Sunday, February 25, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"கூர்வேல் கொடுந்தொழிலன்"

கூர்மையான வேலைக் கொண்டவன், கொடுமையான தொழில்களை செய்பவன். 

யார், கண்ணனின் வளர்ப்பு தந்தை நந்தகோபன். 

இது கொஞ்சம் சற்று நெருடலான இடம். 


முதல் பாசுரத்திலே ஆண்டாள், கண்ணனின் தந்தையை ஏன் இப்படி அறிமுகம் செய்கிறாள். 


நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்கள் குணம், மன நிலை தான் நமக்கு வரும். 

அதனால் தான் , தீயாரை காண்பதுவும் தீது என்று சொன்னார்கள். நல்லாரை காண்பதுவும் நன்றே என்றார்கள். 

அது நமக்குத் தெரிகிறது. 

ஆனால், நமக்குத் தெரியாத நுண்ணிய விஷயம் என்ன என்றால், நாம் எவற்றோடு பழகுகிறோமோ, எதை அடிக்கடி கையாள்கிறோமோ அவற்றின் தன்மை நமக்கு வந்து விடும். 

அது ஒரு உயிரில்லா திடப் பொருளாக இருக்கலாம். நாம் எதை அடிக்கடி கை கொள்கிறோமோ, அதன் குணம் நமக்கு வந்து விடும். 


இராமனைப் பற்றி ஜனகனிடம் கூறும்போது, ஜனகனை "உறை ஓடும் நெடு வேலாய் " , இந்த இராமனுக்கு தந்தை தயரதன் தான் என்றாலும், இவனை படிபித்தது எல்லாம் வசிட்டன் தான் என்றான். 

இது கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். 

கையில் எப்போதும் அறிவாளும் கையுமாக திரிந்தால், எதையாவது வெட்ட வேண்டும் என்று தோன்றும். 

கையில் எப்போதும் சுத்தியலை கொண்டு திரிந்தால், எதையாவது தட்ட வேண்டும் என்று தோன்றும். 

நம்மை சுற்றி என்ன இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும். 

நம்மை சுற்றி புத்தகங்கள் இருந்தால், எதையாவது எடுத்து படிக்கத் தோன்றும். 

நம்மை சுற்றி டப்பா டப்பாவாக முறுக்கு, சீடை என்று நொறுக்குத் தீனிகள் இருந்தால் அதில் இரண்டை எடுத்து வாயில் போடத் தோன்றும். 

அப்படிஎன்றால், நமக்கு என்ன வேண்டுமோ, அது சம்பந்தப்பட்ட பொருள்களை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களை நம்மோடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஹை,இது என்ன புது கதை. இது சரிதானா, அப்படியும் கூட இருக்குமா என்ற சந்தேகம் வரலாம். 

வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ? 

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் 

உடல்சுவை உண்டார் மனம்

படை கருவிகளை கொண்டவர் மனதில் எப்படி அன்பு, அருள் , கருணை போன்ற நல்ல குணங்கள் இருக்காதோ , அது போல மாமிசம் தின்பவரின் மனத்திலும் அந்த நல்ல குணங்கள் இருக்காது என்கிறார். ஒன்றன் உடல் சுவை கொண்டார் மனம். மற்ற ஒரு உடலை கொன்று தின்பவரின் மனதில்  அருள் எப்படி இருக்கும் ? அது எப்படி என்றால், கத்தி , வேல்  போன்ற படைக் கருவிகளை கொணடவர் மனதில் நல்ல குணங்கள் எவ்வாறு இருக்காதோ அது போல என்கிறார். 

நந்த கோபன் நல்லவனா, கெட்டவனா என்பது அல்ல ஆண்டாள் சொல்ல வந்தது. கையில் வேல் இருந்தால், யாரையாவது குத்தச் சொல்லும். அது கொடும் தொழில். எனவே, அவற்றை விட்டு விடுங்கள். 

சாத்வீகம் மேலோங்கி, மெய்யுணர்வு பெற வேண்டுமா, மென்மையான பொருள்களை கை கொள்ளுங்கள், நல்லவர்களோடு பழகுங்கள் என்று சொல்ல வருகிறாள். 

சரி, இது வள்ளுவர் மட்டும் தான் சொன்னாரா ? அல்லது வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

கம்பர் சொல்லி இருக்கிறார். 

சனகனிடம் வேல் இருந்ததாம். ஆனால் அது எப்போதும் உறையிலேயே இருக்குமாம். வெளியே எடுக்கவே மாட்டானாம். கையில் எடுத்தால் அல்லவா, யாரை குத்தலாம் என்று தோன்றும். உறை போட்டு மூடி வைத்து இருந்தானாம். 


"உரை ஓடும் நெடு வேலாய் " என்கிறார். 


‘திறையோடும் அரசு இறைஞ்சும்
   செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
   புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
   உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை

   வளர்த்தானும் வசிட்டன்காண்.

நாம் கவனிக்க வேண்டிய தொடர் "உறை ஓடும் நெடு வேலாய்!". சனகனிடம் நீண்ட வேல் இருந்தது. அனால் அது உறையிலேயே கிடந்தது. சண்டை போட வாய்ப்பே இல்லை. சனகனை யாரும்  எதிர்த்து நிற்கவில்லை என்பது ஒரு பொருள். சனகன் யாரிடமும் பகைமை பாராட்டவில்லை என்பது இன்னொரு பொருள். 


நம் சூழ்நிலை நம்மை பாதிக்கும். 


ஆண்டாளுக்கு , நந்தகோபனை நினைத்தால் அவன் வேல் நினைவுக்கு வருகிறது. வேல் என்றால் அது செய்யும் கொடும் தொழில்கள் நினைவுக்கு வருகிறது. 

உயிர் கொலை பாவம் , கொடிய செயல் என்று நினைக்கிறாள். 

உயிர் கொலை செய்ய வேண்டாம் என்றால், பின் ஆயுதம் எதற்கு ?

ஆயுதங்களுக்காக கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்யும் அரசுகள் இதை கவனிக்க வேண்டும். 

ஆயுதங்களை குறையுங்கள். அன்பைப் பெருக்குங்கள்.

பகைம்மைக்கு பகைமை அல்ல மாற்று. அன்புதான் மாற்று. 

பகைவனை கொன்றாலும் கொலை தானே.

மனித நேயத்தின் உச்சம் தொடுகிறாள் ஆண்டாள்.

மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/4.html


Friday, February 23, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 3

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 3


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"மதி நிறைந்த நன்னாளால்"

நமக்கு நல்ல காரியங்கள் செய்ய பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் நேரம் இருக்காது. பிள்ளைகள் படிப்பு, அவர்கள் வேலை, அவர்கள் திருமணம், பேரன் பேத்தியை பார்த்துக் கொள்ள வேண்டும், வயதான பெற்றோரை பார்க்க வேண்டும், மாமனார் மாமியாரைப் பார்க்க வேண்டும் என்று அந்த நல்ல காரியத்தை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். 

ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கூட , அதற்கு முன் ஆயிரம் வேலைகள் இருக்கும் அதையெல்லாம் முடிந்து பின் தான் செய்ய முடியும் என்று அலுத்துக் கொள்வோம். 

எங்க நேரம் இருக்கு? செய்யணும்னுதான் நினைக்கிறேன். நேரம் வாச்சால்ல செய்ய என்று எல்லா நல்ல காரியங்களையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். 

வள்ளலார் சொல்கிறார் 

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

முதலில் தாய் தடை என்றேன். வயதான அம்மா அப்பாவை விட்டு விட்டு எங்கே போவது என்று ஒரு தடை. 

பின் தாரமே தடை என்றேன். பெண்ட்டாட்டியை விட்டு விட்டு எப்படி சன்யாசம் போக முடியும். அவள் பாவம் அல்லவா. 

சேய் தடை என்றேன். பிள்ளைகளை படிக்க வேண்டும், அவர்களுக்கு வேலை, திருமணம், அவர்களின் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் 

என்று இப்படி ஒவ்வொரு தடையாக வந்தால், இவற்றை எல்லாம் தாண்ட நான் என்ன செய்யப் போகிறேன் என்று வருந்துகிறார். 

அவருக்கே இப்படி என்றால், நமக்கு எவ்வளவு இருக்கும்?

ஒரு காலும் நம்மால் நல்ல காரியங்கள் செய்ய முடியாது. 


நல்ல காரியம் செய்ய எல்லா நாளும் நல்ல நாள் தான் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். கண்ணனை பார்க்கப் போகிறோம், எனவே இந்த நாள் நல்ல நாள் தான் என்று ஆண்டாள் முடிவு செய்கிறாள். இது நல்ல நாள், எனவே நாம் கண்ணனை பார்க்கப் போகலாம் என்று சொல்ல வில்லை. 


"நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"

அகம் தூய்மையாக வேண்டும் என்றால், புறம் தூய்மையாக வேண்டும். 

நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அவை எந்த பூட்டை திறக்கும் என்று நமக்குத் தெரியவில்லைல். ஒரு காலத்தில், கையில் சாவியை கொடுத்து "திறந்து விட்டு வா " என்றால் அவர்களுக்குத் தெரிந்திருந்தது அந்த சாவி  எந்த பூட்டை திறக்கும் என்று.

இப்போது நம் கையில் சாவி இருக்கிறது. பூட்டு எது என்று தெரியவில்லை. 

காலையில் நீராடி இறைவனை காண வேண்டும் என்கிறாள் ஆண்டாள். 

ஏன் நீராட வேண்டும் ? நீராடினால் என்ன ஆகும். நீராடாமல் போனால் என்ன ஆகும்? தெரியாது.  எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்கிறோம். 

நீராடுதல் என்பது ஒரு சாவி. அது எந்த பூட்டை திறக்கும் என்று தெரியாது. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குத் தெரியாது. 

உன்னிப்ப்பாக கவனித்துப் பாருங்கள். குளிக்கும் முன் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, குளித்த பின் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் மாறுதல் இருக்கும். 

உடல் குளிரும். இரத்த சூடு கொஞ்சம் குறையும். மூளை குளிரும். சாத்வீகம் இன்னும்  மேம்படும். 

அதி காலையில் குளித்துப் பாருங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும். 

"கூர்வேல் கொடுந் தொழிலன் "

கண்ணனின் வளர்ப்பு தந்தையான நந்தகோபனை பற்றி கூற வந்தவள், கூர்மையான வேலை கொண்ட கொடுமையான தொழில் புரிபவன் என்று கூறுகிறாள். 

அதற்கு ஏதேதோ வியாக்கியானம் சொல்கிறார்கள். 

ஒரு கொடுங்கோலனுக்கு பிள்ளையாய் இருப்பவனே என்று ஆண்டாள் சொல்வாளா ? அவன் கொடுமையான தொழில் புரிபவனாகவே இருந்தாலும் , அதை வேலை மெனெக்கெட்டு சொல்லுவானேன்? சொல்லாமல் விட்டு விட்டு போயிருக்கலாமே. ஏன் வலிந்து அதை சொல்கிறாள் ?


http://interestingtamilpoems.blogspot.in/2018/02/3.html


Thursday, February 22, 2018

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 


பெண் !

பெண் என்பவள் இயற்கையின் ஒரு உன்னதம்.

ஆணால் புரிந்து கொள்ளவே முடியாத புதிர். ஒன்றும் அறியாத வெகுளிப் பெண்ணாக திருமணம் ஆகி கணவன் வீடு வருவாள். பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண். புகுந்த வீட்டில் , தன் ஆளுமையை நிலை நிறுத்துவாள்.

கணவன் பார்ப்பான்....

ஒரு சமயம் இளம் பெண்ணாக, கூச்சம், நாணம் நிறைந்த பெண்ணாக காட்சி தருவாள்.

அவன் உடல் நலம் குன்றி படுத்து விட்டால், பத்து அம்மா செய்யாததை அவள் ஒருத்தி செய்வாள்.

சரி, இவ்வளவு பொறுமையும், மன உறுதியும் உள்ள பெரிய பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்தாள் , ஒன்றும் இல்லாததற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கவலைப் படுவாள்.

ஒரு கணம் மகளாக இருப்பாள். மறு கணம் மனைவியாக. இன்னொரு கணம் தாயாக. சில நேரம் தமக்கையாக. தோழியாக.

நிறம் மாறிக் கொண்டே இருப்பாள்.

அவளை என்ன என்று நினைப்பது. தாயென்று நினைத்து கும்பிடுவதா ? தாரம் என்று நினைத்து அணைப்பதா ? மகள் என்று நினைத்து கொஞ்சுவதா ? தோழி என்று நினைத்து பட்டும் படாமல் சற்றே விலகி நிற்பதா ?

விடை தெரியாத புதிர் அவள்.

அவள் எப்படி இருக்கிறாளோ அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதுதான்  ஆணுக்கு சிறந்த வழி.

அவள் தாயானாள் , பிள்ளையாக மாறு.

அவள் தாரமானாள் , கணவனாக மாறு.

அவள் மகளானாள் , தகப்பனாக மாறு.

அவள் காதலியானால், காதலனாக மாறு.

அவள் ஒரு நிலையி இருப்பது இல்லை.

அபிராமி பட்டர் பார்க்கிறார். அபிராமி, எப்படி பட்டவள் என்று. அவருக்குப் புரியவில்லை. ஒரு சமயம் சிவனை விட மூத்த பெண்ணாக தெரிகிறாள். இன்னொரு முறை விஷ்ணுவுக்கு இளையவளாகத் தெரிகிறாள்.

பெண் அப்படித்தான்.

பாடல்

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


பொருள் 


பூத்தவளே புவனம் பதினான்கையும் = புவனம் பதினான்கையும் தோற்றி வித்தவளே. ஆண்களிடம் ஒரு வேலை சொன்னால், வேலையை விட சத்தம் அதிகமாக இருக்கும். பதினான்கு உலகத்தையும் ஒரு பூ பூப்பது போல மென்மையாக, சத்தம் இல்லாமால், தோற்றி வித்தாள்.


பூத்தவண்ணம் காத்தவளே = அந்த உலகங்களை காக்கிறாள். அதுவும் , எப்படி தோற்றுவித்தாளோ அதே மாதிரி காக்கிறாள். பூத்த வண்ணம் காக்கிறாள்.


பின் கரந்தவளே = அவற்றை பின்னாளில்  மறைத்து அருளுகிறாள்

கறைகண்டனுக்கு மூத்தவளே = கழுத்தில் கறை உள்ள சிவனுக்கு மூத்தவளே. உண்மையில் அவள் இளையவள். இருந்தாலும், அவள் சிவனை பராமரிக்கும் நிலையை பார்த்தால், இவள், அவனுக்கு மூத்தவள் போலத் தெரிகிறாள்.


என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே =  என்றுமே மூப்பு அடையாமல் இருக்கும் திருமாலுக்கு இளையவளாக இருக்கிறாள். அது எப்படி முடியும்.

சிவனுக்கு மூப்பு. திருமாலுக்கு இளையவள்.

அது தான் பெண்.


மாத்தவளே = மா தவம் உடையவளே

உன்னை அன்றி =   உன்னைத் தவிர

மற்றோர் தெய்வம் = வேறு ஒரு தெய்வத்தை

வந்திப்பதே = வணங்குவது இல்லை

பெண் அனைத்துமாக இருக்கிறாள்.

எல்லா பெண்களும் அபிராமியின் கூறுகள்தான்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_22.html

Tuesday, February 20, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"மார்கழி திங்கள்" 

ஏன் மார்கழி திங்கள் ? ஏன் வேறு எந்த மாதங்களில் இந்த பாவை நோன்பு செய்யக் கூடாது ? கீதையில் கூட கண்ணன், "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்கிறான். மார்கழிக்கு என்ன பெரிய சிறப்பு ?

இறைவனை நாம் எப்போது நினைப்போம்? ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போது நாம் இறைவனை நினைப்பது இல்லை. 

ரொம்ப சோகமாக இருக்கும் போதும் இறைவனை நினைப்பது இல்லை. அப்படி நினைத்தாலும், "ஆமா, இந்த கடவுள் இருந்தும் ஒன்றும் தான் இல்லாததும் ஒன்று தான் "  என்று கடவுளை நிந்திக்க தலைப்படுகிரோம்.

உண்மையிலேயே நாம் இறைவனை நினைப்பது, ஒரு குழப்பமான மன நிலையில் தான். என்ன ஆகுமோ என்ற குழப்பம் வரும்போது , "கடவுளே  இது நல்ல படியாக முடியனும். அப்படி முடிந்தால், உன் சந்நிதிக்கு வருகிறேன். அதைச் செய்கிறேன் , இதைச் செய்கிறேன் " என்று உருகு உருகி  இறைவனை நினைப்போம். 

மனம் சஞ்சலம் அடையும் போது , குழப்பம் வரும் போது நாம் நினைக்கிறோம். 

நீங்கள் உங்கள் மன நிலையை உன்னிப்பாக கவனித்து, ஒரு டையரியில் உங்கள் மன நிலையை குறித்துக் கொண்டே வந்தால் அது ஒரு அலை போல எழுவதும், குறைவதும் தெரியும். 

இத்தனை மணிக்கு சந்தோஷம், இத்தனை மணிக்கு கோபம், வெறுப்பு, எரிச்சல், காதல், காமம், பசி, தூக்கம் என்று எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே வாருங்கள். 

ஒரு மாதம் கழித்து பாருங்கள். உங்கள் மன நிலை ஏறக்குறைய ஒரே மாதிரி ஒரு சுழற்சியில் இருப்பதை காணபீர்கள்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் மன நிலை உங்கள் கையில் இருக்கிறது என்று. இல்லை. அது பாட்டுக்கு வருகிறது போகிறது. கடலின் அலை போல. 

ஒரு வாரம் சேர்த்து வைத்த குறிப்புகளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் நாம் எப்படி இருக்கிறோம் என்று தெரியும். 

ஒரு சில மாதங்கள் சேர்த்த குறிப்பை பார்த்தால், ஒவ்வொரு வாரமும் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியும். 

ஒரு வருடம் முழுவதும் நாம் ஆராய்ந்தால், ஒவ்வொரு மாதமும் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியும். 

சித்தரை மாதம் நம் மன நிலை பொதுவாக எப்படி இருந்தது. ஆணியில், ஆவடியில்  என்று நாம் பார்க்க முடியும். 

நம்மை நாமே உணர கொஞ்சம் தன்னுணர்வு (sensitivity ) வேண்டும். கோபம் வரும் போது நான் இப்போது கோபமாக இருக்கிறேன் என்ற அறிவு வேண்டும். பல பேருக்கு அந்த அறிவு இருப்பது இல்லை. கோபப் படும்போது கோபம் மட்டுமே  இருக்கிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு வாழ்க்கை செல்கிறது.

உணவின் அளவை குறைத்தால் இந்த sensitivty வரும். 

அப்படி வந்தவர்கள், அறிந்து சொன்னது, மார்கழி மாதம் மிகுந்த குழப்பம் நிறைந்த மாதம். 

ஏன் ?

நம் மன நிலை பலவித வெளிக் காரணங்களால் பாதிக்கப் படுகிறது. 

நாம் உண்ணும் உணவு, நாம் பருகும் திரவங்கள். நாம் இழுத்து விடும் மூச்சின் தன்மை. நாம் வாழும் சூழ்நிலை என்ற பல காரணங்கள் இருக்கின்றன. 

இதில் முக்கியமானது, நாம் எளிதில் அறிந்து கொள்ள முடியாதது சூழ்நிலை. 

இரவு பகல், கோடை குளிர் என்பவை நம் மனதை பாதிக்கின்றன. 

சூரியன் நாம் பூமியில் இருக்கும் வட பகுதிக்கு நுழையும் நாள் உத்தராயணம் எனப்படும்.  அது தை மாதம் முதல் தேதி. 

தை முதல் ஆனி  வரை ஆறு மாதம் சூரியன் வட பகுதியில் இருப்பான். 

ஆனி  தொடங்கி  மார்கழி வரை ஆறு மாதம் சூரியன் தென் பகுதியில் இருப்பான். சூரியன் நம்மை விட்டு விலகி இருக்கும் நாட்கள் ஒளி குன்றி இருக்கும். 

அப்படி என்றால், மார்கழி மாதம் தான், இருள் விலகவும், ஒளி பிறக்கவும் உள்ள ஒரு இடைப்பட்ட காலம். இந்த நேரத்தில் மனம் மிகுந்த குழப்பங்களுக்கு உள்ளாகும். 

மனம் நெகிழ்ந்து இருக்கும். 

இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். 

இப்படி யோசித்துப் பாருங்கள். இரவு நன்றாக தூங்கினால், அதி காலை விழிப்பு வரும். அந்த இருள் விலகி ஒளி வரும் நேரம் மனம் தூய்மையாக இருக்கும். சாத்வீக குணம் ஓங்கி இருக்கும் நேரம். அதனால் தான் அந்த நேரத்தில் பூஜை செய்யவும், படிக்கவும் சொன்னார்கள்.. மனதில் அப்படியே படியும். 

நாள் என்பதால் நம்மால் அதை உடனடியே அறிய முடிகிறது. 

இதுவே மாதம் என்று வந்தால் , காலம் நீண்டு இருப்பதால் நம்மால் அதை உணர்ந்து  கொள்ள முடிவதில்லை.

ஒரு நாளின் அதி காலை எப்படியோ, மாதங்களில் மார்கழி அப்படி. 

மனம் தெளிந்து, குழப்பங்கள் விலகி, இருள் நீங்கி, ஒளி பிறக்கும் மாதம். 

மார்கழி திருவாதிரை அன்று தீபம் ஏற்றி சிறப்பாக கொண்டாட காரணம், அது ஒளி முழுவதுமாக நம் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் நேரம். 

எனவே மார்கழி திங்கள் . 

மார்கழியில் பாவை நோன்பு. 

திருப்பாவை முழுவதும், தூங்கும் பெண்களை எழுப்பும் பாடலாக இருக்கும். இது என்ன பக்தி பாடல் ? தூக்கம் ஆட்களை எழுப்புவது ஒரு பக்தியா ? 

எழுப்புதல் என்பது அறியாமை என்ற தூக்கத்தில் இருக்கும் நம்மை எழுப்பி அறிவுடைய செய்வது. மெய்யுணர்வு பெறச் செய்வது. தூக்கத்தில் இருக்கும் போது கனவை உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்போம்.  அது உண்மையல்ல. விழித்துக் கொள் என்று சொல்ல வந்த பாடல்கள் திருப்பாவை. 

எனவே, முதல் இரண்டு வார்த்தைகள், "மார்கழி திங்கள் "

மேலும் சிந்திப்போம்.  

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2_20.html








Monday, February 19, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 1

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 1



திருப்பாவைக்கு எத்தனையோ உரைகள் இருக்கின்றன. எவ்வளவோ பெரியவர்கள் , எத்தனையோ வகைகளில் உரை எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு பக்தியும் இல்லை, தமிழ் அறிவும் கிடையாது. நான் என்ன எழுதப் போகிறேன்.

இந்தத் திருப்பாவை பாடல்களை பல விதங்களில் பார்க்கலாம்.

மிக எளிமையான தமிழ் பாசுரங்களாக பார்க்கலாம். ஆயர் பாடி பெண் ஒருத்தி , தன் தோழிகளை அழைத்துக் கொண்டு இறைவனை தரிசனம் பண்ண போகிறாள். அது சம்பந்தமான பாடல்களாகப் பார்க்கலாம். அது ஒரு வகை.

இன்னொரு வகை, மிக ஆழ்ந்த அர்த்தங்களோடு கொண்டதாக பார்க்கலாம். ஒவ்வொரு  வார்த்தைக்கும் ஒரு தத்துவார்த்த விளக்கமாக பார்க்கலாம். உதாரணமாக  "கோட்டுக் கால் கட்டில் மேல்" என்று வந்தால், கட்டிலுக்கு நாலு கால் என்பது   நான்கு வேதங்களை குறிக்கும். வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை  ஆண்டாள் குறிக்கிறாள் என்று அர்த்தம் சொல்லலாம்.  அது இன்னொரு வகை.

இந்த இரண்டு முறையிலும், நமக்கு என்ன பலன்? இந்த பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன. தத்துவம் என்றால் , வேதாந்தம் படிப்பவர்கள் படித்து இரசித்து விட்டு போகட்டும். எளிமையான தமிழ் பாடல் விளக்கம் என்றால், சரி, வாசித்தோம், என்று மேலே போய் விடலாம்.

இரண்டிலும் நமக்கு ஒன்றும் இல்லை.

இந்த இரண்டும் தான் பொருள் என்றால், இந்த பாடல்கள் காலம் கடந்து நிற்க வேண்டிய  காரணம் என்ன. இதில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது.


உண்மை உறங்கிக் கிடக்கிறது. வெளியே வர முடியாமல் , காலம் காலமாய் நம் கதவுகளை  தட்டிக் கொண்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

அப்படியானால், அந்தப் பாடல்கள் நம்மிடம் சொல்ல வரும் சேதி என்ன?


அதில் வரும் பெண்கள், வீடு, நிலம், மாடுகள், பால், ஒலிக் குறிப்புகள் எல்லாமே ஏதோ ஒன்றின் குறியீடு என்று கொண்டால், அது என்ன என்று நாம் நினைத்துப் பார்க்கலாம்.

அந்த கோணத்தில் நான் சிந்தித்தை, பகிர்ந்து கொள்கிறேன். நான் கூறுவது முற்றிலும் தவறாகக் கூட இருக்கலாம்.  ஒரு புதிய சிந்தனை என்ற முறையில் இதை பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.

ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

சரி, முதலில் இந்த பாவை நோன்பின் பொருள் என்ன.  பெண்கள் , அதி காலையில் எழுந்து , உறங்கும்  தங்கள் தோழிகளை எழுப்பி , அவர்களையும்  அழைத்துக் கொண்டு , நீராடி, பின் இறைவனை வழிபடுவது பாவை நோன்பு என்று சொல்லப் படுகிறது.

ஆண்டாள் இயற்றிய பாவைப் பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப் படுகிறது. மொத்தம் 30 பாசுரங்கள்.

முதல் பாசுரம்.

* மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

எல்லோரும் சலிக்க சலிக்க கேட்ட பாடல். மனப்பாடம் ஆன பாடல். அர்த்தம் தெரிந்த பாடல்.

இந்தப் பாடலில் இதுவரை காணாத பொருள் என்ன இருக்கக் கூடும் ?

முதலில், இதை ஏன் பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கிறது ?  பெண் பிள்ளைகள் பாடுவதாக ஏன் அமைக்க வேண்டும் ?

பொதுவாகவே இறைவனைப் பற்றி பாடும் அடியார்கள் தங்கள் பெண்ணாக பாவித்தே  பாடுகிறார்கள். நாயகன் நாயகி பாவம் என்கிறார்கள்.

ஏன் ?

பெண் என்பவள் ஆணின் சக்தியை ஏற்று, அதைக் காத்து, தன்னுள் வளர்த்து, உயிராக்கி, தருபவள்.

நிலம் போன்றவள் பெண். நிலம், தன்னுள் விதையை வாங்கி, உயிரூட்டி, வளர்த்து செடியாக, கொடியாக , மரமாக மாற்றித்தரும்.

விதையை மரமாகும் வித்தை பெண்ணிடம்தான் உள்ளது.

அதற்கு ஒரு மன பக்குவம் வேண்டும். பொறுமை வேண்டும். வலி பொறுக்கும் சகிப்பு தன்மை வேண்டும். காத்திருக்கும் மன உறுதி வேண்டும்.

இறைவன் அருளை பெற்று, அதை தன்னுள் வாங்கி, அதை வளர்த்து, உலகுக்கு பயன்பட  வைக்கும் அந்த பக்தி மனமும் பெண்ணுக்கு சமமானதுதான்.

எனவே தான், பக்தி வரும் போது, மனம் தானாக பெண்ணின் மனம் போல இளகி, அன்பும் , கருணையும், நெகிழ்வும் பிறக்கிறது.

நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்து உருக என்று அருணகிரிநாதர் சொன்னது மாதிரி.

பெண்ணின் மனம் வந்தால்தான், பக்தி வரும்...

ஆணின் மனம் கொஞ்சம் முரட்டு மனம். கரடு முரடானது. கல் போல, இரும்பு போல கடினமானது.

கல்லாய் இருந்த என் மனதை , கனி போல் பிசைந்தாய் என்கிறார் மணிவாசகர்.


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.


இறையருளை பெற வேண்டுமா ? முதல் படி, மனம் அன்பால், கருணையால் , நெகிழ வேண்டும்.

பெண்மை என்ற குணம் வர வேண்டும்.

இது திருப்பாவை காட்டும், முதல் பாடம்.

இன்னும் பாட்டுக்குள் செல்ல வில்லை.

நாளை பாசுரத்தின் உள் அர்த்தம் பற்றி சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_19.html

Thursday, February 15, 2018

கம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி

கம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி 


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தான் மாரீசன். இராவணன் கேட்பவனாகத் தெரியவில்லை.

காமம் ஒரு பக்கம். கோபம் மறு பக்கம். அவன் அறிவை மழுங்க அடித்தது.

மாரீசனை  கோபித்து ஏசுகிறான்.

கடைசியில் மாரீசன் தளர்ந்து போய்

"உன் நன்மைக்காக சொன்னேன். எனக்கு அழிவு வரும் என்று நினைத்து பயந்து அல்ல நான் சொன்னது. அழிவு வரும் காலத்தில், நல்லது சொன்னாலும் கெட்டது போலத்  தெரியும். தீய வழியில் செல்பவனே , நான் என்ன செய்ய வேண்டும் சொல் " என்றான்.

பாடல்

*
உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின் 
     உணர்த்தினேன்; மற்று, 
என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் 
     இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே, நாசம் 
     வந்து உற்ற போது? 
புன்மையின் நின்ற நீராய்! 
     செய்வது புகல்தி' என்றான்.
*


பொருள்

உன்வயின் உறுதி நோக்கி = உன் அழிவை நினைத்து

உண்மையின் உணர்த்தினேன் = உண்மையை உணர்த்தினேன்

மற்று = மற்றபடி

என்வயின் இறுதி நோக்கி = என் அழிவை நினைத்து

அச்சத்தால் = பயத்தால்

இசைத்தேன் அல்லேன் = சொல்லவில்லை

நன்மையும் = நல்லது கூட

தீமை அன்றே = தீமை போல தெரியும் அல்லவா ?

நாசம் வந்து உற்ற போது? = நாசம் வந்தபோது

புன்மையின் நின்ற நீராய்! = தீய வழியில் செல்பவனே

செய்வது புகல்தி' என்றான் = நான் என்ன செய்ய வேண்டும் சொல் என்றான்.

உன்னிப்பாக கவனிக்க வேண்டியது, நமக்கு மற்றவர்கள் சொல்வது எரிச்சலும் கோபமும் தந்தால், ஒரு நிமிடம் நிதானமாக யோசிக்க வேண்டும்.  ஏன் கோபம் வருகிறது? ஏன் எரிச்சல் வருகிறது. சொன்னதில் நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா என்று.

மாரீசன் அவ்வளவு நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னான்.

இராவணன் மண்டையில் ஏறவே இல்லை. ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து இருந்தால், மிகப் பெரிய அழிவில் இருந்து தப்பி இருக்கலாம்.

காமம் கண்ணை மறைத்தது.

சிந்தனையில் தெளிவு வேண்டும்.

ஆயிரம் புத்தகம் படிக்கலாம். ஆயிரம் சொற் பொழிவு கேட்கலாம். மனதில் அழுக்கு இருந்தால், நல்லவை எதுவும் உள்ளே போகாது.

இராவணன் படிக்காத புத்தகமா ? கேட்காத அறிவுரையா? மாரீசன் வரை சொல்லிப் பார்த்தாகி விட்டது.

எனக்கு வேண்டியது சீதை என்று இராவணன் பிடிவாதமாக இருந்தான்.

இராவணனை விடுங்கள்.நடந்து முடிந்த கதை.

நம் கதையைப் பார்ப்போம்.

எவ்வளவு வாசிக்கிறோம். எவ்வளவு கேட்கிறோம். வாசித்தது, கேட்டது படி நடக்கிறோமா ? ஏதேதோ சாக்கு போக்கி சொல்லி, நாம் நினைத்தபடி தான் வாழ்கிறோம்.

அதெல்லாம் சரிப்படாது, நடை முறைக்கு ஒத்து வராது, practical இல்லை, என்று மெத்த படித்த மேதாவிகள் போல அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் சென்று விடுகிறோம்.

நமக்கு இராவணனுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா ?

அவனுக்கு சீதை, நமக்கு வேறு ஏதோ ஒன்று.

பொருள் தான் மாறுகிறதே தவிர, செயல் , மனம் எல்லாம் ஒன்று தான்.

அற நூல்களை கற்றும் கேட்டும் அதன் படி நடக்காமல் இருப்பது அரக்க குணம்.

நல்லவைகளை ஒதுக்காதீர்க்கள்.

அவற்றை வாழ்வோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை சிறக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post_46.html




நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே 


நமது வாழ்நாளில் பெரும் பகுதி பொருள் திரட்டவே போய் விடுகிறது. முன்பெல்லாம் ஆண்கள் தான் பொருள் தேடி அலைந்தார்கள். இப்போது பெண்களும். பெண்கள் நேரடியாக பொருள் தேடாவிட்டாலும், அந்த தேடலுக்கு பெரும் உதவி செய்கிறார்கள். எனவே, ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து விடுகிறார்கள்.

சரி. பொருள் வேண்டும் தானே. சாப்பிடணும், உடை, உறை , மருத்துவம், பிள்ளைகள் படிப்பு இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா ?

வேண்டும் தான். வேலை செய்யத்தான் வேண்டும். ஆனால், வேலை மட்டும் செய்தால் போதுமா ? மேல் அதிகாரியை வணங்க வேண்டும்.  அவர் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு சண்டை பிடிக்கக் கூடாது. கீழே வேலை செய்பவர்களை அணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி பலப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதுதானா வாழ்க்கை ? பல் இளிப்பதும் , பணம் சம்பாதிப்பதும் மட்டும் தானா வாழ்க்கை?

"உன் நேரத்தை, திறமையை பணம் சம்பாதிக்க வேண்டி செல்வர்கள் வீட்டு வாசலில் பழியாக கிடக்காதே. அதை இறை தேடவும் செலவழி என்கிறார்" பிள்ளை பெருமாள் ஐயங்கார்.


பாடல்

சென்றுசென்றுசெல்வஞ்செருக்குவார்வாயிறொறு
நின்றுநின்றுதூங்குமடநெஞ்சமே - யின்றமிழைக்
கூறைக்குஞ்சோற்றுக்குங்கூறாதே பேறாகச்
சேறைக்குநாயகன்பேர்செப்பு.


பொருள்


சென்று சென்று = ஒவ்வொரு இடமாகச் சென்று

செல்வம் = பணம் , பொருள்

செருக்குவார் = ஆணவம் கொண்டோர்

வாயில் தொரும் = வாசல் படி எல்லாம்

நின்று நின்று = நின்று நின்று

தூங்கு = காத்து கிட

மட நெஞ்சமே = மட நெஞ்சமே

இன்தமிழை = இனிமையான தமிழை

கூரைக்கும் = வீட்டுக்கும்

சோற்றுக்கும் = சோற்றுக்கும்

கூறாதே = கூறாமல்

பேறாக = பெரும் பேறு தரும்

சேறை = திருச் சேறை

நாயகன் = நாயகனாக விளங்கும்

பேர் = நாமத்தை

செப்பு = கூறு


சரி, இந்த ஊருக்கு சேறை என்று ஏன் பெயர் வந்தது ?

ஊழிக் காலத்தில், உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி போய் விட்டதாம். எது போனாலும் போகட்டும், வேதங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ப்ரம்ம தேவர், ஒரு பெரிய பானை செய்து, அதற்குள் இந்த வேதங்கள் எழுதப் பட்ட ஓலை சுவடிகளை வைத்து விடலாம் என்று எண்ணினார். பானை செய்ய பல  இடங்களில் மண் எடுத்தார். பானை சரியாக வரவில்லை. கடைசியில்  இந்த இடத்தில் எடுத்த சேறு (மண்) தான் சரியாக வந்ததாம். எனவே, இந்த இடம் சேறை அல்லது திருச் சேறை என்று அழைக்கப்பட்டது.




இந்த ஒரு தலத்தில் தான் பெருமாள் ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார். வேறு எங்கும் இப்படி ஒரு காட்சி கிடையாது. ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்ற ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள்
          துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
          என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்
          திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
ஐ யறிவும் கொண்டானுக் காளாணார்க்
          காளாமென் அன்பு தானே (1584)
                        பெரியதிருமொழி 7-4-7

இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

கும்பகோணம், திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது. நாச்சியார் கோவிலுக்குப் பக்கம்.

இன்னும் கொஞ்சம் சிறப்புகள் உண்டு. நேரில் போய் பாருங்கள். கொஞ்சம் சுவாரசியம்  இருக்கட்டும்.

சரிதானே !

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_15.html


Wednesday, February 14, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2


பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

இந்த ஊர் எங்கே இருக்கிறது? இந்த ஊரின் சிறப்புகள் என்ன?


திரு அழுந்தூர் என்று கூறப் பட்டாலும், இதன் ஆதிப் பெயர் தேரழுந்தூர். 

ஒரு முறை ஒரு கந்தர்வன் , தேவர்களுக்கு எதிராக தவறான ஒரு தீர்ப்பு சொன்னானாம். அதனால் கோபம் கொண்ட தேவர்கள், பறக்கும் அவன் தேர் தரையில் அழுந்திப் போக என்று சாபம் கொடுத்து விட்டார்களாம். அந்த தேர் அழுந்திய ஊர்  , தேர் அழுந்தூர் என்று ஆகி, தேரழுந்தூர் என்று ஆகி, அழுந்தூர் என்று ஆகி, பின்னர் திரு அழுந்தூர் என்று ஆகிவிட்டது. 

அதெல்லாம் விடுங்கள். 

இந்த ஊருக்கு இன்னொரு முக்கிய , மிக மிக முக்கிய சிறப்பு உண்டு. 

கவி சக்கரவர்த்தி கம்பன் இந்த ஊரில் தான் பிறந்தாராம். அந்த ஊர் மண்ணை மிதித்தால் உடல் சிலிர்க்கும் அல்லவா. ஒரு காலத்தில், கம்பர் இந்த ஊரில்  இருந்திருக்கிறார் , இந்த மண்ணில் நடந்திருக்கிறார் என்று நினைக்கும் போது  எவ்வளவு பெருமையாக , மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு இங்கே மணி மண்டபம் இருக்கிறது. 

அதற்கும் மேலாக, கம்பரின் மனைவிக்கும் ஒரு ஒரு சிலை இருக்கிறது. கம்பரின் மனைவியை  நாம் நினைத்தாவது பார்த்தது உண்டா?


*“கம்பன் பிறந்தவூர், 
காவிரி தங்குமூர்          
கும்பமுனி சாபம் குலைந்தவூர் 
செம்பதுமத்தாதகத்து நாண்முகனும் தாதையும் 
தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

என்ற புலவர் புராணம், இந்த ஊர் கம்பர் பிறந்த ஊர் என்று சொல்லும். 

இந்த ஊரில், பெரிய குளங்கள் இருக்கின்றன. அதில் அன்னப் பறவைகள் வசிக்கின்றன. அன்ன குஞ்சுகள், குளத்தில், அதன் கூட்டில் உறங்குகின்றன. அதன் பெற்றோர் இரை தேடி போய் இருக்கிறார்கள். இதற்கிடையில் அந்த குஞ்சுகள் பசியால் விழித்து அழுகின்றன. அந்த சத்தத்தில் , குழம்பிப் போய் அந்த குளத்தில் உள்ள  மீன்கள் அங்கும் இங்கும் தாவுகின்றனவாம். 

குளம்  என்றா சொன்னேன். தவறு. திருத்திக் கொள்ளுங்கள். குளம் இல்லையாம். நிலமாம். அங்குள்ள நிலங்களில் அவ்வளவு தண்ணீர் இருந்ததாம். நிலத்தில் உள்ள தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாடுமாம். அன்னம் கூடு கட்டி வசிக்குமாம். 

பெரிய திருமொழி காட்டும் தேரழுந்தூர் அது. 

  வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி
          அடியேன் மனம் புகுந்தென்
     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
          நின்றார் நின்ற ஊர் போலும்
     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
          போனகாதல் பெடையோடும்
     அள்ளல் செறுவில் கயல் நாடும்
          அணியார் வயல் சூழ் அழுந்தூரே
                   (1591) பெரியதிருமொழி 7-5-4

ஒரு போக விளைச்சலுக்கு , மற்ற மாநிலத்தை தண்ணீருக்காக எதிர் நோக்கி இருக்கும் இன்றைய நிலையை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

ஒரு காலத்தில் நீர் அவ்வளவு இருந்தது. 

அப்படிப்பட்ட நீர் உள்ள நிலங்கள் சூழ்ந்த இடம் , தேரழுந்தூர். 

இந்த திரு தலத்தை பிரபந்தம் அப்படி கொண்டாடுகிறது. 45 பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

*கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.*

(2066)

*தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,

பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,


நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.*

(2077)


இந்த இடம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

மாயவரத்துக்கு பக்கத்தில் , 2 km  தொலைவில். 

மாயவரம் பக்கம் போனால். ஒரு எட்டு போய்விட்டு வாருங்கள். 

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2.html