Showing posts with label thiruvartupaa. Show all posts
Showing posts with label thiruvartupaa. Show all posts

Wednesday, October 13, 2021

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?


சின்னக் கேள்வி. விடை தெரியுமா?


ஏன் பிறந்தோம், எதற்குப் பிறந்தோம், என்ன சாதிக்கப் பிறந்தோம், பிறந்ததின் நோக்கம் என்ன? 


தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை. 


வள்ளலார், விடை காணாமால் தவிக்கிறார். 


எல்லாம் வல்ல இறைவன், ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் என்னைப் படைத்து இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் அவன் எதையும் செய்ய மாட்டான். அப்படியானால், என்னை ஏன் படைத்தான் என்று விடை காணாமல் தவிக்கிறார். 


"ஒரு சின்னக் குழந்தை. நடக்கும் பருவம் வரவில்லை. தவழும். திடீரென்று மின்சாரம் போய் விடுகிறது. அருகில் யாரும் இல்லை. அந்தக் குழந்தை என்ன செய்யும். பயத்தில் அழும். வேறு என்ன செய்ய முடியும்? 


அந்தக் குழந்தையை விட சிறியவனாக இருக்கிறேன். இந்த அஞ்ஞான இருளில் கிடந்து தவிக்கிறேன். இருள் மட்டும் அல்ல, கரை காண முடியாத கடலில் கிடந்து தவிக்கிறேன். ஏதோ இப்ப கப்பல் உடைந்து கடலில் விழவில்லை. பல காலமாய் இந்தக் கடலில் கிடக்கிறேன். கடலில் தவிக்கும் திரும்பு போல கிடக்கிறேன். எத்தனையோ கொடுமைகள் எல்லாம் செய்து விட்டேன். நான் எதற்காகப் பிறந்தேன் என்று சொல்வாய்" என்று இறைவனை நோக்கிப் பிரார்த்திக்கிறார். 


பாடல் 


 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்

அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்

கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்

களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_13.html


(Click the above link to continue reading)



விளக்கறியா = விளக்கு எங்கு இருக்கிறது, சுவிச் எங்கு இருக்கிறது என்று அறியாத 


இருட்டறையில் = இருண்ட அறையில் 


கவிழ்ந்துகிடந் தழுது விம்முகின்ற = கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற 


 குழவியினும் = குழந்தையை விட 


மிகப்பெரிதும் சிறியேன் = ரொம்ப ரொம்ப சிறியவன் 


அளக்கறியாத் = அளவிட முடியாத 


துயர்க்கடலில் = துயரம் என்ற கடலில் 


விழுந்துநெடுங் காலம்  = விழுந்து, நெடுங் காலம் 


அலைந்தலைந்து = அலைந்து அலைந்து 


மெலிந்த = மெலிந்த 


துரும் பதனின் = துரும்பை விட 


மிகத் துரும்பேன் = கீழான துரும்பானேன் 


கிளக்கறியாக்  = சொல்ல முடியாத 


கொடுமை எலாம் = கொடுமைகள் எல்லாம் 


கிளைத்த = விளைந்த 


பழு மரத்தேன் = பழுத்த மரம் போன்றவன் 


கெடுமதியேன் = கெட்ட மதி கொண்டவன் 


கடுமையினேன் = கடுமையானவன் 


கிறிபேசும் = பொய் பேசும் 


வெறியேன் = வெறி கொண்டவன் 


களக்கறியாப் = குற்றம் அற்ற 


புவியிடை = பூமியில் 


நான் ஏன் பிறந்தேன்  = நான் ஏன் பிறந்தேன் 


அந்தோ = ஐயோ 


கருணை = கருணை உள்ள 


நடத் தரசே = நடனத்துக்கு அரசனே (நடராஜன்) 


நின் கருத்தைஅறி யேனே. = உன் கருத்தை நான் அறிய மாட்டேனே 



ஒரு வரி பட்டினத்தாரை மாற்றியது.


ஒரே ஒரு கேள்வி போதும், வாழ்கையின் திசையை மாற்ற.






Saturday, August 1, 2020

திருவருட்பா - கருணை ஈதோ ?

திருவருட்பா - கருணை ஈதோ ?


ஒன்று அழகாக, நன்றாக இருந்தால் கண் பட்டு விடும் என்று சொல்லுவார்கள்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். பார்ப்பவர் கண்கள், அந்த பொட்டில் போய் நிற்கட்டும் என்று.

கடைகளில் பூசணிக் காய், பெரிய அரக்கன் வடிவம், படிகாரக் கல் என்றல்லாம் வைத்திருப்பார்கள். காரணம் பார்ப்பவர் கண்கள் அவற்றின் மேல் சென்று விடும். அந்தப் பார்வையின் தீய நோக்கம் பாதிக்கப் படாமல் இருக்கட்டும் என்று.

இது நமது ஆழமான நம்பிக்கை.

வள்ளலார் பாடுகிறார்.

"முருகப் பெருமானே , உன்னுடைய அழகான பாதங்களை நான் பார்த்தால், இந்தப் பாவியின் கண் பட்டுவிடும் என்று நினைத்தா உன் பாதங்களை எனக்கு கனவில் கூட காட்டாமல் இருக்கிறாய்? உன்னை எல்லோரும் கருணை உள்ளவன் என்று சொல்கிறார்கள். இதுவா கருணை?"

என்று உருகுகிறார்.


பாடல்

பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

பொருள்

(click the link below to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post.html

பண் ஏறும்  மொழி = இசையுடன் கூடிய பாடல்

 அடியர் = அடியவர்கள்

பரவி  = போற்றி

வாழ்த்தும் = வாழ்த்தும்

பாதமலர் அழகினை  = அழகான உன் பாத மலர்களை

இப் பாவி பார்க்கில் =இந்தப் பாவி பார்த்தால்

கண் ஏறு படும்என்றோ = கண் பட்டு விடும் என்றா

கனவி லேனும் = கனவில் கூட

காட்டென்றால் = காட்டமாட்டாயா என்றால்

காட்டுகிலாய்  = காட்ட மாட்டேன் என்கிறாய்

கருணை ஈதோ = இதுவா கருணை

விண் ஏறும் = விண்ணகத்தில் உள்ள

அரி முதலோர்க் = திருமால் போன்றவர்களுக்கு

கரிய = அரிய, கடினமான

ஞான விளக்கே  = ஞான விளக்கே

என் கண்ணே = என் கண் போன்றவனே

மெய் வீட்டின் வித்தே = மெய்மையின் மூலமே

தண் ஏறு பொழில் = குளிர்ச்சி மிகுந்த சோலைகள் சூழ்ந்த

தணிகை மணியே  = திருத்தணிகையில் வாழும் மணியே

ஜீவ சாட்சியாய்  = உயிருள்ள சாட்சியாய்

நிறைந்தருளும்  = நிறைந்து அருள் செய்யும்

சகச வாழ்வே =  இயல்பான வாழ்வே

எவ்வளவு இனிமையான பாடல் !





Thursday, August 8, 2019

திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்

திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் நாளும் ஒரே இடத்தில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் இறந்து விட்டான். ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, அந்த பிச்சைக்காரனை, அவன் இருந்து பிச்சை எடுத்த இடத்திலேயே புதைப்பது என்று முடிவு செய்து, அங்கே ஒரு குழி வெட்டினார்கள்.

இரண்டு அடி தோண்டி இருப்பார்கள், "நங்" என்று சத்தம் கேட்டது. தோண்டி எடுத்துக் பார்த்தால், ஒரு பொற்குடம் நிறைய தங்கக் காசுகள்.

பெரிய பொக்கிஷத்தை மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறான் அவன்.

அவன் மட்டுமா ?

நாமும் தான் என்கிறார் வள்ளலார்.

"இறைவா, தேவர்கள் எல்லாம் ஏங்க , அவர்களை விட்டு விட்டு நீ வந்து என் மனதில் இருந்து கொண்டாய். மனம் எல்லாம் கள்ளம் நிறைந்த நான் அதை அறியாமல் துன்பத்தில் கிடந்து உழல்கின்றேன்"

என்கிறார்.



வெள்ளிக் குடத்தில் தங்கக் காசுகளை விட, உள்ளத்தில் உள்ள இறைவன் உயர்வு அல்லவா. அது தெரியாமல், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Lion King படத்தில் வரும் சிம்பா போல, தான் ஒரு காட்டுக்கு அரசன் என்று தெரியாமல், பன்றியுடன் சுத்திக் கொண்டிருக்கும் சிங்கம் போல, இறைவன் உள்ளே இருப்பதைத் தெரியாமல், பன்றிகளோடு சுத்திக் கொண்டிருக்கிறோம்.

காரணம் என்ன?

தான் யார் என்று அறிய நினைக்காமல், ஊரில் உள்ளவர்கள் சொல்வதை  கேட்டுக் கொண்டு அதன் படி   செய்வது.

அந்தப் படத்தில் ரஃபிக் என்று ஒரு குரங்கு வந்து சொல்லும்..."சிம்பா நீ யார் தெரியுமா " என்று. அப்படி வரும் ஆச்சாரியர்களை துணை கொண்டு, அவர்கள் சொல்வதைக் கேட்டு, நாம் யார் என்று அறிய வேண்டும்.

"தன் பெருமை தான் அறியா சங்கரனார்" போல, நம் பெருமை அறியாமல் உழல்கிறோம்.

பாடல்

விண்ணறாது வாழ் வேந்த னாதியர் 
        வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக் 
    கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் 
        கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் 
    எண்ணறாத் துயர்க் கடலுண் மூழ்கியே 
        இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் 
    தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ் 
        சாமியே திருத்தணிகை நாதனே 

பொருள்


விண்ணறாது = விண்ணில் இருக்காமல்

வாழ் = அங்கே வாழ்கின்ற

வேந்த னாதியர்  = இந்திரன் மற்றும் தேவர்கள்

வேண்டி யேங்கவும் = வேண்டி ஏங்கவும்

விட்டென்= (அவர்களை) விட்டு என்

னெஞ்சகக்  = நெஞ்சு அகத்தில்

கண்ணறாது = கண் இமைக்கும் நேரம் கூட இடைவெளி இல்லாமல்

நீ கலந்து நிற்பதைக்  = நீ என்னுள் கலந்து நிற்பதை

கள்ள நாயினேன் = கள்ளத்தனம் நிறைந்த நாய் போன்ற  நான்

கண்டு கொண்டிலேன் = கண்டு கொள்ளவில்லை

எண்ணறாத் = எண்ணில் அடங்காத

துயர்க் கடலுண் மூழ்கியே  = துயரக் கடலுழ் மூழ்கி

இயங்கி = இயங்கி, செயல் பட்டு

மாழ்குவேன் = மாளுவேன்

யாது செய்குவேன்  = என்ன செய்வேன் ?

தண்ணறாப்  = தணல்  ஆற

பொழில் குலவும் = சோலைகள் சூழும்

போரிவாழ்  = திருப்போரில் வாழும்

சாமியே  = சாமியே (முருகப் பெருமானே)

திருத்தணிகை நாதனே  = திருத்தணிகையின் தலைவனே

நமக்குள் உள்ள ஆற்றலை நாம் அறிந்து  கொள்ள முடியாமல் இருக்கக் காரணம், கள்ளத்தனம்.

பொய், சூது, வாது, ஆணவம், போன்ற கள்ளத்தனங்கள் நம்மை , நம்முடைய உண்மையான   நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.


இதையேதான் மணிவாசகரும் சொல்கிறார்

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்று சிவபுராணத்தில்.


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'

உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம் , வாய் கோபுர வாசல் என்பார் திருமூலர்

"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்" என்பார் சிவ வாக்கியார்


நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


சிந்திப்போம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_8.html 

Tuesday, July 30, 2019

திருவருட்பா - தயவு செயல் வேண்டும்

திருவருட்பா - தயவு செயல் வேண்டும் 


நம்மால் என்ன செய்ய முடியும்.

தலை முடி நரைக்கிறது. அதை நிறுத்த முடியுமா? நம் தலை முடி, நம் கட்டுப்பாட்டில் இல்லை.

நேற்று படித்தது இன்று மறந்து விடுகிறது.

இதில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், சில பல புத்தகங்களை படித்து, தினம் சில பாடல்களை மனப்பாடமாக கிளிப் பிள்ளை போல் ஒப்பித்து, கற்பூரம், ஊதுவத்தி கொளுத்தி இது போன்ற சடங்குகளை செய்து நேரே ஸ்வர்கம் போய் விடலாம் என்று.

நம்முடைய ஆணவம்தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது.

நினைத்த நேரம் தூங்க முடிவதில்லை, ஆசைப் பட்டதை சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டதை எல்லாம்  செரிக்க முடிவதில்லை, நம் கணவனோ, மனைவியோ, பிள்ளையோ நாம் சொல்வதை கேட்பதில்லை, இருந்தும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நாம் பெரிய ஆள் என்று.

நாம் விரும்பியதை நம்மால் செய்ய முடியுமா ? நினைத்ததை பேச முடியுமா ? மனதில் பட்டதை சொல்லவாவது முடியுமா ?

நம்மிடம் ஒரு சுதந்திரமும் இல்லை.

வள்ளலார் சொல்கிறார், இறைவனிடம்

"என்னால் ஒரு துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது. எனக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. இறைவா, நீ தான் பெரிய ஆள். தயவு செய்து எனக்கு உதவி செய். உன் அருள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது"

பாடல்

“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

பொருள்

“என்னாலோர் = என்னால் ஒரு

துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே = ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாதே

எல்லாஞ் = எல்லாவற்றையும்

செய் வல்லவன் = செய்யத்தக்க வல்லவன்

என்றெல்லாரும் = என்று எல்லாரும்

புகழும் = புகழும்

நின்னால் = உன்னால்

இவ்வுலகிடை = இந்த உலகத்தில்

நான் வாழ்கின்றேன் அரசே = நான் வாழ்கின்றேன் அரசே

நின்னருள் = உன்னுடைய அருளை

பெற்றழியாத = பெற்று , அழியாத

நிலையை அடைந்திடவென் = நிலையை அடைந்திட என்

தன்னாலோர் = தன்னால் ஓர்

சுதந்தரமும் = சுதந்திரமும்

இல்லை = இல்லை

கண்டாய் = கண்டு கொள்வாய்

நினது = உன்

சகல சுதந்திரத்தை = அனைத்து சுதந்திரத்தையும்

யென்பால் = என் பால்

தயவு செயல் வேண்டும்” = தயவு செயல் வேண்டும்

அதாவது, வள்ளலார் சொல்கிறார், எனக்குத்தான் சுதந்திரம் எதுவும் இல்லை. உனக்குத்தான்  எல்லா சுதந்திரமும் இருக்கிறதே. எனக்கு உதவி செய்ய உனக்கு என்ன  தடை. யார் உன்னை என்ன சொல்ல முடியும். கவலைப் படாமல், தயவுசெய்து எனக்கு உதவி செய் என்கிறார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_30.html

Wednesday, January 31, 2018

திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்

திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன் 


பக்திக்கு தடையாக இருப்பது பல. அதில் முதலாவதாக இருப்பது உணவு.

சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தால், வேறு எதிலும் மனம் ஓடாது.

தமிழிலே நோய் என்றும் பிணி என்றும் இரண்டு சொல் உண்டு.

நோய் என்றால் மருந்து உண்டால் போய் விடும்.

பிணி என்ன செய்தாலும் போகாது.

பிறவிப் பிணி என்பார்கள்.

பசி பிணி.

காலையில் ஆறு மணிக்கு ஆறு இட்லி உள்ளே தள்ளினாலும், பனிரெண்டு மணிக்கு மீண்டும் பசிக்கும்.

பசிக்கு சாப்பிட்டால் பரவாயில்லை. ருசிக்கு சாப்பிட ஆரம்பித்ததால் வந்தது வினை. மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

அதிகம் சாப்பிட சாப்பிட புத்தி மந்திக்கிறது. நோய் வந்து சேர்கிறது. பின் அதற்கு வைத்தியம் என்று வாழ் நாள் கழிகிறது.

சாப்பாட்டின் மேல் உள்ள ஆசையை விட முடியவில்லையே என் செய்வேன் என்று வருந்துகிறார் வள்ளலார்.

"பால் சோறு என்றால் வயிறு முட்ட சாப்பிடுவேன். அதற்கு மேல் ஒன்றிரண்டு வாழைப் பழம், பலா சுளைகளையும் உள்ளே தள்ளுவேன். பழத்தின் தோலைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். வால் மட்டும் தான் எனக்கு எல்லை. இருந்தால் குரங்கு போல வனத்தில் இருந்திருப்பேன் " என்கிறார்.


பாடல்



பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச் 
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின் 
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் 
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய். 


பொருள்


பாலிலே கலந்த சோறெனில் = எல்லாரும் சோற்றில் பாலை இட்டு பிசைவார்கள். இவர், பாலில் சோற்றை இடுகிறார். அவ்வளவு ஆர்வம், சாப்பாட்டில்.

விரைந்தே = வேகமாக சென்று. வேறு யாரும் நமக்கு முன்னால் சாப்பிட்டு விடுவார்களோ என்று  முந்திக் கொண்டு

பத்தியால் = ஆர்வத்தால்

ஒருபெரு வயிற்றுச் சாலிலே = சால் என்றால் அண்டா போன்ற பெரிய பாத்திரம். அண்டா போன்ற பெரிய வயிற்றிலே

அடைக்கத் தடைபடேன் = வயிறு நிறைய சாப்பிடுவேன் என்று சொல்லவில்லை. வயிற்றல் அடைக்க தடை சொல்ல மாட்டேன். எவ்வளவு போட்டாலும், அமுக்கி அமுக்கி அடைத்துக் கொள்வேன். போதும், வேண்டாம் என்று தடை சொல்ல மாட்டேன்.


வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = தகுதியான வாழை, மா, பலா முதலிய பழங்களை

தோலிலே எனினும் = அவற்றின் தோலாக இருந்தாலும்

கிள்ளிஓர் சிறிதும் = கிள்ளி ஒரு சிறிது கூட

சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = பக்கத்தில் இருப்பவருக்கு தரத் துணிய மாட்டேன்

வாலிலேன் = வால் இல்லை

இருக்கில் = இருந்திருந்தால்

வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

என்செய்வேன் எந்தாய் = என்செய்வேன், என் தந்தையே

சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆனால், கொடுக்கும் குணம் குறையும். எல்லாம் எனக்கே வேண்டும் என்று பேராசை வரும்.

நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால்.

இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும் ? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம், மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒருத்தனுக்கு கொடுத்தால், பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.

எனவே தான் ஒளவை , அறம் செய்ய விரும்பு என்றால். பயம் போக வேண்டும்.

வள்ளலார் கூறுகிறார், பழத்தின் தோலை கூட மற்றவர்களுக்குத் தர துணிய மாட்டேன் என்று.

எல்லோரிடமும் இரக்கம் இருக்கும். அன்பு இருக்கும். கருணை இருக்கும். ஆனால், ஆயிரம் ரூபாய் நன்கொடை தர மனம் வராது. அன்பு இல்லாமல் அல்ல. துணிவு இல்லாதாதால்.

பக்தி, இறை உணர்வு வர வேண்டும் என்றால் சாப்பாட்டின் மேல் உள்ள ஆர்வம் குறைய வேண்டும்.


உணவின் அளவை குறைத்துப் பாருங்கள்.

மனம் உறுதி பெறுவதை உணர்வீர்கள்.

உடல் உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.

பசி என்றால் என்ன என்று அறிவீர்கள். மற்றவர்களின் பசியை உணர்வீர்கள். உதவும் எண்ணம் மேலோங்கும்.

கருணை பிறக்கும்.

அது உங்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

செல்லட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_53.html





Wednesday, May 17, 2017

திருவருட்பா - பதைத்தேன்

திருவருட்பா - பதைத்தேன் 


நாளும் பல கொடிய செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் காதிலும் கண்ணிலும் விழுந்து கொண்டே இருக்கின்றன.

தொலைக் காட்சிகளில் , எங்கே நாம் மறந்து விடுவோமோ என்று காண்பித்த செய்திகளை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன என்றால்,

ஒன்று, கொடிய செய்திகளை கேட்டு கேட்டு மனம் மரத்துப் போகும். இது தான் தினம் நடக்கிறதே. வழக்கமான ஒன்று தான் என்று நினைக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாவது, தீய செயல்களில் நம்மை அறியாமலேயே ஒரு சுவை வந்து விடும். நல்லவன் கூட , அட இப்படி செய்யலாமா ? நாமும் செய்து பார்த்தால் என்ன ? என்று ஒரு ஆர்வத்தை தூண்டி விடும்.

தீமைகளை கண்டு உள்ளம் பதை பதைத்தால் தான் அதை செய்யாமல் இருப்போம். செய்பவர்களை விட்டு விலகி நிற்போம். தீயவைகள் சாதாரணமானவை , எப்போதும் நடக்கும் ஒன்று தான் நினைத்து விட்டால், தீமைகளை தட்டிக் கேட்கும் மனம் போய்விடும். நாமும் செய்யலாம் என்றும் நினைக்கத் தொடங்கி விடுவோம்.

வள்ளலார் கடற்கரையில் நடந்து செல்கிறார். அங்கு மீன் பிடிக்கும் வலை, தூண்டில் எல்லாம் வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள். நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ? ஏதோ வலை, தூண்டில் எல்லாம் கிடக்கிறது என்று நினைப்போம்.

ஆனால், வள்ளலார் அவற்றைக் கண்டு மனம் பதைக்கிறார். ஐயோ, இந்த கொலை கருவிகளைக் கொண்டு எவ்வளவு மீன்களைப் பிடிப்பார்கள். அவற்றை கொல்வார்கள் . அப்போது அந்த மீன்கள் எவ்வளவு துடிக்கும். தூண்டிலில் சிக்கிய மீன்  எப்படி தவிக்கும் , தொண்டையில் முள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்று நினைத்து பதறுகிறார்.

கொடியவர்கள் மற்றவர்களை கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். மற்ற உயிர்கள் பதைக்கும் போதெல்லாம் நானும் பயந்தேன்.  வலையையும் , தூண்டிலையும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன்  என்கிறார் வள்ளலார்

பாடல்

துண்ணெனக் கொடியோர் பிற வுயிர்  கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் 
கண்ணினால் ஐயோ பிற வுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திரு உள்ளம் அறியும் 


பொருள்

துண்ணெனக் = துணுக்குறும் படி

கொடியோர் = கொடியவர்கள்

பிற வுயிர் = பிற உயிர்களை

கொல்லத் தொடங்கிய = கொல்லத் தொடங்கிய

போதெல்லாம் பயந்தேன் = போதெல்லாம் பயம் கொண்டேன்

கண்ணினால் = கண்ணால்

ஐயோ = ஐயோ

பிற வுயிர் = மற்ற உயிர்கள்

பதைக்கக் கண்ட காலத்திலும் = பதைக்கின்ற காலத்திலும்

பதைத்தேன் = பதைப்பு அடைந்தேன்

மண்ணினில் = பூமியில்

வலையும் = (மீன் பிடிக்கும்) வலையும்

தூண்டிலும் = தூண்டிலும்

கண்ணி வகைகளும் = பறைவைகளைப் பிடிக்கும் கண்ணி வகைகளை

கண்ட போதெல்லாம் = பார்கின்றபோதெல்லாம்

எண்ணி = அவற்றை எண்ணி

என் உள்ளம் = எனது மனம்

நடுங்கிய நடுக்கம் = நடுங்கிய நடுக்கம்

எந்தை = என் தந்தையாகிய

நின் = உன்

திரு உள்ளம் = திரு உள்ளம்

அறியும் = அறியும்

துப்பாக்கியை கண்டால் மனம் பதற வேண்டும்.  கறி வெட்டும் கத்தியைக் கண்டால் மனம்  பதைக்க வேண்டும்.

உயிர்கள் துன்பப் படும் போது மட்டும் அல்ல, இனி துன்பப் படுமே என்று நினைத்து வருந்துகிறார் வள்ளுவர்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

மற்ற உயிர்களை நம் உயிர் போல் நினைக்க வேண்டும்.

அருளின், கருணையின் உச்சம் இது.

அந்த உயர்ந்த அன்பு நம் மனத்திலும் சுரக்கட்டும்.



Wednesday, November 30, 2016

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?


பாடல்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்  
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்  
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற  
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்  
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்  
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்  
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்  
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!

பொருள்

பொய்விளக்கப் புகுகின்றீர் - நமக்கு எது சரி , எது தவறு என்று சரியாகத் தெரிவதில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு , அவற்றை மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று. ஒரு வேளை நாம் மெய் என்று நினைத்துக் கொண்டிருப்பது பொய்யாக இருந்தால் ? வாழ் நாள் எல்லாம் பொய்யை விளக்கிக் கொண்டு இருந்திருப்போம் அல்லவா ? அது சரியா ? நாம் மெய் என்று நம்புவதை மெய் தானா என்று அறிய வேண்டாமா ? யாரோ சொன்னார்கள், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தோம் என்பதற்காக அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா ?


போது கழிக்கின்றீர் = பொழுதை வீணே கழிக்கின்றோம். டிவி, whatsapp , facebook , வார மற்றும் மாத இதழ்கள் , சினிமா , வெட்டி அரட்டை என்று பொழுதை வீணாக கழித்துக் கொண்டு இருக்கிறோம்.

புலைகொலைகள் புரிகின்றீர் = புன்மையான கொலைகள் செய்கின்றோம். நாம் உண்பதற்காக  மற்ற உயிர்களை கொல்கிறோம் . நான் தான் சைவம் ஆயிற்றியே , மாமிசம் சாப்பிடுவது இல்லையே என்று சொல்பவர்கள் கூட , தங்கள் தேவைக்காக  காலணி , கையுறை, belt , suitcase , wallet , purse போன்ற தேவைகளுக்காக  உயிர்க்கொலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காபி டீ குடிப்பதற்காக  நாம் உபயோகப் படுத்தும் பாலுக்காக மாடுகள் எவ்வளவு துன்பப் படுத்தப்  படுகின்றன. உயிர் கொலை இல்லாவிட்டாலும், ஒருவரின் மனதை  எத்தனை விதங்களில் கொலை செய்கிறோம். கடின வார்த்தைகளால், அவர்களை உதாசீனப் படுத்துவதின் மூலம் எவ்வளவோ மனக் கொலைகள் செய்கிறோம்.

கலகல என்கின்றீர் = அர்த்தமில்லாத சிரிப்பு, பேச்சு நாளும் எத்தனை.

கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் = நாமும் சில பல நல்ல புத்தங்களை படித்திருப்போம்; நல்லவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி ஒன்றும் சுத்த  முட்டாளாக நாம் இருப்பது இல்லை. கீதை, குறள்  போன்ற உயர்ந்த நூல்களை  பற்றி கொஞ்சம் அறிந்திருப்போம். இருந்தும், அவை எல்லாம் கேட்க/படிக்க நல்லா இருக்கு. நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி அவற்றை  ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் செல்கிறோம். கையில் விளக்கு இருந்தும்  பாழும் கிணற்றில் விழும் அறிவிலிகளைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கருத்திருந்தும் கருதீர் = அறிவு இருக்கிறது. நல்லது கெட்டது தெரிகிறது. இருந்தும் அவற்றை  கடை பிடிப்பது இல்லை. சின்ன உதாரணம், அதிகமாக  இனிப்பு உண்ணக் கூடாது என்று தெரிகிறது. இருந்தும் சமயம் கிடைக்கும் போது  விடுவது இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் என்று உள்ளே தள்ளி விடுகிறோம். கருத்து இருந்தும் கருதாமல் விட்டு விடுகிறோம்.

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ  = ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம்  நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும்  நாம் நினைத்துக் கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம் வர வேண்டாமா ?

கொடிய முயற்றுலகீர்  = கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும்  உலகத்தீரே

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் = உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன்  வரும்போது

மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே = அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது  நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்

என்கிறார் வள்ளலார்.

பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான் என்று உணர்ந்து செயல்பட்டால்  ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார் வள்ளல் பெருமான்.

சிந்திப்போம்.


Wednesday, August 26, 2015

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள்

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள் 


இறைவன் இல்லை.

பாவ புண்ணியம் இல்லை.

பக்தியும் முக்தியும் சும்மா கட்டுக் கதைகள்.

தவமும், விரதமும் வெட்டி வேலை.

இதையெல்லாம் விட்டு விட்டு, வாழ்க்கையை அனுபவிக்க வாருங்கள்....நன்றாக உண்டு, நல்ல உடை உடுத்து, பெண்களோடு சேர்ந்து கலந்து இன்பம் அனுபவிப்பதுதான் வாழ்க்கை. இது தான் மாம் வாழ்வில் கை மேல் கண்ட பலன். மற்றவை எல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும் கயவர்களின் பால் சேராமல் இருக்க எனக்கு அருள் செய்வாய் என்று முருகனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

எல்லாம் பொருளால் ஆனது. பொருள்களைத் தாண்டி எதுவும் இல்லை என்று கூறுபவரக்ளை கயவர்கள் என்கிறார் வள்ளலார்.

இந்த உலகில் பொருள்களைத் தாண்டி வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அறிய வேண்டும். அப்படி அறியாமல், உலக இன்பமே பேரின்பம் என்று அலையும் கயவர்களோடு என்ன கூட்டு இனியே என்கிறார் வள்ளலார்.

பாடல்

 பரமேது வினைசெயும் பயனேது பதியேது 
         பசுவேது பாச மேது 
         பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது 
         பாவ புண்ணியங்க ளேது 
    வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை 
         மனம்விரும் புணவுண்டு நல் 
         வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு 
         மலர் சூடி விளையாடி மேற் 
    கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரொடு 
         கலந்து மகிழ்கின்ற சுகமே 
         கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங் 
         கயவரைக் கூடா தருள் 
    தரமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
         தலமோங்கு கந்த வேளே 
         தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
         சண்முகத் தெய்வ மணியே. 

பொருள்

 பரமேது = பரம் ஏது ? பரம் என்றால் ஆதி என்று பொருள். பரம்பரை என்றால் ரொம்ப காலமாய் வருவது. பரம சிவன். பர பிரும்மம்.

வினைசெயும் பயனேது = நல் வினை, தீ வினை இவற்றால் விளையும் பயன் ஏது ?

பதியேது = பதி ஏது  ? எல்லாவற்றிற்கும் தலைவன், ஆண்டவன் ஏது  ?

பசுவேது = பசு என்றால் அடிமை. ஆண்டான் அடிமை ஏது  ? கடவுள் , பக்தன் என்பதல்லாம் ஏது  ?

 பாச மேது  = பதிக்கும், பசுவுக்கும் இடையில் உள்ள பாசம் ஏது ?

பத்தியேது  = பக்தி என்றால் என்ன

அடைகின்ற முத்தியேது = அதன் மூலம் அடையும் முக்தி என்றால் என்ன ?

அருளேது = இறைவன் அருள் என்றால் என்ன ?

பாவ புண்ணியங்க ளேது  = பாவ புண்ணியங்கள் என்றால் என்ன ?

வரமேது தவமேது விரதமேது  = வரம், தவம், விரதம் என்றால் என்ன ?

ஒன்றுமிலை = இவையெல்லாம் ஒன்றும் இல்லை

மனம் விரும் புணவுண்டு = மனம் விரும்பும் உணவு உண்டு

 நல் வத்திர மணிந்து = நல்ல துணிகளை அணிந்து

மட மாதர்தமை நாடி = பெண்களை நாடி

நறு மலர் சூடி = வாசனையான மலர்களை சூடி

விளையாடி = விளையாடி

மேற் கரமேவ விட்டு = கையை அவர்கள் மேல் படர விட்டு

முலை தொட்டு  = அந்தப் பெண்களின் மார்புகளைத் தொட்டு

வாழ்ந்தவரொடு = வாழ்ந்து அவரோடு

கலந்து மகிழ்கின்ற சுகமே = கலந்து மகிழ்கின்ற சுகமே 
       
கண்கண்ட சுகமிதே  = கண் கண்ட சுகம் இதே

கைகண்ட பலனெனுங் = இதுவே கை கண்ட பலன் என்று சொல்லும்

கயவரைக் கூடா தருள் = கயவர்களை கூடாமல் இருக்க அருள்

தர = தருவதற்கு

மேவு = இருக்கும்

சென்னையிற் = சென்னையில்

கந்த கோட்டத்துள் = கந்த கோட்டத்தில்

வளர் = வளரும், அல்லது உறையும்

தலமோங்கு கந்த வேளே  = அதற்கு பெருமை செய்யும் கந்த வேளே

 தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.  =  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.

உணவு, உடை, ஆண் பெண் உறவு இவற்றைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லையா ?

சிந்திக்க வேண்டிய விஷயம்.

Monday, October 27, 2014

திருவருட்பா - மையிட்ட கண்ணியர்

திருவருட்பா - மையிட்ட கண்ணியர் 



நம் கண் எதில் இருக்கிறதோ, மனமும் அதிலேயே  இருக்கும்.

மனம் பூராவும், பெண்கள் பின்னே. மையிட்ட கண்களைக் கொண்ட பெண்களின் பின்னே போகிறது மனம். மனம் பெண்ணின் பின்னால் போனால் எங்கே அவன் அருளைக் காண்பது ? மனம் அதில் இருந்து விடு பட்டால் அல்லவா மற்றவற்றைப் பற்றி நினைக்க முடியும் ?

பாடல்

மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட 
          வாழ்வின் மதிமயங்கிக் 
     கையிட்ட நானும்உன் மெய்யிட்ட 
          சீரருள் காண்குவனோ 
     பையிட்ட பாம்பணி யையிட்ட 
          மேனியும் பத்தருள்ள 
     மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட 
          வேலுங்கொள் முன்னவனே. 

பொருள்

மையிட்ட = மை இட்ட

கண்ணியர் = கண்களை கொண்ட பெண்கள்

பொய்யிட்ட = பொய் நிறைந்த

வாழ்வின் = வாழ்வில்

மதி மயங்கிக் = மதி மயங்கி

கையிட்ட நானும் = அதைக் கையில் கொண்ட நானும்

உன் மெய்யிட்ட = உன் உண்மை நிறைந்த

சீரருள் = சிறப்பான அருளைக்

 காண்குவனோ = பார்ப்பேனா ?

பையிட்ட = படம் எடுக்கும்

பாம்பணி யையிட்ட = பாம்பை அணிகலனாகக் கொண்ட

மேனியும் = உடலும்

பத்தருள்ள = பக்தருள்ளதில்

மொய்யிட்ட = இடம் பெற்ற

காலுஞ் = திருவடிகளும்

செவ் வையிட்ட = சிறந்த கூர்மையான

வேலுங்கொள் முன்னவனே = திரிசூலத்தைக் கொண்ட முதல்வனே


Tuesday, June 25, 2013

திருவருட்பா - தடைகள்

திருவருட்பா - தடைகள் 


 

சில பேர் இருக்கிறார்கள் ... எந்த வேலை சொன்னாலும் அதை ஏன் செய்ய முடியாது என்று கூறித் திரிவார்கள்.

காலேஜ் முடிச்சப்பறம் ஏன் மேல படிக்கல ? வீடு நிலைமை சரியில்லை.

சும்மாதான வீட்டுல உட்கார்ந்து இருக்க - உருப்படியா ஏதாவது செய்யக் கூடாதா என்றால் - என் மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பாரு என்று சொல்வார்கள்.

வேலை செய்யாமல் இருக்க ஏதாவது ஒரு தடை சொல்லித் திரிவது.

காரணமா கிடைக்காது வேலை செய்யாமல் இருக்க.

மழை பெய்தது, ஒரே கூட்டமா இருந்தது, உடம்பு சரியில்லை ...இப்படி ஏதாவது சாக்கு.

வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய் விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால் ஒரு தடையும் இல்லை...இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அவருக்கே தெரியவில்லை ஏன் என்று. இப்படி தடை சொல்லி சொல்லி   பழகி வேலை செய்யவே முடிய மாட்டேங்குது. என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று புலம்புகிறார்.

வள்ளலார் துறவிதான். இப்படி உலகம் இருக்கிறதென்று தன்னை கற்பனை பண்ணிச் சொல்கிறார் அடிகளார்.

தாய்தடை என்றேன் பின்னர்த்
          தாரமே தடைஎன் றேன்நான்
     சேய்தடை என்றேன் இந்தச்
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
     தோய்தடைச் சிறியேன் இன்னுந்
          துறந்திலேன் எனைத் தடுக்க
     ஏய்தடை யாதோ எந்தாய்
          என்செய்கேன் என்செய் கேனே.

தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். தடையே இல்லாத போதுதான் வேலை செய்வேன் என்று  நினைத்து இருந்தால் ஒரு  நடக்காது. அது மட்டுமல்ல , எல்லா தடைகளும் விலகினாலும் எப்படி வேலை செய்வது என்று தெரியாது. ஏன் என்றால் இதுவரை வேலை செய்து பழகவில்லையே....

எனவே, தடை ஒரு பக்கம் இருக்கட்டும்....வேலையை ஆரம்பியுங்கள்.

வெற்றி உங்களுக்கே.


Friday, June 15, 2012

திருவருட்பா - கண்ணேறு


திருவருட்பா - கண்ணேறு 


இறைவா உன் திருவடி மிக மிக அழகாக இருக்கும்.

அதை பார்த்தால் அந்த அழகில் மயங்கி விடுவேன்.

அப்படி மயங்கி மனதை பறி கொடுத்து அந்த திருவடியில் மன லயித்து போனால், என் கண்ணே பட்டு விடும்.

அதனால் தான் நீ எனக்கு உன் திருவடியை கனவிலும் கூட காட்ட மறுக்கிறாயா என்று உருகுகிறார் வல்லாளர்