Showing posts with label திருமுருகாற்றுப்படை. Show all posts
Showing posts with label திருமுருகாற்றுப்படை. Show all posts

Tuesday, November 29, 2016

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப 


ஒரு அரசனிடமோ  அல்லது ஒரு வள்ளலிடமோ பரிசுகள் பெற்ற ஒருவன், எதிர் வரும் மற்றவனை அந்த அரசனிடமோ அல்லது வள்ளலிடமோ வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று அழைக்கப்படும். ஆற்றுப் படுத்துதல் என்றல் வழி காட்டுதல் என்று அர்த்தம்.

முருகனிடம் அருள் பெற்ற நக்கீரர் , மற்ற பக்தர்களை அவனிடம் வழி காட்டுவதாக அமைந்தது திரு முருகாற்றுப்படை என்ற நூல்.

அதில் முதல் பாடல்....

"உலகம் மகிழ்ச்சி அடைய, வானில் வலப்புறம் எழும் , பலர் புகழும் சூரியனை கடலில் இருந்து எழும் போது கண்டவர்களை போல , இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில் சுடர் விடும் ஒளி"

பாடல்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .

பொருள்

உலகம் = உலகம்

உவப்ப = மகிழ

வலன் = வலப்புறமாக

ஏர்பு = எழும்

திரிதரு =  வானில் திரிகின்ற

 பலர்புகழ் = பலரும் புகழும்

ஞாயிறு = சூரியன்

கடல்கண் டாஅங்கு = கடலில் இருந்து எழுவதைப் போல

 ஓஅற = இடைவெளி இல்லாமல் 

இமைக்கும் = இமைக்கும் நேரம்

சேண்விளங்கு = சேண் என்றால் உயரம். உயரே விளங்கும்

அவிர் = பிரகாசமான

ஒளி = ஒளி , வெளிச்சம்


இது என்ன பாடல். கடலில் எழும் சூரியனைப் போல உயரே சுடரும் வெளிச்சம். இது ஒரு பாடலா ? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? இதைப் படித்து  என்ன ஆகப் போகிறது ? என்று கேள்விகள் எழலாம்.

சற்று சிந்திப்போம்.

உலகம் உவப்ப - உலகம் மகிழ.

முதலாவது, எதையும் மங்கலச் சொல்லோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உலகம் என்பது மிக உயர்ந்த மங்கலச் சொல்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று  ஆரம்பித்தார் கம்பர்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

என்று ஆரம்பித்தார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது நிகண்டு.

உலகம் என்றால் உலகில் உள்ளவர்களை குறிக்கும். குறிப்பாக உலகில் உள்ள நல்லவர்களை குறிக்கும்.

இரண்டாவது,  உலகில் உள்ள அனைவரும் மகிழ என்று ஆரம்பிக்கிறார். இந்தியாவில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது இந்து சமயத்தில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது சைவ சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ  என்றோ குறுகிய மனத்தோடு ஆரம்பிக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மக்களும் இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்.

சேரவாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் அழைத்தார் போல.

மூன்றாவது, உலகம் எப்போது மகிழும் ? உலகில் உள்ள எல்லோரும் மகிழ வேண்டும். தினமும் எல்லோரும் மகிழ வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா ? அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறதா ? என்று யோசித்தார்.

இரவில் அனைத்து உயிர்களும்  உறங்குகின்றன. தவறு செய்யாதவன் நிம்மதியாக உறங்குகிறான். கடமையை ஒழுங்காகச் செய்தவன் நமதியாக உறங்குகிறான். எல்லா உயிர்களும் இரவில் உறங்கி காலையில் சூரியன் ஒளி வந்தவுடன்  எழுந்து சுறுசுறுப்பாக தங்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகின்றன. உலகமே விழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீடும், நித்தமும் விழிக்கிறது.

இருள் துன்பத்திற்கு உதாரணம். ஒளி இன்பத்திற்கு உதாரணம். எப்படி சூரியன் வந்தவுடன் உலகம் விழித்து , வேலை செய்து, அதன் பலனைப் பெற்று இன்பமாக இருக்கிறதோ அது போல இன்பம் பெற வேண்டும் என்கிறார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


நான்காவது, சூரியன் தினமும் வரும், போகும். அப்படியானால் இன்பமும் வந்து வந்து   போகுமா.நிரந்தரமான இன்பம் இல்லையா ?  மேலும் சில சமயம் சூரிய ஒளி மோகத்தால் மறைக்கப் படலாம். அல்லது சில இடங்களில் விழாமல் போகலாம். அல்லது சூரியன் ஒரு நாள் தீர்ந்து போகலாம். நிரந்தரமான ஒரு ஒளி உண்டா ? சூரியன் என்பது ஒரு உதாரணம். அதற்கும் மேல் ஒரு ஒளி உண்டு. அந்த ஒளி....

ஐந்தாவது, ஓஅற இமைக்கும், ஒரு நொடி கூட இல்லாமல் இருக்காது. எப்போதும் சுடர் விடும் ஒளி. அது  மட்டும் அல்ல.

ஆறாவது,  சேண்விளங்கு, உயரத்தில் விளங்கும். உயரம் என்றால் எங்கே ? எவ்வளவு உயரத்தில் ?

நமது உடலில் 7 சக்கரங்கள், அல்லது சக்தி இருக்கும் இடங்கள் என்று கூறுகிறார்கள். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்யா, சஹஸ்ரார் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதில் கடைசியாக கூறிய சஹஸ்ரார் என்பது உடலுக்கு வெளியே உள்ள சக்கரம். நம் தலைக்கு மேல் ஒரு அங்குல உயரத்தில் உள்ள ஒரு இடம்.  சஹஸ்ரார் என்றால் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை மலர் என்று அர்த்தம்.  

மூலாதாரம் - தண்டுவடத்தின் அடிப் பகுதி
ஸ்வாதிஸ்தானம் - பிறப்புறுப்பு
மணிப்பூரஹம் - தொப்புள்
அனாஹதம் - இருதயம்
விசுத்தம் - கழுத்து
ஆக்ஞா - புருவ மத்தி
சஹஸ்ரார் - உச்சந்தலைக்கு ஓரங்குலம் மேலே

இறைவனை வணங்கும் போது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்க வேண்டும் என்று கூறியது எதற்கு என்றால் , சஹஸ்ரார் என்ற அந்த இடத்தில் உள்ள அந்த ஒளியை தொட்டு காண்பிக்க.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

என்பார் மணிவாசகர்.

சிரம் குவிப்பவரை ஓங்கி வளரச் செய்வான். கரம் குவித்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவது ஒரு முறை. இரு கையையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்குவது இன்னொரு முறை.

மணிவாசகர் வேலை மெனக்கெட்டு இரண்டு வரியை எதற்காக செலவிடுகிறார் ? இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பலன்களை சொல்கிறார்.

ஏன் ?

இரண்டும் வெவ்வேறானவை என்பதால்.

சேண் விளங்கு என்றால், அந்த உயர்ந்த இடத்தில் என்று பொருள்.

சற்று கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும். உடலுக்கு வெளியே உள்ள ஒரு இடம் , உடலில் உள்ள மற்ற சக்கரங்களோடு தொடர்பு கொண்டது. சக்தியை மூலாதாரத்தில் இருந்து கிளப்பி அங்கே கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். அது போல, அங்கே உள்ள ஒளி உள்ளுக்கும் செல்லும் என்பது சொல்லாமல் சொன்ன கருத்து.

அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது ?


சேண் விளங்கு அவிர் ஒளி

பிரகாசமாக இருக்கும் ஒளி. இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் சுடர் விடும் ஒளி.

சூரியனின் ஒளியை கண்ணை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். வீட்டின்  கதவை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். இந்த சேண் விளங்கு அவிர் ஒளி  உள்ளுக்குள் சுடர் விடும் ஒளி. அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை தரும் ஒளி.

எல்லோரிடமும் ஏதோ ஒரு ஞானம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாம் அறிந்தாரும் இல்லை, ஏதும் அறியாதரும் இல்லை.

ஆனால், நம் ஞானம் ஆணவம், கோபம், காமம் இவற்றால் மறைந்து நிற்கிறது.  இவை நீங்கும் போது , அந்த ஞான ஒளி மேலே    சென்று ஒளி விடும்.

இது முதல்  மூன்று வரிக்கு அர்த்தம்.

முழு  புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்.