த மேகங்கள் சென்று விடும் போல் இருக்கிறது, இந்த மேகங்களிடம் நாம் வரும் சேதியையை சொல்லி அனுப்பலாம் என்று அவைகளிடம் சொல்கிறான் 

"ஏய், மேகங்களே, ஓடாத தேரில் , ஒரு உயிர் இல்லாத வெறும் உடம்பு மட்டும் வருகிறது என்று என் காதலியிடம் சொல்லுங்கள்" .

அப்புறம் யோசிக்கிறான்.

இந்த மேகங்கள் எங்கே அவளை கண்டு பிடிக்கப் போகின்றன. அதுகளுக்கு ஆயிரம் வேலை, நம்ம வேலயத்தானா செய்யப் போகின்றன என்று ஒரு சந்தேகம் ..."அவளைப் பார்த்தால் சொல்லுங்கள்" என்று முடிக்கிறான். 

அந்த இனிமையான பாடல்....

Monday, May 21, 2012

நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


Balcony இல் உட்கார்ந்து வெளியே பார்க்கிறாள்.

அருகில் ஒரு பூங்கா.

மழை லேசாகப் பெய்கிறது.

பூங்காவில் உள்ள மலர்கள் எல்லாம் மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன.

அங்கு ஒரு மயில் மழையில் நனைந்து தோகை ஈரமாகி, குளிரில் உடல் வெட வெடக்க நிற்கிறது.

அவளுடைய காதலனை நினைக்கிறாள்.

அவன் அருகில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஏங்குகிறாள்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை கடந்து நம் மனதில் மழை அடிக்கும் அந்தப் பாடல்....

Sunday, May 20, 2012

நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


ஒரு நாள் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் (உ.வே.சா.) இரவு உணவு உண்ட பின் மாடியில் காற்றாட அமர்ந்திருந்தார்.

தூரத்தில் ஒரு பிச்சைக்காரன்

"ஊரைச் சுடுமோ, உலகம் தனை சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன்"

என்று பாடியது காதில் விழுந்தது.

அடுத்த வரி கேட்பதற்குள் அந்த பிச்சைக்காரன் வேறு தெருவுக்குள் நுழைந்து விட்டான்.

உ.வே. சா யோசிக்கிறார். எது ஊரையும், உலகையும் சுடும் என்று.

செய்த பாவமா ? எது என்று யோசித்தார். விடை கிடைக்கவில்லை.

சரி, அந்த பிச்சைக்காரனை தேடி கண்டு பிடிக்கலாம் என்று கிளம்பி விட்டார்.

அந்த பிச்சைக்காரன் பின்னால் தெரு தெருவாய் அலைந்தார்.

அந்த பிச்சைகாரனோ முதல் இரண்டு வரி தாண்டி பாடுவதாய் இல்லை.

நேரே அவனிடமே கேட்டு விட்டார்...அடுத்த இரண்டு வரிகளை பாடும்படி.

"பாட்டா...பசி உயிர் போகிறது என்றான் அந்த பிச்சைக்காரன்"

அவனுக்கு உணவு வாங்கித் தந்து அடுத்த இரண்டு வரியும் என்ன என்று குறித்துக்கொண்டு வந்தார்.

நந்தி கலம்பகத்தில் வரும் அந்த பாடல்....


காதலனை பிரிந்து தனித்து இருக்கிறாள் காதலி.

தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருக்கிறாள்.

நிலவைப் பார்க்கிறாள். அது கொதிக்கிறது.

இந்த நிலவு நம்மை மட்டும் தான் சுடுகிறதா இல்லை எல்லாரையும் சுடுகிறதா என்று யோசிக்கிறாள்...



ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா.

ஊரைச் சுடுமோ = இந்த ஊர் எல்லாம் சுடுமோ (என்றால் இந்த ஊரில் உள்ள எல்லோரையும் என்று பொருள்)

உலகம் தனைச்சுடுமோ = இந்த ஊர் மட்டும் அல்ல, உலகில் உள்ள எல்லோரையும் சுடுமோ?

யாரைச் சுடுமோ அறிகிலேன் = யார் யாரை எல்லாம் சுடுமோ, தெரியவில்லை

நேரே = நேரில் உள்ள இந்த நிலா

பொருப்பு = மலை முகடு, மலைத் தொடர்ச்சி போன்ற

வட்ட மானமுலைப் =

பூவையரே = பூவை சூடும் பெண்களே

இந்த நெருப்புவட்ட மான நிலா. = இந்த நெருப்பு வட்டமான நிலா


நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை


நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை

தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.

நந்தியின் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்).

அவன் காதலியின் ஊடலைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டு வாசலில் நின்று பாடுகிறான்.

அவள் அவனை லந்து பண்ணுகிறாள்.

"ஓ...நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேய் தான் அலறுகிறது என்றாள், அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிடுகிறது என்றார்கள், என் தோழியோ நாய்தான் ஏதோ குறைக்கிறது என்றாள், அது எல்லாம் இருக்காது, நீ தான் பாடி இருப்பேன்னு நான் சொன்னேன்..."என்று அவனை கிண்டல் பண்ணுகிறாள்.

அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்....

நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்


நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்


கலம்பகம் என்பது பலவகை செய்யுள்களால் ஆன ஒரு பிரபந்தவகை.

பாடல் பெறும் தகுதியுள்ள ஒரு தலைவனைப் பற்றிப் பாடுவது மரபு.

50 இல் இருந்து 100 வரை செய்யுள்கள் அமைத்து பாடுவது வழக்கம்.

கலம்பகத்தில் எனக்குப் பிடித்தது நந்தி கலம்பகம்.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான்.

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு.

பாட்டுடை தலைவன் மேல் அறம் வைத்து பாடினால், அதை கேட்ட உடன் அவன் இறந்து விடுவான் என்று ஒரு நம்பிக்கை.

நந்தி வர்மனின் எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள்.

புலவனும், பணத்திற்கு ஆசைப் பட்டு, நந்தி வர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான்.

பாடிய பின், மனம் மாறி, தனக்கு பணம் கொடுத்தவர்களிடம் பாடல் எழுதவில்லை என்று சொல்லி விட்டான்.

அந்த புலவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. ஒருநாள் அவளோடு தனித்து இருக்கும் போது நந்தி கலம்பகம் என்ற தான் எழுதிய நூலில் இருந்து சில பாடல்களை பாடினான்

கேட்ட மாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு சில பாடல்கள் மனப் பாடம் ஆகிவிட்டது.

ஒருநாள் அவள் தெரு வழியே போகும் போது அந்த பாடல்களை பாடிக் கொண்டே போனாள்.

அதை உப்பரிகையில் இருந்து கேட்ட நந்தி வர்மன் அந்த பாடல்களில் மயங்கி, அவளை அழைத்து அந்த பாடல்களின் வரலாறு கேட்டு அறிந்தான். 
அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை ஒப்புகொண்டான்.

நந்தி வர்மன், முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவன் மறுத்து, "மன்னா, இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.

நந்தி கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவனைப் பாடச் சொன்னான்.

நூறு பாடல்கள். புலவன் சொன்னான் "மன்னா, நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒரு பந்தலில் இருந்து கேட்க்க வேண்டும்....அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றான்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் சாம்பலாய் போனான் என்று ஒரு கதை நிலவுகிறது.

நந்தியின் எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

தமிழிலில் இந்த கதையை பின்னணியாக வைத்து ஒரு சில வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. (கோ. வி. மணிசேகரன் என்று ஞாபகம்)

தமிழ் சுவைக்காக உயிர் கொடுத்த அந்த நந்தி கலம்பகத்தில் இருந்து ஒரு பாடல்....