Showing posts with label திரு வாசகம். Show all posts
Showing posts with label திரு வாசகம். Show all posts

Saturday, October 5, 2019

திருவாசகம் - இமைப்பொழுதும்

திருவாசகம் - இமைப்பொழுதும் 


திருவாசகத்தை மற்றவர்களும் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் திருவாசகத்தின் மேல் ஆர்வம் கொண்டு மேலும் படிக்க வழி கோல முன்பு திருவாசகம் பற்றி சில பிளாகுகள் எழுதி இருந்தேன்.

மீண்டும் மீண்டும் படிக்கும் போது, முன்பு எழுதியது எவ்வளவு ஒரு புரிதல் இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று கூச்சம் வருகிறது. அவற்றை எல்லாம் நீக்கி விடலாமா என்றும் தோன்றுகிறது.

திருவாசகத்தின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு பொருள் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது. வாசிக்க வாசிக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகிறது.

நீங்களே அதை படித்து நேரடியாக உணர்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

திருவாசகத்தில், முதலில் வருவது சிவபுராணம்.

அதில் முதல் பத்தி, கீழே உள்ள ஐந்து வரிகள்.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க


அதில் இரண்டாவது வரி

"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க"

இமைப் பொழுது கூட என் மனதை விட்டு நீங்காதான் திருவடிகள் வாழ்க என்பது  நேரடிப் பொருள்.

இதில் என்ன பெரிய ஆழம் இருந்து விடப் போகிறது என்று தான் நினைத்தேன்.

அது எப்படி ஒரு இமைப் பொழுது கூட நீங்காமல் இருக்க முடியும்?  மற்ற வேலைகள்  இருக்காதா? சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது, வேலைக்குப் போவது,  மனைவி/கணவன் உறவு, பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும்....இது எல்லாம் இருக்கும் போது எப்படி இமைப் பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் என்று மணிவாசகர் சொல்ல முடியும்.

மணி வாசகருக்கே கூட இது சாத்தியமா? அவரும் மனிதர் தானே. அவருக்கும் பசி, தாகம், தூக்கம் என்பதெல்லாம் இருக்கும் தானே?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் கார் ஓட்டும் பழக்கம் உண்டா? கார் இல்லாவிட்டால், ஸ்கூட்டர், மிதிவண்டி  என்று ஏதாவது ஓட்டிய அனுபவம் இருக்கும் தானே?

முதலில் எந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தாலும், மனம் , மூளை, உடல் அனைத்தும்  அந்த ஓட்டுகின்ற செயலிலேயே ஒரு புள்ளியில் நிற்கும். கவண் அங்கு இங்கு சிதறாது.

Accelerator ஐ  அமுக்க வேண்டும், steering ஐ சரியாக பிடிக்க வேண்டும், கிளட்ச் போட வேண்டும்,  கியர் ஐ மாற்ற வேண்டும், இண்டிகேட்டர் போட வேண்டும், ஹார்ன் அடிக்க வேண்டும், தேவையான சமயத்தில் பிரேக் போட வேண்டும்...இப்படி  அத்தனை வேலையும் செய்ய வேண்டி இருக்கிறது.

அதுவே நாளடைவில், நம்மை அறியாமலேயே இவற்றை நாம் செய்வோம்.

வண்டி ஓட்டிக் கொண்டே, செல் போனில் பேசுவோம், CD மாத்துவோம், நீர் குடிப்போம், பாட்டு நல்லா இல்லை என்றால் அடுத்த பாட்டுக்கு செல்லுவோம், கூட வரும் நபர்களோடு பேசிச் சிரிப்போம். இதற்கு இடையில் யாராவது  நெருங்கி வந்தால் ஹார்ன் அடிப்போம். சிக்னல் மாறினால் வண்டியை நிறுத்துவோம்.

எப்படி முடிகிறது.  ஒரு நொடி கூட வண்டியை செலுத்துகிறோம் என்று அறியாமலேயே  வண்டியை செலுத்துகிறோம்.

எந்த வண்டியையும் ஓட்டாதவர்கள் கூட  வேறு விடயத்தில் இது பற்றி சிந்திக்கலாம்.

சமையல் செய்து கொண்டே போனில் பேசுவார்கள் சிலர். டிவி பார்த்துக் கொண்டே  காய் நறுக்குவார்கள்.

எப்படி முடிகிறது?

முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் கையில் கொடுத்தால், டிவி பார்த்துக் கொண்டே கையை நறுக்கிக் கொள்வார்கள். இரத்தம் வரும்.

இது எப்படி சாத்தியமாகிறது?

பழக்கம்.

மீண்டும் மீண்டும் செய்தால் பழகி விடும். அப்புறம், நம்மை அறியாமலேயே நாம் அவற்றை  செய்ய முடியும்.

இறைவன் மேல் அன்பு, பக்தி, காதல் என்பதை பழக்கப் படுத்தி விட்டால், மற்ற  வேலைகள் செய்து கொண்டே இருந்தாலும், அந்த பக்தி பாட்டுக்கு  நடந்து கொண்டே இருக்கும்.

மனைவியுடன் இருக்கும் போதும், பிள்ளைகளோடு விளையாடும் போதும், சமையல் செய்யும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் பக்தி பாட்டுக்கு நடந்து கொண்டே இருக்கும்.

பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல.

ஒளவையார் ஒரு படி மேலே போகிறார்....

கனவிலும் அந்த பழக்கம் தொடரும் என்கிறார். அது எந்தப் பாடல் என்று தேடி கண்டு பிடியுங்கள்.


"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

புரிகிறதா?

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், வாழ்கை அனுபவத்தின் தொகுப்பு இருக்கும் என்றால், என்று நாம் இதை எல்லாம் அறிந்து கொள்வது?

மலைப்பாக இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_5.html




Thursday, February 26, 2015

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?


எதற்கும் ஒரு குறிக்கோள், காரணம் இருக்க வேண்டும். காரியம் ஆன பிறகும் காரியம் செய்து கொண்டு இருக்கக் கூடாது.

ஓட்டப் பந்தயம் முடிந்து, எல்லைக் கோட்டை தொட்டு விட்டால், ஓடுவதை நிறுத்த வேண்டும். அப்புறமும் ஓடிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.

சேர வேண்டிய ஊர் வந்து விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டும். அப்புறமும் போய்க் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.

வாழ்வின் அர்த்தம் என்ன ? குறிக்கோள் என்ன ? எதை அடைய இந்த வாழ்க்கை முயல்கிறது ? பணமா ? புகழா ? அறிவா ? உறவா ?  அல்லது இது எல்லாமுமா ? எவ்வளவு வேண்டும் ? எப்போது நிறுத்துவது ?

மாணிக்க வாசகர் சொல்கிறார் .... இறை அருள் பெறுவது தான் இந்த வாழ்வின் நோக்கம். அதை அடைந்து விட்டால் பின் வாழ்வில் அர்த்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்.

சில காதலர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும்...இந்த நொடி நான் அப்படியே செத்துரலாம் போல இருக்கு என்று சந்தோஷமாக சொல்லுவார்கள். மகிழ்வின் உச்சம்.

(முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு...முதல்வன் பாடல்)

இது போதும், இதுக்கு மேல் எதுவும் வேண்டாம். இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது என்ற உன்மத்தம் வந்து விடுகிறது.

அருள் பெற்ற அடிகள்...உன்மத்த நிலையில் இறைவனைப் பற்றி பேசித் திரிகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.  அவரைப் பற்றி தங்கள் மனதுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள்.

அதைப் பற்றியெல்லாம் அடிகள் கவலைப் படவில்லை. "சாவது எந்நாளோ" என்று  கேட்கிறார்.

பாடல்

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?


பொருள்

உத்தமன் = உயர்ந்தவன்

அத்தன் = முதல்வன், தந்தை, ஆதியானவன்

உடையான் = உடையவன்

அடியே நினைந்து உருகி = அவனுடைய திருவடிகளை நினைத்து உருகி

மத்த மனத்தொடு = களிப்பு கொண்ட மனத்தோடு

`மால் இவன்' என்ன = இவன் (மனிவாசாகர் ) மயக்கம் உற்றவன் என்று

மன நினைவில் = மன நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட = என் (மணிவாசகர்) மனதில் தோன்றிய , ஒத்த கருத்துகளை கூறிட

ஊர் ஊர் திரிந்து = ஊர் ஊராகத் திரிந்து

எவரும் = எல்லோரும்

தம் தம் மனத்தன பேச = அவர்கள் மனதில் தோன்றியதைப் பேச

எஞ்ஞான்று கொல் = எப்போது

சாவதுவே? = இறப்பது ?


இறைவனை நினைத்து அவர் மனம் உருகுகிறது. 

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி. 

உருகிய மனத்தில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

அந்த களிப்பில் ஏதேதோ  சொல்லுகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் சொல்கிறார்கள். 

ஒரு புறம் உண்மை கண்ட களிப்பு. மற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் முடியவில்லை. அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் மேல் பற்று சுத்தமாக இல்லை. 

இருந்து என்ன செய்ய ?

எப்போது இறப்பது என்று வினவுகிறார். 

இது போன்ற பாடல்களுக்கு உரை படித்து புரிந்து கொள்ள முடியாது. 

உரையைப் படித்த பின்,  அதை மறந்து விடுங்கள். 

நேரடியாகப் பாடலைப் படியுங்கள்.  

மனதை என்னவோ செய்யும். அதுதான் அந்தப் பாடலின் உண்மையான அர்த்தம். 

 

Wednesday, February 25, 2015

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை 


இந்திரன் வாழும் இந்திர லோகம்,  திருமால் வாழும் பரம பதம், பிரம்மா வாழும் சத்ய உலகம் இது எல்லாம் கிடைத்தாலும் வேண்டாம்.

சரி, இது எல்லாம் வேண்டாம், என்ன தான் வேண்டும் ? வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ? இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்...இது எல்லாம் வேண்டாம்...நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை...

இது என்னடா புதுக் குழப்பம்.  வைகுண்டம் வேண்டாம், நரகம் வேண்டும் என்கிறாரே இந்த மணிவாசகர்.

"இறைவா, உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம்" என்கிறார்.

இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை.

என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு சேர மாட்டேன் என்கிறார். அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை.

தீயவரே ஆயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறுவான். அது எப்படி தீயவர்களை நட்பாக கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. சுக்ரீவனின் நண்பன் தீயவனாக இருக்க மாட்டான் என்பது இராமனின் நம்பிக்கை.

 பாடல்


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

பொருள்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு = புரந்தரன் என்றால் இந்திரன். மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா. அவர்களின் வாழ்வே கிடைத்தாலும் கொள்ள மாட்டேன். 


குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்;  = என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதோரோடு சேர மாட்டேன்


நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்;= உன் திருவருள் இருக்கப் பெற்றால், நரகமே கிடைத்தாலும் இகழ மாட்டேன்


இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; = உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் 


எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே

இறை அருள் போதும். வேறு எதுவும் வேண்டாம். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று  கூறுகிறார்.

வழி இருக்கிறது. நமக்கு போகத்தான் மனம் இல்லை.



Wednesday, September 17, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 3

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 3


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள். 


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில். 

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே. 


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான். 

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல. 

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன். 

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும். 

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும் 

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும் 

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான். 

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.   

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை. 

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார். 

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது. 

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. 

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும். 

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள். 

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும். 

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம். 

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம். 

மேலும் சிந்திப்போம் 




Tuesday, September 16, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 2

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 2


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )


Wednesday, September 3, 2014

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள்

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள் 


நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்  
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி


மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

நம் புலன்கள் நமக்கு இன்பத்தை நுகரச் செய்து நமக்கு நல்லது செய்வது போலத் தோன்றும். ஆனால், இறுதியில் அவை நமக்கு நன்மைக்கு பதில் தீமையே  செய்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேலும் மேலும் வேண்டும் என்று நம்மை உந்தித் தள்ளி கடைசியில் நம்மை துன்பத்தில் தள்ளி விடுகின்றன.



புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை


உலகிலேயே மிகப் பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்று. இந்த உடலுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம். தாய், தந்தை, கணவன் , மனைவி , பிள்ளைகள் எல்லாம் நமக்கு அடுத்து தான். இந்த உடல் பற்றை விட்டால், நம் செயலும் சிந்தனையும் மாறிப் போகும்.

எனவே தான் ஞானிகள் எல்லாம், இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

இந்த உடலுக்குள்ளே என்ன இருக்கிறது ? இந்த தோலை நீக்கிப் பார்த்தால் பார்க்க சகிக்காது. நாற்றம் அடிக்கும். உடல் எங்கும் புழுவும் அழுக்கும் நிறைந்து இருக்கிறது. ஒன்பது வாயிலைக் கொண்ட உடலில் அனைத்து வாயில்களிலும் உடற் கழிவுகள் எந்நேரமும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த உடலின் மேல் என்ன பெரிய பற்று ?



அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

தீ  வினை மட்டும் அல்ல, நல் வினையும் பிறவிக்கு வழி வகுக்கிறது.
நல்லதும் தீயதும் இல்லாமல் ஒரு வினை இருக்க முடியுமா என்ன ? Beyond Good and Evil  என்று Neitsche ஒரு புத்தகம் எழுதி இருக்கிறர். படித்துப் பார்க்க வேண்டும்.



விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

விலங்கு மனம். நல்லது சொன்னால் மனதில் நிறுத்திக் கொள்ளாது.  உணர்ச்சி ஒன்றே பிரதானமாக அலையும். உணர்ச்சி அறிவை மழுங்க அடிக்கும். அந்த விலங்கு மனத்தால் உன் மேல் அன்பு கொள்ளும் நலம் இல்லாத எனக்கு நீ தந்தாய் என்கிறார் அடிகள்.

என்ன தான் தந்தான் ?







Monday, July 14, 2014

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை 


இதயத்தில் உள்ள ஒரு வால்வு பழுதாகி விட்டால் அதற்கு பதில் ஒரு செயற்கை வால்வு பொருத்துவார்கள். பல இலட்சங்கள் செலவாகும். அந்த வால்வை நமக்கு இலவசமாகத் தந்த கடவுளுக்கு என கைம்மாறு செய்வது ?

காலை எடுக்க ஒரு இலட்சம் கேட்கிறார்கள்...என்றால் காலைத் தந்தவனுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று முருகன் சந்நிதியில் சென்று விழுந்தார் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

இறைவன் தனக்கு தந்த ஒவ்வொன்றையும் எண்ணி அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இருகை யானையை ஒத்திருந்த என் உள்ளக் 
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே 
வருக என்று பணித்தனை வானுளோர்கு 
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இருகை யானையை ஒத்திருந்து = மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு வசதி யானைக்கு உண்டு...அது தான் அதற்கு அமைந்த கை. அந்தக் கையால் யாருக்கும் ஒன்றும் நல்லது செய்யாது. தனக்கு தனக்கு என்று எடுத்து உண்ணும். அதனால் அதை இருகை யானை என்றார். இருகை என்பது சற்று மரியாதை குறைவான ஒரு தொடர். இருகால் மாடே என்று பயனில்லாத மனிதர்களை குறிப்பிடுவார்கள்.

நமக்கு இரன்டு கைகள் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது தருகிறோமா ? எனக்கு எனக்கு என்று   எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறோம்.

என் உள்ளக்  கருவை யான் கண்டிலேன் = என் உள்ளத்தின் கருவை, ஆணி வேரை நான் கண்டிலேன். எது உள்ளத்தின் ஆதி, அடிப்படை என்று அறியாமல் இருக்கிறேன்.

 கண்டது எவ்வமே = கண்டது எல்லாம் துன்பமே

வருக என்று பணித்தனை  = அப்படி இருக்கும் போது , என்னை வருக என்று நீ பணித்தாய்.

வானுளோர்கு ஒருவனே = வானில் உள்ளவர்களுக்கு ஒருவனே. ஒருவனே என்றால் நிகர் இல்லாதவன் என்று பொருள்


கிற்றிலேன் =  வலிமை இல்லாதவன்

கிற்பன் உண்ணவே. = இருக்கின்றேன் உலக இன்பங்களை அனுபவிக்கவே




Monday, June 9, 2014

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல 


மேய்ப்பவன் இல்லாத மாடு என்ன செய்யும் ? அது பாட்டுக்கு போகும், கண்ணில் கண்டதை தின்னும், நிற்கும், போகும் இடம் தெரியாமல் அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும். ஒதுங்க இடம் கிடையாது.

அது போல நான் அலைகிறேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. தினமும், வேலைக்குப் போகிறேன், சம்பாதிக்கிறேன், செலவழிக்கிறேன்...சேமிக்கிறேன்...எதுக்கு இதெல்லாம் செய்கிறேன் என்று ஒன்றும் தெரியவில்லை. நீ எனக்கு அருள்வாய் என்று நினைத்து இருந்தேன். அதுவும் பெரிய ஏமாற்றமாகப் போய் விடும் போல் இருக்கிறது. தயவு செய்து என்னை வா என்று அழைத்து எனக்கு அருள் புரிவாய் என்று குழைகிறார் மணிவாசகர்

பாடல்

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென் றருளாயே.



சீர் பிரித்த பின்

இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன் என்றென்றே ஏமாந்து இருப்பேனை 
அருங் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார் இல்லாத மாடு ஆவேனோ நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று  அருளாயே.


பொருள்

இரங்கும் நமக்கு = நம் மேல் இரக்கப்பட்டு

அம்பலக்கூத்தன் = அம்பலத்தில் ஆடும் கூத்தன்

என்றென்றே = என்று என்றே. எப்போது எப்போது என்று

ஏமாந்து இருப்பேனை = ஏமாந்து இருப்பேனை
 
அருங் கற்பனை = அருமையான மந்திரம்

கற்பித்து = சொல்லித்தந்து

ஆண்டாய் = ஆட்கொண்டாய்

ஆள்வார் = மேய்ப்பவன்

இல்லாத மாடு ஆவேனோ = இல்லாத மாடு போல ஆவேனோ?

நெருங்கும் = உன் அருகில் இருக்கும்

அடியார்களும் = அடியவர்களும்

நீயும் = நீயும்

 நின்று  = இருந்து

நிலாவி = விளங்கி

விளையாடும் = விளையாடும்

மருங்கே சார்ந்து வர = அருகில் சேர்ந்து வர

எங்கள் வாழ்வே = எங்களின் வாழ்க்கை போன்றவனே

வா என்று  அருளாயே = வா என்று எங்களுக்கு அருள் புரிவாயே

மாடு என்பதற்கு செல்வம் என்று ஒரு பொருளும் உண்டு.  செல்வத்தை சரியான வழியில்   பராமரிக்கா விட்டால் அதனால் வரும் தீமைகள் அதிகம். 

நமக்கு கிடைத்த வாழ்க்கை ஒரு மிகப் பெரிய செல்வம். அதை சரி வர பயன் படுத்த  வேண்டும். 

செய்கிறோமா ?


Thursday, April 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்  


மானின் கண்கள் அழகானவை. பயந்த தன்மையை காட்டுபவை. மருண்ட பார்வை கொண்டவை.

அந்த மான், வலையில் சிக்கிக் கொண்டால், அதன் பார்வை எப்படி இருக்கும் ? மேலும் பயந்து, மேலும் மருட்சியை காட்டும் அல்லவா ?

பெண்களின் கண்கள் அந்த வலையில் அகப்பட்ட மானின் விழியைப் போல இருக்கிறது.

அந்த பார்வை எனும் வலையில் விழுந்தால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

அப்படிப்பட்ட வலையில் சிக்கிய என்னை கை விட்டு விடாதே - கருணாகரனே, கயிலை மலையின் தலைவா, மலைமகளின் தலைவனே என்று இறைவனை நோக்கி கசிந்து உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை

பாடல்

வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.


பொருள்

வலைத்தலை = வலையில் அகப்பட்ட

மான் அன்ன = மான் போன்ற

நோக்கியர் = பார்வை உடைய பெண்கள்

நோக்கின் வலையில்= பார்வை வலை (நோக்கின் வலை என்பது நல்ல சொற் பிரயோகம் )

பட்டு = அகப்பட்டு

மிலைத்து அலைந்தேனை  =  மயங்கி அலைந்தேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

 வெள் மதியின் = வெண் மதியின்

ஒற்றைக் கலைத் தலையாய் = பிறையை சூடிய தலைவனே

கருணாகரனே = கருணைக்கு இருப்பிடமாக இருப்பவனே

கயிலாயம் என்னும் மலைத் தலைவா = கைலாயம் என்ற மலைக்குத் தலைவனே

மலையாள் மணவாள = மலை மகளான உமாதேவியின் மணவாளனே

என் வாழ் முதலே = என் வாழ்க்கைக்கு முதலாக இருப்பவனே




Saturday, July 14, 2012

திருவாசகம் - மாணிக்க வாசகரின் கவி நயம்


திருவாசகம் - மாணிக்க வாசகரின் கவி நயம்


இறைவா, நான் மோசமானவன் தான். ஆனால், அதற்காக நீ என்னை கைவிட்டு விட்டால், நான் உன்னை பற்றி எல்லா உண்மையும் சொல்லி விடுவேன்....நீ யார் தெரியுமா ?

எல்லோரும் அமுதினை உண்டபோது, நீ நஞ்சை உண்டாய்...இது புத்திசாலித்தனமா?

உடம்பு எல்லாம் அழகாக இருந்தாலும், உன் கழுத்து மட்டும் கருப்பா இருக்கே...இது ஒரு அழகா?

உனக்கு என்று ஒரு குணமும் கிடையாது...நீ ஒரு குணம் கெட்டவன்...

நீ ஒரு மானிடன்...

உன் தலையில் உள்ள நிலவோ தேய் பிறை

நீ ரொம்ப பழமையானவன்

என்று எல்லோரிடமும் உன்னை பற்றி பழி சொல்லுவேன்...

அப்படி எல்லாம் சொல்லாம இருக்கணும்னா, நீ என்னை கை விடாமல் காப்பாற்று"

என்று மணி வாசகர் கூறுகிறார். 


அந்த திருவாசகப் பாடல்....

Thursday, April 26, 2012

திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை


திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை

உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில்

Sunday, April 22, 2012

திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


நாம் மட்டும் தானா சுமைகளை சுமக்கிறோம்? அந்த இறைவனையும் சுமக்க வைக்கிறோம்.

சிவன் சுமந்த சுமைகளை மாணிக்க வாசகர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இங்கே.

Friday, April 20, 2012

திருவாசகம் - விக்கினேன் வினையேன்


திருவாசகம் - விக்கினேன் வினையேன்


கிடைப்பது எல்லாமா அனுபவிக்க முடிகிறது?

சில சமயம் கிடைத்ததின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.

சில சமயம் கிடைத்ததை அனுபவிக்க நேரம் இல்லாமல் போய் விடுகிறது.

உடல் உபாதை சில சமயம் நம்மை அனுபவிக்க விடாது.

இந்த பிரச்சனை நமக்கு மட்டுமல்ல, மாணிக்க வாசகருக்கும் இருந்திருக்கிறது. 

இறைவன் அவருக்கு அமுதத்தை வழங்கினார். ஆஹா அமுதம் கிடைத்து விட்டது என்று அள்ளி அள்ளி விழுங்கினார். அது போய் தொண்டையில் அடைத்து கொண்டது. விக்கல் வந்தது. என்ன செய்ய ? இப்ப அமுதத்தை பருக முடியாது. 

அப்பவும் இறைவனே அவர் மேல் இரக்கப் பட்டு, அந்த விக்கல் போக இனிய தண்ணீர் தந்ததாய் அவரே சொல்கிறார் இந்தப் பாடலில்...

Monday, April 16, 2012

திரு வாசகம் - ஒரு முன்னோட்டம்


திரு வாசகம் - ஒரு முன்னோட்டம் 


தன் பெருமை அறியா ஊர்கள் பல உண்டு.

அதில் ஒன்று மதுரைக்கும் மேலுருக்கும் இடையில் உள்ள திருவாதவூர்.

மாணிக்க வாசகர் அவதரித்த தலம்.

ஊரின் நடுவே ஒரு பேருந்து நிலையம். அதை சுற்றி சில பொட்டி கடைகள்.

சற்று தள்ளி மாணிக்க வாசகர் பிறந்த இல்லம் இருக்கிறது. மிக மிக சிறிய வீடு. மின்சார விளக்கு இல்லை. உள்ளே ஒரு தீபம் மினுங்கி கொண்டு இருந்தது.

எவ்வளவு பெரிய மகான். அவர் பிறந்த வீட்டிற்கு செல்லும் வழி கூட நன்றாக இல்லை. மனசுக்கு என்னவோ போல் இருந்தது.